வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

தலக்காடு - 10 - வைத்யேஸ்வரா கோயில் / வைத்யநாதேஸ்வரா கோயில் - 4

 தலக்காடு12345 , 6 , 7 , 8 , 9

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

கோயிலைச் சுற்றி படங்கள் எடுத்துக் கொண்டே வந்ததைச் சொல்லி வருகிறேன் இல்லையா...தொடர்ச்சி. பின் மண்டபத் தூண்களின் படங்கள் சில...

இச்சிற்பம் சிதைந்திருக்கிற்தோ? வருணனின் விலங்கு மகரம் அது போன்று இருக்கிறது போன்று தோன்றுகிறது ஏனென்றால் இதே போன்ற ஒரு சிற்பம் தெளிவாக வெளிப்புறத்தில் இருக்கிறது அது இதோ....

ஒரு குதிரை முகம் தெரிகிறதா? அதன் அப்புறத்தில் யாளி முகம்?  குதிரையின் மீது வீரர் என்று தோன்றுகிறாது. கீழே யானை... எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்

மேலே இடப்பக்கம் கண்ணப்பநாயனார் நிகழ்வு போல் இருக்கிறது இதே போன்று கொஞ்சம் வித்தியாசமாக, கோயிலின் சைடில் உள்ள வாயிலின் தூண்களிலும் ஒன்று இருக்கிறது தெளிவாக....அது இதோ...


பின் பகுதி தூண்களில் இருப்பவற்றைப் படம் பிடித்துக் கொண்டே வந்ததைச் சொல்லி வருகிறேன் இல்லையா. இப்ப தூண்கள் பகுதியில் இருந்து வலப்புறம் திரும்பினால் கோயிலின் உள்ளிருக்கும் சன்னதிகளின் சுவர் வேலைப்பாடுகளைப் பார்த்துக் கொண்டே படங்கள் எடுத்துக் கொண்டே...  


கோயிலின் உள்ளிருக்கும் கருவறை சன்னதியின் கோபுரத்தின் மூலைப் பகுதியில் இருந்து எடுத்த படம். 
இது சைடில்

வாழைப்பூ தொங்குவது போன்று....

பூத கணங்கள் புடைசூழ நின்றானே 
வேத வித்தகன் ஈசன் மெய்யானானே

பூதகணங்கள் என்போர் சைவம் மற்றும் சாக்த மதங்களில், சிவபெருமானின் சேவகர்ளாகவும், கயிலை மலையின் காவல் தெய்வங்களாகவும் கருதப்படும் பதினெண் கணங்களில் ஒரு பிரிவினர். இவர்கள் குள்ளமான உடல் அமைப்பு, பெரிய கண்கள் மற்றும் தடித்த முகம் போன்ற விசித்திரமான, வடிவங்களைக் கொண்டவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

மெயின் கருவறையின் மேலிருக்கும் விமானம்/கோபுரம். இது இடப்புறம். முன்பு வலப்புறம் உள்ளதைப் போட்டிருந்தேன் 

ஒவ்வொரு தூண் போன்ற செதுக்கல்களிலும் உச்சியில் சிங்க முகம் எவ்வளவு இண்டு இடுக்குகள்! இவற்றுள் பூச்சிகள் சென்று குடித்தனம் நடத்தாதோ? ரொம்பவே பராரிப்பு தேவை. தூணின் கீழே நரசிம்மர் சிறிய சிற்பவடிவில்

இப்படித்தான் ஒவ்வொரு தூண் போன்ற செதுக்கல்களிலும் உச்சியில் சிங்க முகம் மீண்டும் மீண்டும் இப்படியான வடிவங்கள் சுவர் முற்றிலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. அதுவே அழகான கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கிறது.

 

தூண்கள் சந்தித்து மடிந்து இருக்கும் இடத்தில் இரு பக்க சிங்கங்களின் சைடி வடிவங்கள் இணைந்து ஒரே முகம் போன்று! எப்படி எல்லாம் சிந்தித்து படம் வரைவது போன்று செதுக்கியிருக்கிறார்கள்! இப்படிக் கோயிலைச் சுற்றிலும் ஜிக்ஜாக் - ஃப்ரில் வைப்பது போன்ற வடிவில் சுவர் அதில் நுணுக்கமான வேலைப்பாடுகள் பெரும்பாலும் ஒரே வடிவங்கள்தான் மீண்டும் மீண்டும் இருப்பதைப் பார்க்கலாம். அதாவது ஒரு pattern! இவை அப்படியே மண்ணின் அடியிலிருந்து எடுக்கப்பட்டவையா அல்லது தூண்கள் ஆங்காங்கே பிளவுபட்டு அவற்றைச் சீர்ப்படுத்திக் கோர்த்திருப்பார்களா? ஏனென்றால் வாயிலில் பல தூண்கள் கிடப்பதைப் பார்க்க முடிந்தது

இங்கு ஒரு மடிப்பு தெரிகிறதா...இந்த இடத்தில் கொஞ்சம் வித்தியாசமாக அழகாக இருக்கிறது இல்லையா நுணுக்கமான வடிவங்கள் பென்சில் வைத்து கூர் முனையால் சின்ன சின்ன வளைவுகளைச் செதுக்கியது போன்று...

இந்த அழகு மங்கையும் அவளைச் சுற்றியுள்ள வடிவங்களையும் பாருங்க! இதிலும் மடிப்பு மடிப்பாக...


கங்கா தேவி மகரத்தின் மீது இரு பக்கமும் துவாரபாலகர்... இச்சிற்பத்தைப் பார்த்துக்கோங்க இப்ப கீழ போவோம்.... 


.
.இந்த இரு படங்களும் (ஒரே சிற்பம் தான்) கங்காதேவி மகரத்தின் மீது துவாரபாலகர்கள் இரு புறமும்.....ஆனால் முதலில் சொல்லிய சிற்பத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா! வெவ்வேறு சிற்பிகள் செதுக்கியிருப்பார்களோ?

குழந்தையை இடுப்பில் வைத்திருக்கும் பெண் சிற்பம். குழந்தையின் தலையைக் காணவில்லை! யார் என் குழந்தையின் தலையைக் கொய்தது எனக்கு நீதி வேண்டும் என்று கேட்பது போல் இருக்கிறது!

இச்சிற்பத்தையும் கீழே உள்ள மூன்று படங்களில் உள்ளவற்றையும் பாருங்கள்! மேலே குமிழ் போன்று, ஏதோ பல்பு தோரணம் கட்டியது போன்று இருக்கா? இல்லை தாமரை மொட்டுகளைக் கவிழ்த்து தோரணம் போன்று வைத்திருப்பது போல் இருக்கிறதோ? 

முந்தைய படங்களில் காட்டிய அந்தக் குமிழ்கள் உள்ள பகுதியில்தான் இது.  இதனை நான் எடுத்திருந்தேன். ஆனால் சரியாக வரவில்லை எனவே இணையத்திலிருந்து இப்படம்.

கோயிலைச் சுற்றி முன்பக்கம் வரும் முன் வடகிழக்கு கூரை மேலே இது இருக்கிறது. கோயிலின் இடப்புறம். இது நாககர்ண குண்டலமாம். 800-1000 ஆண்டுகள் பழமையானதாம். இக்கோயில் பற்றிய தகவல்களில் இது மிகவும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. வளையத்தைப் பாருங்கள் ஒன்றோடொன்று கோர்க்கப்பட்ட ஒற்றை கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட வளையங்கள். ஐந்துதலை பாம்பின் மீது கோர்க்கப்பட்டுள்ளது. வெட்டிக் கோர்க்காமல் எந்தவித வெட்டும் இணைப்பும் இல்லாமல் அப்படியே கோர்க்கப்பட்ட வடிவச் சிற்பமாம். அப்போதைய 10-14 ஆம் நூற்றாண்டு கலைஞர்களின் மிகச் சிறந்த கலைப்படைப்பாகப் போற்றப்படுகிறது!

இன்னும் சில சிற்பங்களுடன் அடுத்த பதிவில் பார்ப்போம்! 


-----கீதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக