புதன், 20 ஜூலை, 2022

அக்கரைச் சீமை அழகினிலே - மனம் மயக்கும் மலேசியா - பகுதி - 3

 

முந்தைய பகுதிகள்....பகுதி 1, பகுதி 2

அடுத்த பகுதியில் குழுவினரில் வித்தியாசமானவர்கள் பற்றியும், சென்ற இடங்கள், சம்பவங்கள் பற்றிச் சொல்வதாகச் சொல்லி முடித்திருந்தேன். தொடர்ச்சி.

அன்னை ஓர் ஆலயம்...

இருபத்து ஐந்து பேர் அடங்கிய எங்கள் குழுவில் ஆறு பேரடங்கிய ஒரு குடும்பம், நபீஸா உம்மாவும் அவரது 5 மகள்களும். மகள்கள் என்றால் அவர்களில் பலருக்கும் குழந்தைகள் மட்டுமல்ல பேரக் குழந்தைகளும் உண்டு. அவர்களது உப்பா பல ஆண்டு காலம் மலேஷியாவில் வாழ்ந்தவர்.

அவர் தம் வாக்குகளில் கேட்ட மலேஷியாவை அவர் மறைவுக்குப் பின் உம்மாவுக்குக் காட்ட ஒவ்வொருவரும் தனித் தனியே, அவர்களது கணவர், குழந்தைகளைத் தவிர்த்து, உம்மாவுடன் நான்கு நாட்களைக் கொண்டாட வந்தவர்கள். வியந்தே போனேன். கேட்டதும் கண்களில் நீர் நிறைந்தது.

உழைக்கும் கரங்களுக்கு வெகுமதி.....

5 பேர் அடங்கிய ஒரு இளைஞர்கள் குழு. அதில் மருத்துவப்படிப்பு முடித்து பயிற்சியில் இருக்கும் ஒரு மருத்துவர். அவரது தந்தை நடத்தும் ஒரு நிறுவனத்தின் ஒரு பங்குதாரரும் கூடவே வந்திருந்தார். அந்த நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று ஊழியர்களும் வந்திருந்தனர். நிறுவனத்திற்குக் கிடைத்த நல்ல லாபத்திற்குக் காரணமான அந்த ஊழியர்களை ஊக்குவிக்க இந்த உல்லாசப் பயணம். இப்படிப்பட்ட ஊழியர்களும், நிறுவனங்களும் இது போன்ற ஊக்குவிப்புகளும் பாராட்டல்களும் மனதைக் குளிர்வித்தது.

காதல் என்றும் வாழ்க!....

அடுத்து, மூன்று இளம் ஜோடிகள் அதில் A S Diaries.எஸ் டயரிஸ் எனும் சானலும், சொந்த நிறுவனமும் வைத்திருக்கும் இருவரை இங்குக் குறிப்பிட்டே ஆக வேண்டும். மதம் காதலைக் கொன்று கொண்டிருக்கும் இக்காலத்தில் காதலுக்காக மதத்தைத் துறந்து எடுத்துக்காட்டாய் வாழ்பவர்கள்.

பயணங்கள் முடிவதில்லை.....(நம் வெங்கட்ஜி போல்...பயணக் காதலர்)

ஜேக்கப் சார். குடும்பத்துடனும், சில நேரம் தனியாகவும் பயணிக்கும், பயணங்களைக் காதலிக்கும் ஒருவர். இவரும் ஒரு யுட்யூப் சானல் வைத்திருக்கிறார்.

உலகம் சுற்றும் வாலிபர்....

ஜிஜின்ஆட்டோ ஓட்டுநர். வியப்படையச் செய்தவர். கண்ணூரைச் சேர்ந்த தனிக்கட்டை. பணம் சேர்த்து இப்படி உலகைக் காண தீர்மானித்தவர்.

இப்படி வித்தியாசமானவர்கள் நிறைந்த ஒரு குழு.

புத்ரஜாயாவைப் பார்த்த பிறகு காலை உணவை உண்டு, தங்கும் இடத்தை அடைந்து ஓய்வெடுத்தோம் என்பதையும் சொல்லியிருந்தேன்.

அன்று மாலை பயண வழிகாட்டி, நிர்மலா அவர்களும் மற்றும் சந்தோஷ் அவர்களும் எங்களை ஏற்றிச் செல்லும் பேருந்துடன் வர, நாங்கள் சுல்தான் அப்துல் சமாத் கட்டிடம், விடுதலை சதுக்கம் (Independence Square) பார்த்தோம். இது ஒரு பகுதியே. இதைச் சுற்றிப் பார்ப்பதற்குப் பல இருக்கின்றன. இதோ படங்கள்


இது நதி!  ஓடை போன்று இருக்கிறது இல்லையா! நதி என்றுதான் சொல்லப்படுகிறது. மிகவும் சுத்தமாக இருக்கிறது

இந்த மூன்று படங்களுமே விடுதலை சதுக்கம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகள் - கீழே காணொளி இருக்கிறது அதில் Independence Square சுற்றி உள்ள பகுதிகள் தெரியும். ஊர் எப்படி இருக்கிறது என்பதும் தெரியும். இப்படத்திலும் ஒரு நதி தெரிகிறது இல்லையா. 

