செவ்வாய், 23 நவம்பர், 2021

பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 2

சாது பொங்கினால்……காடும் ஊரும் கொள்ளாது - 2


https://thillaiakathuchronicles.blogspot.com/2021/11/%20%20%20%20%20%20%20%20%201.html   பகுதி 1


பகுதி 1ல் எங்கள் ஊரில் தண்ணீர் புகுந்ததைப் பற்றி எழுதத் தொடங்கினேன். அதன் படங்கள் மற்றும் காணொளிகளின் சுட்டி (துளசியின் தில்லைஅகத்து யுட்யூப் சானல்) சில இங்குப் பகிர்கிறேன்.

இன்னும் பல படங்கள், காணொளிகள் இருப்பதால் பகுதி பகுதியாக இங்குப் பகிர்கிறேன்.

தேரேகால் வாய்க்கால் வீட்டின் எதிரே - நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளில் இடம் பெறும் பேர் பெற்ற தேரேகால் வாய்க்கால்

இதன் காணொளியின் சுட்டி இதோ

https://www.youtube.com/watch?v=dG9FB2KmEZQ 

எங்கள் ஊரின் வழி செல்லும் தேரேகால் வாய்க்காலில் (அப்பா இருக்கும் (தம்பியின் வீடு - வீட்டிற்கு தொட்டடுத்து ஓடும் தேரேகால் வாய்க்காலில்) தண்ணீர் வரத்து கொஞ்சம் கொஞ்சமாக ஏறியதன் படங்கள் மற்றும் காணொளிகளை இங்குப் பகிர்ந்திருக்கிறேன். வீட்டிலிருந்து பார்த்தாலே தண்ணீர் வரத்து நன்றாகத் தெரியும்.


https://www.youtube.com/watch?v=_BNHjHliAXI

https://youtu.be/m6-JRfTSOr4

https://youtu.be/bbT5WO2b49I

வீட்டின் எதிரே முன்பு சிறிய தாமரைக் குளமாக இருந்த பகுதி

https://youtu.be/2LnO_GAIwsE

https://youtu.be/z0Y13hekIaU

கீழூர் வீடுகளின் பக்கவாட்டுப் பகுதியில் தேரேகால் தண்ணீர் வரத்து அதிகரித்து வீடுகளின் பின்பகுதி வழியும் புகுந்தது

திருப்பதிசாரம் கீழூர், மேலூர் விளக்கம் படங்களுடன் இனி வரும் பதிவுகளில். இரண்டிற்கும் நடுவில்தான் இந்த தேரேகால்.

https://youtu.be/-UC2gqozM7Y

அடுத்த பதிவில் தேரேகால் எப்படி மரிந்து கீழூர், மேலூருக்குள் பாய்ந்தது/புகுந்தது, ஜடாயுபுரத்தை நிறைத்தது, ஊருக்கு மிக அருகில் இருக்கும் பீமநகரி எனும் குக்கிராமத்தில் கிருஷி பாலத்தில் இந்தத் தேரேகால் வாய்க்காலின் நீர் வரத்து, மதகு திறக்கப்பட்டு மறுகால் திருப்பிவிடப்பட்ட படங்கள், உடைப்புகளின் படங்கள், காணொளிகள் எல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்கிறேன்.

இப்பதிவில் அதிகம் எழுத இயலவில்லை. எனவே அடுத்தடுத்த பதிவுகளில் ஊருக்குள் தண்ணீர் வந்ததற்கான படங்களுடன் காரணங்களையும் ஏன் வாய்க்காலின் குறுக்கே உடைத்து விட வேண்டியதானது என்பதையும் சொல்கிறேன்.

இந்தப் பெருமழையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களை விட அதிகம் பாதிக்கப்பட்டவை பயிர்கள் –  வயல், வாழை, ரப்பர் தோட்டங்கள். எங்கள் ஊரில் வயல்களில் நாற்றுகள் பாதிக்கப்பட்டதால் நட்டம் என்று தெரிகிறது. செய்திகளிலும் பாதிக்கப்பட்ட ஊர்கள் பட்டியலில் திருப்பதிசாரத்தின் பெயர் அடிபட்டதாகத் தெரிகிறது.

ஒட்டுமொத்தமாகச் சொல்லப்படும் கருத்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் சமீபகாலமாக நீர் நிலைகளும் அதன் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது/படுவது மற்றும் ப்ளாஸ்டிக் குப்பைகள் என்பதுதான்.

அப்படிச் சொல்லப்படுவது சும்மா வாயளவில். வாய்ச்சொல்லில் வீரர்கள் அவ்வளவே. ஏனென்றால் நடைமுறையில் பூஜ்ஜியம். என்னதான் இவை காரணங்களாகச் சொல்லப்பட்டாலும் காரணத்திற்கு உரிய மக்கள் திருந்தப் போவதில்லை. திருந்தவும் மாட்டார்கள். ஆட்சியாளர்களும் அப்படியே.

குப்பைகளை வாய்க்காலில் கொட்டும் மக்களை என்ன சொல்வீர்கள்? குப்பைகளை அகற்ற பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? ஏதேதோ காரணங்கள்….எனக்குப் புரியவில்லை.

நீரின் பாய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகள் என்னை வருந்த வைக்கவில்லை. வைப்பதில்லை ஏனென்றால் நாம் செய்யும் தவறுகளுக்கான பின்விளைவுகளை நாம் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்! 

சிறிய சிறிய காணொளிகள்தான். நேரம் இருந்தால் பாருங்கள்.


  ------------கீதா



வியாழன், 18 நவம்பர், 2021

பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 1

 

சாது பொங்கினால்……காடும் ஊரும் கொள்ளாது - 1

 

பெங்களூரிலிருந்து என் தாயக ஊராகிய நாகர்கோவிலுக்கு/திருவண்பரிசாரத்திற்குப் பயணம். கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் சென்று கடைசியில் திருப்பதிசாரத்திற்கு என்று திட்டமிட்டப் பயணம். 

பொதுவாகப் பயணத்தின் தொடக்கத்திலிருந்து நம் அனுபவங்களைச் சொல்வோம்.  ஆனால் நான் பயணத்தின் கடைசிப் பகுதியிலிருந்து தொடங்குகிறேன். அதாவது திருவண்பரிசாரத்து அனுபவங்களிலிருந்து குறிப்பாகச் சாது பொங்கிய கதையிலிருந்து தொடங்குகிறேன்.

சாது என்பதற்கு அப்பாவி என்று ஒரு பொருள் உண்டு. அப்பாவியாக இருக்கும் ஒருவர் திடீரென்று ஒரு நாள் பொங்கினால் அந்தத் தாக்கத்தை நம்மால் தாங்க இயலுமா?

சாது - ஞானி/அறிஞர் என்ற பொருளும் உண்டு. ஒரு சாதுவைப் பழித்தால் பின்விளைவுகளை நாம் எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமான காரியம். போட்டுப் புரட்டித் தள்ளிவிடும். 

இங்கு எதற்கு இதைப் பற்றிச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றலாம். காரணம், என்னைப் பொருத்தவரை, இயற்கையும் சாதுதான். நமக்குப் பல தத்துவங்களை, பாடங்களை, அறிவைப் புகட்டும் சாதுவும் கூட.  

இயற்கை அமைதியாக இருக்கும் நேரத்தில் அது நமக்கு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டேதான் இருக்கிறது. நாம் அதைக் கூர்ந்து நோக்கிப் படிக்கத் தவறி பழித்துப் பகைத்துக் கொள்ளும் போதும் கூட அது தன் எச்சரிக்கையை ஓங்கி அறிவிக்கிறது. அதிலிருந்தும் நாம் பாடம் கற்கத் தவறினால் நாம் அழிவை நோக்கி வெகு விரைவாகச் சென்று கொண்டிருக்கிறோம், நம் அழிவு நிச்சயம் என்பதையும் இப்போது எங்கள் நாஞ்சில் நாட்டில் ஏற்பட்ட தண்ணீரின் பாய்ச்சல் சொல்லிச் சென்றிருக்கிறது.

தொடர் மழையில் எங்கள் ஊர்ப் பகுதி ஆறுகள், குளங்கள் உடைந்து தண்ணீர்ப் பாய்ச்சலை நாங்கள் சிறு வயதிலிருந்தே பார்த்துப் பழகியிருக்கிறோம். பயந்ததில்லை. பழித்ததில்லை. ஆனால் சென்ற முறையும், இம்முறையும் எச்சரிக்கை மணியை பலமாக அடித்து எதிர்காலத்தின் பயத்தை எங்களுக்குள் விதைத்துவிட்டுச் சென்றுள்ளது.

இதைத் தான் கல்கி இதழ் நடத்திய போட்டிக்கு நான் எழுதிய கதையில் மறைமுகமாகச் சொல்லியிருந்தேன். அது எபி யில் வெளிவந்தது. அப்போது அதில் சொல்லப்பட்ட சில கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் அதுதான் இப்போது நடந்துள்ளது.

இயற்கையின் நீதிமன்றம், நம் நீதிமன்றம் போன்றதல்ல. அதன் நீதிமன்றத்தில் பணமோ, சட்டத்தின் பொத்தல்களோ பயன்படுத்தித் திறமையாக வாதிட்டு வெல்ல முடியாது. நீதியை மாற்ற முடியாது. இயற்கை தேவதை தன் கண்களைக் கட்டிக் கொள்ள மாட்டாள்.

இயற்கையைப் பழித்து, அதற்கு எதிராக, அதன் வழித்தடத்தை நாம் மாற்ற நினைத்து அதன் வழியில் நாம் எதிர்த்து நின்றால் அழிவு, மரணம் நிச்சயம் என்பதை நம் அரசிற்கும், அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் தற்போதைய நாஞ்சில் நாட்டு தண்ணீரின் பாய்ச்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதை சுட்டிக் காட்டி வலியுறுத்துகிறேன்.

கன்னியாகுமரி மாவட்டம் கேரளமா, தமிழ்நாடா என்ற குழப்பம் இன்னும் அவர்களுக்கு இருக்கிறது போலும்! கவனிக்கப்படாத மாவட்டம். அவர்கள் இதைக் கவனிப்பார்களா என்று தெரியவில்லை. என்றாலும் கவனிக்கக் கோரிக்கை விடுத்து, எங்கள் கிராமமும் சுற்றியுள்ள கிராமங்களையும் அமைப்பையும், காரணங்களையும் அனுபவங்களையும் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.  

நன்றாகக் கவனியுங்கள், நான் ‘வெள்ளம்’ என்று சொல்லவில்லை. தண்ணீரின் பாய்ச்சல் என்றுதான் சொல்லியிருக்கிறேன். தண்ணீரின் பாய்ச்சலை வெள்ளமாக மாற்றிவிடாதீர்கள். அதைப் பின்வரும் பதிவுகளில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

அதுவரை, எங்கள் ஊர் மாறிவிடும் முன் தற்போதைய இப்படங்களைப் பார்த்துக் கொஞ்சம் சந்தோஷப்படுங்கள். இயற்கையோடு ஒன்றுங்கள். (எபியில் ஞாயிறுகளில் எங்கள் ஊர்ப் பகுதி படங்கள் வருகிறதே!!!!)

முதல் படம் ரயில் நாகர்கோவில் ஸ்டேஷனை நெருங்கும் போது எடுத்தது. மற்ற மூன்று படங்களுமே எங்கள் கிராமத்தின் வீடுகளை ஒட்டி இருக்கும் பகுதிகள். அதிலும் கடைசிப் படம் நாஞ்சில் நாடன் அவர்களின் ஊரான வீரநாராயணமங்கலம் செல்லும் ரோடு

இந்த நான்கு படங்களுமும் கிராமத்தின் பகுதிகள். இரண்டாவது படத்தில் ஒரு கட்டுமானம் தெரிகிறது இல்லையா அது நாலுவழிச் சாலை/பைபாஸ் ஊர் வழியாகச் செல்கிறது. வீட்டிலிருந்து 5 நிமிட நடையில்


முதல் இரு படங்களும் நாகர்கோவில் பார்வதிபுரம் கிராமத்தைக் கடக்கும் போது.... அடுத்த இரு படங்களும் எங்கள் ஊரின் மிக அருகில் உள்ள பகுதி. 

-----கீதா