திங்கள், 4 ஜூலை, 2022

நாராயணவன(ர)ம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் - ராமகிரி ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் – நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயணப்பெருமாள் கோயில் – சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் - பகுதி 5

  ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் - ராமகிரி 


அடுத்து இங்கிருந்து மிக அருகில் இருக்கும் ராமகிரி எனும் இடத்தில் உள்ள வாலீஸ்வரர் கோயிலுக்குப் போலாம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா? வேதநாராயணர் கோயில், நாகலாபுரத்திலிருந்து 6.5 கிமீ தூரம் தான் வாலீஸ்வரர்/காலபைரவர் கோயில். போவோம், வாங்க

நன்றி கூகுள்

நாலுசக்கர வாகனம் என்றால் நாகலாபுரத்திலிருந்து திருப்பதி செல்லும் சாலையில் மேலே சொன்ன கிமீ தூரத்தில் ராமகிரி கோயில் பேருந்து நிறுத்தம் உள்ள இடத்திலிருந்து வலது புறம் இருக்கும்  அடையாள வளைவு  உள் செல்லும் பாதை வழியாக சுமார் 2 கிமீ தூரத்திற்குள் இருக்கும் கோயிலுக்கு கோயில் வரை சென்றுவிடலாம்.

சாலையில் இருக்கும் வளைவு

பேருந்தில் சென்றால் இறங்கி அதே பாதையில் ஒரு ஆட்டோ பிடித்தும் செல்லலாம். நடந்தும் செல்லலாம்.  நான், என் தங்கை, தங்கை மகள் மூவரும் பேருந்தில் சென்றதால் இறங்கி நடந்து கொண்டே கிராமத்தின் அழகையும் வயல்களையும், இயற்கையையும் ரசித்துக் கொண்டே சென்றோம். 

இப்போது நீங்களும் என்னுடன் நடக்கத் தயாரா?! அப்பத்தானே கோயில் புராணக் கதை, ஊரின் பெயர்க் கதை எல்லாம் பேசிக் கொண்டே போக முடியும்.  

வாலீஸ்வரர் கோயில் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.

ராவணனை வென்ற ராமர், அயோத்திக்குச் சென்று ராஜாவாகப் பொறுப்பு ஏற்கும் முன், பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்காக இராமேஸ்வரம் வந்தார். அங்கு காசியிலிருந்து ஒரு சிவலிங்கத்தைக் கொண்டு வந்து பூஜை செய்ய வேண்டும் என்ற அவரது குருவான வசிஷ்டரின்  அறிவுரைப்படி, ராமர் சிவலிங்கத்தைப் பெற தன் அபரிமித பக்தனான அனுமனை அனுப்பினார்.

அனுமனுக்குச் சந்தோஷம். உடனே காசிக்குச் சென்றார். ஆனால் அங்கோ எது சுயம்பு லிங்கம் என்று தெரியாத அளவிற்கு நிறைய சிவலிங்கங்கள் இருந்ததால் பாவம் அவருக்குக் குழப்பம்.

அப்போது ஒரு குறிப்பிட்ட லிங்கத்தின் மேலே வட்டமடித்து கருடன் உதவிட அங்கிருந்த பல்லியும் குறிப்பால் உணர்த்திட அனுமன் சுயம்புலிங்கத்தை அடையாளம் கண்டு எடுத்துக் கொள்ள அது பிரச்சனையாகிவிட்டது. காசியின் காலபைரவர், தன் அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்ல இயலாது என்று அதைத் தர மறுத்து அனுமனுடன் சண்டை போட்டார்.  

கோயிலுக்குச் செல்லும் பாதை/சாலை. 
படத்தில் தெரியும் இரு மலைகளுக்கு நடுவில் கோயில் இருக்கிறது. பாதை மலையை முட்டுவது போல் இருக்கும் இடத்தில் இடப்புறம் திரும்பி இன்னும் கூடுதல் இயற்கை எழிலுடன் இருக்கும் பாதையில் தொடர வேண்டும்.

பார்த்து ரசித்துக் கொண்டே கதையையும் கேட்டுக் கொண்டே வாருங்கள்

அச்சமயம் தேவர்களும், முனிவர்களும் வந்து ராமரின் நல்ல காரியத்திற்கே அது அனுமனால் எடுத்துச் செல்லப்படுகிறது என்றும் அதனால் அனுமதிக்க வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்டுக் கோரிட, அரை மனதுடன் கால பைரவர் அனுமதி கொடுத்தாராம்.

அனுமதி கொடுத்தாலும்  சமாதானம் அடையாத கால பைரவர், அனுமனுக்கு உதவிய கருடன் காசியில் பறக்கக் கூடாது  என்றும் பல்லிகள் அங்கு வாழ்ந்தாலும் சப்தம் எழுப்பக் கூடாது என்றும் சாபமிட்டார். இன்று வரை காசியில் கருடன் பறக்காதாம், அது போல பல்லிகளும் சப்தமிடாதாம். சாபம் கொடுத்தாச்சு, சரி....

அப்புறம் அனுமனை எப்படித் தடுக்கறது? என்ற யோசனை. காளிங்க மடு எனும் நீர்நிலை இருந்த இந்த இடம் அப்போது திருக்காரிக்கரை (இக்கோயில் அருகில் மலையைச் சுற்றிக் காளிங்கியாறு ஓடுகின்றது. நன்றி விக்கி) என்ற பெயரில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

கதைக்கு வருவோம். உடனே சூரியனிடம், காலபைரவர் ஒரு டீல். வெப்பத்தைக் கூட்டு என்று. கங்கையிடம் எங்கயும் தண்ணிய காட்டாம ஒளிச்சு வைச்சிரு என்று டீல்.  அனுமனுக்குத் தாகம் ஏற்பட இந்த இடத்திற்கு வரும் போது காளிங்க மடு கண்ணில் பட பறந்து கொண்டிருந்தவர் இந்தத் தலத்தில் இறங்கினார்.  

ஆனால் தரையில் சிவலிங்கத்தை வைக்கக் கூடாது. அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த (இது வேற யாரா இருக்கும் சொல்லுங்க? எல்லாம் அந்தக் கால பைரவர்தான். எல்லாம் பக்கா திட்டமாச்சே!) பையனை அழைத்து இந்த சிவலிங்கத்தைக் கொடுத்துக் கீழே வைக்காமல், தான் நீர் அருந்தி வரும் வரை கையில் வைத்திருக்க வேண்டும் என்றிட, கால பைரவருக்கு வேண்டியது அதுதானே!

நீர் அருந்திவிட்டு வந்தப்ப பார்த்தால் சிவலிங்கம் மண்ணில் ஊன்றப்பட்டிருக்க, பையனைக் காணவில்லை.  மண்ணில்தானே! இதென்னப் பிரமாதம் என்று அனுமன் அதைத் தூக்கப்பார்க்க சிவலிங்கத்தை எடுக்க முடியவில்லை.

தன் வாலால் கட்டி இழுக்கப் பார்த்தும் சிவலிங்கம் வடக்கு நோக்கி சரிந்ததே அல்லாமல் எடுக்க முடியவில்லை. (இப்போதும் இங்கு சிவலிங்கம் வடக்கு நோக்கி சரிந்த நிலையில் இருக்கிறது.)

அனுமனுக்குப் புரிந்தது. இந்த வேலை எல்லாம் கால பைரவருடைய வேலை என்று. அவரைத் துதித்து இந்த விளையாட்டுக்கு எல்லாம் நேரமில்லை ராமர் காத்துக் கொண்டிருப்பார் என்று தன் நிலையைச் சொல்லிக் கோரிட வேறொரு சிவலிங்கத்தை காலபைரவர் அருளிட அதைப் பெற்றுக் கொண்டு ராமேஸ்வரம் சென்றதாகப் புராணக் கதை.

போற போக்கில், ‘எல்லாம் இந்த மடுவினால்தானே எனக்கு ஏற்பட்டது’ என்று கோபத்தில் அனுமன் அங்கிருந்த சிறு மலையைப் பெயர்த்து மடுவில் வீசி மடுவை அந்த மலை மறைத்திட வேண்டும் என்றும் (இந்த வரியை நினைவு வைத்திருங்கள். அடுத்த பகுதியில் இதைப் பற்றிய என் ஊகத்தைச் சொல்ல நேரிடும்) அந்த இடம் முழுவதும் வனமாக மாறிட வேண்டும் என்றும் சாபமிட்டாராம். (இப்படி ஒவ்வொருவரும் எத்தனை சாபம் தான் கொடுப்பாங்களோ!) 

அனுமன் ராமபிரானின் வழிபட்டுக்காகக் கொண்டு வந்த சிவலிங்கம் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டதால் ராம என்ற பெயரையும்அனுமன் வீசிய சிறு குன்று (கிரி) நிலைத்ததால் கிரி என்ற பெயரையும் சேர்த்து ராமாயண காலத்தில் இந்த நிகழ்வின் அடிப்படையில் அந்த ஊருக்கு ராமகிரி என்ற பெயர் பின்னர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

கதை முடிந்தது. நாம கோயில் பக்கம் வந்தாச்சு. கோயிலின் முன்புறமும் பக்கவாட்டிலும் பெரிய நீரோடை/கால்வாய் இருக்கிறது. நீர் நிலையையும், மலைகளையும் கண்டுவிட்டால் என் மகிழ்ச்சி கரை காணாது. உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்.

கோயிலின் முன்புறம்
இது கோயிலின் வலப்புறம். இதுதான் சாலையைக் கடந்து கோயிலின் முன்புறம் செல்கிறது.

அடுத்த பதிவில் கோயிலைப் பற்றி...அதுவரை நடந்துவந்த களைப்பு போக, சுற்றியிருக்கும் மலைகளையும், இந்தக் கால்வாயையும், ரசித்துக் கொண்டிருங்கள்.

முந்தையப் பதிவை வாசித்தவர்கள் கருத்திட்டவர்கள் அனைவருக்கும் நன்றி.

இத்தொடரின் முந்தைய பகுதிகள் - 1 , 2, 3, 4


-----------கீதா


31 கருத்துகள்:

  1. படங்கள் மிக அழகு. கடைசியில் உள்ள கால்வாய்/குளிக்கும் பகுதி எத்தனையோ நினைவுகளைக் கொண்டுவருகிறது. ரிசார்ட்களில் (தாய்லாந்த். இந்தோநேஷியா) நம் அறைக்கு வெளியே இதுபோன்று இருக்கும். அதில் இறங்கி நீச்சலடித்தால் வளைந்து வளைந்து சென்று 200 - 400 மீட்டர்களில் நீச்சல் குளத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் மிக அழகு. //

      மிக்க நன்றி நெல்லை.
      இந்தோனேஷியா தாய்லாந்து தகவல்கள் செம. அட கிட்டத்தட்ட வாட்டர் தீம் பார்க்கில் இருப்பது போலவோ! அறைக்கு வெளியிலேயேவா...அட!! சூப்பர்

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  2. பூசனிப் பூ க்ளோசப்பா? ரொம்ப பெரிதாக இருக்கு. பூசனியும் மிகப் பெரிதாய்க் காய்க்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சள் பூஷணி/ பரங்கிக்காய் பூ. கிட்டப் போய் எடுத்தேன். புகைப்படத்தில் பெரிதாக இருக்கிறதோ? நேரிலும் கொஞ்சம் பெரிதாகத்தான் இருந்தது. தெரியலையே பெரிதா சின்னதா காய் எப்படி என்று..

      மிக்க நன்றி நெல்லை.

      கீதா

      நீக்கு
  3. நிறைய புராணக் கதைகளை என்னால் நம்ப முடிவதில்லை. அதீதமாக இருப்பதால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே நெல்லை. எனக்கும் அதே எண்ணம்தான்...

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  4. 2016 இல் சென்ற பயணமா? 

    கோவில் ஸ்தலபுராணங்கள் என்றுமே சுவாரசியமானவை. அதனால் தான் அவை காலம் காலமாக வாய்வழி சொல்லப்பட்டும் மறையாமல் நிற்கின்றன. படங்களும் அழகாக வந்துள்ளன.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா 2016 ல் சென்றதுதான். சென்னைக்கு அருகிலேதானெ இந்தத் தொடரில் வரும் எல்லாமே 2016 ல் எடுத்தவைதான். பெரிய பயணம் இல்லை ஒரே நாளில் முடிக்கக் கூடியவை சொல்லியிருந்தேனே முதல் பதிவிலேயே..