Independence Square பகுதியைச் சுற்றிலுமான சிறிய காணொளி

அடுத்து, கோலாலம்பூர் எனும் பெயருக்குப் பொருத்தமான கோலா மற்றும் லம்பூர் (Kuala and Lumpur) எனும் இரு நதிகளின் சங்கமத்தையும் பார்த்தோம். இதோ படங்கள். (மேலே உள்ள படங்களில் தெரியும் நதிகள்தான். இரவுக் காட்சி)

கோலா லம்பூர் என்ற எழுத்துகள் தெரிகின்றதுதானே. கோலா, லம்பூர் இரு நதிகள்.

கோலா-லம்பூர்-சங்கமம்-கோலாலம்பூர்

இந்தப் படத்தில் இரு கட்டிடங்களுக்கு நடுவில் ரோஸ் கலரில் ஒரு ஸ்தூபி போன்று தெரிகிறது இல்லையா அதுதான் K L Tower - கோலாலம்பூர் கோபுரம். இது பற்றி கீழே தகவல். இவை எல்லாமே அருகருகேதான்.

மாலை, இரவாய் மாறும் அவ்வேளையில் ஒளி மழையில் நனைந்து மிளிரும் மலேஷியாவின் காட்சிகளை விவரிக்க வார்த்தைகள் போதாது. காணக் கண்களும், உணர உள்ளமும், அனுபவிக்க உடல் ஆரோக்கியமும் முக்கியம்.

பின் இரவு உணவு உண்ட பின் பசிஃபிக் ஹோட்டலை அடைந்து,  கீதாவுக்குப் படங்களையும் காணொளிகளையும் அனுப்பிவிட்டு, மறுநாள் (இரண்டாவது நாள்) காட்சிகளைக் கனவு கண்டு எப்போதோ உறங்கிப் போனேன். (ஹோட்டலில் மட்டும் தான் இணையம் கிடைக்கும். வெளியில் சென்றால் இணையம் இல்லை. நாங்கள் கார்டு போட்டுக் கொள்ளவில்லை)

இரண்டாம் நாள் காலை, 01-07-22 அன்று பசிஃபிக் ஹோட்டலில் 8 மணிக்குக் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு, தேசிய அரண்மனைஇஸ்தானா நெகாரா (Istana Negara - National Palace) சென்றோம். உள்ளே போக அனுமதியில்லை.

இஸ்தானா நெகாரா (Istana Negara - National Palace)
இஸ்தானா நெகாரா (Istana Negara - National Palace)
இந்த மூன்று படங்களுமே இஸ்தானா நெகாரா (Istana Negara - National Palace)
குதிரையிலும் தரையிலுமாகத் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மலேஷிய ராணுவ உடையில் நின்றது அவர்களது நாட்டுப்பற்றை உணர்த்தியது. 
குதிரையில் காவலர்
கொடி உயரே பறந்ததால் 9 சுல்தான்களில் ஒருவர் அங்கு தங்கியிருக்கிறார் என்று அர்த்தம் என்றார் எங்கள் பயண வழிகாட்டி நிர்மலா.

அதன் பின் (National Monuments) மலேஷியாவின் தேசிய நினைவுச்சின்னங்களைப் பார்க்கப் பயணமானோம். முதல் மற்றும் இரண்டாம் போரிலும், மலேயாவுக்கு எதிரான போரிலும் உயிர் நீத்த வீரர்களுக்கான நினைவகம்.

தேசிய நினைவுச் சின்னம்  பற்றிய தகவல். கொஞ்சம் பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும் என்று நினைக்கிறேன்



தேசிய நினைவுச் சின்னம்
அங்கிருந்த, மலேஷியாவின் தலையுயர்ந்து ஆகாயத்தைத் தொடும் அளவு நிற்கும் பல கட்டிடங்கள் (604) கண் கொள்ளாக் காட்சி. அதன் பின் மலேஷியாவின் முக முத்திரையாகக் கருத்தப்படும் கேஎல்சிசி பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் (KLCC Petronas Twin Tower) பார்க்கச் சென்றோம்.
கேஎல்சிசி பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் (KLCC Petronas Twin Tower) 

முழுவதுமாக இரும்பும், கண்ணாடியும் மட்டுமே பயன்படுத்தி ஒரு கோபுரம், ஜப்பான் நிறுவனம் ஒன்றினாலும், மற்றொரு கோபுரம் கொரிய நிறுவனம் ஒன்றினாலும் நிறுவப்பட்டவை. அங்கும் மலேஷியாவின் இரு நிறுவனங்களும் ஒரு போட்டியை உருவாக்கி ஒன்றுக்கொன்று மிகையான கோபுரங்களைத் திறமையாகச் சொந்தமாக்கிக் கொண்டன.

பெட்ரோனாஸ் (Petronas) என்பது மலேஷியாவின் பெட்ரோலிய நிறுவனம். 88 மாடிகளைக் கொண்ட இந்த இரண்டு கோபுரங்களையும் இணைக்கும் ஒரு பாலம் 46 வது மாடியில் இருக்கிறது. 120 மீட்டர் ஆழத்திலிருந்தே அதன் அஸ்திவாரத்தை அமைத்திருக்கிறார்கள். அதன் முன் அழகான ஒரு செயற்கை நீரூற்றும் அமைத்திருக்கிறார்கள். இரவு, இந்த ஊற்றுடன் இசையும் ஒளியும் சேர்ந்த காட்சி காண வேண்டிய ஒன்று. காணொளி கீழே.

8 மணிக்கு மீண்டும் இரவுக் காட்சி காண அங்கு வர தீர்மானித்து, கேஎல் கோபுரம் - கோலாலம்பூர் கோபுரம் (K L Tower - Kola Lumpur Tower)  நோக்கிச் சென்றோம். (மேலேயும்  நதிகள் உள்ள படத்தில் ரோஸ் வண்ண ஒளியில். அது இரவில் எடுத்தது)

கே எல் கோபுரம் 

உலகின் உயரமான கோபுரங்களில் மலேஷியாவின் தொலை தொடர்புக்குச் சொந்தமான இதுவும் ஒன்றுதான். சீட்டு வாங்கிக் கொண்டு அதி வேகமாக இயங்கும் மின் தூக்கி மூலமாக அங்கிருந்து காட்சிகள் காணும் தளத்தில் (Observation Desk) இறங்கினோம்

மேற்பார்வை தளத்தில் (Observation Desk)
180 டிகிரியில் மலேஷியாவை சுற்றிலும் பார்த்து வியந்தோம். வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். அங்கிருந்து எடுத்த படங்கள்..
அதன் பின் எங்கள் பாக்கேஜில் இல்லாத Aqua World-Aquaria மீன் காட்சியகம் காண வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் இருந்ததால், வழிகாட்டி நிர்மலா பலருடன் தொடர்பு கொண்டு 5 ரிங்கிட் (75 ரிங்கிட்லிருந்து) குறைவாக, நபருக்கு 70 ரிங்கிட் க்கு எங்களில் போகத் தயாரான 18 பேருக்கு ஏற்பாடு செய்தார். இரண்டு மணி நேரம் அங்கு செலவிட முடிவானது. மீன் காட்சியகம் ஓர் அதிசய உலகம்
மீன் காட்சியகத்தின் முகப்பு
மீன் காட்சியகத்தின் காணொளி கீழே கொடுத்துள்ளேன்
நாம் நடந்து போகும் போது நம் இடப்புறமும் வலப்புறமும் தலைக்கு மேலும் கனமான கண்ணாடிச் சுவற்றுக்கு அப்பால், சுரா, கடலாமை, தொண்டி (Spike)  மற்றும் விசித்திரமான பல கடல் வாழ் உயிரினங்கள். எவ்வளவு நேரம் செலவிட்டாலும் போதாது என்றே மனம் சொல்லும் ஓரிடம் அது. இதோ காணொளி.
https://youtu.be/Knh1CG0maNU

பதற்றமான நிமிடங்கள்...

அந்த அற்புத உலகிலிருந்து மனமில்லாமல் நானும், என் இரண்டாவது மகனும், மகளும் ஒரு குழுவாய் வெளியில் வந்த பின், மனைவி மற்றும் பெரிய மகனுக்காகக் காத்திருந்தோம். எல்லோரும் வந்த பின்பும் அவர்களைக் காணவில்லை. கடந்து சென்ற ஒவ்வொரு நொடியும் மனதில் பயத்தை ஏற்படுத்தியது.  வழிகாட்டி நிர்மலாவும், ரஜீஷும் அங்கிருந்த பாதுகாவலர்களிடம் விவரம் சொல்லி அவர்களைத் தேடி உள்ளே சென்றார்கள். காத்திருந்தோம். 5 நிமிடத்திற்குப் பிறகு அவர்கள் இருவர் மட்டும் வரவதைக் கண்ட எனக்குப் பகீர் என்றது.

இவர்களைக் காணோம்

காணோமா?’

ஆமா இவர்கள் எல்லாம் அறைக்குச் சென்று ஓய்வு எடுக்கட்டும். நீங்களும் நானும் மட்டும் இங்கு காத்திருப்போம். அவர்கள் வந்த பிறகு அவர்களுடன் டாக்சியில் ஹோட்டலுக்குப் போகலாம்என்றதும் எனக்குத் தலை சுற்றியது.

என்னென்னவோ சிந்தனைகள். ஐந்து நிமிடங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நிலை குலைந்து நின்றேன். கண்கள் படியேறி வரும் ஆட்களில் மனைவி மற்றும் மகனின் உருவத்தைத் தேடித் தவித்தது. தவித்துக் கொண்டிருந்த போது...

அதோ! இருவரும் ஓடி வருகிறார்கள்எங்கோ வழி தெரியாமல் அந்தக் கட்டிடத்தின் மறு புறம் சென்று திரும்ப வந்து யார் யாரிடமோ விசாரித்து மீன் காட்சியகத்தின் முகப்பு அருகேயுள்ள வெளியேறும் வழியாக வந்திருக்கிறார்கள். அதனுள் இருக்கும் உணவகம் போன்ற பல இடங்களுக்குச் செல்லவும் வெளியேறவும் வேறு வழிகள் உண்டாம்.

எப்படியோ எல்லோருக்கும் நேரம் அதிகம் வீணாகாகாமல் வந்தது நிம்மதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தியது. எனக்கோ போன உயிர் திரும்ப வந்தது. மலேஷிய பயணத்தில் மறக்க முடியாத ஒரு திகில் அனுபவம் அன்று அப்படி மீன் காட்சியகத்தில் கடந்து போனது.

அறைக்குச் சென்று சிறிது ஓய்வுக்குப் பின் இரவு உணவு உண்டுவிட்டு மீண்டும் பெட்ரோனாஸ் கோபுரத்தின் இசை மற்றும் ஒளியுடனான நீரூற்று நிகழ்ச்சியைக் கண்டு களித்தோம். அதன் காணொளியைக் கீழே கொடுத்துள்ளேன். சொல்லி விவரிப்பதை விட அதை நீங்களும் கண்டு களிக்கலாம். அவ்வளவு அருமையான காட்சி அது.

பெட்ரோனாஸ் கோபுரத்தின் இசை மற்றும் ஒளியுடனான நீரூற்று


அதன் பின் சைனா டவுனில் உள்ள சைனா சந்தையில் - மார்க்கெட்டில் சில பொருட்களை வாங்கினோம். விலை மலிவு என்றெல்லாம் தோன்றவில்லை.
நன்றி விக்கி. சென்னை வந்த போதெல்லாம் சென்ற ரங்கநாதன் தெரு போன்றுதான் இருந்தது, சைனா டவுனில் இருக்கும் தெரு

மறுநாள் 02-07-22 அன்று சுவாரசியமான பகுதிகளுக்குச் சென்றோம். அதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். வாசிக்கும், கருத்திடும் அனைவருக்கும் நன்றி. 

(அடுத்த பகுதி அடுத்த வாரம்தான் வரும். எங்கள் வலைத்தளத்தின் தலைமையகத்திற்கு 5 நாள் விடுமுறை)


-----துளசிதரன்

 

42 கருத்துகள்:

  1. அன்னை ஓர் ஆலயம் விஷயம் நெகிழ வைக்கிறது. ஆனால் உம்மா மலேஷியாவில் இருப்பவரா, இந்தியாவிலா?​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உம்மாவும் இங்குதான் இருக்கிறார். உம்மாவை அவருக்காகவே அவருக்கு அவரது கணவர்- தங்கள் அப்பா வாழ்ந்த ஊரைக் காட்ட அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள் மகள்கள். ஆம் நெகிழ வைத்த விஷயம்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்



      நீக்கு
  2. உழைக்கும் கரங்கள் விஷயத்தில் சமீபத்தில் ஒரு நிறுவனம் தனது சில சிறந்த ஊழியர்களுக்கு கார் பரிசளித்தது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் ஒரு நிறுவனம் தனது சில சிறந்த ஊழியர்களுக்கு கார் பரிசளித்தது //

      கார் பரிசளித்ததா! நல்ல விஷயம். இப்படி ஊக்குவித்தால் வேலை செய்பவர்களின் வேலைத் திறனும், உழைப்பும் உயரும்தான்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி உங்கள் தகவலுக்கும்

