படம் இணையத்திலிருந்து
நாம்
ஒவ்வொருவருக்கும் நம் எழுத்துகள் ஏதேனும் மாத இதழிலோ, வார இதழிலோ வெளிவராதா என்ற ஏக்கம்
இருக்கத்தான் செய்கிறது. நம் பதிவர் நண்பர்கள் பலரும் அதனைத் தீவிரமாக முயற்சி செய்து
வெற்றியும் கண்டுள்ளனர். என்றாலும் அப்படி முயற்சி செய்யாமலும், முயற்சி செய்து, வெளிவராமலும்
ஏக்கத்துடன் இருப்பவர்களுக்கு, நாமே அரசன், நாமே மந்திரி என்று உதவும் வகையில் வலைத்தளம்/வலைப்பூ
இருக்கிறது. அதுவும் இலவசமாகத் தொடங்கி எழுதலாம் என்றால் மகிழ்ச்சிதானே! அப்படித்தான்
நாம் அனைவரும் நமது அனுபவங்களையும், நாம் கற்றவற்றையும், உணர்ந்தவைகளையும், தேடல்களையும்,
கற்பனைகளையும், புனைவுகளையும், சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தும்,
நல்லது நடந்தால் பாராட்டியும் எழுதி வருகிறோம்.
அதுவும்
நம் வலைப்பதிவர்கள் ஒருவருக்கொருவர் அவரவர் திறமையை வெளிப்படுத்தியும், நட்புடனும்,
அன்புடனும், எதிர்மறைக் கருத்தானாலும் சரி, நேர்மறைக் கருத்தானாலும் சரி அதனை வெளிப்படுத்திக்
கொண்டும் வருகிறோம். கருத்துப் பரிமாற்றங்களினால் நாம் பல கற்க முடிகின்றது. பிறர்
அனுபவங்களையும் அறிய முடிகிறது. அதிலிருந்து பாடங்களும் கற்று வருகிறோம் என்றால் மிகையல்ல.
அப்படி
நாம் எழுதுவது இவ்வுலகம் முழுவதும் இருக்கும் தமிழன்பர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும்
என்றால் அதற்கு ஒரு திரட்டி இன்றியமையாததுதானே! பல திரட்டிகள் இருந்தன என்றாலும் அனைத்தும்
வெகு சில நாட்களில், மாதங்களில் செயலற்றுப் போயின என்பது மிகவும் வருந்தத் தக்கதே.
திரட்டிகளில் தமிழ்மணம்தான் சிறப்பான திரட்டியாக இருந்து வந்தது என்றாலும், அதில் தரம்
என்பது குறைந்து வரத் தொடங்கியது. அதன் செயல்பாடு பல சமயங்களில் புரியாமல்தான் இருந்து வந்தது. நல்ல திரட்டியாக
இருந்து வந்த தமிழ்மணம் திரட்டி சமீபகாலமாகச் சரியாகச் செயல்படவில்லை என்பது நாம் அனைவரும்
அறிந்ததே. ஏனோ அதில் பல சிக்கல்கள் இருந்து வருகின்றன. அதனைப் பற்றி தெரியாததால் இங்கு குறிப்பிடவில்லை. நமக்குக் கவலையில்லை.
ஏன்
கவலையில்லை? இதோ நம் தமிழ் வலையுலகிற்கான, தமிழ் எழுத்தாளர்களுக்கான, நமக்கே நமக்கான ஒரு திரட்டி உருவாகி வருகிறது. அதற்காக நமது
புதுக்கோட்டை வலையுலக அரசர்களான முத்துநிலவன் ஐயா/அண்ணா, மற்றும் செல்வா அவர்களும் வலைச்
சித்தர், சுறு சுறுப்புத் தேனீ என்று செல்லமாகப் பெயர் சூட்டபெற்ற டிடி அவர்களும் இணைந்து
தமிழ்வலையுலக பதிவர்கள் அனைவரையும் ஒரே குடும்பமாக்கிடவும், நம் பதிவுகளை அதில் இணைக்கும்
திரட்டியாகவும், அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் படியுமாக காண்செவிக் குழுவில் தமிழ் வலைப்பதிவகம் என்ற திரட்டி ஒன்றை முன்னோட்டமாகத் தொடங்கிட இதோ வெற்றி நடை போட்டு
வருகிறது.
நிர்வாகக்
குழுவினர் அனைவரது உழைப்பிற்கும், அதனைச் செயல்வடிவமாக்கியதற்கும் பதிவர்கள் அனைவரும் சிரம் தாழ்த்தி வணக்கம் கூறுகிறோம்.
எங்கள் அனைவரது பாராட்டுகளும், வாழ்த்துக்களும்!
இப்போது
இது வரை அறிந்திராத பல வலைப்பதிவர்களையும், புதிய வலைப்பதிவர்களையும் இதில் காண முடிகிறது. பலரது படைப்புகளும் பலரையும் சென்றடையும் என்பதும் உறுதி. அதற்கு உதவும் காண்செவி தொழில் நுட்பத்தையும் பாராட்டுவோம்! நம் எல்லோரையும் இணைக்கும் இணையத் தொழில்நுட்பத்தையும்
பாராட்டுவோம்! என்னே ஓர் அருமையான வாய்ப்பு!
அப்படிப்பட்ட
ஒரு வாய்ப்பை அளித்த நம் அன்பர்கள், நிர்வாகக் குழுவினருடன் நாம் விதிமுறைகளைப் பின்பற்றி
ஒத்துழைக்க வேண்டும்தானே! எனவே நாம் அனைவரும், அதில் தேவையற்ற செய்திகளைப் பரப்பாமல்,
பகிராமல், நாம் எழுதும் இணைப்புகளை மட்டுமே அதில் இணைத்துப் பகிர்ந்து, பிற பதிவர்கள்
எழுதும் பதிவுகளையும் முடிந்தவரை, நேரம் உள்ள போது வாசித்துக் கருத்திட முடிந்தால்
கருத்திட்டு, இல்லை என்றால் வாசித்து அவர்களை ஊக்கப்படுத்தாலாமே! தமிழ்வலையுலக ஒற்றுமை
தழைத்தோங்கிடுமே!
இணையாத
வலைப்பதிவர்கள் இணையுங்கள். தங்கள் திறமையை, எழுத்தாற்றலை வெளிப்படுத்துங்கள். புதிதாய்
எழுத வருவோருக்கும் இது பொருந்தும்! தமிழ் எழுத்தாளர்கள் பெருக வேண்டும். மேன்மேலும்
சிறப்படைய வேண்டும். தமிழ் மொழி! தமிழ் எழுத்துக்கள் இவ்வுலகம் முழுவதும் சென்றடைந்து
சிறக்கட்டும்! தழைக்கட்டும்! தமிழின் மணத்தைப் பரப்புவோம்.
தயவான
வேண்டுகோள்! நம் பதிவர் நண்பர்கள் அதில் தங்கள் படைப்புகளை மட்டுமே இணைத்துப் பயன்
பெறுங்கள். தங்கள் பெயர், ஊர், தளத்தின் பெயர், மற்றும் அலைபேசி எண் அல்லது மின் அஞ்சல்
முகவரி கொடுத்து அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். வேறு செய்திகள், தகவல்கள் வேண்டாமே!
அவற்றைப் பகிர பல குழுக்கள், நம் நண்பர்களின் தனிப்பட்ட காண்செவி எண் உள்ளதே! அதில்
பகிர்ந்து கொள்ளலாம் இல்லையா! தேவையற்றவை வரும் போது நாம் இணைக்கும் பதிவுகளின் இணைப்புகள்
எங்கோ காணாமல் நம் கண்களில் படாமல் போகும் வாய்ப்பும் உண்டுதானே!
எனவே
நாம் அனைவரும் நிர்வாகக் குழுவுடன் ஒத்துழைப்போம், மேலும் சிறக்கச் செய்வோம்! முத்தாய்ப்பாக,
நம் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய புகழ்பெற்ற வலைப்பதிவர் தேனம்மை அவர்கள் தன் தளத்தில்
இட்டிருக்கும் வார்த்தைகளுடன்
வலைப்பதிவர்
ஒற்றுமை
ஓங்கட்டும்.!
என்றும்
நம்முள்
வலிமை
பெருகட்டும்.!
துளசிதரன், கீதா