கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது
உங்கள் ப்ரொஃபைல் பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான்
என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால்,
யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவு கொஞ்சம் பெரியதுதான். தயவாய்
பொறுத்துக் கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையோடு தொடங்குகிறேன்.
மடிவாலா ஏரி அல்லது BTM - இதற்கு விரிவாக்கம் (B)பொம்மனஹல்லி (T)தவரேக்கரே (M)மடிவாலா மூன்றும் அடுத்தடுத்து இருக்கும் பகுதிகள் என்பதால் இப்படி அவற்றின் ஆங்கிலப் பெயர்களின் முதல் எழுத்தை எடுத்துக் கொண்டு BTM layout என்று சொல்லப்படுகிறது. இதில் BTM முதல் Stage, BTM இரண்டாம் Stage என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் Stage ல் தான் இந்த ஏரிப்பகுதி.
மடிவாலா
பகுதியின் முனையிலிருந்து தொடங்கி, ஒரு கரையில் BTM second stage மற்றொரு கரையில் பொம்மனஹல்லி
பகுதி என்று விரிந்து இருப்பதால் மடிவாலா ஏரி என்றும், BTM ஏரி என்றும் சொல்லப்படுகிறது.
பெங்களூரில் இருக்கும் மிகப் பெரிய ஏரிகளுள் இதுவும் ஒன்று. 114 ஹெக்டேர் - ஏறத்தாழ
272–275 ஏக்கர் பரப்பளவு.
ஏரியின் மடிவாலா பகுதியில் (அந்த முனையிலிருந்து ஏரி) இந்தப் படத்தில் இருப்பது பாழடைந்த, கோயிலின் ஒரு பகுதி போன்று....அல்லது வரலாறு சம்பந்தப்பட்ட?
இந்த ஏரி வரலாற்றுச்
சிறப்புடையதாம். சோழர்கள் இங்கு ஆண்ட போது உருவாக்கப்பட்டது என்றும் இந்த ஏரியின்
நீரை தங்கள் வணிகத்திற்காக, "மடிவாலாக்கள்" (கன்னடம்) - சலவைத் தொழிலாளர்கள் பயன்படுத்தியதால்
இந்த ஏரி மடிவாலா என்று பெயரிடப்பட்டதாகவும் சொல்கிறார்கள். (மடிவாலா எனும் பகுதியின்
பெயர்க்காரணமும் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.).
பண்டு
விவசாயம், மீன் பிடித்தல், மக்களின் குடிநீர் தேவை என்று பயனுள்ளதாக இருந்த இந்த ஏரி
அதன் பின் பல ஆண்டுகளாக, நகரமயமாக்கல் காரணமாக, 1990களின் முற்பகுதி வரை ஓரளவு குடிநீராகப் பயன்பாட்டில் இருந்த ஏரியின் சுற்றுச்சூழல் குறிப்பிடத்தக்க அளவில் சீரழிந்துள்ளது என்பதைத் தரவுகள் இன்றி நேரில்
பார்த்தாலே தெரிந்துவிடும். இருந்தாலும்...
தேசிய
பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) அறிக்கையில், ஏரியின் ஆக்ஸிஜன் அளவு அசாதாரணமாகக் குறைந்த
(DO) அளவைக் காட்டியதாகவும், பெரும்பாலும் 3 மி.கி/லிட்டருக்கும் குறைவாக, நீர்வாழ்
உயிரினங்களுக்குத் தேவையான குறைந்தபட்சத்தை விட மிகக் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
இப்படித் தொழிற்சாலைக் கழிவுகளாலும் சுற்றியுள்ள கட்டுமானங்களின் (வீடுகள், உணவகங்கள், கடைகள்) கழிவுநீராலும் - சில கட்டுமானங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, சில அனுமதி இல்லாமலும் ஏரிக்கரையை ஆக்ரமித்துக் கொண்டு - படிப்படியாக மாசடைந்து குடிநீருக்குப் பயனற்றதாகிவிட்டது. நான் பார்த்த வரையில் இந்த ஏரி மட்டுமல்ல பெங்களூர் ஏரிகள் பலவும் மாசடைந்து இருக்கின்றன. முன்னர் இருந்த பகுதிகளிலும் இப்படித்தான் ஏரிகளைச் சுற்றிலும் வீடுகள், குப்பைகளைப் போடுதல், கழிவு நீர் ஏரிகளில் விடப்படுதல் எல்லாம் புகைப்படங்களோடு முன்னர் எழுதியிருக்கிறேன்.