      துளசிதரன்

      நீக்கு
  3. அடுத்ததாக ஆட்டோ ஓட்டுநர் வியக்க வைக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அவரிடம் பேசிய போது எனக்கும் ஆவரது ஆர்வம் ஆச்சரியம் ஏற்படுத்தியது.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  4. நதியைக் குறுக் சுற்றிலும் வஸ்ஸ்த்தி உண்டாக்கி விட்டார்கள் போல!  புகைப்படடங்களில் தலைகாட்டாத துளஸிஜி ஒரு கணம் காணொளியில் தெரிகிறார்.  அப்புறம் ஓரிரு புகைப்படத்திலும்\!தொலைந்துபோய்க் கிடைத்த அனுபவம் திகில்.  உங்கள் பயம் புரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நதி முன்பு பெரிதாக சுற்றிலும் இயற்கை வளத்துடன் இருந்திருக்கும் என்றுதான் தோன்றுகிறது. நீங்கள் சொல்லியிருப்பது போல் சுற்றிலும் கட்டிடங்கள் கட்டி இப்படியானதோ என்றும் தோன்றியது. என்றாலும் நன்றாகப் பராமரிக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.

      நான் பல படங்களில் இருக்கிறேன். ஆனால் இங்கு அதிகம் பகிரவில்லை. பகிர்ந்த படங்களின் இடங்கள் நாங்கள் இல்லாத படங்களாக இல்லாததால் பகிர்ந்தேன். படங்கள், காணொளிகள் நான் எடுத்தவற்றைத்தான் இங்கு பகிர்கிறேன். காணொளியில் நான் சொல்வதை என் மனைவி எடுத்தார். குரல்கள் தெரியாமல் இருக்க கீதா அதில் பின்னணியில் இசையைச் சேர்த்தார்.

      ஆமாம் அந்த நிமிடங்கள் மிகவும் பதட்டமாகத்தான் இருந்தது. எப்படியோ இறைவனின் அருளால் அதிக நேரம் அவதிப்படவில்லை.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  5. நிறைய தகவல்கள், சுவாரஸ்யமான புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை ரசித்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  6. படங்கள் சுவாரசியம். நிறைய தகவல்களுடன் கூடிய பதிவு. பல நினைவுகளை வரவழைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் உங்கள் நினைவுகளை இப்பதிவு வரவழைத்தது மகிழ்ச்சி.

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன் உங்கள் கருத்திற்கும்

      துளசிதரன்

      நீக்கு
  7. மான்செஸ்டரிலும், ந்தி என்று ஓடையைக் காண்பித்தது நினைவுக்கு வருகிறது. தாய்வான் ந்தியும் சுமார்தான். நம்முடைய ந்திகளின் உயிரை கண்முன்னே சூறையாடுவது நினைவில்வந்துபோனது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மான்செஸ்டரிலும், ந்தி என்று ஓடையைக் காண்பித்தது நினைவுக்கு வருகிறது. தாய்வான் ந்தியும் சுமார்தான்//

      தகவல்களுக்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      ஆமாம் நம் நாட்டு நதிகளின் நிலையைப் பற்றி என்ன சொல்ல?

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      துளசிதரன்

      நீக்கு
  8. படித்தேன் கருத்து பிறகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கஷ்டம் புரிந்தது கில்லர்ஜி. எங்கள் கருத்துகளும் அழிந்து போகிறது இல்லை என்றால் போவதில்லை என்று தெரிந்தது.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  9. விரிவான தகவல்களும் அழகான புகைப்படங்களும் தொடரை மேலும் சுவாரஸ்யமாக்கிக்கொண்டேயிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன், உங்கள் கருத்திற்கும் பதிவை ரசித்ததற்கும்.

      துளசிதரன்

      நீக்கு
  10. முதலில் அலைபேசியில் படித்து நீண்ட..... கருத்துரை இட்டேன் பலமுறை முயற்சித்தும் ஏற்கவில்லை. கரண்டுக்கே ஒரு அமௌண்ட் ஆகியிருக்கும், வெறுத்துப்போய் பிறகு கணினியில் போடலாம் என்று வெளிநடப்பு செய்து விட்டேன்.

    உங்களோடு பயணித்தவர்களின் நிலைப்பாடு அறிந்து ஆச்சர்யப்பட்டேன் அதிலும் ஆட்டோ ஓட்டுநர் கண்ணூர் ஜிஜின் பிரமிக்க வைத்தார். அவரது கொள்கைக்கு எமது இராயல் சல்யூட்டை சொல்லுவும் அல்லது பறஞ்நு விடவும்.

    ஐந்து மகள்கள் உம்மாவை அழைத்து வந்து சுற்றிக்காண்பித்தது அருமை. நானும் எனது அம்மாவையும், மகளையும் நான் இருக்கும்போதே அபுதாபியை காண்பிக்க முயற்சித்து அம்மாவுக்கு பாஸ்போர்ட்டும் எடுத்து விட்டேன், மகளுக்கு எடுக்க தாமதமாக்கியது வீட்டு உறுப்பினர்களின் சதி.

    இறுதிவரை அம்மாவை அழைத்துப் போகவில்லை நேற்றுகூட எதார்த்தமாக அம்மாவின் பாஸ்போர்ட்டை பார்க்கும்போது நிறைய மனிதர்கள் மீது கோபம் வந்தது. ஆனால் என்னைவிட அம்மாவுக்கு சதித்தவர்களைத்தான் பிடிக்கும். ஆனால் மகனை அழைத்து காண்பித்தேன்.

    படங்கள் மிகவும் அருமை காணொளிகள் கண்டேன் கடல் குதிரை ஆண் வகைகள்தான் பிரசவிக்கும் ஒரு நொடியில் பல்லாயிரக்கணக்காண குஞ்சுகள் பிரசவிக்கும் ஜெல்லி பிஷ் நிறைய கண்டு இருக்கிறேன். சாப்பிட்டதில்லை.

    இஸ்தானா நெகாரா நுழைவாயில் தேவகோட்டை மாதிரி இருக்கிறது.
    தேசிய நினைவுச் சின்னம் நமது உழைப்பாளர் சிலை போலவே இருக்கிறது.

    தொடர்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் எனது அம்மாவையும், மகளையும் நான் இருக்கும்போதே அபுதாபியை காண்பிக்க முயற்சித்து அம்மாவுக்கு பாஸ்போர்ட்டும் எடுத்து விட்டேன், மகளுக்கு எடுக்க தாமதமாக்கியது வீட்டு உறுப்பினர்களின் சதி.//

      வருத்தமான விஷயம் உங்கள் வருத்தமும் புரிகிறது.

      //படங்கள் மிகவும் அருமை காணொளிகள் கண்டேன் //

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      //கடல் குதிரை ஆண் வகைகள்தான் பிரசவிக்கும் ஒரு நொடியில் பல்லாயிரக்கணக்காண குஞ்சுகள் பிரசவிக்கும்//

      ஆமாம். அதையும் அறிந்தேன் காட்சியகத்தில். ஜெல்லி மீன் அபாயகரமானது என்றும் அறிந்தேன்

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  11. அழகிய படங்கள், விளக்கங்கள்... காணொளிகளும் அருமை...

    முடிவு பகுதியில் மொத்த செலவுகளையும் குறிப்பிடவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை ரசித்ததற்கு மிக்க நன்றி டிடி.
      முடிவுப் பகுதியில் சொல்கிறேன்

      துளசிதரன்

      நீக்கு
  12. பயனாக கட்டுரை அருமையாக இருக்கிறது. குழுவாக செல்லும் பொது ஒன்றிரண்டு பேர் வழி தவறுவது சகஜம். அதற்குத் தான் குழுவினற்கு பொதுவாக அணிய ஒரு அடையாளம் (அடையாள அட்டை, தொப்பிகொடுத்திருப்பார்கள்.

    படங்களும் காணொளியும் நன்று.

    அம்மா உம்மா ஆகும்போது அப்பா வாப்பா ஆவார். உப்பா இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார் பதிவை ரசித்ததற்கு.

      ஆமாம் குழுவாகச் செல்லும் போது அடையாள கொடுப்பார்கள். அவர்கள் இருவரும் காட்சியகத்தைக் கண்டு ரசித்துக் கொண்டே வெளியேறும் பாதை மாறிச் சென்றதால் அப்படி ஆகிவிட்டது.

      அப்பா வாப்பா ஆவார் என்பது சரிதான். ஆனால் பலரும் உப்பா என்றும் அழைக்கிறார்கள். நான் இருப்பது மலப்புரம் பகுதி நிலம்பூர். இங்கு முஸ்லிம் மக்கள் அதிகம்.

      மிக்க நன்றி சார், உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    பதிவு மிக அருமையாக உள்ளது. மலேஷியா நகரின் படங்களையும், அங்கு எடுக்கப்பட்ட காணொளிகளையும் கண்டு களித்தேன். உங்களுடன் நாங்கள் அனைவரும் சுற்றிப்பார்க்க வந்த மாதிரி ஒரு உணர்வையே உங்கள் பதிவின் மூலம் தந்து விட்டீர்கள். பதிவின் உழைப்பிற்கு பாராட்டுக்கள், மற்றும் நன்றி.

    உங்களுடன் வந்த குழுவினரை நீங்கள் விமர்சித்த விதம் சுவாரஸ்யமானது. அதில் அன்னைக்காக ஒன்று சேர்ந்து வந்த அந்த ஐந்து மகள்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

    சற்று நேரம் சென்றவிடத்தில் தங்கள் மனைவி, மகன் காணாமல் போன அந்த நிமிடங்கள் எனக்கும் பதற்றம் வந்தது. நல்லவேளை.
    இறையருளால் எல்லாம் சுபமாக நடந்தேறியுள்ளது. கடவுளுக்கு நன்றி.

    தொடரும் மலேஷிய பயணத்தில் தொடர்ந்து வருகிறேன். பதிவை படிக்கையில் மனதிற்கு மகிழ்வாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு மிக அருமையாக உள்ளது. மலேஷியா நகரின் படங்களையும், அங்கு எடுக்கப்பட்ட காணொளிகளையும் கண்டு களித்தேன். உங்களுடன் நாங்கள் அனைவரும் சுற்றிப்பார்க்க வந்த மாதிரி ஒரு உணர்வையே உங்கள் பதிவின் மூலம் தந்து விட்டீர்கள். பதிவின் உழைப்பிற்கு பாராட்டுக்கள், மற்றும் நன்றி.//

      மகிழ்ச்சியாக இருக்கிறது, சகோதரி கமலா ஹரிஹரன் உங்கள் கருத்தை வாசித்ததும். உங்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்திய பதிவு என்பது கூடுதல் சந்தோஷம் எனக்கு.

      பதற்றம் ஏற்பட்ட போதும், ஆமாம் எல்லாமே நல்லபடியாக நடந்தது. தொடர்ந்து வாருங்கள்.

      மகிழ்வான விரிவான உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

      துளசிதரன்

      நீக்கு
  14. பயண அனுபவம், உடன் பயணம் செய்தவர்கள் விவரம் எல்லாம் நெகிழ வைத்து விட்டது.
    தெரியாதஊரில் வழி தெரியாமல் சிக்கி கொண்டால் ஏற்படும் பதைபதைப்பு புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் வெகு நேரம் காக்க வைக்காமல் வந்து விட்டது நிம்மதி. திட்டமிட்டபடி பயணம் நடந்தது மகிழ்ச்சி.
    படங்கள், காணொளிகள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அவர்கள் காணாமல் அதிக நேரம் ஆகாமல் எப்படியோ வந்துவிட்டார்கள்..இறைவனுக்கு நன்றி.

      ஆமாம் பயணத்திட்டத்திலும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நல்லபடியாக முடிந்தது.

      படங்கள் காணொளிகள் எல்லாம் ரசித்ததற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு. கருத்திற்கும் மிக்க நன்றி

      துளசிதரன்

      நீக்கு
  15. அழகான படங்கள்.. சிறப்பான காணொளிகள்..

    நேர்த்தியான பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா.

      துளசிதரன்

      நீக்கு
  16. நமது கலாச்சாரத்துடன் தொடர்புடைய இடம் என்று நாம் பொங்கினாலும் அங்குள்ள பெரும்பாலான மக்களின் நோக்கம் வேறானது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சைனா டவுனில் எனக்கும் ஓர் அனுபவம் . ஒரு வேளை வியாபாரிகளின் மனோரீதியான செயல்பாடாக இருக்கலாம். ஒரு தமிழர் அன்பரிடம் நான் தமிழில் பேசியும் அவர் நட்பு ரீதியாக இல்லாத ஆங்கில துவனியில் பேசினார். ஒரு வேளை நான் தமிழில் பேசி விலையை குறைத்து விடுவேனோ அவரிடம் வேறு ஏதேனும் விஷயங்களைப் பேசிவிடுவேனோ என்ற சந்தேகம் இருந்திருக்குமோ என்னவோ. நாம் தமிழை நேசிக்கிறோம். தமிழ் பேசும்
      அன்பர்களைத் தமிழால் நேசிக்கிறோம். வேறு ஒன்றும் நமக்கு வேண்டாம்தானே அன்பை விட வேறு என்ன வேண்டும்.

      மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா உங்களின் கருத்திற்கு.

      துளசிதரன்

      நீக்கு
  17. மலேசியா உண்மையாகவே மலைக்க வைக்கிறது. அந்த இரட்டைக்கோபுரம் நம்மை அண்ணாந்து பார்க்கச் செய்கிறது. அப்புறம் நீங்கள் குறிப்பிடும் அந்த தனிக்கட்டையான "ஆட்டோ டிரைவர்" ஆராய்ந்து முடிவெடுப்பதில் சந்தனக்கட்டை என்றே எனக்கு தோன்றுகிறது. வாழ்த்துக்கள்!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நாஞ்சில் சிவா பிரமிப்பாகத்தான் இருந்தது.

      ஆட்டோ ஓட்டுநரின் ஆர்வம் திட்டமிட்டு முடிவெடுப்பதைத் தூண்டியிருக்கலாம். நல்ல முடிவு.

