சனி, 28 பிப்ரவரி, 2015

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!, இவ் எழுத்தாளர்களுக்கு!!!.....



Avijit Roy.jpg

அவிஜித் ராய்                            அவரது  மனைவி ரஃபீதா அஹமது பன்னா

இரத்தத்தில் குளித்து, தரையில் விழுந்து கிடக்கும் அவிஜித் ராய், உடலெங்கும் சிதறிய இரத்தத்துடன், உதவிக்காகக் கெஞ்சும் அவரது மனைவி “ரஃபீதா அஹமது பன்னா” – இதைக் கண்டு பதறிப் போகும் ஒவ்வொருவரின் மனதிலும் எழும் எண்ணம், “இறைவன் பெயரால் நடத்தப்படும் இது போன்ற கொலைகள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், ஒன்று இறைவனைப் பற்றியோ, மதங்களைப் பற்றியோ பேசாமலோ, எழுதாமலோ இருக்க வேண்டும்.  இல்லையேல், அப்படிப் பேசவோ எழுதவோ வேண்டியச் சூழல் வந்தால், பிரச்சினைகள் வராதவிதத்தில் கவனமாகக் கையாண்டு பேசியும், எழுதியும், அவர்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்,” என்பதாகத்தான் இருக்கும்.

      பங்களாதேஷில் பிறந்து, அமெரிக்காவின் குடியுரிமையுடன் அங்கு வாழ்ந்து வரும் அவர் பங்களாதேஷில், ஒரு புத்தகக் கண்காட்சியில் பங்கெடுக்க வந்த போதுதான் இப்படிக் கொல்லப்பட்டிருக்கிறார்.  புத்தகங்களிலும், பதிவுகளிலும் வந்த அவரது கருத்துக்கள், மதத் தீவிரவாதிகளின் எதிர்ப்பை மட்டுமல்ல, அவர்களது கொலை மிரட்டலையும் தேடித் தந்திருக்கிறது.  அதைப் பொருட்படுத்தாமல், தன் சொந்த நாட்டிற்கு வந்ததால் தான் அவருக்கு இந்தக் கதி.  இதை எல்லாம் காணும் எழுத்தாளர்கள், மேற் சொன்ன படிச் சிந்தித்துத் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், அவர்களுக்கும் அபிஜித்ராய்க்கு ஏற்பட்டது போன்று ஏற்படலாம் எனும் மிரட்டலும் இச்சம்பவத்திற்குப் பின்னணியில் உண்டுதான். ஆனால், எழுத்தாளர்களைக் கொன்றாலும் அவர்களது எழுத்துக்கள் சாகாமல் உயிர் வாழும் என்பதுதானே உண்மை!

Image result for taslima nasreenImage result for humayun azad
 தஸ்லிமா நஸரீன்     ஹுமாயூன்  ஆசாத்  
                                
சுதந்திரமாக எழுதுபவர்களுக்கு, பங்களாதேஷ் வாழத் தகுந்த நாடல்ல என்று தஸ்லிமா நஸ்ரின் உட்பட பல எழுத்தாளர்களும் கூறியிருக்கிறார்கள்.  “முக்தோமன” எனும் வலைத்தளத்தை நடத்தும் அவிஜித், “பிஸ்வாசர் வைரஸ்” (மத நம்பிக்கையின் வைரஸ்) “சூன்யோ பேகே”, “மஹா பிஸ்வா” (சூன்யத்திலிருந்து பிரபஞ்சத்தை நோக்கி) எனும் புத்தகங்களை எழுதி எல்லோரது பாராட்டையும் பெற்றவர்.  ரகமாரி.காம் எனும் இணையதள புத்தகக் கடையிலிருந்து, மத தீவிரவாதிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அவரது இவ்விரு புத்தகங்களும் கடந்த வருடம் நீக்கப்பட்டது. கொலை மிரட்டல் இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் அவிஜித் தன் மனைவியுடன் இப்புத்தகக் கண்காட்சிக்கு வந்தது எல்லோருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு இது போல் ஒரு புத்தக்க் கண்காட்சியின் போதுதான் பங்களாதேஷின் பிரபல எழுத்தாளர் “ஹுமாயூன் ஆசாதும் தாக்கப்பட்டு உயிரழந்தார். இப்படி எழுத்துச் சுதந்திரம், மதத் தீவிரவாதத்தால் விழுங்கப்படும் நிலை பங்களாதேஷ் போன்ற சில நாடுகளில் இக்காலகட்டத்திலும் ஒழியாமல், காட்டுத் தீ போல் உலகெங்கிலும் பரவிக் கொண்டிருப்பதை நினைக்கையில், எதிர்காலத்தில் எழுத்துலகத்தை இருள் கவ்வி விடுமோ என்ற பயம் வளர்கின்றது. அன்பையும், கருணையையும், பக்தியையும் வளர்க்க வேண்டிய மதம் இப்படி வெறுப்பையும், விரோதத்தையும் வளர்த்து, கொலைகளில் சிக்கி உயிரழக்கும் இந் நிலை மாற எல்லாம் வல்ல இறைவன் தான் ஒரு வழி காண்பிக்க வேண்டும். 

