புதன், 22 மே, 2019

காலம் செய்த கோலமடி – விமர்சனம் – ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ. முனிரத்தினம்


கதையைக் குறித்து, எதிர்பாராத அன்பர்களிடம் இருந்து வரும் விமர்சனங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும்வியப்பையும் ஏற்படுத்துகிறதுஅப்படியான ஓர் அழைப்பு ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு ஜெ முநிரத்தினம் அவர்களிடமிருந்து வந்தது. 

பேராசிரியருக்கு எப்படி இப்புத்தகம் கிடைத்தது என்பதை அறிந்த போது மீண்டும் வியப்பும் மகிழ்ச்சியும். நம் பதிவர் நண்பர் திருப்பதி மகேஷ்தான் அவருக்கும் கொடுத்திருக்கிறார்.

திரு முனிரத்தினம் அவர்கள், (எஸ் வி) ஸ்ரீ வெங்கரேஸ்வரா பல்கலைக்கழகத்தில் தெலுங்கு பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். வயது 73. தெலுங்கு அவரது தாய்மொழி என்றாலும்  தமிழும் நன்கு அறிந்தவர். தமிழிலும் அவர் எழுதுகிறார் என்பது மேலும் வியப்பைக் கூட்டியது. வியப்பிற்கும் மேல் வியப்புகள்.

தன் 13வது வயதிலேயே தான் எழுதிய கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இதுவரை 30 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். 12, ஆய்வு மாணவர்கள், 8 எம்ஃபில் மாணவர்களுக்கு இவர் வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார்.

இவர் தமிழில் எழுதியபேனா மரம்என்ற நூலை, மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தன் எம்ஃபில் ஆய்வுக் கட்டுரைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது இரு தெலுங்கு நூல்களை இரு மாணவர்கள் தங்களின் பிஹெச்டி ஆய்வுக்கட்டுரைக்கு எடுத்துக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இப்படிப் பல தகுதிகள் பெற்ற பேராசிரியர் ஒருவர் நான் எழுதிய புதினத்தை வாசித்து விமர்சனமும் செய்துள்ளார் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க மிக்க நன்றி திரு முனிரத்தினம் சார்.

இதோ, எந்தத் திருத்தமும் செய்யப்படாத அவரது விமர்சனம் அவரது வரிகளில்.

நாவல் எனும் ஆங்கிலச் சொல்லிற்கு மாற்றாகப் புதினம் எனும் தமிழ்ச் சொல் வழங்கப்படுகிறது. இவ்விரு சொற்களுக்கும் புதுமை கொண்ட இலக்கிய வடிவம் எனும் பொருள் கொள்ளலாம். தமிழ் இலக்கிய உலகிற்கு புதினம் புதிதில்லை என்றாலும் அவ்வப்போது அதில் இடம் பெறும் புதுமைகள் மட்டும் புதியன. இத்தகையவற்றுள் காலம் செய்த கோலமடி புதினம் பல புதுமைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இதனை இயற்றியவர் திருவாளர் துளசிதரன்.

அவர் படைத்த புதினத்தில் மட்டுமின்றி, அன்பர் துளசிதரனிலும் சில தனிச் சிறப்புகள் காணலாம். அவரது தாய்மொழி மலையாளம் என்றாலும் அதன் தாக்கம் புதினத்தில் எங்குமே இல்லை. இந்தப் புதினத்தை1982 ல் ஆரம்பித்திருந்தாலும் 2015ல் முடித்திருக்கிறார். இவ்வளவு ஆண்டுகளும் கதைக்கருவைச் சிதையாமல் தாங்கி இருக்கிறார். புதினம் வாசிக்கும் போது பட்டிக்காட்டு வாழ்க்கையோடும் பட்டின வாழ்க்கையோடும் இவருக்கு இருக்கும் தொடர்பு புலனாகிறது. இவரில் இருக்கும் ஆசிரியர் அவ்வப்போது தலை தூக்கிக் காட்டும் பாங்கு ஆங்காங்கே வெளிப்படுகிறது. மொத்த்த்தில் துளசிதரன் ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை மறுப்பிற்கிடமின்றி நிரூபித்துவிட்டார் என்று அழுத்தம் திருத்தமாக அறுதியிட்டுக் கூறலாம்.

காலம் செய்த கோலமடி எனும் தலைப்பு இப்புதினத்திற்கு பொருத்தமாகவே அமைந்துவிட்ட்து. புதினத்தில் வரும் பாத்திரங்கள் மட்டுமின்றி வாசகர்கள் கூட சற்றும் எதிர்பார்க்க முடியாத வண்ணம் பல சம்பவங்கள் புதினத்தில் இடம் பெற்றிருக்கின்றன. கதைத் திருப்பங்களும் அப்படித்தான். யாருடைய முயற்சியுமின்றி இவ்வாறு நிகழ்ந்தால் இது காலத்தின் விளையாடல் என்றே கருத்த் தோன்றுகிறது. மேலும், “என்னைச் சொல்லிக் குற்றமில்லை உன்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடிஎன்ற திரைப்படப் பாடலில் வரும் சிறந்த வரிகளை ஆசிரியர் புதினத்தில் தலைப்பாக வைத்துள்ளார். இந்தப் பாடலை கோபால் மதுரைக்குச் செல்லும் வழியில் ஆசிரியர் ஒலிக்க்ச் செய்திருக்கிறார். இது சிறப்பாக உரியவாறு அமைந்துவிட்டது.

புதினம் முழுவதும் தன்னிலையில் பின்னப்பட்டிருக்கிறது. துரைராஜ், லதா, கோபால் ஆகிய பாத்திரங்களைக் கொண்டே ஆசிரியர் புதினத்தைச் செவ்வனே முடித்துவிட்டார். இது கு. ராஜவேலு எழுதியகாதல் தூங்குகிறதுஎன்ற புதினத்தை நினைவுபடுத்துகிறது. அதில் கூட ஆசிரியர் பாத்திரங்களைக் கொண்டே கதை ஓடச் செய்திருப்பார்.

தற்காலச் சூழலை புறம் தள்ளிவிட்டு எந்த எழுத்தாளராலும் எழுத முடியாதென்றால் அது மிகையாகாது. ஆனால், அந்தச் சூழலைச் சரியாகப் படம்பிடித்துக் காட்டுவதில்தான் எழுத்தாளரின் திறமை அடங்கி இருக்கிறது. காலம் செய்த கோலமடி புதினத்தில், காலம் மிக நன்றாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. காமத்தின் வெறியாட்டம் பட்டிக்காடு பட்டணம் என்ற பாகுபாடில்லாமல், படித்தவன், பாமரன் என்ற வேற்றுமைக்கிடமின்றி எங்குமே நிலவுகிறது. இதை ஆசிரியர் கோபாலின் சொந்த ஊரிலும் மதுரைக் கோவில் உட்பட வர்ணித்திருக்கிறார். கல்லூரி நிகழ்ச்சிகள் இயல்பாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு சிறிய விசயத்தைக் கூட ஆசிரியர் விட்டுவைக்கவில்லை. புதினம் படிக்கும் போது அந்தந்த நிகழ்ச்சிகள் மனக்கண்ணில் தோன்றி மறைகின்றன. நாமே அந்த இடத்தில் இருப்பதாக பிரமை தட்டுகிறது. இதைவிட எழுத்தாளர் திறமைக்கு வேறு என்ன அத்தாட்சி தேவைப்படுகிறது?

துரைராஜ், கோபால் ஆகியோரைக் காட்டிலும் கற்பு விசயத்தில் லதா மேன்மையாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். கணவன் மறுமணம் செய்து கொண்டாலும் பொறுத்துக் கொண்டு தன் தவறை மட்டும் கருத்தில் கொண்டு காலம் தள்ளும் பாங்கு நன்கு அமைகிறது. ஜெயலட்சுமியும் தன் கடமையை செவ்வனே செய்து தன் ஆசிரியரின் முதல் மனைவியிடமும் சபாஷ் வாங்கும் பாங்கு பாராட்டிற்குரியது. காலத்தில் வரும் திருப்பங்கள், தீர்ப்புகள் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை சோலையாக்கிக் கொள்ளப் பார்க்க வேண்டுமே ஒழிய பாலையாக்கிக் கொள்ளக் கூடாது என்பதுதான் ஆசிரியர் வாசகர்களுக்கு வழங்கும் செய்தி.

புதினத்தின் இறுதி கூட முதுமையாகவே அமைந்திருக்கிறது. துரைராஜ் லதாவை தனது தங்கையாக கண்டுபிடித்த பிறகு அவரை விட்டுவிட்டு ஜெயலட்சுமியை மறுமணம் செய்து கொள்கிறார். தனியாக விடப்பட்ட லதா கூட, கோபாலை மணந்து கொண்டு புதிய இல்லற வாழ்க்கையைத் தொடங்குகிறாள். ஒரு பிரச்சனை வரும் போது வருத்தத்துடன் இருந்துவிடாமல் ஏற்றத் தீர்வைக் கண்டுபிடித்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

இந்தப் புதினத்தைப் படைத்த திரு துளசிதரன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இத்தகைய பல புதினங்கள் சுருக்கமாகவும், உருக்கமாகவும் மனதிற்கு நெருக்கமாகவும் அவரது பேனாவிலிருந்து வெளிவர வேண்டுமென்று தமிழ் இலக்கிய உலகம் எதிர்பார்க்கிறது.

திரு முனிரத்தினம் ஐயா அவர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். - துளசிதரன்