செவ்வாய், 28 ஏப்ரல், 2015

தமிழ் தொ(ல்)லைக் காட்சித் தொடர்களும்,பெண்களும்


எனது சமீபத்திய அனுபவம் இந்தப் பதிவை எழுதத் தூண்டி, ஆரம்பித்து, பல நாட்களாக எழுதி முடித்துப் பதிவிட வேண்டும் என்று நினைத்து, பாதியில் தடைபட்டு நிற்க, இன்று எப்படியேனும் எழுதி முடித்துப் பதிவிட வேண்டும் என்ற ஆர்வம் உந்தக் காரணமாயிருந்த டாக்டர் பழனி.கந்தசாமி ஐயா அவர்களுக்கு http://swamysmusings.blogspot.com/2015/04/blog-post_26.html எங்கள் முதற்கண் நன்றி.

தோழியைப் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டதே என்ற ஆர்வத்திலும், காணப் போகின்றோம் என்ற மகிழ்விலும், எனக்குச் சற்று நேரம் கிடைத்தக் காரணத்தால் பார்க்கச் சென்றேன்.  காலை 11 மணிக்கு. போன நேரம் ராகு/எமகண்டம் போலும். ஏதோ ஒரு தொடரில் அர்த்தமற்ற, அநாகரீகமான வசனங்கள், காதைப் பிளக்கும் சப்தங்கள் என்று தொடர் ஒன்று ஓடிக் கொண்டிருக்க, நான் வாயிலில் சென்று நின்றது கூடத் தெரியாமல் எனது தோழி தொடரில் ஆழ்ந்திருக்க, நான் அப்படியே திரும்பி விடலாமா என்று நினைத்தேன்.  அப்பொது அவர் அருகில் இருந்த ஃபோன் ஒலிப்பது திரை ஒளிர்ந்ததில் தெரிந்தது. அவர் அதைக் கூட கவனிக்கவில்லை. 

நான் திறந்திருந்த கதவைத் (க்ரில்லுடன் கூடிய கதவு) தட்டியதும், என் தோழி அந்தப் ஃபோனைக் கட் செய்துவிட்டு, என்னைத் தலையால் அசைத்து வா என்று சொல்லி விட்டு மீண்டும் தொடரில் ஆழ்ந்துவிட்டார். இடைவேளையின் போது, தொடரப் பற்றிப் பேசத் தொடங்கினார்.  நான் செய்த தவறு அவரைத் தொலைபேசியில் அழைத்து அப்பாயின்மென்ட் வாங்கிக் கொண்டுச் செல்லாதது. ஆனால், அதுவும் பயன் இல்லை என்பது அப்போதுதான் தெரிந்தது.  காலை 10 மணிக்கு ஆரம்பித்தால் மதியம் 2.30 மணி வரையாம்.  பின்னர் மாலை 5 மணிக்கோ இல்லை 5.30 க்கோ ஆரம்பித்தால் இரவு 11 மணி வரையாம்.  எனக்கு இருப்புக் கொள்ள வில்லை.  சரி கிளம்புகின்றேன் என்று நான் சொன்னதும், அவரும், “சரி அப்புறம் எப்போ டைம் கிடைக்குதோ வா” என்று சொல்ல நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். எனக்குத் தொடர்கள் என்றாலே அலர்ஜி. டீவி பார்ப்பது வெகு அபூர்வம்.  இப்போது எங்கள் வீட்டில் கேபிளும் கிடையாது. நானும் எனது மகனும் பார்க்க விரும்புவதை இணையத்தில் பார்த்துக் கொள்கின்றோம். எங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.

பெண்கள் ஆண்களை விட மிகவும் புத்திசாலிகள் என்று பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. அதனால்தான் பல குடும்பங்களில்  பெண்கள்தான் அதாவது, அம்மாக்கள்/மனைவிகள் தான் நிதி மந்திரிகளாக இருப்பதுண்டு.  சேமிப்பிலும் சரி, குடும்பத்தை அழகாக நிர்வகித்துக் கொண்டு செல்வதிலும் சரி. 

பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்று பேசும் இதே சமூகத்தில், பெண்களைத் தற்போது வரும் தொலைக்காட்சித் தொடர்கள் வில்லிகளாகவோ இல்லை என்றால் அடிமைகளாகவோ, தியாகச் சுடர்களாகவோ மிகைப்படுத்திக் காட்சிப்படுத்தியும் வருகின்றன. அதுவும் பெரும்பான்மையான தொடர்கள் பெண்களை மையமாகக் கொண்ட தொடர்கள் என்பதால், அதில் பெரும்பான்மையான ஆண்களையும் மோசமானவர்களாகக் காட்சிப்படுத்துகின்றன. அர்த்தமற்ற, அநாகரீகமான வசனங்கள் பெரும்பான்மையான வீடுகளின் வரவேற்பரையில் அனுமதி இல்லாமலேயே நுழைந்துவிட்டன.  வாயிலில் வருவோர் யார் என்பது கூடத் தெரியாமல், வந்தவர்களிடம் நாலு நல்ல வார்த்தைகள் பேசுவதைக் கூட மறந்து, அப்படியே பேசினாலும் அந்தத் தொடரில் அப்போது நடந்த நிகழ்வையும், கதையையும் பேசும் அளவிற்கு இந்தத் தொடர்களும் பெண்களின் மனதை வசப்படுத்தி வைத்துள்ளன என்றால் மிகையல்ல.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், பெண்களைக் கேவலமாக உருவகப்படுத்திக் காட்டும் தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பரம ரசிகைகளாகி இருப்பதும் பெண்களே. இந்தத் தொலைக்காட்சித் தொடர்களால் பல குடும்பங்களில் மன உளைச்சல்கள் ஏற்படுவதும், அதில் பேசப்படும் வசனங்கள் பல குடும்ப பெண்களாலும், குழந்தைகளாலும் பேசப்படுவது பற்றியும் பல குரல்கள் எழும் வேளையில், நானும் அதை நேரடியாகவும் காண நேர்ந்தது.  அதில் வரும் கதாபாத்திரங்களையும், நிகழ்வுகளையும், கதையையும் கூட தங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலைமை. இது தானே ஒவ்வொரு வீட்டிலும் நடக்கின்றது என்று வேறு பேசப்படுகின்றது. 