ATREE (Ashoka Trust for Research in Ecology and the Environment) நடத்திய ஆய்வின்படி, ஏரியின் சுற்றுச்சூழல், தொடர் மாசினாலும், கழிவுகளாலும் சீரழிந்து நீர் வாழ் உயிரினங்கள், பறவைகள் மற்றும் தாவரங்களுக்கும் மிகவும் தீங்கு விளைவிப்பதாகவும், மேலும் கடந்த வருடங்களில் 60% க்கும் மேல் ஏரிகளின் தரம் குறைந்திருப்பதாகவும் தெரியவருகிறது.
இத்தனை பறவைகள் இருந்திருக்கின்றன முன்பு...இவற்றில் பல இப்போதும் வருகின்றன ஆனால் எண்ணிக்கை குறைந்துள்ளதாம்
மடிவாலா ஏரி ஒரு காலத்தில் மீன்கள், ஆமைகள் மற்றும் 40க்கும் மேற்பட்ட உள்ளூர்ப்பறவைகள், புலம்பெயர்ந்து வரும் பறவைகள் எல்லாவற்றின் குடியிருப்பாகவும், கூடு கட்டி தங்கள் தலைமுறையை வளர்க்கவும் தாயகமாக, சரணாலயமாக இருந்தது மட்டுமல்லாமல் சுற்றிலும் பலவித தாவரங்கள் அடர்ந்த மரங்களுமாக இருந்திருக்கிறது என்பதற்கான அடையாளங்களை இப்போதும் பார்க்கலாம். பார்க்கிறேன்.
Spot billed Pelicans
- புள்ளி மூக்கு கூழைக்கடாக்கள். இவை மரங்களின் உச்சியில் தான் கூடு கட்டும்.
புள்ளி மூக்குக் கூழைக்கடாக்களின் (Spot Billed Pelicans) வருகை மற்றும் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதை வைத்து ஏரியின் தரத்தைச் சொல்லிவிடலாம். சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனவாம்.
இப்போதும் சரணாலயம்தான் என்று பார்க்கும் போதே தெரிகிறது. அத்தனைப் பறவைகள் இருக்கின்றன. இப்படி மாசடைந்த ஏரியிலேயே, கூழைக்கடா, வர்ண நாரை, செந்நாரை, சாம்பல் நாரை, கருப்பு இந்திய அறிவாள்மூக்கன்/அன்றில் பறவை, கருப்புத் தலை வெள்ளை அறிவாள் மூக்கன், புள்ளி மூக்கு வாத்துகள், நாமக்கோழிகள், முக்குளிப்பான்கள், பெரிய கொக்கு, சின்ன கொக்கு, குளத்துக் கொக்கு, பாம்புத் தாரா, நீலநிற தாழைக் கோழிகள், நீர்க்காகங்கள், சிவப்பு மூக்கு தாழைக்கோழிகள் என்று இப்போதும் பார்க்க முடிகிறது என்றால் முன்பு எப்படி இருந்திருக்கும்! ஆனால் இப்போது எண்ணிக்கை குறைந்திருக்கிறதாம்.
