வெள்ளி, 26 செப்டம்பர், 2014

வாழ்த்துக்கள் கீது,....ஆஸ்கார் வெற்றிவாகைச் சூட வாழ்த்துக்கள்

Liar's Dice is a 2013 Hindi, road drama film, written and directed by Geetu Mohandas. The film stars Geetanjali Thapa and Nawazuddin Siddiqui in lead roles.


      கீது மோகன்தாஸின் “லையர்ஸ் டைஸ்” (Liar’s Dice), “மேரி கோம் உள்ளிட்ட 29 இந்தியத் திரைப்படங்களைப் பின் தள்ளி, இம்முறை இந்தியாவிலிருந்து, பிறநாடுகளுக்கு வழங்கப்படும் ஆஸ்கார் விருது பெற போட்டியிடும் திரைப் படங்களுடன் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.  கீது மோகன் தாஸ் இதற்கு முன் இயக்கிய குறும்படங்கள் அவரது திறமையை திரை உலகிற்கு அடையாளம் காட்டியிருக்கிறது. என்றாலும் இது அவர் இயக்கிய முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம், இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றதும், அதில் ஒன்று, சிறந்த நடிகைக்கான விருது பெற்ற இப்படத்தின் கதா நாயகியான கீதாஞ்சலி தாப்பாவுக்கும், மற்றொன்று சிறந்த ஒளிப்பதிவாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கீதுவின் கணவரான ராஜீவ் ரவிக்கும் கிடைக்கப் பெற்றது இப்படத்தின் மற்றொரு சிறப்பு.



      இந்திய திபெத் எல்லைப் பகுதியில் வாழும் பழங்குடிப் பெண், தன் மகளுடன் தன் கணவனைத் தேடிச் செல்வதுதான் கதை.  இடையே அப்பெண் சந்திக்கும் ஒரு ராணுவ வீரனும் இப்படத்தின் ஒரு முக்கியக் கதாபாத்திரமே.  அவர்களது பயணத்தினிடையே நிகழும் சம்பவங்கள் தான் இப்படத்திற்கு மெருகேற்றுகிறது. பிறந்த மண்ணை விட்டு, வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் மனிதர்களையும், அவர்களுக்கு இரையாகும் பெண்களையும் பற்றிய மனதைத் தொடும் கதையை, சிறுவயதிலேயே திரை உலகிற்கு குழந்தை நட்சத்திரமாய் வந்து, பின் கதா நாயகியாய் வளர்ந்து, அதன் பின் இயக்குநராகவும் மாறிய கீது மோகன் தாஸ் நல்ல ஒரு திரைப்படமாக்கி எல்லோரது பாராட்டையும் பெற்றிருக்கிறார்.  இதற்கு முன் மூன்று முறை “லகான்”, மதர் இண்டியா”, “சலாம் பாம்பே” எனும் படங்கள் வெளிநாட்டுட் திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருது பெற போட்டியின் இறுதிக் கட்டம் வரைதான் சென்றிருக்கின்றன.  இதுவரை இந்தியத் திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது ஒரு எட்டாக் கனிதான்.  ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட கீது மோஹன் தாசின் “லயர்ஸ் டைஸ்” இம்முறை இறுதிக் கட்டத்தையும் தாண்டி விருது பெற நாம் எல்லோரும் வாழ்த்துவோம்.  

திங்கள், 22 செப்டம்பர், 2014

உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் பொது உடைமை நிறுவனங்கள்


Image result for china president


      கடந்த புதனன்று, 17.09.2014, தூர்தர்ஷனில் செய்திகள் வாசித்தவர் சீனக் குடியரசுத் தலைவரான க்சி ஜின்பிங்கின் (Xi Jinping) பெயரைத் தவறுதலாக உச்சரித்து, விவாதத்திற்கு உள்ளானது எல்லோரும் அறிந்ததே.  தற்காலிகச் செய்தி வாசிப்பவரான அவரது வேலையும் இதனால் பறிபோனது.  க்சி என்று உச்சரிக்க வேண்டியச் சொல்லான xi  ஐ அவர் தவறுதலாக   XI ரோமன் எண் பதினொன்று என்று நினைத்து லெவன் ஜின்பிங்க் என உச்சரித்தது தான் பிரச்சினையாகிவிட்டது. செய்தி வாசித்தவர், இந்தியா வரவிருக்கும் சீனக் குடியரசுத் தலைவரைப் பற்றியும், அவரது பெயரைப் பற்றியும் அறியாது இருந்தது குற்றம்தான்.  அதனால்தான் அவர் பெயரை இப்படி “லெவன்” சின்பிங்க் என்று வாசிக்க வேண்டியதானது. 


