ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

நாகர்கோவில் - கடம்போடுவாழ்வு - 1


பெங்களூர் – நாகர்கோவில்  (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 11 

சென்ற பதிவில் - திருநெல்வேலி - நாகர்கோவில் பதிவு - 5 ல் நாகர்கோவில் சென்றதும் அங்கிருந்து கடம்போடுவாழ்வு செல்வதற்காகப் பேருந்து ஏற வடசேரி பேருந்து நிலையம் செல்வது பற்றிச் சொல்லி முடித்திருந்தேன்.  மீண்டும் யு டர்ன் வந்த வழியே ஆனால் சாலை வழிப்பயணம் ஏர்வாடி வரை. எனவே அதே வெள்ளமடம், தோவாளை, ஆரல்வாய்மொழி, முப்பந்தல், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர், ஏர்வாடி.

[என்னடா மீண்டும் ரயில் படமான்னு நினைக்காதீங்க! முந்தைய பதிவுகளில் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்குள் நுழையும், முன் பகுதியை எடுத்த படங்கள் இரண்டு. உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். 

முன்பகுதி மட்டும் போட்டிருக்க உன் பெட்டிக்குப் பின்னால் உள்ள நாங்களும் நல்லா வளைவோமாக்கும், படத்தை ஏன் போடாமல் விட்டுட்டே என்று அந்தப் பெட்டிகளுக்கு வருத்தமாயிடுச்சுனா!! அதான் இந்தப் படம். அப்போது போட மறந்தும்விட்டேன்.

மட்டுமல்ல, ஆரல்வாய்மொழி கணவாய் இடையே வரும் போது இரு பக்கமும் மலைகள்  இடையே ரயில் வருவதை படம் எடுக்க வழி இல்லையே என்று நினைத்தேன். ஆனால் இங்கு மலைகள் பின்புலத்தில் அவற்றின் இடையே வருவது போன்று இருக்கு பாருங்க அதனால் இப்படம் இங்கே!!]


நாகர்கோவில் நிறைய மாறியிருக்கிறது. வடசேரி பேருந்து நிலையம் உள்ளே இருக்கும் ஆரியபவன் வாசலில் நம் ஆட்டோ நண்பர் இறக்கிவிட்டுச் சென்றதும் உள்ளே நுழையாம இருக்க முடியுமா?!  பூரி மசால்!!! தலைவாழை இலை போட்டு பரிமாறல்! இரண்டு பூரி, உருளைக்கிழங்கு மசால் - நன்றாக இருந்தது. பூரி பெரியதாக இருந்தது என்பதால் அப்பாவுடன் பகிர்ந்துகொண்டு (அப்பாவிற்கு நான் கொண்டு போயிருந்த மிளகாய்பொடி தடவிய இரு இட்லி சாப்பிட ஆசை எனவே அதை அவரிடம் கொடுத்துவிட்டேன்!) 

சாப்பிட்டு முடித்து ஒரு காஃபியும் குடித்து விட்டு - ரூ100 நோ டிப்ஸ்! - (இந்தப் பக்கங்களில் இன்னும் கவுண்டரில் தான் பில்லிற்கான கட்டணம் செலுத்த வேண்டும். டிப்ஸ் வாங்குவதில்லை. மங்கலான வெளிச்சம் உள்ள ஹோட்டல்களைப் பற்றித் தெரியாது. 

வெளியில் வந்தால் பேருந்து தயாராக நின்று கொண்டிருக்க,  ஏர்வாடியில் (திருநெல்வேலி மாவட்ட ஏர்வாடி) நிற்கும் என்று தெரிந்ததும், ஜன்னல் இருக்கை வேறு கண்ணில் பட்டதும் உடனே ஏறிட மாட்டேனா!  அதுவும் இடதுபுறம்! ஏதோ ஜாக்பாட் அடிச்ச பரம சந்தோஷம்! 


போகும் வழியில் ஜன்னல் வழிப் பார்வையில் க்ளிக்கிக் கொண்டே. பேருந்தில் செல்லும் போது ஃபோட்டோ எடுப்பது சிரமம்தான். விடுவமா!! நாகர்கோவிலில் இருந்து 13.5 கிமீ தூரத்தில் இருக்கும் (கீழே இதோ) தோவாளை முருகன் கோயில். எங்கள் ஊரிலிருந்து 6 கிமீ தூரம்தான்.  

மிகவும் புகழ்பெற்ற கோயில்.  இப்படம் கோயிலுக்குச் செல்லும் வழி. தோவாளை வழியாகச் செல்லும் பெரும்பான்மையான பேருந்துகள் இங்கு நிற்கும். 

கோயிலுக்குச் செல்லும் வழி, நுழைவு வாயில். புதுசு. என் சிறு வயதில் பார்த்ததாக நினைவில்லை

இக்குன்றின் - திருமலை -  மீது பாலசுப்ரமணியன், மயிலுடன் நின்ற கோலம். அவரைப் பார்க்கணும்னா தோராயமாக 108 படிகள் ஏற வேண்டும். ஏற முடியாதவங்க எல்லாம் கீழேயே அவர் மாமாவான பாலகிருஷ்ணன் கோயிலில் மருமகனுக்குச் சேதி சொல்லிடலாம். பாருங்க Their Telegram is very fast you know!!! இருவருமே குழந்தை வடிவங்களில்! 

இக்கோயிலில் சூரசம்ஹாரம் மிகவும் பிரசித்தி. மாறுபடு சூரரை வதைத்த முகனார் ஒவ்வொரு வருடமும் வித விதமான அலங்காரங்களில் சூரனை சம்ஹாரம் செய்வார்! ஆடி மாதம் கடைசி வெள்ளிக் கிழமை அன்று மலர்முழுக்கு விழா. பின்னே தோவாளை பூக்களின் ஊரல்லே!

