புதன், 31 ஆகஸ்ட், 2016

பூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்

Image result for merging of banks in sbi
Around 45,000 employees in the five associate banks of the SBI were set to go on strike from Tuesday, opposing the government's decision to merge State Bank of Bikaner and Jaipur (SBBJ), State Bank of Travancore (SBT), State Bank of Patiala (SBP), State Bank of Mysore (SBM) and State Bank of Hyderabad (SBH) with the ...SBI  (படமும், செய்தியும் இணையத்திலிருந்து)

“பொண்ணு +2 ல நல்ல மார்க் வாங்கி பாசாயிட்டா! இந்தா ஸ்வீட் எடுத்துக்க”

“அது சரி. அடுத்து என்ன ப்ளான் பண்ணியிருக்கீங்க? நர்சிங்க் கோர்சுக்கு விடுங்க.  அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனினு போயி லட்சக்கணக்கா சம்பாதிச்சு சுகமா வாழட்டும்.”

“அப்படி எல்லாம் ஆசை இருக்கு. பணத்துக்கு வழி இல்லையே!”

“எஜுகேஷனல் லோனுக்கு அப்ளை பண்ணுங்க. பிரச்சனை இல்லாம கிடைக்கும். வேலை கிடைச்சப்புறம் சம்பளத்திலிருந்து கடனை மீட்டிக்கலாம்”

“அதெல்லாம் நம்மள மாதிரி சாதாரண ஆளுங்களுக்குக் கிடைக்குமா?”

“கிடைக்குமாவா? சாதாரண நடுத்தரவர்க்கத்துக்காகத்தான் இந்தக் கடனுதவி திட்டத்தையே அரசும் வங்கிகளும் சேர்ந்து கொண்டு வந்துருக்கு.”

இப்படி யாரெல்லாமோ சொல்லித்தான் மாவேலிக்கரை அருகே ச்சாருமூடைச் சேர்ந்த மூலம் குழியில் கிருஷணங்குட்டிக்கும், தன் மகளை நர்சிங்க் கல்லூரியில் சேர்க்கத் துணிவு வந்திருக்கிறது. ஒரு நர்சிங்க் கல்லூரிக்குச் சென்று மகளை சேர்க்க ஏற்பாடு செய்தபின், அருகிலிருந்த ஒரு வங்கிக்கும் சென்று கடனுக்கு விண்ணப்பித்தும் இருக்கிறார்.  எப்படியோ 2007 ஆம் ஆண்டு, ஸ்டேட் பெங்க் ஆஃப் திருவிதாங்கூர் கடனாய் தந்த ரூ1,80,000 உடன் தன் கையிலிருந்ததையும் சேர்த்துத் தன் மகளை நர்சிங்க் கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைத்தார்.

படித்து முடித்ததும் அவரது மகளுக்கு வேலையும் கிடைத்திருக்கலாம். அவருக்குக் கிடைத்த ஊதியத்திலிருந்து கடன் தொகையில் சிறிதளவு மீட்டியும் இருக்கலாம். இதனிடையே நர்சிங்க் படித்த மகளுக்கும், அவளது தங்கைக்கும் திருமணமும் செய்து வைத்திருந்திருக்கிறார். உடல் ஆரோக்கியம் நலிந்ததால், ஒரு சிறிய பெட்டிக் கடை வைத்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திலும் மனைவியின் தையல் தொழிலிருந்து கிடைக்கும் வருமானத்திலும் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.

இடையிடையே எப்போதாவது தான் வாங்கிய கடனைப் பற்றி நினைக்காமல் இருந்திருக்க வழியில்லை. கல்விக் கடன் திட்டத்தில் எடுத்ததுதானே. மகளுக்கு வேலை கிடைத்து அவள் திரும்பச் செலுத்தினால் போதும் என்று நினைத்திருக்கலாம். மகளுக்கும் குழந்தைகள் குடும்பம் என்று வேலைக்குப் போக முடியாமல் சூழலோ? வேலைக்குப் போய் கிடைத்த ஊதியம் கடனை முழுதுமாக அடைக்கத்துத் தீர்க்கப் போதுமானதாக இல்லாத சூழலையோ ஏற்படுத்தியிருக்கலாம். எப்படியோ எடுத்தக் கடன் தொகையில் சிறிதளவுதான் அவர்களால் அடைக்க முடிந்திருக்கிறது.

எதிர்பாராமல், திடீரென, சில நாட்களுக்கு முன், வங்கியிலிருந்து கிருஷ்ணன் குட்டிக்கு வந்த பதிவுத் தபாலில் உடனே ரூ 3, 82,731 செலுத்தி கடனைத் தீர்க்காவிட்டால் வீடு ஜப்தி செய்யப்படும் என்ற செய்தியைக் கண்டதும் செய்வதறியாது திகைத்தார். அதன்பின் போலீசார்களின் மிரட்டல். போதாதற்கு தாலுகா அலுவலகத்திலிருந்து வந்தவர்கள் வீடு பறிமுதல் செய்யப்படப் போவதாகவும் அறிவித்தனர். 

இதனிடையே வங்கிக் கடன்களுக்கு உடனடி தீர்வு காணும் அதாலத், மாவேலிக்கரையில் நடப்பதை அறிந்து அங்கும் போனார். மீட்டப் பெறாமல் இருக்கும் கடன்களை திரும்ப வசூல் செய்யும் நோக்குடன் நடத்தப்பட்ட அந்த அதாலத்திலும் அவருக்கு ஆறுதல் கிடைக்கவில்லை. பதிலுக்கு தன் வீடும் இடமும் எல்லாம் பறிமுதல் செய்யப்படத்தான் போகின்றன என்ற அதிர்ச்சி தரும் செய்திதான்  கிடைத்தது. பாவம் கிருஷ்ணன் குட்டியால் விஜய் மல்லையா எல்லாம் ஆக முடியாது.!

கடைசியாக, கடனை அடைக்க ஏதேனும் வழி உண்டா என்று மகள்களையும், மருமகன்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் கண்டு ஆராய்ந்திருக்கலாம். வழி ஏதும் இல்லை என்றதும் ஒரு வேளை தான் தற்கொலை செய்து கொண்டால் தன் மனைவி மக்களுக்கு வீடும், இடமும் கைவிட்டுப் போகாது என்று நினைத்திருக்கலாம். எல்லோரும் உறங்கிய பின் வீட்டின் பின்புறமிருந்த மாமரத்தின் கிளைகளில் ஒன்றில் கயிற்றைக் கட்டி தூக்குப் போட்டுத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இப்படித்தான் நம் நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான பாவம் விவசாயிகள். விவசாயக் கடனெடுத்து திரும்பச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

2007 ஆம் ஆண்டு கிருஷ்ணன் குட்டி எடுத்த ரூ 1,80,000 கடனுக்கு 2016 வரை (சிறிய தொகை திரும்ப அடைத்தும் கூட) முதலும் வட்டியும் சேர்த்து ரூ 3,82,731. 7 ஆண்டுகளில் தனியார் வங்கிகள் தாங்கள் பெறும் டெப்பாசிட்டுகளை 2 மடங்காக்கித் திரும்பத் தருகின்றன. இங்கு 9 ஆண்டுகளில் கல்விக் கடனுக்கு எடுத்தத் தொகை 2.1 மடங்கு ஆகியிருக்கிறது. இதை கல்வி கற்க கிடைக்கும் உதவியாக எப்படிக் கருத முடியும்.  12.5% மேல் வட்டி வசூலிக்கப்படும் இது வங்கிக்கு லாபம் உண்டாக்க உதவும் ஒரு திட்டமே தான். இப்படிப்பட்ட சதி செய்தபின், அரசும் வங்கிகளும் மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர்களுக்கும் ஏதோ பேருதவி செய்வதாக, பீற்றிக் கொள்ளுதலில் அர்த்தமில்லை. 

