வெள்ளி, 30 செப்டம்பர், 2016

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 1




ங்களூருக்குப் பேருந்தில் சென்ற போது .....மொட்டைக் குன்று என்றாலும் அழகுதான்
---------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த இரு மலர்களும் பங்களூர் உறவினர் வீட்டில்
மலரே உன் இதழ் மடித்து என்ன சொல்ல வருகிறாய்?! "என்னைக் கொய்து விடாதீர்கள்" என்றுதானே?!!
மலர்ந்தும் மலராத பாதி மலர்....மலர்ந்திட்டால் பிரித்திடுவரே மாந்தர்.....மலர்ந்திட வேண்டுமோ என்று யோசிக்கின்றதோ
------------------------------------------------------------------------------------------------------------------- 
பாண்டிச்சேரிப்பயணம்
பாண்டிச்சேரிப் பயணத்தின் போது ஓடும் பேருந்திலிருந்து.............   சூரியக் கதிரில் தகதகவென மின்னிடும் காயல்

உப்பில்லாப்பண்டம் குப்பையிலே - பாண்டிச்சேரி செல்லும் வழியில் உப்பளங்கள் 
பாண்டிச்சேரி எல்லைக்கருகில் இருக்கும் சுங்கச் சாவடி - அழகுப் பெட்டகம்
---------------------------------------------------------------------------------------------------------------------
இதோ இவை எல்லாம் என் வீட்டருகில்
ஏய் நீ ரொம்ப அழகா இருக்க

நான் யாரென்று தெரிகிறதா? படுத்துக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு யோசித்துப் பாருங்கள்.......


மறைந்திருக்கும் மர்மம் என்ன சூரியனாரே! கார் மேகங்கள் உமைச் சிறைப்படுத்தியதோ

 பௌர்ணமி நிலவின் வெட்கம்!
           கோயில் வளாகத்தின் பசுமை அரங்கு    
            
அடுத்த விழியின் பார்வையில் சென்னையின் அழகுடன் வருகிறேன்.....சென்னையின் அழகா? அது என்ன? என்று தோன்றுகிறதா!! காத்திருங்கள்....

இப்படங்கள் எல்லாம் வெங்கட்ஜி, செந்தில் சகோ அவர்களின் படங்களுக்கு நிகர் இல்லைதான்.  எனினும், எனது ஆர்வ மேலீட்டினால் என் மூன்றாவது கண் வழிச் சிறைப்படுத்தியவை!! 

------கீதா





செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சேவையும் என் நினைவுகளும்

(நெல்லைத் தமிழன் அவர்கள் "சேவை" செய்யும் குறிப்பை எங்கள் ப்ளாகில் "திங்க" வில் கொடுத்திருந்ததால், எங்கள் தளத்தில் இதனைக் குறித்து என் நினைவுகளைப் பதிவாக்கியது நினைவுக்கு வர அதை இங்கு மீள் பதிவாகத் தருகிறேன்

சேவை! எனக்குப் பிடித்த உணவுப் பதார்த்தத்தைப் பற்றிய என் நினைவுகள்.

இப்போதெல்லாம், பெரும்பாலான கல்யாணங்களில், காலை உணவு அல்லது மாலையில் பரிமாறப்படும் உணவு வகைகளில் ஒன்றாக சேவை இடம் பெறுகிறது.  நன்றி: ரெடிமேட் சேவை ப்ரான்ட்ஸ். இது நொடியில் தயார் என்று எளிதாக்கப்பட்ட 5 நிமிடத்தில் தயாராகும் சேவை. அக்மார்க் மூல சேவையை அவ்வளவு எளிதாகப் பெரும் கூட்டத்திற்குச் செய்து விடமுடியாது. அதனுடைய நல்ல மணம், குணம் இந்த ரெடிமேட் சேவையில் இல்லவே இல்லை. அது தனிச் சுவை. அந்த ரெடிமேட் சேவையைச் சாப்பிட்ட போது எனக்கு மூலவடிவ அக்மார்க் சேவையைக் குறித்த என் இளமைக்கால நினைவுகள் மனதில் வந்தது. நிற்க,

இடியாப்பத்தையும், சேவையையும் குழப்பிக் கொள்பவர்களும் உண்டு.  இடியாப்பம் என்பது பச்சரிசி மாவில் செய்யப்படுவது. பிழிந்து, ஆவியில் வேகவைப்பது,  மாறாகப் புழுங்கல் அரிசியில் செய்யப்படுவது, வேகவைத்துப் பிழியப்படுவது நான் குறிப்பிடும் சேவை.

எப்பொழுதெல்லாம் எனது தாய் வழிப் பாட்டி இதைச் செய்ய நினைத்து புழுங்கல் அரிசியை ஊறப் போடுகிறார்களோ அன்றேல்லாம் “ஏய் குட்டிகளா இன்னிக்கு டிபன் சேவை! எனக்குத் தேவை உங்கள் “சேவை” என்று ஏதோ அறிவிப்புப் பலகையில் எழுதுவது போல் குறிப்பிடுவது வழக்கம். இங்கே குட்டிகள் என்பது நாங்கள் தான்.  மாமா, அத்தை குழந்தைகள் என்று நாங்கள் 10 பேர். எல்லோரும் “ஹே!” என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்போம்.

ஆனால் அதே சமயம் பாட்டியின் “உங்கள் சேவை” என்பதைக் கேட்டு நாங்கள் எல்லோரும் பதுங்குவதும் நடக்கும். ஏனென்றால், அந்தக் காலகட்டத்தில், 38 வருடங்களுக்கு முன், இந்தச் சேவையை செய்வது எவ்வளவு கஷ்டம் என்றும், செய்வதற்கு எங்களைத்தான் ஈடுபடுத்துவார்கள் என்பதும் எங்களுக்கல்லாவா தெரியும்!

அப்படியாகப்பட்டச் சேவையை எங்கள் வீட்டில் செய்யும் நாள் ஏதோ விழா எடுப்பது போல இருக்கும்!. பெரும்பாலும் சனிக் கிழமையோ, ஞாயிற்றுக் கிழமையோதான் நல்ல முகூர்த்த நாளாகக் குறிக்கப்படும். அந்தக் கிழமைகளில்தானே நாங்கள் வீட்டில் இருப்போம்!.

இந்த இடத்திலே எங்கள் பாட்டியைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். எங்கள் குடும்பம் பெரிது.  நாங்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் கூட்டுக் குடும்பமாக, இந்தப் பாட்டியின் (என் அம்மா வழி) அரசாட்சி,  அரசி ஆட்சியின் கீழ் இருந்தோம். உங்களுக்கே புரியும் அரசி ஆட்சி எப்படி இருந்திருக்கும் என்று! பாட்டியை இந்திராகாந்திப் பாட்டி என்றுதான் அழைப்பது வழக்கம். ஊரே அவர்களுக்குப் பயந்து மரியாதை கொடுக்கும் அளவு “She commanded respect and was a terror woman to many”.   இரும்புப் பெண்மணி! அவரது பிடியில்தான் எங்கள் எல்லோரது குடும்பமும். எங்கள் குடும்பத்திலேயே மொத்தம் 18 பேர்.  அத்துடன் கொச்சியிலிருந்த பாட்டியின் தங்கையும், அவர்களது சில குழந்தைகளும் சேர்ந்தார்கள் என்றால் மொத்தம் 25 பேர் ஆகிவிடும். அதனால், பெரும்பாலும் 5 கிலொ புழுங்கல் அரிசியாவது - டொப்பி அரி என்று சொல்லப்படும் (IR20) – 4, 5 மணி நேரம் ஊறப் போடுவார்கள். இப்போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கும்.

பெரியோர்களில் ஆண் மக்கள் யாரும் சமையலறைக்குள் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்கள். பெண்களில் வீட்டு மருமகள்கள் ஏதாவது காரணம் சொல்லி இதில் தலையிடாமல் வேறு வேலைகளுக்குப் போய் விடுவார்கள்.  இறுதியில் என் அம்மாவும், பாட்டியின் தங்கையும் தான்.  அம்மா பாத்திரம் கழுவும் வேலையிலும், பாட்டியின் தங்கை எங்களை மேய்ப்பதிலும், ஆக நாங்கள்தான் சேவை செய்வதில் “சேவை” செய்ய வேண்டும்.

“ஏய்...மாலூ இங்க வாடிக் குட்டி. அரைக்கறதுக்கு ஒரு கை கொடு.”  என் பாட்டியின் அதிகாரக் குரல் ஒலிக்கும்.  அப்போதெல்லாம் கல்லுரல்தான்.

“பாட்டி எனக்கு நாளைக்குப் பரீட்சை இருக்கு பாட்டி. படிக்கணும்”  என்று சொல்லும் போதே அவளுக்கு கால் நடுங்கிக் கொண்டிருக்கும்.

அவள் கையில் இருக்கும் புத்தகம் தலை கீழாக இருக்கும்.  அதாவது அவள் தலை கீழாகப் படிக்கிறாள் என்று அர்த்தம். அவள் விடை எழுதினால் அது அச்சு அசலாக, ஒரு வார்த்தை கூட பிசகாமல், அப்படியே புத்தகத்தில் உள்ளது போல இருக்கும். சரி அதை விடுங்கள். இப்போது எங்களுக்கும் அந்த பயம் தொற்றிக் கொண்டு காரணத்தை யோசிக்க ஆரம்பித்து விடுவோம்.

“கேசவா, நீ வாடா இங்க” அடுத்த அழைப்பு.  இவனுக்குக் கால் ஒருபோதும் நடுங்காது.  வாய் ஜாலத்தில் கில்லாடி!.  “பாட்டி உங்களுக்குக் கண்டிப்பா ஹெல்ப் பண்ணிருப்பேன். ஆனா, உங்களுக்கே தெரியும், இந்தத் தடவை நான் கணக்குல 100 மார்க் வாங்கணும்னு.  அப்படி இல்லனா நீங்க என் ரிப்போர்ட் கார்டுல எங்க அப்பாவ sign போட விட மாட்டேள். உங்களுக்கே உங்க வார்த்தை மறந்து போச்சா பாட்டி. நான் கணக்கு போட்டுண்டு இருக்கேன்” என்று அருமையாக வெண்ணை தடவிய வார்த்தைகள் வரும். அவன் கணக்கு வேறு! அப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் மனம் வேறு யாரை மாட்டி விடலாம் என்று கணக்குப் போடத் தொடங்கி விட்டிருக்கும். அவனுக்குப் பதிலாகப் போவதற்கு வேறு ஒருவரைக் கெஞ்சுவான்.

“என்னடா, என்ன மாட்டி விடப் பாக்கறியா, அஸ்கு புஸ்கு.  போனதடவ நான் Science ல, 38 மார்க்குதான் வாங்கிருந்தேன்.  பாட்டி sign போட விடமாட்டானு தெரிஞ்சு நான் அதை 83 ஆக்கின ரகசியத்த நீ பாட்டிகிட்ட போட்டு உடைச்சைலயா!  முடியாது போ.  வேற ஆளப் பாரு” 

“ஆசை,தோசை, அப்பளம், வடை, என்னால முடியாது.  நான் தான் பாட்டிக்கு நேத்திக்கு கால் பிடிச்சு விட்டேன். அதனால வேற யாரையாவது கூப்பிட்டுக்கோ”  இது இன்னொரு நபர்.

“பாட்டி, இவங்க எல்லாரும் வந்தா நானும் வருவேன்.  இல்லனா நானும் இல்ல”  இது என்னுடைய பதில்.

அவ்வளவுதான்.  பாட்டி கோபத்தின் உச்சிக்கே போய்விடுவார்.  இடுப்பில் கைககளை வைத்துக் கொண்டு, கண்களை உருட்டி, கத்திக் கொண்டு கம்பு அல்லது விறகுக் கட்டையை எடுக்கச் செல்லும் போது, நாங்கள் எல்லோரும் தாக்குப் பிடிக்க முடியாமல் ஒன்று சேர்ந்து விடுவோம்.  Unity is Strength!!  உடனே, ஒரு அவசரகாலக் கூட்டம் எங்களுக்குள் போடப்படும்.

ரகசியமாக ஒரு சில விஷயங்கள் பரிமாறிக் கொள்ளப்படும். அதாவது, யாருக்கு அதிகமான பப்படங்கள், யார் யார் அவர்களது பங்கில், எத்தனை சதவிகித சேவையை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும், யாருடைய உடையை யார் யார் ஒரு சில நாட்கள் அணிந்து கொள்ளலாம், ரிப்பன், குச்சி மிட்டாய், குச்சி ஐஸ், நெல்லிக்காய், பஞ்சு மிட்டாய், மாங்காய், வளையல்கள், மயில் இறகு, (புத்தகத்தின் நடுவில் வைத்து குட்டி போடும் இறகு), புத்தகத்தின் இடையில் மறைத்து வைத்துப் படிக்க கதை புத்தகங்கள், அந்த ரசசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சத்தியப் பிரமாணங்கள், அறிவியல் ரெக்கார்ட் நோட்டில் யார், யாருக்கு வரைந்து கொடுப்பது, இம்பொஸிஷன் எழுதுவது, வீட்டுப்பாடம் செய்து கொடுப்பது, இரவு ஒரே மின் விசிறியின் அடியில் பாட்டி நடுவிலும் எல்லோரும் அவரைச் சுற்றிதான் எல்லோருக்கும் படுக்கை என்பதால் யார் அதன் நேர் அடியில், யார் யார் எங்கு என்ற எல்லைப் பிரிவு என்று பலதும் பேசப்பட்டு, எல்லோரும் ஒத்துக்கொண்டவுடன், கையில் சத்தியம் அடித்துவிட்டுப் பாட்டிக்கு உதவச் செல்வோம். இங்குதான், இப்படித்தான் ஊழலே தொடங்குகிறதோ?!!

இதில் என் அம்மாவும், பாட்டியின் தங்கையும் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள்.  “உங்களுக்கு ஆதரவா பெரியவங்களுமா? எதற்கு” என்று கேள்வி வரலாம்.  இவர்கள் இருவரும் எங்களுக்குத் தாராளமாக சேவையும், பப்படங்களும் தருவார்கள். “அம்பலப்புழா பாயாசம்” மிகவும் பிரபலம்.  அதைச் செய்வதில் விற்பன்னர்களான இவர்கள் இருவரும் ஸ்பெஷலாக பாட்டிக்குத் தெரியாமல் எங்களுக்குச் செய்து தருவது ‘போனஸ்’. ஏன்? எதற்கு? பதிலாக, நள்ளிரவில், கோவிலுக்கு அருகில், திறந்த வெளி அரங்கில் சினிமா போடும்போது, பாட்டிக்குத் தெரியாமல் ரகசியமாக இவர்கள் அங்கு போவதற்கு உதவ வேண்டும்.  இதில் என்ன வேடிக்கை என்றால், பாட்டி எங்களுக்கு முன்னரே அங்கு போயிருப்பார்கள். “தில்லானா மோகனாம்பாளில்” வருவது போலத்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஊழலிலிருந்து, இப்போது திரும்ப சேவைக்கு வருகிறேன்.

பாட்டியும் நாங்களும் அரைத்து முடித்தவுடன், பாட்டி அந்த மாவை ஒரு பெரிய பித்தளை உருளியில் போட்டு வணக்குவார்கள்.  அதிலும் எங்கள் பங்களிப்பு உண்டு.  அது திரண்டு வந்தவுடன் அதை பெரிய பெரிய கொழுக்கட்டைகளாக “ஸ்..ஸ்ஸ் ஆஅ” என்று பிடித்துக் (சூட்டோடு) கொடுக்க, பெரிய பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் இந்தக் கொழுக்கட்டைகளைப் போட்டு மூடிவிடுவார்கள்.  அவை கொதிக்கும் போது ஒரு மணம் வீடு முழுவதும் வரும் பாருங்கள்!  அது தனிதான். 

அவை வெந்ததும் கடைசிப் பருவம், பிழிவது.  அதுதான் உள்ளதிலேயே மிகவும் கஷ்டமான வேலை.  இதைப் பிழிவதற்கென்றே சேவை நாழி என்ற ஒன்று உண்டு.  அது முக்காலி போல, நடுவில் மிக, மிகச் சிறிய துவாரங்களுடன் ஒரு கிண்ணத்துடன், மேலே ஸ்க்ரூ ஜாக்கு போல (Screw Jack)  அமைப்புடன் இருக்கும்.  இரும்பினால் ஆனதாக இருக்கும்.  அந்தக் கிண்ணத்தில் வெந்தக் கொழுக்கட்டையை ஒவ்வொன்றாகச், சூடாக இருக்கும்போதே போட்டு, ஸ்க்ரூ ஜாக்கின் ஒரு பக்கம் ஒருவர், இன்னொரு பக்கம் இன்னொருவர் கை கொடுத்து, சுற்றி, ஒருவர் மாறி ஒருவராக, எல்லா கொழுக்கட்டைகளையும் பிழிந்தெடுப்போம்.

பிழியும்போது நூடுல்ஸ் போன்று ஆனால் மிக மிக மெலிதாக வெளியில் வரும். அப்படிப் பிழியும் போது அந்த ஆவி பறக்க ஒரு மணம் வரும் பாருங்கள் அது இன்றும் இன் நினைவில் உள்ளது.  இதைச் செய்யும் போது நாக்கு நீர் விடத் தொடங்கி விடும். பின்னர் பிழிந்ததை பாட்டி ஒரு பெரிய தாம்பாளத்தில் பரப்பி அதில் தேங்காய் எண்ணையைத் தெளித்து வைப்பார்கள்.  “நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த” என்று  சொல்லுவது போல, தீயாக வேலை செய்து முடிக்கும் போது, அந்த சேவையைப் பார்த்ததும், “தோள்பட்டை வலியா” போயே போச்!.  போயிந்தி! போயல்லோ!. It’s gone!  இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும்போது, மறுபுறம் எங்களில் சிலர் 5, 6 தேங்காயை உடைத்துத் துருவி புளிசேரி செய்வதற்கு உதவுவார்கள்.

என் கல்யாணத்திற்குப் பிறகு 8 வருடங்கள் திருவனந்தபுர வாழ்க்கை. கல்யாணச் சீராக இந்தச் சேவை நாழியும் என்னுடன் வந்தது. எனது புகுந்த வீட்டவர்கள் எல்லோரும் சென்னைவாசிகள். அவர்களுக்கு இந்தச் சேவை நாழியைப் பார்த்து வியப்பு.  அதனால் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வரும் சமயம் எல்லாம் இந்த சேவை தவறாது இருக்கும்.  செய்வதில் எனக்குச் சிரமம் இருந்ததே இல்லை. அச்சமயத்தில் அரைப்பான் (க்ரைண்டர்) வந்து விட்டதால் அரைப்பது எளிதாகி விட்டது.  ஆனால் இவர்கள் யாராவது சொல்லாமல் கொள்ளாமல் வந்தால் சேவை கிடைக்காது.  அப்படி இருக்கும் சமயம்தான் அந்த நல்ல இனிய செய்தி வந்தது.

நாங்கள் குடியிருந்த கிழக்கே கோட்டைப் பகுதியில், ஆனைவால் தெருவில் இருந்த சிறு உணவகம் ஒன்றில் (மெஸ்) சேவை, புளிசேரி செய்து பப்படத்துடன் தருவதாகச் சொல்லவும், அப்புறம் என்ன? திடீரென்று வருபவர்களுக்கு அங்கிருந்துதான் சேவை வாங்கி வருவேன். இப்படிப் போகப் போக, அந்த மெஸ்ஸில் என்னைக் கண்டதுமே அந்த மெஸ்ஸை நடத்தியவர் “டேய்! அம்பி “சேவை மாமி”  வந்திருக்கா கேட்டியா...ஒரு நாலு பார்சல் சேவை, புளிசேரி, நாலு பப்படம், பின்னே கூட ரண்டு பப்படம் கூடி எடுத்தோண்டு வா கேட்டியா” என்று கூவி என்னை “சேவை மாமி” ஆக்கி விட்டார். என்னை மாமி ஆக்கியதில் அந்த ஆள் மீது எனக்கு பயங்கர கோபம். இப்போதும்! வேறு வழி இல்லாமல் சேவை வேண்டுமே அதனால் பல்லைக் கடித்துக் கொண்டு வாங்கி வருவேன்.

அப்போது கஷ்டப்பட்டதற்குக் காரணம் இரும்பு நாழி மற்றும் கொழுக்கட்டைகளைத் தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்ததாலோ இருக்கலாம்.  எனக்கு என் அம்மா கொடுத்த நாழியில் பிழிவது எளிதாகவே இருந்தது.  நான் ஒரெ ஆளாகவே செய்ய முடியும். வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு. புகுந்த வீடு மற்றும் பிறந்த வீட்டுக் குழந்தைகள், அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் வளரும் இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கும் “boiled rice noodles” என்றும் இடியாப்பத்தை “raw rice noodles” என்றும் அறிமுகப்படுத்தி விட்டேன். பெயர் வேண்டுமானால் அவர்களுக்கு ஏற்றார் போல மாறலாம்.  ஆனால் சேவை சேவைதான்!!.

அப்படி இருந்த சமயம், 15 வருடங்களுக்கு முன் கணவரின் வேலை நிமித்தம் அமெரிக்கா செல்ல வேண்டிய நிர்பந்தம். சேவை நாழியை விடுவேனா?! என்னுடன் அமெரிக்கப் பயணம். செக் இன் பெட்டியில். நல்ல வேளை எந்த விமான நிலையத்திலும் இதனை ஏதோ ஒரு ஆயுதம் என்று நினைத்து என்னைச் சந்தேகப்படவோ, அதை வெளியில் தூக்கி எறியவோ இல்லை. இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட தேதிக்கு இருவாரம் முன்தான் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் காலடி பதித்தோம்.

நாங்கள் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், சமையல் அறையில் பாத்திரம் தேய்க்கும் தொட்டியின் கழிவுநீர்க் குழாயில் ஒரு சிறிய பிரச்சனை வந்தது. அதைச் சரி செய்ய வந்தவர் மெக்சிக்கோவைச் சேர்ந்தவர்.  அவர் கண்ணில் இந்த சேவை நாழி பட்டு விட்டது.  அவருக்கு இதைப் பார்த்ததும் ஒரே வியப்பு! அதைப் பற்றி விசாரித்தார்.

அவர் பேசிய ஆங்கில உச்சரிப்பு எனக்குப் புரிய கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. அவருக்கு ஏற்றார் போல சொல்ல எனக்கு அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு பழகியிராததால் முதலில் தயங்கினாலும், இதன் புகழைப் பரப்பும் நோக்கம் என்னைத் தூண்டி விட, இந்தியாவின் தென் கோடியில் வழக்கத்தில் இருக்கும் சேவையின் மகத்துவத்தைப் பற்றி உலகிற்கு அறிவிப்பது எனது கடமை என்று நினைத்து பெருமையுடன் “par boiled rice noodles” என்று நாமகரணம் சூட்டி (அவரிடம் string hoppers என்றும் விளக்கம் அளித்து) அவருக்கு விவரித்தேன். அவர் ஆர்வத்துடன், இடையில் எல்லாம் சந்தேகம் எழுப்பி, கேள்வி கேட்டு (மாணவர்கள் கூட இப்படிக் கேள்வி கேட்க மாட்டார்கள்) எல்லாம் முடிந்த பின் அவர் கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி

“இப்போது எனக்கு அதை டெமோ செய்து காட்ட முடியுமா” என்று!  நான் மயங்கி விழாத குறைதான்.

நான் அவரிடம் “நான் டெமோ என்ன சேவையே செய்து தருகிறேன், ஆனால், நீங்கள் டெமோ பார்க்க வேண்டும் என்றால் ஒரு பாதி நாளாவது எங்களுடன் செலவிட வேண்டி இருக்கும்” என்று சொன்னதுதான் தாமதம், அவர் மயங்கியே விழுந்து விட்டார்!

இருந்தாலும் எனக்கு நம் சேவையின் மகத்துவத்தை அமெரிக்காவில் பரப்பியதில் ஒரு மகிழ்ச்சியே! வீட்டிற்கு வந்த அன்பர்களுக்கு எல்லாம் சேவை செய்தே அதன் புகழைப் பரப்பிவிட்டேன். ஒரே வருடத்தில், திரும்பவும் இந்தியா வரவேண்டிய நிர்பந்தம்.  வந்தாயிற்று.  அமெரிக்க நண்பர்கள், என்னை மிஸ் பண்ணுவதை விட சேவையை மிஸ் பண்ணுவதாகக் கூறினார்கள். சேவையின் புகழைப் பரப்பிய என் “சேவை” வாழ்க!!.

சேவையை மிக எளிதாகச் செய்ய “சேவை மாஜிக்” என்று சேவை செய்யும் உபகரணம் ஒன்றை, கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தியிருப்பதாக, 2008 ஆம் வருடம் அறிய நேர்ந்தது. உடனே என் அமெரிக்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அதைத் தெரியப்படுத்தினேன். அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  எத்தனை பேர் அதை வாங்கினார்களோ!! அது வெற்றியடைந்ததா தெரியவில்லை. இப்போது அது பேசப்படவில்லை. இன்னும் சந்தையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்பொதே அதன் விலை ரூ 4000 - 5000 ற்குள் என்று நினைவு. அதன் சுட்டி இதோ. 


 சேவை மாஜிக் - யூட்யூபிலிருந்து

இன்று என் வீட்டில் “இன்றைய டிபன் சேவை! எனக்குத் தேவை உங்கள் “சேவை”!  செய்வதற்கல்ல.  சாப்பிடுவதற்கு!!!


------கீதா




வெள்ளி, 23 செப்டம்பர், 2016

திரைப்படங்களாகும் திருமணங்கள்??!!

சமீப காலமாக நான் கலந்து கொள்ளும் திருமணங்கள் எல்லாமே எனக்கு ஒரு புறம் பிரமிப்பையும், மறுபுறம் வருத்தம், ஆதங்கம் என்று இன்னபிற உணர்வுகளையும் ஏற்படுத்துகிறது. ஆடம்பரம், உதட்டளவுப் பேச்சுகள், குடும்ப உறவுகள் வலுவிழந்து வருவது மற்றும் இத்தனை ஆடம்பரத் திருமணங்கள் நடந்து சில மாதங்களிலேயே முறிவது.ம் குடும்ப வாழ்வு தொலைந்து வருவதும் என்று அந்த இன்னபிற உணர்வுகளை வகைப்படுத்தலாம்.
மண்டப வளாகம் மிகப் பெரியது-நுழைவு வாயில் தோரணங்களுடன்

அன்றைய திருமணங்கள் என்று பழம் பஞ்சாங்கம் பேசக் கூடாதுதான். காரணம் நமது வாழ்க்கை முறை முழுவதுமே மாறிவிட்டது, மாறி வருகின்றது. என்றாலும், அன்றைய திருமணங்கள் பல நாட்கள் நடந்த போதிலும் எல்லா பொறுப்புகளும் குடும்ப அங்கத்தினருக்குள் பகிர்ந்து கொள்ளப்பட்டு கல்யாணத்திற்குத் தேவையான பலகாரங்கள் உட்பட, ஆடம்பரம் இல்லாமல், ஆடம்பரச் செலவுகள் இல்லாமல், குடும்பத்தின் ஒற்றுமையையும், உறவையும் வளர்த்தது என்பதை இங்கு மறுக்க இயலாது.

கிராமம் என்றால் அந்தக் கிராமம் முழுவதும் பெரும்பாலும் உறவினர்களாகத்தான் இருப்பார்கள். தெரு முழுவதும் அடைத்துப் பந்தல் போடப்பட்டு, தோட்டங்களில் இருக்கும் மருதாணி பறிக்கப்பட்டு பாட்டம் பாட்டமாக அரைக்கப்பட்டு எல்லோரும் கூடி உட்கார்ந்து அதை பெரியவர்கள் சிறியவர்களுக்கு இட்டு விடுவது என்று பல நிகழ்வுகள் ஒரு குடும்பத்திற்குத் தேவையான அன்பு, பாசம் எல்லாவற்றையும் உறுதிப்படுத்தியது. இப்படியான நிகழ்வுகள் திருமண உறவின் புனிதத்தையும் வளர்த்ததுவே அல்லாமல் பணவிரயமோ இல்லை அதீதமான செலவையோ ஏற்படுத்தியது இல்லை.  கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கு ஆதாரமாக இருந்து வந்தது.
இவை என்னவென்று தெரிகிறதா? பூக்கள் அல்ல. ஒப்பனை செய்து கொண்ட முள்ளங்கி. நாங்கள் அழகுக் காட்சிக்குத் தயாராகின்றோம்

இப்போது அதே மருதாணி இடும் நிகழ்வு சமீப காலங்களில் வட இந்திய கலாச்சாரப்படி “மெஹந்தி பார்ட்டி” என்று தமிழ்நாட்டுக் கல்யாணங்களில் நடைபெறுகின்றது. இதற்கென்று ஒரு நாள் தனியாக ஒதுக்கி விடுகிறார்கள். மிக மிக எளிமையாக நடந்து வந்த கேரளத்து மேல்தட்டு, நடுத்தர வர்கத்துக் கல்யாணங்கள் கூட சமீப காலமாக மாறி வரத்தொடங்கியிருக்கின்றன. அங்கும் இப்போது “மைலாஞ்சி பார்ட்டி” என்று நடத்தத் தொடங்கிவிட்டார்கள். இதற்கென்று தொழில் ரீதியாக பல வடிவங்களில் மிக அழகாக வரையும் கலைஞர்களும் இருக்கின்றார்கள். கலை மிக அழகான கலைதான். அதைச் செய்யும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் வருமானமும் கிடைக்கிறதுதான். தமிழகத்தில் சமூக அந்தஸ்தாகவும் மாறிவருகிறது.
இங்கு பாருங்கள் எத்தனையோ ஏழைகள் ஒரு வேளைச் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருக்க, எத்தனை காய்கறிகள் ஒப்பனைகளுடன் காட்சியில்! இதற்குப் பதிலாக 50 ஏழைகளுக்கு உணவு அளித்திருக்கலாம். பதிவர்களே நீங்களேனும் உங்கள் வீட்டுக் கல்யாணங்களில் தவிர்க்க முயலுங்களேன்

இது ஒரு புறம் இருக்க, திருமணங்கள், மிகவும் ஆடம்பரமாக, தற்போது சினிமா ஷூட்டிங்க் போல் ஆகிக் கொண்டிருக்கின்றன. ஃபோட்டோ ஷூட் என்று ஒரு தனி நிகழ்வே நடக்கிறது.

திரைப்படத்தில் வருவது போன்று கல்யாணப் பெண்ணை, பையன் தூக்கித் தட்டாமாலை சுற்ற, பெண் தனியாகத் தட்டா மாலை சுற்ற, அவளது பாவாடை குடை போல விரிந்து சுற்றி அமரும் போது அவளைச் சுற்றி அந்தப் பாவாடை விரிந்து இருப்பது என்று பல பல கோணங்களில், விதம் விதமாக இருவரையும் வைத்து படம் பிடித்தார்கள்.

இனி எதிர்காலத்தில் சினிமா தியேட்டரில் படமாக ஒரு திருமணத்தைப் போட்டாலும் போடுவார்கள். வழ வழ என்று வருமே சில புத்தகங்கள் அழகான புகைப்படங்களுடன் அப்படி வரவேற்பு ஆல்பம், புத்தகம் போல் பெரியதாக இருந்தது. அதற்கு 1.50 லட்சமாம். அப்புறம் மற்ற ஆல்பங்களைக் குறித்துக் கொள்ளுங்கள். இதற்காக கல்யாணத்திற்கு முன்பே ஏதேனும் ஒரு வெளியிடத்திற்குச் சென்று புபைப்படம், காணொளிகள் எடுப்பதும் ஆரம்பித்திருக்கிறது.

மட்டுமல்ல சமீபத்தில் நான் பங்கெடுத்த திருமணங்களில், ஒன்றில் முன்னோட்டம் என்று சினிமாவிற்கு முன்னோட்டம் போடுவது போல் போட்டார்கள், கட்செவி (Whatsapp) குழுமத்திலும் பகிர்ந்தார்கள்! அதுவும் பஞ்ச் டயலாக்குடன், இசையுடன். இப்போது இத்தகைய ஆடம்பரத் திருமணங்கள் சமூக அந்தஸ்தாகிவிட்டது. திருமணங்கள் ஆடம்பரமாகி வருகிறது ஆனால் புனிதமான உறவுகளைக் களைந்து வருகிறது. இப்படிச் செய்யப்படும் திருமணங்கள் ஒரு சில மாதங்களில் முறிந்தும் விடுகிறது என்பது மனதிற்கு வேதனையும் தருகிறது.

கடலூரில் நான் கலந்து கொண்ட என் நெருங்கிய உறவினரின் மகனின் திருமணத்தில் நான் கண்ட புகைப்பட, காணொளிக் குழு ஸ்வாரஸ்யமாக இருந்தது. மொத்தம் புகைப்பட, மற்றும், காணொளிக் குழுக்காரர்கள் 7 பேர். அதில் ஒன்று “ஹெலி கேம்” எனப்படும் புகைப்பட, காணொளிக் கருவி. திரைப்படங்களில் கழுகுப் பார்வையில் பிரம்மாண்டமானக் காட்சிகளைக் கூட பறந்து பறந்து, மிக துல்லியமாகப் படம் பிடிக்கும், தொலையியக்கி - ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் ஹெலிக்காப்டர் புகைப்படக் கருவி.  

ஹெலி கேம் பறந்து பறந்து புகைப்படம்-காணொளி எடுக்கின்றது
ஹெலி கேமை இயங்க வைக்கும் ரிமோட்
இப்போது இந்த ஹெலிகாப்டர் போன்று இருக்கும் இந்த புகைப்பட/காணொளிக் கருவி பறந்து பறந்து பல கோணங்களில் புகைப்படம் காணொளி எடுப்பது என்பது திருமணங்களில் பிரபலமாகி வருகிறது. ஒருவர் ரிமோட்டைக் கையில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டே இயக்குகிறார். நான் இதைப் பற்றி அறிந்திருந்தாலும் இது தான் முதல் முறையாக இந்தக் கல்யாணத்தில் நேரில் பார்த்தேன். நம் அருகில் நம் தலைக்கு மேலே உயரத்தில் பறந்த போது காற்று அடித்து, மெல்லிய சத்தத்துடன் பறந்தது ஸ்வாரஸ்யமாக இருந்தது. நான் அதை இயக்குபவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அதன் விலை 1.5 லட்சம். இந்த வகையில் நிழற்படம் மட்டும் எடுக்கும் வகையிலும், அதன் செயல்பாடுகளுக்கு ஏற்ப மிகக் குறைந்த விலையிலும், சாதாரண மனிதர்கள் வாங்கும் விலையிலும் இருக்கிறது. (வெங்கட்ஜி, மற்றும் செந்தில் குமார் அவர்கள் நினைவுக்கு வந்தார்கள். எனக்கும் ஆசை இருக்கிறது என்பது வேறு விஷயம்.)

பெண்கள் பொதுவாகப் புகைப்படக் கலையில் இறங்குவது குறைவுதான். நான் இதுவரை எந்தத் திருமண நிகழ்வுகளிலும் தொழில் முறை பெண் புகைப்படக் கலைஞரைக் கண்டதில்லை. இந்தப் புகைப்பட குழுவில், ஒரு குட்டிப் பெண், சுறு சுறுப்பாக ஓடி ஓடி, கூட்டத்திற்குள் புகுந்து புகுந்து, பல கோணங்களில் ஒரு ஆண் எடுப்பது போன்று எடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் ஆர்வமுள்ள புகைப்படக் கலையில் ஒரு பெண் இப்படித் தொழில்ரீதியாக இயங்கியதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக பெருமையாக இருந்தது. ஏனென்றால், நிகழ்ச்சிகளுக்கு எடுப்பது என்பதற்கு நேரம் காலம் பார்க்காமல் இயங்க வேண்டும். பல வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிவரும்; அடிக்கடிப் பிரயாணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆண்களுடன் பணியாற்ற வேண்டிவரும். தைரியம் வேண்டும். எல்லாம் அவரிடம் இருக்கிறது.

அந்தப் பெண்ணிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியதில். அழைக்கப்படும் போது இப்படிக் குழுவுடன் இணைந்து கொள்வதும் உண்டு என்றாலும் அவர் தனிப்பட்ட முறையிலும் இயங்குவது தெரிந்தது. தொழில்ரீதியான டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கிறார். படிக்கும் போதே நிகழ்வுகளைப் படம் பிடிக்கத் தொடங்கினாலும், தொழில்ரீதியாக இயங்க ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஆகிறதாம்.

ஜிங்கல் டேபி (Jinkal Dabi) புகைப்படக் கலைஞர் முகநூல் முகவரி. Jinksphotography265

அவர் பெயர் ஜிங்கல் டேபி (Jinkal Dabi) அவரது அனுமதியுடன் அவரது புகைப்படத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதுதான் அவரது முகநூல் முகவரி. Jinksphotography265 அதில் அவர் கடலூர் திருமணத்தில், தான் எடுத்த திருமணப் பெண்ணின் புகைப்படங்களையும் பதிந்திருக்கிறார். அருமையாக எடுக்கிறார். தவிர ஒரு சில அழகான படங்களையும் பகிர்ந்திருக்கிறார். ஆத்மார்த்தமாக, அர்ப்பணிப்புடன் சுறுசுறுப்பாக இயங்குகிறார். தோழமை உணர்வுடன், சிரித்த முகத்துடன் அன்பாக, இனிமையாகவும் பழகுகிறார். எனக்கு நல்ல தோழியாகி விட்டார். அவரும் இங்கு நான் திருமணங்களைப் பற்றிச் சொல்லியிருக்கும் அதே கருத்துகள் அவருக்கும் இருப்பது வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

வாழ்த்துகள் ஜிங்கல்! அவர் மேலும் பல நிகழ்வுகளுக்குப் பணியாற்றி, பெண் புகைப்படக் கலைஞராக வெற்றி பெற வாழ்த்துவோம்! 

----கீதா




திங்கள், 19 செப்டம்பர், 2016

பொன்மகள்

நண்பர் ஸ்ரீராம் அவர்கள், கேவாபோக (கேட்டு வாங்கிப் போடும் கதை) விற்காக என்னைத் தொடர்பு கொண்டதும், “நான் இப்போதுதான் ஒரு கதை எழுதி முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். அதையே உங்கள் “எங்கள் ப்ளாகில் வெளியிட அனுப்புகிறேன். அதன் பின் எங்கள் தில்லைஅகத்திலும் போட்டுக் கொள்கிறேன்” என்றேன். ஓகே என்றார்.

