பயணக் குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணக் குறிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

கடம்போடுவாழ்வு - 4

வணக்கம்! வந்தனம்! சுஸ்வாகதம்! 

இன்னும் பசுமையான வளமான படங்கள் எல்லாம் அடுத்த பதிவில் என்று சென்ற பதிவில் சொல்லி முடித்திருந்தேன்.  சென்ற பதிவைப் பார்த்த, வாசித்த, கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. 

இதோ 4 வது பகுதி. கடம்போடுவாழ்வின் பசுமையான படங்கள்.  கூடவே ஒரு சிறு முன்ஜாமீன்!!! எடுத்து வைத்துக் கொள்கிறேன்!!!!!!! என் மூன்றாவது விழிக்காக!  

சனி, 19 மார்ச், 2022

கடம்போடுவாழ்வு - 3

 

//இப்பத்தானே ஊருக்குள் வந்திருக்கோம். கொஞ்சம் ஆற அமர ஊரின் வளத்தை, செழிப்பை, உழைப்பைப் பார்க்க அடுத்த பகுதியில் ஊர் சுற்றுவோம்// என்று முடித்திருந்தேன். கடம்போடுவாழ்வு 2

அப்பதிவிற்கும், எனது மூன்றாவதுவிழியின் பார்வையில் பதிவிற்கும் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

நாகர்கோவில் - கடம்போடுவாழ்வு - 1


பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 11 

சென்ற பதிவில் - திருநெல்வேலி - நாகர்கோவில் பதிவு - 5 ல் நாகர்கோவில் சென்றதும் அங்கிருந்து கடம்போடுவாழ்வு செல்வதற்காகப் பேருந்து ஏற வடசேரி பேருந்து நிலையம் செல்வது பற்றிச் சொல்லி முடித்திருந்தேன்.  மீண்டும் யு டர்ன் வந்த வழியே ஆனால் சாலை வழிப்பயணம் ஏர்வாடி வரை. எனவே அதே வெள்ளமடம், தோவாளை, ஆரல்வாய்மொழி, முப்பந்தல், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர், ஏர்வாடி.

வெள்ளி, 28 ஜனவரி, 2022

திருநெல்வேலி - நாகர்கோவில் - (பொய்கை அணை) - 5

 பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 10

திருநெல்வேலி - நாகர்கோவில் - 1

திருநெல்வேலி - நாகர்கோவில் - 2

திருநெல்வேலி - நாகர்கோவில் - 3

திருநெல்வேலி - நாகர்கோவில் - 4

//இப்போது ஆரல்வாய்மொழி மலைகளைப் பார்த்துக் கொண்டிருங்கள். அதற்கு அப்புறம் நாகர்கோவில் ஸ்டேஷன் வரை உள்ள பகுதிகள் அடுத்த பதிவில். // என்று முடித்திருந்தேன். இங்கிருந்து அடுத்து நாகர்கோவில் ஸ்டேஷன்தான். எனவே ஒரு தகவலுடன் இப்பகுதி. 

சனி, 22 ஜனவரி, 2022

திருநெல்வேலி - நாகர்கோவில் - (ஆரல்வாய்மொழிப் பகுதி) - 4

பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 9

திருநெல்வேலி - நாகர்கோவில் - 1

திருநெல்வேலி - நாகர்கோவில் - 2

திருநெல்வேலி - நாகர்கோவில் - 3

காவல்கிணறை அடுத்து மிக அருகில் உள்ள முப்பந்தல் எனும் சிறு கிராமத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்ட எல்லை தொடங்குகிறது. இக்கிராமம் ஆரல்வாய்மொழி பகுதியில்தான் இருக்கிறது. 

திங்கள், 17 ஜனவரி, 2022

திருநெல்வேலி-நாகர்கோவில் - 3


 பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 8

திருநெல்வேலி - நாகர்கோவில் - 1

சென்ற பகுதியின் தொடர்ச்சியாக.......களக்காடு தாண்டி, ஏர்வாடி, வள்ளியூர் பகுதியிலிருந்து தொடர்ச்சியாக மஹேந்திரகிரி மலைத்தொடர். பணகுடியை அடுத்து காவல்கிணறு பகுதி வரை திருநெல்வேலி மாவட்டம். காவல்கிணறு பகுதியில் தான் மகேந்திரகிரி மலையின் சரிவின் அடிவாரத்தில் மகேந்திரகிரி திரவ எரிபொருள் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது.  சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.

புதன், 12 ஜனவரி, 2022

திருநெல்வேலி- நாகர்கோவில் – 2


பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 7

திருநெல்வேலி-நாகர்கோவில் - 1

சென்ற பதிவைப் பொறுமையாக வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி! இப்போது இன்றைய பதிவிற்கு.

புதன், 6 மார்ச், 2019

நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 5

சென்ற பதிவில் வண்டியில் மேலே ஏறிச் சென்றதாக முடித்திருந்தேன். இரு புறமும் நன்றாகப் பார்க்க முடிந்தது. அப்படிச் சென்ற  போது இதோ இந்தப் பாலம். இதைக் கடந்த கொஞ்ச நேரத்தில் மீண்டும் பறவைகள் இரு புறமும் தென்படத் தொடங்கின.


வண்டியில் அப்படிச் சென்ற போதும் படங்கள் எடுத்துக் கொண்டேன். அவை இதோ கீழே. இந்த முதல் படம் வலப்புறம் ஏரி.

இதோ கீழே உள்ள மூன்று படங்களும் இடப்புறம் ஏரியில் இருந்த பறவைகளை எடுத்துக் கொண்டே வந்தேன்.




கொஞ்ச தூரம் தான் அப்படிச் சென்றோம். வண்டி ஆமை வேகத்தில் சென்றால், அப்புறம் இருட்டிவிட்டால் ஒன்றும் பார்க்க முடியாது என்பதால் அடுத்து பறவைகளைக் கண்டதும் இறங்கிவிட்டோம்.

நாங்கள் அடுத்து இறங்கிய இடம் கிட்டத்தட்ட ஸ்ரீஹரிக்கோட்டா அருகில். அதுதான் இந்தச் சாலையில் பறவைகள் பார்த்த கடைசி இடம். அந்த இடத்தில்  பறவைகளைக் கண்டதும் நாங்களும் இறங்கிவிட்டோம். இந்த இடத்தில் பறவைக் கூட்டம் செம அழகு……தண்ணீரின் நிறமும் வித்தியாசமாக இருந்தது. சூரிய ஒளி இன்னும் குறைந்து கொண்டே வந்ததால். பார்த்து வியந்து ரசித்து அப்புறம் கேமராவுக்குள் காட்சிகளைப் பதுக்கத் தொடங்கினேன். நிறைய எடுத்தேன்…..இங்கு சிலவற்றைக் கொடுத்துள்ளேன். 


தூரத்தில் தெரியும் பறவைக் கூட்டம் கீழே ஜூம் செய்து எடுத்தவை




நிறைய இருந்தன. ஜூம் செய்ததால் எல்லாம் கவர் ஆகவில்லை என்பதால் ஒவ்வொரு கூட்டமாக எடுத்தேன். மேலே உள்ள நான்கு படங்களும் சாலையின் வலப்புறம் உள்ள ஏரிப்பகுதி.


இது சாலையின் இடப்புறம் உள்ள ஏரியின் பகுதி. 

அடுத்து இதோ அடுத்த 15 நிமிடத்தில் ஸ்ரீஹரிகோட்டா வந்தாயிற்று. இதுதான் நம் இந்தியாவின் ராக்கெட் தளம் அமைந்திருக்கும் பகுதியின் நுழைவு வாயில். இதோ இங்கு மரத்தின் கீழ் பெஞ்சுகள் இருக்கிறதல்லவா இங்குதான் நாங்கள் அமர்ந்து கொண்டோம். இல்லை அமர்ந்தார்கள். 

எனக்குத்தான் இது போன்ற இடங்களுக்கு வந்தால் உட்கார்வது என்றால் பிடிக்காதே!!!  உடனே சுற்றி நடக்கத் தொடங்கினேன். ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்துக் கொண்டே படங்களும் எடுத்துக் கொண்டேன். இந்த இடம் பொதுவெளி என்பதால் படம் எடுக்க அனுமதி உண்டு. ஆனால் என் கேமராவில் பவர் குறைந்திருக்கு என்று காட்டியது. எனவே கொஞ்சமேதான் எடுத்துக் கொண்டேன். 


இதுதான் ஷார் சாலையிலிருந்து ஸ்ரீஹரிக்கோட்டா நுழைந்தவுடன் உள்ள பகுதி. இது பொது வெளி. இங்கு செக்யூரிட்டி உண்டு. உள்ளே செல்ல வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும். கீழே உள்ள இரு படங்களும் அங்கு நடுவில் இருந்த ரவுண்டானா. இந்த நுழைவாயில் சென்றதே எனக்கு மிக மிகப் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. நம் இந்தியாவின் பெருமை மிகு ஏவுகணைகள், சாட்டில்லைட்டுகள் பல விண்வெளியில் செல்வதற்குக் காரணமான ஆராய்ச்சி மற்றும் ஏவுகணைத் தளத்தின் நுழைவு வாயில்.



இச்சாலை ஷாரின் உள்ளே செல்லும் சாலை. இதுதான் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளம், தீவு, அங்கு வேலை செய்வோரின் குடியிருப்பு எல்லாம் இருக்கும் இடத்திற்குச் செல்லும் சாலை. இங்கிருந்து இச்சாலை வழியாகச் சென்றால் மீண்டும் செக்யூரிட்டி அதன் அனுமதியுடன் தான் இன்னும் செல்ல முடியும். பெரிதாக அமைந்திருக்கும் ராக்கெட் தளம் எல்லாம். அங்கு நாம் செல்லவில்லை. ஸ்ரீஹரிகோட்டா வங்காளவிரிகுடாவுக்கும், புலிக்கட் ஏரிக்கும் இடையே இருக்கும் தீவில் அமைந்திருக்கிறது. இதோ மேப்

Related image
இந்த வரைபடத்தில் சூளூர்பேட்டையிலிருந்து ஷார் வுக்குச் செல்லும்  சாலை மெலிதான கோடாகத் தெரிகிறது இல்லையா அச்சாலைதான் நாங்கள் சென்ற சாலை. பறவைகளைக் காணும் பகுதி.

நுழைவாயிலில் கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு இந்த ரவுண்டானாவை ஒரு சுற்று சுற்றி மீண்டும் வந்த வழியே ஷார் சாலையில் வந்து அடுத்த ஒரு 10 நிமிடப் பயணத்தில் இடது புறம் செல்லும் மண் சாலையில் சென்றோம். மழைக்காலத்தில் கடல் போன்று இருக்கும் ஏரியில் தண்ணீர் குறைந்திருந்ததால் நாங்கள் சாலையின் கிழக்குப் பகுதி அதாவது கடல் நோக்கி இருக்கும் பகுதியில் இறங்கி நடந்தோம். 


தூரத்தில் ஏரியின் அக்கரையில் இருந்த சாலைக்கருகே பறவைக்கூட்டம் ஏதோ அணிவகுப்பு போல அணிவகுத்துக் திரளாக இருந்தது. நாங்கள் முதலில் அந்தச் சாலையில் ஏதோ வண்டி செல்கிறது என்று நினைத்து பைனாகுலர் வழியாகப் பார்த்தால் வண்டியல்ல அது அத்தனையும் பறவைக்கூட்டம். ஆச்சரியம், மலைப்பு. பெரிய பெட்டாலியன் போன்று இருந்தது. ஆனால் கேமராவில் ஜூம் செய்தும் வராத அளவிற்கு இருந்ததால் நான் படங்கள் எடுக்கவில்லை. கேமராவில் பவரும் குறைந்திருந்தது.

அங்கு எனக்கு சும்மானாலும் இப்படி ஒரு படம் எடுக்கலாமே என்று தோன்ற எல்லோரையும் ரவுண்டாக நிற்க வைத்து எங்கள் கால்களை மட்டும் இப்படிச் சேர்த்து வைக்கச் சொல்லிப் படம் எடுத்தேன் என் மொபைலில். இதில் என் கால் எதுவாக இருக்கும் என்று முடிந்தால் சொல்லுங்கள். 


இந்த இடத்தில் விலங்குகளின் கால் தடங்கள் தெரிய அது எந்த விலங்கின் பாதமாக இருக்கும் என்று ஆராய்ச்சி எல்லாம் செய்து நாய், மாடு, ஆடு என்று ஒவ்வொருவரும் சொல்ல இல்லை இது நரியின் தடம் போல் இருக்கு என்று பீதி கிளப்பினார் நண்பர். ஆமாம் நாம மனுஷங்க தானே அந்தக் குள்ளநரிக்கூட்டம் என்று சொல்லிச் சிரிக்க கொஞ்ச நேரம் கலாய்த்தல். கேமராவில் பவர் கொஞ்சமே இருந்ததால் அதிகம் படமும் எடுக்க முடியவில்லை. உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க இந்தத் தடங்கள் என்னவா இருக்கும் என்று.


இறுதியாகச் சாலையின் மறுபுறம் அதாவது மேற்குப் பகுதியில் தெரிந்த சூரியன் மறையும் காட்சியை கேமராவிலும், மொபைலிலும் படம் பிடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்படும் மனமில்லாமல் ஆனால் இனிய நினைவுகளுடன் புறப்பட்டோம். புறப்படும் முன் நான் பறவைகளிடம் பை பை சொல்லிவிட்டு அடுத்த முறை நான் வரும் வாய்ப்புக் கிடைச்சாலோ அல்லது என் நட்புகள் (அதான் நீங்க எலாரும் தான்) இங்க வந்தாலோ எல்லாரும் ஒழுங்கா கிட்ட வந்து போஸ் கொடுக்கனும் என்று சொல்லிவிட்டு வந்தேன். நீங்க போனீங்கனா நான் ரொம்ப விசாரிச்சதா சொல்லவும்!!!

ஸ்பா ஒரு வழியா ஒரு பதிவை முடிச்சாச்சு!!!!! 

அதோ மேடு தெரிகிறது இல்லையா அது தான் ஷார் சாலையில் இருந்து பிரியும் மண் சாலை. 

-------கீதா


திங்கள், 4 மார்ச், 2019

நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 4

ஒடிஸாவில் இருக்கும் சில்கா ஏரிக்கு அடுத்ததாக, இரண்டாவது பெரிய ஏரி இந்த புலிக்கட் ஏரி. ஏரி என்று சொல்லப்பட்டாலும் இது ஆங்கிலத்தில் லகூன் – நீர்ப்பரப்பு. பெரிய நீர்ப்பரப்பு. ஆழம் அதிகம் இல்லாத நீர்ப்பரப்பு. நல்ல மழை பெய்து வெள்ளம் வந்தால் மட்டுமே இந்த நீர்ப்பரப்பு நிறைந்து கடல் போலக் காணப்படும்.

இது வங்காளவிரிகுடாவில் ஷார் பகுதியிலும், தமிழ்நாட்டில் பழவேற்காடு பகுதியிலும் ஆன முகத்துவார நீர்ப்பரப்பு. இந்த நீர் கடல் நீரளவு உப்பு இல்லை என்றாலும் நன்னீரை விட உப்பு உள்ள நீர். ஆங்கிலத்தில் ப்ராக்கிஷ் வாட்டர் லகூன் – Brackish Water Lagoon. இதன் பரப்பளவு 759 கிமீ2

 
படம் - நன்றி - விக்கி

இது ஆந்திரா தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ளது. பெரும்பான்மையான பகுதி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்திலும், மற்ற பகுதி தமிழ்நாட்டில் பழவேற்காடு, பொன்னேரி பகுதியிலுமாக இருக்கிறது. இந்த நீர்ப்பரப்பைப் பிரிப்பது ஸ்ரீஹரிகோட்டா செல்லும் சாலை. ஒரு பகுதி ஏரி. மற்றொரு பகுதி சதுப்பு நிலம். அந்த ஏரிதான் புலிக்கட் ஏரி பறவைகள் சரணாலயமாக இருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டா தீவு இந்த ஏரியை வங்காளவிரிகுடாவிலிருந்து பிரிக்கிறது. 

ஆனால் மழைக்காலம், வெள்ளம் என்று வரும் போது மட்டும் முகத்துவாரங்கள் கடலோடு கலந்து காணப்படும். இதோ இப்படி...படம் - நன்றி - விக்கி


சென்ற பதிவில் நாங்கள் அடுத்து 3 நிமிடத்தில் இறங்கிய பகுதி அருமையான பகுதி என்று சொல்லியிருந்தேன். இதோ கீழே இருக்கும் பகுதி. 


     
    இந்த இரு படங்களும் ரோட்டிலிருந்து கீழே இறங்கும் முன் எடுத்த படங்கள். 