அப்படியென்றால் பெண்கள் தாங்கள் அப்படித்தான் என்பதை ஒப்புக் கொள்கின்றார்களா? இந்தத் தொடர்களைக் காணும்  பெண்கள் - மாமியார்கள், மருமகள்கள், நாத்தனார்கள், மகள்கள் எல்லோருமே அந்த இடத்தில் தங்களை நிறுத்திப் பார்க்கின்றார்களா? அதைச் சரி என்கின்றார்களா? பெண்களே தங்களை இது போன்று வில்லிகளாகவும், காட்டுவதை ஏற்றுக் கொண்டு, நாங்கள் அப்படித்தான் என்று ஒத்துக் கொள்கின்றார்களா? எனக்கு அப்படித்தான் என்று தோன்றுகின்றது. அதைச் சற்று விரிவாக, உளவியல் ரீதியாகச் சிந்தித்துப் பார்த்தால் பெண்கள் ஏன் இதை விழுந்து விழுந்து பார்க்கின்றார்கள் என்ற காரணம் என்னவென்றால், ஃபேண்டசி! அதாவது பெண்கள் தங்கள் யதார்த்த வாழ்க்கையில் செய்ய நினைத்துச் செய்ய இயலாததை அந்தத் தொடர்களில் வரும் பெண்கள் செய்வது போல் காட்டப்படுவதால் அந்த ஃபேண்டசி/கற்பனை உலகிற்குள் சென்று மனது லயித்து, அந்தக் கதாபாத்திரத்தில் தங்களை உட்படுத்தி ஒரு திருப்தி அடைகின்றார்க்ளோ?. கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்று விடுகின்றதால், பெண்கள் அதனை அப்படி ஆழ்ந்து பார்க்கின்றதாகத்தான் தோன்றுகின்றது. 

உதாரணமாக, ஒரு பெண் தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அவளது கைப்பையை ஒருவன் அடித்துச் சென்றுவிடுகின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  யதார்த்த வாழ்க்கையில் எத்தனைப் பெண்கள் அவனைத் துரத்திச் சென்று, பிடித்தும் அடித்து மீட்டுக் கொண்டு வருவார்கள்? அதையே தொடரில் அந்தப் பெண் செய்வது போல் காட்டும் போது, அதைப் பார்க்கும் பெண்களுக்கு ஒரு மனத் திருப்தி. தாங்கள் செய்ய முடியாததை அந்தப் பெண் செய்கின்றாள் என்று.  ஒரு ஹீரோயிசம் போன்று. என்றாலும்......

அதில் வரும் வசனங்கள் பல மிகைப்படுத்தப் பட்டவையாகத் தெரியவில்லையா? அநாகரீகமான வசனங்கள். அறிவிற்கு அப்பாற்பட்ட வசனங்கள். அப்படியே நடைமுறையில் கூட அது போன்று பேசப் பட்டாலும், அதற்குத் தீர்வு நாம் காண மாட்டோமா நம் குடும்பங்களில்?  தொடர்களில் அந்த வசனங்கள் பேசப்பட்டு அது மேலும் மேலும் குடும்பங்களில் குழப்பங்களையும், பிரச்சினைகளையும் வளர்ப்பது போல் தான் காட்டுகின்றார்களே தவிர அதற்கு அறிவு பூர்வமான தீர்வுகள் உண்டு என்பதை ஆராய்வதாகத் தெரியவில்லையே. பெண்கள் எப்போதுமே உணர்வு பூர்வமாகத்தான் சிந்திப்பார்களா?  அறிவாளிகள் இல்லையா? ஒன்று அழுகை, தியாகம், பொறுமை, இல்லை என்றால், அல்லக்கை, வில்லித்தனம், இவைதான் பெண்களின் அடையாளங்களா? அறிவு பூர்வமாக, சுயமாகச் சிந்தித்தால் பிரச்சனைக்களுக்குத் தீர்வு எளிதாகக் கிடைக்குமே

இப்படிப் பிரச்சனைகளை ஒரு குடும்பத்திற்குள் அர்த்தமற்று வளர்ந்து கொண்டு போவது போல, வளர்த்துக் கொண்டே பல ஆண்டுகள் தொடரும் இந்தத் தொடர்கள் வியாபாரத்திற்காக என்பது ஏன் பெண்களுக்குத் தெரியவில்லை? என்றாலும்,

இந்த அழுவாச்சித் தொடர்களைப் பார்ப்பதற்குப் பதிலாகத் தங்கள் பொன்னான நேரத்தை எவ்வளவு ஆக்கப்பூர்வமாக்கிக் கொள்ளலாம்? பொழுது போவதற்காக என்று சொல்லும் சப்பைக் கட்டுகளைக் காரணங்களாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  பொழுது போவதற்கு எத்தனையோ நல்ல விசயங்கள் இருக்கின்றன.  இந்த அழுவாச்சித் தொடர்களைக் கண்டு அவர்களின் வியாபாரத்தைப் பெருக்குவதை விட உங்கள் குடும்ப நிதியைப் பெருக்கிக் கொள்ள வழி தேடலாமே பெண்களே! உங்களை அறிவு பூர்வமாக உயர்த்திக் கொள்ளுங்களேன்!

பெண்ணீயம் பேசும் பெண்கள் குழுக்கள், சங்கங்கள், இயக்கங்கள் எல்லாம் பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதில் காட்டும் ஆர்வத்தையும், பெண்களுக்காகப் போராட்டங்கள் நடத்துவதில் காட்டுவதையும் ஏன் இதைப் பற்றிப் பேசுவதில் காட்டுவதில்லை? குரல் கொடுப்பதில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. அவர்களும் இதை ஆமோதிப்பது போல் தான் இருக்கின்றது.  மொத்தத்தில் சமுதாய உறவுகள், நட்புகள், குடும்பங்கள் கெட்டு வருவது நிதர்சனமாகத் தெரிகின்றது.

இதற்கு யார் முற்றுப் புள்ளி வைப்பார்கள்? பெண்கள்தான் வைக்க வேண்டும். அறிவை மழுங்கவைக்கும் இந்தத் தொடர்களைப் புறக்கணிப்பதன் மூலம். பெண்களே சற்று சிந்தியுங்கள்! சுயமாகத் சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்! உங்களுடைய வாழ்க்கையை அடுத்த வீட்டாருடனோ, தொலைக்காட்சித் தொடருடனோ ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவை எல்லாமே மிகைப்படுத்தப்பட்டவை என்பதை உணருங்கள்! சிந்தியுங்கள் அறிவுபூர்வமாக! ஆக்கப்பூர்வமாக!