      மிக்க நன்றி நாஞ்சில் சிவா பதிவை ரசித்ததற்கும் கருத்திற்கும்

      துளசிதரன்

      நீக்கு
  18. கோலாலம்பூரின் விளக்கம் இன்றே அறிந்தேன். படங்கள் எல்லாமும் அருமை. காணொளி சில வருகின்றன. பலவும் வரவில்லை. உங்கள் மனைவியும் மகனும் காணாமல் போய்த் திரும்ப வந்தது மனதில் ஆறுதலைக் கொடுத்தது. நிச்சயமாக இரு ஓர் அபூர்வமான சுற்றுலா. உயர்ந்த கோபுரங்களும் அதை இணைக்கும் பாலங்களும் மனதில் அச்சத்தைக் கொடுத்தாலும் பார்ப்பதற்கும் அனுபவிக்கும்போதும் மனதில் ஓர் அபூர்வமான உணர்வை ஏற்படுத்தி இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் வரவில்லையா? ஏன் என்று தெரியவில்லையே. இங்கு வேலை செய்கிறதே. யுட்யூப் சுட்டியும் கொடுக்கப்பட்டிருக்கிறதே அங்கு சென்று பார்த்தால் வரும் என்று நினைக்கிறேன்.

      //நிச்சயமாக இரு ஓர் அபூர்வமான சுற்றுலா. //

      ஆமாம். பிள்ளைகளின் விருப்பத்தினாலும், இறை அருளாலும் அப்படி அமைந்தது.

      //உயர்ந்த கோபுரங்களும் அதை இணைக்கும் பாலங்களும் மனதில் அச்சத்தைக் கொடுத்தாலும் பார்ப்பதற்கும் அனுபவிக்கும்போதும் மனதில் ஓர் அபூர்வமான உணர்வை ஏற்படுத்தி இருக்கும்.//

      உண்மைதான். பிரமிப்பாகவும் இருந்தது. முழு மலேஷியாவையும் அங்கிருந்து பார்க்க முடிந்தது ஆச்சரியமான விஷயம்., மறக்க முடியாத அனுபவம்.

      மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம் ரசித்துக் கருத்திட்டதற்கு

      துளசிதரன்

      நீக்கு
  19. படங்கள் அருமை. சிறப்பு. நான் சிங்கப்பூரில் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கப்பூரில் இருக்கிறீர்களா! தகவலுக்கு மிக்க நன்றி

      //படங்கள் அருமை. //

      மிக்க நன்றி திரு. சதீஸ் முத்து கோபால் உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
    2. சகோ பெங்களூரிலிருந்து சிங்கப்பூரா தற்போது? அதனால்தான் சிங்கப்பூர் பறவைகள் படங்கள் போட்டிருந்தீங்களா!

      உங்கள் தளத்தில் கருத்து போடவே முடியவில்லையே.

      கீதா

      நீக்கு
  20. படங்களும் தங்களின் விளக்கங்களும் அருமை - நேரில் சென்று பார்த்ததுபோன்ற உணர்வை தந்தது; உடன் பயணித்தவர்களை குறித்த பின்னணி சிறப்பு.

    சிங்கப்பூரில் சில வாரங்கள் தங்கிஇருந்தேன் , மலேசியா பக்கம் போக வாய்ப்பில்லாமல் போன ஏக்கம் இப்போது உங்கள் பதிவின் மூலம் தீர்ந்துபோனது.

    தங்களின் நெஞ்சில் நீண்ட காலம் நிழலாடும் உங்கள் பயண ஞாபகம் என்பது உண்மை.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில்பிள்ளையின் வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்களை வலையுலகில் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன. நலமுடன் இருக்கிறீர்கள் என்றும் என்னை விசாரித்தது பற்றியும் தெரிந்து கொண்டேன். நான் நலம்.

      உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

      //சிங்கப்பூரில் சில வாரங்கள் தங்கிஇருந்தேன் , மலேசியா பக்கம் போக வாய்ப்பில்லாமல் போன ஏக்கம் இப்போது உங்கள் பதிவின் மூலம் தீர்ந்துபோனது.//

      இறைவன் அருளால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திடும். என் பதிவைப் பற்றிச் சொன்னதற்கும் மிக்க நன்றி, மகிழ்ச்சியும் கூடவே.

      //தங்களின் நெஞ்சில் நீண்ட காலம் நிழலாடும் உங்கள் பயண ஞாபகம் என்பது உண்மை.//

      உண்மைதான். இது போன்றவை நம் நினைவுகளை விட்டு நீங்குவதில்லை.

      தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி கோயில்பிள்ளை.

      துளசிதரன்


      நீக்கு
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு