திங்கள், 29 அக்டோபர், 2018

ஆவின் டு நந்தினி


பல மாதங்களாகப் பல முக்கியமான பணிகள் என்று மனமும், உடலும் தொடரி ஓட்டமாய் ஓடியதால் அதுவும் ஹர்டிலிங்க் ஓட்டம், வலைப்பக்கம் வர இயலாத நிலை இருந்து வந்தது. அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நலம் தானே! தற்போது ஆவினிலிருந்து நந்தினிக்கு மாறியாகிவிட்டது. நம்ம எபி ஆசிரியர்களில் பெரும்பாலானோர்(??!!) மற்றும் பிரபல வலைப்பதிவர்கள் வசிக்கும் ஊருக்கு மாற்றம். நிறைய பதிவுகள் வாசிக்கக் காத்திருக்கின்றன. ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும். என் பதிவுகளும் பல வெட்டல், ஒட்டல் வேலைகளுக்குக் கிடப்பில் காத்திருக்கின்றன. அப்படியான ஒன்றில்தான் நம்ம ஏரியாவில் சு டு கு கதை கூட வெட்டல் செய்து தட்டிக் கொட்டாமல் ஸ்ரீராமுக்கு அனுப்பி வெளிவந்தும் விட்டது.

எத்தனையோ ஊர்கள், சிறிய ஊர்கள், அந்த ஊர்களிலும் பல வீடுகள் என்று மாறி, உரல், அம்மி முதல் இண்டக்ஷன் என்று பல அனுபவங்கள் என்றாலும், கடந்த 15 வருடங்கள் சென்னையிலும் வீடுகள் மாறியிருந்தாலும் சமீப வருடங்களில் வீடு மாற்றாமல் இருந்துவிட்டு மீண்டும் ஊர் மாற்றம். மாற்றம் பழகிப் போன ஒன்றானதால் பெரிதாகத் தெரியவில்லை. பொருட்களை எல்லாம் அட்டைப்பெட்டிகளிலும், பைகளிலும் கட்டியதுதான் கொஞ்சம் உளைச்சல் எடுத்தது. ஏனென்றால் சில பொருட்களை சென்னை வீட்டில் ஓர் அறையில் போட்டு விட வேண்டும் என்று சொல்லப்பட்டதால் எதை எடுத்துக் கொள்ள எதை விட என்ற ஒரு குழப்பம். எப்படியோ மூட்டை கட்டி வந்து சேர்ந்து இந்த வீட்டில் பொருட்களை ஒரளவு அடுக்கியாகிவிட்டது. இன்னும் சில பல வேலைகள் இருக்கின்றன. (ஊர் மாற்றம், வீடு மாற்றம் பற்றி கீதாக்காவிடம் நிறையவே அனுபவக் கதைகள் இருக்கும்!!!)

சில நாட்களாக பொருட்கள் எல்லாம் கட்டி வைக்கப்படுவதைப் பார்த்து, சுற்றி சுற்றி வந்து முகர்ந்து பார்த்த கண்ணழகிக்கு நன்றாகவே புரிந்துவிட்டது போலும். இவர்கள் எங்கேயோ போகப் போகின்றார்கள் என்று. ஒன்றரை வயதில் பாண்டிச்சேரியிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணத்தில் சென்னைக்கு வந்தவளுக்கு இப்போது (ஒன்பதரை வயது) இதுவே முதலான மிக நீண்ட தூரப் பயணம். என்றாலும் எந்தவித பயமும் இன்றி மிக மிக நல்ல பெண்ணாக வந்தாள். நன்றாகவே பக்குவப்பட்டுவிட்டாள்.

ஊர் பிடித்திருக்கிறது. ஓ! ஊர் என்று சொல்லக் கூடாதோ! சரி ஊரு. இருப்பது முக்கிய நகரத்திலிருந்து அதாவது ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தள்ளி இருக்கும் சிறு நகரம் (டவுன்) அருகில் ஒரு கிராமம் என்று சொன்னாலும் வளர்ந்திருக்கும் ஊரில். பசுமை அழிந்துதான் வருகிறது. அருகில் சில ஏரிகள் இருப்பதாக கூகுள் சொல்கிறது. ஆனால் படங்கள் சொல்லுவது “எப்படி இருந்த நான் இப்படியானேன்” என்ற வசனத்தைதான். இன்னும் சில வருடங்களில் இந்த ஏரிகள் கூகுள் வரைபடத்தில் காணாமல் போய்விடும் அபாயம் வெட்ட வெளிச்சம். வளர்ச்சி என்ற பாசாங்குப் பெயரில் நாம் கொடுக்கும் மிகப் பெரிய விலை என்றே தோன்றுகிறது. கிராமங்களே இல்லாமல் ஆகிவிடுமோ என்ற அச்சமும் எழுகிறது. நான் முன்பு கண்ட பெங்களூர் அல்ல தற்போதைய பெ(ப)ங்களூரு!

கடைகளில் மக்களுக்குத் தமிழ் புரிகிறது. கொஞ்சம் பேசவும் செய்கிறார்கள். ஹிந்தி நன்றாகவே பேசுகிறார்கள் என்பதால் தமிழ் மற்றும் ஹிந்தி பேசி சமாளிக்க முடிகிறது. என்றாலும் கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஐந்து நிமிட நடையில் ஹைவே. இந்த ஐந்து நிமிட நடைக்குள் அன்றாடத் தேவைகளுக்கான கடைகள், மாவு மில், மிக்சி, க்ரைண்டர், கேஸ் அடுப்பு, மொபைல் சரி செய்யும் கடைகள், ரீ சார்ஜ் செய்யும் கடைகள், சாப்பாடு கடைகள் அத்தனையும் இருக்கின்றன.

நந்தினியும் பரவாயில்லை நன்றாகவே இருக்கிறாள். சற்றுக் கொழுப்புடன். சென்னையில் ஆவின் அவ்வப்போது வாங்கினாலும், வீட்டிற்கு அடுத்தாற் போல் கறவைகள் இருந்ததால் பால்  புதியதாகக் கிடைத்தது. இங்கு கறவைகள் அருகில் இருக்கிறார்களா என்று இனிதான் பார்க்க வேண்டும்.

இங்கு காவிரி தண்ணீர் கொஞ்சமேனும் வரும் என்று நினைத்து வந்தால் இங்கும் தண்ணீர்க் கஷ்டம் எங்கள் பகுதியில். பிற பகுதிகள் பற்றி தெரியவில்லை. ஒரு வாரத்தில் இரு நாட்கள்தான் – செவ்வாய் மற்றும் சனி – தண்ணீர் சம்பில் வருமாம். ஆனால் சென்ற வாரத்தில் வரவே இல்லை. ஏற்கனவே டாங்கில் இருந்த தண்ணீரை வைத்துச் சமாளித்துக் கொண்டிருந்த போது வியாழன் மாலையிலிருந்து பிரச்சனை தொடங்கியது. எனவே சனிக்கிழமை தண்ணீர் வருகிறதா என்று மாலை வரை பார்த்துவிட்டு வராததால் அக்கம்பக்கம் விசாரித்து தண்ணீர் லாரிக்குச் சொல்லிட 10 நிமிடத்தில் வரும் என்றார்கள் வந்தும்விட்டது. 4500 லி 300 ரூ. அது போல பவர் ஷட் டவுன். தினமும் ஒரு மணி நேரம் கட் ஆகிறது. அது தவிர அவ்வப்போதும் போய் வருகிறது. 

குப்பைத் தொட்டிகளே இல்லை. பல தெருக்கள் சுற்றிப் பார்த்தாயிற்று. வீட்டிலிருந்து எடுத்துச் செல்ல வண்டி வரும் என்றார்கள் ஆனால் இந்த ஒருவாரத்தில் வரவே இல்லை. எங்கு கொண்டுக் கொட்டுவது என்று தெரியவில்லை. அருகில் இருப்பவர்கள் ஆங்காங்கே காலியாக இருக்கும் மனைகளில் கொட்டிவிடுகிறார்கள். அந்த மனைகளுக்கு அடுத்தாற் போல் இருக்கும் வீடுகளில் கொசுக்கள் வருமே! துர்நாற்றமும் வருமே. நல்லதில்லையே. நமக்கு அப்படிக் கொட்டும் பழக்கம் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் பல பைகள் குப்பையுடன் முழித்துக் கொண்டிருக்கின்றன. 

இத்தனை நாள் பி எஸ் என் எல் மட்டுமே பழகியிருந்த என் கணினிக்கு ஏனோ ஏர் டெல் மற்றும் மொபைல் ஜியோ ஹாட்ஸ்பாட்டை ஏற்றுக் கொள்ள மனம் இல்லை போலும். மறுத்தது. அப்புறம் எப்படியோ சமாதானப்படுத்தி ஒரு வழியாய் ஏற்றுக் கொள்ள வைத்தாகிவிட்டது. இதோ மீண்டும் வலைப்பக்கம் எட்டிப் பார்த்துவிட்டேன்.

கூகுள் தேவதைதான் கன்னட ஆசிரியை. இப்பத்தான் சிறிய சிறிய வார்த்தைகள் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். எனவே கில்லர்ஜி கன்னடத்தில் பின்னூட்டம் கொடுத்து பயமுறுத்தாமல் இருக்க புலியூர் பூஸானந்தாவையும், தேவதையையும் வேண்டிக் கொண்டு காவல் தெய்வங்களாகப் போட்டுவிட்டேன்!!!!!!!

அடுத்த பதிவுக்கு மேட்டர் வேண்டுமே! அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். அடுத்த பதிவில் மாட்டனாடறேன்!

-----கீதா