இதனிடையில் தான் இது போன்ற லட்சக்கணக்கான சாதாரண மனிதர்கள் வாங்கும் தொகைக்குச் சமமான தொகையை கடனாய்ப் பெற்று கண்மூடித்தனமாகச் செலவு செய்து கடனைத் திரும்பச் செலுத்தாமல் விஜய் மல்லையா போன்றவர்கள் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்கிறார்கள்.
அவர்களுக்குக் கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாத வங்கிகள், கிருஷ்ணன்குட்டி போன்றவர்களை மிரட்டி அவர்களைத் தற்கொலை செய்துக் கொள்ளத் தூண்டுகிறார்கள். தற்கொலை செய்துகொண்டாலும் அவர்களது வீட்டை ஏலம் போட்டு விற்றுக் கடனை வசூலித்துத் தங்கள் திறமையைக் காட்டுகிறாரள். இது போன்ற அடித்தட்டு அக்ரமங்கள் மட்டுமல்ல மேல்தட்டில் நஷ்டத்தை ஈடுகட்ட SBT போன்ற லாபம் ஏற்படுத்தும் பல வங்கிகளை விழுங்கத் தேவையான நடவடிக்கைகளை செய்து கொண்டும் இருக்கிறார்கள். இதில் இவையும் அடக்கம்.  State Bank of Bikaner and Jaipur and State Bank of Mysore State Bank of Patiala, State Bank of Hyderabad, SBI யுடன் ஒன்றாக்கிட/இணைக்கப்பட உள்ளன.


இது போன்ற பூநாகங்கள் வாழும் பூக்களாம் வங்கிகள் பூத்துக் குலுங்கி நிற்கும் நம் நாட்டில் சாதாரண மக்கள், மணமில்லா இக் காகிதப்பூக்களை நுகர்கிறேன் பேர்வழி என்று அதனுள் ஒளிந்திருக்கும் பூநாகத்தை நுகர்ந்து மரணத்தைத் தழுவாமல் விழிப்போடு இருக்க வேண்டும்.

(கீதாவின் பதிவுகள் காத்திருக்கின்றன என்று சொல்லியிருந்தேன். இன்னும் தயாராகவில்லை....வேலைப்பளு காரணமாக....)

சனி, 27 ஆகஸ்ட், 2016

மயங்கிக் கிடக்கும் மனிதாபிமானம்

From Hospital, Odisha Man Carried Wife's Body 10 Km With Daughter
படம் இணையத்திலிருந்து

மரணம் எந்த வயதில் யாருக்கு ஏற்பட்டாலும் அது அவரது குடும்பத்தினருக்குத் தரும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

தனக்கு உறுதுணையாகவும், தனது 12 வயது மகளுக்கு எல்லாமுமாக இருந்த தன் மனைவியை, தனது கிராமத்திலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது ஒடிஷாவைச் சேர்ந்த அவருக்குத் தன் மனைவி எப்படியேனும் நோயிலிருந்து குணமாகி விடுவார் என்ற அசையாத நம்பிக்கை இருந்தது. ஆனால் எவ்வளவோ முயன்றும் மனைவியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் சொன்னதும் அவரும், மகளும் அதிர்ந்தே போனார்கள். மனைவியின் உயிரற்ற உடலை வீட்டிற்குக் கொண்டு சென்று இறுதி மரியாதை செய்து உடலை அடக்கம் செய்ய வேண்டும்.

கையில் பணம் இல்லாத ஆதிவாசியான அவர் மருத்துவமனையிலிருந்து உடலைக் கொண்டு போக ஆம்புலன்ஸ் கிடைக்குமா என விசாரிக்க, மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் கை விரித்துவிட்டார்கள். கூடி நின்றவர்கள் எல்லாம் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. யாரும் உதவமாட்டார்கள் என்பதை உணர்ந்த அவர் தன் மனைவியின் உயிரற்ற சடலத்தைத் தன் கைவசமிருந்த துணிகளால் சுற்றிக் கட்டி, தோளில் ஏற்றி நடக்கத் தொடங்கினார்.  இதை எழுதும் போது கண்களில் நீர் நிறைகிறது.

சமூகச் சேவை செய்யும் எத்தனையோ இயக்கங்களும், மனிதர்களும் வாழும் நம் நாட்டில், அவருக்கும், கதறி அழும் மகளுக்கும் அப்போது உதவிக்கரம் நீட்ட ஒருவரும் அங்கு இல்லாமல் போனதை எண்ணும் போது மனது துடிக்கிறது. எப்போதும் எல்லா இடத்திலும் அவரவர் பிரச்சனைகள் அவரவருக்குத்தான். காண்போர்கள் காண மட்டுமே செய்வார்கள்.

இந்தக் கால கட்டத்தில் கையில் மொபைல் இருந்தால் அதைப் படம் பிடித்து ஃபேஸ்புக்கிலும், வாட்சப்பிலும் போடுவார்கள் அவ்வளவே. கூடி நிற்கும் கூட்டம் தனக்கு உதவப் போவதில்லை என்பதை உணர்ந்த அவர் தன்னுடன் மரணம் வரை இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட மனைவியின் உடலைத் தோளில் ஏற்றி 60 கிலோமிட்டர் தொலைவிலுள்ள கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.

இதனிடையே ஊடகங்கள் வாயிலாக செய்தி உலகெங்கும் பரவியது. ஏதோ ஒரு சேனலைச் சேர்ந்தவர்கள் அச்செய்தியைக் காட்டியதோடு நில்லாமல் மாவட்ட ஆட்சியாளருக்கு அறிவிக்கவும் செய்தார்கள். பல மணி நேரம் கடந்து போனது. அவரோ எதையும் கவனிக்காமல் தன் உயிரற்ற மனைவியின் உடலுடன் நடந்துகொண்டே இருந்தார். அவருக்கு உதவ வந்த ஆம்புலென்ஸ் 12 கிலோமிட்டர் ஓடிய பின் தான் மனைவியின் சடலத்தை தோளில் ஏற்றிச் செல்லும் அவரின் அருகே சென்றடைய முடிந்தது. மயக்கமடைந்த மனிதாபிமானம் சுயநினைவுக்கு வந்து அவரைக் கவனிக்க இப்படிப் பலமணி நேரங்கள் வேண்டி வந்தது.
இதே போல்தான் வாகன விபத்திற்குள்ளாகி சாலையில் கிடப்போரது நிலையும். நேரத்தை வீணாக்காமல் மருத்துவமனையில் அவர்களைக் கொண்டு செல்லத் தயங்குவோர்தான் பெரும்பான்மையினர். நமக்கு ஏன் வம்பு என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது.

இதனிடையே அப்படி விபத்து நேரும் நேரம் இரவானால் அப்படி நேரும் இடத்தின் அருகே அதிகமான ஆட்கள் இல்லாத வேளையில் அங்கு செல்லும் சிலர் உயிருக்கு மன்றாடும் பலரது நகைகள் மற்றும் உடைமைகளைக் கைப்பற்றும் மனிதாபிமானமற்ற செயல்களும் நம் நாட்டில் நடக்கத்தான் செய்கிறது.

சில வருடங்களுக்கு முன் சின்னமனூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிர் தப்பிய இரு இளைஞர்கள் தூரத்தில் கண்ட ஒரு கடைக்கு ஓடிச் சென்று விபத்தைப் பற்றிய விவரத்தைச் சொல்லி உதவி கேட்டிருக்கிறார்கள். போலீஸ் வழக்கு விசாரணை போன்ற பின் விளைவுகளுக்குப் பயந்துதான் தாங்கள் இது போன்ற நேரத்தில் உதவுவது இல்லை என்று சொல்லி இளைஞர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்! ஆக, இப்படிப்பட்ட மனநிலை வர நம் காவல்துறையும், நீதி மன்றங்களும் ஒரு காரணமாகிறது. இந்நிலை மாறி எல்லோரும் மனிதாபிமானமிக்கவர்களும், பிறருக்கு ஆபத்து நேரும் போது உதவுபவர்களாகவும் மாற வேண்டும். மாறுவது எப்போது?!! மனிதாபிமானம் மயங்கிக் கிடக்கிறதா? இல்லை மரித்தே விட்டதா?



மயங்கிக் கிடக்கும் மனிதாபிமானம்

From Hospital, Odisha Man Carried Wife's Body 10 Km With Daughter
படம் இணையத்திலிருந்து

மரணம் எந்த வயதில் யாருக்கு ஏற்பட்டாலும் அது அவரது குடும்பத்தினருக்குத் தரும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

தனக்கு உறுதுணையாகவும், தனது 12 வயது மகளுக்கு எல்லாமுமாக இருந்த தன் மனைவியை, தனது கிராமத்திலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது ஒடிஷாவைச் சேர்ந்த அவருக்குத் தன் மனைவி எப்படியேனும் நோயிலிருந்து குணமாகி விடுவார் என்ற அசையாத நம்பிக்கை இருந்தது. ஆனால் எவ்வளவோ முயன்றும் மனைவியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் சொன்னதும் அவரும், மகளும் அதிர்ந்தே போனார்கள். மனைவியின் உயிரற்ற உடலை வீட்டிற்குக் கொண்டு சென்று இறுதி மரியாதை செய்து உடலை அடக்கம் செய்ய வேண்டும்.

