திங்கள், 28 ஏப்ரல், 2014

கலைஞர் ராமனைத் துதித்துப் பாட வேண்டுமாம்!!!!.......?


கலைஞர் அயோத்திக்குச் சென்று, “ஸ்ரீ ராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்”, என ராமனைப் போற்றிப் பாடி வணங்கித் தன் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேட வேண்டுமாம்............


     இதைச் சொன்னவர் திரு. வினோத் பன்சல் எனும் விஎச்பியின் (விஸ்வ ஹிந்து பரிஷத்) ஊடகப் பிரமுகர்களில் ஒருவர்.  இப்படி, இந்து மதத்தவரை எல்லாம், ஏதோ அவர்கள் கட்சியில் தொண்டர்கள் என்று பாவித்து இது போன்ற ஜோக்குகளை அள்ளி வீசுபவர்கள் வட இந்தியாவெங்கும் ஏராளமாக இருக்கிறார்கள்.  இவர்களுக்கு எல்லாம் ஆரிய திராவிட வித்தியாசமோ, சைவ வைஷ்ணவ வித்தியாசமோ, த்வைத அத்வைத வித்தியாசமோ ஒன்றுமே தெரியாது.  இல்லையேல் தங்களின் சுய லாபத்திற்காகத் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் நாவையும், செயல்களையும் கட்டுப்படுத்தாமல் போகும் போக்கில் விட்டால், நம் நாடு ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் போல் மத தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த நாடாகிவிடும்.  இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், இந்துக்கள் அதிகம் வாழும் இடங்களில், இடம் வாங்கி வீடு கட்டக் கூடாது என்பவர்கள், இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குப் போக வேண்டும் என்று சொல்பவர்கள், ராமனை அங்கீகரிக்காத, இறைவனாய் காணாத திராவிடர்கள் ராவணனின் தேசமான இலங்கைக்குப் போக வேண்டும் என்று சொல்லவும் தயங்க மாட்டார்கள்.  அதற்கு முன்னோடிதான் இது போன்ற பிரச்சாரங்கள். 

















     ராமனை அரசனாக, எந்த விதத்திலும் ராவணனை விட உயர்ந்த அரசனாகக் (தன் தங்கை சூர்ப்பனகையை அவமானப்படுத்தியதற்காக பழி வாங்கவே சீதையைச் சிறையெடுத்தார் என்பதும், சீதையைத் தொடவே இல்லை என்பதும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்) காணவிரும்பாத கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாடு இது.  அப்படிப்பட்டவர்கள், தங்கள் கருத்துக்களைச் சொல்ல வேண்டிய விதத்தில், சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாததால்தான் தனி திராவிட நாட்டிற்காக வாதிக்கும், வள்ளுவனுக்கு சிலையெடுத்த, பெரியாரின் பாசறையில் வளர்ந்த கலைஞருக்கு எதிராகவே இப்படிப்பட்டக் கூச்சல்கள் போடப்படுகின்றன. 25 வருடங்களுக்கு முன்பு வரை, சர்வ சாதாரணமாக எல்லோராலும் மேடையிலும், பட்டிமன்றங்களிலும் பேசப்பட்டவைதான், இப்போது கலைஞரைப் போன்ற மூத்த திராவிடர் சொல்லியும் விவாதமாக்கப்பட்டிருக்கிறது.  இனியேனும் இந்துக்களில் ஆத்திகர்களும், நாத்திகர்களும் உண்டு என்றும் (பண்டையகாலங்களில் ஆத்திகர்கள் சார்வாகர்கள் என்றும் அழைக்கப்பட்டிருந்தனர்), ஆத்திகர்களில் ராமனையும், கிருஷ்ணனையும் தெய்வமாகக் காணும் வைஷ்ணவர்களும், சிவன், சக்தி முருகன், பிள்ளையார் போன்றத் தெய்வங்களை வணங்கும் சைவர்களும் உண்டு எனும் உண்மையை நிலை நாட்ட வேண்டும்.  இல்லையேல், “ராம் ராம் என்று கையிலோ, மார்பிலோ, முதுகிலோ, நெற்றியிலோ பச்சைக் குத்தாதவர்கள் இந்துக்களாகக் கருதப்படமாட்டார்கள் என்றும், (இப்போதும் பிரச்சினை வந்துவிட்டால் ஆரியசமாஜம் வழங்கும் மதச் சான்றிதழ்கள் இந்துக்கள், தாங்கள் இந்துக்கள்தான் என்று நிரூபிக்கத் தேவையாம்) அவர்கள் இந்துக்கள் அதிகமாக வாழும் பகுதிக்கோ, கோவில்களுக்கு உள்ளிலோ அனுமதிக்கப்படாமல் போகலாம். மதத் தீவிரவாதம் எந்த மதத்தவருக்கு வந்தாலும் நம் நாடு சீரழிந்துவிடும்.  மத சார்பற்ற இந்தியா என்றென்றும் மத சார்பற்றுத் திகழ, நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்றமட்டும் பேசி, எழுதி, போராடி, அடுத்து வரும் தலைமுறையினர் சமாதானத்துடன் இங்கு வாழ வழி வகை செய்ய வேண்டும்.