நம் ஆண் பதிவர்கள் கூட இதைப் பற்றி எழுதித்தான் வருகின்றார்கள். மதுரைத் தமிழன் கூட எழுதியிருந்தார் கந்தசாமி ஐயாவின் பதிவில் பின்னூட்டத்தில்
இப்படி பெண்கள் அதிகம் சீரியல்கள் பார்ப்பதால்தான் நம்மால் அந்த நேரங்களில் பதிவுகள் எழுத முடிகிறது என்பதை சொல்ல மறந்துட்டீங்களே ஐயா”.  என்று.  ஹ்ஹ்ஹ் சரிதான். (பெண்கள் திரண்டு எழுந்து, சீரியல் நின்று விட்டால், ஐயோ! தமிழா, ஆண்களால் எழுத முடியாமல் ஆகிவிடுமோ!!!!!)  திரு. அமுதவன் அவர்களும், திரு இக்பால் செல்வன் அவர்களும் மிக அழகான கருத்துகளைச் சொல்லி இருந்தார்கள். கந்தசாமி ஐயா அவர்கள் ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டும் போல உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.  வைகோ சாரும், மதுரைத் தமிழனும் அதில் துண்டு போட்டு விட்டார்கள். இடம் இன்னும் இருக்கும் என்று நினைக்கின்றேன்!  வேறு ஒன்றும் இல்லை எங்களையும் அந்தச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளத்தான். பெண்களுக்கு இடம் உண்டு அல்லவா?! 


 பெண்களே சற்று சிந்தியுங்கள்!

பின் குறிப்பு: தமிழ் சீரியல்கள் என்று கூகுள் செய்து இமேஜஸ் சென்றேன் ஏதேனும் ஒரு படத்தை எடுத்துப் போட......அம்மாடியோவ்! இத்தனை சீரியல்களா!?  நான் "ஆ" என்று பிளந்த வாய்தான்!  எப்படி பொன்னான நேரம் கொல்லப்படுகின்றது.  அன் ப்ரொடக்டிவாகிக் கொண்டிருக்கின்றது என்று வேதனையாகவும் இருக்கின்றது.  படம் போடும் எண்ணத்தைக் கைவிட்டேன்.

---கீதா  (மீண்டும் கந்தசாமி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.  நான் இதை எழுதி முடித்துப் பதிவிட உந்துதலாக இருந்தமைக்கு)

படங்கள் : கூகுள்

சனி, 25 ஏப்ரல், 2015

விசுAwesomeமின் சகவாசம் - புத்தக வெளியீடு

 Displaying 4.jpg
கார்ட்டூன் - திரு. செந்தமிழ்செல்வன்

நண்பர், பதிவர் திரு விசு http://www.visuawesome.com/  அவர்கள் தனது நகைச்சுவைப் பதிவுகளால் பதிவர்கள் பலரையும் கவர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே! தண்டமா போன தண்டபாணி என்று சொன்னாலும் தண்டபாணி என் நண்பேண்டா என்று சொல்லுவது முதல், எவ அவ சமந்தா? என்ன சமைக்க வேண்டும் என்று கேட்பேன் ஆனால் செய்ய மாட்டேன்.....அடக்கப் போவது யாரு என்று சவால் விடும் அவரது மனைவியின் சிம்மக் குரலுக்கு, நல்ல எலியாக, ஹை புடவை அழகா இருக்கே என்றும், உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் என்றும், துப்பறியும் வீம்பு பெண்களிடம் எனக்குப் பிடித்தது, சுந்தரன் நீயும் சுந்தரன் ஞானும் என்பது வரை பதிலுரைத்து, நகைச்சுவைத் தோரணங்களால் தனது தளத்தை அலங்கரிப்பது மட்டுமன்றி தனது வாசகர்களையும் தொடர்ந்து கட்டிப் போட்டு வரும் திரு விசு அவர்கள், தனது பதிவுகளின் முதல் தொகுப்பாக "விசுAwesomeமின் சகவாசம்" எனும் புத்தகத்தை 06-06-2015 அன்று, தான் படித்த வேலூர் வூரீஸ் ( Voorhees College)  கல்லூரி வளாகத்தில், அதன் முதல்வர் திரு.  டாக்டர் அருளப்பன் அவர்களின் தலைமையில் வெளியிடுகின்றார்.  

நம் பதிவர் நண்பர்கள் அனைவரையும், திரு விசு அவர்களின் சார்பில் புத்தக விழாவில் கலந்து கொள்ள மிக்க மகிழ்வுடன் நாங்கள் அழைக்கின்றோம்.  

புத்தக வெளியீடு காலை 11 மணிக்குத் தொடங்க இருக்கின்றது.  அதன் பிறகு மதிய உணவு.  மதிய உணவிற்கு பின் நம் பதிவர்களின் சந்திப்பு தொடரும்.

     ஒரு சிறிய பதிவர் சந்திப்பாகவும் அதை நிகழ்த்த திரு விசு விரும்புவதால், நிகழ்வுக்கு வரும் பதிவர்கள் தங்கள் வருகை குறித்து எங்கள் தளத்திலோ, முகநூலிலோ, மின் அஞ்சல் வழியாகவோ, நம் நண்பர், பதிவர்  டிடி அவர்களின் தளத்திலோ dindiguldhanabalan.blogspot.com/, டிடி அவர்களின் முகநூலிலோ, மின் அஞ்சல் வழியாகவோ தெரிவிக்க அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். திரு டிடி அவர்கள் தனது தளத்திலும் இதைப் பற்றி வெளியிடுவார்.

     நிகழ்ச்சி பற்றிய விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

பின் குறிப்பு: விசு அவர்களின் புத்தகத்தில் அவரது இடுகைக்கு வந்திருந்த பதிவர நண்பர்களின் சில பின்னூட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தங்களது பின்னூட்டங்கள் அதில் வேண்டாம் என்று  தங்களுக்கு அதில் ஆட்சேபனை ஏதேனும் உண்டென்றால் தயவு செய்து விரைவில் தெரிவிக்கவும்.  நன்றி.

புதன், 22 ஏப்ரல், 2015

கோ (GO ) க்ரீன்


முதலில் சகோதரர்கள், சகோதரிகள் எல்லோருக்கும் மிக்க மிக்க நன்றி!  சென்ற பதிவில் எனது காது வலியைப் பற்றிச் சொல்லவும், எல்லோரும் அன்புடன் அறிவுரைகளும், பிரார்த்தனைகளும், சீக்கிரம் குணமாக வாழ்த்துகளும், மிகுந்த அன்புடனும், அக்கறையுடனும் தெரிவித்து என்னை உற்சாகப்படுத்தியமைக்கு பல கோடி நன்றிகளை இங்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கொடுக்க முடியாததால் இங்கு எல்லோருக்கும் தெரிவிக்கின்றேன். உங்கள் எல்லோரது அன்பும், ஆதரவும், அக்கறையும்தான் எங்களை வழிநடத்திச் செல்கின்றது.  இப்போது பரவாயில்லை எனலாம்.  இன்னும் முழுவதும் குணமாகவில்லை.  ஒரு வாரம் செல்லலாம் என்றிருக்கின்றார் மருத்துவர். உங்கள் எல்லோரது அன்புடன் கூடிய பிரார்த்தனைகள் இருக்க பயமென்?!!!! மீண்டும் நன்றியுடன்.....