இந்தப் பாலத்தின் அருகில் தான் இறங்கினோம். இங்கு நீர் அதிகம் இருந்தது பறவைகளும் இருந்தன. இந்த இடத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்து பல கோணங்களில் படம் எடுத்தேன் அவை கீழே

கொக்கு/நாரைகள் எவ்வளவு இருக்கின்றன பாருங்கள். ஸ்டான்ட் அட் ஈஸ், அட்டென்ஷன் மற்றும் லெஃப் ரைட் லெஃப்ட் ரைட் ப்ராக்டீஸ் செய்யறாங்க பாருங்க! இதில் ஒரு 4, 5 தனியே தள்ளி நின்று கொண்டிருந்தன இந்தக் கூட்டத்துடன் சேராமல். முழு கூட்டத்தையும் கேமராவுக்குள் அடக்க இயலவில்லை. அதுவும் ஜூம் செய்து எடுத்ததால்..

பாருங்க இந்த 4 பேரு மட்டும் தனியா நிக்கிறாங்க. கூட்டத்தோடு சேர்ந்து போஸ் கொடுக்காம அவங்களுக்கு ஸ்டான்ட் அட் ஈஸ், அட்டென்ஷன், லெஃப்ட் ரைட் எக்ஸெர்ஸைஸ் ப்ராக்ட்டீஸ் பிடிக்கலையாம்!!!! அதனால் அவங்க எங்கள மட்டும் ஃபோட்டோ எடுக்கலைனு கோபம் கொள்ளக் கூடாதுனு அவங்களையும் இந்தப் பக்கம் கேமராவைத் திருப்பிக் கவர் பண்ணினேன்!!

மாலை நேரம் தான் வெயில் இருந்தாலும் சூரியனை நோக்கி அதன் ஒளிக்கதிர் நீரில் தெரிவதை எடுத்ததால் மாலை மயங்கும் நேரம் போல் காட்டுகிறது. 
அந்த இடத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் தண்ணீரில் தகதகத்தது அதை எடுக்க வேண்டும் என்று எடுத்தேன். இந்த இரண்டாவது படத்தில் பறவைகள் பறக்கின்றன அதை எடுக்க முடிந்த அளவு எடுத்தேன்.

மேலே இரு படங்களையும் தவிர்த்து இதோ இந்தப் படம் பாருங்கள் சூரிய ஒளி என் பின் புறம் நாங்கள் பெண்கள் மட்டும் நின்று கொண்டிருந்ததை என் நிழல் வராமல் அவர்கள் நிழலை மட்டும் எடுத்தேன். இதில் இடப்பக்கம் புடவை உடுத்தியவர் தெரிகிறதா கை உயர்த்திக் கொண்டு அவர் மற்ற இருவரையும் அவர் செல் ஃபோனில் படம் பிடிக்கிறார்.

தூரத்தில் பாலம் தெரிகிறதல்லவா அந்தப் பாலம் தான் மேலே க்ளோஸப்பில் இங்கு பறவைகள் வியூ என்று போர்ட் இருக்கும் பகுதி. பாருங்கள் யாரோ பாட்டிலைப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். நாங்கள் அதை எடுத்து எங்கள் குப்பைக் கவரில் பொட்டுக் கொண்டோம்.

அங்க பாருங்க தூரத்துல அந்தக் கொக்கு/நாரைகள் தெரியறாங்களா…அவங்களைத்தான் இன்னும் கொஞ்சம் முன்னே சென்று தன்ணீரின் விளிம்பில் நின்று கொண்டு ஜூம் செய்து எடுத்தேன். நாங்கள் இப்பகுதியில் நிறைய நடந்தோம்…நடந்தோம் என்பதை விட நான் நடந்தேன்!!!! ஷூ தடங்கள் தெரிகிறதல்லவா? என் ஷூ அடிபாகம் முழுவதும் சேறுதான். எல்லாம் சுற்றி சுற்றி ஃபோட்டோ எடுக்கத்தான் ஹிஹிஹிஹி!!!


