புதன், 11 ஜூலை, 2018

மாயத்திரையுலகின் மறுபுறம்


திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ்ந்து கைதட்ட ஆளில்லாத நாட்களில் தனிமையில், வறுமையில் வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு மரணத்தின் பிடியில் அகப்பட்டுப் போவார்கள். ஆனால், இறந்த பின்னும் அவர்களில் பெரும்பான்மையோர் மக்கள் மனதில் வாழ்வார்கள். அறிஞர்கள், மேதைகள், அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் போல் ஓரிடம் மக்கள் மனதில் ஏற்படும் என்பது உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய ஒன்றுதான். எல்லோரையும் பாதிக்கும் மண், பெண், பொன் ஆசைகள் அவர்களையும் பாதிப்பதுண்டு.



தியாகராஜ பாகவதர் காலம் முதல் பல பல பிரச்சனைகளில் திரையுலகப் பிரமுகங்கள் சிக்கித் திக்குமுக்காடி இருக்கிறார்கள். எம் ஆர் ராதா, எம்ஜிஆரை சுட்டே இருக்கிறார். அவர்களில் தானுண்டு தன் வேலையுண்டு என்று நம்பியார், சிவகுமார் போல் வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும் உண்டுதான். தமிழகத்திலும், ஆந்திராவிலும் அரசியலில் இறங்கி வெற்றி பெற்று நாடாண்ட எம்ஜிஆரும், என்டிஆரும் திரையுலகில் உள்ளவர்கள் எதுவரை போகலாம் என்று உணரச் செய்தவர்கள். அவர்களை போல் அரசியலில் இறங்கி, வேண்டாம் இந்த வம்பு என்று திரும்பிய சிவாஜியும், நஸீரும்(கேரளா) அரசியல் எல்லோருக்கும் ஏற்றதல்ல என்பதை உணரச் செய்தவர்கள். இப்படி திரையுலகு ஒரு கனவுலகு மட்டுமல்ல ஒரு அற்புத உலகும் கூடத்தான். அதில் தொட்டதெல்லாம் பொன்னாக்கி வாழ்வாங்கு வாழ்ந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையினர் குறிப்பாகப் பெண்களின் நிலை சிறிது பரிதாபகரமே. திரையுலகும், வெளியுலகும் ஒரு சேர அவர்களை எப்போதும் வேட்டையாடிச் சித்திரவதை செய்து கொண்டே இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் கொச்சியில் விமானத்திலிருந்து இறங்கிய ஒரு நடிகை கடத்தப்பட்டு, ஆபாச புகைப்படங்களும், வீடியோவும் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் வழக்கில் மலையாளத் திரையுலகில் மூன்றாமிடம் எனக்குத்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு நடிகரின் பங்கு இப்போதும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் 85 நாட்கள் அவர் சிறைச்சாலையில் அடைபட்டுக் கிடக்க வேண்டியிருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில்தான் அந்த நடிகர் உள்ளிட்ட சில நடிகர்கள் மலையாள திரையுலகில் நடத்திவரும் திரையுலக ரவுடி ராஜ்யம் சாதாரண மக்களுக்கு முழுமையாகத் தெரியவந்தது.

கார் விபத்துக்குள்ளான நடிகர் ஜகதி ஸ்ரீகுமார் சில வருடங்களுக்கு முன் மலையாள சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்க முடியாத சூழல் இருந்தது. ஆனால் நடிப்பாற்றல் மிக்க ஜகதியை அந்த விலக்கல் பாதிக்கவே இல்லை. மட்டுமல்ல எப்படியோ ஒருவழியாக அவருக்கும் சூப்பர்ஸ்டார்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் தீர்ந்தும் விட்டது.
மலயாளத் திரையுலகில் எண்பது காலகட்டங்கள் வரை இது போன்ற பிரச்சனைகள் இல்லை. 500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் ரெக்கார்ட் சாதனை படைத்த பிரேம் நசீரும், கல்லூரி பேராசிரியரான மதுவும், சப் இன்ஸ்பெக்டரான சத்யனும், அதன் பின் வந்த சோமன், சுகுமாரன் போன்றவர்களும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுத்துவந்தவர்கள். மட்டுமல்ல பரதன், பத்மராஜன், ஸ்ரீகுமாரன்தம்பி போன்ற இயக்குனர்கள் புதுமுகங்களை வைத்துப் படமெடுத்தவர்கள். பரதனும், பத்மராஜனும் மறைந்த பின், நாயகர்களின் ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று மலையாளத் திரையுலகையே விழுங்கிவிட்டது.

மம்முட்டி, மோகன்லால் போன்ற பிரபல நடிகர்களுக்கு ஏற்றபடி கதைகள் உருவானது. காட்சிகளும், வசனங்களும் மாற்றப்பட்டன. தங்களுடன் நடிக்க வேண்டிய நடிகைகள், நடிகர்கள், ஏன்? பாடகர்கள் வரை சில நேரங்களில் அவர்களே தீர்மானிக்கும் நிலை வந்தது. இயக்குநர்கள் உள்ளிட்ட எல்லோரும் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலை. இதனிடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்களை விட நான்தான் மூன்றாம் சூப்பர் ஸ்டார் என்று வந்த நடிகரைப் பற்றித்தான் ஏராளமான குற்றட்சாட்டு. நினைத்ததை முடிக்கும் அந்த நடிகர் வளர்ந்து கேரளத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்கள் எனும் நிலை வந்ததோடு, அவர் வைத்தது சட்டமாகிவிட்டது. நடிகர்கள் சங்கத்திலும், தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், டிஸ்ட்ரிப்யூட்டர்கள் சங்கத்திலும், ஏன் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திலும் அவர் வைத்ததுதான் சட்டம் என்றாகிவிட்டது. அவரை எதிர்த்தவர்களை எல்லாம் வேறோடு சாய்க்கும் அளவுக்கு வளர்ந்த அவரைக் கண்டு சூப்பர் ஸ்டார்களே பயந்து அவருக்கு எதிராக ஒன்றும் செய்யவோ, பேசவோ முடியாத நிலைதான் இன்று.

Malayalam film producers' body plans TV channel
இயக்குநர்/தயாரிப்பாளர் வினையன்

2007 ல் இயக்குநர்கள் உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்களுக்கான “மாக்டா” எனும் இயக்கம் இயக்குநர் வினையன் தலைமையில் உருவானது. அதற்கு முன்பே நடிகர் நடிகைகளுக்கான “அம்மா” எனும் இயக்கம் உருவாகி இருந்தது. 2008 ல் மூன்றாம் சூப்பர் ஸ்டாருக்கும், இயக்குநர் துளசிதாசுக்கும் இடையில் ஒரு பிரச்சனை. அது “மாக்டா”வுக்கு வந்தது. அவர் தீர்மானிக்கும் ஆட்களை உட்படுத்தாத இயக்குனரையே மாற்ற வேண்டும் என்ற சூப்பர் ஸ்டாரின் பிடிவாதத்திற்கு துணை போகாமல் இயக்குநருக்குச் சாதகமாகப் பேசினாராம் வினையன். விளைவோ, அந்த சூப்பர் ஸ்டாரின் தலையீட்டால் “மாக்டா” பிளந்தது. ஃபெஃப்கா (Fefka) எனும் புதிய சங்கம் உருவானது. அச்சங்கம், இயக்குநர் துளசிதாசுடன் வினையனையும் திரையுலகிலிருந்தே விலக்கிவிட்டது. இதனிடையே திலகன், வினையன் விலக்கப்பட்டதை பொருட்படுத்தாமல் அவரது படத்தில் நடித்தார். உடனே திலகனுக்கும் “அம்மா” விலிருந்து விலக்கு வந்துவிட்டது. மிகச் சிறந்த நடிகரான திலகனை எல்லோரும் ஒதுக்கிவிட்டார்கள். இதற்கிடையில் 16 படங்கள் இயக்கிய, 1988ல் தன் முதல் படத்திற்கு மாநில விருது வாங்கிய அலி அக்பர், 2009 ல் திலகனை நாயகனாக்கி “அச்சன்” (அப்பா) எனும் படம் எடுத்தார். விளைவோ அந்தப்படத்திற்கு தியேட்டர் கிடைக்காமல், அரசு திரையரங்கான கோழிக்கோடு ஸ்ரீ யில் மூன்றே நாட்கள் மட்டும்தான்  அப்படம் ஓடியது. அலிஅக்பர் விடவில்லை. மீண்டும் 2011 ல் திலகனை வைத்து “ஐடியல் கப்பில்” எனும் படம் எடுத்தார். ஃபெஃப்கா, திலகனை வைத்து படம் எடுத்த குற்றத்திற்காக அலிஅக்பரையும் விலக்கிவிட்டது.

Image result for actor thilakan
நடிகர் திலகன்

ஆனால் இப்படி “அம்மாவும்” “ஃபெஃப்காவும்” திலகனை வைத்து படமெடுத்த ரஞ்சித்தை மட்டும் ஏனோ விலக்கவில்லை. “இண்டியன் ருப்பி” எனும் அவரது படத்தில் திலகன் நடித்திருந்தார். ரஞ்சித் போல் சிறந்த ஒரு இயக்குனரை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்திருக்காலாம் அல்லது இதன் வாயிலாக திலகனுக்கு விலக்கு ஒன்றுமில்லை அவர் தன் வாய்க்கு வந்தபடி பேசி வாய்க்கொழுப்பால் வாய்ப்பிழந்தவர் என்று ரஞ்சித்தை சொல்லவைத்து தங்களை வெள்ளை பூசிக் கொள்ள “அம்மா:வும் “ஃபெஃப்கா”வும் நினைத்திருக்கலாம். மட்டுமல்ல திலகன் கடைசியாக நடித்த மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானின் “உஸ்தாத் ஹோட்டல்” படத்திற்கும் பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை. அப்படி ஆளறிந்து, முகமறிந்துதான் மலையாளத் திரையுலகில் விலக்குகள் ஏற்படுத்தப்படுகின்றன. நகைச்சுவை நடிகர் மாள அரவிந்தனும் வினையன் படத்தில் நடித்தற்காக வாய்ப்பிழந்து  மரணம் வரை வருந்தியவர்தான். நவ்யா நாயர் மூன்றாம் சூப்பர் ஸ்டாருடன் நடித்துக் கொண்டிருந்த போது பிருத்விராஜின் நாயகியானதால் வாய்ப்பிழந்து இப்போது வீட்டிலிருப்பவர். பிருத்விராஜுக்கும் மூன்றாம் சூப்பர் ஸ்டாருக்கும் முன்விரோதமுண்டு. பிருத்விராஜ் தாக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக  அன்றும் இன்றும் அறிக்கை விடுபவர். சமீப காலத்தில் மிமிக்ரி நடிகர்களைப் பற்றி பொது மேடையில் பேசிய அனூப்சந்திரன் எனும் நடிகரையும் மூன்றாம் சூப்பர் ஸ்டார் மிரட்டியதாக அனூப் அறிவித்திருக்கிறார்.

இப்படி விஸ்வரூபமெடுத்து மலையாளத் திரையுலகை ஆட்டிப்படைப்பதாகச் சொல்லப்படும் மூன்றாம் சூப்பர் ஸ்டாருக்கும் அவரது இப்போதையை மனைவியான பிரபல நடிகைக்கும் உள்ள தொடர்பு கிசுகிசுப்பாக இருந்த போது ஒரு நாள் தாக்கப்பட்ட நடிகை நேரடியாக ஒரு ஹோட்டலில் அவர்கள் இருவரையும் பார்க்க நேர்ந்ததாகவும், உடனே அவர் தன் உயிர்த் தோழியான, மூன்றாம் சூப்பர் ஸ்டாரின் அப்போதைய மனைவியை அழைத்துச் சொல்லிவிட்டாராம். அது பெருமளவு பிரச்சனையாகி அவரது அப்போதைய மனைவி விவாகரத்து வாங்கி மூன்றாம் சூப்பர் ஸ்டாரிடமிருந்து நிரந்தரமாக விலகவே வைத்துவிட்டது.

மூன்றாம் சூப்பர் ஸ்டார் அதன் பின் தன் மகளின் சம்மதத்துடன் தன்னுடன் தொடர்பிலிருந்த நடிகையை இரண்டாம் கல்யாணம் செய்தும் கொண்டார். முதல் மனைவி தன் சொத்துக்களில் நல்ல ஒரு பங்கை மகளுக்காக விட்டுக் கொடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது. அதனிடையே மூன்றாம் சூப்பர் ஸ்டார் மற்றும் முதல் மனைவியின் பினாமியாக தாக்குதலுக்கு உள்ளான நடிகையின் பேரில் உள்ள சொத்தை அவர் மூன்றாம் சூபர்ஸ்டாருக்குக் கொடுக்க மாட்டேன் என் தோழிக்குத்தான் கொடுப்பேன் என்று சொன்னதுதான் அவர் தாக்குதலுக்குள்ளாக நேர்ந்ததற்கு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது.

எப்படியோ தாக்குதலுக்கு உட்பட்ட போது, மூன்றாம் சூப்பர் ஸ்டார்தான் அதன் பின்னணியில் என்று தாக்கியவர்கள் சொல்லிட, நடிகை துணிச்சலாக எல்லாவற்றையும் போலீசாரிடமும், மறைமுகமாக மீடியாவிலும் சொல்லிவிட்டார். அவருக்கும் மலையாளத் திரையுலகில் வாய்ப்பில்லாமல் செய்ததோடு மட்டுமின்றி இப்படி வேட்டையாடி அவரது மண வாழ்க்கையையே கெடுத்திட முயலும் ஒருவரிடம் இப்படிச் செய்வதில் தவறில்லை என்று அவரது கணவரான கன்னட திரையுலத்தைச் சேர்ந்தவரும் சொல்லி அந்த நடிகைக்குத் உறுதுணையாய் நின்றிருக்கிறார். வழக்கு நடக்கிறது.

சௌம்யா கொலைவழக்கில் கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய காஸ்ட்லி வக்கீல் ஆலூர்தான் மூன்றாம் சூப்பர்ஸ்டாருக்காக வாதிக்க இருப்பவர். பிரதிபலனாக மூன்றாம் சூப்பர்ஸ்டார் ஆலூர் எடுக்கவிருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆலூருக்கு இது போன்ற வழக்குகள் அல்வா சாப்பிடுவது போல்தான் என்றும் சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த தினம், “அம்மா” இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட மூன்றாம் சூப்பர் ஸ்டாரை மீண்டும் இயக்கத்தில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது. அதை எதிர்த்து ரம்யா நம்பீசனும், ரீமா கல்லிங்கலும் “அம்மா” இயக்கத்திலிருந்து ராஜினாமாவே செய்துவிட்டார்கள். “அம்மா” உறுப்பினர்களான ரேவதி, பார்வதி மேனோன், பத்மபிரியா போன்றவர்கள் அதை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

திரையுலகப் பெண்களின் இயக்கமான “W.C.C” யும் நடிகைக்காக வாதிட்டு வருகிறது. அத்துடன் “W.C.C.” (விமன் இன் சினிமா கலெக்டிவ்) இயக்கத்தினர் திரையுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல பிரச்சனைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். வாய்ப்பிற்காகப் பெண்கள் அவர்களையே திரையுலக பிரமுகர்களுக்குக் காணிக்கையாக்கும் நிலை புதிதல்ல, முன்பும் உண்டுதான். முன்பெல்லாம் ஒரு சிலர்தான் அப்படிச் செய்பவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போதோ ஒரு சிலர்தான் அப்படிச் செய்யாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களையும், அப்படிச் செய்பவர்கள் இல்லாமல் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கும் இந்நிலையில் அரசும் நீதிமன்றமும் சமூகமும் இதை வெறும் பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதாது. அவற்றை முகம் பாராமல், அரசியல் பாராமல், வலுப்பெறச் செய்து நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். அத்துடன் பெண்களும் ஒன்று கூடிப் போராட வேண்டும்.

செவிலியர்களின் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறதே. எல்லா கடைகளிலும் பெண்கள் நின்றே வேலை செய்ய வேண்டும் என்பது தற்போது ஆடையகம் போன்ற கடைகளில் பெண்களுக்கு இப்போது உட்கார ஓர் இருப்பிடம் கிடைத்திருக்கிறதே. இது போல பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட மற்றவர்கள் மனமுவந்து நம் தேவைகளை நிறைவேற்றட்டும் என்று நினையாமல், பிரச்சனைகளைத் தயங்காமல் சொல்லி வாதிட்டு அதற்கான தீர்வு காண முயல வேண்டும். ஆண்கள் உள்ளிட்ட எல்லோரும், பெண்களைத் “தாய்” “தெய்வம்” என்றெல்லாம் வாயளவில் சொல்லித் தப்பாமல் தங்களால் இயன்ற மட்டும் வாக்காலும் செயலாலும் தங்களது ஒத்துழைப்பை உறுதிப்படுத்தி ஆவன செய்ய வேண்டும்.

படங்களுக்கு நன்றி கூகுள்/இணையம்

----------துளசிதரன்