      புராணக் கதைகள் சுவாரசியம் ஆனால் பல நம்பமுடிவதில்லை. அதில் உட் கருத்து மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றும்.

      மிக்க் நன்றி ஜெகே அண்ணா

      கீதா

      மிக்க னன்றி

      நீக்கு
  5. புராணக்கதை அறிந்தேன் நமது நாட்டில் கதைகளுக்கா பஞ்சம் ? படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா அதானே நம்மூரில் கதைகளுக்கா பஞ்சம் அதேதான் கில்லர்ஜி

      படங்களை ரசித்தமைக்கும் நன்றி

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  6. தளத்தின் முகப்பு மாற்றம் நன்று.

    பதிலளிநீக்கு
  7. கோயிலின் கதையை கேட்டு கொண்டும், இயற்கையை ரசித்து கொண்டும் கூடவே வருகிறேன். படங்கள் எல்லாம் அழகு. தேக்கு மரப்பூ அழகு.
    நீரோடை , கால்வாய் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா. வாருங்கள் நீங்களும் கூட வருவீர்கள் என்று தெரியும்!!!

      நன்றி கோமதிக்கா ரசித்தமைக்கும்

      கீதா

      நீக்கு
  8. படங்கள் அழகு... வலைப்பூவும்...

    சொன்ன ஒன்றை ஞாபகம் வைத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி.

      //சொன்ன ஒன்றை ஞாபகம் வைத்திருக்கிறேன்//

      இதற்கும் நன்றி.

      கீதா

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் எல்லாம் வழக்கப்படி மிகத் தெளிவாக இருக்கின்றன. ராமகிரி பெயர் வர காரணமாக இருந்த புராண கதையை கேட்டுக் கொண்டே தங்களுடன் நடந்ததில் எனக்கும் சற்றேனும் களைப்பு தெரியவில்லை. கூடவே நல்ல இயற்கை காட்சிகள். மலைகளின் அழகை வர்ணிக்கவே இயலவில்லை. பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போன்ற என்ன ஒரு அழகு.? பறங்கி பூக்களும், கால்வாய் அழகும் கண்களை பறிக்கிறது.

    இந்த அழகுகளில் மயங்கி நான் அப்படியே கோவில் வந்தது கூடத் தெரியாமல் உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு ரசித்துக் கொண்டேயிருந்திடப் போகிறேன். நினைவாக என்னையும் கோவிலுக்குள் அழைத்துச் செல்ல தவறி விடாதீர்கள். :))))

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. அடுத்தப்பதிவை காண ஆவலாக உள்ளேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களையும் பதிவையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி கமலாக்கா. ஆமாம் மலைகள் ஓடைகள் நதிகளின் அழகை வர்ணிக்க முடியுமா என்ன?

      இந்த அழகுகளில் மயங்கி நான் அப்படியே கோவில் வந்தது கூடத் தெரியாமல் உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு ரசித்துக் கொண்டேயிருந்திடப் போகிறேன். நினைவாக என்னையும் கோவிலுக்குள் அழைத்துச் செல்ல தவறி விடாதீர்கள். :))))//

      ஹாஹாஹாஹா நாமதான் அதெல்லாம் கரெக்ட்டா நினைவு வைச்சு எண்ணிடுவோமே...எல்லாரும் வந்தாச்சான்னு!!! அதனால நினைவோடு கூட்டுக் கொண்டு போய்விடுவோம் கமலாக்கா

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  10. கோயிலுக்குச் செல்லும் சாலை அழகாக இருக்கிறது.  இயற்கை கொஞ்சுகிறது.  சற்றே தூரமான பார்வையில் மலை வேறு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். இது நடந்து சென்றதால் அனுபவிக்க முடிந்தது. வலது புறம் மலைகள் தான் அந்த வளைவில் திரும்பியதும்..

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  11. அனுமார் கூட சாபம் கொடுக்கிறாரா?  அட!  ஆனால் பாருங்க..  வனமா மாறுவது நல்லதுதானே?  இயற்கைக்கு வளம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இது வியப்பாக இருந்தது. இதுவரை அப்படி அறிந்தது இல்லை. அதனால் நம்ப முடியவில்லை. இது அங்கு இருந்தவர் சொல்லக் கேட்டது, அவர் இட்டுக் கட்டிச் சொல்லியிருக்கலாமே அப்படித்தானே கதைகள் வருகின்றன! இதற்கே ப்ல கதைகள் இருக்கின்றன. சும்மா கேட்டுக் கொள்ளலாம் அவ்வளவே.

      //வனமா மாறுவது நல்லதுதானே? இயற்கைக்கு வளம்.//

      இதை எழுதிவிட்டு அப்புறம் எடுத்தேன். சத்தியமாக நம்புங்கள் உங்களை நினைத்துக் கொண்டேன். கண்டிப்பாக இதை எடுத்துவிட்டால் ஸ்ரீராம் இந்த வரியைச் சொல்லுவார். சொல்லவில்லை என்றால் "ஸ்ரீராம் இதை நான் எதிர்பார்த்தேன் உங்களிடமிருந்து" என்று சொல்லியிருப்பேன்!!! ஹைஃபைவ் இந்த வரிக்கு!!!

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
    2. மிகுந்த ஆச்சர்யம்.  என்னை எப்படி அளவெடுத்தீர்கள்?!

      நீக்கு
    3. ஹிஹிஹி ஸ்ரீராம் உங்களோடு எத்தனை முறை பேசியிருக்கிறேன்....எவ்வளவு பதிவுகள், கருத்துகள் வாசித்திருக்கிறேன்!!!!! அதை வைத்துதான்...அதே போலத்தான் கீழுள்ள கருத்துக்கும் அந்த மலை க்ளோசப், அந்தச் சாலை இங்கு திரும்பிப் போகும் போது இன்னும் அழகான இயற்கை என்று சொல்லி அந்தப் படம் போடும் போதும், அந்தப் படங்கள் எடுக்கவில்லையா என்று கேட்பீர்கள் என்று நினைத்தேன் அதையே நீங்கள் 'எதிர்பார்த்து ஏமாந்தேன்' என்று சொல்லியிருக்கீங்க பாருங்க......இப்படிச் சிலது நாம் எழுதும் போது டக்கென்று தோன்றும்!

      கீதா

      நீக்கு
    4. இனி கொஞ்சம் ஜாக்கிரதையா மாத்தி யோசிச்சு பார்க்கறேன்.  ஆனால் அப்பவும் இதை நான் எதிர்பார்த்தேன்னு சொல்லிடக்கூடாது!

      நீக்கு
    5. ஹாஹாஹா ...கண்டிப்பா சொல்ல மாட்டேன்!!!

      கீதா

      நீக்கு
  12. மலையின் இடதுபுறம் திரும்பியதும் இன்னும் அழகான சாலை என்றீர்களே என்று படங்கள் எதிர்பார்த்து ஏமாந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் நீங்கள் கேட்பீர்கள் என்று நினைத்தேன்!!!!!!!!

      அது வலது புறம் மலைகள்தான். அப்போதும் ஓசியில் வந்த பயன்படுத்தப்ப்ட்டு என்னிடம் வந்த நிக்கான் கேமரா கொஞ்சம் பிரச்சனைகள் இருந்தது. டக் டக்கென்று அதற்குக் கோபம் வந்துவிடும். இப்பகுதியில் எடுத்த படங்கள் எதுவுமே சரியாக வரவில்லை ஸ்ரீராம். எரர் எரர் என்று சொல்லியே இருந்தது. எனக்குமே வருத்தமாகிவிட்டது. அதன் பின் கோயில் வரும் வரை அதைப் பயன்படுத்தவில்லை. அப்புறம் கோயில் அருகில் வந்ததும் எடுத்தேன் வந்தது கேமராவை அணைக்காமலேயே வைத்துக் கொண்டேன் ஹாஹாஹா . அதில் உள்ள பிரச்சனைகளுடனேயே!!! ஓரளவு வந்தவற்றைத்தான் பகிர்கிறேன்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  13. அழகான காட்சிகள். சாபங்கள் தந்தாலும் அவை நல்லதாகவே முடிந்திருக்கிறதே! கோவில் குறித்த தகவல்கள் தெரிந்து கொள்ள அடுத்த பதிவிற்குச் செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி. கருத்திட்டமைக்கு. உங்கள் பதிவுகளையும் வாசிக்க வைத்துள்ளேன்/ளோம்

      கீதா

      நீக்கு