கையில் பணம் இல்லாத ஆதிவாசியான அவர் மருத்துவமனையிலிருந்து உடலைக் கொண்டு போக ஆம்புலன்ஸ் கிடைக்குமா என விசாரிக்க, மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் கை விரித்துவிட்டார்கள். கூடி நின்றவர்கள் எல்லாம் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. யாரும் உதவமாட்டார்கள் என்பதை உணர்ந்த அவர் தன் மனைவியின் உயிரற்ற சடலத்தைத் தன் கைவசமிருந்த துணிகளால் சுற்றிக் கட்டி, தோளில் ஏற்றி நடக்கத் தொடங்கினார்.  இதை எழுதும் போது கண்களில் நீர் நிரைகிறது.

சமூகச் சேவை செய்யும் எத்தனையோ இயக்கங்களும், மனிதர்களும் வாழும் நம் நாட்டில், அவருக்கும், கதறி அழும் மகளுக்கும் அப்போது உதவிக்கரம் நீட்ட ஒருவரும் அங்கு இல்லாமல் போனதை எண்ணும் போது மனது துடிக்கிறது. எப்போதும் எல்லா இடத்திலும் அவரவர் பிரச்சனைகள் அவரவருக்குத்தான். காண்போர்கள் காண மட்டுமே செய்வார்கள்.

இந்தக் கால கட்டத்தில் கையில் மொபைல் இருந்தால் அதைப் படம் பிடித்து ஃபேஸ்புக்கிலும், வாட்சப்பிலும் போடுவார்கள் அவ்வளவே. கூடி நிற்கும் கூட்டம் தனக்கு உதவப் போவதில்லை என்பதை உணர்ந்த அவர் தன்னுடன் மரணம் வரை இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட மனைவியின் உடலைத் தோளில் ஏற்றி 60 கிலோமிட்டர் தொலைவிலுள்ள கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.

இதனிடையே ஊடகங்கள் வாயிலாக செய்தி உலகெங்கும் பரவியது. ஏதோ ஒரு சேனலைச் சேர்ந்தவர்கள் அச்செய்தியைக் காட்டியதோடு நில்லாமல் மாவட்ட ஆட்சியாளருக்கு அறிவிக்கவும் செய்தார்கள். பல மணி நேரம் கடந்து போனது. அவரோ எதையும் கவனிக்காமல் தன் உயிரற்ற மனைவியின் உடலுடன் நடந்துகொண்டே இருந்தார். அவருக்கு உதவ வந்த ஆம்புலென்ஸ் 12 கிலோமிட்டர் ஓடிய பின் தான் மனைவியின் சடலத்தை தோளில் ஏற்றிச் செல்லும் அவரின் அருகே சென்றடைய முடிந்தது. மயக்கமடைந்த மனிதாபிமானம் சுயநினைவுக்கு வந்து அவரைக் கவனிக்க இப்படிப் பலமணி நேரங்கள் வேண்டி வந்தது.
இதே போல்தான் வாகன விபத்திற்குள்ளாகி சாலையில் கிடப்போரது நிலையும். நேரத்தை வீணாக்காமல் மருத்துவமனையில் அவர்களைக் கொண்டு செல்லத் தயங்குவோர்தான் பெரும்பான்மையினர். நமக்கு ஏன் வம்பு என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது.

இதனிடையே அப்படி விபத்து நேரும் நேரம் இரவானால் அப்படி நேரும் இடத்தின் அருகே அதிகமான ஆட்கள் இல்லாத வேளையில் அங்கு செல்லும் சிலர் உயிருக்கு மன்றாடும் பலரது நகைகள் மற்றும் உடைமைகளைக் கைப்பற்றும் மனிதாபிமானமற்ற செயல்களும் நம் நாட்டில் நடக்கத்தான் செய்கிறது.

சில வருடங்களுக்கு முன் சின்னமனூர் அருகே நடந்த சாலை விபத்தில் உயிர் தப்பிய இரு இளைஞர்கள் தூரத்தில் கண்ட ஒரு கடைக்கு ஓடிச் சென்று விபத்தைப் பற்றிய விவரத்தைச் சொல்லி உதவி கேட்டிருக்கிறார்கள். போலீஸ் வழக்கு விசாரணை போன்ற பின் விளைவுகளுக்குப் பயந்துதான் தாங்கள் இது போன்ற நேரத்தில் உதவுவது இல்லை என்று சொல்லி இளைஞர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்! ஆக, இப்படிப்பட்ட மனநிலை வர நம் காவல்துறையும், நீதி மன்றங்களும் ஒரு காரணமாகிறது. இந்நிலை மாறி எல்லோரும் மனிதாபிமானமிக்கவர்களும், பிறருக்கு ஆபத்து நேரும் போது உதவுபவர்களாகவும் மாற வேண்டும். மாறுவது எப்போது?!! மனிதாபிமானம் மயங்கிக் கிடக்கிறதா? இல்லை மரித்தே விட்டதா?



வியாழன், 25 ஆகஸ்ட், 2016

போருக்குத் தயாராகும் தெரு நாய்கள்

Image result for STREET DOGS BITING PUBLIC IN KERALA
படம் இணையத்திலிருந்து

சமீபத்தில் திருவனந்தபுரம் அருகே கடற்கரையை ஒட்டிய புல்லுவிளா எனுமிடத்தில், பெண்மணி ஒருவர் வீட்டில் கழிப்பிடம் இல்லாததால் இரவு 8.30 மணியளவில் வெளியிடத்திற்குச் சென்ற போது, 20 க்கும் மேற்பட்ட தெருநாய்க் கூட்டம் அவரை விரட்டிக் கடித்துக் குதறிவிட்டன. சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன் கண்டதோ மயக்கமடைந்து கிடக்கும் தன் தாயை. நாய்கள் கடித்துக் குதறும் காட்சி. சத்தம் போட்டுக் கத்தி அவற்றை விரட்ட முயன்ற மகனை நாய்கள் கூட்டம் விரட்ட ஆரம்பித்தது. துரத்தும் நாய்களிடமிருந்து தப்பிக்க அவர் ஓடிக் கடலில் குதித்து உயிர் தப்பியிருக்கிறார். அலறல் கேட்டு ஓடி வந்த ஒரு சிலரை நாய்கள் விரட்டிக் கடித்தன. அதன் பின் அப்பகுதி மக்கள் எல்லோரும் திரண்டு கற்கள் மற்றும் கம்புகளுடன் வந்து நாய்களை விரட்டி, பாதிக்கும் மேற்பட்ட உடல் பகுதியை நாய்களிடம் இழந்த அப்பெண்மணியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். மருத்துவமனை செல்லும் வழியிலேயே பாவம் அப்பெண்மணி உயிரிழந்தார்.

கேரளத்தை உலுக்கிய இச்சம்பவம் புதிதல்ல. 2012 முதல் இதுவரை நாய் கூட்டங்கள் கடித்து 50 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். (வெளியில் தெரியவராமல் இறந்தவர்கள் எத்தனையோ?) இதில் வீட்டுத் திண்ணையில் கிடந்தவர்கள், பள்ளி சென்று திரும்பிய குழந்தைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்களுடன் வந்தவர்கள் இப்படிப் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அச்சம்பவங்கள் எல்லாம் நடந்த மறுநாள் எல்லா நாளிதழ்களிலும் அதுதான் முக்கியச் செய்தி. அடுத்த நாள், சிலர் அப்பகுதியில் அந்த நாய்களில் சிலவற்றைக் கொன்றதாகவோ, கொல்ல முயன்றதாகவோ சொல்லப்படும் செய்தி. 

அதற்கு அடுத்த நாள் அப்படித் தெருநாய்களைக் கொல்ல முயன்றவர்களுக்கு, கொன்றவர்களுக்கு எதிராக தெருநாய்களின் நலன் காப்போர் இயக்கம் புகார் கொடுத்த செய்தி. அதன் பின் ஓரிரு நாட்கள் பிரமுகர்கள், மத்திய அமைச்சர் மேனகா காந்தியை எதிர்த்தும், ஆதரித்தும் விடும் அறிக்கைகள். ஆனால், அடுத்த நாள் ஏதேனும் இளம்பெண் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டதோ, ஏதேனும் அமைச்சர் வாய் உளறித் தவறாகப் பேசியதோ, ஏதேனும் மார்க்சிஸ்ட் அல்லது ஆர் எஸ் எஸ் ஆதரவாளரான இளைஞர் கொல்லப்பட்டதோ, சரிதா நாயரின் மிரட்டல்களோ நாளிதழ்களில் முக்கியச் செய்தியாகும்.

மீண்டும் தெரு நாய்களைப் பற்றிய செய்தி வர ஏதேனும் ஒருவர் நாய்களால் கடித்துக் கொல்லப்படும்வரை பேசப்படமாட்டாது. இப்படி ஆவன செய்யப்படாமல் கொல்லப்பட்ட 50 வது நபர்தான் இந்தப் பெண்மணி. அடுத்த நாளே கொட்டாரக்கரையைச் சேர்ந்த, கடந்த ஒரு மாதகாலமாக மருத்துவமனையில் நாய்கடிக்கான சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரழந்தார்.

நேற்று பாலக்காடு குத்தனூரைச் சேர்ந்த 60 வயதுள்ள ஒரு பெண்மணி நடந்து செல்லும் போது வழியோரத்தில் குவிக்கப்பட்டிருந்த மாமிச மற்றும் உணவுக் கழிவுகளைத் தின்று கொண்டிருந்த ஒரு தெரு நாய் அவர் மீது தாவி அவரைக்  கடித்துக் குதறி இருக்கிறது. அவரது அலறலைக் கேட்டு ஓடி வந்தவர்கள் அந்நாயை விரட்டி அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவர் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.

வீணாக்கப்பட்ட உணவுப் பொருட்கள், கோழி மற்றும் மாடு மற்றும் மீன் கழிவுகள் எல்லா சாலையோரத்திலும் அலட்சியமாகக் கொட்டப்படுகிறது. அவற்றைத் தின்று வளரும் தெருநாய்கள் கூட்டமாகக் கூடும் போது கண்ணில்படுவோரைக் கடித்துக் குதறத் துணிகின்றன. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, வானொலிச் செய்தி. கொல்லம் அருகே வீட்டுத் திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தச் சிறுவனைத் தெரு நாய் கடித்ததாம். கீழுதடைக் கடித்துத் துண்டித்து தொடையிலும் கடித்ததாம். காப்பாற்ற ஓடிவந்த அச்சிறுவனின் அம்மாவையும் கடித்திருக்கிறது. (http://thillaiakathuchronicles.blogspot.com/2015/07/If-The-Meek-Get-Angered.html) இருவரும் இப்போது கொல்லம் மருத்துவமனையில்.

கேரளாவில் ஏறத்தாழ 2 ½ இலட்சம் தெருநாய்கள் உள்ளதாம். எல்லா பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் தெரு நாய்களைப் பிடித்து ஏபிசி (அனிமல் பர்த் கன்ட்ரோல்) செய்ய வேண்டும். இனியும் தாமதிக்கக் கூடாது. ஏபிசி செய்யப்படும் நாய்கள் சற்று அடங்கிக் கிடக்குமாம். ஆபத்தான சில தெரு நாய்களைக் கொன்றே தீர வேண்டுமெனில், அதற்கும் தயங்கக் கூடாது. (நடிகர் மோகன்லால் இப்படிச் சொல்லித்தான் முன்பு மாட்டிக் கொண்டார். ஹும் அது மோகன்லால். அவர் எங்கே நாம் எங்கே. நமக்கெல்லாம் பிரச்சனை வராது)

நாய் பிடிப்பவர்கள் இல்லை என்று கடந்த 10 வருடமாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், மக்களில் விலங்குப் பிரியர்களுக்குக் கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் அதற்கான பயிற்சி அளித்து இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க முயற்சி எடுக்காதது வியப்பளிக்கிறது. கொல்லப்பட்டவர்களின் வீட்டினரோ, உறவினரோ, நண்பர்களோ ஆத்திரத்தில் ஓரிரு நாய்களைக் கொன்றால், உடனே காவல்துறையிலும், நீதி மன்றங்களிலும் புகார் கொடுக்கும் தெருநாய்களின் நலன் விரும்பிகள் ஒவ்வொரு பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் மாநகராட்சிக்கு எதிராகப் புகார் கொடுத்து தெருநாய்களுக்கு ஏபிசி செய்ய ஏன் நடவடிக்கை எடுக்க உதவுவதில்லை? 

அது போல் உணவுக் கழிவுகளை வழியில் எறிவோர்களும், நாம் செய்யும் இந்தத் தவறு எவ்வளவு பெரிய ஆபத்திற்குக் காரணமாகிறது என்பதை உணர்ந்து, உணவுப் பொருட்களை வீணாக்காமல் இருக்க முடிவெடுத்தால் அது சமூகத்திற்கு நன்மை பயப்பதுடன் அவர்களுக்கும் பொருளாதார ரீதியாகவும் நன்மை ஏற்படுத்தும் என்பதை ஏன் உணர்வதில்லை.

அரசும் இதற்கு முன் செய்தது போல் தற்காலிகமாகப் பிரச்சனைகளில் இருந்து தப்ப, நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சளவில் சொல்லி நில்லாமல், தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்தே ஆக வேண்டும்.


சென்னையில் ப்ளூக்ராஸ் செய்யும் சேவை இது போல் நல்ல மனம் படைத்த பலரது முயற்சியால்தான் தொடங்கியது. இப்போதும் தொடர்ந்து நடக்கிறது. அதுபோன்ற இயக்கங்கள் கேரளாவில் ஓரிரு இடங்களிலேனும் துவங்க தெருநாய் நலன்விரும்பிகளும், அரசும், அதிகாரிகளும் முயல வேண்டும். சில மாதங்களுக்கு முன் நண்பர் ஸ்ரீராம் தன் வீட்டருகே உள்ள நாயின் வேதனையை ப்ளூக்ராஸ் உதவியுடன் போக்கியிருக்கிறார். அவர் அவ்வப்போது இப்படிச் செய்தும் வருகிறார். 

அது போன்று சென்னையில் இவைகளுக்கானக் காப்பகங்களும், பேணுபவர்களும் கணிசமான அளவில் இருப்பதாக ஸ்ரீராம் அவர்களின் பாசிட்டிவ் செய்திகளிலிருந்து அறிய முடிகின்றது. அது போல் கேரள மக்களும் தெருநாயைக் காணும் போது பயந்து ஓடும் அல்லது கல்லெடுத்து எறியும் நிலை மாறி, அவற்றைக் கருணை தவழும் கண்களால் நோக்கும் ஒரு காலம் வருமா?....காத்திருப்போம். 

படம் இணையத்திலிருந்து - சமீபத்தில் கொச்சியில் ஒரு சில நடவடிக்கைகள், ரோட்டரி சங்கத்தினரால் எடுக்கப்பட்டதாகச் செய்தி




செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

பின்னூட்டங்களும், பதில் கருத்துகளும் - தண்ணீரில் வரையப்படும் கோலங்கள் - முற்றும்

சென்ற இடுகையில் வந்த பின்னூட்டத்திற்கு இரு பதில்கள் பெரிதாக வந்ததால் பதிவாகிவிட்டது.

"இப்போது எல்லா மதத்திலும் பக்தியையும் இறை உணர்வையும் விட, உணவு, உடை, மொழி விழாக்கள், பூசைகள் போன்ற பக்திக்கும், மத கொள்கைகளுக்கும் அவ்வளவு அவசியம் இல்லாதவைகளுக்குத் தேவைக்கதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது" - இது அருமையான வரிகள். மலையாள பிராமணர்கள் (நம்பூதிரிகள்) பற்றி நீங்கள் எழுதியவைகளில் உண்மை இருக்கிறது.

சைவம், வைணவத்தைப் பற்றி நீங்கள் தெரிவித்த கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கவையாக இல்லை. இது heavy subject.
நிச்சயமாக இது ஒரு ஹெவி சப்ஜெக்ட்தான். ஐயமில்லை.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றெனும் அத்வைதம் பரப்பிய, சிவசக்தி வழிபட்ட சங்கரர் பத்ரிநாத்தில் விஷ்ணு பகவானைப் பிரதிஷ்டை செய்தார் என்பது சங்கரர் தான் சாதி சம்பிரதாயத்தை ஏற்படுத்தினார் என்பது போல் பலரையும் போல் என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  ஆனால், கீபல்சியன் ( தத்துவத்தை இப்புவியில் வாழும் எல்லோரும் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் அது உண்மையாகி விடுகிறதுதானே. சங்கரரையே (8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததால்) பிராமணராக ஏற்றுக் கொள்ளாத நிலையில் சைவ பிராமணர்களுக்கு வைணவ பிராமணர்கள் சம உரிமை வழங்குவார்களா? அது காஞ்சி மடத்திற்கு மற்ற நான்கு மடங்கள் கொடுக்கும் பதவி போலத்தான். 

அஷர்தாம் - இணையத்திலிருந்து

1907 ல் குஜராத்தில் உருவான வைணவ இயக்கம் (பிஏபிஎஸ்) 2005ல் டெல்லியில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கிய அக்ஷ்ர்தாம் தான் அதற்கு ஒரு உதாரணம். இந்தக் கோயில் கலைநயம் மிக்க கட்டடக் கலை நுணுக்கத்துடன் ரசிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. 5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அக்ஷர்தாம் வைணவத்தின் வியக்கத்தக்க முன்னேற்றத்தைப் பறை சாற்றுகிறது. ஏறத்தாழ 1100 கோயில்கள் கட்டியிருக்கிறார்கள். உலகெங்கும் வைணவக் கோயில்கள் கட்டி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். வைணவம் வளர்க்க இப்படி அயராது உழைக்கிறார்கள் வைணவர்கள் இனி சைவ பிராமணர்கள் என்று சொல்லுவதை விட கேரளத்தில் உள்ளோர் அழைப்பது போல் தமிழ் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டும் போல் தெரிகிறது. காரணம் காஞ்சி மடம் போல் சைவ பிராமணர்கள் தமிழகத்தில் மட்டும் வாழ்பவர்கள், வாழ வேண்டியவர்கள் என்று ஆக்கப்பட்டு விட்டார்கள் போல் தெரிகிறது. வைணவத்தில் உள்ள இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சமமாகக் கருத மறுக்கின்ற நிலை. இதில் காஞ்சி மடமும் சைவ பிராமணர்களும் இது போல் எத்தனைக் காலம் எதிர்நீச்சல் போட முடியுமோ? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

5 குருடர்கள் யானையைக் காணச் சென்ற கதை போல்தான் ஒவ்வொரு மதமும் இறைவனைப் புரிந்து கொண்டிருக்கிறது என்று தோன்றுகின்றது. அல்லது சரியாகப் புரிந்து கொண்டவர்கள் சொல்லியவைகளை சரியாகப் புரிந்து கொள்ளத் தெரியாமல் அரைகுறையாய் புரிந்துகொண்டு தடுமாறுகிறது. அந்தத் தடுமாற்றத்தின் இடையேதான் ஒவ்வொரு மதத்திலும் சிலர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தங்களுக்குச் சாதகமானவைகளைத் ஏற்றி ஒவ்வொரு மதத்தையும் மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மதமும் வழி மாறி பயணிக்கிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் மதத்தின் பின்னால் கண்மூடித்தனமாய் போகாமல், மனித நேயம் கலந்த பக்தியுடன் சஞ்சலம் இல்லாது நம்பிக்கையோடு, தேவைப்பட்டியலில் இறைவனடி சேரும் ஆசையையும் சேர்த்து நம் மனதில் காணும் இறைவனை நமக்குத் தெரிந்த மொழியில், நமக்குத் தெரிந்த விதத்தில் வேண்டினால், நமக்கும் கண்பார்வை கிடைக்கப்பெற்ற குருடர்களின் ஒருவனாகி அவ் யானையை முழுமையாகக் கண்டு அதிசயிக்கலாம். அவ் யானை மீதேறி அணுவைத் துளைத்து, ஏழ் கடலைப் புகுத்திய இறைவனின் திறனின் திறனாய் மாறி இறைவனடி பெறலாம்.

இன்னும் விரிவாக அலசி இருக்கலாமோ? சைவம், வைணவம் குறித்த கருத்துகளில் இன்னும் ஆழமான பார்வை இல்லையோ என்று தோன்றுகிறது. அதோடு பூணூல் போட்டுக் கொள்வது, அதிலும் வைசியர்கள் போடுவது பின்னால் வந்தது இல்லை. வர்ணாசிரமக் காலத்திலிருந்தே உள்ளது தான். நான்காம் வர்ணத்தவருக்கு மட்டும் தான் பூணூல் இல்லை. ஏனெனில் அவர்களின் பொறுப்பு அப்படி! அதிகமான பொறுப்புகளை ஏற்பவர்களால் உபநயனம், அனுஷ்டானங்கள் ஆகியவற்றைச் செய்யக் கஷ்டமாக இருக்கும் என்ற காரணத்தால் அவர்களுக்கு மட்டும் விதி விலக்கு. ஆனால் அவர்களிலும் தவம் செய்து பிரம்மனாக ஆனவர்கள் பலர் உண்டு. வால்மீகியே ஒரு சிறந்த உதாரணம்!

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். நான் அறிந்ததையும் முன் வைக்கிறேன். வரலாறு எப்போதும் அதை எழுதும் அதிகார வர்க்கத்தினரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றபடிதான் எழுதப்பட்டிருக்கின்றன. வைணவ மதம் தழுவிய கேரள அரசர் மார்த்தாண்ட வர்மா 1750ல், அதுவரை முன்னோர்களால் பாதுகாக்கப்பட்ட எல்லா ஓலைச் சுவடிகளையும் சேகரித்துத் தீக்கிரையாக்கி, புதிதாக ஒரு கேரள வரலாற்றை எழுதியிருக்கிறார். அது மட்டும்தான் இப்போது கேரள வரலாறு. அது போல் விஜயநகர மன்னர்கள் காலத்தில் எழுதப்பட்டவைதான் நாம் பின்பற்றும் நம் கையில் உள்ள வரலாற்று ஆதாரங்கள். இவ்விரு கால அளவிலும் அதன் பின்னும் தான் கூடுதலாக இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதங்களுக்கு மாறியிருக்கிறார்கள். 1469ல் உலகிலுள்ள மதங்களில் 9 ஆம் இடம் வகிக்கும் சீக்கிய மதம் உருவானதும் இக்காலத்தில்தான். அக்பரின் தீன் இலாகிமதம் ஏட்டளவிலேனும் உருவானதும் 1582ல். இவை எல்லாம் மத்வாச்சாரியாரின் காலகட்டத்திற்குப் பின் தான் என்பதை வைத்துப் பார்க்கையில் அதன் முன் சாதிகள் உண்டாயிருக்க வழியில்லை என்று சொல்லப்படுவதை நானும் நம்புகின்றேன். அப்படியல்ல அதன் முன்பே சாதிகள் இருந்தது எனில் அச்சாதிகள் புத்த மதத்திலும் சமண மதத்திலும் இருக்க வேண்டுமே. புதிதாய் தோன்றிய சீக்கிய மதத்திலும் அது இந்து மதத்தில் உள்ளது போல் தொற்றிக் கொள்ளவில்லையே. இதிலிருந்து பிற மதங்கள் புதிதாய் உடலெடுத்த சாதி சம்பிராதாயத்தை ஏற்கவில்லை என்பதுதானே அர்த்தமாகிறது. க்ரேக்கர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களை ரத்தம், கபம், வாதம், பித்தம் போன்றவைகளின் ஆதிக்கம் நிறைந்தவர்கள் என நம் சித்த, ஆயுர்வேத வைத்தியர்கள் பிரித்தது போல் திரித்திருந்தார்களாம். ஒவ்வொருவரின் திறமைக்கேற்ப  வேலைகள் கொடுக்கத்தான் அப்படிப் பிரித்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கும் அதன் அடிப்படையில் சாதிகள் உண்டாகவில்லை. ஒரு மதத்திலும் இல்லாதிருந்த சாதி சம்பிரதாயம் 14 ஆம் நூற்றாண்டிற்குப் பின் தான் சைவ வைணவத்தை வந்தடைந்தது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அது போல் அதை ஏற்காத மக்கள் பிற மதம் தேடியிருக்கலாம். சிலர் புது மதத்தையே நிறுவியிருக்கலாம்தானே. காஷ்மீரில் சாதி சம்பிராதயத்துடன் கட்டாய மத மாற்றமும் சைவ வைணவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருக்கலாம். 1947 ல் பிரிந்த பாகிஸ்தானில் இப்போதும் இந்துக்கள் அங்குமிங்குமாக வாழும் போது காஷ்மீரில் ஒரு கோயிலில் பூஜை செய்ய ஒரு முஸ்லிம் என்பது மனிதத்தை நிலை நிறுத்துவதுதானே. (இந்த மனிதர் பற்றியும், மனிதம் பற்றியும் ஒரு இடுகை எங்கள் தளத்தில் உண்டு) இந்துக்கள் பிற மதம் தேடிப் போகக் காரணமாகும் பலவற்றில் சாதி சம்பிரதாயம் ஒன்றாக வாய்ப்பில்லை என்று நாம் சொல்லவே முடியாது.

இந்திய கான்ஸ்டிடியூஷன் எழுதிய டாக்டர் அம்பேத்கார் “நான் இந்துவாக இறக்கமாட்டேன்!” என்று சொல்லி லட்சக்கணக்கான மக்களுடன் புத்தமதம் தழுவியது இந்தச் சாதி சம்பிரதாயத்தால்தானே? இப்போதும் தான் பெற்ற பிள்ளைகள் வேறு சாதிப் பிள்ளைகளை மணந்தால் கொல்லக் கூடத் தயங்காத மனம் பல பெற்றோர்களுக்கும் ஏற்படுவதும் அதனால்தானே. இப்படி சமூகத்தில் புற்று நோயாய் வளரும் சாதி சம்பிரதாயம் எனும் கிருமியை இறைவுணர்வுடன் நம் முன்னோர்கள் அது சைவர்களானாலும் சரி, வைணவர்களானாலும் சரி போற்றி வளர்த்திருந்தார்கள் என்பதை எந்தக் கோணத்திலுருந்துப் பார்த்தாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வளர்ந்த விஷக் கலை. அது நம் முன்னோர்கள் நம்மை ஏற்பித்திருக்கும் ஆன்மீகப் பயிரை மூடி நிற்கிறது. நிலை நிற்கப் போவது பயிரா களையா? முடிவு காலத்தின் கையில்!

இப்படி நம் கருத்துகளை நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளக் காரணம் நாம் எல்லோரும்,
எப்பொருள்  யார்யார்வாய்க்  கேட்பினும்  அப்பொருள்
மெய்ப்பொருள்  காண்ப  தறிவு.

எனும் வள்ளுவன் வாக்கை வேதமாகக் கொள்பவர்கள் என்பதால்தானே. விடை காணவியலா புதிர் போன்றவைதான் இவை போன்ற விஷயங்கள் எனினும் நம் கருத்துகள் பரிமாற்றங்களின் மூலம் பல அறிய முடிகின்றது. என்னால் தெரிந்து கொள்ளவும் முடிகின்றது. மிக்க நன்றி உங்கள் அனைவருக்கும்.

(இத்துடன் இதை முடித்துக் கொள்கின்றேன். இனி கீதாவின் பதிவுகள் சில காத்திருக்கின்றன..)

சனி, 13 ஆகஸ்ட், 2016

தண்ணீரில் வரையப்படும் கோலங்கள் - 4

ஆற்றுப்படுகைகளில் விவசாயம் செய்து தானியங்களையும், பயறு வகைகளையும் விளைவிக்கும் முன் வேட்டையாடி மிருகங்களைக் கொன்றும், வனங்களிலிருந்து கிட்டும் காய் கனி கிழங்குகளையும் உண்டுதான் வாழ்ந்தான். அப்போதும் அவனுக்கு இறை உணர்வு இருந்தது.  அதன் பின் பூசைகளும், பூசாரிகளும் வந்த போது அவர்களும் மாறத் தொடங்கினர். அதற்கு உதாரணம் தான் கண்ணபர் (நாயனார்) தான் வேட்டையாடிய இறைச்சியை சிவலிங்கத்திற்கு முன் படைத்து, தன் வாயில் கொணர்ந்த தண்ணீரை லிங்கத்தில் துப்பி அபிஷேகம் செய்து  வணங்கியவர் கண்ணப்பர். இவ்வுலகிலுள்ள எல்லோரும் சைவ உணவு?! உண்டு வாழ்வது இயலாத காரியம்.

இப்போது எல்லா மதத்திலும் பக்தியையும் இறை உணர்வையும் விட, உணவு, உடை, மொழி விழாக்கள், பூசைகள் போன்ற பக்திக்கும், மத கொள்கைகளுக்கும் அவ்வளவு அவசியம் இல்லாதவைகளுக்குத் தேவைக்கதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது வாழைப்பழத்தின் தோலைத் தின்று, பழத்தைத் தூர எறிவது போன்ற ஒரு வகையான மூடத்தனமின்றி வேறென்ன.

திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மா செய்தது போல் இந்தியா எங்கும் அப்பகுதிக்கு ஏற்றார் போல் ஏதாவது இப்போதும் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். கேரளாவில் எல்லா வருடமும் ஆடி மாதம் இராமயணமாதமாக்கி ஏதோவொரு மார்த்தாண்டன் வழி வந்த மன்னர் ஆணையிட்டு இருந்தார். அது இப்போது உயிர்பெற்று எழுந்து புத்தக நிலையத்தார்க்கும், அதைக் கோயில்களில் வாசிப்பவர்களுக்கும் நல்லதொரு வருமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  முஸ்லிம் மற்றும் கிறித்தவர்கள் வீட்டில் குரானும், பைபிளும் இருப்பது போல் எல்லா இந்துக்களும் வீட்டில் இராமாயணம் அலங்கரிக்கிறது. எல்லா கோயில்களிலும் பாகவத ஸப்தாகம். அதில் தசாவதாரக் கதைகள் மட்டும். கேட்க வருவோர்கள் ஒரு கிருஷ்ண விக்ரகம் கொண்டு வந்து ஸ்ப்தாகம் முடியும் நாள் அவர்களுடைய வீட்டிற்குக் கொண்டு சென்று தினமும் பூசை செய்ய வேண்டும். இராமயணத்திலும் மட்டும் ஒதுங்கக் கூடிய ஒன்றல்ல, நம் முன்னோர்கள் போதித்த நம் ஆன்மீகத் தத்துவங்கள்.

எல்லா கோயில்களிலும் அஷ்ட மங்கல்ய பிரஸ்னம் (தெய்வத்தின் மனதிலுள்ளதை வெற்றிலைகளின் தோற்றத்திலிருந்தும், சோழியிட்டும் அறியும் முறை) வைத்து, வைத்த இடங்களில் எல்லாம் ஒரு கிருஷ்ணன் அல்லது இராமனைப் பிரசிஷ்டை செய்து அங்கு எல்லாவருடமும் “ஸப்தாகம்” நடத்துவது கேரளத்தில் வழக்கமாகியிருக்கிறது. ஸப்தாகத்தின் போது பிராமணர்களுக்கு உணவு, உடை, மற்றும் தட்சிணை கொடுத்து அவர்களை மகிழ்விப்பது, அவர்கள் உண்ட இலையைப் போட்டி போட்டு எடுத்துப் புண்ணியம் தேடுவோரின் எண்ணிக்கைக் கூடிக் கொண்டே இருக்கிறது. (கர்நாடகத்தில் நடப்பது போல் விரைவில் எச்சில் இலையில் கிடந்து உருளும் மடேஸ்னானமும் கேரளத்தில் தொடங்க வாய்ப்புண்டு) இப்படி மனுஸ்ம்ருதியும், வைணவ விதிமுறைகள் மட்டும் தான் இந்துக்களின் ஆன்மீக முறை என்றாகிவிட்டது. இறந்தவர்களின் ஆத்மாக்களையும் வைணவத்தில் ஐக்கியமாக்கும் முயற்சி நடக்கத்தான் செய்கிறது. காலம் சென்ற பெற்றோர்களுக்கும், முன்னோர்களுக்கும் பலியிடச் செல்லும் போது (திவசம்) அவ்வாத்மாக்களை எல்லாம் நாராயண மந்திரம் சொல்லி வைகுண்டத்திற்குத்தான் கேரளத்தில் ஒட்டு மொத்தமாக அனுப்புகிறார்கள்.

15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை (1450-1950) மலையாள நாட்டில் பிராமணர்கள் நடமாடும் தெய்வங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். எந்த வீட்டிலும் நுழைந்து ஒரு புடவை கொடுத்து சம்மந்தம் செய்து குழந்தைகளைப் படைப்பார்கள். (ஜிஎம்பி சார் தனது வாழ்வின் விளிம்பில் இது பற்றி ஒரு அருமையான கதை எழுதியிருக்கிறார்..) கேரளத்தில் பெரும்பான்மையினர் இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதங்களைத் தழுவக் காரணங்கள் பல. அதில் இதுவும் ஒன்று. கேரளத்தில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கும் மேற்சொன்ன கால அளவில் பிராமணர்களின் அபிப்ராயங்களுக்கு எதிர் அபிப்ராயம் யாரும் சொன்னதே கிடையாது. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம். “ஷேக்ஸ்பியர் உண்மையிலேயே ஷேசுப்பையர் என்கிற பிராமணனாக்கும்” (இது எப்படி இருக்கு?!) கேரளத்தில் இராமனுக்கு மட்டுமல்ல, ஓரிரு இடங்களில் இலக்குமணன், பரதன் ஸ்த்ருக்னன் போன்றோர்களுக்கும் தனித்தனிக் கோயில்கள் கூட உண்டு. டாக்சிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் அக்கோயில்களுக்கு (நாலம்பலங்களுக்கு) பக்தர்களிடமிருந்து நல்ல வருமானம்.

14 ஆம் நூற்றாண்டில், மத்வாச்சாரியரால் உருவான பிராமணர்களும்(கேரளத்தில்), வைணவமும் 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இங்கு இருந்தது என்று வைணவர்கள் வரலாற்றில் எழுதச் செய்ததோடு நில்லாமல், சைவம் சில சைவ மத வெறியர்களான சோழமன்னர்கள் காலத்தில் மட்டும், அதுவும் தமிழகத்தில் மட்டும் இருந்த ஒன்றாக ஆக்கியும் விட்டார்கள். இதற்கு நல்ல ஒர் உதாரணம் இருக்கிறது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் எவ்வளவு எளிதாக, நேர்த்தியாக எல்லோர் மனதிலும் பதியும் வண்ணம் கமலஹாசன் தன் தசாவதாரத்தில் குலோத்துங்கச் சோழனையும், சைவர்களையும் சைவ சமயப் பைத்தியங்களாகக் காட்டியிருக்கிறார். தமிழகத்தில் சைவம் செழித்து நின்ற செட்டிநாட்டில் வாழ்ந்த வணிகர்களில் பலரையும் வடநாட்டில் உள்ளது போல் பூணூல் அணியச் செய்து அவர்களை வைசியர்களாக்கி சைவத்தைச் சிதைத்து வைணவ விதையை விதைத்துச் சாதி சம்பிரதாயத்தை வேரூன்றச் செய்து விட்டார்கள். ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த இது போன்ற சம்பவங்களைப் போல் எத்தனை எத்தனையோ சம்பவங்கள் இப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எந்த ஒரு மதமும் 5000 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது என்று சொன்ன பெட்டெரென்ட் ரஸலின் கணிப்பு உண்மையிலேயே நம்மை வியக்க வைக்கிறது. இவ்வுலகில் ஒன்று அழிந்து  மற்றொன்றிற்கு உணவாக வேண்டும்தானே. அப்படி சைவமும். இது இறைவன் சித்தம். இயற்கையின் நியதி. அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தமிழகத்திலுள்ள நம் முன்னோர்களின் தன்னிகரில்லா ஆன்மீக அறிவையும், வாழ்வு நெறியையும், விஞ்ஞான அறிவையும் பறைசாற்றும் இவ்வாலயங்கள் எல்லாம் கம்போடியா போன்ற கிழக்கு நாடுகளிலுள்ள பாழடைந்த சிவாலயங்களாகி விடுமோ என்ற வேதனையும் எழுகிறது.

மதத்தின் மற்றும் இறைவனின் மறைவில் நிலவும் மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் பேசிய, எழுதிய குல்பர்ஜி, தபோல்கர், மௌலவி போன்றவர்களைக் கொன்று குவிக்கும் காலம் இது. பெருமாள் முருகன் போன்றவர்கள் நான் இனி எழுதமாட்டேன் என்று சில காலம் முடிவு எடுக்கச் செய்த காலம். இங்கு 16 ஆம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த ஒரு சிற்றரசரின் சொற்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது. மிளகுகளை எல்லாம் கொள்ளையடித்தும், மிளகுத் தோட்டங்களை அழித்தும் தாண்டவமாடிய போர்ச்சுக்கீசியர்களைப் பார்த்து, “நீங்கள் எதை எல்லாம் கொண்டு போனாலும் எங்கள் நாற்று வேலைகளைக் கொண்டு போக முடியாது” என்றாராம். நாற்று வேலை என்பது காலம் பொய்க்காமல் பெய்யும் மழை. “தென்னாட்டவரின் சிவனே போற்றி. என்நாட்டவரின் இறையே போற்றி” என்றல்லவா நம்முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் இறைவனை யாரெல்லாம் அபகரித்து பெயர் மாற்றி, உடை மாற்றி, உரு மாற்றினாலும் மேற்சொன்ன “நாற்று வேலை”யெனும் இறை உணர்வும், இறை நம்பிக்கையும் நம்மை விட்டுப் போகாமல் நம்முடன் இருக்குமேயானால் அது நம்முள் இறையருள் எனும் பயிரை வளரச் செய்து நம் எல்லோரையும் அவரவரது மனதில் குடி கொள்ளும் இறைவனடி சேர்ப்பிக்கும் என்பது உறுதி.

(பின் குறிப்பு : எழுத்தை நம் வாழ்வின் ஒரு பகுதியாகக் கருதும் நாம் “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற நக்கீரனை சில நேரங்களில் அறிந்தோ அறியாமலோ பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவோம். அப்போது நாம் சில கருத்துகளை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தத்தளிப்போம் தான். அது போல்தான் நான் சென்ற இடங்களில் எல்லாம் சாதாரண மக்கள் சொன்னதும், நான் அனுபவித்ததும் தான் இவை. பகிர்தல் மட்டுமே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. மன்னிக்க!)

அடுத்து, சமீபத்திய குறும்பட அனுபவங்கள் - கீதாவின் பதிவு. 






செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

தண்ணீரில் வரையப்படும் கோலங்கள் - 3

நண்பர்கள் தனிமரம் நேசன், பகவான் ஜீ போன்றவர்களின் பின்னூட்டங்களும், முந்தைய பதிவில் சொல்லிய ஒரு சில சம்பவங்கள் மற்றும் கருத்துக்களைப் பற்றி சில விளக்கங்கள் சொல்லுவது நல்லது என்ற எண்ணமும்தான் இந்த மூன்றாம் பதிவு தோன்றக் காரணம். எனது அனுபவத்தின் போது சந்தித்த மனிதர்கள் சொன்னவற்றின் தொகுப்பு.

சீர்காழியில் சிவனுக்குச் சட்டநாதன் என்ற பெயரும் உண்டு. சட்டநாதனைக் காண படிகள் ஏறிச் செல்ல வேண்டும். சிவபக்தனான மகாபலியைக் கொன்ற விஷ்ணு செருக்குற்றுத் திரிய, சிவபக்தர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க சிவன் விஷ்ணுவைக் கொன்று அவர் தோலை உரித்துச் சட்டையாகத் தரித்துக் கொண்டாராம். சட்டை நாதர் நாளடைவில் சட்டநாதர் ஆனாராம். அதன் பின் இலக்குமி தேவியின் வேண்டுதலால் மனமுருகி விஷ்ணுவை உயிர்ப்பித்தாராம். இவ்வரலாறு (ஒரு கட்டுக்கதை அவ்வளவே) பல சிவத்தலங்களில்  மதில்களில் எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து ஓர் உண்மை புலப்படுகிறது.

நூற்றாண்டுகளாக, சைவ, வைணவச் சண்டை நம் முன்னோர்களிடையே இருந்திருக்கிறது. இது போன்ற கதைகள் சைவர்களும், வைணவர்களும் ஏராளமாக புராணங்களில் திணித்திருக்கிறார்கள். மட்டுமல்ல, சைவர்களும், சமண மதத்தவர்களும் சண்டை இட்டதாகப் பல ஆதாரங்கள் இருக்கிறது. அதே போல் சைவர்கள், பௌத்த மதத்தவரிடமும் சண்டையிட்டிருந்திருக்கிறார்களாம்.  ஆனால், இன்றும் சமண மதத்தினரும், பௌத்த மதத்தினரும் சச்சரவுகள் இல்லாமல் ஊன்றி வாழும் நம் நாட்டில் எப்படி சைவர்கள் மட்டும் வைணவ மதத்தவர்களிடம் சமரசமாகி இப்போதைய இந்துக்களானார்கள்? இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமெனில் அதற்கு முன் சில கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைத்தே தீர வேண்டும். திருமூலனும், சங்கராசாரியாரும் கண்டுணர்ந்த “உன்னுள் உறையும் இறைவன்” (ஜீவாத்மாவே பரமாத்மா) எனும் சைவமாம் அத்வைத தத்வமும், மத்வாச்சாரியார், இராமானுசர் கண்ட “ஜீவாத்மாவை பரமாத்மாவில் ஐக்கியமாக்குவதே மனித வாழ்வின் இலட்சியம்” எனும் த்வைதமாம் வைணவமும் ஒன்றுதானே? அப்படியிருக்க த்வைதத்திலிருந்துப் பிறந்த வைணவத்தில் நெற்றி, தோள், வயிறு, பாதம் போன்றவைகளிலிருந்து தோன்றியவர்கள்தான் முறையே பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைசியர்கள் மர்றும் சூத்திரர்கள் என்று சொல்லி அவர்களைப் பிரிக்கும் போது சைவமும் வைணவமும் ஒரு போதும் ஒன்றாக்க முடியாத தண்ணீரும் எண்ணையும் போல் ஆகிவிடவில்லையா?

இங்கு சைவர்களையும், வைணவர்களையும், முகலாயர்களும், ஆங்கிலேயர்களும்தான் இந்துக்களாக ஒன்றாக்கி உருமாற்றம் செய்தவர்கள். இப்படிச் சைவத்தையும் வைணவத்தையும் கலந்த போது அது “நீ வீட்டிலிருந்து அரிசி கொண்டு வா, நான் என் வீட்டிலிருந்து அதே அளவு உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் ஒன்றாகக் கலந்து நாம் அதை ஊதி ஊதித் தின்று இம்புறுவோம்” என்ற கதை போல் ஆகிவிடவில்லையா? இப்போது இந்து மதம் என்பது வைணவமே. சைவத்தை இப்படி உமியாய் ஊதித்தள்ளி வைணவமே இந்துமதம் என்று ஆக்கியது முறையா.

எல்லா மனிதர்களையும் சமமாய்க் காணாத மனிதர்களில் பல தட்டுகளாக்கும்  மதமாய் மாறிய இந்து மதத்தில், எல்லோரும் சமம் என்று பேசும் சைவத்தை எப்படிச் சேர்க்க முடியும்? அப்படியானால்? சைவத்தை வைணவம் விழுங்கிவிட்டு ஏப்பம் விட்டுவிட்டது என்பதுதானே உண்மை? அதனால்தானே சைவம் பேசுபவர்களை எல்லாம் அசுரர்களாகவும், நாகர்களாகவும், லிங்காயத்துகளாகவும், ஈழவர்களாகவும், ஆதிதிராவிடர்களாகவும் ஆக்கப்பட்டுவிட்டார்கள். அவர்களில் லிங்காயத்துகள் ஒழிய மற்றவர்களின் பெரும்பான்மையினர் இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்தினராக ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும் அதனால்தான்.

1922ல் திருவனந்தபுரத்தில் கிறித்தவமதம் மாறிய சாணாத்திப் பெண்கள் (நாடார்கள்) தங்கள் மார்பகங்களை மறைத்து நடந்த போது அவர்களை மேல்சாதியினர் கல்லெறிந்து விரட்டிய சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டுகளில் திருவிதாங்கூரின் பாகமாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதிகளில் அதிகமாக கிறித்தவ மதத்தினர் உள்ளதற்குக் காரணம் அன்றைய சாதி சம்பிரதாயம்தான். காஷ்மீரில் இந்தியா சுதந்திரம் பெறும் முன் இந்துக்களாகப் பண்டிட்டுகள் மட்டும் எஞ்சியதும் ஏனையோரெல்லாம் இஸ்லாம் மதம் தழுவியதும் இச்சாதி சம்பிரதாயத்தால்தான். அப்படி காஷ்மீர் இன்றும் முடிவுகாண முடியா பிரச்சனையாய் நிற்க ஒரு காரணம் இச்சாதி சம்பிரதாயம்தான்.  நாகாலாந்தின் நாகர்கள் கிறித்தவமதம் தழுவியதும் அதனால்தான். 

ஆனால்,, 20 நூற்றாண்டின் முதற்பகுதியில் திராவிட நாட்டில் சாதி விஷம் ஏறியது முற்பட்டவர்களுக்கல்ல, பிற்பட்டவர்களாக ஆக்கப்பட்டவர்களுக்கு. சைவம் மறந்த பிற்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டவர்களுடன் மோதிக் கொண்டதும் இச்சாதி சம்பிரதாயத்தால்தான். அன்று இராமநாதபுரம், மதுரை போன்ற மாவட்டங்களில் இக்காரணத்தால் திராவிடர்கள் இஸ்லாம் மதம் தழுவ வேண்டியதானது.

சைவத்தில் இல்லாதிருந்த சாதி சைவர்கள் இந்துக்களானதும் அவர்கள் எல்லோரையும் தொர்றிக் கொண்ட தொற்று நோய். சாதியை ஒழிக்க திராவிட இயக்கம் தொடங்கிய ஈவேரா பெரியாரையே எல்லோரும் இப்போது ஈவே ராமசாமி நாயக்கர் என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.  பெரியார் தொண்டர்களும் சாதி ஒழிப்பை மறந்து இறைவன் இல்லை என்பதிலும், பிராமணர்களை ஏசுவதிலும் முழு கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். இப்போதைய நிலையில் சாதியை ஒழிப்பதோ, இந்து மதத்தில் கலந்து தனித்தன்மையை இழந்த சைவத்தை மீட்டுக் கொண்டுவருவதோ இயலாத காரியம். பட்ட மரம் பூக்காது. ஆனால் அதன் விதைகளில் ஏதேனும் ஒன்று எங்கேனும் விழுந்து முளைத்து வளர்ந்தால்தான் உண்டு.

உலகெங்கும் சிதறிக் கிடக்கும் சாதி பேசாத இலங்கைத் தமிழர்கள் உள்ள இடங்களில் சைவம் வளர வாய்ப்புள்ளது போல் தோன்றுகிறது. இதற்கெல்லாம் காரணமான பிராமாணர்களில் பின் தலைமுறையினரை அவர்கள் முன்னோர்கள் செய்த குற்றத்திற்காக பழிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர். தீவிரவாதத்தை வளர்க்கும் சிலருக்காக அவர்களது குடும்பத்தினரையும் எல்லா இஸ்லாமியர்களையும் குற்றம் சொல்வது போல்தான். 

நாம் நசுக்கிக் கொல்ல வேண்டியது சாதி மத நோயையும் அந்நோயை உண்டாக்கும் கிருமிகளையோ அல்லாமல், நோய் பாதித்த மனிதரையோ, நோய் பாதித்திருக்க வாய்ப்புண்டு என்று நாம் சந்தேகிக்கும் அவர்களது குடும்பத்தினரையோ அல்ல. நோய் பாதித்த மனிதரை அந்நோயிலிருந்து குணமாக்கி நம்முடன் ஒருவராக்கி வாழ வழி வகை செய்ய வெண்டும். நம் நாட்டின் இப்போதைய சூழலில் பணத்திற்கும், அதிகாரத்திற்கும் அடிமையான மனித மனம் கடிவாளமின்றிச் சென்று கொண்டிருக்கிறது. 

அடுத்த பகுதியில் நிறைவுறுகிறது.....