படங்கள்:  courtesy கூகுள்

திங்கள், 21 ஏப்ரல், 2014

ஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

பாரதிராஜா


மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் சிறந்த மாநில நடிகருக்கான விருது கொடுக்காமல், சிறந்த மாநில நகைச்சுவை நடிகருக்கான விருது கொடுத்தது சரியா என்ற கேள்விக்குச் சொன்ன பதில் தான், இப்படித் திரைப்பட விருதுகளையும், நீதிமன்றங்களின் தீர்ப்புக்களையும் இணைத்துப் பேச வைத்திருக்கிறது. 

ஃபகத் ஃபாசில்

“இது (மாநில திரைப்பட விருது வழங்கும் குழு) ஹைகோர்ட்டுன்னு நினைச்சுக்குங்க அது (தேசிய திரைப்பட விருது வழங்கும் குழு) சுப்ரீம் கோர்ட்டுனு நினைச்சுக்குங்க. ஒரே கேசுலயே பல நீதிபதிகள், பலவிதமானத் தீர்ப்புக்கள் வழங்குவது இயல்புதானே? அப்படி எங்கள் கணிப்பில் மாநிலத்தின் சிறந்த நடிகருக்கான திரைப்பட விருது ஃபகத் ஃபாசில்லுக்கு கொடுத்திருக்கிறோம்.

சுராஜ் வெஞ்ஞாரமூடு- பேரரியாத்தவர்


மட்டுமல்ல, சுராஜுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த, திரு டாக்டர் பிஜுவின் “பேரரியாத்தவர்எனும் படம், தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அது சுற்றுபுறச் சூழல் பற்றிய திரைப்படங்களின் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தது. இங்கு, மாநில விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் அப்படி ஒரு பிரிவே இல்லை.  போதாததற்கு தேசிய விருது பெற்ற நடிகருக்கு அது கிடைத்த ஒரு காரணத்தை மட்டும் வைத்து விருது வழங்கினால், எங்கள் தீர்ப்பு தனித்தன்மை இல்லாத பலவீனமான ஒன்றாகிப் போகுமே?!.....கமிட்டி மிகவும் நேர்மையான முறையில் செயல்பட்டிருக்கிறது என்பதற்கு இது நல்ல ஒரு அத்தாட்சிதானே? இப்படி அவர் மிகவும் தெளிவாகப் பேசி வீணான சந்தேகங்களுக்கு இடமில்லாமல் செய்திருக்கிறார்.

CR NO - 89      இயக்குநர் - சுதேவன்


சரிதான்.  கமிட்டி நேர்மையாகச் செயல்பட்டதால்தான், மாநிலத்தின் சிறந்த திரைப்படமாக சுதேவனின் “க்ரைம் நம்பர் 89 எனும் படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் இயக்குனரான, பட்டாம்பிக்காரனான சுதேவன் எனும் சாதாரண மனிதனின் உழைப்பும், திறமையும், அதனால் விளைந்த அவரது வித்தியாசமான இந்தப் படமும், ஏராளமான பெரிய முகங்களுக்கும், சத்தங்களுக்கும் இடையே காணாமல் போகாமல், கண்டுபிடிக்கப்பட்டு சிறந்த திடைப்படத்திற்கான விருதையும் பெற்றிருக்கிறது.  இப்படத்தில் நடித்த அசோக்குமார் எனும் சாதாரண மனிதனும் அதனால்தான் சிறந்த இரண்டாவது நடிகருக்கான விருதை வென்றிருக்கிறார்.  இந்த அசோக்குமார் தற்போது பாலக்காடு அருகே உள்ள ஒரு சிவன் கோவிலில் சிற்பங்களைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார்.  இவர்களுக்குத் துணையாக பெரிங்கோடு எனும் இசையை உயிராகப் போற்றும் கிராமமும் அங்குள்ள மனிதர்களும் துணையாக நின்று அத் திரைப்படத்தை திரை உலகிற்கு வழங்கியிருக்கிறார்கள். பாரதிராஜா போல் கிராமங்களின் உயிர்த் துடிப்பை அறிந்த ஒருவரால்தான், இது போன்ற சிறந்த படங்களுக்காக வாதித்து அவற்றிற்குரிய அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுத் தர முடியும்.  இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல நாவலோ, கதையோ எழுத முடியும் என்பது போல், ஒவ்வொருவருக்கும் (ஆர்வமும், திறமையும், உழைக்கும் திறனும் உள்ள ஒவ்வொருவருக்கும்) ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கி உலகிற்குத் தரமுடியும் என்பதுதானே,  இதை எல்லாம் பார்க்கும் போது நமக்கு புலப்படும் உண்மை.  ஆனால், இதில் கடினமான வேறு ஒரு விஷயம் என்னவென்றால், சிறந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழு மற்றும் குழு உறுப்பினர்களின் கண்களுக்கு எல்லாவற்றையும் தெளிவாகவும், கூர்மையாகவும் காணும் திறனும் இருக்க வேண்டும்.  மட்டுமல்ல, நல்ல திரைப்படங்கள் அவர்கள் கண்களில் படும்படியாக, இது போன்ற போட்டியின் போது காண்பிக்கப்பட ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.  அதற்கு எல்லாம் வல்ல இறைவன் தான் அருள வேண்டும்.  

திங்கள், 14 ஏப்ரல், 2014

வாழத் தெரியாத ராஜீவ்
               


எங்களாலால இனிமேலாம் அமைதியா, பேசாம இருக்க முடியாது.  பொறுமை போயிடுச்சி. ல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்குல.  உண்மைச் சொல்லணும்னா, பிரேத பரிசோதனைக்கு கவர்ன்மண்டு ஆசுபத்திரிக்கும் அப்புறம் சுடுகாட்டுக்கும் எடுத்துட்டு போற  இந்த சவம் பத்தாவது சவம் தெரியுமா.? உங்களுக்கெல்லாம் எங்க தெரியபோகுது?.

இது சுதாகரன் என்பவரின் வார்த்தைகள்.  சுதாகரனின் மனைவி, கேரளாவில் மலப்புரம் மாவட்டத்திலுள்ள ஊர்ங்காட்டிரி பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினர்.  ஆகையால், சுதாகரன் அந்தப் பஞ்சாயத்தில் மிகவும் இன்றியமையாத ஒரு நபர்.  சீருந்தை நிறுத்தி இறந்து போன ராஜீவின் வீட்டிற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று நாங்கள் கேட்ட போது அங்கு இருந்த ஒரு மளிகைக் கடைக்காரர் சுதாகரனைக் கை காட்டி விட்டார்.  சுதாகரன் அப்போது, அருகிலுருந்த ஒரு தேநீர் கடையில் கட்டன் சாயாஎன்று கேரளாவில் சொல்லப்படும் பால் கலக்காத கருந்தேநீர் குடித்துக் கொண்டிருந்தார்.  நாங்கள் ராஜீவ் என்ற வார்த்தையை உச்சரித்த உடனேயே அவர் கொந்தளித்து,
    



