ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

என் கண்ணில் பாவையன்றோ.......

https://engalblog.blogspot.com/2018/06/blog-post_12.html  இக்கதையும் தாத்தா பாட்டி படத்திற்கு எழுதி எபி யில் வெளியானதன் சுட்டிதான் இது. தொடர்ந்து என்னை எழுத வைத்து ஊக்கப்படுத்தி உற்சாகப் படுத்தும் எபி மற்றும் ஸ்ரீராமிற்கு மனமார்ந்த மிக்க நன்றிகள் பல.

“நான் உன் மடில சித்த படுத்துக்கட்டுமாடி கோமளா? நேக்கு ஆசையா இருக்கு!”

“எங்கிட்ட என்ன கேள்வி இது? படுத்துக்கலாமே. ஒங்க மடிதானே இது”

கல்யாணமான புதுசுல பதினஞ்சே வயசான கோமளா எம்புட்டு வெக்கத்தோட பதில் சொல்லிண்டே நான் படுத்துக்கறதுக்கு வாகா மடிய வச்சுண்டு என்னை படுக்க வைச்சுண்டா.

நான் இப்படி எத்தனையோ நாள் மனசு சோர்ந்து போறச்சேயும், களைப்பா இருந்தப்பவும் அவ மடில ஸ்வாதீனமா படுத்துண்டுருக்கேன். அவளும் எத்தனை ஆதுரத்தோட என் தலையை வருடிக் கொடுத்துருக்கா. தாய்க்குப் பின் தாரம் னு சொல்லறது சரிதான் போல. அம்மாவோட மடி எத்தனை சுகமோ அதே போலத்தான் இவளோட மடி. அந்த நாளெல்லாம் நினைச்சுண்டா எம்புட்டு சந்தோஷம் வரது. அப்போ படாத கஷ்டமா? எம்புட்டு கஷ்டம் வந்தாலும் கோமளா இருக்கான்னு ஒரு தைரியம் அந்தத் தைரியத்துல ஒரு மனக்களிப்பு. அதுல எல்லாத்தையும் கடந்து வர முடிஞ்சுதே.
  
அப்படிப்பட்டவள் தனக்குனு ஏதாவது கேட்டுருக்காளோனு நினைச்சுப் பாக்கறேன். ம்ஹூம் என் நினைவுக்குத் தெரிஞ்சு ஒண்ணுமே இல்லை. நானோ, குழந்தைகளோ வாங்கிக் கொடுக்கறதுதான். ஆனா அதை எம்புட்டு சந்தோஷமா வாங்கிப்பள். அந்த முகத்துல நிஸ்சலனமான சந்தோஷத்தப் பாக்கணுமே. ஒரு குத்தம் குறை? சொன்னதே இல்லையே.

பாவம். எத்தனைக் கஷ்டப்பட்டிருக்கா. அந்த நாள்ல பெரிசா இருந்த என் குடும்பத்துல வாக்கப்பட்டு அந்தச் சின்ன வயசுலயும் என் அம்மா, அப்பா, அவா அம்மா அப்பா, என் தங்கை, தமக்கைகள் அவா பிரசவம், ஆதரவு இல்லாத சித்தினு எல்லாரையும் கவனிச்சுண்டு, அரவணைச்சுண்டு, அம்புட்டு வேலையும் பாத்துண்டு, இதுக்கு நடுல நா “நேக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்டி” “டி எனக்கு இன்னிக்கு என்னவோ மனசே சரியில்லை” அப்படி இப்படினு சொல்லிண்டு, அவளை சுகிச்சதுல பொறந்த குழந்தைகளையும் கவனிச்சுண்டு எல்லாரோட ஆசைக்கும் ஏத்தபடி சமைச்சுப் போட்டுண்டு, குழந்தைகள், பெரியவா எல்லாருக்கும் இசைஞ்சுண்டு, மனுஷா இருந்தா பிரச்சனைகள் வருமில்லையோ அதையும் சமாளிச்சுண்டு இருந்தாளே தவிர தனக்குனு ஆசை எதுவும் இருந்ததா கூடக் காட்டிண்டதேயில்லையே..

குழந்தைகள் கூடக் கேட்டா, “ஏம்மா எங்களுக்கெல்லாம் விழுந்து விழுந்து உழைக்கிற. எங்க ஆசை அது இதுனு செஞ்சு கொடுக்கற. உனக்குனு ஏதாவது ஆசை இருக்கா இல்லையா? சொல்லுமா நாங்க அதை நிறைவேத்தறோம்”

“நேக்கு எதுக்கு? நீங்க எல்லாம் இருக்கும் போது நேக்கு என்ன வேணும் சொல்லுங்கோ? இதுவே பரம சொர்க்கம். பகவானுக்கு நான் ரொம்பக் கடமைப்பட்டவளாக்கும்.

