வெள்ளி, 9 நவம்பர், 2018

சொல்முகூர்த்தம்


Image result for bird saying thanks to god

என்னவோ தெரியவில்லை இந்தச் சொல்லை ஸ்ரீராம் எந்த மூகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை மனதை லபக் என்று பற்றிக் கொண்டுவிட்டது. அவரது தலைப்பு - வெல்லும் வார்த்தையும் கொல்லும் வார்த்தையும் தாக்கம் ஏற்படுத்தியதால் உடனே சூட்டோடு சூடாக இதைப் போட்டுவிடலாம் என்று இப்பதிவு. ஏனென்றால், எனது அனுபவங்கள் அப்படியானவை. ஸ்ரீராமின் பதிவின் தொடர்ச்சி எனவும் கொள்ளலாம் அல்லது கோமதிக்காவின் கருத்திற்கு அதை ஆமோதித்து வந்த எனது கருத்திற்கு அங்கு ஸ்ரீராம் பறவைக் கதை என்ன என்று கேட்டிருந்தற்கு பதில் எனவும் கொள்ளலாம். இப்போதைய எனது அனுபவங்கள் பற்றிய பதிவுகள் காத்திருக்கட்டுமே.

குழந்தைகளிடம் பேசுவது எப்படி? இந்த சொல்முகூர்த்தம் எப்படிப் பயனளிக்கும் என்பதையும் சொல்வதாகச் சொல்லியிருந்தேன். ஸ்ரீராமும் எதிர்பார்க்கிறேன் என்று சொல்லிட இங்கு எங்கள் பகுதியில் வசிக்கும் குழந்தைகளிடம் இந்த சொல்முகூர்த்தம் எப்படி வேலை செய்தது என்பதையும் சொல்கிறேன். ஆனால் அது இனி வரும் பதிவுகளில். எச்சரிக்கை: எனவே ஸ்ரீராமிடம் இருந்து காவிக்கொண்டு வந்த சொல்முகூர்த்தம் மற்றும் வெல்லும் வார்த்தைகள் கொல்லும் வார்த்தைகள் கொஞ்சம் தொடரும்! 

என் இள வயதில் பள்ளியில் எனது காட்மதர் மேரிலீலா மற்றும் ஸ்டெல்லா டீச்சர்கள். (YSM-Young Students Movement) இதில் மேரி லீலா டீச்சர்தான் அதிகமாக என்னை வழிநடத்தியவர். அவர் அடிக்கடி சொல்லியது. பிரார்த்தனையிலும் கூட நல்லதே பேச வேண்டும். நேர்மறை எண்ணங்கள் மிக மிக அவசியம். கடுஞ்சொற்கள் கூடா என்பதுதான். 

எபியில் நேற்று நான் இட்ட ஒரு கருத்து. என் இள வயதில் நான் என் ஆசிரியை மேரிலீலாவிடம் கேட்ட கேள்வி. “இறைவனிடம் பிரார்த்தித்தால் நடக்கும் என்று சொன்னீர்களே ஆனால் எனக்கு நடக்கவில்லையே” என்று. அதற்கு அவர் அளித்த பதில்.

ஒன்று நீ அவசரகதியில், பிரார்த்தித்த நொடியில் நடக்க வேண்டும் என்று நினைக்கிறாய். சில விஷயங்கள் நடக்கும் சில விஷயங்கள் நடக்காது. கடவுள், உனக்கு எப்போது அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போதுதான் அது நடக்கும். ஆனால் அதற்காக மனம் சோர்ந்து பிரார்த்தனையைக் கைவிடக் கூடாது.

நான் சொன்ன பிரார்த்தனை என்பது நன்றி உரைத்தல். அப்பிரார்த்தனை  உனக்கு நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும். பாசிட்டிவாக எண்ண வைக்கும் வலிமை தரும். இறைவனுக்கு நன்றி உரைத்துக் கொண்டே இரு. நீ மன்றாடுவதை விட இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அது உன்னை மேலும் நேர்மறையாக மாற்றும் ஏனென்றால் ..மன்றாடுதல் என்பது உன் கண்ணீரைப் பெருக்கும். நீ நன்றி உரைப்பது சந்தோஷத்தோடு.  இறைவனை தூற்றக் கூடாது.

ஒரு பெரியவர் - நாங்கள் அவரை தாடி ஜோஸ்யர் என்போம். அவர் சொல்லுவார். இறைவனை தொழும் போது மனசு சிதறாம இருக்கணும். அம்மை அப்பனை நினைச்சு சந்தோஷப்பட்டு அழகை ரசிச்சு ஐக்கியமாகி தொழு மக்கா. அப்பத்தான் நம்ம தொழுதலுக்கு அர்த்தம் உண்டு. நல்லது நடக்கும் என்று. இதை அடிக்கடிச் சொல்லுவார்.

அதே போல எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் கோயிலில் இறைவன் முன் அழுவார். அதற்கு இதே பெரியவர் சொல்லுவார். இறைவன் முன்ன எதுக்கு கரையற. உன் கஷ்டம் எல்லாம் அவனுக்குத் தெரியும். நீ சொல்லித்தான் அவனுக்குத் தெரியனும்னு இல்லை. காலைல சாப்டியா, இன்னிக்கு பொழுதுல நல்லாருக்கியா. அப்ப அவனுக்கு நாலு வார்த்தை நல்லது சொல்லி துதிச்சுட்டுப் போ. உன்னால எனக்கு நல்லது நடக்குது நான் நல்லாருக்கேனு சொல்லிட்டுப் போ. அதை வுட்டுப் போட்டு கரைஞ்சு கரைஞ்சு கெட்டத வரவழைச்சுக்குவியா. நல்லத நம்ம மனுசங்க பார்க்கறதேல்லை. கெட்டதைத்தான் அதிகம் நினைச்சுகிடறோம். நல்லத பாரும்மா என்பார்.

சிறு வயது என்பதால் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது இவை. அதாவது நம் பிரார்த்தனையில் மனம் சிதறாமல் அது ஒரு நிமிடமானாலும், இருக்க வேண்டும் என்பதும் மகிழ்ச்சியுடன் நன்றி உரைக்க வேண்டும் என்பதும். இதை ஒட்டியதுதான் அந்தப் பறவையைப் பற்றிய கதை. கதை வாட்சப்பில் வந்ததுதான். பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள் இருந்தாலும் அதை இங்கு தருகிறேன்.

Related image

பாலைவனத்தில் ஒரு பறவை மிகவும் நோய்வாய்ப்பட்டு, சிறகுகளை இழந்த நிலையில் சாப்பாடு, தண்ணீர், வாழுமிடம் இல்லாமல் கஷ்டப்பட்டதால் இரவு பகலாக தன் வாழ்வை நினைத்து தன்னைத் தானே சபித்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் வானில் ஒரு புறா பறந்து இப்பறவையைக் கடக்க நேரிடுகையில் இப்பறவை புறாவை நிறுத்தி கேட்டது.

“எங்கு செல்கிறாய்?”

“நான் சொர்க்கத்துக்குச் செல்கிறேன்”

“சொர்கத்துக்கா செல்கிறாய்? அப்படி என்றால், என்னுடைய துன்பங்கள் எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்டுச் சொல்கிறாயா, தயவாய்”

“கண்டிப்பாகக் கேட்டுச் சொல்கிறேன்.”

புறா சொர்கத்திற்குச் சென்றதும் சொர்கத்தின் வாசலில் இருந்த காவல் தேவதையிடம் அப்பறவையின் துன்பங்களை எடுத்துரைத்து அத்துன்பங்கள் எல்லாம் எப்போது தீர்வுக்கு வரும் என்று கேட்டது.

“அதன் வாழ்வில் அடுத்த 7 வருடங்கள்  துன்பங்கள்தான். அந்த 7 வருடங்கள் முடியும் வரை மகிழ்ச்சி என்பதே கிடையாது” என்றதும் புறாவுக்கு வருத்தம். (இதுதான் செவன் பாயின்ட் ஃபைவ்??!!!!)

“அப்பறவை இதைக் கேட்டால் மிகவும் மனம் உடைந்துவிடுவான். இதற்கு ஏதேனும் வழி சொல்ல  முடியுமா?”

“இறைவா எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி! மிக்க நன்றி! - இந்த மந்திரத்தை எப்போதும் தவறாது சொல்லச் சொல்” (ஏழரை சனிக்கான பரிகாரம்!!!!!)

புறா இதை அப்பறவையிடம் தெரிவித்தது.

ஏழு நாட்கள் கழித்து புறா அப்பறவை இருக்கும் இடத்தைக் கடந்து பறந்த போது அப்பாலைவனத்தில் ஒரு சிறு செடி முளைத்திருந்தது. சின்ன குளம் ஒன்று தோன்றியிருந்தது. பறவைக்கு இறக்கைகள் வளர்ந்திருந்தது. பறவை ஆடிப் பாடிக் களித்துக் கொண்டிருந்தது.

புறா மிகவும் வியந்து போனது. அடுத்த 7 வருடங்கள் இப்பறவைக்கு மகிழ்ச்சி என்பதே கிடையாது என்றல்லவா தேவதை சொன்னது! இது எப்படி இந்த 7 நாட்களில் சாத்தியமானது என்று தேவதையிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சென்றது. தேவதையிடம் கேட்கவும் செய்தது.

“உண்மைதான்! அடுத்த 7 வருடங்களுக்கு அப்பறவைக்கு மகிழ்ச்சி என்பதே கிடையாதுதான். ஆனால், அப்பறவை ஒவ்வொரு கடினமான நிலையிலும் “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே இருந்ததால் அதன் நிலைமை மாறத் தொடங்கியது.

அப்பறவை அனல் தெறிக்கும் மணலில் வீழ்ந்த போது “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று சொன்னது. தாகம் எடுத்த போது தண்ணீரில்லாத போது “இறைவா உனக்கு மிக்க நன்றி” என்று சொன்னது. எப்படியான கடுமையான சூழலிலும் அது திரும்ப திரும்ப “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று சொல்லிக் கொண்டே இருந்தது. அதனால், 7 வருடங்கள் என்பது ஏழே நாட்களாகி அதன் துன்பங்கள் ஒவ்வொன்றாகக் குறையத் தொடங்கின” என்றது.

இக்கதை அறிவுறுத்துவது ஒன்றுதான். நமக்கு என்ன இல்லை என்பதையும், துன்பங்களையும் நினைத்து இறைவனிடம் மன்றாடுவதை விட அவர் நமக்கு அளித்திருக்கும் நல்லதை நினைத்து, நம்மிடம் இருப்பவற்றை நினைத்து மகிழ்ந்து நன்றி உரைப்போம் எனும் ஒரு நல்ல நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்பதையே.

இது சற்றுக் கடினமாகத் தோன்றினாலும் மனதில் பதிந்த ஒன்று. மேரிலீலா டீச்சர் சொன்னதும், அந்தப் பெரியவர் சொன்னதும் இதையேதானே என்றும் நினைவிற்கு வந்தது. எனக்கு பல கடின நிலைகளிலும் கடக்க உதவியது இந்த மந்திரம். முயற்சி செய்து பார்க்கலாமே!

நன்றி ஸ்ரீராம் உங்கள் வார்த்தைகளைக் காவிக்கொண்டேன்!

படங்கள் : நன்றி கூகுள்

--------கீதா