ஆமா, நீங்கல்லாம் ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தீங்க?  செத்த பாடி கிடைக்க இன்னும் ரெண்டு மணி நேரம் ஆவும்.  அதுவரைக்கும் உங்களால காத்துக் கிடக்க முடியுமாதுக்காக நீங்கல்லாம் கஷ்டப்படணும்?  நாங்கதான் கையாலாகதவங்கஇந்த மாதிரி மோசமான கொடுமைக்கெல்லாம் துணை போயி கஷ்டப்படணும்னு விதி. .எதுக்குமே உபயோகமில்லாம பொறந்துருக்கோம்.  இது மாதிரி செத்துப்போன சவங்கள முதுவான் குடியிருப்பிலிருந்து இந்தத் தாலுகா ஆசுபத்திரிக்கு பிரேத பரிசோதனைக்குக் கொண்டு வரணும்னு எங்க விதி.  நாங்க இந்தப் பிரேத பரிசோதனை செய்ற டாக்டருங்களுக்கும் அப்புறம் இந்தப் பிரேதங்களைக் கொண்டு வந்து ஸ்ட்ரெச்சர்ல போட்டு திரும்பக் கொண்டு போற அந்த ஆளுங்களுக்கும் லஞ்சம் கொடுக்க பணம் பொரட்டணும்.  அப்புறம் இந்தப் பாடிங்களக் கொண்டுபோயி அடக்கம் செய்யோணும். ஆனா, நாங்க இப்போ முன்ன மாதிரி கிடயாதுஎங்களுக்கும் எல்லாம் தெரியும்.  அதனால, நீங்க சாமர்த்தியமா எங்களை ஏமாத்த முடியாது.  இந்தப் பையனுக்காக நாங்க செலவழிக்கர ஒவ்வொரு காசும் எங்களுக்கு வந்தாகணும்.  இந்த ஆதிவாசிப் பையனைப் புதைக்கறதுக்கு ஆகுற செலவெல்லாம் கிடக்கறதுக்குள்ள ரூலஸ் உங்க கையில உண்டுனு எங்களுக்குத் தெரியும் என்று கொந்தளித்துக் கொண்டு இருந்தவர்க்கு, அவர் நினைத்திருந்தது போன்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் அல்லர், நாங்கள் ராஜீவ் படித்து வந்த பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் என்று தெரிந்ததும் அதிர்ந்து விட்டார்.  அவர் மனம் சங்கடப்பட்டு விட்டது.  அந்த நிமிடத்திலிருந்து எங்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்.  செங்குத்தான மலை மேலிருந்த ராஜீவின் வீட்டிற்கு வழி காட்ட எங்களுடன் வரவும் செய்தார்வழியில் வரும்போது தன்னுடைய முட்டாள் தனமானப் பேச்சிற்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டே வந்தார். ராஜீவின் வீட்டை அடைய இருபது நிமிடங்கள் ஆனது.



ந்த மயிலாடிக் குடியிருப்பு நான் இதுவரை பார்த்த ஆதிவாசிக் குடியிருப்புகளில் இருந்து சற்று வித்தியாசமாக இருந்தது.  ராஜீவின் வீட்டிற்கு அருகில் எந்த வீடுமே தென்படவில்லை.  அருகில் என்பது தோராயமாக இருநூறு மீட்டர்  தள்ளித்தான் இருந்தது.  ராஜீவின் உடல் தூக்குப் படுக்கையிலேயேதான் இருந்தது.  மலை அடிவாரத்திலிருந்து இந்த உடலை மலை மேல் கொண்டு வருவதற்கு அந்த ஊழியர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று மலைத்தோம்.



ராஜீவின் முகம் பார்த்ததும் எனக்கு அவன் எட்டாம் வகுப்பு இ பிரிவில் கடைசி விசுப்பலகையில் உட்கார்ந்திருந்த நினைவு வந்தது.  நான் அவனுக்குப் பாடம் நடத்தவில்லை என்றாலும், சீருடை, பேருந்தில் செல்வதற்கானக் கட்டணங்களைப் பெறுவதற்காகச் சென்றிருக்கிறேன்.   எனக்கு நன்றாக நினைவுள்ளது.  அவன் நல்ல ஆரோக்கியமான பையனாக இருந்தான். 



ஆனால், அவன் அம்மாவும், அவனுடைய இரண்டு சகோதரர்களும், ஒரு சகோதரியும் மிகவும் நலிந்திருந்தார்கள்.  அவர்களுடைய பெரிய கண்களில் வருத்தத்தை விட பயமே மிகுதியாக இருந்தது.

    இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மொத்தமே பதினைந்து பேர்தான் கூடியிருந்தனர்.  யாரோ ஒருவர் வந்து சுதாகரனிடம் சவக் குழி தோண்டியாகி விட்டதாகக் கூறினார். சுதாகரன் ராஜீவின் அம்மாவிடம் வேறு ஏதாவது சடங்குகள் செய்வதற்கு உள்ளதா என்று கேட்டதற்கு எதுவும் இல்லை என்று கூறி விட்டாள்.  அவர் ராஜீவின் அம்மாவை சிறிது தண்ணீராவது அவன் வாயில் ஊற்றும்படி சொன்னதற்கு, அதுவும் தேவை இல்லை என்று சொன்னார்.



பின்னர் சுதாகரனும் அவருடைய நண்பர்களும் உடலை சவக்குழிக்கு எடுத்துச் சென்றனர்.  எங்களது கண்கள் கண்ணீரால் நிரம்பியது.  ஆனால், ராஜீவின் அம்மாவின் கண்களில் ஒரு துளிக் கண்ணீர் கூட வர வில்லை என்பது எனக்குச் சற்று விசித்திரமாக இருந்தது. அப்பெண்மணி உள்ளே சென்று ராஜீவின் சீருடைகள், பள்ளிப் பை முதலியவற்றைக் கொண்டுவந்து,


தெல்லாம் சவக்குழியில விட்டெறிஞ்சுருங்க.  எங்களுக்கு அவனுக்குச் சொந்தமானது எதுவும் வேண்டாம்.”  என்றாள்.

ஏன் ராஜீவ் தற்கொலை செஞ்சுகிட்டான்?என்று அவன் அம்மாவிடம் கேட்டேன்.  நாங்களும், அவன் அம்மாவும், மற்ற குழந்தைகளும் மட்டுமே அங்கு இருந்தோம்.


எனக்கு எப்படித் தெரியும். அவன் ரொம்ப அடம் பிடிக்கறவன்.  என்னய என்ன செய்யச் சொல்லுறீங்க?என்பது அவன் அம்மாவின்  பதிலாக இருந்தது.  “நேத்தைக்கு நான் வெடிக்காலம் எந்திரிச்சு பார்த்தப்போ அவென் இந்த முந்திரி மரத்துல தொங்கிக்கிட்டிருந்தான்.



ராஜீவ் தங்கியிருந்தப் பள்ளிக்கூட ஹாஸ்டல் ஓணம் விடுமுறைனால மூடியிருந்திச்சு. ஓணம் விடுமுறை முடிஞ்சதும் அவன் பள்ளிக்கூடத்துக்கு வந்திருந்தான்னா இந்த மாதிரி அவனுக்கு நடந்திருக்காது.” என்பது எங்களுடன் வந்திருந்த சசி என்பவரின் கருத்து.  இவர் பள்ளி விடுதியின் உணவகத்தில் வேலை செய்பவர்.


சுதாகரனும் அவரது நண்பர்களும் ஈமச் சடங்குகளை முடித்துவிட்டு திரும்பி வந்தனர்.  நான் ராஜீவின் அம்மாவிடம் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்க எண்ணிய போது சுதாகரன் என்னைத் தடுத்தார்.

            “நீங்க அவன் அம்மா  கையில கொடுத்தீங்கன்னா கள்ளுக் கடைக்குப் போயி குடிப்பா.  இல்லைன்னா அதை வே வழி செலவாக்கிட்டு, இல்லன்னா தொலைச்சுட்டு நம்மகிட்ட வந்துட்டு கெட்ட வார்த்தைல கத்துவா.  நீங்க அவங்ககளுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சா என்னோட வாங்க.  மலை அடிவாரத்து ஒரு கடை இருக்குதுஅங்க போயி அரிசி, பருப்பு, சர்க்கரை மாதிரி ஏதாச்சும் வாங்கிக் கொடுங்க.


நாங்கள் ராஜீவின் அம்மாவிடம் அவன் சகோதரர்களை எங்களுடன் அனுப்பச் சொன்னோம்.  அவர்களும் எங்களுடன் வந்தார்கள்.  போகும் வழியில், ராஜீவ் ஏன் தற்கொலை செய்து கொண்டான் என்று சுதாகரனிடம் கேட்டேன்.

எங்களாலால இனிமேலாம் அமைதியா, பேசாம இருக்க முடியாது.  பொறுமை போயிடுச்சி. ல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்குல.  உண்மையைச் சொல்லணும்னா, பிரேத பரிசோதனைக்கு கவர்ன்மண்டு ஆசுபத்திரிக்கும் அப்புறம் சுடுகாட்டுக்கும் எடுத்துட்டு போற  இந்த சவம் பத்தாவது சவம் தெரியுமாஉங்களுக்கெல்லாம் எங்க தெரியபோகுது?..  இது தற்கொலைன்னு எல்லாரும் நினச்சு பேசிக்கராங்கஆனா இது தற்கொலைலாம் இல்ல.  இது இரத்தத்தை உறைய வைக்க பயங்கரமான ஒரு கொலை.  அதில எந்த சந்தேகமும் கிடயாது.   பொணம் தொங்கிட்டுருந்துச்சுனு சொல்ற அந்த மரம் அந்த முந்திரி மரத்தைப் பாத்தீங்களா



அந்த மரம் இந்தப் பையனோட உடம்பத் தாங்குமாயா? சொல்லுங்க.  அதுவுமில்லாம, கொஞ்சமும் சக்தியே இல்லாத இந்த அம்மாவும், அந்தப் பிள்ளைங்களும் அந்தக் கயித்தை அறுத்து உடம்பக் கீ கொண்டுட்டு வந்தாங்களாம்இத நம்பணுமாம்.  நல்ல கதை. இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமாயா?.  நாங்க அவ ஆசுபத்திரிக்கு எடுத்துட்டு போனப்போ அவனோட பிறப்பு உறுப்பும், விரையும் சிதஞ்சு, அறுபட்டுருந்ததப் பாத்தோம்.  ஒரு பையன் அவன் தற்கொலை செஞ்சுக்கணும்னு நினைசப்புறம், செய்றதுக்கு முன்னாடி தன்னோட பிறப்பு உறுப்புகளை அறுத்து சிதக்க அவனுக்கென்ன பைத்தியமா புடிச்சுருக்கு? இந்த மலைக்குப்  பெரிய்ய்ய ஆளுங்கல்லாம் வெல உசந்த, சொகுசான  காருங்கள்ள அடிக்கடி வந்து போறாங்க.  அதுவும் ராத்திரிலதான்.  முன்னாடில்லாம் வேட்டையாடறதுக்கு பெரிய வீட்டு மனுஷங்களும், ராஜாக்களும் அந்த குடும்பத்தைச் சேந்தவங்களும் வந்துட்டு போவாங்க.  இப் பணக்காரங்க, பெரிய மனுஷங்க எல்லாம் வரத்தொடங்கிருக்காங்க.  அவங்க துப்பாக்கில்லாம் கொண்டு வரது கிடயாது.  சாராயமும், போதை மருந்துமாத்தான் வந்து இறங்கறாங்க. இங்க இருக்கற ஆதிவாசிப் பொண்ணுங்களையும், சின்னப் பொண்ணுங்களையும் சொல்றதுக்கே வெக்கமாவும், கோபமாவும் வருது. கற்பழிச்சு அழிக்கிறாங்க. எல்லாரையும் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனா கூட தப்பிலனு தோணுது.  எத்தனை அழுகிப் போன பொணங்களை இங்க கண்டெடுத்து,  பிரேத பரிசோதனைக்காக கவர்ண்மென்டு ஆசுபத்திரிக்கும் அப்புறம் அடக்கம் செய்றதுக்கும் கொண்டு போயிருக்கோம் தெரியுமாஎல்லாமே ரொம்ப மோசமான மொறையில கற்பழிக்கப்பட்ட உடம்புங்க.  ராஜீவோட அம்மா இதுக்கெல்லாம் கோபப்பட்டு, கேள்வி எதுவும் கேக்க மாட்டா.  அவளுக்கு  இதெல்லாம் பழகிப் போச்சு.  போலீசு வந்து விசாரிச்சாலும் யாரும் உண்மையைச் சொல்லிட மாட்டாங்க.  ஒண்ணு இவங்க அவங்களுக்குப் பயப்படறாங்க  இல்லன்னா அவங்க இவங்களுக்கு சாராயம், போதை மருந்து எல்லாம் கொடுத்து வாயை அடச்சுடறாங்க.

நீங்க ராஜீவோட அம்மாவைப் பாத்தீங்கல்ல?  அவன் அம்மாவுக்கு நல்லாத் தெரியும் தன் மகனுக்கு என்ன நடந்துச்சுனு.  ஆனா, அவன் அம்மா , த்த பிள்ளைங்களுக்கு நடந்தாலும் கூட எதையும் சொல்ல மாட்டா.  இப்படித்தான் கஷ்டப்படணும், விதினு நம்புறா.  அவன் அம்மா  உயிரோடு இருக்கறதுக்கு காரணமே இந்த அடிமை புத்திதான். 

   
    ஒருநா காலை ராஜீவோட அப்பா  நாடி, ஒரு ஓடைக்குப் பக்கத்துல பொணமாக் கெடந்தாரு.  அவரு  செத்தப்புறம் இந்தக் வெறியனுங்களுக்கு சுதந்திரம் கூடிப்போச்சு.  நாடிதான் இவனுங்களைலாம் எதிர்த்துப் போராடினாரு .  போன வாரம், ராஜீவ், இந்த வெறியனுங்களை அவன் அம்மாகிட்ட தப்பா நடந்துக்க வந்தப்ப கத்தியால மிரட்டி விரட்டினான்னு சொல்லிக் கேட்டோம்.  அதனால அவனுங்கதான் இவனைக் கொன்னு போட்டுருக்கணும்னு நினைக்கறோம்.  தெல்லாம் எங்களால இனியும் பொறுத்துகிட முடியாது.  தெ அரசியல் கட்சித் தலைவர்கள் கிட்டயும், மேலிடத்திலயும் கம்ப்ளைன்ட் லெட்டரு கொடுக்கணும்.  இப்படியே இதெ போக விட்டம்னா இந்த வெறியனுங்க  நாங்க குடியிருக்கற இடத்துக்கும் வந்துடுவானுங்க.  பொறகு இந்த ஆதிவாசிப் பொண்ணுங்களுக்கு வந்த கெதிதான் எங்க வீடுகள்ல இருக்கற பொண்ணுங்களுக்கும் நடக்கும்.  நாங்க ஏற்கனவே பல கட்சிகள்ல இருக்கற இளைஞர் அமைப்புகிட்ட பேசி, வங்காளிகளுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும், சிரியா நாட்டு மக்களுக்கும், எகிப்தியர்களுக்கும் நடக்கற கொடுமைங்களுக்கு எதிரா போராடறதுக்கு பதிலா, நம்ம இடத்துல எங்களுக்கு நடக்கற இந்த கொடுமைங்களுக்கு எதிரா போராடணும்னு கெஞ்சிக் கேட்டுருக்கோம். என்ன நடக்குதுனு பாப்போம்இல்லனா நாங்களே போராட்டத்துல இறங்க வேண்டியதுதான்” 

சுதாகரனின் இந்த வார்த்தைகள் எங்கள் மனதிலும் போராடும் உணர்வைத் தூண்டியது.  நாங்கள் சுதாகரனை மிகவும் பாராட்டிவிட்டு அவர் நடத்தும் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்தினோம்.  அந்த மலையில் இன்னும் சிறிது நேரம் இருந்து ரசிக்க முடியாததற்கு வருந்தி, ஏக்கத்துடன், மனம் இல்லாமல் வீட்டிற்குப் புறப்பட்டோம்.  புறப்படும் முன் ராஜீவின் குடும்பத்திற்கு அரிசி, சர்க்கரை மற்றும் மளிகைப் பொருட்கள் கொடுத்தோம்.  எங்கள் மனம் இன்னும் அந்த மலையையேச் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.  அந்த மயிலாடி மலைக்கு, நல்ல உள்ளமும், அநீதியை எதிர்த்துப் போராடும் துணிவுள்ள மனிதர்கள் ஏராளமாகத் தேவைப்படுகின்றனர்.  அப்பொழுதுதான் நாம், அந்த முதுவான் குடியிருப்பு ஆதிவாசி மக்களை அந்த மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மயிலாடியிலுள்ள காமவெறியர்களிடமிருந்துக் காப்பாற்றப் போராட முடிவெடுத்திருக்கும் சுதாகரனுக்கு வேண்டிய தார்மீக ஆதரவும் , முடிந்த உதவிகளும் கொடுக்க முடியும்.  சுதாகரனைப் போன்ற நபர்கள் நம் சமுதாயத்திற்கு மிக அவசியம்.

இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் நாடிக்கு நடந்தது போன்ற ஒரு கொடூரமான முடிவு சுதாகரனுக்கு ஏற்படக் கூடாது என்று இறைவனை வேண்டிக் கொள்ள வேண்டுகிறோம்.


ப்டங்கள்: கூகுள்

பின் குறிப்பு: இது ஒரு மீள் பதிவு!  இந்தக் கதையின் தொடராக, இக்கதையின் கருவை உட்படுத்தி, மையப்படுத்தி, ஒரு குறும்படம், ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதிகளில் இயக்கப்பட இருக்கின்றது.  அதில் நம் எல்லொருக்கும் நன்றாகத் தெரிந்த, அனுபவமும், எழுத்துத் திறமையும் மிக்க, பன்முகத் திறமைகள் கொண்ட பதிவர்கள் மிகவும் ஆர்வமுடன், தங்கள் பணிகளுக்கு இடையில், பொன்னான நேரத்தை ஒதுக்கி, எங்கள் குறும்படத்தில் கதாபாத்திரங்களாக உயிர் கொடுத்து வலம் வர இசைந்துள்ளார்கள்! அவர்கள் எல்லோருக்கும் எங்கள் முதற்கண் நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம்!
இதை வாசிக்கும் அன்புள்ளம் நிறைந்த வாசகர்கள், எங்கள் எல்லோரையும், இந்தக் குறும்படம் நல்ல முறையில் வெளிவருவதற்கு, வாழ்த்தி, நல் ஆசிகளை வழங்க வேண்டிக் கொள்கின்றோம்!

எல்லா வாசகர்களுக்கும், எங்கள் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!