Image result for go green, comical cartoons

                “மன்னாரு அண்ணே என்னாச்சு? இப்படிச் சோகமா உக்காந்துருக்கீங்க? வீட்டுல யாரும் இல்லைப் போலருக்கு.... வழக்கம் போல சாவி கொடுக்கலையா?”

                “அட தம்பு!  என்ன இந்தப் பக்கம்? அதிசயமாருக்குது... சோழியன் குடுமி சும்மா ஆடாதே”

                “என்ன அண்ணே...என்னையப் போயி இப்படிச் சொல்றீங்க...நான் உங்க பின்னாடியே வர்ற நாய் குட்டி மாதிரி அண்ணே.....எங்கத் தெருல கரண்ட் கட்டு...அதான் உங்க வீட்டுல கரண்டு இருந்தா காத்து வாங்கிட்டுப் போகலாமெனுதான்...”

                “காத்து வாங்கத்தானே வந்த....சரி அப்ப ஒரு மணி நேரத்துக்கு 200 ரூவா வெச்சுட்டுப் போ...”

                “அண்ணே என்ன அண்ணே தமாசு பண்ணறீங்க!  நீங்களே திண்ணைல உக்காந்துதான் காத்து வாங்கிட்டு இருக்கீங்க....இதுல நான் உங்களுக்கு ரூவா தரணுமாக்கும்...அன்ணன் காமெடியே காமெடிதான்......அது சரி அது என்ன மூலைல ஒரே புல்லுக் கட்டு, கீரைக்கட்டு..பச்சை பச்சையா......மாடு வாங்கிருக்கீங்களா அண்ணே?

                “என்னது மாடா? மாடு கட்டி மேய்க்கற காலமாடா இது. நான் தான் இருக்கேனே..செக்கு மாடா உழைக்க.”

                “அதுவும் சரிதான் அண்ணே...அப்ப உங்களுக்குத்தான இந்த புல்லு எல்லாம்.....நான் என்ன நினைச்சேன்னா.....சுற்றுப் புறச் சூழல் மாசுபடக் கூடாதுனுட்டு, நீங்க உங்க வண்டிய எல்லாம் கொடுத்துட்டு இனி மாட்டு வண்டில போறதுக்கு வேண்டி மாடு வாங்கிருக்கீங்களோனு நினைச்சுக் கேட்டேன்...”
 
“டேய் அந்த வயித்தெரிச்சலக் கிளப்பாதடா.....நாம எல்லாம் செக்கு மாடா நம்ம வீட்டுக்கு உழைக்கறோம்....ஆனா, நம்ம அம்மணிங்க நாம வாங்கற “செக்க” கூட கண்ணுல காட்டாம அதுக்கு “செக்கு” வைச்சுடறாங்களே”

“சரி இப்ப என்ன சொல்ல வர்றீங்க”

“கொஞ்ச நாள் முன்னாடி இந்த டிவில ஏதோ ஒரு அம்மணி வெயிட் குறைக்கறது எப்படினு ஒரே பச்சை பச்சையா என்னெல்லாமோ செஞ்சு காமிச்சாங்களா, நம்ம வீட்டு அம்மணி அதைப் பாத்துப்புட்டாங்க.....”

“அண்ணே அந்த டிவி அம்மணி டிவி ஸ்க்ரீன் கொள்ளாத அளவு இருப்பாங்க அவங்களா வெயிட் குறைக்கறதப் பத்தி.......”

“டேய் தம்பு இப்படி எல்லாம் கேள்வி கேக்கக் கூடாது....நமக்கு ஸ்மோக் பண்ணாத, தண்ணி அடிக்காதனு அட்வைஸ் பண்ணற டாக்டருங்க எல்லாம் அடிக்காமயா இருக்காங்க?....அதுமாதிரிதான் இதுவும் அட்வைஸ் எல்லாம் மத்தவங்களுக்குத்தான்”

“அதுக்காக இவ்வளவு மூட்டை மூட்டையா...எதுக்கு அண்ணே?  இப்ப ஊரு முழுக்க “கோ க்ரீன்” அப்படினு வைச்சுருக்காங்கல்ல,  ஒரு வேளை அண்ணி அத தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போல”

“டேய் அதுமட்டும் இல்ல.....நேத்து நான் கொஞ்சம் தலை சுத்துதுனு தெரியாம சொல்லிப்புட்டேன்.  அவ்வளவுதான் என்னை பலி ஆடு மாதிரி, வடி வேலு ஒரு படத்துல நினைச்சுப் பார்ப்பாரே...தன்னை ஆடு மாதிரியும் அவரை பார்த்திபன் இழுத்துட்டுப் போறா மாதிரியும்...அப்படி இழுத்துட்டுப் போனா பாரு.....  டாக்டரும், “ம் உங்க உடம்புல எல்லாருக்கும் சப்ளை பண்றா மாதிரி, சக்கரை, எண்ணை எல்லாம் இருக்கா இல்லை ரேஷனா நு ஒரு செக் அப் செஞ்சுரலாம்” அப்படினு பரீட்சை எழுதறா மாதிரி பக்கம் பக்கமா எழுதி ஒரு ஃபைலே போட்டார்னா பாரேன்...”

“ம்ம்ம் கால் நடைப் பயிற்சிக்குப்  பதிலா உங்க வீடு “கால்நடை” தீவன வீடா ஆகிடுச்சுனு சொல்லுங்க...”

“டேய்....பச்சைக் காய்கறிகள்ல என்ன செய்யலாம்னு ஒரு புக்.  புல்லுல, கீரைல, பாகற்காய்ல ஜூஸ், சூப் செய்யறது எப்படினு ஒரு புக் இப்படி எல்லாமே பச்சைதாண்டா....எங்க வீட்டுல....மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் இங்கலாம் கூட இந்த ஜீஸ் எல்லாம் காலைல விக்கிறாங்களாமேடா....”

“ஆமாண்ணே அது ரொம்ப நாளா நடக்குதே.....அப்ப அண்ணி “பச்சைதான் எனக்குப் புடிச்ச கலரு”னு பாடுறாங்கனு சொல்லுங்க....”

டேய் தம்பு கிளப்பாதடா....உங்க வீட்டுல இட்லி, என்ன கலர்லடா இருக்கும்,?”

“தும்பைப் பூவாட்டம் வெள்ளை வெளேர்னு,,  மல்லிப்பூ மாதிரி  ம்ருதுவா இருக்கும், ஏன் கேக்கறீங்கண்ணே?”

“தோசை?”

“.தங்க நிறத்துல, மொறு மொறுனு இருக்கும்”

“அடை?”

“அதுவும் தங்க நிறத்துல மினு மினுனு, அங்கங்க, கறிவேப்பிலை கண் சிமிட்டும்....ஆமா, அண்ணே! எதுக்கு இந்தக் கேள்வி எல்லாம்? உங்க வீட்டுலயும் அண்ணி அப்படித்தானே செய்யும்...”