இயற்கை அன்னை சூழ உள்ள இந்தக் கோயில் எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம், கோயிலின் கடைசியில் ஒரு மண்டபம் போலத் தெரிகிறதா? அங்கிருந்து பார்த்தால் சுற்றிலும் ஆரல்வாய்மொழி, மகேந்திரகிரி, அசம்பு மலைத்தொடர்கள், கீழே குளங்கள் என்று கண்ணிற்கும் மனதிற்கும் இதமான மெய் மறக்கும் காட்சிகள் பார்க்கலாம். 

தோவாளை முருகன் கோயில் சன்னதியின் முன்னே உள்ள தூண்களில் ராமர், கிருஷ்ணர், ஹனுமார் என்று நிறைய சிற்பங்கள் உண்டு. கல்வெட்டு கூட உண்டு. 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் இக்கோயில் உருவானதாகச் சொல்லப்படுகிறது. 

இந்திரன் அடிக்கடி ஏதாவது தப்பு பண்ணிட்டு பரிகாரம் தேடுவானே.  அப்படி சுசீந்திரம் மும்மூர்த்திகளை வழிபட வந்தப்ப தோவாளை மலர்களின் வாசம் அவனைக் கவர்ந்தது என்றும் அம்மலர்களைக் கொண்டு சுசீந்திரம் சிவனை பூஜித்து சாபவிமோசனம் பெற்று தேவலோகம் சென்ற பிறகும் இந்தப் பூக்களால்தான் பூஜை செய்தானாம். அதற்கு இங்கிருந்து பூக்களைக் கொண்டு போக ஏஜன்ட்ஸ் தேவர்கள்! அடுத்தாப்லதானே மகேந்திரகிரி! அங்கிருந்து ட்ரான்ஸ்போர்ட் அப்பவே இருந்திருக்குமோ!!

தோவாளையும் சுற்றுப் பகுதிகளும் பூக்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கிருந்துதான் பல பகுதிகளுக்கும் பூக்கள் செல்கின்றன. மல்லி, ரோஜா, சாமந்தி, பிச்சி என்று பல விதமான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. திருவனந்தபுரத்திற்கு இங்கிருந்துதான் பூக்கள் செல்லும் குறிப்பாக ஓணம் சீசனில் தோவாளை பூமார்க்கெட்டிற்கு அடிபொளியானு! பூ வியாபாரம் முக்கியத் தொழில் இங்கு.

நான் சமீபத்தில் அங்கிருந்த போது மழை காரணமாக மல்லி, பிச்சி எல்லாம் கிலோ 2000 - 3000-3500 இருந்ததாக நம்ம ஊர் மக்கள் பேசிக் கொண்டார்கள்.  இப்போதைய ரேட் ரூ 1500 ஆகியிருப்பதாகத் தெரிகிறது. நான் பூக்களை மிகவும் ரசிப்பேன். சூடும் வழக்கம் இல்லை.

நான் எடுத்த படங்கள் அல்ல. படங்கள் இணையத்திலிருந்து - நன்றி 

இங்கு படத்தில் உள்ள திருமலை முருகன் கோயிலைத் தவிர அதன் பின் புறம் தெரியும் மலைப்பகுதியில்  இக்கோயிலில் இருந்து 3 கிமீ தூரத்தில் இயற்கை சூழ், 'சித்தர்கிரி/தெக்கர்கிரி - சித்தர்கள் வாழ்ந்த தெக்கர்கிரி எனும் மலை. அங்கும் முருகன் கோயில் உள்ளது. தென்பழநி என்றும் சொல்லப்படுகிறது. இக்கோயிலை இப்போது சுற்றுலாத் தளமாக்க உள்ளார்கள் என்றும் தெரிந்தது. இக்கோயிலுக்கும் செல்ல ஆசை இருந்தது. (நேரில் செல்லாததால் என்னிடம் படங்கள் இல்லை.) இதைப் பற்றி இணையத்தில் நிறைய வீடியோக்கள், படங்கள், தகவல்கள் உள்ளன.

இம்முறை பல தடைகள் - கோவிட் தடைகள், தனியாகச் செல்ல முடியாத இடங்கள், கனமழை, சில கோயில்கள், மலைக் கோயில்கள் போகக் கூடாது (ஒரு வருடத்திற்கு) என்று ஒரு வீட்டு ரூல் - இருந்ததால் என் லிஸ்டில் இருந்த பல இடங்களுக்குச் செல்ல முடியவில்லை.  SO SAD. 
Do not wait for the perfect opportunity, instead, grab any opportunity and make it
கிடைத்ததையும் கொஞ்சம் தான் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. எனவே இம்முறை என் நேரிடை அனுபவங்கள் இல்லாததால் கோயில்களைப் பற்றிய, ஊரைப் பற்றிய பொதுவான விஷயங்கள்தான். 

தோவாளை கோயில் தாண்டியதும் அதன் பின் புறம் உள்ள பெரிய குளம். 

சாலையின் இடப்புறம் கூடவே வரும் நீரோடை. ஆங்காங்கே இந்த அளவிலும் கொஞ்சம் சிறியதாகவும் வள்ளியூர் வரை. மழை சீசன் என்பதால் வெளியில் தெரிந்தது. மற்ற சமயங்களில் சிறிதாக மாறும் இடங்களில் தண்ணீர் சில  இடங்களில் தெரியாது. அல்லது சாக்கடையாகத் தெரியும்.

மீண்டும் அதே ஆரல்வாய்மொழி மலைப்பகுதி ஒன்றே ஒன்று இங்கு மற்றவை கீழே காணொளித் தொகுப்பில்

ப்ளாட் போட்டுருக்காங்க பாருங்க!  வாங்கறவங்க வாங்கிக்கோங்க! ஆனா நான் பொறுப்பல்ல!! கேட்டோ!!!!
ஏர்வாடி வந்தாச்சு என்பதன் அடையாளம் இந்த இரு மொட்டை மலைகள்!  ஏர்வாடியைச் சுற்றி எங்கு சென்றாலும் இந்தக் குன்றுகள் நம்முடன் வரும்!எனக்கு  இந்த இரு மலைகளும் மறக்க முடியாத ஏர்வாடிஅடையாளங்கள்.  வள்ளியூர், திருக்குறுங்குடி எனக்குப் பழக்கமான ஊர்ப்பகுதிகள். மட்டுமின்றி அடிக்கடி வேலைக்கான தேர்விற்காகத் திருநெல்வேலிக்குப் பயணம் செய்த பகுதி

(ஏர்வாடியா? ஏருவாடியா? சமீபத்திய குழப்பம். நான் அறிந்தவரை ஏர்வாடி, இப்போது ஏருவாடி என சில இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு வேளை இராமநாதபுரம் ஏர்வாடி (தர்கா மனநல காப்பகம்- சேதுபடம்) எனும் ஊர் இருப்பதாலோ? நோ ஐடியா. எனக்கு ஏர்வாடிதான்!)