பறவைகள்
குறைந்திருப்பது, சுருங்கி வரும் வாழ்விடத்தை, சுற்றுச்சூழலை எதிரொலித்துப் பறைசாற்றுகிறது
எனலாம். நீரின் இயற்கை வடிகட்டிகளாகச் செயல்படும் Typha - டைஃபா (சம்பு நாணல்/தாழைச்
செடிகள் - இது பற்றி பதிவு முன்பு எழுதியிருக்கிறேன்) மற்றும் Canna - மணிவாழை/கல்வாழை/கானாவாழை,
நீர் அல்லிகள் போன்ற ஈரநில தாவரங்களின் இழப்பும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மிகவும்
பாதித்திருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.
மட்டுமல்ல ஏரி நீர் மிகவும் மாசடைந்து உள்ளதால் மனிதர்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் கொசுக்கள் பெருகியிருக்கின்றன என்று, ஆய்வு செய்யும் ஒருவர் ஏரி நீரில் கொசுக்களை ஃபில்லர் வைத்து எடுத்து பாட்டில்களில் சேகரித்துக் கொண்டிருந்த போது அவரிடம் பேசியதில் தெரிந்தது. (நிற்பவர் தூரத்தில் தீவுக்கருகில் ஆகாயத்தாமரையை இயந்திரம் மூலம் அள்ளிப் போட்டுக் கொண்டு இருப்பவரோடு பேசி கரைக்கு வரச் சொல்கிறார். இயந்திரத்தின் காணொளி கீழே.)
சட்டங்கள்
இருந்தாலும், BBMP - பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம், BDA - பெங்களூரு மேம்பாட்டு ஆணையம்
மற்றும் KSPCB - கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு
வாரியம் இவற்றிற்கிடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும், பொறுப்புணர்வும் இல்லாததால்
சட்டங்கள் வலுவாக அமலாக்கம் செய்யப்படவும் இல்லை என்றும், நடவடிக்கைகளும் தாமதமாகின்றனவாம்.
இதோ இது பழைய விஷயங்கள்...
வனத்துறையின் கீழ் இருந்தவரை படகுச் சவாரி, ஏரிப் பகுதிக்குள் நுழைய கட்டணம் என்று இருந்திருப்பதற்கான அடையாளங்கள்
பயனில்
இல்லாத படகுகளை இப்படி அழகுபடுத்தி...
இந்த
ஏரி 2023 வரை வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தவரை சுற்றுலாத்தலமாக, படகுச்சவாரி, பூங்கா என்று உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் நல்ல ஒரு பொழுது போக்கு
இடமாக இருந்திருக்கிறது. அப்போது ஒரு வேளை படகுகள், நடுவிலிருக்கும் தீவு வரைக் கூட்டிச்
சென்று சுற்றி வந்திருப்பார்களோ? ரங்கனத்திட்டு போன்று? அப்படி இருந்திருந்தால், பருவகாலங்களில்
தீவுப்பகுதிகளில் கூடு கட்டி வாழும் பறவைகளையும் பார்க்கும் வாய்ப்பு இருந்திருக்கலாம்!
ச்சே! இங்கே அருகில் இருந்தும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டேனே!
தற்போது
அதன்
பின் BBMP Bruhat Bengaluru Mahanagara Palike அதாவது, பெங்களூரு மாநகராட்சியின் கீழ் மாறியிருப்பதால் படகுச் சவாரி தற்போது
இல்லை என்பதோடு ஏரிக்கரையோரம், சுற்றி இருக்கும் பாதை, மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
ஏரிக்கரை/வரப்பைச் செப்பனிட்டு வருவது முதல் படம், 2 - பாதைக்கான சிமென்ட் டைல்ஸ் கற்கள்
நடை பாதை - வலப்புறம் உட்புறம் அமர்ந்து பார்க்க Gallery - பார்வையாளர் மாடம்
புதிதாக ஏதோ அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் இருப்பது சிறிய குளம் போன்று வடிவமைக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
ஏரி நிர்வாக அலுவலகம்
ஆகாயத்தாமரையை நீக்கும் பணி
https://www.youtube.com/watch?v=mkx2dX8b7nw
இயந்திரத்தில் களைகளை எடுத்து வந்து கொட்டி
வைத்திருக்கிறார்கள். இவற்றை உரமாக்கும் பணி மற்றொரு பகுதியில் நடக்கிறது. அதை பின்னர்
பகிர்கிறேன்.