இதுபோன்ற பொறுப்பான பதவி வகிப்பவர் இத்தகைய தவறிழைத்தது மன்னிக்க முடியாதக் குற்றம்தான். இதில் தண்டனை பெற்ற அவரை மட்டும் குற்றம் சொன்னால் போதுமா?  நன்றாகச், சுத்தமாகத் தெளிவாகச் செய்தி வாசிப்பவர்கள், தூர்தர்ஷனுக்கு எளிதாகக் கிடைப்பதில்லையாம்.  எனவே தற்காலிகமாகக் கிடைத்தவர்களை எடுக்க வேண்டிய சூழலாம்.  துர்தர்ஷனுக்கு செய்தி வாசிக்க நிரந்தரமான ஆட்கள் இல்லையாம்.  நூற்றுக்கணக்கானத் தனியார் சானல்கள் வந்ததும், அவர்களுடன் போட்டியிட முடியாமல் தூர்தர்ஷன் திணறுவது தெரிகிறது.


இதே போன்று முன்பு, ஹெச் எம் டி கைக்கடிகாரங்கள், ஒவ்வொரு இந்தியரின் கைகளிலும் அவர்களுக்கு நேரத்தைக் காட்டி பெருமை சேர்த்த காலமும் உண்டு.  டைட்டான் போன்ற கைக்கடிகாரக் கம்பெனிகள் வந்ததும் ஹெச் எம் டி கைக்கடிகாரங்கள் லிமிட்டெட் போன்ற பொதுவுடைமை நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. தனியார் கூரியர் சர்வீஸ் தொடங்கப்பட்டதும் இந்தியத் தபால் துறை சற்று ஆட்டம் கண்டது.  பொதுவுடைமை நிறுவனங்களான இவற்றை எல்லாம் நிலை நிறுத்த.  அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஏன் ஆவன செய்வதில்லை?  இது போல், வரும் நாட்களில் பொதுவுடைமையிலுள்ள நிறுவனங்கள் எவையெல்லாம் உயிரழக்கப் போகிறதோ தெரியவில்லை!  இறைவனுக்குத்தான் வெளிச்சம்!

படங்கள் : கூகுள்

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

பயணம் தரும் படிப்பினைகள்!

             

      இந்த வாரம் திங்களன்று, எனக்குக் காலையில், புனாவில் இருக்கும் என் கணவரின் தம்பியின் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு.  அவரது மகளுக்கு ஒரு சிறு அறுவை சிகிச்சை.  எனது உதவி வேண்டி அந்த அழைப்பு.  கணவரின் தம்பி மறைந்து இரு வருடங்கள் ஆன நிலையில், அவர்களுக்கு அவ்வப்போது சென்று உதவுவது எனது வழக்கம்.  இப்போதும் அப்படியே.  எனவே, செவ்வாயன்று மதியம் புறப்படும் ரயிலில் செல்ல வேண்டி, உடனடியாகத் தத்காலில் பயணச் சீட்டு பதிவு செய்து, செவ்வாயன்று ரயிலில் புறப்பட்டு இதோ இப்போது நான் புனாவில், சென்னையின் இறுக்கத்திற்குத் தற்காலிகமாக ஒருவாரம் விடை கொடுத்துத், தப்பித்து, இரவு ஊட்டி போன்ற ஒரு குளுமையில், பகலிலும், இரவிலும் மின் விசிறியின் தேவை இல்லாமல். 

      பயணம் என்பது எனக்குப் பெரும்பாலும் தனிமையில்தான். திருமணத்திற்கு முன்பிலிருந்தே, பின்பும் சரி, மகன் கைக் குழந்தையாக இருக்கும் போதும் சரி: சிறுவனாக இருந்த வரை அவனுடன் கதைகள் பேசி, இயற்கையை ரசித்து, காட்டையும், வழியில் வரும் நதிகளையும், பள்ளத்தாக்குகளையும், பறவைகளையும், விலங்குகளையும், மக்களையும் ரசித்துப், பயணங்களைப் பற்றிய ஒரு ரசனையை அவனுக்குள் ஏற்படுத்தி, நாங்கள் இருவரும் ரயிலின் கதவருகில் நின்று பயணித்த நினைவலைகளுடன், எனது இந்தப் பயணம் தொடங்கியது.  அவன் வளர்ந்த பிறகும் கூட அவனுக்கு நேரம் கிடைத்த போது அவனுடன் தான் எனது பயணம்.  சுற்றுலா என்றால் மட்டுமே, எப்பொழுதாவது, அதுவும் கணவருக்கு நேரம் இருந்தால் நாங்கள் மூவரும், இல்லையென்றால் குடும்பத்தினருடன் செல்வதுண்டு.  மகனும் கால்நடை மருத்துவனாகப் பணி செய்யத் தொடங்கி தற்போது அவனும் என்னுடன் இல்லாததால்  என் பயணங்கள், ரயிலானலும், பேருந்தானலும், விமானமாக இருந்தாலும் தனிமையில்தான்.  தனியாகப் பயணம் செய்து பழகியதால் எங்கு செல்வதற்கும் எனக்குப் பயம் இருப்பதில்லை. ஆனால், தற்போது ரயில்களில், எத்தனையோ வசதிகள் வந்துவிட்ட போதும், தமிழ்நாட்டைத் தாண்டிய வட இந்தியப் பயணங்கள் சில சமயங்களில் சிறிது ஆற்றாமையை ஏற்படுத்தத்தான் செய்கின்றது.


      ரயிலில் சென்ற போது, இயற்கைக் காட்சிகளைக் கண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டு, கையில் கொண்டு சென்ற விவேகானந்தரைப் பற்றிய புத்தகத்தை வாசித்துக் கொண்டும் இருந்த போது, என்னுடன் பயணித்த ஆண்கள் நான் ஜன்னலில் தொங்க விட்டிருந்தப் பையைப் பார்த்து, அதில் நான் காப்பி அருந்திய காதிதக் கோப்பைகளையும், கையில் கொண்டு வந்திருந்த உணவை அருந்திய பின் அந்த இலையையும் அதில் இடுவதைப் பார்த்து வியந்து விட்டுத், தாங்கள் கீழேயே குப்பைகள் போடுவதையும் சொல்லிக் கொண்டனரே அல்லாது அவர்கள் தங்களது செயலை மாற்றினாரில்லை. இது எனது சிறு வயது முதல் வந்த பழக்கம் மட்டுமல்ல, எனது மகனுக்கும் இந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது. அவர்கள் மீதம் வைத்த காப்பியும், தேனீரும் ரயிலின் சிருங்கார அசைவில் அரைவட்டம் அடித்து எனது காலைத் தொட்டுச் சென்றது.  இத்தனைக்கும் எல்லோரும் படித்தவர்கள். சிறிது நேரத்தில், ஒரு குடும்பம் கடப்பா ரயில் நிலையத்தில் ஏறியது.  புதிதாக மணம் முடிந்த மணமக்களும், வயதான மூதாட்டியும், இன்னும் சில ஆண்களும் ஏறினார்கள்.


பெண்ணுக்கு வந்த சீர்கள் போலும்! இருக்கைகளின் அடியில் திணித்தது போக எஞ்சியவற்றை எல்லோரது காலின் அடியிலும் வைத்துவிட்டு, ஜன்னலோரம் பாத்திர மூட்டையை வைக்க, நான் எனது காலை எங்கு வைத்துக் கொள்வது என்று யோசித்த வேளையில், எனது காலை அந்தப் பாத்திர மூட்டையின் மேல் வைத்துக் கொள்ளுமாறு அபிநய அறிவுரை வந்தது! நல்ல காலம் அந்தப் பெண்ணுக்குக் கட்டில், பீரோ, மேசை, நாற்காலிகள், குளிர்சாதனப் பெட்டி கொடுக்கவில்லை போலும், இல்லை அவை எல்லாம் ரயிலின் கூரை மேல் ஏற்றியிருப்பார்களோ? பேருந்து போன்று? தொலைக்காட்சிப்பெட்டியும், மேசை மின்விசிறியும், மிக்சியும், இருக்கை அடியில். இதற்கிடையில் அவர்களது பெட்டிகள்.  எல்லாமே ஏதோ அமெரிக்கா செல்லுவது போன்ற பெரிய பெட்டிகள்! ஒரு மினி வீடே பயணம் செய்தது என்றால் மிகை அல்ல.  நான் கால் வைத்து வெளியில் செல்ல வேண்டுமென்றால், நான் நீளம் தாண்டுதலில் சாம்பியனாக இருக்க வேண்டும். இந்த அரைக் கிழ வயதிலும் செய்ய தயார்தான்! ஆனால், எதிரில் பக்கவாட்டில் இருந்த பயணிகளின் மேல், வாமன அவதாரம் போல் (நான் நாலடியார்!) என் திருப்பாதங்கள் பதியுமே!  நல்ல காலம் உயரம் தாண்டும் அவசியம் இருக்கவில்லை.  புது அரசாங்கத்தின் ரயில்வே துறைக்கு பரிந்துரை செய்ய ஒரு பட்டியல் மனதில் உருவாகத் தொடங்கியது! 


      













     ஒரு ஆச்சரியம், புது அரசாங்கத்தினால் ரயில்வே துறையில் ஏற்பட்ட மாற்றம் போலும்.  பெட்டிகளைப் பெருக்கி, கிருமி நாசினி திரவம் தெளித்து துடைத்துச் சென்றனர் ஒரு சீருடை அணிந்த குழுவினர். இதற்கு முன் எனது பயணங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் கூடப் பார்த்தது இல்லை! அந்தக் குழுவினர் எங்கள் இருக்கைகளின் அருகில் வந்ததும், ஸ்தம்பித்து நின்றனர்!  இது வாடகைக்கு விடப்பட்ட வீடோ என்ற எண்ணம் கூட வந்திருக்கலாம், அங்கிருந்த தட்டி முட்டிச் சாமான்களைப் பார்த்து!  எப்படிப் பெருக்கித் துடைப்பது என்று! ஆனால், அந்த வீட்டம்மா, எல்லா பொருட்களையும் எடுத்து அங்கிருந்தோர் ஒவ்வொருவரின் தலையிலும் ஏற்றாத குறையாய் தூக்கிப் பிடிக்க வந்தவர்களும் தங்கள் பணியைச் செவ்வனே நிறைவேற்றினர்.  சிறிது நேரத்திலேயே அந்த இடம் மீண்டும் உணவு விடுதிகளின் சமையலறை போன்றானது என்பது வேறு வஷயம்!


எனது புகைப் படக் கருவியில் எடுக்கப்பட்டவை

“பரவாயில்லையே, வழக்கம் போல் ரயிலில் மாற்றுத் திறனாளிச் சிறுவர்கள், இளைஞர்கள் வந்துக் குப்பைகளைப் பெருக்கிவிட்டு பிரயாணிகளிடம் காசு வாங்கிச் செல்லுவது தடை செய்யப்பட்டது போலும்! எனவே, இரவும் வந்து செய்வார்கள்” என்று மகிழ்வுடன் நினைத்து புதிய அரசாங்கத்தை வாழ்த்திய வேளை கானல் நீராகி, மாலையில் சிறுவர்களும், இளைஞர்களும் துணியுடன் பெருக்க வந்துவிட்டனர்.  அப்போது தோன்றியது, சிறுவர்களை அரசு ஏன் தத்தெடுத்துப் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என்றும்,  இந்தச் சிறுவர்களையும், இளைஞர்களையும் விடுமுறை நாட்களில் அரசாங்கம் இது போன்று ரயிலில் ஊழியம் செய்து அவர்களுக்கு ஒரு ஊதியம் வழங்கைனால் என்ன என்றும் தோன்றியது.  மேலை நாடுகளில் இளைஞர்கள் பகுதி நேர வேலை செய்து படிக்கவில்லையா?  அது போன்று. ரயில் சினேகம் போன்று இதுவும் ரயில் கனவுகள்தான்! எனது மோடி ஜிக்கான பட்டியல் நீண்டது!

      சற்று நேரத்தில் குழு குழுவாக வந்தனர் திருநங்கைகள்.  இப்போது ஆண்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் கை நீட்டுகின்றார்கள்.  ஒரு சின்ன மாற்றம்.  ஆண்களிடம் கை தட்டி வாங்குகின்றனர்.  பெண்களிடம் பாட்டுப் பாடி வாங்குகின்றனர்!  கொடுக்காவிட்டால் அருகில் வந்து தொடுவதோ, திட்டுவதோ இல்லை. ஆனால், வாங்காமல் அந்த இடத்தை விட்டு நகருவதும் இல்லை! இவர்களைக் கண்ட போது மனதில் கழிவிரக்கம் வரத்தான் செய்தது.  என்றாலும் பல சமயங்களில் நாம் கொடுப்பதை ஏற்காமல், அதிகமாக பணம் கேட்பதும் மனதை நெருடுகின்றது.  இவர்களைச் சமூகம்தான் அப்புறப்படுத்துகின்றது என்றால், அரசாங்கமாவது கண்டுகொள்ளலாமே! அவர்கள் அப்படிப் பிறந்தமைக்கு அவர்கள் அல்லவே காரணம்! இயற்கையின் கொடூர விளையாட்டு, இல்லை அவர்களைப் பெற்றோரின் அறிவின்மையால் விளைந்த ஒன்று எனலாம், பிறப்பதும், கைவிடப்படுவதும்.

 மிக நீண்ட பாலம்....ஆயின் வறண்ட ஆற்றுப் படுகை மனம் கனத்தது

      நொடிக்கொருமுறை காப்பி, தேனீர், கூல் டிரிங்க்ஸ், தின்பண்டங்கள் என்று தூங்கிக் கொண்டிருந்த சிறுவரையும், பெரியோரையும் உயிர்ப்பித்துக் கொண்டிருந்த ரயில் ஊழியர்களிடம் எங்கள் பெட்டிக் குழுவினர் காப்பி வாங்க நானும் வாங்கினேன்.  அது காப்பியா என்று என்னிடம் கேட்காதீர்கள்!  அது ரயில் வெந்நீர்! அதற்கு 10 ரூபாய்! அதுவரை என்னிடம் இருந்த சில்லரை நோட்டுகள் எல்லாம் புனாக் குழந்தைகளுக்குச் சில புத்தகங்களாகவும், தின்பண்டங்களாகவும் உரு மாறியிருந்ததால் கையில் இருந்த 100 ரூபாய் நோட்டை நீட்டினேன்.  10 ரூபாய் காப்பிக்குப் போக மீதி 90 ரூபாய் தருவதற்குப் பதிலாக 40 ரூபாய் நீட்ட நான் 100 என்று சொல்ல அவர் 50 துதான் தந்தாய் என்று சொல்ல, நான் எப்போதோ ராஷ்ட்டிரபாஷா வரைக் கற்றுத் தேறிய, எனக்குத் தெரிந்த ஹிந்தியில் வாதிட, இதற்கு, காப்பி வாங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பே ஹிந்தியில் உரையாட மனதில் ஒரு முன்னோட்டம்! இலக்கணம் தடுமாறவில்லை என்றாலும், வட்டாரப் பேச்சு வழக்கு ஹிந்தி மொழிப் பயிற்சி இல்லாததால் கொஞ்சம் தடுமாற்றம்! எனதருகில் இருந்த அந்தக் குடும்பம் எனக்கு ஆதரவாக உதவிக்கு வர, என்றாலும் அந்த ஊழியர் 50தான் என்று அடித்துச் சொல்ல எனக்கு அதற்கு மேல் வாதிட சக்தி இல்லாமல், பாக்கியம் ராமசாமியின் சீதா பாட்டியாக இல்லாமல் அப்புசாமிக் கிழவனாகிப் போனேன்.

      மோடி ஜி க்கான பட்டியல் நீண்ண்ண்ண்ண்ண்டது! ஏதோ நான் தான் மோடி ஜி யின் வலதுகை போலவும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவும், ரயில்வே துறையில் என்ன ஆவன செய்யலாம் என்றும், யோசனைகள் சொல்ல வேண்டும் என்றும் அறிக்கைப் பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில், பக்கவாட்டு இருக்கையில் இருந்த ஒருவர் இரவு உணவு குறிப்பெடுப்பவரிடம் இரவு உணவுக்குச் சொல்ல உணவும் வந்தது.  மூன்று சப்பாத்திகள், இரண்டு, சப்ஜி என்று சொல்லப்படும் தொட்டுக் கொள்ளக் கொடுக்கப்படும் பதார்த்தங்கள், ஆனால் இரண்டும் ஒரே பனீர் சப்ஜிக்கள், வெவ்வேறு கூட இல்லை.  வெங்கட்ஜி தனது இடுகையில் சொல்லியிருந்தது போல பனீர் சாம்பாரா என்று தெரியவில்லை! ஒரு சிறிய அலுமினியம் ஃபாயில் கிண்ணத்தில் ஒரு பிடி ஜீரகச் சாதம், ஊறுகாய் அவ்வளவே!  அவர் ஏதோ ஒரு ஆர்வக் கோளாரில் ஆர்டர் செய்துவிட்டார் போலும், உண்டு முடித்த பின் பணம் வாங்க வந்த ஊழியர் 100 ரூபாய் என்றதும், உண்டவரின் திறந்த வாய் பிளந்து நின்றது.  எனக்குப் பயமாயிற்று. எங்கேனும் வயிற்றில் சென்றவற்றை மீண்டும் வாய் வழி எடுத்து, “இந்தா உன் சாப்பாடு. எடுத்துக் கொண்டுச் செல்” என்று சொல்லி விடுவாரோ என்று! அவர் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் தான் தெரிந்தது, அவர் நம்மூர் திருநெல்வேலி அல்வா, அறுவாகாரத் தமிழர் என்று அவர் வாய் மொழி மூலம்! “எலேய் என்னல நினைச்ச என்னைய! நீ கொடுத்த இந்த எழவெடுத்த சாப்பாட்டுக்கு 100 ரூபாயாக்கும்! எங்கூரு சாம்பாரு, அல்வா தின்னுருக்கியாலே?  நீ வாலே எங்கூரு பக்கம் உன்ன கவனிக்கறம்லே” என்று வசை பாட அந்த ஹிந்திக்காரர் பெப்பே என்று முழிக்க 100 ரூபாய் பறிமாறப்பட்டது என்னவோ உண்மை!  என்னுடைய மோடி ஜி பட்டியலில் இந்த உணவும், 100 ரூபாயும் சேர்ந்தது!

      இப்படி மோடியின் வலது கையாக யோசித்தபடி உறங்கி அடுத்த நாள் காலை அதாவது நேற்றைய முன் தினம், புதன் கிழமை காலை எழுந்ததும், முந்தைய தினம் காப்பிக்காரரிடம் ஏமாந்தாலும், அந்தக் காப்பி ரயில் வெந்நீராக இருந்தாலும், காப்பி மோஹம் விடுகின்றதா? இப்போது வேறு ஒருவர்.  இளைஞர்!  ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையில், முந்தைய தினம் 50 என்று சொல்லிக் கொடுத்த இரண்டு 20 ரூபாய் நோட்டுக்களில் ஒன்றை எடுத்து நீட்டினேன்.  அருகில் இருந்த சிலரும் காப்பி வாங்கினர்.  என் அருகில் இருந்த அந்தக் குடும்பத்தில் ஒருவர் எனக்கும் ஒன்று சொல்லுங்கள் என்றவுடன் 2 வாங்கினேன்.  அந்தப் பையன் நான் காசு தரவே இல்லை என்று அடம் பிடிக்க, என்னுடன் காப்பி வாங்கியவர் எனக்கு ஆதரவாக ஹிந்தியில் சொல்ல, அந்தப் பையன் இல்லை என்று சொல்ல, இறுதியில் நான் ஒரு 10 ரூபாயை நீட்ட, இன்னும் 10 ரூபாய் தரவில்லை என்று அவன் என்னைத் திட்டிக் கொண்டே  செல்ல, எனது புதன் கிழமை விடிந்தது வசவுகளால்!  யாரப்பா சொன்னது?  “பொன் கொடுத்தாலும் புதன் கிடைக்காது” என்று?  30ரூபாய் கொடுத்து புதன் கிழமையை வசவுடன் வாங்கியதை அந்த மேதாவியிடம் சொல்ல வேண்டும்!  மோடியின் பட்டியலில் அடுத்து ஒன்று கூடியது! புதன் வசவு அல்ல!  அந்த 30 ரூபாய்!  அப்போது முந்தைய நாள் திருநங்கைகள் நினைவுக்கு வந்ததை மறுதலிக்க முடியவில்லை!  இந்தக் காப்பி காரர்களிடம் இழந்த தண்டக் காசிற்கு, அந்த திருநங்கைகள் அதிகம் கேட்டாலும், கொடுத்தது எத்தனை மேலானது என்பதே!