அடுத்து நாங்கள் செய்த லூட்டி என்ன என்பதைச் சொல்கிறேன் என்று சொல்லிருந்தேன் இல்லையா. இங்கு இறங்கிய இடத்தில் ஃபோட்டோ ஷூட்டை முடித்துக் கொண்டு கிளம்ப மனமே இல்லாமல் வண்டியில் ஏறினோம். திடீரென்று எங்களில் நாங்கள் நான்கு பேர் வண்டியின் மேல் டாப்பில் ஏற ஆசைப்பட மைத்துனரும் ஓகே என்று சொல்ல எங்கள் நண்பர் (இவரைப் பற்றி பர்வதமலை பயணத்தில் குறிப்பிட்டிருக்கேன். ஹார்ட் பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டவர் ஆனால் செம ஜாலி டைப். அவர் இருக்கும் இடத்தில் சிரிப்பலைதான். எங்களுடன் அவரும் அவருடன் நாங்களும் சேர்ந்து இது போன்ற லூட்டிகள் அடிப்பதுண்டு. அப்படியான ஒரு லூட்டிதான் இது.

அடுத்த இடத்தில் பறவைகள் கண்ணில் பட்டு நாங்கள் இறங்கும் வரை இப்படி நால்வரும் டாப்பில் பயணித்தோம். மற்றவர்கள் வண்டியுனுள். முன்னால் அமர்ந்திருப்பது நண்பர். அடுத்து அமர்ந்திருப்பது என் ஒன்றுவிட்ட நாத்தனார். அடுத்து இடையில் கொஞ்சமே கொஞ்சம் துப்பட்டா தெரிகிறதே அது நண்பரின் மனைவி. அவர் பின்னால் நான்!!!! கேமராவில் சரியாகக் கவர் செய்ய முடியவில்லை என்பதால் மொபைலில் எடுத்தேன். 

வண்டி மெதுவாகவே சென்றதால் இரு புறமும் பார்த்துக் கொண்டே வந்தது மறக்க முடியாத அனுபவம் மட்டுமின்றி அப்படியே சில படங்களும் எடுத்தேன் அது அடுத்த பதிவில். நீங்களும் எங்க கூட வண்டில வாங்க! பார்த்துக் கொண்டே போவோம். 

-----கீதா     




செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 3

மதிய உணவு சாப்பிட்டுவிட்டுப் புறப்படுவோம் என்று சொல்லி முடித்திருந்தேன் சென்ற பதிவை. சாப்பிட்டாச்சு. சாப்பிட்டதும் அந்தத் தெருவில் கொஞ்சம் நடந்துவிட்டு அங்கேயே டீ, காஃபி என்று குடித்துவிட்டுக் கிளம்பினோம் 4.30 மணி அளவில்.

சூளூர்பேட்டை சந்திப்பிலிருந்து நேர் சாலையில் சென்றால் அந்தச் சாலை முடிவதே ஷார் அதாவது ஸ்ரீஹரிகோட்டாவுக்குச் சென்றுவிடலாம். சதிஷ் தவான் ஸ்பேஸ் சென்டரில் தான் போய் முட்டும். 21 கிமீ தூரம்.

சூளூர்ப்பேட்டையிலிருந்து ஷார் சாலையில் கொஞ்சம் தூரம் சென்றதுமே புலிகட் ஏரி தான். முதலில் வலது பக்கம் நீர்ப்பரப்பு. பின்னர் இரு பக்கமும் நீர்ப்பரப்புதான். இரு புறமும் பறவைகளைக் காணலாம் என்றாலும் வலப்புறம் தான் அதிகம் பறவைகள் இருந்தன.


இதுதான் ஷார் செல்லும் சாலை. 

ஏரி தொடங்கும் இடத்தில் சில பறவைகளைக் கண்டதும் உடனே வண்டியை நிறுத்தி கரையில் இறங்கிச் சென்றோம். நான் முடிந்த அளவு படங்களை எடுத்துக் கொண்டுவிட்டேன். ஏரியில் நீர் கரையை விட்டுக் கொஞ்சம் தள்ளித்தான் இருந்தது. சமீபத்தில்தான் தண்ணீர் குறைந்திருப்பது தெரிந்தது. கரையில் காலை கவனமாக வைக்க வேண்டியதாக இருந்தது. இல்லை என்றால் கால்கள் புதைந்துவிடும். அதுவும் நான் ஷூ அணிந்திருந்ததால் ரொம்பவே கவனமாகச் சென்றேன்.

இதோ இந்த இடத்தில் எடுத்த புகைப்படங்கள்.


ஷார் வரை செல்லும் இந்த ஏரி அப்படியே கடலுடன் ஐக்கியமாகிவிடும்.



 சுற்றிலும் உள்ள நீர்ப்பரப்பைக் கிளிக்கினேன். தூரத்தில் பறவைகள். ஜூம் செய்து முடிந்த வரை எடுத்தேன். என் கேமராவின் சக்தி அவ்வளவுதான்.


தூரத்தில் பறவைகள் இருந்தன ஜூம் செய்தாலும் என் கேமராவின் சக்தி என்று முன்னாடி சொன்னதற்கு அத்தாட்சி பாருங்க அங்கிருந்த பறவைகள் பறக்குது…!!!!!!!






பறவைகளைக் கூட்டமாகக் கண்ட போது மனதில் அப்படி ஒரு ஆனந்தம். அதுவும் அவை அவ்வப்போது கூட்டமாகப் பறந்து கொண்டே இருந்ததைக் காணக் கண்கொள்ளாக் காட்சி. ஒரு கூட்டம் எழுந்து பறந்தால் ஏற்கனவே பறந்த கூட்டம் வந்து அமரும். அடுத்து ஒரு கூட்டம் எழும். அப்படிச் சிறகை விரித்து தண்ணீரைத் தேய்த்துக் கொண்டு தண்ணீர்த் துளிகள் தெளித்திடப் பறக்கும் அழகை என்னவென்று வர்ணிக்க! வார்த்தைகளே இல்லை.

மெய்மறந்து பார்த்துக் குதூகலித்தேன். ஒவ்வொரு முறை அவை பறக்கும் போதும் நான் துள்ளி துள்ளிக் குதித்து மகிழ்ந்தேன். வியப்புடம், இயற்கையை நினைத்து சிலிர்த்து இன்னும் என்ன வார்த்தைகள் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். காணக் கண் கோடி வேண்டும்! அதுவும் நிறைய வகை வகையான நாரைகள், நீர்க்காகங்கள், நீர்ப்பறவைகள். அருகே சென்று பார்க்க இயலவில்லை.

இதைப் படமெடுக்க ஆகச் சிறந்த கேமரா வேண்டும். என் கேமராவில் இவ்வளவுதான் முடிந்தது. வெங்கட்ஜி இன்னும் வெகு சிறப்பாக எடுத்திருந்திருப்பார் அவரது கேமராவில். 

ஒரு பக்கம் இருப்பவற்றை எடுத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பக்கம் இருப்பவை பறக்கத் தொடங்கும். ஹையோ அதை மிஸ் செய்துவிட்டோமே என்று அதைப் பார்த்துப் படம் எடுக்கத் தொடங்கும் போது வேறொரு புறம் இருப்பவை உயரே பறக்காமல் நீரின் மேற்பரப்பிலேயே பறக்கும். இப்படி எல்லாவற்றையும் கேமராவுக்குள் சிறைப்பிடிக்க அதுவும் என் கேமரா ஒவ்வொரு படத்தையும் சேமிக்க மிகுந்த நேரம் எடுக்கும். – நிக்கான் கேமரா. இடையில் தகராறு லென்ஸ் எரர் என்று. எப்படியோ முடிந்தவரை ஃபோட்டோ ஷூட் எடுத்துத் தள்ளிவிட்டேன்!! 

 


மீண்டும் ஷார் சாலையில் பயணம். அப்போது எங்கள் வண்டியின் முன்னால் சென்ற ஷேர்ட் ஆட்டோ. (சூளூர்ப்பேட்டையிலிருந்து ஷார் செல்ல ஷேர் ஆட்டோவில் 10ரூ தான். வட்லமுடியில் இருந்தப்பவும் அப்படித்தான் வட்லமுடிலருந்து தெனாலி டவுன் செல்ல ஷேர் ஆட்டோ 10ரூ தான்.)



இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன. அடுத்த மூன்று நிமிடத்தில் இதே சாலையில் நாங்கள் அடுத்து இறங்கிய பகுதி மிக அழகான பகுதி. அந்த இடத்திலிருந்து இரு புறமும் நீர்ப்பரப்பு. அங்கிருந்து புறப்படும் போது எங்களில் நாங்கள் நால்வர் என்ன செய்தோம் என்பதையும் சொல்கிறேன் அடுத்த பதிவில். இன்னும் கொஞ்சம் அருகில் இருப்பது போன்ற பறவைகளின் படங்களும் ஒரு சில உண்டு. (ஜூம் செய்து எடுத்தவைதான்!)

--------கீதா