ஆர் கண் பட்டுதோ. அப்படி இருந்த எங்க குடும்பத்துல இப்படி ஒரு வேதனை வரணுமா? முதல்ல பெரிய பொண் போய்ச் சேர்ந்தா. அப்புறம் மாப்பிள்ளை. அந்தக் குழந்தைகள் எங்ககிட்ட வளர ஆரம்பிச்சுது. அப்புறம் ரெண்டாவது மாப்பிள்ளை. அப்போ அவா குழந்தைகள் வளர்ந்துட்டா. அப்புறம் ரெண்டாவது பொண்ணும் போய்ச் சேந்ததும் குழந்தைகள் எங்களோட வந்துட்டா. அடுத்தாப்புல மாட்டுப் பொண்ணும் போய்ச் சேர்ந்தா. எல்லாரும் 50 வயசுக்குள்ள போய்ச் சேந்துட்டா. பேரன் பேத்திகளை வளத்து கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. பிள்ளை, பிள்ளை வயித்துப் பேரன், மாட்டுப் பொண், குழந்தைகளோட நாங்க இருக்கோம். மத்த பேரன் பேத்தி எல்லாம் அடுத்தாப்புலதான் இருக்குகள்.  

பாட்டிக்கு 80 வயசாம். கொண்டாடணும்னு குழந்தைகள் எல்லாம் வந்துருத்து. அதுகளே கேக் எல்லாம் பண்ணி கோமளவல்லி ஸ்ரீநிவாஸன்னு பேர் எல்லாம் எழுதி வைச்சுதுகள். எங்க ரெண்டு பேரையும் மாலை மாத்திக்கச் சொல்லிக் கொண்டாடி, பாட்டிய எனக்குக் கேக் ஊட்டச் சொல்லி, என்னை பாட்டிக்கு ஊட்டச் சொல்லினு… அப்போ இவ வெக்கத்தைப் பார்க்கணுமே. என் மனசும் அந்தக் காலத்துக்குப் போயிடுத்து. வடை பாயாசத்தோட சாப்பாடு. அமளி துமளி. குழந்தைகள் எல்லாம் ஆர்ப்பரிச்சா. குதூகலிச்சா. அடுத்த தலைமுறை குழந்தைகள்! பாட்டி கிட்ட கேட்டா.

“பாட்டி! நீ உனக்குனு எதுவுமே கேட்டதில்லையாமே. எங்ககிட்டயும் எதுவுமே கேட்டதில்லையே பாட்டி. எங்களுக்கெல்லாம் பாத்து பாத்து செஞ்சுருக்கியே. இன்னிக்கு உனக்கு பர்த்டே. சொல்லு உனக்கு என்ன ரொம்பப் பிடிக்கும்? என்ன ஆசை சொல்லு பாட்டி.”

“உங்க தாத்தாகிட்ட கேளுங்கோ”

“ஓ! பாட்டி நீ தாத்தாக்கு என்னவோ அதுதான் நேக்கும்னு சொல்லுவ! ஒத்துக்கறோம். உனக்கு என்ன வேணும்னு சொல்லு பாட்டினு கேட்டா… இப்பவும் தாத்தாதானா?.”

“நேக்கு ஒண்ணுமே வேண்டாம் கோந்தே. எல்லாம் பகவான் கொடுத்துட்டாரே. உங்களை எல்லாம் விட வேற என்ன வேணும் சொல்லுங்கோ? எங்கிட்ட இத்தனை பாசமான உங்க எல்லாரையும் விட விலை ஒசந்தது என்ன இருக்கு சொல்லுங்கோ இந்த லோகத்துல. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”

“இல்ல பாட்டி இப்பவாவது உன் ஆசை என்னனு சொல்லு ப்ளீஸ்” 

குழந்தைகளுக்கு நன்னா தெரிஞ்சு போச்சு. பாட்டி எல்லார் முன்னாடியும் சொல்லமாட்டானு. குழந்தைகள் எங்கிட்ட தனியா கேட்டதுகள். அவகிட்ட தனியா கேட்டதுகள்.

நேக்கு சொல்றதுக்கு என்ன வெக்கம்? நான் அதுகள் கிட்ட சொன்னேன். “பாவம் உங்க பாட்டி. அவளை என் மடில படுத்துக்க வைச்சு ஆதுரத்தோட தடவிக் கொடுக்கணும். அவ கைய பிடிச்சுக்கணும். இத்தனை நாள் எம்புட்டு சமாளிச்சுருக்கனு.

இவ என்ன சொல்லப் போறாளோனு நான் பார்த்துண்டே இருந்தேன். இவள் சின்ன வயச நினைச்சுண்டாளாம். “நீங்க எல்லாம் சிரிக்கப்படாது. உங்க தாத்தா மடில நா ஆசையா படுத்துக்கணும்” என்று சொன்னாளாம். நான் பாக்கறேன்னு தெரிஞ்சதும் மொகத்தை வேற மூடிண்டுட்டா. முகத்தைப் பார்க்கணுமே. வெக்கத்துல சேப்பா ஆயிடுத்து.

எல்லாம் சேந்து ஒரே கத்தல். ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொன்னோமாம். ஹனிமூன் கப்பிள் அட் 80னு வேற பட்டம் சூட்டிடுத்துகள். அவாளுக்கு நன்னா தெரியும் அவா பாட்டி அவா முன்னாடி என் மடில படுத்துக்க மாட்டானு.

பாட்டிக்குத் தாத்தாவோட தனியா போணும்னு ஆசை இருக்கும்னு எல்லாம் சேந்து திருநெல்வேலிக்கு ரயில்ல டிக்கெட் புக் பண்ணி போற இடத்துல எல்லாம் எங்களைக் கூட்டிண்டு போறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணி, கையில கொடுத்ததுகள்.

“பாட்டி உங்க ரெண்டு பேருக்கும் ரொம்பப் பிடிச்ச ஊர்கள். நீ அடிக்கடி சொல்லுவியே, உனக்கும் தாத்தாவுக்கும் கல்யாணம் ஆன ஊர் திருநாங்கோயில் அதான் மேல திருவேங்கடநாதபுரம்னு……  அந்த ஊருக்கும், தாத்தா ஊரான திருக்குறுங்குடிக்கும்…  உன் ஊரும் தான். ரெண்டு பேரும் கஸின்ஸ் தானே. ரெண்டு பேரும் போயி திருநாங்கோயில்ல தரிசனம் முடிச்சு உன் கல்யாண நாளை நினைச்சுண்டு…  அங்க தாமிரபரணி ஆத்தங்கரை உண்டே  அங்க தாத்தா மடில படுத்துக்கோ. அட! இங்க பாரு பாட்டிக்கு வெக்கத்த…ஹை என்ன சந்தோஷமா?”  

கையில் கேமரா வேற கொடுத்து நாங்க தனியா இருக்கற ஃபோட்டோ வேணும்னு கண்டிஷன் எல்லாம் போட்டு, கட்டிப் பிடிச்சுண்டு, முத்தம் கொடுத்து, “எஞ்சாய் தாத்தா பாட்டி” னு சொல்லி ரயில் ஏத்தி விட்டதுகள். இவள் வெக்கப்பட்டுண்டே என் கையை பிடிச்சுண்டு ரயில்ல ஏறினா.

ஒரு வாரம் ஊர்ல இருந்துண்டு, பகவான் தரிசனம் எல்லாம் நல்லபடியா முடிச்சுண்டு, பழசெல்லாம் நினைச்சுண்டு பேசிண்டு, இதோ திரும்பவும் குழந்தைகள்ட்ட போயிண்டுருக்கோம். இத்தனை வருஷத்துல ஒரு நாளாவது என் மடில அவளா படுத்துண்டுருப்பளோ? இல்லியே. சரி அவதான் படுத்துக்கலை. நானாவது அவளை படுத்துக்கோனு இழுத்துப் படுத்துக்க வைச்சதுண்டோ? வைச்சாலும், அவள் எங்க படுத்துண்டா? என்னைதான் படுத்துக்க வைச்சுப்பள். என்னமோ தெரியலை. எத்தனை உரிமை கொண்டாடியிருக்கேன் நான். ஆனா அவள்? பாவம்!

என்னதான் அவள் சந்தோஷமா இருந்தாலும் குழந்தைகள் எல்லாம் சின்ன வயசுலயே போய்ட்டாளேனு வலியும், வேதனையும் அவ மனசுல வாட்டிண்டுதான் இருக்குன்னு எனக்கு நன்னாவே தெரியுமே. ஆனா, என் மடில படுத்துக்கணும்ன்ற ஆசைய இத்தனை வருஷமா அவ மனசுல பூட்டி வைச்சுருந்துருக்காளே. அவளுக்கு இல்லாத உரிமையா? அதான் இத்தனை வருஷமா என் மடில படுத்துக்காதவள் இன்னிக்கு “உங்க மடில சித்த படுத்துக்கட்டுமா”னு கூடக் கேக்காம அப்படியே படுத்துண்டு அவ ஆசையை நிறைவேத்திண்டுட்டா! எதுக்குக் கேக்கணும்? அத்தனை ஆசை எம்மேல! நீ எழுந்ததும் நிறைய பேசணும்டி கோமு என்று நினைத்தபடியே அவள் மேல் ஆதுரத்துடன் கையை வைத்துத் தடவிவிட்டார், பாட்டியின் உயிர் அவர் மடியிலேயே கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிவதை அறியாமல்.
------கீதா