ஏர்வாடியைச் சுற்றிலும் வயல்கள், விளை நிலங்கள் வாழைத்தோட்டம், மலைகள், குன்றுகள், குளங்கள், வாய்க்கால்கள். ஒரு காலத்தில் மக்கள் ஏர் பிடித்து பாடிக் கொண்டே வயல்களை  உழுததால் 'ஏர்பாடி' என்பது மருவி 'ஏர்வாடி' என்று ஆனதாக என் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன். சுற்றுப்பட்டில் நிறைய கிராமங்கள் டோணாவூர், திருக்குறுங்குடி, களக்காடு, நாங்குநேரி என்று பல. 

பேருந்திலிருந்து இறங்கியதும் கடம்போடுவாழ்வு செல்ல ஆட்டோ ஏறினோம்.  6 கிமீ 120 ரூ.

 ஆட்டோவில் ஏறி செல்லத் தொடங்கியதும் ஒரு கணபதி ஆலயம் ஒட்டி ஒரு வாய்க்கால் உடனே க்ளிக். ஆனா பாருங்க கோயில்லருந்து குழா நீட்டிட்டுருக்கு.....கழுவி விடும் தண்ணி இதில் விழும் போல....பிள்ளையாரப்பா!! ஏம்பா!!!
அடுத்தாப்ல ஒரு  க்ளிக் ஒரு சின்ன வாய்க்கால். இதை அடுத்து (கீழே உள்ள படம்) நம்பி ஆறு
நம்பி ஆறு. ஆற்றின் நிலையைப் பாருங்கள். நான் வள்ளியூரில் (5, 6 ஆம் வகுப்பு) இருந்த போது இப்படிப் பார்த்ததே இல்லை. ஆட்டோவிலிருந்தே க்ளிக்!

இந்த நம்பி ஆறு ஏர்வாடியை வடக்கு ஏர்வாடி, தெற்கு ஏர்வாடி என்று பிரிக்கிறது. இந்த ஊரில் பெரும்பாலான தெருக்கள் முடியும் இடம் நம்பி ஆறாகத்தான் இருக்கும்.  வள்ளியூரில் இருந்த போது ஏர்வாடிக்குச் சென்றிருக்கிறேன்.  

ஏர்வாடியில் இந்த நம்பி ஆற்றுப் பாலத்தைக் கடந்ததும் (ஒரு நிமிடத்தில்) இடப்புறம் திரும்பி 6 கிமீ பயணித்தால் கடம்போடுவாழ்வு! 

பதிவில் இல்லாத சில க்ளிக்ஸ் சேர்த்து ஒரு சின்ன காணொளித் தொகுப்பு சுட்டியும்

நீங்களும் வாருங்கள். கொஞ்சம் காத்திருங்கள். கடம்போடுவாழ்வு கிராமத்தைக் காட்டுகிறேன். என் உறவினர்களையும் அறிமுகப்படுத்துகிறேன். பதிவு பெரிதாகிவிட்டதோ? பொறுத்துக்கோங்க!  

---கீதா

 

47 கருத்துகள்:

  1. படங்களும் விளக்கங்களும் நன்று.
    வள்ளியூர் சென்றபோது ஏர்வாடி வந்து இருக்கிறேன்.

    இன்று இப்பொழுது நான் இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி வந்து இருக்கிறேன் (தர்காவில் அல்ல) அதாவது இதம்பாடல் கிராமம் செல்வதற்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று இப்பொழுது நான் இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி வந்து இருக்கிறேன் (தர்காவில் அல்ல) அதாவது இதம்பாடல் கிராமம் செல்வதற்கு...//

      தர்காவில் அல்ல// ஹாஹாஹாஹா

      இதம்பாடல் கிராமமா....திருப்பத்தூர் பயணத்தின் போது பார்த்திருக்கிறேன்.

      //படங்களும் விளக்கங்களும் நன்று.
      வள்ளியூர் சென்றபோது ஏர்வாடி வந்து இருக்கிறேன்.//

      ஓ அப்படியா ....மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  2. கடம்போடுவாழ்வு - பெயரே வெகு அழகு. பதிவு வழி சொன்ன விஷயங்களும் பகிர்ந்துகொண்ட படங்களும் சிறப்பு. இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்... மேலும் பார்க்க காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி. ஊரும் அழகுதான். மிகச் சிறிய கிராமம்...

      மிக்க நன்றி வெங்கட்ஜி.

      கீதா

      நீக்கு
  3. சினிமாக்களில் ஆரம்பிக்க காட்சி அட்டகாசமாக இருக்குமே, அப்படி ஒரு போட்டோ பதிவின் ஆரம்பத்தில்...  அதென்ன, ரயில் பாதைக்கு பக்கத்திலேயே மைதானம் போல அவ்வளவு பெரிய வெற்றிடம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினிமாக்களில் ஆரம்பிக்க காட்சி அட்டகாசமாக இருக்குமே, அப்படி ஒரு போட்டோ பதிவின் ஆரம்பத்தில்...//

      ஹாஹாஹா நன்றி ஸ்ரீராம்..

      அதென்ன, ரயில் பாதைக்கு பக்கத்திலேயே மைதானம் போல அவ்வளவு பெரிய வெற்றிடம்!//

      முந்தைய ரெண்டு படங்களிலும் இருக்குமே அதே தான் நாகர்கோவில் ஸ்டேஷன் புகும் முன். இருப்புப்பாதை/தண்டவாளம் வரும் போல அதுக்குத்தான் இப்படிச் செய்திருப்பதாக அறிந்தேன்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. அதென்ன மங்கலான வெளிச்சம் உள்ள ஹோட்டல்?  ஏதாவது மறைபொருளா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வேறு ஒன்றுக்மில்லை ஸ்ரீராம்...சில ரெஸ்டாரன்ட்ஸ் மெழுகுவர்த்தி வெளிச்சம், டிம் லைட் தான் போட்டிருப்பாங்க, ரொம்பச் சத்தம் இருக்காது....ரொம்ப மெதுவாகப் பேசுவார்களே!! ...ஸ்டார் ஹோட்டலைச் சொல்லவில்லை..இடைப்பட்டவை...அப்படியானதைச் சொன்னேன். அங்கு பேரர் ஒரு அட்டையை மடித்து நீட்டுவார் அதற்குள் தானே ரூபாய் வைக்க வேண்டும் அலல்து கார்ட் வைக்க வேண்டும் கார்ட் என்றால் தேய்த்துவிட்டு டிப்ஸ் ரூபாயை அந்த மடித்த அட்டைக்குள் வைப்பாங்களே அதைச் சொன்னேன்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. அவ்வளவு பெருமை வாய்ந்த கோவிலாக இருந்தாலும் நான் கேள்விப்பட்டதில்லை (தோவாளை முருகன் கோவில்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க ஊர்ல ஃபேமஸ்!! ஸ்ரீராம் நீங்கள் தும்மினீர்களா என்று தெரியவில்லை...ஆனால் தோவாளை பற்றி எழுதிய போது நினைத்துக் கொண்டேன் அட ஸ்ரீராமுக்குப் பிடித்த கடவுள்...இக்கோயிலுக்குப் போனார் என்றால் சுற்றிலும் மலைகள், அழகு முருகன்.... பாஸிடம், "இங்கயே இந்த மலைகளைப் பார்த்துக் கொண்டு முருகனையும் பார்த்துக் கொண்டு செட்டில் ஆகிடலாமா என்று சொவாரோ என்று நினைத்துக் கொண்டேன்!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  6. ஓ.. உங்கள் விளக்கத்திலிருந்து இது வேறு ஏர்வாடி என்று அறிகிறேன்!! பசுமையான ஒரு ஊருக்குள் நுழைந்திருக்கிறீர்கள் என்பதை படங்கள் கட்டியம் கூறுகின்றன!​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இது திருநெல்வேலி மாவட்ட ஏர்வாடி! ஆமாம் ஸ்ரீராம், பசுமையான கிராமத்துக்குள்தான் நுழைந்திருக்கிறேன். அடுத்த பதிவில் வருமே படங்கள்...கொஞ்சம் லேட்டாகும்...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. எல்லாப் படங்களும் தெளிவாக வந்திருக்கின்றன. இந்த ஏர்வாடிக்கு நான் போயிருக்கேன். எங்க மாமா கல்யாணத்துக்காக. ராமநாதபுரம் ஏர்வாடி போனதில்லை. இங்கே தானே டிவிஎஸ் குழுமத்தினரின் தோட்டங்கள் உள்ளன. என் மாமியின் அப்பா அவற்றைப் பராமரிக்கும் மேற்பார்வையாளராக இருந்தார். கொய்யாப்பழங்கள் ஒவ்வொன்றும் ஒரு தேங்காய் அளவு பெரிதாக இருக்கும். மாமி கல்யாணம் பக்கத்தில் வள்ளியூரில் நடந்தது என நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே தானே டிவிஎஸ் குழுமத்தினரின் தோட்டங்கள் உள்ளன. என் மாமியின் அப்பா அவற்றைப் பராமரிக்கும் மேற்பார்வையாளராக இருந்தார்.//

      நீங்களும் ஏர்வாடி போயிருக்கிறீர்கள். இப்போதும் டிவிஎஸ் தோட்டங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. திருக்குறுங்குடிக்கு டிவிஎஸ் நிறைய செய்திருக்கிறார்கள்.

      மாமி கல்யாணம் பக்கத்தில் வள்ளியூரில் நடந்தது என நினைவு.//

      அட! சுவாரசியமான தகவல்கள் கீதாக்கா

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  8. அதன் பின்னர் சில முறை திருநெல்வேலி சென்றும் இங்கெல்லாம் போகவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ...இனி பயணம் செய்ய முடிந்தால் வாய்ப்பு கிடைத்தால் கோயில்கள் பாருங்கள் கீதாக்கா.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
    2. :))))) தி/கீதா, நான் திருநெல்வேலி போய் நவகைலாயம், நவ திருப்பதி, திருநெல்வேலி, செப்பறை, கிருஷ்ணாபுரம், தென்காசி, குற்றாலம், இலஞ்சினு பல கோயில்கள் போயிருக்கேன். ஆனால் வள்ளியூர், ஏர்வாடி எல்லாம் மாமா கல்யாணத்துக்குப் பின்னர் போகலை. அதைத் தான் சொன்னேன். :)

      நீக்கு
    3. கீதாக்கா அது தெரியும் நீங்க சொல்லிருக்கீங்க. கோவிட் முன்னாடி கூட திருநெல்வேலி போய் வந்தீங்களே....திடீர்னு...

      நான் சொன்னது வள்ளியூர் ஏர்வாடிப் பக்கம்தானே நாங்குநேரி, திருக்குறுங்குடி...எல்லாம்...திருநெல்வேலிக்கும் தெற்கில் இல்லையாக்கா ...பெயர் சொல்லாமல் விட்டுவிட்டேன்..!!!!!!

      கீதா

      நீக்கு
  9. பதில்கள்
    1. வள்ளியூர் இப்போது வெளியில் அதிகமாக அறியப்படும் ஊராக இருக்கிறது. குறிப்பாகக் கொடுமுடியாறு அணை வந்தபிறகு. மீடியாக்களும், யுட்யூப் சானல்கள் டெக்னாலஜியும் இருப்பதால் இளைஞர்கள் பலர் வீடியோக்கள் போடுகிறார்கள் இந்த ஊர்கள் பற்றி

      மிக்க நன்றி ஐயா

      கீதா

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. தங்கள் கைவண்ணத்தில், தெளிவான அழகான படங்களை பார்ப்பதற்கும், விபரமாக ஊரின் சிறப்புகளைப் பற்றி கேட்பதற்கும் கசக்குமா என்ன?

    தங்களின் மனத்தவிப்பை உணர்ந்த இறைவன் எப்படியோ தாங்கள் அன்றைய தினத்தில் பூரிமசாலை சுவைக்க அருளி விட்டான்.ஹா.ஹா.ஹா. இறைவனுக்கு நன்றி. நீங்கள் சொல்லும் போது நானும் அதன் சுவையை நாக்கில் உணர்கிறேன். ஆனால் இப்போதைக்கு பற்களால் (பல்வலி) கடித்து உண்ண இயலாது.

    முழுமையாக மலைகளுக்கிடையே ரயில் நுழைந்து வரும் படம் பிரமாதமாக உள்ளது. ஒரு கைதேர்ந்த போட்டோகிராப்பராக செயல்பட்டு படம் எடுத்துள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.

    முருகன் கோவிலை தரிசித்துக் கொண்டேன். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன்தானே..
    அந்த மலைக்கு கீழேயே முருகனின் மாமாவும் பழமுதிர்சோலை மாதிரி இருக்கிறாரா? தாங்கள் விவரித்ததிலிருந்து அந்த இடத்தின் மலைகளின் அழகும், பசுமையும், கோவிலைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தருகிறது. முருகன் அழைக்க வேண்டும்.

    எங்களுக்குத் திருமணமாகிய பிறகு அதற்கு ஐந்தாறு வருடங்களுக்குப் பின் என் மச்சினர் (கணவருக்கு அண்ணா) வள்ளியூரில் கொஞ்ச வருடங்கள் வேலையில் மாற்றலாகி இருந்தார். இந்த ஊரின் பெயர்கள் எல்லாம் அவர் சென்னைக்கு வரும் போது சொல்லி ஒரளவு கேள்விபட்டுள்ளேன். ஆனால், இந்த அழகான கடம்போடு வாழ்வு எனும் பெயர் நீங்கள் சொல்லி மனதில் ஆழமாக பதிகிறது.

    வாய்க்காலில் எல்லா பகுதியின் ஓட்டங்களையும் அழகாக படம் பிடித்துள்ளீர்கள். அளவாக ஓடும் வாய்காலின் நீரே எப்போதும் அழகுதான். அதிகமாகி ஓடும் போதுதான் அழகும் ஆபத்தாகிப் போகிறது.

    கோவிலின் கழுவி விடும் நீரும் அந்த ஓட்டத்தில் கரைந்து ஓடி விடுமென பக்தர்கள் சொல்லி விளக்கம் தரும் போது பிள்ளையார் வாய் திறந்து என்ன சொல்ல முடியும்:) (அதனால் அவரும் மெளனமாக இருந்து விட்டாரோ என்னவோ?)

    காணொளி தொகுப்பு அழகாக உள்ளது. அத்தனைப் படங்களையும், மலைகளின் அழகையும் ரசித்தேன். அடுத்து வரும் தங்கள் ஊரான கடம்போடு வாழ்வின் அழகிய படங்களையும், தங்களின் அருமையான விவரணைகளையும், பார்த்து/படித்து ரசிக்க ஆவலுடன் உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மனத்தவிப்பை உணர்ந்த இறைவன் எப்படியோ தாங்கள் அன்றைய தினத்தில் பூரிமசாலை சுவைக்க அருளி விட்டான்.ஹா.ஹா.ஹா. இறைவனுக்கு நன்றி. நீங்கள் சொல்லும் போது நானும் அதன் சுவையை நாக்கில் உணர்கிறேன். ஆனால் இப்போதைக்கு பற்களால் (பல்வலி) கடித்து உண்ண இயலாது.//

      ஹாஹாஹாஹா ....

      கமலாக்கா இன்னும் பல்வலி சரியாகவில்லையா? அடடா! கடிக்க முடியவில்லை என்றால் என்ன சாப்பிடுகிறீர்கள்? கஞ்சி போன்ற அல்லது மிருதுவான அப்படியே விழுங்குவது போல ஆகாரமா? கஷ்டம் தான். கவனமாக இருன்ங்கள் கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. முழுமையாக மலைகளுக்கிடையே ரயில் நுழைந்து வரும் படம் பிரமாதமாக உள்ளது. ஒரு கைதேர்ந்த போட்டோகிராப்பராக செயல்பட்டு படம் எடுத்துள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.//

      நன்றி கமலாக்கா ஆனால் கைதேர்ந்த ஃபோட்டோகிராஃபர் என்றெல்லாம் இல்லை அக்கா.

      இந்த ஊர்கள் எல்லாம் அறிந்தது கேட்டு மகிழ்ச்சி

      இந்த அழகான கடம்போடு வாழ்வு எனும் பெயர் நீங்கள் சொல்லி மனதில் ஆழமாக பதிகிறது.//

      எனக்குமே என் சித்திப்பாட்டி அங்கு இருந்ததால் இருப்பதால் அறிந்ததுதான்.

      //கோவிலின் கழுவி விடும் நீரும் அந்த ஓட்டத்தில் கரைந்து ஓடி விடுமென பக்தர்கள் சொல்லி விளக்கம் தரும் போது பிள்ளையார் வாய் திறந்து என்ன சொல்ல முடியும்:) (அதனால் அவரும் மெளனமாக இருந்து விட்டாரோ என்னவோ?)//

      ஹாஹாஹாஹா....சிரித்துவிட்டேன்...

      ஆமாம் வாய்க்கால்கள் எல்லாமே அழகுதான்...

      படங்களையும், தொகுப்பையும் ரசித்தமைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  11. இயற்கைச் சூழலான படங்கள் கவர்ந்தது.

    ஊர்ப்பெயர்கள், கல்லூரிக் காலத்தில் மாணவர்களின் ஊர்களை நினைவுபடுத்தியது.

    சமீபத்தில் சென்ற திருக்குறுங்குடி, நாங்குநேரி (வானமாமலை) யாத்திரை நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் திருநெல்வேலியில் படித்ததால் மாணவர்கள் இருந்திருப்பார்கள் அப்போதெல்லாம் நாகர்கோவில், திருநெல்வேலிதான் படிப்பிற்கு பள்ளிகள் கல்லூரிகள் என்று அருகில் உள்ளவர்கள் படிப்பதற்கு வசதியாக. இப்போது எங்கு பார்த்தாலும் மலை உச்சியில் கூடக் கல்லூரி கட்டிவிடுகிறார்கள்!!!

      வானமாமலை என்ன அழகான பெயர் இல்லையா? நெல்லை? இங்குதான் என் தூரத்து கஸின் இருந்தார் ரொம்ப வருடம். இப்போது திருநெல்வேலியில் செட்டில்ட்.

      எனக்குத் திருக்குறுங்குடி போக முடியவில்லையே என்ற வருத்தம் இப்பவும் இருக்கு.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. நெல்லை அப்போது சொல்ல விட்டுப் போச்சு....வானமாமலை மற்றொரு பெயர் ஸ்ரீ/திருவரமங்கை என்ற பெயரும் உண்டு உங்களுக்குத் தெரிந்திருக்கும். பெயர்கள் எல்லாம் என்ன அழகு! மிகவும் ரசிப்பேன் இப்படியான பெயர்கள் எல்லாம்...

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீவரமங்கை - ச்ரீவரமங்கை தமிழில். திருவரமங்கலாம் கிடையாது

      நீக்கு
    4. நெல்லை!! ஸ்ரீ என்பது திரு தானே. என் பாட்டி தாத்தா, நாங்குனேரில இருந்த என் பாட்டியின் அக்கா பெண் அவர் கணவர் கைங்கர்யம் செய்தவங்க...அங்கும் திருவனந்தபுரத்தில் புத்தந்தெரு மடத்துக் கோயிலில் கைங்கர்யம் செய்தவங்க.

      அவங்களும் திருவரமங்கைன்னு சொல்லிக் கேட்டது. இல்லைனா எனக்கு உங்கள் அளவு பிரபந்தமோ வைணவச் சொற்களோ தெரியாது நெல்லை. வீட்டில் பயன்படுத்துவதும் இல்லை. நான் ரசிப்பதோடு சரி. கேட்டதோடு சரி!!!! அம்புட்டுத்தேன் நம்ம அறிவு!! ஹிஹிஹிஹி

      ஸ்ரீரங்கம் - திருஅரங்கம் சொல்லலையா...

      கீதா

      நீக்கு
  12. மிக அருமையான படங்களின் பசுமையைக்
    கண்ணிறைவுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    படங்கள் எடுப்பதில் இத்தனை வல்லமை எப்படி வாய்த்ததோ உங்களுக்கு!!
    அன்பின் கீதாமா,
    ஏர்வாடி, திருக்குறுங்குடி என்று
    பழைய நினைவுகளை எழுப்பி இருக்கிறீர்கள்.
    கீதா சாம்பசிவம் சொல்வது போல ஏர்வாடிக்கு

    டிவிஎஸ் குடும்பத்து உறுப்பினர்கள் வார இறுதிக்கு சென்று விடுவார்கள்.
    என் கணவரும் , மாமியார், நாத்தனார்கள் அவர்களோடு
    அங்கு சென்று வந்திருக்கிறார்கள்


    ரயில் எத்தனை நீளம் அம்மா. எத்தனை அழகாக
    இருக்கிறது.வளைந்து செல்லும் நீண்ட பாம்பு போலத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எடுப்பதில் இத்தனை வல்லமை எப்படி வாய்த்ததோ உங்களுக்கு!!//

      அதெல்லாம் ஒன்றுமில்லை வல்லிம்மா. கண்களும் மனமும் ரசிப்பதை எடுக்கிறேன். அவ்வளவுதான் அம்மா. பல சமயங்களில் மிஸ் எடுப்பதற்கு மிஸ் ஆவதும் உண்டு. நிறையப்பேர் மிக அழகாகக் கலை உணர்வோடு படம் எடுப்பதைப் பார்க்கும் போது ஆசை தோன்றும். ரசனைகள் அதிகம் அம்மா. ஆனால் எல்லா ரசனைகளும் ஆசைகளும் நிறைவேற முடியுமோ அதனால் புத்தர் தான் மனதிற்கு வந்து தலையில் தட்டி வைப்பார்!!!!! ஹாஹாஹாஹாஹா

      //கீதா சாம்பசிவம் சொல்வது போல ஏர்வாடிக்கு

      டிவிஎஸ் குடும்பத்து உறுப்பினர்கள் வார இறுதிக்கு சென்று விடுவார்கள்.
      என் கணவரும் , மாமியார், நாத்தனார்கள் அவர்களோடு
      அங்கு சென்று வந்திருக்கிறார்கள்//

      ஆமாம் அது அப்போது பாட்டி சொல்வார். அப்படித்தான் ஏர்வாடி பற்றி பாட்டி சொன்னது. ஆனால் இப்போது இருக்கிறதா அங்கு? சித்திப்பாட்டியிடம் கேட்க மறந்துவிட்டது.

      ஆமாம் அம்மா ரயில் நல்ல நீளம். ஏற்கனவெ நீளம்தான். ஆனால் கோவிட் சமயத்தில் நிறைய ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அனுமதிக்கப்பட்ட ரயில்களில் கூடக் கொஞ்சம் பெட்டிகள் சேர்த்திருந்ததாக அறிந்தேன்.

      மிக்க நன்றி அம்மா ரசித்தமைக்கு

      கீதா



      கீதா

      நீக்கு
  13. வயல்களும் வாய்க்காலும் கண்ணுக்கு நிறைவாக
    இருக்கிறன.
    இந்த வாய்க்கால்களில் பிறகு
    வெள்ளம் வந்திருக்குமோ!!!

    கணபதி கோவிலிலிருந்து இறங்கி யாரோ குளித்துக் கொண்டிருக்கிறார்களே.!!

    முருகன் கோவில் வளைவு கூட அருமையாக இருக்கின்றது.
    இவ்வளவு பூக்கள் இருக்கின்றனவே.!!
    வீட்டின் எல்லா இடங்களிலும் நிரப்பி வைத்தால் வாசனை
    நிரப்புமே.

    மீண்டும் வருகிறேன் அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வாய்க்கால்களில் பிறகு
      வெள்ளம் வந்திருக்குமோ!!!//

      வெள்ளம் என்று வரவில்லை அம்மா பக்கத்தில் நம்பியாறு இருந்ததால் அது பெருகி ஓடியதாகச் சொன்னார்கள். வாய்க்காலும் நிறைந்து ஓடியது. அருகில்தானே சித்திப்பாட்டியின் ஊர் அங்கும் இவை ஓடுகிறதே. நம்பி ஆறு அந்த வழி இல்லைதான்

      கணபதி கோவிலிலிருந்து இறங்கி யாரோ குளித்துக் கொண்டிருக்கிறார்களே.!!//

      ஆமாம்!!

      //இவ்வளவு பூக்கள் இருக்கின்றனவே.!!
      வீட்டின் எல்லா இடங்களிலும் நிரப்பி வைத்தால் வாசனை
      நிரப்புமே.//

      ஹாஹாஹா வீடு முழுவதும் மலர்ச் செடிகள் இருந்தால் பூத்துக் குலுங்கி!! எப்படி இருக்கும் ...மலர்க்கண்காட்சி சென்ற போது ரொம்ப ரசித்தேன். அதெல்லாம் முன்பு படங்கள் இருக்கின்றன பகிர வேண்டும். முன்பு பகிர்ந்திருக்கிறேனா என்று தெரியவில்லை பார்த்துப் பகிர வேண்டும்.

      இப்போது எல்லாவற்றையும் தொகுத்து காணொளி போன்று யுட்யூபில் போட்டு சேமித்து வைக்கவும் முயன்று கொண்டிருக்கிறேன் அம்மா

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  14. விவரிப்பு இருக்கே, ஆகா...! பக்கத்தில் நின்று பேசுவது போல... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி கருத்திற்கும் ரசித்தமைக்கும்

      கீதா

      நீக்கு
  15. படங்கள் அழகாக உள்ளன. முக்கியமாக ரயில், இரு மலைக்குன்றுகள், முருகன் கோயில், பிளாட்  அதிலும் மலைகளின் எல்லை வகுத்தாற்போல் ஒரு வேலி போன்ற படங்கள். காணொளி இன்னும் காணவில்லை. பின்னர் அது பற்றி கூறுகிறேன். 

    நாகர்கோயில், சுற்றி சுமார் 60 கி மீ  தூரத்திற்குள் உள்ள ஊர்கள் கோயில்கள் பற்றி விவரங்கள் நிறைய கையில் வைத்திருக்கிறீர்கள். சொந்த ஊரானாலும் இது போன்று சுற்றியுள்ள ஊர்களின் அனுபவம் மிக சிலருக்கே அமையும். 

    இந்த பதிவு கொஞ்சம் துள்ளல் நடையில் துளசிதளம் துளசி அம்மா நடையில் இருக்கிறது. படிக்க அலுப்பு தட்டவில்லை. 

     //ஏற முடியாதவங்க எல்லாம் கீழேயே அவர் மாமாவான பாலகிருஷ்ணன் கோயிலில் மருமகனுக்குச் சேதி சொல்லிடலாம். பாருங்க Their Telegram is very fast you know!!! இருவருமே குழந்தை வடிவங்களில்! //

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அழகாக உள்ளன. முக்கியமாக ரயில், இரு மலைக்குன்றுகள், முருகன் கோயில், பிளாட் அதிலும் மலைகளின் எல்லை வகுத்தாற்போல் ஒரு வேலி போன்ற படங்கள். //

      மிக்க நன்றி ஜெகே அண்ணா.

      //நாகர்கோயில், சுற்றி சுமார் 60 கி மீ தூரத்திற்குள் உள்ள ஊர்கள் கோயில்கள் பற்றி விவரங்கள் நிறைய கையில் வைத்திருக்கிறீர்கள். சொந்த ஊரானாலும் இது போன்று சுற்றியுள்ள ஊர்களின் அனுபவம் மிக சிலருக்கே அமையும். //

      அது அங்கிருந்த போது கொஞ்சம் அப்புறம் ஊரைவிட்டு வந்த பின் ஊருக்குச் சென்ற போதெல்லாம் (அப்போது அம்மா அப்பா அங்கு இருந்ததாலும் நான் திருவனந்தபுரத்தில் இருந்ததாலும்) அதன் பின் கொஞ்சம் சுய ஆர்வத்தில் தெரிந்து கொண்டது. பாட்டியும் தாத்தாவும் நிறைய கதைகள் சொல்லிருக்காங்க. சாதம் கையில் உருட்டி போட்டுக் கொண்டே கதைகள் சொல்வார் பாட்டி. ...எழுதி வைத்துக் கொள்ளவில்லையே என்று பலமுறை நினைத்துக் கொள்கிறேன். நினைவிருப்பதைச் சொல்லிக் கொண்டு செல்கிறேன்.

      சில நானாகத் தெரிந்து கொண்டதுதான். எனக்கும் மகனுக்கும் நிறைய ஊர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு. ஊர் சுற்றவும் பிடிக்கும். மகனோடு நாகர்கோவிலிலும் அருகேயும் பல இயற்கைசார்ந்த இடங்களுக்குச் சென்றதுண்டு.

      //இந்தப் பதிவு கொஞ்சம் துள்ளல் நடையில் துளசிதளம் துளசி அம்மா நடையில் இருக்கிறது. படிக்க அலுப்பு தட்டவில்லை.//

      ஹாஹாஹா...வலை எழுதத் தொடங்கிய போது பல பதிவுகள் - அதாவது பதிவுகளைப் பொருத்து - இப்படியான நடையில் இருக்கும். ஆனால் அதில் என் பெயர் இருக்காது. ஆங்கிலம், மலையாளச் சொற்கள் கலந்து கொஞ்சம் நக்கல் நையாண்டி என்று ஆனால் என் பெயர் இருக்காது. (என்னை அறியாமலேயே வந்துவிடும் மகனோடு இப்படித்தான் பேசுவதால். )

      அப்புறம் பல வலைத்தளங்கள் நல்ல தமிழில் எழுதியதை வாசித்த போது, ஓ ஆங்கிலம் கலக்காமல், நாகர்கோவில் மலையாளச் சொற்கள் கலக்காமல் நல்ல தமிழில்??? எழுத வேண்டும் போல என்று மாற்றினேன். அப்போதெல்லாம் துளசி அக்கா தளம் தெரியாது. அப்புறம் அவங்க தளம் போனப்ப அட! ரொம்பவே ஜாலியா எழுதறாங்களே...நாமளும் இப்படி எழுதியதுண்டே என்று தோன்றியது. மீண்டும் அப்படியே எழுதலாமோன்னும் தோன்றியது....என்றாலும் நான் எழுதினால் காப்பி என்று சொல்லப்பட்டுவிடுமோ என்று தயக்கம் இருந்தது. அவங்க ரொம்ப சீனியராச்சே!!!! என்றாலும் இடையிடையே வந்துவிடும்.
      அவங்க எழுத்தை நான் ரொம்பவும் ரசிப்பேன். செம ஜாலியா எழுதுவாங்க... ரொம்பப் பிடிக்கும்.

      நீங்கள் கோட் பண்ணிச் சொல்லியிருக்கீங்களே அப்படித்தான் நானும் மகனும் பேசிக் கொள்வதே!! இந்தப் பதிவு எழுதிய சமயத்தில் மகனோடு பேசியதில் அந்தக் காத்து அடிச்சு வந்துவிட்டது!!!!! ஹாஹாஹா

      மிக்க நன்றி ஜேகெ அண்ணா

      கீதா

      நீக்கு
  16. படங்களும் பதிவு சொல்லும் செய்திகளும் அருமை. மலையை குடைந்து அதனுள் பயணிக்கும் ரயில் வண்டிகளை அறிவேன் இப்படி இரண்டு மலைகளுக்கு மத்தியில் பயணிக்கும் ரயில் வண்டி காண்பது இதுதான் முதல்முறை , அருமை அருமை.

    என்னதான் இருந்தாலும் இட்டிலி மிளகாய்ப்பொடிக்கு ஈடு எது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் பதிவு சொல்லும் செய்திகளும் அருமை. மலையை குடைந்து அதனுள் பயணிக்கும் ரயில் வண்டிகளை அறிவேன் இப்படி இரண்டு மலைகளுக்கு மத்தியில் பயணிக்கும் ரயில் வண்டி காண்பது இதுதான் முதல்முறை , அருமை அருமை.//

      மிக்க நன்றி கோ..இரு மலைகளுக்கு நடுவில் என்றால் ரொம்ப நெருக்கமாக எல்லாம் இல்லை..அப்படி என்றால் குடைந்து டனல் இருக்குமே...இது கணவாய்...

      //என்னதான் இருந்தாலும் இட்டிலி மிளகாய்ப்பொடிக்கு ஈடு எது?//

      ஹாஹாஹாஹாஹா அதைச் சொல்லுங்க!! ஆமா அதுக்கு ஈடு இல்லைதான்...

      மிக்க நன்றி கோ

      கீதா

      நீக்கு
  17. படங்களும் காணொளியும் மிக அருமை.
    படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.
    மலைகளும், மலை மேல் முருகன் கோயிலும் ஊரின் அழகும் பார்க்க தோன்றுகிறது. சிறு வயதில் நாகர்கோயிலில் இருந்தோம். தோவாளை குளம் அழகு.
    //கழுவி விடும் தண்ணி இதில் விழும் போல....பிள்ளையாரப்பா!! ஏம்பா!!!//

    பிள்ளையார் கோயில் கழுவி விடும் தண்ணீரை வேறு இடத்தில் விழுவது போல மாற்றி அமைக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு வயதில் நாகர்கோயிலில் இருந்தோம். //

      ஆமாம் அக்கா நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். நினைவிருக்கிறது.

      //பிள்ளையார் கோயில் கழுவி விடும் தண்ணீரை வேறு இடத்தில் விழுவது போல மாற்றி அமைக்கலாம்.//

      ஆமாம் அக்கா..

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  18. //கடம்போடுவாழ்வு கிராமத்தைக் காட்டுகிறேன். என் உறவினர்களையும் அறிமுகப்படுத்துகிறேன்.//

    கடம்போடுவாழ்வு கிராமத்தையும், உறவினர்கள் அறிமுகத்தையும் பார்க்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் எழுத வேண்டும் என்று நினைத்து ஏனோ இன்னும் முடியவில்லை. மனம் ஒத்துழைக்கவில்லை.

      விரைவில் போடப் பார்க்கிறேன்

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  19. வட தமிழ் நாட்டைச் சேர்ந்த எனக்கு தென் தமிழ் நாட்டின் அழகிய கிராமங்களைப் பார்க்க வாய்ப்பாக அமைந்தது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் கோவிந்தராஜு ஐயா தங்களின் கருத்திற்கு.

      இனியும் வரும் ஐயா முடிந்த போது பாருங்கள்

      கீதா

      நீக்கு
  20. படங்கள் வெகு அழகு அதுவும் அந்த முதல் படம்..! வளைந்து செல்லும் ரயில்... ஆஹா!

    இரண்டு பக்கங்களிலும் கட்டிடம், நடுவே ஒரு ஆறு. இப்படி ஒரு இடம் நம் ஊரில் இருக்கிறதா? ஆம்ஸ்டர்டாமில் உண்டு.

    பதிலளிநீக்கு