புதன், 20 அக்டோபர், 2021

மகன்தாய்க்கு ஆற்றும் உதவி – சியமளா மாமியின் கதை; மாமியார் மெச்சிய மருமகள்

 

மகன்தாய்க்கு ஆற்றும் உதவி……

முதியவர். முதுமையை எளிதாகக் கடப்பது என்பது எளிதல்ல. அதுவும் 90 வயதைக் கடந்தவரை, சுய நினைவுடன் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட அவரது உடல்நலத்தைப் பேணிக் கவனித்துக் கொளல் என்பது சாதாரண காரியமல்ல. 96 வயதான அம்மாவை எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும், அதுவும் இந்தக் கோவிட் சமயத்தில் என்பதற்கு அரிதான முன்னுதாரணமானவர்களில் ஒருவர்.

தன் தேவைகளைச் சுருக்கி, வயதான அம்மாவின் கோணத்திலிருந்து ஒவ்வொன்றையும் சிந்தித்து அதை ஒட்டியே தன் பணிகளை மேற்கொண்டு அம்மாவின் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப அம்மாவின் சௌகரியத்திற்கேற்ப, அம்மாவின் செயல்களை, நித்தியக் கடமைகளை எளிதாக்கிக் கொடுத்தும், உதவியும் பார்த்துக் கொண்டார் அந்த அம்மாவின் கடைசி மகன் தன் முதுகுவடத்தின் வால் பகுதிப் பிரச்சனையினால் ஏற்பட்ட இடுப்பு, முதுகுவலியினிடையில். அம்மாவிற்கு எப்படிச் செய்தால் அவருக்குப் பாதிப்பு இருக்காது, சௌகரியமாக இருக்கும் என்ற கோணத்தில் ஆராய்ந்து அதற்கேற்ப பல விஷயங்களையும் பார்த்துப்  பார்த்துச் செய்தார். 

அம்மாவின் வயதிற்கான சிறிய பயிற்சிகள், கூடியவரை தன்னைத்தானே பார்த்துக் கொள்வதற்கான உதவி மற்றும் பயிற்சி, நினைவுத்திறன் அதிகம் மங்கிவிடாமல் இருக்க சில பயிற்சிகள் (வாசிக்க வைத்தல், அவ்வப்போது கேள்விகள் கேட்டல், உறவினர் பெயர்கள் கேட்டல், அன்று அவர் சாப்பிட்ட உணவு, டிவி நிகழ்ச்சி பற்றி என்று), உணவைக் கூடத் தன் விருப்பம் பார்க்காமல் அம்மாவுக்கு ஏற்ற உணவு செய்தது உட்பட.

வயதான காரணத்தினால் அம்மா இயற்கை உபாதை கழிக்கச் சிரமப்பட்ட போது அருவருப்பு பாராமல், அம்மா கிரமப்படாமல் இயற்கை உபாதை கழிக்க உதவியது; வாக்கர் அல்லது சக்கரநாற்காலி உதவியுடன் வீட்டில் கைத்தாங்கலாய் வளைய வர வைத்தது; அம்மாவின் செவித்திறனுக்கேற்ப எழுதிக் காட்டி, அருகில் இருந்து ஒவ்வொரு தேவையையும், சிறு சிறு தேவையையும் கூடக் கவனித்து மிகவும் பொறுமையுடன் பதிலளித்து, அன்புடன் கவனித்துக் கொண்டது; எல்லாம் மிகையல்ல. இப்படிச் செய்பவர்கள் அரிதானவர்கள்! அந்த அரிதானவர்களில் ஒருவராய்...

எனது கடைசி மைத்துனர்!

மகன்தாய்க்கு ஆற்றும் உதவி இவன்தாய்

என்நோற்றாள் கொல்எனும் சொல்.

 *****************************************************************************************

சியமளா மாமி எழுதிய கதை: மாமியார் மெச்சிய மருமகள்

மாமியைப் பற்றி: மாமியும் அவரது  குடும்பமும் எங்களுக்குத் திருவனந்தபுரத்திலிருந்த போது மலர்ந்த நட்பு. நாங்கள் தாமசமிருந்த வீட்டின் கீழ்ப் பகுதியில் நாங்கள். மாடியில் மாமியின் குடும்பம். கணவர், இரு மகன்கள், ஒரு பெண். பெரிய மகன் அப்போது மருத்துவப் படிப்பில் ஹவுஸ் சர்ஜனாக இருந்தார். இரண்டாவது மகன் பொறியியல் படிப்பிலும், மகள் வேளாண்மைக் கல்லூரியிலும் படித்து வந்தனர்.