      பூனே வந்து இறங்கியவுடன், ஆட்டோ! எனக்கு பூனே சென்று சென்று (தனியாகப் பயணம் மெற்கொள்வதால் பல ஊர்கள்  நன்றாகத் தெரியும்) நன்றாகத் தெரியும் என்பதால், நான் செல்ல வேண்டிய இடம் சொன்னதும், 250 ரூபாய் என்று கூசாமல், சென்னையிலிருந்து பூனாவிற்கு வரும் பாதி தூரப் பயணக் கட்டணம் கேட்டு, ஆட்டோ சொசைட்டி என்றெல்லாம் அந்த ஆட்டோ ஓட்டுநர் சொல்ல, இனியும் இந்த புதன் கோல்ட் கவரிங்க் புதன் ஆகக் கூடாது என்று முடிவு செய்து நான் முன் கூட்டிக் கட்டணம் கட்டும் ப்ரீபெய்ட் கவுண்டர் சென்று ஆட்டோவிற்கு 170 ரூபாய் செலுத்திச் சென்றேன்.  இந்த அரசு சார்ந்த ப்ரீபெய்டு இருக்கும் போது எப்படி இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சைக்கிள் காப்பில் கஸ்டமர்கள் பிடிக்கின்றார்கள் என்பதும், மக்கள் ஏன் அந்த ப்ரீபெய்டை அணுகுவதில்லை என்பதும் எனக்குப் புரியாத புதிராக இருக்கின்றது. உங்களுக்கு?  புரிந்தால் சொல்லுங்களேன்!


சிக்னலில் க்ளிக்க முடியாததால்.......படங்கள் இணையத்திலிருந்து

      வழியில் ஒரு சிக்னலில் அணிவகுப்பு போல, விமானப் பணிப்பெண்கள் உடையில் 7 பேர், அருகில் சென்றதும் தான் தெரிந்தது அவர்கள் விமானப் பணிப்பெண்கள் உடையில் திருநங்கைகள்! இவர்கள் என்ன செய்கின்றார்கள்?  புதுவிதமான அணுகுமுறையோ? பணம் பெற என்ற என் எதிர்மறை எண்ணம் தவிடு பொடியாகியது!  விமானப் பணிப் பெண்கள் விமானத்தில் சீட் பெல்ட் அணிவது பற்றியும் பாதுகாப்பான பயணத்திற்கான வழிமுறைகள் எல்லாம் சொல்லுவது போன்று, கார் சீட்பெல்ட் அணிவதைப் பற்றியும், தலைக்கவசம் அணிவது பற்றியும் அறிவுறுத்தி, சாலை விதிகளைக் கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டி அபிநயம் பிடித்துக் காட்டியக் காட்சியிலும், சில்லென்று வீசிய காற்றிலும்  எனது ரயில் அனுபவங்களும், மோடியின் வலது கையாகத் தயாரித்த பட்டியல் எல்லாம் லேசாகிக் கரைந்து மாயமாகிப் போனது!  திருநங்கைகளின் மீதான எனது மதிப்பு பன்மடங்காகியது!  திருநங்கைகள்  வாழ்க!

                பயணங்கள் எப்போதும், அனுபவம் புதுமை என்பது போல், நமக்கு புதுப் புது அனுபவங்களையும், அர்த்தங்களையும், வாழ்வியல் தத்துவங்களையும் கற்றுக் கொடுக்கத்தான் செய்கின்றன! நாம் என்னதான் ஏட்டிலும், பெற்றோர், ஆசிரியர், சுற்றத்தார் போன்றோரின் அறிவுரைகளில் இருந்தும் கற்றுக் கொண்டாலும், அனுபவங்கள் போன்று ஒரு நல்ல ஆசிரியன் இருக்க முடியுமா என்பது கேள்விக் குறி மட்டுமல்ல, அதுதான் நல்ல ஆசிரியன் என்பதும் நிதர்சனமான உண்மை!  இனி திரும்பிச் சென்னை போகும் போதும், இனி மேற்கொள்ளப் போகும், பயணங்களின் போதும் ஏமாறாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற ஒரு நல்ல பாடம் கற்றுக் கொண்டேன்!

-கீதா