அனுபவ விவரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவ விவரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜனவரி, 2024

சில்லு சில்லாய் - 19 - பாட்டியும் சினிமா வைபவங்களும்

 

பாட்டியிடம் நான் போட்ட பிட் இதுதான் - “பாட்டி, நாங்க எல்லாரும் ஆத்துலதானே இருக்கோம். வடசேரி சந்தைக்கும், மாவு மெஷினுக்கும் போலாமா? நாங்க எல்லாம் தூக்கிண்டு வருவோமே….சிவாஜி படம் கூட ஏதோ புதுசா வந்திருக்காமே! அப்படியே அதையும்….”

என்ன ஆச்சு?!! குழந்தை அழுததா சிரித்ததா? தொடரும். //  இது முதல் பதிவு இங்கே

என்ன ஆச்சு!? பாட்டியிடமிருந்து பதில் இல்லை. தூங்கிட்டாங்க போல என்று நைஸாக எழுந்து என் வேலையைப் பார்க்கலாமே என்று நழுவினேன். என்னத்த பெரிய வேலை? அப்போதே என்னவோ பெரிய எழுத்தாளர் போல, கட்டுரை அல்லது கதை எழுத முயற்சி அல்லது படம் வரையறது, பேப்பர்ல கோலம் போட்டு டிசைன் போடுவது இப்படி ஏதாவதுதான். படிக்கும் புத்தகம் எல்லாம் டக்கென்று கையில் வராது அது சாட்சிக்கு அருகில் இருக்கும். பாட்டி எழுந்தால் புத்தகம் கைக்கு வந்துவிடும்.

வியாழன், 23 நவம்பர், 2023

எங்கள் வீட்டுப் பிதாமகர்


“கோந்தே, பாரு எவ்வளவு சமட்டினாலும் திடீர்னு சைக்கிள்ல லைட் ஏரியலை. டைனமோ பாக்கணும். இது டவுன் இல்லியா, போலீஸ் பாத்தா பிடிப்பா. நீ எறங்க வேண்டாம். அப்படியே உக்காந்திண்டிரு, Bar அ கட்டியா பிடிச்சுக்கோ. சைக்கிள தள்ளறேன். ஒழுகினசேரி பாலம் ஏறி இறங்கினதும்  ஹைவே. போலீஸ் இருக்கமாட்டா, அப்புறம் சைக்கிள சமட்டறேன்.”

புதன், 17 மே, 2023

மரம் ஒரு வரம்

 

“மரம் ஒரு வரம்”.  ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்ற வாசகங்கள் பயணத்தின் போதெல்லாம் முன் செல்லும் வாகனத்தின் பின்னால் எழுதியிருப்பதை நாம் எல்லோரும் எத்தனையோ முறை பார்த்திருப்போம். ஒரு மரம் எனக்கு எப்படி வரமானது என்பதைப் பற்றித்தான் இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

செவ்வாய், 14 மார்ச், 2023

சில்லு சில்லாய் - 7 - மாய வலைத் தொடர்பு உலகம்

 

என்னிடம் தொடர்பு எண்ணாக இருந்த என் தூரத்து நட்பு!!!!  (தூரத்து உறவு என்பது போலான பொருள்!!ஹிஹிஹிஹி) எப்போதேனும் உதவிக்கு அழைப்பதுண்டு. அப்படி ஓர் உதவிக்காக அழைத்தேன். இணைப்பு கிடைத்ததும்,

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

சில்லு சில்லாய் – 5 - இன்ஸ்டன்ட் பலன் - பறவை நடனம்

 

இன்ஸ்டன்ட் பலன்!


சொந்தத்தில், அண்ணா ஒருவரிடம் இருந்து அழைப்பு.

ஏம்மா வாட்சப் என்னாச்சு இல்லையா? எஸ் எம் எஸ் அனுப்பிருந்தேன். பதிலே இல்லையே"

அண்ணா, ஸாரி அண்ணா, லேட்டாத்தான் பார்த்தேன்.  வருத்தமான செய்தி.....சின்ன   வயசில்லையா? என்ன பேசறது, சொல்றதுன்னு தெரியலை.”

சனி, 7 மே, 2022

மணிச்சித்திரத்தாழே தாழ் திறவாய்

நீங்கள் காலையில் எழுந்து வீட்டு வாசல் கதவைத் திறக்கும் போது கதவு வெளியில் தாழ் போடப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?

யோசியுங்கள். அதற்குள் ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.

புதன், 12 ஜனவரி, 2022

திருநெல்வேலி- நாகர்கோவில் – 2


பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 7

திருநெல்வேலி-நாகர்கோவில் - 1

சென்ற பதிவைப் பொறுமையாக வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி! இப்போது இன்றைய பதிவிற்கு.

சனி, 4 டிசம்பர், 2021

பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 3

சாது பொங்கினால்……காடும் ஊரும் கொள்ளாது - 3



அடுத்த பதிவில் திருப்பதிசாரத்தின் கீழூர் மேலூர் பற்றியும், தேரேகால் எப்படி மரிந்து ஊருக்குள் பாய்ந்தது/புகுந்தது, ஜடாயுபுரத்தை நிறைத்தது, ஊருக்கு மிக அருகில் இருக்கும் பீமநகரி எனும் குக்கிராமத்தில் கிருஷி பாலத்தில் இந்தத் தேரேகால் வாய்க்காலின் நீர் வரத்து, மதகு திறக்கப்பட்டு மறுகால் திருப்பிவிடப்பட்ட படங்கள், உடைப்புகளின் படங்கள், காணொளிகள் எல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்கிறேன்//

என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன். இதோ மேலூர்  கீழூர்.

செவ்வாய், 23 நவம்பர், 2021

பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 2

சாது பொங்கினால்……காடும் ஊரும் கொள்ளாது - 2


https://thillaiakathuchronicles.blogspot.com/2021/11/%20%20%20%20%20%20%20%20%201.html   பகுதி 1


பகுதி 1ல் எங்கள் ஊரில் தண்ணீர் புகுந்ததைப் பற்றி எழுதத் தொடங்கினேன். அதன் படங்கள் மற்றும் காணொளிகளின் சுட்டி (துளசியின் தில்லைஅகத்து யுட்யூப் சானல்) சில இங்குப் பகிர்கிறேன்.

இன்னும் பல படங்கள், காணொளிகள் இருப்பதால் பகுதி பகுதியாக இங்குப் பகிர்கிறேன்.

தேரேகால் வாய்க்கால் வீட்டின் எதிரே - நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளில் இடம் பெறும் பேர் பெற்ற தேரேகால் வாய்க்கால்

இதன் காணொளியின் சுட்டி இதோ

https://www.youtube.com/watch?v=dG9FB2KmEZQ 

எங்கள் ஊரின் வழி செல்லும் தேரேகால் வாய்க்காலில் (அப்பா இருக்கும் (தம்பியின் வீடு - வீட்டிற்கு தொட்டடுத்து ஓடும் தேரேகால் வாய்க்காலில்) தண்ணீர் வரத்து கொஞ்சம் கொஞ்சமாக ஏறியதன் படங்கள் மற்றும் காணொளிகளை இங்குப் பகிர்ந்திருக்கிறேன். வீட்டிலிருந்து பார்த்தாலே தண்ணீர் வரத்து நன்றாகத் தெரியும்.


https://www.youtube.com/watch?v=_BNHjHliAXI

https://youtu.be/m6-JRfTSOr4

https://youtu.be/bbT5WO2b49I

வீட்டின் எதிரே முன்பு சிறிய தாமரைக் குளமாக இருந்த பகுதி

https://youtu.be/2LnO_GAIwsE

https://youtu.be/z0Y13hekIaU

கீழூர் வீடுகளின் பக்கவாட்டுப் பகுதியில் தேரேகால் தண்ணீர் வரத்து அதிகரித்து வீடுகளின் பின்பகுதி வழியும் புகுந்தது

திருப்பதிசாரம் கீழூர், மேலூர் விளக்கம் படங்களுடன் இனி வரும் பதிவுகளில். இரண்டிற்கும் நடுவில்தான் இந்த தேரேகால்.

https://youtu.be/-UC2gqozM7Y

அடுத்த பதிவில் தேரேகால் எப்படி மரிந்து கீழூர், மேலூருக்குள் பாய்ந்தது/புகுந்தது, ஜடாயுபுரத்தை நிறைத்தது, ஊருக்கு மிக அருகில் இருக்கும் பீமநகரி எனும் குக்கிராமத்தில் கிருஷி பாலத்தில் இந்தத் தேரேகால் வாய்க்காலின் நீர் வரத்து, மதகு திறக்கப்பட்டு மறுகால் திருப்பிவிடப்பட்ட படங்கள், உடைப்புகளின் படங்கள், காணொளிகள் எல்லாம் அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்கிறேன்.

இப்பதிவில் அதிகம் எழுத இயலவில்லை. எனவே அடுத்தடுத்த பதிவுகளில் ஊருக்குள் தண்ணீர் வந்ததற்கான படங்களுடன் காரணங்களையும் ஏன் வாய்க்காலின் குறுக்கே உடைத்து விட வேண்டியதானது என்பதையும் சொல்கிறேன்.

இந்தப் பெருமழையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களை விட அதிகம் பாதிக்கப்பட்டவை பயிர்கள் –  வயல், வாழை, ரப்பர் தோட்டங்கள். எங்கள் ஊரில் வயல்களில் நாற்றுகள் பாதிக்கப்பட்டதால் நட்டம் என்று தெரிகிறது. செய்திகளிலும் பாதிக்கப்பட்ட ஊர்கள் பட்டியலில் திருப்பதிசாரத்தின் பெயர் அடிபட்டதாகத் தெரிகிறது.

ஒட்டுமொத்தமாகச் சொல்லப்படும் கருத்து கன்னியாகுமரி மாவட்டத்திலும் சமீபகாலமாக நீர் நிலைகளும் அதன் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது/படுவது மற்றும் ப்ளாஸ்டிக் குப்பைகள் என்பதுதான்.

அப்படிச் சொல்லப்படுவது சும்மா வாயளவில். வாய்ச்சொல்லில் வீரர்கள் அவ்வளவே. ஏனென்றால் நடைமுறையில் பூஜ்ஜியம். என்னதான் இவை காரணங்களாகச் சொல்லப்பட்டாலும் காரணத்திற்கு உரிய மக்கள் திருந்தப் போவதில்லை. திருந்தவும் மாட்டார்கள். ஆட்சியாளர்களும் அப்படியே.

குப்பைகளை வாய்க்காலில் கொட்டும் மக்களை என்ன சொல்வீர்கள்? குப்பைகளை அகற்ற பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? ஏதேதோ காரணங்கள்….எனக்குப் புரியவில்லை.

நீரின் பாய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகள் என்னை வருந்த வைக்கவில்லை. வைப்பதில்லை ஏனென்றால் நாம் செய்யும் தவறுகளுக்கான பின்விளைவுகளை நாம் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்! 

சிறிய சிறிய காணொளிகள்தான். நேரம் இருந்தால் பாருங்கள்.


  ------------கீதா



வியாழன், 7 அக்டோபர், 2021

நினைவோ, ஒரு பறவை…

 


நினைவுகள் பின்னிலிருந்து தள்ள கனவுகள் முன்பிருந்து இழுக்க, இப்படியாகத்தானே நம் வாழ்க்கைப் பயணம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனிடையே ஒவ்வொரு சூழலிலும்  நாம்  இறையருளால் கவனமாக இருந்து செயல்பட்டு ஓரளவு சுகமாக வாழ்கிறோம், எழுதுகிறோம், வாசிக்கிறோம் என்பது இதை  எழுதும் போது எனக்கும், வாசிக்கும் போது உங்களுக்கும் உறுதியாகியிருக்கும்தானே. இது போல் எப்போதும் இறையருளால் கனவு நனவாகும் நிகழ்காலமும், நிகழ்வு நினைவாகவிருக்கும் நினைவுக்காலமும் நமக்குத் துணையாகட்டும்.

இருந்தாலும் இளமையில் கனவுகளுக்கு இருந்த வேகமும் வித்தியாசமான தோற்றமும் முதுமையை நெருங்கும் போது இருப்பதில்லை. ஆனால் எப்படியோ நம் வாழ்க்கை ஓடத்தின் சீரான பயணத்தை நினைவுக்காற்று தேவையான நேரத்தில், தேவையான அளவு வீசி எளிமையும் இனிமையும் ஆக்கி விடுகிறது. சிறகு விரித்துப் பறக்கும் எண்ணங்கள் அப்படி 40 க்கும் 50க்கும் மேல் வயது ஏற ஏற நெல்லிக்கனியாய் இனிக்கிறது.

எங்கள் ப்ளாகில் வெள்ளி தோறும் ஒவ்வொருகாலகட்ட பாடல்களை,  தான் ரசித்த பாடல்களை மையமாகக் கொண்டு அவற்றைப் பற்றிய விவரங்களுடன் ஸ்ரீராம்ஜி எழுதும் போதெல்லாம் அவர் பதிவுகள் எனக்குப் பல நினைவுகளை எழுப்பிவிடுவதுண்டு. ஆனால் அவற்றை அங்கு கருத்தில் பகிர்ந்ததில்லை. பதிவு போன்றதாகிவிடுமே என்ற காரணத்தினால். பதிவு எழுதும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று ஓரிருவரிகளில் சொல்லிச் செல்வதுண்டு. நானும் கீதாவும் அவை தொடர்பான எங்கள் அனுபவங்கள், நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டதுண்டு. ஆனால், பதிவு எழுத முடியாமல் போனது. இனி அதையும் எழுத முயற்சி.

இங்கு தேவைப்படுவதெல்லாம் நேரமும் சூழலும் தான்.  அப்படிப்பட்ட நேரமும் சூழலும் சில நாட்களுக்கு முன் அதிர்ஷ்டவசமாக எனக்குக் கிடைத்தது. க்வாரண்டைன் ஃப்ரம் ரியாலிட்டி (Quarantine from Reality) சுபஸ்ரீ தணிகாச்சலம் தன் தொடரில் அப்படியான ஒரு பாடலைக் கடந்த வருடம் பகிர்ந்திருந்தது இப்போதுதான் என் கண்ணில் பட்டது. என்ன செய்ய? கண் இருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய் ஒரு வருடம் அதுவும் இந்த கோவிட் நாட்களில் போனது பேரிழப்புதான்.



எங்கள் ப்ளாகில் அருமையாக எழுத்தில் பதிவது போல், QFR ல் சுபஸ்ரீயும் பாடல், ராகம், பாடகர்கள் மற்றும் இசைக்கருவிகள் இசைக்கலைஞர்களை அறிமுகப்படுத்தல் என்று அருமையாக க்வாரண்டைன் ஃப்ரம் ரியாலிட்டியை (QFR) கொண்டு செல்கிறார். அதில் நான் கேட்ட பாடல் ‘பிரியா’ படத்தில் ‘ஹே பாடல் ஒன்று’. இசை ஞானியின் இசையமைப்பில் பஞ்சு ஐயா எழுதி கான கந்தர்வன் ஏசுதாசும், இசைக்குயில் ஜானகி அம்மாவும் பாடியது. ஒரு கவிதையை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்குவது போல் அருமையான ஒரு விளக்கம் வேறு சுபஸ்ரீயிடமிருந்து. கூடவே அந்தப் பாடலுடன் தொடர்புள்ள நிகழ்வுகளையும் தருவது அருமை. இப்படிப் பாடல் கேட்கும் போதெல்லாம் கவிதை வரிகளும் குரல்களின் இனிமையும், கூடவே, ரஜனியும் ஸ்ரீதேவியும் மனதில் வருவது வழக்கம்தான்.

கேரளாவில் இருக்கும் எனக்கு இதெல்லாம் எப்போதாவது நிகழும் நிகழ்வுதான் பெரும்பாலும். அதனால் அப்போதெல்லாம் அப்பாடல் இடம் பெற்ற படமும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளும் வந்து நீண்ட நேரம் நினைவுகளில் பயணிக்க வைக்கும்.

ஆனால் சுபஸ்ரீயின் விளக்கமும், சிவாவின் எடிட்டிங்கும், புதிய இளம் பாடகர்களின் குரலும், இசைக்கருவிகளைக் கையாளும் மாயாஜாலக்காரர்களின் மந்திர விரல்களும் ஒரு புது உலகத்தையே என்னைப் போன்றவர்களுக்குக் காட்டித் தந்தது.  இது அவரால் மட்டும்தான் முடியும். (கீதா சொல்லி சுபஸ்ரீயைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன்). இதெல்லாம் தமிழுக்காகத் தமிழ் உள்ளங்களால் மட்டுமே சாதிக்கக் கூடிய ஒன்று. அவரது சேவை தொடரட்டும். புகழ் ஓங்கட்டும்.

இந்த “ஹே பாடல் ஒன்று’ பாடல் என் நினைவுச் சிறகை விரிக்க வைத்தது. என்னை என் வாழ்வின் 1978, 1979க்குக் கொண்டு சென்று என்னை இன்ப வானில் பறக்கச் செய்ததை சொல்லத்தான் இந்தப் பதிவு.

போடிநாயக்கனூர் சிபிஏ (CPA) கல்லூரியில் பியுசி படித்த காலம். செனட்ரல் தியேட்டரில் படம் பார்த்து நண்பர்களுடன் நடந்து, பரமசிவன் கோவில் மலை அருகேயுள்ள கல்லூரி விடுதிக்குச் சென்ற நாட்கள். எங்களில் இனிமையாகப் பாடும் மீனாட்சிபுரம் முருகேசின் குரலில் இப்பாடல் ஒலிப்பதை இப்போதும் உணரமுடிகிறது.

கல்லூரி உதவிப் பேராசிரியரும், விடுதி வார்டனுமான முருகானந்தன் சாரின் அன்பான, ஆறுதலான வார்த்தைகள். அதையெல்லாம் அப்போது புரிந்து கொள்ளாமல் அவருடன் விரோதித்துக் கொண்ட நாட்கள். அதன்பின் பலமுறை என் ஆசிரியப் பணியிடையே, பல மாணவர்கள் சீறும் போது, ‘அன்று முருகானந்தம் சார். இன்று நான்’ என்று எண்ணி சிரித்து, என் சீற்றத்தைத் தவிர்த்ததுண்டு.

எப்போது சிபிஏ (CPA) கல்லூரி நாட்கள் நினைவுகள் வந்தாலும் அதனுடன் வருசநாடு சேகர் நினைவுக்கு வருவதுண்டு. எப்போதும் சந்தோஷமாக, எதைப்பற்றியும் வருந்தாமல் இருக்கும் சேகர்.  வெளிப்படையாகப் பேசுபவர். குற்றம் காணும் போது அதைச் சுட்டியும் காட்டுவார். ஒரு பையன் ஷோலே என்பதற்குப் பதிலாக ஜோலே என்ற போது யாருக்குமே புரியவில்லை. சேகர், “ஓ ஷோலே படத்தைப் பத்தியா சொல்ற? ஒன்னு சரியா ஷோலேன்னு  சொல்லு இல்லேன்னா அட்லீஸ்ட் சோலே ன்னாவது சொல்லு. பியுசி படிக்கிற நீ இனி இப்படிச் சொல்லாதே” என்றது இப்போதும் நினைவில் பசுமையாய் வந்து சிரிக்க வைக்கிறது. சிந்திக்கவும் வைக்கிறது. தவறை தவறென்று சொல்லி திருந்தச் செய்யும் மனம் எத்தனை பேருக்கு இருக்கிறது?

“பியுசி படிக்கிறதில 5 பேர் மட்டும்தான் பாஸாக வாய்ப்பு. பாக்கி எல்லாம் சும்மா, இந்த நான் உட்பட” என்ற சேகரின் வார்த்தை உண்மையானது. இதைவிட ஆச்சரியம் ஒரு முறை சேகர் எழுதிய ஒரு கதையை எனக்குக் காண்பித்ததுதான். முதல் வரியே “நான் ஒரு நாற்காலியில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறேன். என் முன் பத்திக் குச்சிகளிலிருந்து வரும் மணமுள்ள புகை. என் முன் எல்லோரும் அழுது கொண்டும், தேம்பிக் கொண்டும் இருக்கிறார்கள்” என்ற வரிகள். நான் அதிர்ந்தே போனேன்.

சிரித்த சேகர், “இதும் நடக்கப் போற ஒன்னுதான்”.  என்றதும், அப்படி எல்லாம் பேசக் கூடாது என்று சொல்லி சமாதானப்படுத்தினாலும், சேகரின் பக்கத்து ஊர் பழனிச்சாமி, “சேகர் இதுக்கு முன்னாடி ஒரு தடவ தற்கொலை முயற்சி செய்திருக்கான்” என்று சொன்னது எனக்குப் பயத்தை ஏற்படுத்தியது. பியுசி ஒரு வருடம் தான். பிரிந்த நாங்கள் எல்லோரும் பல வழிகளில் பயணித்தோம்.

சில வருடங்களுக்குப் பின் தேனி பேருந்து நிலையத்தில் பழனிச்சாமியைச் சந்திக்க நேர்ந்த போது, பலதும் பேசினோம். அப்போது நான் மதுரைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். பேச்சினிடையே பேரிடியாய், “சேகர், போனவருடம் தற்கொலை செய்து கொண்டான்” என்ற செய்தி. அதன் பின் இன்று வரை எப்போதெல்லாம் என் வாழ்வில் என் சிபிஏ(CPA) கல்லூரி வாழ்க்கை நினைவுக்கு வந்தாலும் முருகானந்தம் சாருடன் சேகரின் நினைவும் வரும்.

மரணத்தை விரும்பிய சேகர். மரணத்தை மணந்து பிணக்கோலமாய் அமர்வதைக் கதையாய் எழுதிக் காத்திருந்த சேகர். காரணம் கேட்ட போதெல்லாம் சிரித்து மழுப்பிய சேகர், கூடாது என்று அறிவுரை சொன்ன போதெல்லாம் “அதெல்லாம் நான் சும்மா சொல்றது” என்று விசயம் மாற்றிய சேகர். நாற்பது வருடங்கள் கடந்தாலும், நினைக்கும் போதெல்லாம் மனதில் ஒரு வலி.

இனிய நினைவுகளுடன் நமக்கு வேதனை தந்த/தரும் நினைவுகளும் வருவது இயல்புதானே. “பிரியா” படம் பார்க்கப் போன போது சேகரும் எங்களுடன் வந்திருந்தார். இந்தப் பாடலைக் கேட்டதும் என் மனம் அந்த நாட்களை வட்டமிட்டது. இப்போதும் புரிந்துகொள்ள முடியாத டீன் ஏஜ் மனதை எனக்கு நினைவூட்டியது.

பயமறியாத காலம். ஓடும் பாம்பினை மிதிக்கத் தூண்டும் மனதைத் தரும் பருவ்ம். தவறை தவறென்று யார் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாத பருவம். எல்லோரும் அல்ல, சிலர். இப்படி சில அல்லது பல பாடல்கள், தொடர்புடைய ஏதேனும் பொக்கிஷம் போன்ற நிகழ்வு, நினைவுகள், நாட்கள் உங்களுக்கும் நினைவுக்கு வரலாம். பகிர்ந்து கொள்ளுங்கள்.  வேதனயான நிகழ்வுகள் என்றால், பகிர்ந்தால் அந்த வேதனையே பாதியாகும். இன்பத்தைப் பகிர்ந்தால் இன்பம் இருமடங்கு இன்பமாகும்.


-----துளசிதரன்

திங்கள், 28 ஜூன், 2021

மர்மம் – துப்பறிவாளினி – செல்லம்

 

மர்மம்

வீட்டில் ஒரு மாதமாக மர்மம். சில சாமான்கள் காணாமல் போயின. அழையா விருந்தாளி ஊடுருவியிருப்பது தெரிந்தது. ஒரு சில தினங்கள் காலையில் அடுக்களையிலிருந்து ஓடுவதையும் கண்ணால் கண்டோம். உறுதியானது. நேரில் பார்த்த சாட்சி.

இது ஒரு மாதம் முன்பு. அப்போது கண்ணழகி காலையில் அடுக்களையில் மோப்பம் பிடித்து அந்தப் பாதையை அப்படியே நூல் பிடித்து குளியலறை வரை மோப்பம் பிடித்துக் கொண்டே சென்று அங்குமிங்கும் ஓடிப் பிடிக்க முயன்றாள் ஆனால் பொருட்கள் அவளுக்குத் தடையாக இருந்தன. ராத்திரி கூட ஓடியிருக்கிறாள் என்று சில தடயங்கள் அறிவித்தது.

சில பொருட்கள் அல்லது இடங்களின் முன் காவல் இருப்பாள். தலைமறைவான எலியார் எப்போது வெளியில் வருவார் என்று ஆனால் கொஞ்ச நேரத்தில் அவள் இலக்கு மாறிவிடும். இதுதாம் பூஸாருக்கும் பைரவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

அது ஒரு காலம்! நம் வீட்டுச் செல்லம் போட்டுத்தள்ளிவிட்டுக்  காவல் காப்பாள். அவர்களின் சட்டத்தில் போட்டுத் தள்ள இடம் உண்டு. பாவ புண்ணியக் கணக்கு உண்டா என்று தெரியவில்லை! இப்போது அவள் ஓடி சாகசம் செய்யும் நிலையில் இல்லை. ஏன்? தகவல் கீழே. தலைப்பு செல்லம்.

என்கௌண்டர் தொடங்கலாம் - விஷம் வைக்கலாம், ஒட்டிக் கொள்ளும் அட்டை வைக்கலாம் என்று உள்துறையில் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

என்கௌண்டருக்கு நான் எதிரி.  போட்டுத்தள்ள நமக்கு என்ன அதிகாரம்? எலியாருள்ளும் உயிர்தான். வெளித்தோற்றம்தான் வேறு. மனிதர்கள் யாரேனும் நமக்குத்  தொந்தரவு கொடுத்தால் சட்டத்தைக் கையில் எடுத்து நாம் என்ன போட்டுத் தள்ளுகிறோமா? அவர்கள் உலகச் சட்டம் வேறு.  என்று லா பாயின்ட், தத்துவம் எல்லாம் பேசினேன்.

அதுவும் இது உள்வீ(நா)ட்டு விவகாரம். நாம் அவரைப் பிடித்து துரத்திவிட்டு மீண்டும் உள்நுழையாமல் எல்லைப் பாதுகாப்பு போடுவோம். பார்த்துக் கொள்வோம் என்று அரசியல் பேசினேன். பொறி எங்கு கிடைக்கிறது என்று பார்த்தால் அருகில் எங்கும் இல்லை. சந்தையில் கிடைக்கும் ஆனால் சந்தை இப்போது இல்லை. இந்த கோவிட் சமயத்தில் அலைய தயக்கம்.

ஸ்காட்லாந்து யார்ட், லண்டன், ஆரேகன் என்று வெளிநாட்டு நிபுணர்களை ஏற்பாடு செய்யலாமா என்றும் யோசித்தேன்! அவர்கள் எல்லோரும் அப்பாயின்ட்மென்ட் கொடுப்பது கடினம்.

துப்பறிவாளினி

நான் தான்!!! தடயங்கள் கிடைத்தன. அதை வைத்து அவர் எங்கெங்கு செல்கிறார் எங்கு தலைமறைவாகிறார், என்னென்ன பொருட்களைத் திருடுகிறார், சாப்பிடுகிறார் என்று ஆராய்ந்தேன்.

காணாமல் போனவை : சுவாமி முன் அரிசி மாவில் போடும் கோலம் (நான் வாசலிலும் அரிசிமாவுதான். கோலமாவு என்று விற்பது வாங்குவதில்லை). விளக்குத் திரி, சுவாமிக்கு வைக்கும் வீட்டில் பூத்த மல்லிப் பூக்கள், தவறிப் போய் பீன்ஸ் காரட் ஏதேனும் ஒன்றிரண்டு வெளியில் இருந்தால் பீன்ஸ் காணாமல் போயிருக்கும். காரட் துருவப்பட்டிருக்கும். காணாமல் போனவை ஏதேனும் டப்பாவின் பின்னால் இடுக்கில் இருக்கும்.

அஹிம்சை வழியில் முதலில் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று அலசியபோது அவருக்கு வெங்காயம், பூண்டு பிடிக்காது. வெட்டி அவர் வரும் இடங்களில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தால் வரமாட்டார் என்று ஒரு தகவல். ஒரு சந்தேகம் முளைத்தது. வெங்காயம் பூண்டு போட்ட மசால் வடைக்கு ஆசைப்பட்டு வந்துதானே பொறியில் சிக்குவார்! ஒரு வேளை பூண்டும் வெங்காயமும் பச்சையாகப் பிடிக்காது போலும்! சரி வந்தது வரட்டும். அதையும் வெட்டிப் போட்டுப் பார்த்தேன்.

முதல் நாள் வெற்றி. குறிப்பாகப் பொருள்கள் எதுவும் கலைந்திருக்கவில்லை. காணாமல் போகவில்லை, கோலம் உட்பட. அவரது கக்காவும் இல்லை. ஆனால் இதில் ஒரு சங்கடம். வெங்காயம் பூண்டு மணம் ஓரிரு நாள்தான். பின்னர் மீண்டும் வருகை இருக்கும். இதற்காகக் கிலோ கிலோவாக வெங்காயம், பூண்டு வாங்க முடியுமா? நிதித் துறை பின்வாங்கியது.

சரி அடுத்த அஹிம்சை நடவடிக்கை. கடலைமாவு, பாராசிட்டமால், (எலியாருக்கும் ஜுரம் வருமா அல்லது ஜுரம் வரவழைக்குமோ?!!) தக்காளிச்சாறு என்று ஏதோ சில குறிப்பிட்ட அளவு கலந்து உருட்டி மணிக் கொழுக்கட்டை சைசில் லட்டு பிடித்து வைக்கச் சொல்லி ஒரு தகவல். உங்களுக்குக் கூட லட்டு பிடித்து தந்ததில்லை ஆனால் எலியாருக்கு லட்டு பிடித்தேன். ஹூம் நான் செய்த லட்டு பிடிக்கவில்லை போலும் எலியார் சீண்டவில்லை. அவருக்கும் நம்ம டெக்கினிக்குகள் தெரியாமல் இருக்குமா என்ன?! தப்பித்துத் தலைமறைவானார்.

இத்தனைக்கும் வீட்டிலுள்ள ஒட்டைகள் எல்லாம் அடைத்தாயிற்று. நாங்கள் ஒவ்வொரு செக் ஆக வைக்க வைக்கத் தடயங்கள் மாறிக் கொண்டே இருந்ததால் எப்படி வந்து எங்கு சென்று ஒளிகிறார், தலைமறைவாகிறார் என்று ரொம்பக் குழப்பமாக இருந்தது. மூளையில் பளிச். கண்ணழகி குளியலறை வரை நூல் பிடித்துச் சென்று முகர்ந்தது நினைவுக்கு வர…

குளியல் அறையில் இருக்கும் அந்தக்கால முறையில் சுடுதண்ணீர் போடும் சிமென்ட் தொட்டி உட்புறம் ஒரு பானை இருக்கும் (பானை இன்பில்ட் போன்று வெளியில் எடுத்துக் கழுவி எல்லாம் செய்ய முடியாது) அடியில் விறகு வைக்க வெளியிலிருந்து ஒரு பெரிய ஓட்டை இருக்கும். அதற்குள் லைட் அடித்துப் பார்த்தால் சாம்பல் மண் என்று ஒரு பக்கத்தில், ஓட்டையும் இருப்பதாகத் தெரிந்தது. ஓ! இதுதானா! என்று வெளிப்புற ஓட்டையை தகரம், கல் என்று மூடி கம்பிகள் இல்லா  சிறையாக்கினோம்.

இரவு குளியலறைக் கதவின் தாழ்ப்பாளைச் சரிசெய்து நன்றாக மூடி விட்டோம். மறுநாள் குளியலறையைத் திறந்த போது எலியாரின் துவம்சம் தெரிந்தது. துடைப்பக்கட்டை, மாப்பர் எல்லாம் கீழே விழுந்து குவளை எல்லாம் புரண்டு இருந்தது. அவரது கக்கா வேறு. அடப்பாவி! சிறைக்கதவை உடைத்து தப்பித்துவிட்டாரா? ஆராய்ந்தால் அவை எல்லாம் சரியாகத்தான் இருந்தன.

குளியலறையில் இருக்கும் பரண் கண்ணில் பட, அதில் வீட்டு உரிமையாளர் கச்சடா சாமான் எல்லாம் போட்டு வைத்திருக்கிறார். சரி அதில்தான் தலைமறைவாகி இருக்க வேண்டும் என்று ஒரு யூகம்.

மறுநாளும் இதே போல் பாதுகாப்பு செய்ய எலியார் உள்ளே துவம்சம் செய்திருக்க சுவாமி முன்னான கோலம் அழிந்திருக்கவில்லை. சரி அவர் ராஜ்ஜியம் குளியலறையோடு என்பது தெரிந்திட, எப்படியாவது வெளியேற்றலாம் என்று நினைத்து வழக்கம் போல சுவாமி முன்  கோலம் போட்டுவிட்டு  மொட்டைமாடி சென்று வந்து பார்த்தால் சுவாமி முன்  போட்டிருந்த கோலம் அழிந்திருந்தது.

எனக்கு ஆச்சரியம். என்னடா இது ஒரு 10 நிமிடத்தில் இப்படியா என்று தோன்றிட கணவர் சொன்னார் ஒரு வேளை பல்லியாக இருக்கலாம். அரிசிமாவைச் சாப்பிட்டது பல்லியாரா? எலியாரா? எனக்கோ, குளியலறைக் கதவு திறந்திருந்ததால், “இரண்டு நாள் என்னை அடைத்து வைச்சீங்கல்ல. பாருங்க நான் இப்ப அடுக்களையில் புகுந்துட்டேன் என்று கோபத்தில் எலியார் சவால் விடுவது போல் இருந்தது.

மீண்டும் இரவு குளியலறைக் கதவை மூடி வைத்துப்படுத்தோம்.  மறுநாள் பொருட்கள் எல்லாம் அப்படியேதான் இருந்தது. அவரது கக்காவும் இல்லை. அப்போ அடுக்களையில்தான் தலைமறைவு.

உன் அஹிம்சை செல்லாது, மறைமுக என்கௌண்டர் தான் சரி என்று எலியாருக்கான விஷ கேக்குகள் – பச்சைக்கலரில் எள்ளு கடலைமிட்டாய் போல இருப்பது - வாங்கிவந்து வைத்தார் கணவர். நானோ, “பிள்ளையாரப்பா எலியைப் பிழைக்க வைத்துவிடு. உனக்கு தேங்காய் உடைச்சு கொழுக்கட்டை, மோதகம் எல்லாம் செஞ்சு தரேன்” என்று!!! வேண்டுதல் வைத்தேன்! எலிக்காக வேண்டிக் கொண்டவர் யாரேனும் இருந்தால் என் குழுவில் இணையலாம்!

விஷக் கேக்கில் ஒரு முனை மட்டும் மிஸ்ஸிங்க். அதுவும் மிகச் சிறிதளவே. என் பிரார்த்தனை பலித்ததோ? அந்தச் சிறிய அளவை ஒரு வேளை பல்லியார் சாப்பிட்டிருப்பாரோ? இல்லை எலியாருக்கு விஷக் கேக்கும் பழக்கமாகி சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட் ஆகிவிட்டாரா, அல்லது தெரிந்து சீண்டவில்லையா?

குளியலறையில் எந்தத் தடயமும் இல்லை. கோலம் மட்டும் அழிந்திருக்கிறது. ஆனால் அரிசி மாவு வைத்திருக்கும் கிண்ணத்தில் மாவில் எந்தத் தடயமும் இல்லை. கக்கா கூட இல்லை. பல்லியார்தான் கோலத்தைக் கலைத்திருப்பாரோ? எலியார் பரணில் இருக்கிறாரா? ஒரே மர்மமாக இருக்கு.

தலைமறைவாகிய பெண். வயது 6 மாதம். கொழு கொழு உடம்பு. கண்டால் துப்பறிவாளினி எனக்குத் தகவல் சொல்லிடுங்க!  அடையாளம் - அவர் வால் நுனியில் ஒரு சிறு வெட்டுக்காயம் இருக்கும்.

செல்லம்:

செல்லத்திற்கு வயது 12 முடிந்து 4 மாதங்கள். 10 நாட்களுக்கு முன் தொடங்கியது மூச்சுவிடச் சிரமப்படுகிறாள். பலசமயங்களில் முகத்தை உயரே தூக்கிக் கொண்டு மூச்சு விடுகிறாள். மார்புப் பகுதி பெரிதாகி வீங்கியது போல் இருக்கு. பல்மொனரி எடிமா. நுரையீரல் உள்ளே அல்லது வெளியே நீர் கோர்த்திருக்கலாம். மருத்துவரை வீட்டிற்கு வந்து பார்க்கச் சொல்லி மகன் அவரோடு பேசினான். ஹார்ட் ஃபெயிலியர் என்றான் மகன். இசிஜி, எக்ஸ்ரே எடுக்கச் சென்றால் செல்லம் ஒத்துழைக்கவில்லை. மகனும், பரவாயில்லை விடு என்று மாத்திரை சொன்னான். கொடுத்து வருகிறோம்.

இவளை ரெஸ்டில் இருக்க வை என்று சொல்கிறான்!! எப்படி?

மகனிடம் சொன்னேன். “என்னடா இவளுக்கா ஹார்ட் ஃபெயிலியர்? என்ன டயக்னாசிஸ் செய்யற? மாடி ஏறுகிறாள், தெருவில் செல்லங்கள் போனா ஒடிச் சென்று குரைக்கிறாள் வம்பு வளர்க்கிறாள்! உள்ளே வந்ததும் தலையைத் தூக்கி வைத்துக் கொண்டு மூச்சு விடச் சிரமப்படுகிறாள்! 

அவன் சிரித்துவிட்டான். “ம்மா ரொம்ப முடியலைனாதான் அடங்கி ஒடுங்கி இருப்பாங்க இல்லைனா கடைசி வரை அப்படித்தான் இருப்பாங்க. எனிவே அவள் காலம் முடியப் போகிறது. அவளை நிறைய கொஞ்சு, தடவிக்கொடு, சந்தோஷமாக இருக்கட்டும் என்றான்.

அவள் கஷ்டப்படாமல் தன் இறுதி மூச்சு வரை சந்தோஷமாக இருக்கட்டும்!

(சில காரணங்களினால் (செல்லம் காரணமல்ல) மீண்டும் இணையம் பக்கம் வரமுடியுமா என்று தெரியவில்லை. முடிந்தால் நேரம் கிடைத்தால் இடையில் வருகிறேன். )

-----கீதா

ஞாயிறு, 13 ஜூன், 2021

நினைவுகள் தொடர்கதை – 1

 


ஏற்கனவே ஸ்ரீராமின் பதிவு எழுப்பிய நினைவால், இத்தலைப்பில் அம்மா பற்றி எழுதியிருந்தேன். 

இது மற்றுமொரு நினைவு. வலைப்பூவில் ஒரு பதிவை அல்லது பதிவின் ஒரு பகுதியை  வாசிக்கும் போது அல்லது ஏதேனும் ஒரு வரி போதும், நமக்கு ஏற்பட்ட அதே போன்ற அனுபவங்களை அல்லது அதை ஒட்டிய அனுபவங்களை நம் மனதில் நினைவுப்பெட்டகத்திலிருந்து எழுப்பிவிடும்.

[எழுத முடியாததற்கு, கோர்வையாக எழுதவராதது உட்பட காரணங்கள் பல.. ஆடத்தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம் என்பது போல்!]

எபி யில் புதன் கேள்வி பதில்களில், பானுக்கா ஒரு கேள்வி கேட்டிருந்தார். //உங்களிடம் இருக்கும் ஏதோ ஒரு பழக்கத்தை நண்பர்களும், உறவினர்களும் கேலி செய்தாலும், விமர்சித்தாலும், நீங்கள் ரசிப்பது உண்டா?//

என் நினைவுகளைத் தூண்டிவிட்ட கேள்வி.

கூட்டுக்குடும்ப வளர்ப்பு. என் தம்பி தங்கைகள் [என் மாமா அத்தை குழந்தைகளையும் நான் அப்படித்தான் சொல்வது. ஒரே கூரைக்கு அடியில ஒரு தாய் வயித்துப் பிள்ளைகளா இருந்ததால (வடிவேலு மாடுலேஷன்)] எதிர்த்துக் கலாய்க்கத் தெரியாத என்னை ரொம்பவே கலாய்ப்பார்கள்.

சிறுவயதில் எனக்குக் கோபம் என்பதை விட மனம் சுருங்கிவிடும் எனலாம். அதன் பின் மனம் பக்குவம் பெறத் தொடங்கியதும் அவர்களின் நகைச்சுவைக் கலாய்த்தலை ரசித்தேன். ஆனால் அப்பவும் பதிலுக்குச் சொல்லத் தெரியாது.

ராத்திரி 8.30, 9 மணிக்கெல்லாம் நான் சாமியாடத் தொடங்கிவிடுவேன். கைல புக் தலைகீழா இருக்கும். பாட்டியும் மெஷின் ராட்டை ஓட்டிக் கொண்டு முழிச்சுருப்பாங்க யாரெல்லாம் படிக்கறாங்க, கொட்டாவி விடறாங்கன்னு பார்த்துக்கொண்டு.

“பாட்டி, கீதாக்கு நெத்தில முழைச்சுருக்கு இப்படி ஏதாவது ஓரு வாண்டு, தான் படிக்கறோம்னு பாட்டிக்கிட்ட காட்டிக்க என்னைப் போட்டுக் கொடுக்கும். நான் சாமி ஆடுவதால் தலை கீழே பட்டு பட்டு நெத்தில அடியாம்! ஹூ கேர்ஸ்!

“கீதா பாத்து. எதுக்கும் முன்பக்கம் ஒரு தலைகாணி வைச்சுக்க” அப்படின்னு தலைகாணி எடுத்துக் கொடுக்கும் மற்றொரு வாண்டு.

“கீதாவ வரச்சொல்லு, வாசல்ல கோலம் போடணும்” என்று காலையில் எங்க பெரிய மாமி வந்து கேட்டால்…

“நம்ம கீதா நெத்தி முழைக்க, நிலத்தில விழுந்து விழுந்து உழைச்சு ரொம்பக் களைப்பா இருக்கா பெரியம்மா” என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே ஒரு வாண்டு சொல்லும்.

“டேய் ஏண்டா அப்படிச் சொல்ற கீதாவ? அவ நல்ல புத்திசாலி தெரியுமோ”

ஹிஹிஹிஹி என்று சிரிப்புச் சத்தம் பின்னணி இசையாக… ஹூ கேர்ஸ்!

“ஆமாமா நீங்க சொல்றது ரொம்ப சரி பெரியம்மா. மார்க் எல்லாம் முக்கியமில்ல.. ஏன்னா அவ லேடி ஐன்ஸ்டீன். நோபல் லாரட் ஆக எப்படி ஆராய்ச்சி எல்லாம் பண்ணுறா தெரியுமா” என்று சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு ஒரு வாலு சொல்லும்…

“அப்படியா”?

“ஆமாம் பெரியம்மா முன் நெத்தில முழைச்சா ஃப்ரன்டல் லோப் வொர்க் ஆகுமா? பின்பக்கம் முழைச்சா மூளைக்கு என்ன ஆகும்? சைடுல பட்டா? மூளை வொர்க் ஆகுமோ, மெமரி கூடுமோன்னு ப்ராக்ட்டிக்கலா எக்ஸ்பெரிமென்ட். தீஸிஸ் எழுதப் போறா” என்று சிரிக்காமல் சொல்லும் மற்றொன்று.

“ச்சே என்ன மண் தூசி பாரு” என்று சொல்லிக் கொண்டே ஒரு வாண்டு பெருக்கினால், மற்றொன்று தொடங்கும் முன் நானே முந்திக் கொண்டுவிடுவேன்…

“பின்னே நேத்து ராத்திரி நான் எவ்வளவு நேரம் எக்ஸ்பெரிமென்ட் பண்ணினேன் தெரியுமா?” என்று சிரிக்காமல் சொல்லிவிட்டுப் போவேன். மீண்டும் பின்னணி இசை ஒலிக்கும். ஹூ கேர்ஸ்!

வாலுங்க எல்லாம் படிப்பில் கெட்டி. நான் ரொம்பவே சுமார். ரொம்பவே சுமார்னா வெளில சொல்லமுடியாத அளவுக்குச் சுமார்!! அதுவும் கணக்கு, அறிவியல். மூச்! அதுக்கு மார்க் வரப்ப,

“நம்ம லேடி ஐன்ஸ்டீன் ஸ்கூல் ட்ராப் அவுட் ஆயிடுவா சீக்கிரம்….”

ஹூ கேர்ஸ்!

பாடத்திட்டத்தில் இருப்பதைத் திரும்ப திரும்பப் படிப்பது, எழுதுவது, மனனம் செய்து தேர்வு எழுதுவது என்பது எனக்குக் கடினமாக இருந்தது. நல்ல மதிப்பெண்கள் பெறுவது என்றால் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் காரணம், கட்டுரை, இலக்கணம். மனனம் செய்யாமல் எழுதுவதை ஆசிரியர்கள் ஊக்குவித்தார்கள். ஆனால் வாழ்க்கை உருண்ட போது இலக்கணம் மாறிற்றே, இலக்கியம் போனதே, பழைய கீதா என்ன ஆனாள்? எங்கே போனாள் எங்கே போனாள்? ன்னு ஆகிப் போச்சு!!! போகட்டும்.  

ஏதேனும் கதை,  கவிதை, கட்டுரை, நாடகம், எழுதுவது பற்றி யோசிப்பது, எழுதுவது என்று கொஞ்சம் கற்பனை உலகில் சஞ்சரிப்பதுண்டு. அதுவும் ஆழமான கருத்துகள், அனுபவத்தில் கற்றவை, மனித இயல்புகள், தத்துவங்கள் என்று (இப்பவும் உண்டு. அதன் பின்விளைவுகள் ஏராளம்.!!!) அதனால் படிப்பில் கவனம் குறைவு. அப்படி யோசித்துக் கொண்டிருப்பதையும் கலாய்ப்பார்கள்.  ஹாஹாஹா. ஹூ கேர்ஸ்!

“அவ தூங்கி விழுந்தாலும், ‘நான் தூங்கலை, யோசிக்கிறேன்னு’ சமாளிப்பா. தூக்கத்துல நேத்து கூட ஏதோ ஒரு கவிதை இங்கிலிஷ்ல சொன்னாளே”

“போடா, ஐன்ஸ்டீனுக்கு கவிதை எழுத வருமா என்ன?”

“அவ எழுதினது இல்லடா ஏதோ ட்ராமா எழுதறா அதுல தாகூர் போயம் ‘வெயிட்டிங்க்’ னு ஏதோ…”

அப்படி எதுவுமே நடந்திருக்காது ஆனால் அவர்களுக்கும் பொழுது போக நான் தான். ஹூ கேர்ஸ்!  

என் நட்பு வட்டம் பெரிது. சுவாரசியமாகக் கதை அளப்பேன். நாடகம், பாட்டு, ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டி, மூன்று கேம்ஸ் டீமில் செலக்ஷன் என்று இருந்ததால் சும்மானாலும் ஒரு கூட்டம் இருக்கும். ஆசிரியர்களின் செல்லப் பிள்ளை. 

இலக்கண விதிப்படியும், ஹைக்கூ வடிவிலும் கவிதை எழுதியதுண்டு!! தமிழ் ஆசிரியை பாராட்டி ஊக்கப்படுத்தியதுண்டு. அது இறந்தகாலம். உங்களால நம்பமுடியலை இல்லையா!! ஹிஹிஹி!! நிகழ்காலம் அப்படி! என்ன செய்ய? நம்ப முடியாத அளவு அப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!!! போனா போகுது விடுங்க!

குடும்பம் மட்டுமல்ல, ஊருக்கே நாட்டாமை எங்கள் பாட்டி. மற்ற பெரியவர்களில் சிலர் ஆசிரியர்கள். வீட்டில் படிப்பு. படிப்பு. படிப்பைத் தவர வேறொன்றுமில்லை. படிப்பு ஒன்றுதான் சோறு போடும் வேறு எதுவும் சோறு போடாது என்ற அந்தக்காலத்து மத்தியதரக் குடும்பத்திற்கும் கீழான குடும்பத்து சித்தாந்தம். 

கேக்கணுமா?! வாண்டுங்க எல்லாம் ஸ்கூல் விட்டதா வீடு வந்தமான்னு இருப்பார்கள். ராத்திரி முழிச்சிருந்து படிப்பாங்க. ரேங்க் வேற. அதனால் வீட்டில் நல்ல பெயர்.

நாம அப்படியா? பெரும்பாலும், கேம்ஸ், அந்தப் போட்டி இந்தப் போட்டின்னு ஊரைச் சுத்திட்டு வீட்டுக்கு 6.40 பஸ்ஸைப் பிடிச்சு 7.15, 7.30 க்கு வந்தா….அப்பவும் பாருங்க நான் ரொம்ப சமத்தாக்கும். எத்தனை பிசியா இருந்தாலும் 6.40 பஸ்ஸை மிஸ் பண்ணாம வந்துருவேனாக்கும்! அப்புறம் நடக்கறது எல்லாம் கிட்டத்தட்ட வடிவேலு காமெடி ஸ்டைல்.

“நீ போட்டிக்குத்தான் போனேன்னு சொல்ல வேண்டியதுதானே? பெரிசா உதார் விடுவியே தைரியசாலியாட்டம்"

“எவ்வளவு திட்டினாலும், அடிச்சாலும், சுரணை இல்லாத எருமை, சட்டம் பேசுற சட்டம்பி” ன்னு பாட்டியும், அம்மாவும் திட்டினப்ப இதுங்க எல்லாம், “கீதா நல்லவ. லேடி ஐன்ஸ்டீன்! அவ ஏதோ போட்டிக்குத்தான் போனா அதான் லேட்டு”ன்னு சப்போர்ட் பண்ணினாங்க" என்று நான் அப்பாவியாய் சொல்ல…….மீண்டும் சிரிப்பொலி கேட்கும். ஹூ கேர்ஸ்?! 

எவ்வளவு வைச்சு வாங்கினாலும் நான் வழக்கம் போல் சாமியாடிடுவேன். இதற்காகவே, அம்மாவை ஐஸ் வைச்சு, பாட்டிக்குத் தெரியாம கட்டங்காபி வேற குடிச்சு ராத்திரி படிக்கறமோ இல்லையோ சும்மா முழிச்சிருப்போம்னு முயற்சி எல்லாம் கூட செஞ்சேன். ம்ஹூம். சாமியாட்டம்தான்! கலாய்த்தல்தான்.

இப்போதும் கூட அவர்கள் என்னை இரவு 9 மணிக்கு மேல் அழைத்தால் மிஸ்ட் காலாகத்தான் இருக்கும். “சாமியாடிட்டியா? கம்ப்யூட்டர் பத்திரம்” ன்னு மெசேஜ் வேற. பெரும்பாலும் நானே என்னைக் கலாய்த்து முந்திக் கொண்டுவிடுவேன்!

சீக்கிரம் படுக்கச் சென்று காலையில் 4 மணிக்கு எழும் பழக்கம் அந்தச் சிறுவயதிலேயே வந்துவிட்டது. தொட்டில் பழக்கம்! பாட்டி என்னை 4 மணிக்கு எழுப்பிக் கோயிலில் கோலம் போட அழைத்துச் செல்வார். 

இத்தனை கலாய்த்தாலும் அத்தனைபேரும் என்னிடம் மிக மிக அன்பு உடையவர்கள். I AM BLESSED! எனக்கு ஏதேனும் ஒன்று என்றால் உடனே உதவிக் கரம் நீட்டிவிடுவார்கள்.

இன்னும் நிறைய உண்டு. ஆனால் எதுவும் என் தன்னம்பிக்கையைத் தளர்த்தியதில்லை. ரசித்து சிரித்துவிடுவேன். அதே வேளையில் நான் யோசித்தது, எல்லோர் மனதும் கலாய்த்தலை ஏற்கும் அளவு வலுவானதாக இருக்காது. சிலர் நத்தை போல் ஓட்டிற்குள் சுருங்கி விடுவார்கள். அது மனச்சோர்வு, மனப்பிறழ்விற்கு இட்டுச் செல்லும் ஆபத்துண்டு. எனவே கலாய்ப்பதிலும், வார்த்தைகளிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதுவே அப்பாடம். நினைவுகள் தொடரலாம்!!! 

(பி.கு. கல்வி, உளவியல் என்று வந்தா கருத்து கண்ணாயி ஆகிடுவோமே!!! (கருத்து கந்தசாமி ஆண்பால்!). அப்படி, மதுரைத் தமிழனின் சமீபத்தியஅருமையான பதிவு என்னைத் தூண்டியது. மதுரையும் நான் பதிவாகப் போடுவேனோ என்று சொல்லியிருந்தார். பதிவாக எழுதலாம் என்று நினைத்து எழுதத் தொடங்கி……கோர்வையாக எழுத வராததால் அதைக் கொஞ்சம் ஆறப் போட்டிருக்கிறேன். அதனால், அடுத்து எழுத நினைத்தவை இப்போது.)


-----கீதா  

 

திங்கள், 24 மே, 2021

சந்திரன் அளியன்

 


கடந்த 15 மாதங்களாக உலகெங்கும் காட்டுத் தீ போல பரவி லட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கித் தாண்டவமாடும் கோவிட், இடையே அணைவது போல் பாசாங்கு செய்து பதுங்கிப் புத்துயிர் பெற்று மீண்டும் ஆக்கிரமித்து வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகின் பல பாகங்களில் பல பிரச்சனைகள் தோன்றினாலும் அவை எல்லாம் இது போல் எல்லா நாடுகளையும், சீனாவைத் தவிர (இது ஒரு வியப்புதான் – ஏன்? எப்படி?) நிலை குலையச் செய்ததில்லை. வட இந்தியாவில் கோவிட் 19 நோயால் உயிரிழந்த ஒருவரின் உடலை அவரது மனைவியும் பெண் குழந்தைகளும் சுமந்து வரும் காட்சியைக் காணும் போது நம் நெஞ்சில் வேல் பாய்ந்த வலி மரணம் வரை நம் ஒவ்வொருவரையும் விட்டுப் போகாது.



அது போலவே பல அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், காவல் அதிகாரிகள், எஸ்பிபி போன்ற கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரது இழப்பும் நமக்கு வேதனைதான். இதனிடையே இக்கோவிட் 19 காரணமாக நம் ஒவ்வொருவருக்கும் நெருக்கமான பல உறவுகளுக்கும் நட்புகளுக்கும் நிகழும் மரணங்கள் நமக்குப் பேரிடி போல வந்த வண்ணமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பேரிழப்பு எனக்கும் இந்த கோவிட் 19 காலகட்டத்தில் கடந்த வாரம் நேர்ந்தது.

எங்களது சந்திரன் அளியன் (அளியன் என்றால் சகோதரியின் கணவர்) அவரது மறைவுதான் அது. என் ஒன்றுவிட்ட சகோதரி இந்திராபாயின் கணவர் கொச்சி களமசேரி ஹெ எம் டி யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 70 வயதைத் தாண்டிய போதும் இளமையில் இருந்தது போலவே எங்கள் உறவுகளை எல்லாம் எப்போதும் எல்லா இன்ப துன்பங்களிலும் நேரிலும் அலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு அன்பு பாராட்டுவதால் எல்லோரது அன்பிற்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர்.

என்னைப் பொருத்தவரை என் வாழ்விலும் 1980களில் எனக்கு லா பெல்லா ஃபைனான்சியர்ஸிலும், our college லும் ஹாரிஸன்ஸ் மலையாளம் லிமிட்டெட் லும் வேலை பெற உடனிருந்து உதவியவர். 1990 களில் எனக்கு ஒரு வாழ்க்கைத் துணை தேட பெற்றோருடனும் என்னுடனும் எப்போதும் உடனிருந்து எல்லாவற்றையும் நடத்தித்தந்தவர்.

இடையிடையே நான் மறந்தாலும் அலைபேசியில் அழைத்து நலன் விசாரித்தவர். கோவிட்டின் பிடியிலிருந்து தன்னால் இயன்றவரை தப்ப முயன்றவர்.  மார்ச் மாதம் மாரடைப்பு வந்தும் அதிலிருந்து மீண்டவர். மே மாதம் இரண்டாம் வாரம் எப்படியோ அவரை கோவிட் பிடித்துவிட வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்துவந்தார். கோவிட்டின் கை ஓங்கிய போது மே 14 ஆம் தேதி களமசேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மே 17 இரவு ஏற்பட்ட மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார்.

உடல், தன்னார்வலர்ககால் களமசேரி (எல்லா மரண நிகழ்வுகளிலும் முன்னின்று நடத்தியவர் அவரது சடங்குகள் நடத்த நான்கு தன்னார்வலர்கள் மட்டும்) முனிசிபாலிட்டியில் எரிக்கப்பட்டது. 19 ஆம் தேதி அவரது அஸ்தி அடங்கிய சாம்பல் வீட்டின் தென் மூலையில் பாதுகாக்கப்படுகிறது. கோவிட்டின் தாண்டவத்திற்குச் சிறிய இடைவெளி கிடைக்கும் போது ஆலுவா அத்வைத ஆசிரமத்தை ஒட்டிய பெரியாறு நதியில் அவரது அஸ்தி கலந்த சாம்பல் கலக்கப்பட காத்திருக்கிறது. அதுவரை எல்லோராலும் அவரது ஆத்மாவின் நித்திய சாந்திக்கும் மோக்ஷ பிராப்திக்கும் பிரார்த்திக்கத்தானே முடியும். 

இதை வாசிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் மனதில் இது போல் ஒன்றோ ஒன்றிற்கு மேற்பட்டோ உங்கள் பிரியமானவர்களின் கோவிட் மரணங்கள் வந்து உங்களை வேதனைக்குள்ளாக்குவது தெரிகிறது. அவர்களது எல்லோரது ஆத்மாக்களுக்காகவும் பிரார்த்தனை செய்வோம். காலம் செய்யும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு இப்படித்தான் வேதனைதான். இதுவும் கடந்து போகும் தான். காத்திருப்போம். "Time and Patience  will heal all wounds..."

கூடவே கோவிட் 19 எனும் இத்தொற்று நோய் பிடியிலிருந்து நம்மையும் நம்மவர்களையும் இவ்வுலக மக்கள் அனைவரையும் காக்க எல்லாம் வல்ல இறைவனை இத்தருணத்தில் வேண்டிக் கொள்வோம்.


 நட்புடன்

துளசிதரன்


 

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

நினைவுகள் தொடர்கதை - அம்மா

  

நினைவுகள் தொடர்கதை என்ற தலைப்பைப் பார்த்ததும் கதையின் தலைப்பு போல இருக்கிறதோ? ஆனால் இது கதையல்ல நிஜம். இந்தத் தலைப்பில் ஒரு கதையும் என் ட்ராஃப்டில் முடிக்கப்படாத நிலையில்!

புதன், 1 ஜூலை, 2020

அக்கம் பக்கம்

அமெரிக்காவில் இருக்கும் என் புகுந்த வீட்டுச் சித்தப்பா மகளுக்கு அரை செஞ்சுரி பிறந்த நாள். அதற்காக அவளுக்குத் தெரியாமல் எங்கள் வட்டத்தில் (எங்கள் குழுதான் எங்கள் புகுந்த வீட்டு ஜாலி பயணக் குழு) உள்ளவர்கள் மற்றும் அவள் பெற்றோர் அனைவரையும் ஜூம் வீடியோவில் அவளை வாழ்த்த ஏற்பாடு செய்தார் குழுவில் ஒருவர். அமெரிக்கா நேரம் இரவு 12க்கு அதாவது இங்கு நமக்கு காலை 9.30க்கு. என்னால் பங்கு கொள்ள முடியவில்லை. அந்த வீடியோ முடிந்ததும் அவள் என்னை அழைக்க

செவ்வாய், 23 ஜூன், 2020

புன்னகையே பொன்நகை - பள்ளி அனுபவம்

பொன்நகை வேண்டாம் புன்னகை ஒன்றே போதும் என்று நாம் சொல்லிக் கொண்டாலும் அந்தப் புன்னகையை நாம் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். தொலைத்துவிடுகிறோம்.

ஞாயிறு, 14 ஜூன், 2020

கேரளத்தில் தேர்வுகள் - அனுபவத் தத்துவம் - செபியின் விளையாட்டு

பகிர நினைத்த செய்தி

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைந்திடட்டும். 

கேரளத்தில், மார்ச்சில் நடை பெறத் தொடங்கிய 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடந்துகொண்டிருந்த சமயத்திலே எதிர்பாராத  ஊரடங்கினால்  தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் மே மாதம் 26 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டு மே 26 முதல் மே 31 வரை நடந்திருக்கின்றன. தொற்று பாதிப்பு இல்லாத பகுதிகளில், பரீட்சை எழுதும் மையங்கள் மாற்றப்பட்டு, மாற்றப்பட்ட மையம், தேதி, தேர்வு விவரங்கள் என்று எல்லா மாணவ மாணவியர்க்கும் தெறிவிக்கப்பட்டு, பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கும், மாணாக்கர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு நடந்திருக்கிறது.

திங்கள், 8 ஜூன், 2020

மஞ்சளழகி - எழுத்தாளர் கடுகு - செபி செல்லம்


மஞ்சளழகி! இது இவளுக்கு நான் வைத்த பெயர். அவளது பெயர் பெருங்கொன்றை/இயல்வாகை/மஞ்சள் வாகை. அறிவியல் பெயர்: Peltophorum ferrugineum. ஆங்கிலத்தில் காப்பர் பாட் (Copperpod), யெலோ ஃபிளேம் (Yellow Flame)