என் மகன் அப்போது ஒன்றே கால் வயதிற்குள்தான். இவர்கள் அனைவருக்கும் செல்லப் பிள்ளை. 

தற்போது மாமியின் பெரிய மகன் திருவனந்தபுரத்தில், அரசுமருத்துவமனையில் ஆர்த்தோ சர்ஜன். இரண்டாவது மகன் அமெரிக்காவில். மகள் இங்கு இருக்கிறார். மாமா தற்போது மகளுடன். அனைவருமே எங்கள் நலம்விரும்பிகள்.  

மாமி இறைவனடி சேர்ந்து 1 ½ வருடங்கள் ஆகிறது. மாமி கற்பனை வளம் உள்ளவர். தன் ஆத்ம திருப்திக்கு அவ்வப்போது எழுதுவதை என்னிடம் சொல்லிக் காட்டுவார். தற்போது அவரது மகள் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவரிடம் இருந்த சில கதைகளைக் கொண்டுவந்தேன். மீதி சென்னையில் இருக்கிறது.

மாமி, எழுத்தாளர் தேவனின் விசிறி. சாம்பு கேரக்டரை மிக மிக ரசித்தவர் என்பது அவர் கதைகளில் தெரிகிறது. அதையொத்த கதைகள் சிறிய சிறிய கதைகளாகச் சில எழுதியிருக்கிறார்.  அவற்றில் ஒன்று இங்கு. மற்றவை பிறிதொரு சமயம்.

மாமியார் மெச்சிய மருமகள்

போலீஸ் ஸ்டேஷனில் இருந்த இன்ஸ்பெக்டர் சந்தானத்தை நோக்கி ஒடி வந்தார், ஊரே மூக்கில் விரல் வைக்கும் கிரிமினல் வக்கீல் வரதராஜன்.

“உட்காருமய்யா. என்ன மூச்சிறைக்க ஒடி வருகிறீர்”

“ஸார், நான் என் வீட்டிலேயே ட்ராயரில் வைத்திருந்த 4 லட்சம் ரூபா எங்க போச்சு, எப்படிப் போச்சுன்னு தெரியலையே! அதான் கம்ப்ளெயின்ட் கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்.”

“உமக்கே தெரியலையா!? யாரெல்லாம் வந்தா உங்களைப் பார்க்க”

“மதுரையிலருந்து சாம்பமூர்த்தி, ஒரு கேஸ் விஷயமா வந்திருந்தார். அப்புறம்…அதுதான்…எதிர்க்கட்சி அம்மா அடிதடி விஷயமா கேஸ் எடுத்துண்டு வந்தா. இப்படி 5,6 பேர் வந்தா. யார் மேல எப்படிக் குற்றம் சாட்டறது? புரியலை. அதான் உங்ககிட்ட கேஸ் கொடுத்துட்டுப் போகலாம்னு….”

இன்ஸ்பெக்டர் சந்தானம் ஆட்களை விட்டு வக்கீல் சொன்ன ஆட்களைச் சல்லடை போட்டு விசாரித்துக் குழம்பி நின்றார். அவர்களுக்கு எப்போதும்  ஆபத்பாந்தவன் விச்சு தானே! உடனே அவரைப் பார்க்கக் கிளம்பினார்.

விபரத்தைக் விச்சுவிடம் சொன்னார். விச்சு எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்.

“என்ன ஓய் விச்சு! உமக்கு இந்த கேஸ்ல ஏதாவது பிடி கிடைத்ததா” என்றார் சந்தானம்.

அப்போது ரேடியோவில் ‘மாமியார் மெச்சிய மருமகள்’ படத்திலிருந்து பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. விச்சு உள்ளே பார்த்து,

“சச்சு, அந்த ‘மாமியார் மெச்சிய மருமகளை’ உரக்க வை” என்றார்.

உடனே சந்தானம், “என்ன விச்சு? நேரடியாய் சொல்ல மாட்டீரோ? இப்போதே வரதராஜன் வீட்டிற்குப் போய் விசாரிக்கிறேன்” எனப் புறப்பட்டார்.

வரதராஜன் வீட்டில் அவர் மனைவியையும், அம்மாவையும் தனித்தனியாக விசாரித்தார்.

“இத்தனைப் பேர் வந்து போற இடத்துல 4 லட்ச ரூபாயை ட்ராயர்ல பூட்டாம வைச்சுட்டுப் போனவரைக் கண்டிக்கணும்னு நான்தான் அதை எடுத்து என் மாமியார்கிட்ட கொடுத்தேன்.” – மருமகள்.

மாமியாரும் மருமகளை மெச்சி லாக்கரில் வைத்திருக்கிறாள். இதை அறியாத அந்த வக்கீல் பதறிப் போய் கேஸ் கொடுத்திருக்கிறார்.

‘விச்சுவுக்கு இதெல்லாம் எப்படிச் சட்டென உதித்ததோ’ இன்ஸ்பெக்டர் சந்தானத்துக்கு ஆச்சரியம்.  விச்சுவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனார் இன்ஸ்பெக்டர் சந்தானம்.

‘எதற்கு இந்த இன்ஸ்பெக்டர் நன்றி சொல்கிறார்?’ எனத் தெரியாமல் முழி முழின்னு முழித்துக் கொண்டிருந்தார் விச்சு! - ஷியாமளா (13-6-2010)

 

------கீதா

செவ்வாய், 12 அக்டோபர், 2021

அனுகூல்-ANUKUL

 


அனுகூல். நான் ரசித்துப் பார்த ஒரு குறும்படம்.  அதைப் பற்றிச் சொல்லும் முன் கொஞ்சம் கதைத்தல்.

 நான் ஏற்கனவே இயற்கை வலியது என்ற கதையை எழுதிய போது (எபி யில் வந்தது) அப்போது இந்தப் படம் கண்ணில் படவில்லை. அக்கதை எழுதிய பின் மேலும் சில கற்பனைகள் மனதில் ஓடியதை  வைத்து எழுதத் தொடங்கிய ஒரு கதை அப்படியே ப்ரேக் போட்டு நிற்கிறது.

செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) குறித்து கொஞ்சம் தரவுகள், புதிய ஆய்வுகள் என்று எடுக்க அவ்வப்போது இணையத்தில் தேடுவதுண்டு. சில மாதங்களுக்கு முன் அப்படித் தேடிய சமயம் கிடைத்த குறும்படம்தான் இந்த அனுகூல்.

சத்யஜித்ரே 1976ல் எழுதிய அனுகூல் எனும் சிறுகதையைத் தழுவி படத்தை இயக்கியவர் சுஜாய் கோஷ். 2017 ல் வெளிவந்திருக்கிறது.

படம் பார்த்ததும் கதையின் மூல வடிவம் கிடைக்கிறதா என்று தேடினால் பெங்காலியில்தான் கிடைத்ததே அல்லாமல் ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ கூடக் கிடைக்கவில்லை.

இதைப் பற்றி நான் எழுதத் தொடங்கிய சமயம், பானுக்கா, தான் ரசித்த கதை என்று 2003 ல் சுஜாதா எழுதிய “ரிசப்ஷன் 2010” கதையைப் பற்றி எழுதியிருந்தது எபியில் சனிக்கிழமை அன்று வந்திருந்தது. அதில் மனிதர்களைப் போலவே வித்தியாசம் தெரியாமல் இயந்திர மனிதர்கள் உலாவிக் கொண்டிருந்தார்கள் என்று வரும். நான் பதிவு எழுதத் தொடங்கியிருந்ததால் அனுகூல் பற்றி நான் கருத்தில் எதுவும் சொல்லவில்லை.

மனித வாழ்க்கைக்குள் இயந்திர மனிதர்கள் புகுந்துவிட்டால் விளைவுகள் என்ன? ஃபிக்ஷனாக 1976ல் அனுகூல் கதையில் சொல்லியிருக்கிறார் சத்யஜித்ரே.  ஆனால் இப்போது அது சாத்தியமாகி வந்து கொண்டிருக்கிறது. அவருக்கும் அறிவியல் தொழில்நுட்பங்கள், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பற்றி மிகுந்த ஆர்வம் உண்டாம். அதனால் அதைப் பற்றி அறிந்துகொள்ள நிறைய வாசித்ததாகத் தெரிகிறது.

கதை இதுதான்…


https://www.youtube.com/watch?v=J2mqIgdae5I

ஒரு ஹிந்தி ஆசிரியர் தனக்கு உதவிக்காக ரோபோ ஒன்றை வாடகைக்கு எடுக்கிறார். ரோபோவின் பெயர் அனுகூல். இப்போதெல்லாம் வீட்டு வேலை, பிற வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜன் போன்று ரோபோவை வாடகைக்கு விடுபவர்  சொல்வார், எல்லா நாளும் அனுகூல் வேலை செய்வார், கூடுதல் மணிநேரம் வேலை செய்வதற்கு மேலதிகப் பணம் கொடுக்கத் தேவையில்லை என்று.  ஆனால் மனிதர்களை வாடகைக்கு விடும் ஏஜண்டுகள் அப்படிச் சொல்வதில்லையே! எனவே வீட்டு வேலைகளுக்கு படத்தில் சொல்வது போல் வரும் காலம் அருகில்தான்.

அனுகூல் இவரது வீட்டிற்கு வந்து உதவி செய்கிறார்/து. நிறைய புத்தகங்கள் இருப்பதைப் பார்த்து ஆர்வம் பெற்று வாசிக்கத் தொடங்குகிறார்/து.  ஆசிரியரும் அனுகூலும் நல்ல புரிதலில் இயங்குகிறார்கள். இருவருக்குள்ளும் ஒரு பிணைப்பே ஏற்படுகிறது!!!!

ஒரு நாள் ஆசிரியரின் சித்தப்பா/பெரியப்பா மகன் வீட்டிற்கு வருகிறார். தனக்கு ரோபோவின் வருகையால் வேலை போனதாகச் சொல்கிறார். அப்போது ஆசிரியரின் உத்தரவுப் படி அனுகூல் அங்கு தேநீர் கொண்டுவர அனுகூல் ரோபோ என்று தெரிந்ததும் சகோதரருக்குக் கோபம் வருகிறது.  வீட்டிற்குள் செல்பவர் அனுகூல் துணி தேய்த்துக் கொண்டிருந்த போது அந்த இஸ்திரிப் பெட்டியாலேயே அனுகூலைத் தாக்குகிறார். அனுகூல் செயலிழந்துவிடுகிறார்/து.

சேவையாளர் வந்து அனுகூலை உயிர்ப்பிக்கிறார். (இதன் அடிப்படையில் எனக்கு ஒரு கற்பனை தோன்றியது. அதுவும் நான் ஆஇ ஒட்டி எழுதும, இப்போது ப்ரேக் போட்டு இருக்கும் கதையில்)

“இந்த முறை அனுகூல் எதுவும் செய்யவில்லை அதனால் உங்கள் சகோதரர் தப்பித்தார். இனி அவர் மீண்டும் தாக்கினால் அனுகூல் சும்மா இருக்கமாட்டார் எலக்ட்ரோ சார்ஜ் செய்துவிடுவார்” என்று எச்சரிக்கை செய்துவிட்டுப் போகிறார்.

இரவு ஆசிரியர் தூக்கம் வராமல் நடந்து கொண்டிருக்க, அறையில் அனுகூல் புத்தகம் வாசிப்பதைப் பார்க்கிறார். அனுகூல், ஆசிரியரிடம் ஏதாவது வேண்டுமா என்று கேட்க, தனக்குத் தூக்கம் வரவில்லை என்று சொல்லி விட்டு, “நீ தூங்கவில்லையா” என்று கேட்க அனுகூல் சொல்கிறார்/து “எனக்குத் தூக்கம் ஏது?” என்று

அனுகூல் தான் பகவத் கீதை வாசிப்பதாகவும் புரியவில்லை என்று சொன்னதும் ஆசிரியர், “நீ எனக்கு தினமும் உதவுகிறாய். இன்று நான் உனக்கு உதவுகிறேன்” என்று சொல்லி “உனக்கு என்ன புரியவில்லை? கேள்” என்று சொல்லி உரையாடுகிறார். ஆசிரியர் அனுகூல் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்.

இதை நான் இங்கு சொல்வதை விடப் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். மிக மிக அழகான காட்சி. சிந்திக்க வைத்த உரையாடல்கள்.

உரையாடலின் இடையே அனுகூல் கேட்பார்/கும்

“யார் இந்த நீலமனிதர்”

“பகவான் கிருஷ்ணர்” - ஆசிரியர்.

“ஏன் அவர் நீலமாக இருக்கிறார்?”

ஆசிரியர், கிருஷ்ணர் நீலமாக இருப்பதற்கான, விஷம் குடித்த கதையைச் சுருக்கமாகச் சொன்னதும்,

 “அவர் இறக்கவில்லையா?” என்று கேட்கிறது அனுகூல்.

“அவர் பகவான். எப்படி இறப்பார்?” என்று ஆசிரியர் சொன்னதும், உடனே அனுகூல் சொல்கிறார்/து

“நானும் இறக்க முடியாது” என்று!!!!!

ஆசிரியர் கொஞ்சம் ஜெர்க் ஆகி, “இல்லை அது வெவ்வேறு விஷயங்கள். அதை விடு, உனக்கு கீதையில் என்ன புரியவில்லை அதைச் சொல்” என்று சொல்லி தர்மம், கடமை என்பதை பற்றி அனுகூல் கேட்க ஆசிரியர் பதில் சொல்கிறார்.

சரி எது தவறு எது, நியாயம் இதெல்லாம் எப்படி முடிவு செய்யப்படும் என்று அனுகூல் கேட்க ஆசிரியர் நெஞ்சைத் தொட்டு, “மனசாட்சி” என்று சொல்லும் போது அனுகூலும் தன் நெஞ்சில் கை வைத்துப் பார்த்துக் கொள்ளும்.

இதன் அர்த்தம் படத்தின் முடிவில் உங்களுக்குப் புரியும்.

இதைப் பார்க்கும் போது கிட்டத்தட்ட மனித மூளைக்கு நிகரான இயந்திர மனிதன் என்பது புரிகிறது. இப்போது இந்தக் கதையில் வரும் அனுகூல் போல கிட்டத்தட்ட வந்தாயிற்று. அனுகூல்  போலவே விரைவில் வந்து விடும் என்றே தோன்றுகிறது.

இதோ கீழே உள்ள சுட்டியைப் பாருங்கள். சவுதி அரேபியாவின் குடியுரிமை (சிட்டிசன்ஷிப்) பெற்ற சோஃபியாவைச் சந்தியுங்கள். (ஏன் பெண்? பெண் ரோபோதான் ஈர்க்கும் என்றோ?!!)


https://www.youtube.com/watch?v=uDoBKpTckuU

மனிதனுக்கும், மனிதனால் உருவாக்கப்படும் ரோபோவுக்கும் உள்ள வேறுபாடுகள் மனிதனுக்கு இருக்கும் சுய சிந்தனை, இரக்கம், வருத்தம், ஆசாபாசங்கள் போன்ற நுண்ணுணர்வுகள். இவை எல்லாம் ரோபோவுக்குள் சில்லு சில்லுகளாய் நிறுவப்பட்டால், ரோபோக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினால், அப்படி மனித மூளைக்கு நிகராகச் சிந்தித்து முடிவு எடுக்கத் தொடங்கினால்? என்னாகும்? மனிதன் தன் சுயநலத் தேவைக்கு ஏற்ப ரோபோவை வடிவமைத்தால்…? உலகம் ரோபோ உலகமாகிவிடும் அபாயம் இருக்கிறதோ?

Artificial Intelligence is the manifestation of the failure of humanity to understand natural intelligence. It is going to snatch away the nature from everybody’s life, in second by second basis and is designed to swallow humans from nature forever. Nature wins!


-------கீதா

வியாழன், 7 அக்டோபர், 2021

நினைவோ, ஒரு பறவை…

 


நினைவுகள் பின்னிலிருந்து தள்ள கனவுகள் முன்பிருந்து இழுக்க, இப்படியாகத்தானே நம் வாழ்க்கைப் பயணம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனிடையே ஒவ்வொரு சூழலிலும்  நாம்  இறையருளால் கவனமாக இருந்து செயல்பட்டு ஓரளவு சுகமாக வாழ்கிறோம், எழுதுகிறோம், வாசிக்கிறோம் என்பது இதை  எழுதும் போது எனக்கும், வாசிக்கும் போது உங்களுக்கும் உறுதியாகியிருக்கும்தானே. இது போல் எப்போதும் இறையருளால் கனவு நனவாகும் நிகழ்காலமும், நிகழ்வு நினைவாகவிருக்கும் நினைவுக்காலமும் நமக்குத் துணையாகட்டும்.

இருந்தாலும் இளமையில் கனவுகளுக்கு இருந்த வேகமும் வித்தியாசமான தோற்றமும் முதுமையை நெருங்கும் போது இருப்பதில்லை. ஆனால் எப்படியோ நம் வாழ்க்கை ஓடத்தின் சீரான பயணத்தை நினைவுக்காற்று தேவையான நேரத்தில், தேவையான அளவு வீசி எளிமையும் இனிமையும் ஆக்கி விடுகிறது. சிறகு விரித்துப் பறக்கும் எண்ணங்கள் அப்படி 40 க்கும் 50க்கும் மேல் வயது ஏற ஏற நெல்லிக்கனியாய் இனிக்கிறது.

எங்கள் ப்ளாகில் வெள்ளி தோறும் ஒவ்வொருகாலகட்ட பாடல்களை,  தான் ரசித்த பாடல்களை மையமாகக் கொண்டு அவற்றைப் பற்றிய விவரங்களுடன் ஸ்ரீராம்ஜி எழுதும் போதெல்லாம் அவர் பதிவுகள் எனக்குப் பல நினைவுகளை எழுப்பிவிடுவதுண்டு. ஆனால் அவற்றை அங்கு கருத்தில் பகிர்ந்ததில்லை. பதிவு போன்றதாகிவிடுமே என்ற காரணத்தினால். பதிவு எழுதும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று ஓரிருவரிகளில் சொல்லிச் செல்வதுண்டு. நானும் கீதாவும் அவை தொடர்பான எங்கள் அனுபவங்கள், நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டதுண்டு. ஆனால், பதிவு எழுத முடியாமல் போனது. இனி அதையும் எழுத முயற்சி.

இங்கு தேவைப்படுவதெல்லாம் நேரமும் சூழலும் தான்.  அப்படிப்பட்ட நேரமும் சூழலும் சில நாட்களுக்கு முன் அதிர்ஷ்டவசமாக எனக்குக் கிடைத்தது. க்வாரண்டைன் ஃப்ரம் ரியாலிட்டி (Quarantine from Reality) சுபஸ்ரீ தணிகாச்சலம் தன் தொடரில் அப்படியான ஒரு பாடலைக் கடந்த வருடம் பகிர்ந்திருந்தது இப்போதுதான் என் கண்ணில் பட்டது. என்ன செய்ய? கண் இருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய் ஒரு வருடம் அதுவும் இந்த கோவிட் நாட்களில் போனது பேரிழப்புதான்.



எங்கள் ப்ளாகில் அருமையாக எழுத்தில் பதிவது போல், QFR ல் சுபஸ்ரீயும் பாடல், ராகம், பாடகர்கள் மற்றும் இசைக்கருவிகள் இசைக்கலைஞர்களை அறிமுகப்படுத்தல் என்று அருமையாக க்வாரண்டைன் ஃப்ரம் ரியாலிட்டியை (QFR) கொண்டு செல்கிறார். அதில் நான் கேட்ட பாடல் ‘பிரியா’ படத்தில் ‘ஹே பாடல் ஒன்று’. இசை ஞானியின் இசையமைப்பில் பஞ்சு ஐயா எழுதி கான கந்தர்வன் ஏசுதாசும், இசைக்குயில் ஜானகி அம்மாவும் பாடியது. ஒரு கவிதையை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்குவது போல் அருமையான ஒரு விளக்கம் வேறு சுபஸ்ரீயிடமிருந்து. கூடவே அந்தப் பாடலுடன் தொடர்புள்ள நிகழ்வுகளையும் தருவது அருமை. இப்படிப் பாடல் கேட்கும் போதெல்லாம் கவிதை வரிகளும் குரல்களின் இனிமையும், கூடவே, ரஜனியும் ஸ்ரீதேவியும் மனதில் வருவது வழக்கம்தான்.

கேரளாவில் இருக்கும் எனக்கு இதெல்லாம் எப்போதாவது நிகழும் நிகழ்வுதான் பெரும்பாலும். அதனால் அப்போதெல்லாம் அப்பாடல் இடம் பெற்ற படமும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளும் வந்து நீண்ட நேரம் நினைவுகளில் பயணிக்க வைக்கும்.

ஆனால் சுபஸ்ரீயின் விளக்கமும், சிவாவின் எடிட்டிங்கும், புதிய இளம் பாடகர்களின் குரலும், இசைக்கருவிகளைக் கையாளும் மாயாஜாலக்காரர்களின் மந்திர விரல்களும் ஒரு புது உலகத்தையே என்னைப் போன்றவர்களுக்குக் காட்டித் தந்தது.  இது அவரால் மட்டும்தான் முடியும். (கீதா சொல்லி சுபஸ்ரீயைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன்). இதெல்லாம் தமிழுக்காகத் தமிழ் உள்ளங்களால் மட்டுமே சாதிக்கக் கூடிய ஒன்று. அவரது சேவை தொடரட்டும். புகழ் ஓங்கட்டும்.

இந்த “ஹே பாடல் ஒன்று’ பாடல் என் நினைவுச் சிறகை விரிக்க வைத்தது. என்னை என் வாழ்வின் 1978, 1979க்குக் கொண்டு சென்று என்னை இன்ப வானில் பறக்கச் செய்ததை சொல்லத்தான் இந்தப் பதிவு.

போடிநாயக்கனூர் சிபிஏ (CPA) கல்லூரியில் பியுசி படித்த காலம். செனட்ரல் தியேட்டரில் படம் பார்த்து நண்பர்களுடன் நடந்து, பரமசிவன் கோவில் மலை அருகேயுள்ள கல்லூரி விடுதிக்குச் சென்ற நாட்கள். எங்களில் இனிமையாகப் பாடும் மீனாட்சிபுரம் முருகேசின் குரலில் இப்பாடல் ஒலிப்பதை இப்போதும் உணரமுடிகிறது.

கல்லூரி உதவிப் பேராசிரியரும், விடுதி வார்டனுமான முருகானந்தன் சாரின் அன்பான, ஆறுதலான வார்த்தைகள். அதையெல்லாம் அப்போது புரிந்து கொள்ளாமல் அவருடன் விரோதித்துக் கொண்ட நாட்கள். அதன்பின் பலமுறை என் ஆசிரியப் பணியிடையே, பல மாணவர்கள் சீறும் போது, ‘அன்று முருகானந்தம் சார். இன்று நான்’ என்று எண்ணி சிரித்து, என் சீற்றத்தைத் தவிர்த்ததுண்டு.

எப்போது சிபிஏ (CPA) கல்லூரி நாட்கள் நினைவுகள் வந்தாலும் அதனுடன் வருசநாடு சேகர் நினைவுக்கு வருவதுண்டு. எப்போதும் சந்தோஷமாக, எதைப்பற்றியும் வருந்தாமல் இருக்கும் சேகர்.  வெளிப்படையாகப் பேசுபவர். குற்றம் காணும் போது அதைச் சுட்டியும் காட்டுவார். ஒரு பையன் ஷோலே என்பதற்குப் பதிலாக ஜோலே என்ற போது யாருக்குமே புரியவில்லை. சேகர், “ஓ ஷோலே படத்தைப் பத்தியா சொல்ற? ஒன்னு சரியா ஷோலேன்னு  சொல்லு இல்லேன்னா அட்லீஸ்ட் சோலே ன்னாவது சொல்லு. பியுசி படிக்கிற நீ இனி இப்படிச் சொல்லாதே” என்றது இப்போதும் நினைவில் பசுமையாய் வந்து சிரிக்க வைக்கிறது. சிந்திக்கவும் வைக்கிறது. தவறை தவறென்று சொல்லி திருந்தச் செய்யும் மனம் எத்தனை பேருக்கு இருக்கிறது?

“பியுசி படிக்கிறதில 5 பேர் மட்டும்தான் பாஸாக வாய்ப்பு. பாக்கி எல்லாம் சும்மா, இந்த நான் உட்பட” என்ற சேகரின் வார்த்தை உண்மையானது. இதைவிட ஆச்சரியம் ஒரு முறை சேகர் எழுதிய ஒரு கதையை எனக்குக் காண்பித்ததுதான். முதல் வரியே “நான் ஒரு நாற்காலியில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறேன். என் முன் பத்திக் குச்சிகளிலிருந்து வரும் மணமுள்ள புகை. என் முன் எல்லோரும் அழுது கொண்டும், தேம்பிக் கொண்டும் இருக்கிறார்கள்” என்ற வரிகள். நான் அதிர்ந்தே போனேன்.

சிரித்த சேகர், “இதும் நடக்கப் போற ஒன்னுதான்”.  என்றதும், அப்படி எல்லாம் பேசக் கூடாது என்று சொல்லி சமாதானப்படுத்தினாலும், சேகரின் பக்கத்து ஊர் பழனிச்சாமி, “சேகர் இதுக்கு முன்னாடி ஒரு தடவ தற்கொலை முயற்சி செய்திருக்கான்” என்று சொன்னது எனக்குப் பயத்தை ஏற்படுத்தியது. பியுசி ஒரு வருடம் தான். பிரிந்த நாங்கள் எல்லோரும் பல வழிகளில் பயணித்தோம்.

சில வருடங்களுக்குப் பின் தேனி பேருந்து நிலையத்தில் பழனிச்சாமியைச் சந்திக்க நேர்ந்த போது, பலதும் பேசினோம். அப்போது நான் மதுரைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். பேச்சினிடையே பேரிடியாய், “சேகர், போனவருடம் தற்கொலை செய்து கொண்டான்” என்ற செய்தி. அதன் பின் இன்று வரை எப்போதெல்லாம் என் வாழ்வில் என் சிபிஏ(CPA) கல்லூரி வாழ்க்கை நினைவுக்கு வந்தாலும் முருகானந்தம் சாருடன் சேகரின் நினைவும் வரும்.

மரணத்தை விரும்பிய சேகர். மரணத்தை மணந்து பிணக்கோலமாய் அமர்வதைக் கதையாய் எழுதிக் காத்திருந்த சேகர். காரணம் கேட்ட போதெல்லாம் சிரித்து மழுப்பிய சேகர், கூடாது என்று அறிவுரை சொன்ன போதெல்லாம் “அதெல்லாம் நான் சும்மா சொல்றது” என்று விசயம் மாற்றிய சேகர். நாற்பது வருடங்கள் கடந்தாலும், நினைக்கும் போதெல்லாம் மனதில் ஒரு வலி.

இனிய நினைவுகளுடன் நமக்கு வேதனை தந்த/தரும் நினைவுகளும் வருவது இயல்புதானே. “பிரியா” படம் பார்க்கப் போன போது சேகரும் எங்களுடன் வந்திருந்தார். இந்தப் பாடலைக் கேட்டதும் என் மனம் அந்த நாட்களை வட்டமிட்டது. இப்போதும் புரிந்துகொள்ள முடியாத டீன் ஏஜ் மனதை எனக்கு நினைவூட்டியது.

பயமறியாத காலம். ஓடும் பாம்பினை மிதிக்கத் தூண்டும் மனதைத் தரும் பருவ்ம். தவறை தவறென்று யார் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாத பருவம். எல்லோரும் அல்ல, சிலர். இப்படி சில அல்லது பல பாடல்கள், தொடர்புடைய ஏதேனும் பொக்கிஷம் போன்ற நிகழ்வு, நினைவுகள், நாட்கள் உங்களுக்கும் நினைவுக்கு வரலாம். பகிர்ந்து கொள்ளுங்கள்.  வேதனயான நிகழ்வுகள் என்றால், பகிர்ந்தால் அந்த வேதனையே பாதியாகும். இன்பத்தைப் பகிர்ந்தால் இன்பம் இருமடங்கு இன்பமாகும்.


-----துளசிதரன்