படங்கள்:நன்றி: கூகுள்

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

Kadhal Poyin Kadhal - Short Film By Kovai Aavee and his Team



இப்படத்தினுடனான எங்கள் இனிய அனுபவம் அடுத்த பதிவில்.  இப்படத்தின் இயக்குனர், நண்பர் கோவை ஆவிக்கு எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றிகள் பல, எங்களையும் இதில் பங்கெடுக்க வைத்ததற்கு! 

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

திருநங்கைகள்- இவர்களும் நம்மிடையே வாழ வேண்டியவர்களே!

     

நான் இது வரை மேற்கொண்ட ஒவ்வொரு பயணத்தின் போதும் சரி, பிற சமயங்களிலும் சரி, திருநங்கைகளைக் கண்டதுண்டு.  அவர்கள் கைதட்டிப் பணம் பெறுவதையும், அப்படிக் கிடைக்கவில்லை என்றால் ஏசுவதும், பணம் பெறும் வரை நின்று கொண்டு இருப்பதும், ஆண்களின் மீது இடித்தும், வசைபாடியும் பெறுவதைக் கண்டதுண்டு.  இதற்குப் பயந்தே பல ஆண்கள் அவர்கள் வரும் போதே பணத்துடன் தயாராக இருந்துக் கொடுத்துவிட்டுத் தப்பிப்பதையும் பார்த்திருக்கின்றேன். நானும் கொடுத்ததுண்டு.  மனம் யோசித்தது உண்டு இவர்களின் பிழைப்பு ஏன் இப்படியாகிப் போனது என்றும் பல சமயங்களில் இவர்களுக்காக இரக்கப்பட்டதுமுண்டு. எல்லோருமே இவர்களைக் கேலி செய்தோ, இல்லை வசை பாடியோதான் பார்த்திருக்கின்றேன்.  இல்லையேல் இவர்களை ஒரு காட்சிப் பொருள் போல் வேடிக்கைப் பார்ப்பதும் உண்டு.  ஒரு வேளை இவர்களது உடல் மொழியும், நடை உடை பாவனையும் இதற்குக் காரணமாக ருக்கலாம்.  ஆனால், ஏனோ, எனக்கு இவர்களின் மீது ஒரு தனி கழிவிரக்கம் உண்டு.

      இதுவரை தூர நின்று பார்த்திருந்த திருநங்கைகளிடமிருந்து சற்று வித்தியாசமான பாவனைகளுடன் இருந்த திருநங்கைகளை, எனது இப்போதைய பயணத்தின் போது, கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில், சென்னை வரவேண்டி ரயிலுக்காகக் காத்திருந்த சமயத்தில், காண நேர்ந்தது.  தாங்களுண்டு, தங்கள் வேலை உண்டு என இவர்கள் இருந்தாலும், அங்கிருந்தோர் எல்லோருமே இவர்களையே உற்று நோக்கிக் கொண்டு, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நானும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாலும், எனது பார்வையும், மன நிலையும் அவர்களை அணுகலாமா, எப்படி அணுகுவது என்ற ஒரு சிந்தனையுடன் இருந்ததை அந்த 3 திருநங்கைகளில் ஒருவர் உணர்ந்திருக்க வேண்டும்.  எனது பார்வையும் ஒரு நட்பினை உணர்த்தியதோ என்னவோ, அவர் என்னைப் பார்த்துப் புன்முறுவலித்தார்.  அதைப் பார்த்ததும், இதுதான் தருணம் என நான் அவர்களை சமீபத்து உரையாடத் தொடங்கினேன். இதுவே சற்று வித்தியாசமான சூழல் போலும். அங்கிருந்தோர் இப்போது என்னையும் வினோதமாக வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.