“டேய் கொடுத்து வைச்சவண்டா நீ....எங்க வீட்டுல சோத்தப் பாத்து யுகமாகுது.....கழனித் தண்ணி மாதிரி ஏதோ ஒரு பானம்.....இட்லி, தோசை எல்லாம் பச்சைக் கலர்ல இருக்கும்......வாதநாராயணக் கீரை தோசை, முடக்கத்தான் கீரை இட்லி அப்படினு........அடை.....அந்த அடை இருக்கே...கிராமத்துல எங்க ஆத்தா, அந்தக் காலத்துல, சுவத்துல தட்டி வைச்சுருக்குமே பச்சைக் கலர்ல.....அது மாதிரி.....”

“மன்னாரு அண்ணே.....அது வறட்டி! வறட்டி மாதிரியா இருக்கும்?!...” என்று சொன்ன தம்பு எதையோ யோசிப்பது போல் யோசித்து விட்டு, “அண்ணே, கொஞ்சம் இருங்க..இதோ இப்ப வார்றேன்....” என்று சொல்லி ஓட....

“டேய் தம்பு எங்கடா அவசர அவசரமா ஓடற....”

“அண்ணே,...அது ஒண்ணும் இல்ல....பக்கத்துத் தெரு மாமிங்க எல்லாம் நேத்து பேசிக்கிட்டாங்க...” இப்பல்லாம் மாடுங்கள தெருல காண்றதே இல்ல....சாணமே கிடைக்கறதுல்லனு......” அதான் அவங்ககிட்ட விஷயத்தச் சொல்லி உங்க வீட்டக் காமிச்சுரலாம்னுதான்....”

“டேய் தம்பு! நீ நாய்குட்டி இல்லடா......என் காலைச் சுத்தற பாம்புடா.....தம்பு! என் மானத்த வாங்கற உனக்கு இருக்குடா ஆப்பு

--கீதா


 படம்:  கூகுள் உதவி
             

சனி, 18 ஏப்ரல், 2015

ஆ!!! ஓ..!!டைட்டிஸ் மீடியா -Otitis Media

Image result for otitis media in adults

“ஆதித், எனக்கு வலது காதுல ஹியரிங்க் எய்ட் போடறேன்ல... இப்ப சம்மர் வேறயா புண்ணு வந்துருக்குடா.. தெரியாம க்ளீண் பண்ண இயர் பட் வேற போட்டுட்டேன். கொஞ்சம் வலிக்குது. ஹியரிங்க் எய்ட் போட முடிலடா. மருந்து சொல்லேன்...”  மகன், காது, மூக்கு, தொண்டை நிபுணர்/மருத்துவரிடம் செல்வது நல்லது என்றான்.

 வலி வந்து 2 நாட்கள் கடந்தாயிற்று.  வெள்ளி அன்று நல்ல நேரம் பார்த்து மருத்துவரிடம் சென்றோம்.  மருத்துவரிடம் மேல்விவரம் சொன்னதுமே உடனே காதின் உட்புறம் செக் செய்து, ஒரு தாளில் இரண்டு மாத்திரைகள் எழுதத் தொடங்கி, காதில் விடுவதற்குச் சொட்டு மருந்தும் எழுதிக் கொடுத்தார்.

“டாக்டர், நான் ஸோ ஸ்வீட் பெண்”

“இட்ஸ் ஓகே.....அதனால ஒண்ணும் இல்ல.  இந்த மருந்து...போதும்...”

மகனும் எதுவும் கேட்கவில்லை. அவர் எழுதிக் கொடுத்தவை வெறும் விட்டமின் மாத்திரைகள்.

“ஏண்டா நீ டாக்டர்கிட்ட எதுவுமே பேசல? உனக்கு விஷயம் தெரியும்ல.  பேசியிருக்கலாம்ல.”

“அம்மா, முதல்ல நான் டாக்டர்னு சொல்லிக்க மாட்டேன். அதுவும் நான் வெட்னரியன்.  ஹ்யூமன் டாக்டர்கிட்ட, எனக்குத் தெரிஞ்சாலும் பேசக்கூடாதுனு நினைக்கறேன்.  ஏன்னா எல்லா டாக்டரும் ஒத்துக்க மாட்டாங்க..”

“டேய் நீயே உங்க அம்மாவுக்கு ட்ரீட் பண்ணிருக்கலாம்.  எதுக்கு டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போன?”

“அப்பா, நான் மனுஷங்களுக்கு மருந்து எழுத முடியாது.  எதிக்ஸ் இல்ல”

“அப்படின்னா உங்க அம்மா மனுஷிதானா!!!?”

“அப்பா...ப்ளீஸ்”

“அம்மா நீ உன் சிம்டம்ஸ் எல்லாம் டாக்டர்கிட்ட சொன்னல்ல...?”

“ஆமடா....ஏன்?”

“இல்ல அவரு ஆண்டிபயாடிக்ஸ் எழுதவே இல்ல...அதான்”

 “ஒரு வேளை அத்தனை சிவியர் இல்லையோ என்னமோ...”

“ஐயோ அம்மா....எனக்கு அப்படித் தோணல...”

2 நாட்கள் சென்றது.  அதிகமானதே அல்லாமல். குணமாகவில்லை.  மிகவும் அவதிப்பட்டேன். படுகின்றேன்.

“கீதாகிட்டருந்து ஃபோனே இல்லை...ஃபோன் போட்டாலும் அவ எடுக்கலையா....ஆச்சரியமா இருந்துது...ஐயையோ கீதாக்கு என்னாச்சுனு பார்த்துட்டுப் போயிடலாம்னு நேர்லயே வந்துட்டோம்.” என்று மகனின் பெரியம்மாவும், அவர்கள் பெண் அருணாவும் வந்திருந்தார்கள்.

“கீதா ஃபோன் பேசலையா! அதானே பார்த்தேன்....என்னடா சென்னைல இந்த சம்மர்லயும் மேகம் மூடிண்டுருக்கு, லைட்டா மழை பெஞ்சுதேனு....”  -  மாமியார்.

“ஹேய் இங்க பாரு... பாட்டி காது இதுக்கு மட்டும் நல்ல ஷார்ப்..” – அருணா.

“சரி அம்மா, உன் சிம்டம்ஸ் சொல்லு....”

“தாடையை அசைக்க முடியல. பேசறதுக்குக் கஷ்டமா இருக்கு.” சைகை மொழிதான் வீட்டில், இந்த வலி வந்ததிலிருந்து. அதை ஏன் கேக்கரீங்க. வீட்டுல ஒரே களேபரம்தான்

“ஹை! சித்தி! “வாயை மூடிப் பேசவும்”, போல வந்துருச்சோ?” – அருணா.

