வழக்கமாக வரும் குறுஞ்செய்திகள், மின் அஞ்சல், ஏன் காலை
வணக்கம் கூட இன்று வரவில்லை என் தோழியிடமிருந்து! ஏன், என்னாயிற்று என்று எனக்கு
ஆச்சரியமாக இருந்தது! ஏனென்றால், தோழி அப்படிப்பட்ட நபர் அல்ல! எனக்கு சுடச் சுடச் செய்திகள், பதிவுகளுக்கு
என்ன பின்னூட்டம் வந்திருக்கிறது, யார், யார் புது இடுகைகள் போட்டிருக்கிறார்கள்,
நாங்கள் என்ன பின்னூட்டம் தர வேண்டும் என்று பல செய்திகள் தரவில்லை என்றால்
அவருக்குத் தலை அந்தச் சூட்டிலேயே வெடித்துவிடும்! எனவே, நான் அவரை அழைத்தேன்!
“என்னாச்சு? இன்று
இப்படி ஒரு மௌனம்?”
“அதை ஏன் கேட்கிறாய! நேற்று நாம் போட்ட பதிவு யாரை
பாதித்திருக்கிறதோ இல்லையோ நம் மதுரைத் தமிழனைப் பாதித்திருக்கிறது! இன்று அதிகாலை
வழக்கம் போல், என்ன பின்னூட்டங்கள் வந்திருக்கிறது என்று பார்க்க நம்
வலைப்பூவைத் திறந்தால், ஒரே உப்பு!! என்ன இது என்று பார்த்தால், நம் மதுரைத்
தமிழன் நேற்று முழுவதும் வடித்த ரத்தக் கண்ணீர்...ஸாரி உப்புக் கண்ணீர் காய்ந்து
போயிருந்தது! கூடவே ஒரு செய்தியும்! இதைப் படி
“லேகா தன்னிடம்
இருந்த 2 கிட்னியில்
ஒன்றைத்தான் கொடுத்து இருக்கிறார் ஆனால் நானோ என்னிடம் இருந்த ஒரு இதயத்தை என்
மனைவிக்கு கொடுத்துவிட்டேன். அதை வாங்கி வைத்து கொண்டு என் மனைவி என்னை நோக்கி நீ இதயமே இல்லாத அரக்கன்
என்று சொல்லி அடிக்கிறாங்க இதுக்கு நீங்கள்தான் நியாம் சொல்லி பதிவு போட வேண்டும்”
காரணம் புரிந்தது! எனக்கும் தோழியின் வருத்தம் தொற்றிக்
கொண்டு விட்டது! தோழியும், நானும், இவ்வளவு தூரம் நம்மை நம்பி, நம் மதுரைத் தமிழன்
நியாயம் கேட்கும் போது நாம் பஞ்சாயத்து பண்ணாமல் இருக்க முடியுமா? என்று பேசி, அவரைக்
காப்பாற்றக் களத்தில் இறங்க முடிவு செய்து யோசித்துக் கொண்டிருந்த வேளையில்,
அலைபேசி அழைத்தது! பார்த்தால் நம் மதுரைத்
தமிழனின் அன்பு, காதல் மனைவி!
“ஹலோ! இன்று, அவர் உங்களிடம் வந்து விட்டாரா? ஐயோ!
அதை ஏன் கேட்கின்றீர்கள்! அவரோடு ஒரே
ரோதனையாகி விட்டது! இத்தனை நாள் பொதுவாகத், தன் வலைப்பூவில் எல்லோரிடமும் புலம்பி
வந்தவர் சமீப காலமாக, ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்தால், ஒவ்வொரு வீட்டுக் கதவையும்
தட்டி இப்படி ஏதாவது புலம்பி, லொள்ளு பண்ணி என்னை மாட்டி விடுவது வழக்கமாகி
விட்டது! வழக்கமாக அவரது சகோதரிகள் உஷா, ராஜி இவர்களிடம் புலம்புவார்! சமீபத்தில் வெங்கட் அண்ணனின் வீட்டுக் கதவையும்
தட்டியதாக அறிந்தேன்! இதோ இப்போது உங்கள் வீடு!
அவரை எப்படியாவது சமாதானப்படுத்தி அனுப்பி வையுங்கள்!”
“சகோதரி! அனுப்பி வைக்கிறோம்! ஆனால், தவறாக நினைக்காதீர்கள்! பூரிக்கட்டையைத்
தூக்க மாட்டேன் என்று எங்களுக்குச் சத்தியம் செய்யுங்கள்! பாவம் அவர்! உங்களிடம்
அவரது இதயத்தையும் தந்து விட்டு, “இதயமில்லா அரக்கன்” என்று உங்களிடம் அடியும் வாங்கினால்....கொஞ்சம்
யோசித்துப் பாருங்கள்!”
“என்னது?! பூரிக்கட்டையைத் தூக்கக் கூடாதா? அவர்
அடிக்கின்ற லொள்ளைத் தாங்குவது நான்! நான் எப்படி என்னைத் தற்காத்துக்
கொள்வதாம்? அவரிடம் ஒரு கேள்வி
கேளுங்கள்! என்னிடம் இதயத்தைக் கொடுத்து விட்டதாகச்
சொல்லும் அவர், இதயம் இல்லாமல் எப்படி வாழ்கிறாராம்? இதயம் இல்லாததால் தானே அவர் இப்படி என்னை
மாட்டி விட்டு ஒவ்வொருவரிடமும் புலம்புகிறார்! அப்படியென்றால், அவர் இதயம் இல்லாத
அரக்கன் தானே! சரி சரி.......நேரமாகிறது!
எனக்குப் பயங்கரமாகப் பசிக்கிறது! சாப்பாடு செய்ய வேண்டும்! அவரைச் சீக்கிரம்
அனுப்பி வையுங்கள்! ஹலோ! அவர்தான் வந்து சமைக்கணும் அதான்......”
நாங்கள் யோசிக்க ஆரம்பித்தோம்!
சகோதரி கண்டிப்பாகப் பூரிக்கட்டையுடன் தான் காத்திருப்பார்! அதுவும் சரிதான்! ஒருவேளை மதுரைத்தமிழனுக்குப் பூரிக்கட்டை அடி
தினமும் பழகிப் போய்விட்டதால், அவரது மனைவி அதைத் தூக்கவில்லை என்றால்
ஆள்மாறாட்டம் வந்து விடுமோ?. “என் செல்லமே, இன்று பூரிக்கட்டையைத் தூக்கவில்லையே!
இன்று ஏதாவது ஸ்பெஷல் நாளா, நான் என் இதயத்தைத் தந்த நாளா? இல்லை தர்மத்தின்
தலைவன் ரஜனி மாதிரி மறந்து போய் வேறு வீட்டுக்குள் வந்து விட்டேனா?” என்று கேட்கப் போய்,
“ஓ அப்படி வேறு ஒன்று நடக்கிறதா” என்று பூரிக்கட்டை அடி வாங்கியதும்,
“இது அப்படி இல்லை, அந்த அர்த்தம் இல்லை, என் செல்லம், வழக்கமா யார்கிட்டயாவது
போய் புலம்புவேன் இல்லையா.....அதுதான்.. ஐயோ!
என் செல்லமே! உன்னைத் தவிர வேறு யாரிடம் பூரிக்கட்டை அடி வாங்குவேன்! அடி
வாங்கினாலும் உன் கையால் தானே வாங்குவேன்! அதில்தான் சுகமே! அதற்குத்தானே என் இதயத்தையே
உனக்குத் தந்து விட்டேன்!. அது மட்டுமா? உன் இதயத்தைச் சுமந்து
கொண்டு, உனக்காக
சமைத்து, வீடு
சுத்தம் செய்து, நீ களைப்புடன் வரும் போது சுடச் சுடசக் காபி கலந்து கொடுத்து, துணிகள் துவைத்து,
இப்படி உனக்காக
உழைத்து, உன்னை
எப்படித் தாங்குகின்றேன்! அதைக் கொஞ்சம்
யோசித்துப் பார்!”” என்று சொல்லி அதற்கும் சேர்த்து அவர் வாங்கிய அடிகள் எங்கள் நினைவுக்கு
வந்ததால் ஒரே யோசனை.
“துளசி...நிறுத்து!....நிறுத்து..!......இங்க ஒரு யோசனை தோணுது...நம் மதுரைத்
தமிழனைக் கூப்பிடு அதற்குள் உன்னிடம், அந்த யோசனையைச் சொல்லுகின்றேன்!.......” என்று தோழி
சொன்னதும் நாங்கள் அதை ஆலோசித்தோம்!
“மதுரைத் தமிழா...பயப்படாதீர்கள் ....உங்கள் மனைவி உங்களைத் தேடி, எங்களைக்
கூப்பிட்டார்! நீங்கள் இப்போது கண்டிப்பாக
அங்கு சென்றே ஆகவேண்டுமாம்! சமைக்கும்
நேரமாம்! அவர்கள் பூரிக்கட்டையுடன் தான் காத்திருக்கிறார்கள்! ஆனால், பயப்படாதீர்கள்! இப்படிச் சொல்லுங்கள்! “என் கண்மணி! நான் என்
இதயத்தை உனக்குத் தந்தது போல, நீ எனக்கு உன் இதயத்தைத் தந்ததுனால் தானே நான் உயிர்
வாழ்கின்றேன்! நீ என் இதயத்தை எப்படிப் பத்திரமாகப் பாதுகாக்கின்றாய்! என்பதை நினைக்கும் போது உன் அன்பை நினைத்துப்
“பூரி”த்துப் போனேன்! அது போல நானும் உன் இதயத்தைப் பாதுகாக்க வேண்டும் இல்லையா? நீ இப்படி என்னைப் பூரிக்கட்டையால் அடித்தால்,
அது, நீயே உன்னை அடித்துக் கொள்வது போல ஆகின்றதே!
என்னுள் இருக்கும் உன் இதயம் ரத்தக் கண்ணீர் வடிப்பதை என்னால் தாங்க
முடியுமா சொல்? யோசித்துப் பார்!”
“இப்படிச்
சொன்னீர்கள் என்றால் உங்கள் அன்பு மனைவி கண்டிப்பாகப் பூரிக்கட்டையைத் தூக்கி
எறிந்து விட்டு உங்களைக் கட்டிக் கொண்டு விடுவார், பாருங்களேன், All the Best!” என்று சொல்லி
அவரைச் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தோம்! ஏதோ எங்களால்
இயன்ற ஒரு உதவி! கூடவே இதையும் சொன்னோம்! “அதுவும் வேலை செய்யவில்லை என்றால், நாங்கள், இந்த வலைப்பூவில்
உள்ள உங்கள் அன்பர்கள் எல்லோரும் எங்கள் இதயங்களை உங்களுக்குத் தரக்
காத்திருக்கிறோம்!” என்று!
மதுரைத் தமிழா, “நமது பெரியவர் திரு. இராய செல்லப்பா, நியூ
ஜெர்ஸி வருவதாக இருக்கிறாராம். அப்போது அவர் உங்கள் மனைவியிடம் பேசி சமாதானப்
படுத்துவதாகச் சொல்லியிருக்கிறார்! எனவே பயப்படாமல் செல்லுங்கள்!”
மதுரைத் தமிழன்
வீட்டிற்குள் நுழையும்போதே, நாங்கள் கொடுத்த யோசனையான டயலாக்கைச் சொல்லிச்
சென்றதால், மனைவி மனம் இளகித் தூரத் தூக்கி எறிந்த பூரிக் கட்டை மதுரைத் தமிழனைத்
தாக்கியதாகக் கேள்வி!
என்றாலும்
பார்ப்போம், எங்கள் யோசனை அவருக்கு உதவியதா என்று! தகவல் வராமலா போய்விடும்?! காத்திருப்போம்!
பின் குறிப்பு:
மதுரைத் தமிழனுக்குப் பூரிக்கட்டை அடி வாங்கமல் இருக்க முடியாது என்று
தெரிகின்றது! நாளே டல்லாகி விடும் போல! அது போல அவரது மனைவிக்கும் அதைத்
தூக்காவில்லை என்றால் அந்த நாளே டல்லாகி, அதிர்ஷ்டம் இல்லாத நாளாகி விடும்
போலும்! என்ன ஒற்றுமை பாருங்கள்! MADE FOR EACH OTHER
COUPLE!!!!!!!!!!!!!!!!!!!!!????????????????????