      திருநங்கைகள் என்று சொல்லப்பட்டாலும், அந்தத் “திரு” என்ற சொல்லுக்கான, ஒரு அர்த்தமாகிய, இந்த சமூகத்தில், உலகில் வாழ வேண்டிய அந்தஸ்து என்பது அவர்களிடம் எந்த வடிவிலும் இல்லை. ஆனால், திரு என்ற சொல்லின் பிரிதொரு அர்த்தம் அவர்களின் முகத்தில் மிகுதியாகவே இருப்பதாகப்பட்டது.  ஆம்!  அவர்கள் அழகாக இருந்தார்கள். இல்லை ஒரு வேளை எனது கண்களுக்கு அப்படித் தோன்றியதாகவும் இருக்கலாம். உரையாடியதில் அவர்கள் மிகவும் நல்ல மனது படைத்தவர்களாகத் தெரிந்தார்கள்.  படித்தவர்கள். அவர்களது உடலமைப்பு, அவர்களை ஆண்கள் என்று பறையடித்தாலும், தங்களைப் பெண்களைப் போன்றுதான் அலங்கரித்திருந்தார்கள். மிகவும் தன்மையாகப் பேசினார்கள். நல்ல பண்புகளும், இந்த சமூகம் தங்களைப் புறக்கணித்தாலும், சமூகம் பற்றிய நல்ல சிந்தனைகளும், சாதாரண மக்களின் இன்னல்களையும் உணர்ந்தவர்களாகவே தெரிந்தார்கள்.  சமூக அவலங்களைப் பற்றிக் கவலைப்பட்டார்கள். எனது நேரிடையான கேள்விகளுக்குக் கூட எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல், கோபப்படாமல், மிகவும் நேர்த்தியாகப் பேசினார்கள்.

      பங்களூரைச் சேர்ந்தவர்கள்.  பிறப்பால் ஆண்களாக இருந்தாலும், சிறுவயது முதலேயே, பெண்களாக வாழவேண்டும் என்ற மனநிலையுடன், தங்களைப் பெண்களாக உருவகப்படுத்திக் கொண்டு வாழ விழைந்ததாகச் சொன்னார்கள்.  மூவரின் குடும்பங்களும் பொருளாதார அடிப்படையில் மிகவும் உயர்ந்தவர்கள். இந்த மூவரில், 12 வருடங்களாக ஒரு திருநங்கையாக வாழ்ந்து வருபவரின் பெற்றோர் இட்ட பெயர் க்ளைஜர், தற்போதைய பெயர் அமீஷா. 10 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றவர், வீட்டிலிருந்து துரத்தப்பட்டதால் கல்வியைத் தொடரமுடியவில்லை. 8 வருடங்களாக  இன்நிலையில் வாழ்பவர் ராகுல் எனப்படும் ரம்யா.  வீட்டின் ஆதரவு இல்லாதவர்.  பெற்றோரும், சகோதரரும் மிகவும் நல்ல பதவியில் இருப்பவர்கள். பி.காம் படித்திருப்பவர். மிக நன்றாக, தூய்மையான ஆங்கிலத்தில் உரையாடுகிறார். தனது படிப்பிற்கான செலவை தானே ஈட்டிப் படித்தவர். இங்கு “ஈட்டி” எனப்படுவது நிஜத்தில் ஈட்டிதான்.  பணம் ஈட்டப்பட்ட முறை. படிப்பிற்குப் பிறகு, பங்களூரில் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில், ஹெச் ஆராக வேலை செய்திருக்கிறார் ஒரு வருடம். பின்னர் அலுவலகத்தில் சில சலுகைகள் இவருக்கு வழங்கப்படுவதில் பிரச்சினைகள் ஏற்பட இவர் புறம் தள்ளப்பட்டிருக்கின்றார். தற்போது பெரும்பான்மையான திருநங்கைகள் போல வாழ்க்கை. மூன்றாமவர் பெயர் பரத்.  தற்போது பூமிகா. 5 வருடங்களாக இந்த வாழ்க்கை. படித்திருப்பது +2.  என்னுடன் முழுமையாக உரையாடிவர் ரம்யா.

      படிக்கும் காலத்தில் நடந்த சிலவற்றைச் சொல்லுவதற்கில்லை.  அதை எழுதினால் சில பிரச்சினைகள் வரக்கூடும்.  மதிப்பெண்கள் கிடைக்க வேண்டுமென்றால், ஒரு சில தகாத உறவுகள் போன்ற இன்னல்கள் இருந்திருக்கின்றது.  

    இவர்களுக்கு குரு ஒருவர் இருப்பாராம். அவர் இவர்களுக்காக, ஒருவருக்கு 2 லட்சம் செலவழிப்பாராம். இவர்கள் அவருக்கு அதை 4 லட்சமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டுமாம். இவர்கள் மிகவும் அழகாக வேண்டும் என்பதற்காக, 41 நாட்கள் யாரையும் காணாமல், ஒவ்வொரு நாளும் ஒரு திருநங்கை இவர்களுக்கு முதலில் மஞ்சள் அரைத்து உடம்பு முழுவதும் பூசுவார்களாம். பின்னர், 10, 15 அடி தூரத்தில் நின்று கொண்டு, கொதிக்கக் கொதிக்கத் தண்ணீரை இவர்கள் மீது வீசிக் கொட்டுவார்களாம், பிறப்பு உறுப்புகள் உட்பட. இவர்கள் அலறுவார்களாம். அதன் பின் படுக்க வைத்து தூய்மையான சந்தனம் இழைத்து அதை உடம்பு முழுவதும் பூசுவார்களாம்.  வேப்பிலையால் உடம்பு முழுவதும் வருடுவார்களாம்.  இப்படி 41 நாட்கள் செய்த பிறகு உடம்பிலுள்ள முடிகள் எல்லாம் போய்விடுமாம்.  41 நாட்கள் முடியும் அன்று, இவர்களை பாலூற்றிக் குளிக்க வைப்பார்களாம். இதற்குப் பெயர் ஜல்சா. 

    அன்று வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளுக்கு அலங்காரம் செய்வது போல் இவர்களுக்கும், அணிகலன்கள், மெட்டி, கொலுசு அணிவித்து, இவர்களுக்குச் சேவை செய்த திருநங்கைகளுக்கு தங்கத்தில் சிறியதாக ஏதாவது பரிசு அளிப்பாராம் குரு.  அதைப் போல் அந்த சேவை செய்த திருநங்கைகள் இவர்களுக்குப் பரிசு அளிப்பார்களாம். பின்னர் அன்று செருப்பு தைப்பவர் ஒருவரை அழைத்து வந்து இவர்களுடன் முதலிரவுக்கு ஏற்பாடுகள் நடக்குமாம்.  இதற்கு என்றே செருப்பு தைப்பவர்கள் குழு இருக்கின்றதாம்.  வருபவர் இவர்களுக்கு தாலி கட்டி விட்டு அன்று ஒரு இரவு தங்கிவிட்டுச் சென்றுவிடுவாராம்.  பின்னர் இவர்களைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாராம்.  ஆனால் அவரது செருப்பு மட்டும் நினைவாக இவர்களோடு விட்டுச் செல்வாராம்.  இதற்குப் பெயர் தந்தா என்பதாம். இன் நிகழ்வுகளுடன் இவர்களுக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகள் நடத்துவதற்கும் சேர்த்து குரு 2 லட்சம் செலவழிப்பாராம்.  இவர்கள் அவர்க்கு அதை 4 லட்சமாகத் திருப்பித் தரவேண்டுமாம். இன் நிகழ்வுக்குப் பின்னர் அவர்கள் ஒவ்வொரு ஆணுடனும் இரவுகள் கழித்து பணம் சம்பாதிக்கலாமாம். மனதளவில் மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கின்றார்கள். தங்களை பெற்றோரும், இந்த சமூகமும் ஒதுக்குகின்றதே என்ற ஒரு மனப்பான்மையுடன் இருக்கின்றார்கள்.

      இவர்களிடம் நான் கேட்ட கேள்வி, ஏன் இப்படிப்பட்ட ஒரு அவல நிலை? எதற்காக இப்படி வாழ வேண்டும்?  இப்படித்தான் வாழ வேண்டுமா?  ஏன் உங்களுக்கு இருக்கும் திறமையை வெளிக் கொண்டுவந்து, உங்கள் படிப்பை உபயோகப்படுத்தி உங்கள் காலில் நிற்க முயற்சிக்கலாமே. 

“எங்களுக்கும் ஆசை இருக்கின்றதுதான் மேடம்.  சொல்லப் போனால், நான் நன்றாக ஆங்கில வகுப்புகள் எடுப்பேன்.  நடன வகுப்புகள் எடுப்போம்.  ஆனால், எங்களை யாரும் சேர்த்துக் கொள்வதில்லை. எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.  நாங்கள் எதிர்ப்பார்ப்பது எங்களிடமும் அன்பு செலுத்தும் ஆண் துணை கிடைப்பாரா என்றுதான்” என்றார்.  தற்போது அவர்களை பங்களூரில், செல்வந்தர் ஒருவர் – ஷிவானி – அவரும் இவர்களைப் போன்றவர்தானாம்.  ஆனால், ஆணுடைதான் அணிந்திருப்பாராம் - இவர்களைத் தத்தெடுத்து, கவனித்துக் கொள்கின்றாராம்.  ஆனால், இவர்கள் பிச்சை எடுத்துத்தான் பணம் ஈட்டுகின்றனராம். “மேடம் நீங்கள் இதை எழுதுவதினால், எங்களுக்கு யாராவது ஏதாவது வேலை கொடுப்பார்களா?  எங்களுக்கு ஏதாவது நல்ல வேலை கிடைக்குமா?” என்று கேட்டார். 

      “நான் வேலை வாங்கித் தரமுடியும் என்று என்னால் எந்த உறுதியும் கொடுக்க முடியாது.  ஏனென்றால், நான் அந்த அளவிலான நிலையில் இல்லை. ஏதோ எழுதுபவள். இதையும் எழுதுகின்றேன்.  யாராவது இதைப் படிப்பவர்கள் உங்களுக்கு வேலை தர முன்வந்தால், நான் மிகவும் மகிழ்வேன்” என்றேன். அவர்களின் விருப்பம் நிறைவேறினால் மிகவும் நன்று.

      நான் அவர்களிடம் சொன்னது இதுதான். “நீங்கள் பெண்களாக பாவித்து நடந்து கொள்வதிலோ, உடை அணிவதிலோ தவறு இல்லை. ஆனால், அதையும், இன்னும், மிகவும் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் அளவு அணிந்து கொண்டு, பிறர் உங்களைப் பார்த்தால் உயர்வாக நினைக்கும் அளவு உங்களை மாற்றிக் கொண்டு, உங்கள் திறமையை வெளிக் கொண்டுவந்து உங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஏன் முயற்சி செய்யக் கூடாது? அப்படிச் செய்து பாருங்கள், உங்கள் வேலை வாய்ப்பு நிச்சயமாக அதிகரிக்கும். முயன்றுதான் பாருங்களேன்.  இப்படிக்கு ரோஸ் எனும் நிகழ்ச்சியை நடத்திய ரோஸ், மிகப் புகழ் வாய்ந்த நடனமணியான நர்த்தகியைப் போல ஒரு உயர்வான வாழ்க்கையைத் தேடிக் கொள்ளலாமே.”

      “கண்டிப்பாக மேடம், நீங்கள் சொல்லுவது போல முயற்சிக்கின்றோம். நீங்கள் இப்படி, எங்களையும் மதித்து, அன்புடனும், அக்கறையுடனும் பேசுவது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எங்களுடன் தொடர்பில் இருங்கள்.  அவ்வப்போது இது போன்று எங்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்லுங்கள் மேடம்”  என்று சொல்லித் தனது அலைபேசி எண்ணையும் கொடுத்தார்.

      இவர்களும் இந்த சமூகத்தின் ஒரு அங்கத்தினரே! இவர்களும் இந்த சமூகத்தில் வாழ வேண்டும். வாழ உரிமை உள்ளவர்களே! நாம் இவர்களைப் புறக்கணிக்காமல், இவர்களையும் ஏற்றுக் கொண்டு, இவர்களை ஆதரிக்கும் விதத்தில், அவர்களது திறமைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு அளித்து ஒரு சமூக அந்தஸ்து அளிக்கலாமே. அரசும் சில நல்ல திட்டங்கள் வகுத்திருக்கின்றதுதான்.  ஆனால், அதிகம் பேசபடுவதில்லை. மறுவாழ்வு கொடுக்கும் விதத்தில், மனதளவில் பயிற்சி கொடுத்து, தாழ்வு மனப்பான்மையை அகற்றி வேலை, கல்வி, வேலை வாய்ப்புகளும் கொடுத்து, தன்னம்பிக்கையும், தன் காலில் நிற்கும் அளவிற்கான வாழ்வியல் சூழலை உருவாக்கி அவர்களையும் நம்மிடையே வாழ வழிவகுக்கலாமே. 

-கீதா



ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோர்", நம்மிடையிலும் வாழத்தான் செய்கிறார்கள் !!



இந்த ஒரு ஷில்லிங்கிற்கு (1/20 Pound) பூக்கள் வாங்கி என் அண்ணனின் கல்லறையில் எனக்காக வைப்பீர்களா? மிஸ்டர் குப்தா?”

நடுத்தர வர்கத்தின் பிரச்சினைகள் நிறைந்த வாழ்வை மனதைத் தொடும் விதத்தில் அருமையான சிறுகதைகளாகத் தரும் வங்க எழுத்தாளர் பிரபாத் குமார் முகோபாத்யாயா எழுதிய “The Price of Flowers’ / ஆங்கில மொழியாக்கம் – Lila Ray எனும் கதையில் இந்தியாவில் போரில் கொல்லப்பட்டதால், அங்கேயே அடக்கம் செய்யப்பட்ட சகோதரனின் கல்லறையில் பூக்கள் வைக்க முடியுமா என இங்கிலாந்து வந்த இந்தியரான குப்தாவிடம் கேட்கும் 14 வயதுள்ள, வயதான தாயுடன் வாழும் மேகி எனும் மார்கரெட் க்ளிஃபோர்டின் வார்த்தைகள் தான் இவை
 
இந்தியாவில்  பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றும் மேகியின் அண்ணன், இந்தியாவிலுள்ள ஒரு யோகி கொடுத்த மந்திர சக்தியுள்ள ஒரு மோதிரம் என்று கூறி, ஒரு மோதிரத்தை மேகிக்கு அனுப்பியிருந்தார். இந்தியர்கள், அதில் பார்த்தால் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்ல முடியும் என்று அவர் சொல்லியிருந்ததால், ஒரு இந்திய உணவகத்தில் குப்தாவைக் கண்டதும், மிகவும் அக்கறையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்ததை குப்தாவும் கவனித்தார். இரண்டாவது முறையாகவும், அடுத்த வாரம் அப்படி நிகழ, குப்தாவும், மேகியும் நண்பர்களானார்கள். மேகிக்கு ஒரு இந்தியரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று மோதிரத்தைக் காட்டி, தன் அண்ணனைப் பற்றி அறிய ஆவல். குப்தாவுக்கும்  இங்கிலாந்திலுள்ள ஏழைகளது வீட்டையும், வாழ்க்கையையும் காண ஆவல். அப்படி ஒரு நாள் மேகி, குப்தாவை வீட்டிற்கு அழைக்க, வீடு சென்று மாகியின் அம்மா மிஸஸ் க்ளிஃபோர்டிடம் பேசிக் கொண்டிருந்த போது, மேகி அந்த மந்திர மோதிரத்தை குப்தாவின் கையில் கொடுத்து அதைப் பார்த்து அண்ணனின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத்தைச் சொல்ல முடியுமா என்று கேட்க, அதை நீண்ட நேரம் பார்த்தும், குப்தாவுக்கு ஒன்றும் தெரியவில்லை
 
சிறிது நேரம் பேசிவிட்டு குப்தா விடை பெற்றுச் சென்றாலும், சில நாட்களுக்குப் பிறகு மேகியிடமிருந்து குப்தாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் தன் தாயின் உடல் நிலை மிக மோசமானதாகவும், அதற்கான முக்கியக் காரணம் அண்ணனைப் அற்றி ஒரு விவரமும் அறியாததால்தான் என்றும் கூறி குப்தாவை வீட்டிற்கு வர முடியுமா என்று கேட்டிருந்தாள். வீடு சென்ற குப்தாவிடம் அந்த மோதிரத்தைப் பார்த்து தன் அண்ணன் நலமே என்று ஒரு பொய் சொல்லி, தன் அம்மாவின் உயிரைக் காப்பாற்றி, தன்னையும் அநாதையாகாமல் காக்க மன்றாட, குப்தா அது போல் செய்து திரும்புகிறார். சில நாட்களுக்குப் பிறகு, மேகியின் ஒரு கடிதம் வந்தது. அதில் கடந்த மாதம் நடந்த போரில் தன் அண்ணன் கொல்லப்பட்டதாகவும், உடல் அங்கே அடக்கம் செய்யப்பட்டதாகவும் எழுதியிருந்தாள். அதை வாசித்து அதிர்ந்து போன குப்தா, மிஸஸ் க்ளிஃபோர்டைக்  காண தைரியமில்லாமல், ஒரு கடிதம் எழுதி, தன் அனுதாபத்தை தெரிவிக்கிறார். அதில் தனக்கு இந்தியாவில் கிடைத்திருக்கும் தன் பதவியை ஏற்க, இந்தியா செல்வதாகக் கூறுகிறார். குப்தா இந்தியா போகும் நாள், காலை அவரைக் காண வரும் மேகி ஒரு ஷில்லிங்கைக் குப்தாவின் கையில் கொடுத்து, இந்தியா சென்று தன் அண்ணனின் கல்லறையில் பூக்களை வைத்து அவருக்காகப் பிரார்த்திக்க வேண்டுகிறாள். பூக்கள் வாங்க பணம் வேண்டாம் என்று சொன்னதும் அவள் முகம் வாடியதைக் கண்டு பணத்தைப் பெற்றுக் கொண்டு, அப்பணத்தைக் கொண்டு பூக்கள் வாங்கி அவளது அண்ணனின் கல்லறையில் வைப்பதாக உறுதியளிக்கிறார், குப்தா.

70 ஆண்டுகளுக்கு முன் பிற நாடுகளில் இறக்க நேர்பவர்களின் உடல்கள் அவர்களது நாட்டிற்குக் கொண்டு செல்வது என்பது இயலாத காரியம். ஆனால், இப்போதெல்லாம், அது கொஞ்சம் சிரமப்பட்டால் நடக்கும் ஒன்றே. அப்படி இறப்பவர்களின் உடலை அவர்களது நாடுகளுக்குக் கொண்டு செல்ல, வெளிநாடுகளில், குறிப்பாக, அரேபிய நாடுகளில் இறப்பவர்களின் நண்பர்கள் படும் துயரம் கொஞ்சமல்ல. அத்தகையவர்களின் துயரத்தைப் போக்க எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் தேவையான உதவிகள் செய்து, இதுவரை ஏறத்தாழ 2000 பேரது உடல்களை அவர்களது குடும்பத்தினர்கள்  கண்டு, இறுதிச் சடங்குகளை நடத்தி அடக்கம் அல்லது தகனம் செய்ய உதவும் ஒரு தெய்வதூதன் தான் அஜ்மானில் வசிக்கும் இந்தியரான அஷ்ரப்  தாமரசேரிஇவ்வருடம் “பிரவாசி பாரதீய புரஸ்கார்” எனும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்குக் கொடுக்கப்படும் விருது பெற்றவர்.
வெளிநாடுகளில், முக்கியமாக அரபு நாடுகளில் இறக்க நேரிடும் இந்தியர்களுக்குச் செய்ய வேண்டிய உதவி என்பது அவரது உயிரற்ற உடலை அவர் பிறந்த மண்ணில் எரிக்கவோ, அடக்கவோ செய்யத் தேவையான உதவிகள் செய்வது என்பதுதான். இறந்தவரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல, ஏராளமானப் பிரச்சினைகள், அரபு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில், காவல் நிலையங்களில், எம்பசியில், டிராவல் ஏஜன்சிகளில், விமான நிலையத்தில் ஏற்படுவதுண்டு. அதையெல்லாம் தன் அனுபவ அறிவால் தீர்த்த பின் அவ்வுடலை விமானத்தில் ஏற்றி விடும் வரை அஷ்ரப் தாமரசேரி கைமாறு ஏதும் எதிர்பாராமல் செய்யும் தன் புனித சேவையில் ஓய்வு கூட எடுப்பதில்லை. அது அஜ்மானிலுள்ள அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அவருக்குச் சொந்தமான பணிமனையிலுள்ளவர்களுக்கும் தெரியும். எனவே அவர்கள் அஷ்ரப்பை எதிர்பாராமல் அவர்களது பணிகளை செவ்வனே செய்வதன் மூலம்அஷ்ரப்பிற்குத் தன் புனித செயலைச் செய்ய எல்லா வகையிலும் உதவியாகவும் இருக்கிறார்கள்அப்படி அவர் UAE லிருந்து உலகின் பல பாகங்களிலுள்ள ஏறத்தாழ 40 நாடுகளைச் சேர்ந்தவர்களது உயிரற்ற உடல்களை அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் கண்டு இறுதிச் சடங்குகள் நடத்தி, அவ்வுடலுக்கு வேண்டிய மரியாதையுடன் அடக்கம் செய்ய உதவியிருக்கிறார். யாரேனும் இறக்க நேர்ந்தால் உடனேயே இறந்தவரது நண்பர்கள் அஷ்ரப் தாமரசேரியை கூப்பிடுவது வழக்கம்.  

எல்லோரையும் போல் 1999-ல் ஏராளமான கனவுகளைச் சுமந்து அரேபிய நாடு சென்ற அவர், 2000 த்தில், ஷார்ஜாவிலுள்ள ஒரூ நண்பனைக் காணச் சென்ற போது, குவைத்தி மருத்துவமனைக்கு முன்னால் அழுது கொண்டிருந்த ஒரு மனிதர்தான் அவர் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அம்மனிதரின் கண்ணீரைத் துடைக்கச் சென்ற அவர், அன்றிலிருந்து இன்று வரை உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்கள் பிறந்த நாட்டிற்கு அனுப்பி அவ் இறந்தவர்களின் முகம் தெரியாத உற்றார், உறவினர்களது கண்ணீரைத் துடைத்துக் கொண்டேயிருக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல, 2000ற்கும் மேற்பட்டவர்களது உயிரற்ற உடல்கள் அவர்களுக்கு உற்றவர்களைச் சென்றடைய உதவியிருக்கிறார். இப்படி "வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து, வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டு"ருக்கும், அஷ்ரப் தாமரசேரியை நாமும் வாழ்த்துவோம். அவர் இச்சேவையை நீண்ட காலம் செய்ய அவருக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் அளிக்க இறைவனை வேண்டுவோம்.

படங்கள் : கூகுள் 

 பின் குறிப்பு : எங்கள் கணினியில்தான் பிரச்சினை. எங்கள் தளத்திலும், பிற தளங்களிலும் பின்னூட்டம், கருத்துக்கள் இட முடியவில்லை.  வேறு  கணினியில் முயற்சித்த போது இட முடிந்ததால் சென்ற இடுகைகளுக்கு கருத்துக்கள், பின்னூட்டங்கள் இட  முயற்சிக்கின்றோம். வேறு கணினியிலிருந்து,  உபயோகிக்க சமயம் கிடைக்கும் போது  பிற தளங்களுக்குச் செல்வதற்கு முயற்சிக்கின்றோம். எங்கள் கணினி சரியாகும் வரை. நண்பர்கள் தவறாக நினைக்காதீர்கள்.