“உங்க சித்தி நல்ல நாள்ல பேசினாலே புரியாது....இப்ப கேக்கவே வேண்டாம்...ஒண்ணும் புரியல...... பேசாம இருக்கறதே நல்லது.”

“ஆமாம் பா....அம்மா எது பேசினாலும் நீ சும்மானாலும் கத்திக்கிட்டு இருப்ப...இப்பவாது வீடு அமைதியா இருக்கா.?....இப்பவும் கத்திக்கிட்டுதான் இருக்க.........சரி நீ சொல்லும்மா...”

“ரொம்ப மெதுவாதான் நடக்க முடியுது....”

“ஓ...அதான் எங்கேயுமே நிலநடுக்கம் வரல.....”

“அப்பா....”

“தலை லைட்டா சுத்துதுடா...”  சைகையில்....

“இதுக்குத்தான் டெய்லி தலைக்குக் குளிக்காதன்னு சொல்றது.” – இது என் அப்பா.

“பூமி டெய்லியே சுத்திக்கிட்டுத்தானே இருக்கு.. சுத்தலைனாதான் பிரச்சினை. அதுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்”

“ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா....நக்கல்ஸ் அபார்ட்.......ம்மா நீ சொல்லு வேற என்ன சிம்டம்ஸ்?”

“சாப்பிட முடிலடா. மெல்ல முடியல, விழுங்க முடியல, நாக்கைக் கூடச் சுழட்ட முடியலைடா. தாடையை அசைக்க முடியாததுனால.”

“ஏற்கனவே, நீ சாப்பிடறது காக்காய்க்குச் சாதம் வைக்கிறா மாதிரிதான்...இப்ப அதுவும் சாப்பிட முடியலையா....” – இது ஆதியின் பெரியம்மா

“ரொம்ப நல்லதாப் போச்சு...அதான் அந்த ஸ்னாக்ஸ் எல்லாம் அப்படியே இருக்கு”
“ஹலோ அப்பா.... அம்மா ஸ்நாக்ஸ் பக்கமே போக மாட்டாங்க....உன் கண்ணுல அது எப்படிப் படாம போச்சு?  உன் கண்ணுல படலனு சொல்லு...”

“ஏற்கனவே உங்கம்மாகிட்டக் கத்தி பேசினாலே புரியாது.  இப்ப ஹியரிங்க் எய்ட் வேற போட முடில....நான் என்ன சொன்னாலும் புரியப் போறது இல்ல....ரொம்ப சொஸ்தம்...”

“ஹியரிங்க் எய்ட் இல்லாதது நல்லதா போச்சு.....உங்க அப்பா என்னத் திட்டினாலும் கேக்காது...ஜாலிதான்...” சைகையில்...நான்.

“இல்லேன்னா மட்டும் நான் சொல்றத நீ காதுல வாங்கறியாக்கும்..?”

“ஹ்ஹ்ஹ்ஹ் காதுல வாங்காததுனாலதான் நம்ம வண்டி இவ்வளவு வருஷம் ஓடிருக்கு...வாங்கிருந்தா என்னைக்கோ ப்ரேக்டவுன் ஆகிருக்கும்”

“ஹாஹ்ஹ்ஹ் உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஒரு கெமிஸ்ட்ரிப்பா....”

“டேய் ஆதித் அது தெரியாதா உனக்கு...உங்க அம்மாவுக்கு கெமிஸ்ட்ரியும் தெரியாது.....ஃபிசிக்ஸும் தெரியாது.....”

“ம்ம் உனக்கும் சரியா தெரியலனு சொல்லுப்பா....சேம் போல்ஸ் தான் ரிப்பெல் ஆகும்....ஆனா இங்க ஆப்போசிட் போல்ஸ்.......ஆனாலும் ரிப்பெல்தான்.  ஃபிசிக்ஸ் ஃபெய்ல்ஸ்.”

“அதெப்படி உனக்கு மட்டும் அம்மா பேசறது புரியுதுடா?”

“ப்பா கொஞ்சம் சும்மாருப்பா.......அம்மா வேற என்ன சிம்டம் சொல்லும்மா...”

“தொண்டைல, வலது பக்கம் ஏதோ வீங்கினா மாதிரி, தொண்டைப் புண் வந்தா இருக்குமே அது மாதிரி இருக்குடா.  அப்புறம், காது செம ஹெவியா இருக்கு.  ஏதோ அடைச்சா மாதிரி.....காதுக்குக் கீழ சின்ன வீக்கம்.  தொட்டா வலிக்குது.   சொல்லப் போனா வலது பக்கம் நெத்திப் போட்டு, தலைலருந்து தொண்டை வரை வலிடா. இப்படி அப்படினு முகத்தை வலிக்கு ஏத்தபடி வைச்சுக்கிட்டா, உள்ளே ஏதோ தண்ணி ஓடுதுடா...அது ரொம்ப வலி.  செம எரிச்சல்.  சர்ஜரி ஆனா வலி, எரிச்சல் இருக்குமே அது மாதிரி இருக்குடா”

மகன் காதின் சில இடங்களிலும், கழுத்து, முகம் எல்லாம் தொட்டுப் பார்த்து வலி எங்கிருக்கின்றது என்று சோதித்தான்.”

"காது ஹெவியா இருக்குடா...."

"நேத்து பக்கத்து வீட்டுல அவங்க வளர்க்கற எறும்பைக் காணலைனு தேடினாங்க அது ஒருவேளை அம்மா காதுக்குள்ள போய் ஒளிஞ்சுருக்குமோ?!"

"ஐயோ...அப்பா...சும்மாருப்பா...."

“ஆதித், காதுக்குள்ள அலை அடிக்கற சத்தம்...மாதிரி..இரைச்சல்”

“அது வேற ஒண்ணும் இல்லமா டினிட்டிஸ்...இரைச்சல் அது இருக்கும்.  இப்ப உனக்குச் சுத்தமா வலது காது கேக்கல...சரியா?”

“ஆமாம் டா”

“உங்கம்மா காதுல “பீச்”சே வைச்சுருக்கும் போது அலை சத்தம் தான் கேக்கும் எப்படிக் காது கேக்கும்...?”

"ஸ்ப்பா சித்தப்பா...தாங்கல உன் கடி...." - அருணா.

“அம்மா இது Otitis Media

டேய் அம்மா ஏற்கனவே ஏதோ ப்ளாக் அது இதுனு போய்ட்டுருக்கா.  இப்ப நீ வேற ஏதோ மீடியானு சொல்லற. அவ்வளவுதான்.  அதுலயே அம்மா உக்காந்துருவா...டா....பாத்துக்க”

“அ....ப்.....பா......ஆஆஅ........அம்மா நீ கிளம்புமா....டாக்டர்கிட்ட போய்ட்டு வந்துரலாம்...இது ரொம்ப தீவிரமா இருக்கு.  ஏன் அன்னிக்கே டாக்டர் சரியா மருந்து எழுதலைனு தெரியல...எனக்கும் உன் காத செக் பண்ண முடியல அந்த இன்ஸ்ட்ருமென்ட் இல்லாததால....”

எல்லோரும் என்னை "டைசெக்ட்" பண்ணிக் கொண்டிருக்க, என் செல்லங்கள் கண்ணழகியும், ப்ரௌனியும் மட்டும் தான் என்னை எதுவும் சொல்லாமல் எல்லோரையும் மாறி மாறிப் பார்த்து,  என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தன.

இம்முறை டாக்டர் 5 நாட்களுக்கான ஆன்டிபயாட்டிக் எழுதிக் கொடுத்தார்.  வலி நிவாரணியும் எழுதிக் கொடுத்தார்.  ஆனால், பணம் வாங்கிக் கொள்ளவில்லை.  ஒருவேளை மனது உறுத்தல்?  இருக்கலாம்.

3 நாட்கள் மருந்து சாப்பிட்டும் வலி குறையவில்லை.  கூடித்தான் போனது.  வலி நிவாரணி எடுத்துக் கொண்டால், கொஞ்ச நேரம் வரைக்கும் தான்.  பின்னர் வலி தொடங்கிவிடும். பைத்தியமே பிடிக்கும் அளவிற்கு.  யாருக்குமே இது வரக்கூடாது என்று வேண்டிக் கொள்கின்றேன்.  சாப்பாடு வெறும் கஞ்சிதான். அதுவும் மென்று திங்காமல் அப்படியே விழுங்குவது போல. மகனும், நானும் ஒரே அறை என்பதால், நான் தூங்காமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, வலி குறைந்து நன்றாகத் தூங்குவதற்கு, மகன், காப்ஸ்யூல் வாங்கி வந்துக் கொடுத்தான்.

“இந்த காப்ஸ்யூல ஆண்டிபயாட்டிக்கோட எடுத்துக்க.  நல்லா தூக்கம் வரும். கூடிய வரை வலியை பொறுத்துக்கப் பாரு. முடியலைனா இதப் போட்டுக்க” என்று சொல்லி, ஒரு பச்சைக் கலர் காப்ஸ்யூல் பக்கத்தில் வைத்தான்” 

“ஆதித் அந்தப் பச்சைக் கலர் காப்ஸ்யூல் எங்கடா?”

“என்னம்மா நீ கலர் சொல்லிக் கேக்கற?”

“அட போடா....விசு அங்கிள் கூட “எங்களுக்குத் தெரிஞ்சது எல்லாம் சிவப்பு, நீலம், பச்சை” னுதான் எழுதிருப்பாரு....”

“அம்மா! அங்கிள் எழுதினது ஆம்பிள்ளைங்களுக்கு....உங்களுக்கு எல்லாம் கலர் கலரா தெரியுமே. அதுவும், அம்மா, மருந்துல எல்லாம் கலர் சொல்லிக் கேக்காதம்மா.  அப்புறம் படிக்காதவ மாதிரி ஆகும்...”

மாத்திரையைப் போட்டுக் கொண்டு படுத்ததுதான் தெரியும். இந்த வலியினால், அவ்வளவாக வலைப்பக்கம் வரவே இல்லையா, கண் மூடியதும், மாத்திரையின் ஒரு விதமான அரை மயக்கத்தில், நம் வலை அன்பர்கள் எல்லோரும் கலர் கலராக ரவுண்டு கட்டி வரிசையாக வரத் தொடங்கினார்கள்.

பழனி கந்தசாமி ஐயா வந்து “என் அந்தப்புரத்து அழகிகளப் பாக்க வரலியானு” கேட்டார்! ஏதேனும் புது அழகி வரவு உண்டோ? பார்க்க வேண்டும். அவரது மல்லிகைப் பூ இட்லியும் வந்தது.  ஆனால், என்னால்தான் சாப்பிட முடியாதே! வெங்கட்ஜியின் ஹிமாச்சல் பயணம் பனி மூடிய சிகரம் வந்து குளிர்வித்தது, கூடவே ஃப்ரூட் சாலடும், சுர்மாவும் கண் சிமிட்டன. வாயில் ஜொள்ளு வந்தது என்றான் மகன். ஆசான் விஜு ஜோசஃபின் யாப்பிலக்கணம் வந்து பயமுறுத்த, நான் கூட கவிதை புனைந்தேன். அது மயக்கத்தோடு போயே போச்! கோயில் பிள்ளை என்னை அடுத்து என்ன கலாய்க்கப் போகிறாரோ? நண்பர் சொக்கன் அவர்களைக் காணவில்லை.  நலம் கேட்டு மெசெஜ் அனுப்ப வேண்டும்.

டிடி வந்து, இதுவும் கடந்து போகும், இடுக்கண் வருங்கால் நகுக என்றார்.  நகைக்க என்ன வழி என்று நினைத்துக் கொண்டிருந்த போது, ஜோக்காளி ஜோக் அடித்தார். விசுஆசெம்மின் நண்பர் தண்டபாணி வந்து “வாத்தியாரே இதுக்கு ஏதாவது பழமொழி வைச்சுருப்பியே” என்று அவரை உசுப்பேத்தினார். ரூபன் அடுத்து என்ன போட்டி அறிவித்தாரோ? யாழ்பாவாணன்? வைகோ சார் போட்டி அறிவித்தார். அவர் பதிவுகள் வாசித்துப் பாதியிலேயே நிற்கின்றது. இதற்கு இடையில் மதுரைத் தமிழன் பூரிக்கட்டை அடி வாங்கினாரா? என்ற கவலை வேறு. இனியா, அம்பாளடியாள், என்ன கவிதை எழுதினார்களோ? ஏஞ்சலின் புதிதாக ஏதாவது விழிப்புணர்வு பதிவு போட்டிருப்பார்.  மைதிலியும், கஸ்தூரியும் வந்தார்களா என்று பார்க்க வேண்டும். எங்கள் ப்ளாகில் திங்கள் என்ன சமையல் குறிப்போ? காணொளியோ? விமலன் என்ன அழகானச் சொற் சித்திரம் போட்டாரோ? சகோதரிகள் மனோ, கோமதி அரசு, ரஞ்சனி நாராயணன் என்று கலர் கலராக வந்தார்கள். துளசி கோபால் அடுத்து ஏது அம்பலம் சென்றாரோ என்று  நினைத்த போது, “கீதே பெருமாள்ட பிரார்த்திச்சு” நு சொல்லிச் சென்றார்.  துரைராஜு ஐயா அவர்களின் தளத்தின் குருவிகளும், கடவுளர்களும் நிழலாடினர்!

வாத்தியாரின் சரிதா வேறு இடையில் வந்து “அடியே கீதா! இந்தக் காதுவலி திருகு வலிக்கெல்லாம் பாட்டி வைத்தியம்தான் நல்லது தெரியுமோ” என்று ஒரு லிஸ்ட் வாசித்தார். எந்த லேடீஸ் க்ளப் உபயமோ தெரியவில்லை. பயந்துவிட்டேன். ஆவி டாக்கீசில் என்ன புதிய படம் என்று பார்க்க வேண்டும். சீனுவை ராத்திரியில் ஏதேனும் நாய்கள், பேய்கள் துரத்தியதா? தெரியவில்லை. அரசனை எதற்கோ பாராட்டியதாக நினைவு. கார்த்திக் சரவணன் என்னுடன் ஏதோ பேசியது போல் தோன்றியது. குடந்தையூரார் எழுதும் தொடர்கதையில் அடுத்த பாகம் போட்டிருப்பார்.  தனிமரம் வேறு ஒரு தொடர் எழுதிட்டுருந்தாரே! கரந்தையார் யாரைப் பற்றி எழுதியுள்ளாரோ. ரமணி சார் கவிதைகள் பார்க்கலையே! மூங்கில் காற்று முரளிதரன் அவர்களின் அவரது நாய் பற்றிய பதிவு திடீரென பளிச்சிட்டது. என் செல்லங்கள் குரைத்ததாலோ என்னவோ?! சுரேஷின் சென்ரியு, பாப்பா மலர் பார்க்க வேண்டும். பாலமகி, அனிதா, சித்ரா சுந்தர், அனு? உமையாள் மீண்டும் வந்தாரோ?  சுப்புத் தாத்தா அடுத்த என்ன இசையமைத்தாரோ? குழல் இன்னிசை என்ன இசைத்தாரோ? மணவை? இரா? அன்பேசிவம் என்னா ஆனார்? கிரிக்கெட்ல நம்ம நாடு தோத்ததுக்கப்புறம் ஆளக் காணல. ஐபிஎல்லில் மூழ்கிட்டாரோ?! சாமானியனையும் காணவில்லை.
   இளங்கோ ஐயா அவர்களின் அம்மா பதிவு நினைவுக்கு வந்தது.  முத்துநிலவன் ஐயா ஒரு பட்டிமன்றம் குறித்த சுட்டி கொடுத்ததைப் பார்த்த நினைவு நிழலாக. க்ரேஸ் குழந்தைகள் கணினி நேரம் பற்றி அடுத்து என்ன எழுதினாங்களோ? ஆறுமுகம் ஐயாசாமி புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லியது நினைவுக்கு வந்தது. அவர் வீட்டுக்கு அடுத்து பாம்பு வந்ததா? ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் அடுத்து என்ன புலம்பல்ஸோ?  சுவாரஸ்யம்தான். இபுஞா அடுத்து என்ன சீறியிருக்கின்றாரோ?! இராயச் செல்லப்பா சாரின் குரல் எங்கேயோ கிணற்றுக்குள் இருந்து கேட்டது போல இருந்தது. இளமதி எப்படி இருக்கின்றார்களோ? தென்றல் கீதா பக்கம் போய் நாளாயிற்று.

நம்ம கூட்டாஞ்சோறு செந்தில் அடுத்து எந்த மலைக்குப் பயணித்தாரோ? அதை எழுதியிருப்பாரோ? படிக்கலையே...மலைகள் பளிச் பளிச்சென்று வந்து சென்றன.  ஜிஎம்பி சார் என்ன பதிவு எழுதியிருப்பார்? நண்பர் ஜோதிஜியின் புத்தகம் வாசித்து பாதியில் நிற்கின்றது என்று இப்படி எல்லோரும் வந்து போன வேளையில், "நீ இன்னும் போன பதிவுக்கே பதில் கொடுக்கல" என்று துளசி குட்டிச் சென்றார். ஏதாவது பதிவு போடு.  எனக்கும் நேரம் இல்லை என்றார். வரிசையில் கடைசியாக வந்து தன் கொடுவா மீசையை முறுக்கிக் கொண்டு, இடுப்பில் கை வைத்துக் கொண்டு நின்றார் பாருங்கள் நம் கில்லர்ஜி,ஓட்டுப் போட்டதுக்கு நன்றி.என்று. (அதாவது நாங்க ஓட்டுப் போடலைன்றத அப்படிச் சொல்றாராம்!) அட! இவர் எப்போ அபுதாபிலருந்து இங்க வந்து அரசியல் கட்சி ஆரம்பித்தார்? தேர்தல் இன்னும் வரலையே! வில்லங்கக் கோஷ்டிகள் போற இடமெல்லாம் பாத்துக்கிட்டேதானே இருக்கேன். நானும் ரெண்டு பதிவு போட்டாச்சு”. அப்படினு சொன்னப்பதான் அந்த அரை மயக்கத்துலயும் புரிந்தது, நாங்க அவர் தளத்துல போய் கருத்து போடலனு! அன்பான மிரட்டல் விட்டாரு பாருங்க...அருமை அண்ணனாச்சே!  அவர் சொல்பேச்சை மறுக்க முடியுமா...அவ்வளவுதான்...மோனத் தூக்கம் கலைந்தது. கில்லர்ஜி அண்ணனுக்கு ஒரு ஜே போடலாமானு முழித்துப் பார்த்தால், வீடு ஒரு ரவுண்ட் அடிப்பது போன்று இருந்தது.  போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட இல்லாம, காது வலியும், எரிச்சலும் மீண்டும்! எழுப்பி விட்டது.

"ஆ!!!! ஓ..!!!!டைட்டிஸ் மீடியா.....இப்படியா.....முடியல!! ஹ்ஹ்ஹ்ஹ்...

-கீதா

படங்கள் : கூகுளில் இருந்து

பின் குறிப்பு : பெரும்பாலும் சிறியவர்களுக்குத்தான் வருமாம்.  ஒருவேளை நானும் சின்னப் பிள்ளையோ!!!!!  இது என் வலியைச் சொல்லுவதற்காக இங்கு எழுதவில்லை.  சிறிய அளவில் வேதனை வந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகிவிடவும் என்பதைச் சொலல்வே.  அசட்டையாக இருந்தால் பெரிதாகி, நாட்பட அவதியுற வேண்டிவரும் என்பதால்.  மிகவும் வேதனையாக இருக்கும். வலி நிவாரணிகள் நிறைய எடுக்க வேண்டிவரும்.  வேறு வழி இல்லை. அந்த அளவிற்கு வலிக்கும். வலி நிவாரணிகள் சிறிது நேரம் தான் வேலை செய்யும். மீண்டும் வலி தொடங்கும் தூங்க முடியாத அளவிற்கு. அதற்காகத்தான் இந்தப் பதிவு.