கதை பிறந்த கதை. வண்டியில் சென்று கொண்டிருந்த போது “குழந்தைகள் விற்பனை. ரூ 6,00,000  என்று பிரபல இதழின் பரபரப்பான பெட்டிச் செய்தி தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த ஓர் உண்மைச் சம்பவத்தையும் இணைத்துக் கொஞ்சம் டச்சப் செய்ததில் “பொன்மகள்” பிறந்தாள். இதோ அவளை உங்களிடம் அறிமுகப்படுத்துகிறேன்.

இதை “எங்கள் ப்ளாகில்” வெளியிட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை எல்லாம் வெளியிட்டு வரும் சமயத்தில் எனதும் வருவதில் மகிழ்ச்சி!  சாதாரணமான என்னையும் கௌரவப்படுத்தும் “எங்கள் ப்ளாகிற்கு” மனமார்ந்த நன்றிகள் பல.

எங்கள் ப்ளாகில் வெளியிட்டு அங்கு விமர்சித்துக் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி. அங்கு "ஜீவி" சார் அவர்கள் சொன்ன பின்னூட்டக் கருத்து எனது மனதிற்கும் ஏற்புடையதாகவும், முதலில் இப்படி எழுதி, பின்னர் மாற்றி எங்கள் ப்ளாகிற்கு அனுப்பினேன். எனவே இங்கு நான் முதலில் இதை முடித்த விதத்தில் தருகிறேன். ஜி எம் பி சார் சொன்ன 600000 தவறையும் திருத்தியிருக்கிறேன்.


                                   பொன்மகள்


என் நண்பன் கார்த்தியிடமிருந்து அலைபேசி அழைப்பு.

“அக்கா எப்படி இருக்க? வெளியே இருக்கியா? பிஸியா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

இப்படித்தான் அடுத்தடுத்து கேள்வி கேட்டு, பிசியா என்றும் கேட்டுவிட்டு முற்றுப் புள்ளி வைக்காமல் தொடர்ந்து பேசுவான். அன்றைக்கு முக்கியமான விஷயம் என்று சொல்லி முற்றுப் புள்ளி வைத்தான்.

“நல்லாருக்கேன் கார்த்தி!. கடைக்கு வந்தேன். என்ன விஷயம் சொல்லுடா” என்று சொல்லிக் கொண்டே கடையை விட்டு வெளியில் வந்து, யாரும் இல்லாத இடம் பார்த்து ஒதுங்கி நின்றேன்.

“எனக்குப் பெண் குழந்தைனா ரொம்பப் பிடிக்கும் உனக்குத் தெரியும்ல.. இப்ப எங்க வீட்டுக்கு ஒரு “பொன்மகள்” வந்தால்?!.….ஒரு பக்கம் சந்தோஷம்…இன்னொரு பக்கம்… அக்கா என் வயசு என்ன? 47. என் வீட்டுக்காரி வயசு 45. அக்கம் பக்கம் என்ன சொல்லும்னு ஒரு வெட்கம்….அதான் உங்கிட்ட ஒரு ஆலோசனை கேட்கலாம்னு”

இப்படிப் பேசிக் குழப்புவதும் அவன் வழக்கம்.

“ஓ! கார்த்தி! புரியல.. இருந்தாலும் என் யூகம் இது…..சந்தோஷமான விஷயம்தான்….. உனக்கும் உன் மனைவிக்கும் இந்த வயசுலயும் பெத்து, வளக்க ஆரோக்கியமும், பொறுமையும் இருக்குன்னா எதுக்கு எங்கிட்ட கேக்கணும்? அக்கம் பக்கத்துக்குப் பயப்படணும்டா?

“ஐயோ! அக்கா….போதுமே உன் யூகம்….”பெத்து”ல “பெ” எடுத்துட்டுத் “த” போட்டுக்க…
“அட! “ தத்து” அதுவும் நல்ல விஷயம்தான். ஆனா, நல்லா யோசிச்சுச் செய்யணும்.. சரி விஷயத்தைச் சொல்லு.”

அவன் விவரித்தான். அவனது மனைவியின் தூரத்து உறவினரான பெண்ணிற்கு மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவர்கள் இருவரும் பார்க்கச் சென்ற போது அந்த வீடு இழவு வீடு போல் துக்கத்தில் ஆழ்ந்திருந்ததைக் கண்டதும் இவர்களுக்குக் குழப்பம்.

ஒரு வேளை குழந்தை?……என்று மனதில் தோன்றிய எதிர்மறைச் சிந்தனையைப் புறம் தள்ளிவிட்டு மெதுவாக உள்ளே சென்றால், அங்கே அந்தப் பெண், “ஏற்கனவே ரெண்டு பொண்ணுங்க. தினப்படி வாழ்க்கையே கஷ்டமா இருக்குது, இதுல மூணாவதும் பொண்ணு”. என்று அழுது கொண்டே இருந்திருக்கிறாள். இரு வீட்டாரும் பெண் குழந்தை என்று வசை பாடிக் கரித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

கார்த்திக்கும், அவனது மனைவிக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல், குழந்தைக்கான பரிசுப் பொருளைக் கொடுப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில், வாசலில் மூன்று பேர் புதிய முகங்களாகத் தோன்றவே, கார்த்தி எட்டிப்பார்த்திருக்கிறான்.

அப்பெண்குழந்தையை விற்பதற்கான ஏற்பாடு என்பதை அறிந்ததும் கார்த்திக்கும் அவனது மனைவிக்கும் பதட்டம். வெளியில் விற்கப்பட்டுத் தவறான இடத்திற்குப் போய்விட்டால்?…என்ற பயம் தோன்ற, தாங்களே அக்குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாமா என்று ஆலோசனை கேட்கத்தான், வெளியில் வந்து என்னை அழைத்திருக்கிறான்.

எனக்கோ கோபம்! வீட்டு நிலைமை சரியில்லை. மூன்றாவதாக ஆண் குழந்தை பிறக்காதா என்ற ஆசை…. சரி… தவறில்லை....ஆனால் மூன்றாவதும் பெண் என்றால் ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாதபோது எதற்கு இப்படி? அப்படியென்றால், இனியும் ஆண் குழந்தை ஆசையில் பெற்றுக் கொள்ள நினைப்பார்களோ? நான்காவதும் பெண் ஆகிப் போனால் மீண்டும் இப்படித்தானோ?……இப்படியே தொடர்ந்தால்…

.ஹும். என்ன உலகம் இது? நம் மக்களின் பாமரத்தனமான, மூட நம்பிக்கை நம் மக்களை அறிவிலிகள் ஆக்குகிறதே என்ற எண்ண அலைகளுடன், கார்த்தியிடம் எனது கோபத்தையும் வெளியிட்டுவிட்டு…

“கார்த்தி, அனாதைக் குழந்தைன்னா மறுவார்த்தை சொல்லாம “தத்தெடு” னு சொல்லிடுவேன்.. ஆனா இது அப்படி இல்லையே. கார்த்தி! ஒரு குழந்தை அதோட அம்மா அப்பாகிட்ட வளர்ரதுதான் நல்லது. அம்மா அப்பா இருக்கும் போது விற்க நினைக்கறது ரொம்ப அதிச்சியா இருக்கு. உனக்குத் தைரியம் இருந்தா போலீஸ்ல புகார் கொடு….

இல்லைனா வேறு வழி?....ம்ம்ம் உங்க வயசு, உங்க மகன்களின் சம்மதம், அந்தக் குழந்தைக்குப் பருவ வயசு வரும் போது உங்க ரெண்டு பேர் வயசும் 60 ஆகியிருக்கும். அந்த வயசுல கவனமா பாத்துக்க முடியுமா, படிப்பு, எதிர்காலம், உங்க காலத்துக்குப் பிறகு உங்க பசங்க தங்கச்சியா நினைச்சு அன்போடு பாத்துக்குவாங்களா… எல்லாம் நல்லா கலந்தாலோசிச்சு, சட்டரீதியா தத்தெடு”

என்று அரைகுறை மனதோடு சொன்னதும் கார்த்திக்கும் கொஞ்சம் வருத்தம்தான். நான் என் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டேன். போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு நின்ற போது, பெட்டிக்கடையில், பரபரப்புச் செய்தியுடன்  பிரபல இதழின் தாள் தொங்கிக் கொண்டிருந்தது. “குழந்தைகள் விற்பனை. ரூ 6,00,000” என்ற செய்தியைப் பார்த்ததும் மனம் பரபரத்தது. வீட்டை அடைந்ததும் முதல் வேலையாக கார்த்தியை அலைபேசியில் அழைத்தேன்.

“கார்த்தி! தத்தெடுக்கறதுக்கு உண்டான வேலைய உடனே தொடங்கு” என்றதும்

“அக்கா, அதுக்கு அவசியமே இல்லைக்கா. நான் உன்னைக் கூப்பிட உன் நம்பர ட்ரை பண்றேன்…… நீ கூப்பிடற… “

அவன் குரலில் மகிழ்ச்சி. “உன் முதல் விருப்பம்தான் நிறைவேறியிருக்குக்கா”

“அக்கா, உன்னக் கூப்பிட்டுத் தத்தெடுக்கறத சொல்லிட்டு அவங்க வீட்டுக்குப் போனேனா…….அப்போ அவங்க வீட்டு ஜோசியர் வந்திருந்தாரு. அவரு, இந்தக் குழந்தை நல்ல நாள்ல பிறந்திருக்கு. இந்த வீட்டுக்கு நல்லதே நடக்கும். உங்க வீடு லட்சுமிகரமாகும். சுபிட்சம் வரும். இவ பெண்குழந்தை மட்டுமில்ல….”பொன்குழந்தை”, உங்க வீட்டு “பொன்மகள்” னு சொன்னதும், அவங்க முடிவ மாத்திக்கிட்டாங்கக்கா.”

என்றதும், “ஹும்! பாரு கார்த்தி! நம் சமூக அவலத்தை. ஜோசியர் சொன்னதும், அதுவும் பொன்குழந்தைனு சொன்னதும் அதுவரை திட்டு வாங்கின குழந்தைக்குக் கிடைக்கும் மரியாதையைப் பாரு. இல்லைனா அந்தக் குழந்தையோட மதிப்பு சில லட்சங்கள், இல்லைனா குப்பையோடு குப்பையாய்த் தடம் மாறிப் போயிருக்கும்.”

“அக்கா இன்னொரு ரகசியத்தையும் சொல்றேன்” என்று விவரித்தான்

கார்த்தி வெளியில் வரவும் அந்த ஜோசியரும் வெளியில் வந்திருக்கிறார். வந்தவர் கார்த்தியிடம், ”ஹப்பா! தம்பி மனசு என்னமா நிறைஞ்சுருக்கு! ஆண்டவன் உங்க மூலமா வந்து என் கண்ணைத் தொறந்துட்டான். தொழில்ல முதல் முறையா ஒரு பெரிய நன்மை செஞ்சுருக்கேன். இவங்க சொல்லி அனுப்பி அஞ்சு நாளாச்சு, தம்பி. ஆனா இன்னிக்குத்தான் வந்தேன். நான் இன்னும் குழந்தையோட ஜாதகம் கூட குறிக்கல. வந்தப்ப, நீங்க யார்கிட்டயோ பேசிக்கிட்டுருந்ததைக் கேட்டேன். மனசு சங்கடமாகி நான் குழந்தையைப் பத்தி அப்படிச் சொன்னேன். தப்போ, ரைட்டோ ஒரு பெண் குழந்தைய காப்பாத்த முடிஞ்சுச்சு. அப்படிக் கேட்டுருக்கலைனா?? கேக்க வைச்ச அந்த ஆண்டவனுக்கு நான் நன்றி சொல்லணும். தம்பி உங்களுக்கு ரொம்ப நன்றி தம்பி. நீங்க நல்லாருக்கணும்!” என்று கார்த்தியின் கைகளைப் பிடித்துக் கண்கள் பனிக்க நன்றி சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

விவரித்தவன், “பரவாயில்லைக்கா. ஏதோ, இப்படியாச்சும் அவங்க முடிவு மாறிச்சே! உன் விருப்பப்படியே அந்தக் குழந்தை அதோட அம்மா அப்பாகிட்டயே வளரப் போகுதேனு நினைச்சுச் சந்தோஷப்படுவோம்.”

“பொன்மகள்” என்ற ஜோசியரின் வாக்கினால் குழந்தை காப்பாற்றப்பட்டது என்ற நேர்மறை எண்ணமாய் என் மனதையும் சமாதானப்படுத்திக் கொண்டு ஜோசியருக்கும் மனதிற்குள் நன்றி சொன்னேன்! எப்படியோ என் எண்ணம் ஈடேறியதை நினைத்தும் மகிழ்ந்தேன்.

பெண்மகள் “பொன்மகள்” ஆனது பொன்னான ரகசியமாகவே இருக்கட்டும்! பொன்மகளாகவே திகழட்டும்! 

----கீதா