வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

தலக்காடு - 10 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 4

 தலக்காடு12345 , 6 , 7 , 8 , 9

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

கோயிலைச் சுற்றி படங்கள் எடுத்துக் கொண்டே வந்ததைச் சொல்லி வருகிறேன் இல்லையா...தொடர்ச்சி. பின் மண்டபத் தூண்களின் படங்கள் சில...

இச்சிற்பம் சிதைந்திருக்கிற்தோ? வருணனின் விலங்கு மகரம் அது போன்று இருக்கிறது போன்று தோன்றுகிறது ஏனென்றால் இதே போன்ற ஒரு சிற்பம் தெளிவாக வெளிப்புறத்தில் இருக்கிறது அது இதோ....

ஒரு குதிரை முகம் தெரிகிறதா? அதன் அப்புறத்தில் யாளி முகம்?  குதிரையின் மீது வீரர் என்று தோன்றுகிறாது. கீழே யானை... எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்

மேலே இடப்பக்கம் கண்ணப்பநாயனார் நிகழ்வு போல் இருக்கிறது இதே போன்று கொஞ்சம் வித்தியாசமாக, கோயிலின் சைடில் உள்ள வாயிலின் தூண்களிலும் ஒன்று இருக்கிறது தெளிவாக....அது இதோ...


பின் பகுதி தூண்களில் இருப்பவற்றைப் படம் பிடித்துக் கொண்டே வந்ததைச் சொல்லி வருகிறேன் இல்லையா. இப்ப தூண்கள் பகுதியில் இருந்து வலப்புறம் திரும்பினால் கோயிலின் உள்ளிருக்கும் சன்னதிகளின் சுவர் வேலைப்பாடுகளைப் பார்த்துக் கொண்டே படங்கள் எடுத்துக் கொண்டே...  


கோயிலின் உள்ளிருக்கும் கருவறை சன்னதியின் கோபுரத்தின் மூலைப் பகுதியில் இருந்து எடுத்த படம். 
இது சைடில்

வாழைப்பூ தொங்குவது போன்று....

பூத கணங்கள் புடைசூழ நின்றானே 
வேத வித்தகன் ஈசன் மெய்யானானே

பூதகணங்கள் என்போர் சைவம் மற்றும் சாக்த மதங்களில், சிவபெருமானின் சேவகர்ளாகவும், கயிலை மலையின் காவல் தெய்வங்களாகவும் கருதப்படும் பதினெண் கணங்களில் ஒரு பிரிவினர். இவர்கள் குள்ளமான உடல் அமைப்பு, பெரிய கண்கள் மற்றும் தடித்த முகம் போன்ற விசித்திரமான, வடிவங்களைக் கொண்டவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

மெயின் கருவறையின் மேலிருக்கும் விமானம்/கோபுரம். இது இடப்புறம். முன்பு வலப்புறம் உள்ளதைப் போட்டிருந்தேன் 

ஒவ்வொரு தூண் போன்ற செதுக்கல்களிலும் உச்சியில் சிங்க முகம் எவ்வளவு இண்டு இடுக்குகள்! இவற்றுள் பூச்சிகள் சென்று குடித்தனம் நடத்தாதோ? ரொம்பவே பராரிப்பு தேவை. தூணின் கீழே நரசிம்மர் சிறிய சிற்பவடிவில்

இப்படித்தான் ஒவ்வொரு தூண் போன்ற செதுக்கல்களிலும் உச்சியில் சிங்க முகம் மீண்டும் மீண்டும் இப்படியான வடிவங்கள் சுவர் முற்றிலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. அதுவே அழகான கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கிறது.

 

தூண்கள் சந்தித்து மடிந்து இருக்கும் இடத்தில் இரு பக்க சிங்கங்களின் சைடி வடிவங்கள் இணைந்து ஒரே முகம் போன்று! எப்படி எல்லாம் சிந்தித்து படம் வரைவது போன்று செதுக்கியிருக்கிறார்கள்! இப்படிக் கோயிலைச் சுற்றிலும் ஜிக்ஜாக் - ஃப்ரில் வைப்பது போன்ற வடிவில் சுவர் அதில் நுணுக்கமான வேலைப்பாடுகள் பெரும்பாலும் ஒரே வடிவங்கள்தான் மீண்டும் மீண்டும் இருப்பதைப் பார்க்கலாம். அதாவது ஒரு pattern! இவை அப்படியே மண்ணின் அடியிலிருந்து எடுக்கப்பட்டவையா அல்லது தூண்கள் ஆங்காங்கே பிளவுபட்டு அவற்றைச் சீர்ப்படுத்திக் கோர்த்திருப்பார்களா? ஏனென்றால் வாயிலில் பல தூண்கள் கிடப்பதைப் பார்க்க முடிந்தது

இங்கு ஒரு மடிப்பு தெரிகிறதா...இந்த இடத்தில் கொஞ்சம் வித்தியாசமாக அழகாக இருக்கிறது இல்லையா நுணுக்கமான வடிவங்கள் பென்சில் வைத்து கூர் முனையால் சின்ன சின்ன வளைவுகளைச் செதுக்கியது போன்று...

இந்த அழகு மங்கையும் அவளைச் சுற்றியுள்ள வடிவங்களையும் பாருங்க! இதிலும் மடிப்பு மடிப்பாக...


கங்கா தேவி மகரத்தின் மீது இரு பக்கமும் துவாரபாலகர்... இச்சிற்பத்தைப் பார்த்துக்கோங்க இப்ப கீழ போவோம்.... 


.
.இந்த இரு படங்களும் (ஒரே சிற்பம் தான்) கங்காதேவி மகரத்தின் மீது துவாரபாலகர்கள் இரு புறமும்.....ஆனால் முதலில் சொல்லிய சிற்பத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா! வெவ்வேறு சிற்பிகள் செதுக்கியிருப்பார்களோ?

குழந்தையை இடுப்பில் வைத்திருக்கும் பெண் சிற்பம். குழந்தையின் தலையைக் காணவில்லை! யார் என் குழந்தையின் தலையைக் கொய்தது எனக்கு நீதி வேண்டும் என்று கேட்பது போல் இருக்கிறது!

இச்சிற்பத்தையும் கீழே உள்ள மூன்று படங்களில் உள்ளவற்றையும் பாருங்கள்! மேலே குமிழ் போன்று, ஏதோ பல்பு தோரணம் கட்டியது போன்று இருக்கா? இல்லை தாமரை மொட்டுகளைக் கவிழ்த்து தோரணம் போன்று வைத்திருப்பது போல் இருக்கிறதோ? 

முந்தைய படங்களில் காட்டிய அந்தக் குமிழ்கள் உள்ள பகுதியில்தான் இது.  இதனை நான் எடுத்திருந்தேன். ஆனால் சரியாக வரவில்லை எனவே இணையத்திலிருந்து இப்படம்.

கோயிலைச் சுற்றி முன்பக்கம் வரும் முன் வடகிழக்கு கூரை மேலே இது இருக்கிறது. கோயிலின் இடப்புறம். இது நாககர்ண குண்டலமாம். 800-1000 ஆண்டுகள் பழமையானதாம். இக்கோயில் பற்றிய தகவல்களில் இது மிகவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. வளையத்தைப் பாருங்கள் ஒன்றோடொன்று கோர்க்கப்பட்ட ஒற்றை கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட வளையங்கள். ஐந்துதலை பாம்பின் மீது கோர்க்கப்பட்டுள்ளது. வெட்டிக் கோர்க்காமல் எந்தவித வெட்டும் இணைப்பும் இல்லாமல் அப்படியே கோர்க்கப்பட்ட வடிவச் சிற்பமாம். அப்போதைய 10-14 ஆம் நூற்றாண்டு கலைஞர்களின் மிகச் சிறந்த கலைப்படைப்பாகப் போற்றப்படுகிறது!

இன்னும் சில சிற்பங்களுடன் அடுத்த பதிவில் பார்ப்போம்! 


-----கீதா

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

சிவராத்திரி

  

ஜோதிர் லிங்கமாய் பிர்பஞ்சத்தில் எங்கும் சிவமயமாகவும் சிவசக்தியாகவும் நிற்கும் பரம் பொருளுக்கான ஒரு ராத்திரி. மாதமிருமுறை அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் முன் வந்து போகும் பிரதோஷம் விரதம் ஆகின்ற சிவராத்திரி வருடத்தில் மாசி மாதம் வரும் அமாவாசைக்கு முன் வரும் போது மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

தலக்காடு - 9 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 3

  தலக்காடு- 1, 2, 3, 4, 5 , 6 , 7 , 8

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்த பதிவில் கோவிலின் பின்பக்கம் பார்த்தவை படங்களுடன் என்று முடித்திருந்தேன். கோயிலைச் சுற்றி வரும் போது பின் பகுதியில் சிவலிங்க சன்னதி 

இறைவன் லிங்க வடிவில் தெரிகிறாரா? வாயிலில் துவாரபாலகர்கள் சிற்பங்கள். மேலே கஜலக்ஷ்மி இருப்பது வித்தியாசமாக இருக்கிறது

அந்த சன்னதி மண்டபத்தின் தூண்கள்

அந்த சன்னதி மண்டபத்திலிருந்து இறங்கினால் அதனோடு இணைந்து பெரிய மண்டபம்.
அந்த மண்டபத்தில் இருந்த ஒவ்வொரு தூணிலும் சுற்றிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள். இந்த மண்டபத்தில் சிற்பங்கள் விஜயநகரக் கலையாம். 

மார்கண்டேயர் புராணம் சொல்லும் சிற்பம். (நன்றி கோமதிக்கா. கோமதிக்காவிடம் கேட்டுக் கொண்டேன்) 

ஞானமே உருவான ஆஞ்சநேயனும்

பார்த்ததுமே தெரிந்துவிடும். 
இரண்டு நந்தி வடிவமைப்பிற்கும் வித்தியாசம் இருப்பது தெரிகிறதா? 
யாளி வடிவம்(ங்கள்)

சிவகணம்.  இக்கோயிலில் இச்சிற்பத்தை ஆங்காங்கே காணலாம்.

காலன் வரும்முன்னே கண்பஞ் சடைமுன்னே

பாலுன் கடைவாய்ப் படுமுன்னேமேல்விழுந்து

உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே

குற்றாலத் தானை நினை - (பட்டினத்தார்)

ஜல் ஜல் ஜல் எனச் சதங்கைகள் ஒலித்திட

கொல் கொல் கொல் எனத் தலைகளை மிதித்திட

நஞ்சுடை காளியன் நலிந்து மடிந்திட

செஞ்சடையனைப் போல் களிநடம் புரிந்திட!

(நன்றி கவிநயாம்மா) 

பிக்ஷாடன மூர்த்தி (பிட்சாடனர்)? சிவனின் 64 மூர்த்தங்களுள் அழகான வடிவம். இந்தச் சிற்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாக செதுக்கியிருக்கிறார்கள்

அங்கம் தழைக்க அருளும் பரனே!

அடியார்க்கு பிச்சையளிக்கும் இறைவனே!

தங்கும் பிக்ஷாடன மூர்த்தி போற்றி!

தருணமிதே அருள்புரிய வாராய்!

(திருமூலர் மந்திரம்)

 

பொய்ந் நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும், அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறவாமை உயிர் அளிப்பான்,
எந் நின்ற யோனியுமாய், பிறந்தாய்! இமையோர் தலைவா!
மெய் நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே.

(நம்மாழ்வார் பாடல்)

 

குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்*

அன்று ஞாலம் அளந்த பிரான்* பரன்

சென்றுசேர் திருவேங்கடமாமலை*

ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே. 

(நம்மாழ்வார் பாடல்) 


கோயிலின் கருவறையின் பின் பகுதி

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்

காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு

மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

(அபிராமி அந்தாதி)

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் - பரம்

குன்றம் ஏறி நின்று குமரா என்று

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

(கவிஞர் வாலி)

இன்னும் அடுத்த பகுதியில் தொடரும்...


----கீதா