தற்போது
இந்த மடிவாலா ஏரியில் பெருகியிருக்கும் ஆகாயத்தாமரையை நீக்கும் பணி, ஏரியைச் சுத்தப்படுத்தல், ஏரிக்கரையை/வரப்பைச் செப்பனிடுதல், ஏரிக்கரையை ஒட்டி இருக்கும்
மேடுபள்ளங்களோடு இருக்கும் மண் பாதையைச் சீரமைத்து கற்கள் பதித்து நல்ல சமமான நடைபாதை
போடுதல், மரங்கள் அடர்ந்த பகுதியில் சுத்தப்படுத்தல் அழகுபடுத்தல் என்று பணிகள்
ந ட ந் து வருகின்றன .
ஒரு தொழில்நுட்ப தனியார் நிறுவனம், நீரின் மாசுத்தன்மை, தரம், என்னென்ன இரசாயன நச்சுகள் கலந்திருக்கின்றன, ஆழம், ஏரிக்கரையை பராமரிப்பது போன்றவற்றை ஆராய்ந்து ஆவன செய்யும் திட்டம் ஒன்றை முன்னெடுத்திருக்கிறது. படமும் காணொளியும் இருக்கின்றன. ஆனால் அதைப் பற்றி நான் இப்போது சொல்ல அனுமதி இல்லை. முதலில் அவர்களின் திட்டம் வெற்றியடையட்டும்.
பெங்களூரில் பல ஏரிகளும் இப்போது சுத்தப்படுத்தப்படுவதாகச் செய்திகளில் சொன்னாலும், வீடுகளின் கழிவு நீர் கலக்காமல் வெளியேற மாற்று வழி செய்தல், குப்பைகளைக் கொட்டக் கூடாது என்ற சட்டத்தை வலுவாக அமல்படுத்தல், மழை நீர் குப்பைகள் இல்லாமல் ஏரிகளில் வடியுமாறுச் செய்தல் போன்றவற்றை மேற்கொண்டால் நலம். இப்படிச் செய்தால் மட்டுமே ஏரிகளின் ஆரோக்கியம் மேம்படும். பெங்களூரும் அழகுபெறும்.
எப்படியோ தனியாரோ, மாநகராட்சியோ, வனத்துறையோ, அல்லது எல்லாரும் இணைந்தோ, பொறுப்புடன் இந்த ஏரியைக் காப்பாற்றினால் (இந்த ஏரி மட்டுமல்ல எல்லா ஏரிகளையும் மீட்டெடுக்க வேண்டும்) இது பறவைகள் சரணாலயமாக இன்னும் விரிவடைந்து, பொலிவு பெற்று, பறவைகள் சந்தோஷமாக வந்து தங்கள் தலைமுறையை வளர்க்க உதவிடும். மக்களும் இயற்கையோடு ஒன்றி வாழ வழிவகுக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் ஏரியின் பராமரிப்பு பணிகள் எவ்வளவு துரிதமாக நடை பெற்று ஏரி/ஏரிகள் பொலிவு பெறுகிறது/கின்றன என்று.
ஏரிக் காட்சி - ஒரு முனையிலிருந்து மறுமுனை
வரை - என் favourite/விருப்பமான இடத்திலிருந்து (இது பற்றி வேறொரு பதிவில் சொல்கிறேன்)
எடுத்த காணொளி. முடிந்தால் பாருங்கள்.
----கீதா
.jpeg)

.jpeg)




.jpeg)

.jpeg)

.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக