வெள்ளி, 31 அக்டோபர், 2014

சில நொடி சினேகம் பல நொடி சினேகமாய் மாறியது.

  சில நொடி சினேகம் 


     நாங்கள் வலைப்பூ ஆரம்பித்து, வலைப்பூக்களை நுகர, வலையில் உலா வந்த போது குடைந்தையூர் சரவணன் அவர்களின் குறும்படம் எடுக்க விரும்பும் வேண்டுகோளைக் கண்டு அவரைத் தொடர்பு கொள்ள, அப்போது பூத்த அந்த சில நொடி நட்பு இன்று அவரது படத்தில் பங்கு பெறும் அளவிற்கு பெரிய ஆழமான நட்பூவாய் விரிந்திருக்கின்றது என்பதை நாங்கள் மிகவும் மகிழ்வுடனும், பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஏனென்றால், இந்த நட்பு எங்களுக்குப் பல நட்புகளை ஏற்படுத்தி விரிவாக்கியுள்ளது.

குடந்தையூர் ஆர் .வி. சரவணன், பதிவர், http://kudanthaiyur.blogspot.in/  இயக்குனர் - குறும்படம் சில நொடி சினேகம்

      நாம் ஒரு படத்தைப் பார்த்ததும் நமக்கு அதன் ஆழ அகலம் தெரிந்தது போன்று விமர்சிக்கின்றோம். நமக்கு உரிமை உண்டுதான்.  என்றாலும், படம் இயக்கும் ஆர்வமும், கனவும் பலருக்கும் இருந்தாலும், ஒரு படம் இயக்கி, அது குறும்படமாக இருந்தாலும், அதை வெளிக் கொண்டுவருவது என்பது சாதாரண விஷயமல்ல. அந்தப் பாதை மிகவும் கரடுமுரடானது. பல இன்னல்கள் நமது பாதையில் முளைத்து நம்மைச் சோர்வடையச் செய்யும்.  ஒரு சாமான்ய மனிதன் அந்த இன்னல்களை எல்லாம் மிகுந்த மன தைரியத்துடன் எதிர்கொண்டு, கடந்து வந்து, வெற்றி இலக்கைத் தொடுவது என்பது எத்தனைக் கஷ்டமானது என்பதை அனுபவத்தினால் மட்டுமே உணர முடியும். அதிர்ஷ்டக் காற்றும் நம் பக்கம் வீச வேண்டும். ஆனால், சரவணன் அவர்களின் முதல் படமாகிய சில நொடி சினேகம், குறும்படம் உங்கள் முன் விரியும் முன் அவர் சந்தித்த இன்னல்கள் பல.  அவர் இயக்க இருந்த முதல் குறும்படத்திற்கான வேலைகள் பாதி முடிந்த நிலையில், சென்னையில் படப்பிடிப்பு என்றும், தேதியும் முடிவு செய்யப்பட்ட நிலையில், அதில் நடிப்பதாக இருந்த, கோவை ஆவியும், துளசியும் வெளியூர் என்பதால் அவர்களது பிரயாணங்கள் முடிவு செய்யப்பட்டு ரயிலில் பதிவும் செய்யப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் தடைபட்டுப் போனது.

      சரவணன் அவர்கள் சிறிது தளர்ந்தாலும், உடன் அடுத்து தனது சிறுகதைகள் பற்றி எங்கள் குழுவுடன் (கோவைஆவி, அரசன், துளசி, கீதா) அதைப் பற்றிக் கருத்துப் பரிமாற்றம் செய்து அதில் ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, அதற்கான வேலைகளைத் தொடங்க ஆரம்பித்தார்.  அதுதான் இந்தக் கதை. முதலில் இந்தக் கதையைச் சென்னையில் தான் இயக்குவதாக இருந்தது. முன்பு முடிவான அதே தேதி என்றும். ஏனென்றால் வெளியூரில் இருந்து வரும் இருவரின் பிரயாணமும் தடைபடாமல் இருக்க வேண்டி. இதன் கதைக் களம் பேருந்து நிலையம் என்பதால், முதலில் ரெட்ஹில்ஸ் பேருந்து நிலையத்தில் படம் பிடிக்கலாம் என்று கேஆர்பி அவர்கள் பரிந்துரைக்க, முடிவும் செய்யப்பட்டது.  பகலில் படப்பிடிப்பு என்பதாலும், அது பொது இடம் என்பதாலும், அதற்குக் காவல் துறை அனுமதி வேண்டும் என்பது தெரிய வர, நாங்கள் காவல்துறையை அணுகுவது எப்படி என்று பல வழிகளிலும் முயன்று, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதிமுறைகள் சொல்ல, ஒவ்வொன்றும், பாம்புக் கட்டத்தில் ஏறி, ஏறி சறுக்கிக் கீழே வருவது போல் வந்துக் கொண்டிருந்தது. மேலும் இந்த வழிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரேட் சொல்லியது! படம் எடுக்க ஆகும் செலவை விட இருமடங்கு ரேட் வரை சென்றது! இரண்டு படமே எடுத்துவிடலாம்!

இரண்டு வாரங்களே இருந்தது. தேதி நெருங்கியதே தவிர, எந்தவிதத்திலும் அனுகூலமான பதில் இல்லை. கும்பகோணமா, சென்னையா என்று முடிவாகவில்லை.  இரு நாட்கள்தான் இருந்தது. கும்பகோணத்திலும் அவர் முயற்சி செய்து கொண்டிருந்தார்.  ஒரு வழி கொஞ்சம் வெளிச்சம் காட்ட, டிக்கெட் எதுவும் ரத்து செய்ய வேண்டாம், படப்பிடிப்பு சென்னையில்தான் என்று இயக்குநரால் அறிவிக்கப்பட்டு, நேரடியாக ரெட் ஹில்ஸ் காவல் நிலையத்தையே அணுகலாமே என்று இயக்குனர் நேரில் சென்றார். அப்போதுதான் தெரியவந்தது, முதலில் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டும், அவர்கள் அனுமதித்த பின்னர் பேருந்து நிலைய டெப்போ, ரெட் ஹில்ஸ் காவல் நிலையம், தாசில்தார் என்று தனித்தனியாக மனு கொடுக்க வேண்டும் என்று அறிந்த போது அது இரண்டு நாட்களில் முடியும் வேலையா? கும்பகோணம்தானே நமது இயக்குனரின் ஊர் ஆதாலால் அங்கு பேருந்து நிலைய அனுமதி, பேருந்திற்கு அனுமதி எல்லாம் பெறவேண்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டு கும்பகோணத்தில் படப்பிடிப்பு என்று முடிவானது. 

ஆவி, துளசி அவரது மனைவி மூவரும் கோயம்புத்தூரிலிருந்து கும்பகோணத்திற்கு வந்து சேர்ந்தனர்.  அரசன், கீதா மற்றும் புகைப்படக் குழுவினர் சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கிப் பயணம். ஆவியும், துளசியும் ரயிலில் சினிமா பற்றி பல விஷயங்களை ரசனையுடன் பேசி, கருத்துக்கள் பரிமாறிக் கொண்டிருக்க, அரசனும், கீதாவும் பேருந்தில் பல சுவாரஸ்யமானக் கதைகள் பேச என்று பயணம் தொடர்ந்தது. பேருந்து சற்று தாமதமாகத்தான் போய்ச் சேர்ந்தது.  காலையில் இயக்குனரின் தம்பி அவர்கள் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்ள, காலை உணவிற்குப் பிறகு, முதல் சீன் ஆட்டோவில் ஆவி, அரசனும் வந்திறங்கும் காட்சி படமாக்கப்பட்டது. இயக்குனருக்கு இது முதல் பட அனுபவம், அரசனுக்கும், ஆவிக்கும் காமராவின் முன் புது அனுபவம் ஆதலால் அந்தக் காட்சி கொஞ்சம் பல டேக்குகள் வாங்கியது.  இயக்குனருக்குக் கொஞ்சம் பதட்டம் வர காட்சியை ஆட்டோ ஓட்டுனருக்கும், அதில் வருபவர்களுக்கும் விளக்க, அந்த இடைப்பட்ட நேரத்தில், ஆவியும், அரசனும் வசனம் பேசிப் பயிற்சி எடுக்க, இப்படியாக நல்ல அனுபவம் எல்லோருக்கும்.  அந்த முதல் காட்சி படமாக்கப்பட்டவுடன், அடுத்த சீனான, அரசன் முன்னே செல்ல ஆவி அவரிடம் மீதிச் சில்லறை கொடுக்க அவரைத் தொடர்வது எடுக்கப்பட, சில டேக்குகள் வாங்க, இப்படியாக தொடர்ந்தது படப்பிடிப்பு.  அதன் பின்னர் பேருந்து நிலையத்தில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு முன்னேற, குழுவினர் அங்கு இடம்பெயர, பேருந்துகள் வந்து சென்றே கொண்டிருக்க, மக்கள் பேருந்திற்கு வேண்டி ஓடி ஏற, இறங்க, இப்படியான ஒரு பரபரப்பான பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்துவது என்பது எவ்வளவு கடினம் என்பது புரிந்தது. இயக்குனருக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும், நடித்தவர்களுக்கும் பாராட்டுக்கள்! பின்னர், மதிய உணவிற்குப் பிறகு, ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்னர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.  அதுவும் மிகவும் பரபரப்பான பொது இடம் தான்.  அரசனும், துளசியும் சந்திக்கும் காட்சி.  துளசி காரோட்டிக் கொண்டு வந்து அரசனைச் சந்திக்கும் காட்சி சில டேக்குகள் வாங்கியது.  பின்னர், இருவரும் காரில் ஆவியைத் தேடிச் செல்லும் காட்சி, அதுவும் பரபரப்பான சாலையாக இருந்ததால் கொஞ்சம் டேக்குகள் வாங்கியது.  இறுதியில், இடைப்பட்டக் காட்சியான, அரசனும், ஆவியும் பேருந்து நிலையத்தில் பேருந்திற்குக் காத்திருக்கும் போது பேசும் காட்சிப் படமாக்கப்பட, நல்லபடியாக படப்பிடிப்பு முடிந்தது. 

7.06 நிமிடங்கள்தான் படத்தின் நீளம்.  ஆனால், ஒரு நாள் தேவைப்பட்டது. இயக்குனர் பின்னர் “இன்னும் ஒரு நாள் கூட படப்பிடிப்பு நடத்தியிருந்தால் இன்னும் நிதானமாக, நேர்த்தியாக்க் காட்சிகளை அமைத்திருந்திருக்கலாமோ” என்று சொல்லிக் கொண்டார்.  ஏற்பாடுகளை மிகவும் அருமையாக்ச் செய்திருந்தார்கள்.  இயக்குனரின் மொத்தக் குடும்பமும், உறவுகளும் அங்கு வந்திருந்து ஆதரவு அளித்தனர். படப்பிடிப்பின் போது பல நல்ல பாடங்கள் கற்றுக் கொண்டோம்.  காட்சிகள் இன்னும் எப்படி விதப்படுத்தலாம், நேர்த்தியாக வைக்கலாம் என்பது முதல், ஒரு பரபரப்பான பொது இடத்தில், கூட்டத்தைக்  கட்டுப்படுத்த என்று தனி ஆட்கள் இல்லாத போதும் படப்பிடிப்பு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள முடிந்தது!  நல்ல அனுபவம் தான்.  பின்னர் இயக்குநர் பாக்அப் சொல்ல எல்லொரும் நாங்கள் தங்கியிருந்த ரூமிற்கு வந்தோம்.  மறு நாள் நாங்கள் (அரசன், துளசி. அவரது மனைவி, ஆவி, கீதா) எல்லோரும் இயக்குநரின் வீட்டிற்குச் சென்றோம். மிகுந்த அன்பு உபசரிப்பு. அவர்களது அன்பில் நாங்கள் திளைத்தோம்.

படம் முடிந்து பின்னர்தான் முக்கியமான வேலை.  எடிட்டிங்க், டப்பிங்க் போன்ற நகாசு வேலைகள் இயக்குனரையும்,, ஒளிப்பதிவாளர் ஜோன்ஸையும், ஆவி, அரசனையும் இரவு தூங்க விடாமல் வேலை வாங்கியது! துளசி டப்பிங்கிற்கு வேண்டி சென்னை வர முடியாததால், ஒளிப்பதிவாளர் ஜோன்சின் குரல் ஒத்துப் போக அது டப் செய்யப்பட்டது. படத்திற்கான போஸ்டர் இயக்குநரின் மகன் ஹர்ஷவத்தன் மிக நன்றாகச் செய்து தந்தார்.  இப்படியாக வேலைகள் முடிந்து முதல் காப்பியை, வாத்தியாரும், சீனுவும், ஸ்கூல் பையன் சரவணனும் பார்த்து விமர்சிக்க்க் குறைகள் எடுத்துக் கொள்ளப்பட்டுச் சரி செய்யப்பட்டது. ஒரு பெண் கருவுற்ற நாள் முதல், பிரசவிக்கும் வரை எத்தனை எத்தனை இன்ப, துன்பங்களைச் சந்திக்க நேரிடுமோ அது போன்று சந்தித்து, குழந்தை வெளியில் வரும் போது குழந்தையிடம் குறை இருக்கின்றது என்றால் அந்தத் தாய், அந்தச் சமயம் எவ்வளவு வேதனைப் படுவாளோ அது போன்ற ஒரு அனுபவம்தான் ஒவ்வொரு இயக்குனருக்கும் அவர்களது படம் உருவாகி வெளிவருவதும்.  அதுவும் முதல் பிரசவம் என்றால்? என்றாலும் தாய் தன் குழந்தையுடம் சிறு குறைகள் இருந்தாலும், அதை அன்பானவர்கள் சுட்டிக் காட்ட அதை மெருகேற்றி, சரி செய்ய முடிந்தக் குறைகளைச் சரி செய்வது போல், இயக்குநரின் மீதிருந்த அன்பும் அக்கறையும் தான் அந்த விமர்சனங்களுக்குக் காரணம் என்பதால், இயக்குனர் படத்தில் இருந்தக் குறைகளைச் சரி செய்ய முடிந்த அளவு சரி செய்து இதோ உங்கள் முன்னும் வந்து நீங்கள் எல்லோரும் அதைப் பார்த்து விமர்சனங்களும், முகநூலிலும், யூட்யூபிலும் வந்து கொண்டிருக்கின்றது.

குறும்படத்தை முதலில் நம் இயக்குனரின் அபிமான இயக்குனர் திரு பாக்கியராஜ் அவர்கள்தான் வெளியிடுவதாக இருந்தது. ஆனால், பாக்யராஜ் அவர்களுக்கு நேரமின்மை  காரணத்தால், அவரை, இயக்குனர், இயக்குனரின் தம்பி, அவரது மனைவி, ஆவி, கீதா ஐவரும் சென்று அவரது அலுவலத்தில் சந்தித்துப் படத்தை அவர் பார்வையிட்டு, 20 நிமிடங்கள் அவர் எங்களுக்காக நேரம் ஒதுக்கியது மிகவும் மகிழ்வாக இருந்தது.

இப்படியாகச், சென்ற வருடம் குடந்தை ஆர்.வி. சரவணன் என்பவருடன் ஆரம்பித்த எங்கள் சில மின் அஞ்சல் நட்பு, சில நொடிகளில் உருவாகி இன்று பல மின் அஞ்சல் நட்பாய்-பல நொடிகளாய் வளர்ந்து, அவரைத் துளசியின் படத்தில் பங்கெடுக்க வைத்துப், பின்னர் அவரது படத்தில் துளசியும் பங்கெடுத்து, எங்கள் நண்பர் குடந்தையூரார் என்றாகி விட்டார்! அவரால் எங்கள் நட்பு வட்டம் வாத்தியார், ஆவி, அரசன், சீனு, ஸ்கூல்பையன் என்று விரிந்து இருக்கின்றது! இயக்குனரும் எங்கள் நண்பருமான  குடந்தையூரார் இன்னும் பல வெற்றிப் படங்கள் தந்து மிளிர எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! இந்தப் படம் உருவாவதற்குக் காரணமாக இருந்த எல்லா அன்பர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்!

    

75 கருத்துகள்:

  1. மதுரை பதிவர் சந்திப்பில் வெளியிடப் பட்ட போது முழுமையாய் ரசிக்க முடியவில்லை .பின்னர் யு டியூப்பில் பார்த்து மகிழ்ந்தேன் ,பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள் ,உங்களின் மேலும் தொடர வாழ்த்துகள்!
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜி! தங்கள் கருத்திற்கும், பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும்!

      நீக்கு
  2. படம் பார்த்தேன்... நல்லா வந்திருக்கு ஐயா...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  3. சிறு முயற்சி பெரும் வெற்றிக்கு அடையாளம் அது போல இந்த் குறும்படம் வருங்கால பெரும் படத்திற்கான அஸ்திவாரம் தொடருங்கள் எதிர்காலம் உங்கள் கையில்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தமிழா தங்கள் வாழ்த்திற்கு இயக்குநர் மற்றும் குழுவின் சார்பில்!

      நீக்கு
  4. சார் எனக்கு என் மனைவிக்கும் உங்க படத்தில் சான்ஸ் கொடுங்க சார் பார்த்திபன் கிட்ட வடிவேலு வாங்கி கட்டிக் கொள்வது மாதிரி என் மனைவிகிட்ட நான் வாங்கி கட்டிக் கொள்வதும் பார்க்க மிகவும் நகைச்சுவையாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹாஹஹ் தமிழனின் அக்மார்க்!!!!!! சரி தமிழா இது குடந்தையூராருக்கா? இல்லை எங்களுக்கா? சரி குடந்தையூரார் என்றால் அவரிடம் தான் கேட்க வேண்டும்...

      எங்களுக்கு என்றால்.......சரி நீங்க நாங்க எடுக்கற படத்துல நடிக்கத் தயாரா?!! அப்படின்னா, நீங்களும் உங்க மனைவியும் 2015 ஏப்ரல் இரண்டாவது பகுதியில், ஒரு 2 நாள் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கமுடியாமா?!!!! பாலக்காடு வாருங்கள்....நீங்களும் பங்கு பெறலாம்....என்ன சொல்றீங்க தமிழா! அப்படியே எங்கள் வீட்டிற்கும் ஒரு விசிட் அருமையான பசுமையான அழகான இடங்கள் அருகில் இருக்கின்றன..பார்த்துவிட்டுச் செல்லலாமே!

      நீக்கு
  5. குறும்படங்களும்
    இன்றைய
    சிறந்த இலக்கியமே
    சிறந்த முயற்சி
    பங்கு பற்றிய எல்லோருக்கும்
    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  6. அற்புதம் அருமை. இயக்குனருக்கும், நடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
    பிறகு நிதானமாக படித்துவிட்டு கருத்திடுகிறேன் துளசி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சொக்கன் நண்பரே! பாராட்டுகளுக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  7. நன்றாகவே வந்துள்ளது சகோ ! மகிழ்ச்சியாய் உள்ளது இன்னும் தொடர்ந்து இருக்கலாமோ என்று தோன்றிற்று அருமை தொடர வாழ்த்துக்கள் நட்பும் குறும்படமும்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் கருத்திற்கு! வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும்! தொடர்வோம் நிச்சயமாக!

      நீக்கு
  8. படம் பார்த்தேன். நன்றாக வந்திருந்தது. இயக்குநர் அவரின் விருப்பமான கோவிலிலிருந்து தொடங்கியது பற்றியும், நடுச் சாலையிலிருந்து காட்சி எடுக்கும் ஆர்வத்தையும் சொல்லியிருந்ததைப் படித்தது, அந்த அந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நினைவுக்கு வந்தது.

    அது உங்கள் குரல் இல்லையா? ஓஹோ..

    அனுபவங்களை நன்றாக எடுத்துச் சொல்லியிருந்தாலும்....

    பாக்யராஜ் என்னதான் சொன்னார் என்பதை மட்டும் சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறீர்களே எல்லோரும்! ஹா...ஹா...ஹா..

    வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! பாக்யராஜ் என்ன சொன்னார் என்பதற்கு இயக்குனரே பதில் சொல்லிவிட்டார் பாருங்கள்! கீழே !

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  9. படத்தை ஏற்கனவே பார்த்து எனது வாழ்த்துகளையும் தெரிவித்துவிட்டேன்.. இது உங்களுக்கானது.. அழகான தொய்வில்லாத ஆதிமுதல் அந்தம் வரை கூறிய பதிவு... அனைத்தும் எனக்கு தெரிந்த தகவல்கள் என்ற போதிலும் மீண்டும் ஒருமுறை பயணித்தது போன்ற உணர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சீனு! உங்களைப் போன்றோரின் முதல் கருத்துக்கள் தானே படம் மெருகேருவதற்குக் காரணம்! மிக்க நன்றி! தெரிந்த தகவலானாலும் வந்து கருத்துச் சொல்லியதற்கு மிக்க நன்றி! வழக்கம் போல் நீளமாகிவிட்டது இல்லையா?!!!!!

      ஹப்பா தொய்வில்லாத பதிவுனு சொல்லிட்டீங்களே! ஹஹ..ஆனாலும் உங்களைப் போல எல்லாம் எழுத முடியவில்லை சீனு! முயற்சிக்கின்றோம்!

      நீக்கு
  10. ஸ்ரீ ராம் சார் ,

    முதன் முதலாக ஒரு குறும்படம் செய்திருக்கிறோம் இதை என் மானசீக குருவாக ஏற்றிருக்கும் திரு. பாக்யராஜ் அவர்களிடம் காண்பித்து ஆசிர்வாதம் வாங்கி கொள்ளலாம் என்பதற்காக சென்றிருந்தோம். அவரும் ஆர்வத்துடன் படம் பார்த்தார். சில நொடிகள் மௌனமானார். அந்த மௌனம் என்னிடம் அவர் இன்னும் நிறைய எதிர்பார்த்திருந்தார் என்பதை தெரிவித்தது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.வாழ்த்துக்கள் என்று ஆசிர்வதித்தார்.

    பதிலளிநீக்கு
  11. சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் படம் என்றாலும் பல மணி உழைப்பு அதில் பளபளப்பதை காண முடிகிறது. எதிர் காலத்தில் தமிழ் சினிமாவுக்கு நல்ல படைப்பாளிகள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள், அதுவும் நம் வலை உலகிலிருந்து என்று எண்ணும்போது அவர்களின் நட்பு எனக்கு பெருமையளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்! ஆமாம் சார்! 1/2 நிமிடம், ஒரு நிமிடமே வரும் விளம்பரங்கள் கூட பல மணி நேர உழைப்பில் உருவாகுவதுதான் சார்! காட்சி அமைப்பதும், படப்பிடிப்பும், எடிட்டிங்கும் மிகுந்த உழைப்பையும், தியாகங்களையும் உள்ளடக்கியது!

      உங்கள் புரிதலுக்கு மிக்க நன்ரி சார்!

      நீக்கு
  12. நன்றி துளசிதரன் சார் & கீதா மேம்

    துளசிதரன் அவர்கள் என்னை பயபடாமல் வேலையில் இறங்குங்கள் என்று சொன்னதால் தான் பட வேலைகளை துணிச்சலுடன் செய்ய முடிந்தது

    நன்றி துளசிதரன் சார் & கீதா மேம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்! தங்களுக்கும் /தான் நாங்கள் நன்றி சூலக் கடமைப்பட்டிருக்கின்றோம்! எங்களையும் இந்தப் படத்தில் உட்படுத்தியதற்கு! ரொம்ப ரொம்ப நன்றி சார்!

      நீக்கு
  13. பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்..
    சிநேகம் தொடர வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கல் வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும்! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது!

      நீக்கு
  14. அன்புள்ள நண்பரே !


    தங்கள் வலைச்சரம் படிப்பதற்க்கு நன்றாக உள்ளது. தங்கள் வலைச்சரத்தை தினசரி பார்ப்பதற்க்கும் வலைச்சரத்தை பின் தொடரவும் தங்களது LAYOUT SETTING ல் ADD A GADGET ல் google+padge சேர்க்க வேண்டுகிறேன்.

    நன்றி
    சித்தையன் சிவக்குமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும்! எங்கள் வலைத்தளத்தைத் தொடர வந்ததற்கும்! நீங்கள் சொல்லியிருபப்தை முயர்சிக்கின்றோம் நண்பரே!

      நீக்கு
  15. பதிவர் விழாவில் பார்த்தபோது வெள்ளையாகவும் இடைஇடையே தடங்கலும் ஏற்பட்டது. இப்போது தடங்கள் இல்லாமல் பார்த்துவிட்டேன். ..ஒரு சின்ன சிபாரிசு அப்படியே!! பூரிக்கட்டை அடி வாங்குபவர்க்கும் பூரிக்கட்டை் அடி கொடுப்பவர்க்கும் ஒரு சான்சு கொடுத்தீங்கன்னா... அவர்களை நேரில் பார்த்த மாதிரியாக இருக்கும். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! தங்கள் கருத்திற்கு! (முதல் வருகை??!!)

      ஹாஹஹ....அவர் இசைந்தால் அவருக்குக் கொடுக்க ரெடிதான்! பூரிக்கட்டைக்கும் சேர்த்து!

      நீக்கு
  16. வணக்கம் சகோதரா !

    குறும்படம் கண்டு மகிழ்ந்தேன் இம் முயற்சியானது மென்மேலும்
    வெற்றி பெற பங்கேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும்
    வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோதரா
    பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க ந்னறி சகோதரி! தங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும்!

      நீக்கு
  17. அன்று மதியமே திரும்ப நேர்ந்ததால் குறும்படத்தையும் நூல் வெளியீடு விழாவும் காணக் கொடுத்து வைக்கவில்லை. துளசிதரனை எதிர்நோக்கி ஏமாற்றம் தான் மிஞ்சியது மேலும் பல பதிவர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாட முடியவில்லை. வாழ்த்துக்கள் சரவணன் , வாழ்த்துக்கள் துளசிதரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் வருத்தம் அடைகின்றோம் சார்! தாங்கள் ஏமாற்றம் அடைந்ததற்கு! சொல்லப் போனால், துளசி முதலிலேயே வருவது கஷ்டம் என்று சொல்லிவிட்டார். கீதா பயண ஏற்பாடுகள் எல்லாம் செய்த நிலையில் இறுதியில் பயண்த்தை ரத்து செய்ய வேண்டியதாகிப் போனது! நீங்கள் வந்திருந்ததைப் புகைப்படத்தில் பார்த்துத் தெரிந்து கொண்டோம்! எங்களுக்கும் வருத்தம்தான் சார்! நாம் சந்திப்போம் என்ற நம்பிக்கை இருக்கின்றது! இறைவன் அருளட்டும் அது சீக்கிரம் நிகழ! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! சார்!

      நீக்கு
  18. முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பாகவே அமைந்திருந்தது படம்! வாழ்த்துக்கள்! குடந்தையூரார் நட்பு குறித்த விரிவான தகவல்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க ந்னறி சுரேஷ்! நண்பரே! தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!

      நீக்கு
  19. மீண்டும் ஒருமுறை ஷூட்டிங் போன உணர்வு. அருமையான பதிவு..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவி! அப்படியா!? மெய்யாலுமா?! அப்ப ரொம்ப நன்றி ஆவி! அன்டஹ் எஃபெட் கிடைச்சுருந்துச்சுனா....

      நீக்கு
  20. அன்புள்ள அய்யா,
    வணக்கம். ‘சில நொடி சிநேகம் - குறும்படம் ’ பார்த்தேன்.
    முதல் குறும்படம் இது என்பது போல இல்லை...கைதேர்ந்த பல படங்களை இயக்கிய இயக்குநர் இயக்கியதைப் போன்று படம் அருமையாக இருக்கிறது.
    ‘கோவை ஆவிப்பா’ போலவே அழகான ஆனந்த் விஜயராகவன், நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். “பஸ்டாண்டு...வந்திருச்சுன்னு சொல்லாதிங்க...வரப்போகுதுன்னு சொல்லுங்க...”
    அரசன் அவர்களும் ‘பிரண்ட்தான் மாமா’ நடிப்பில் இயல்பாக சிரித்து நடித்து அசத்தி இருக்கிறார்.
    அய்யா துளசிதரன் அவர்கள் இன்டிகா காரை நன்றாக ஓட்டி வந்து கை அசைவுகள் எல்லாம் அருமையாகச் செய்து நன்றாகப் பேசி நடித்துள்ளார். (அவரைப் பார்த்த பொழுது எனக்கு ‘16 வயதினேலே’ வரும் டாக்டரைப் பார்ப்பது போல இருந்த்து).
    ‘தேட்ஸ் குட்...!’
    எடிட்டிங் மற்றும் சவுண்ட் எபக்ட் ஜோன்ஸ் அவர்கள் நன்றாகச் செய்திருக்கிறார்கள். ‘அப்படித்தான் இருக்கனும்’ என்று அரசன் சொல்லி காருக்குள் அமர்வதுக்குள் கார் கதவைச் சாத்தும் சத்தம் கேட்கிறது.
    ‘மன்னார்குடி பஸ்‘ வந்து விட்டது என்று பட்டுக்கோட்டை பஸ்ஸில் கேவை ஆவி ஏறுகிறார்? பட்டுக்கோட்டை பஸ் மன்னார்குடி போகுமா என்று தெரியவில்லை!

    எழுதி இயக்கி நடித்தும் இருக்கும் இயக்குநர்
    குடந்தை ஆர்.வி. சரவணன் தம் பணியைச் செம்மையாகவும்...
    நேர்த்தியாகவும் செய்து இருப்பது அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கின்றது என்பதை பறைசாற்றுவதாகவே குறும்படம் இருக்கிறது. சில நொடி சிநேகிதத்தில்’ மனிதாபிமானத்தை...நேயத்தை நிசப்படுத்திக் காட்டியிருப்பது சபாஷ். மிகுந்த பாராட்டுகளுடன் வாழ்த்துகள்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    Manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு முதல் மிகுந்த நன்றி! எங்கள் மனமார்ந்த நன்றிகள்! இத்தனை வருமையாக கூரிந்து கவனித்து ஒரு விமர்சனம் சொல்லியதற்கு! மிக மிக சந்தோஷமடைகின்றோம்! இயக்குனரையும் பார்க்கச் சொல்கின்றோம்!

      கதவு சாத்தும் சத்தம் கேட்பது எல்லாஎ இத்தனை அருமையாக கூரிந்து கவனித்து எழுதியதற்கு மிக்க மகிழ்ச்சி! ஐயா! எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை! சும்ம வாழ்த்தினோம், பாராடினோம் என்றிலலாமல், இத்தனை விளக்கமாக எழுதியது உங்களுக்கு எங்கள் மீது இருக்கும் அன்பையும், அக்கறையையும், காட்டுகின்றது. கொடுத்து வைத்தவர்கள் நாங்கள்! மிக்க மிக்க ந்னறி

      நீக்கு
    2. கும்பகோணத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் பேருந்து மன்னார்குடி வழியாகத்தான் செல்லுகின்றது என்பதால் தான் வழித்த போர்டை எடுக்காமல் ஷூட் செய்தது!

      நீக்கு
    3. அன்புள்ள அய்யா,
      வணக்கம். சில நொடி சினேகம் பல நொடி சினேகமாய் மாறியது கண்டு பிரமித்துப் போனேன்.

      குறும்படம் எடுக்கப்பட்ட விவத்தைப்பற்றி விரிவாக விளக்கி இருக்கி இருக்றீர்கள்.
      ஒரு பெண் கர்பம் அடைவதே பெரிய விசயம். அவளுக்கு முதல் பிரவசம் என்கிற பொழுது அதை அனுபவித்தவளுக்குத் தானே தெரியும் அதன் வலி! ஒரு தந்தையாக நீங்கள் அருகில் இருந்து பார்த்ததால் அவளின் வலியை அனுபவித்து விளக்கி இருந்தது அருமை.

      எங்கு படப்பிடிப்பு நடத்துவது என்பதே ஒரு போராட்டமாக இருந்திருக்கிறது. பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு வெகு சிரமங்களுக்கிடையே நடத்தியிருப்பது நன்றாக இருக்கிறது.... இயல்பாக இருக்கிறது. இயக்குநர் அவர்களின் குடும்பமே மகன் ஹர்ஷவத்தன் உட்பட பணியாற்றி இருப்பது கண்டு மகிழ்கின்றேன்.

      நொடிக்குள் நண்பனாகி...ஒருவருக்காக ஒருவர்...விட்டுச் செல்லாமல் அழைத்துச் செல்ல...அலைவது...தேடுவது... அருமை...கூடி வாழ்வது தானே வாழ்க்கை. நடித்த, குறும்படம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

      குறும்படத்தை முதலில் இயக்குனரின் அபிமான இயக்குனர் திரு பாக்கியராஜ் அவர்கள்தான் வெளியிடுவதாக இருந்தது என்பதை அறிந்தேன். இயக்குனர் பாக்கியராஜ் வெளியிட்டு இருந்தால் இன்னும் சிறப்புச் சேர்த்திருக்கும். பாக்யா இதழில் பணியாற்றும் அண்ணன் திரு.மணவை பொன் மாணிக்கம் எனது நெருங்கிய நண்பர்.

      தொடரட்டும் தங்களின் பணி...!

      நன்றி.
      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.
      Manavaijamestamilpandit.blogspot.in

      நீக்கு
    4. மிக்க நன்றி ஐயா! எங்கள் அனுபவக் கட்டுரையைக் குறித்த தங்கள் விரிவான பின்னூட்டம்! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது! இயக்குனருக்கும் பாக்யா இதழில் உள்ள ஒருவர் நண்பர்தான். இயக்குனரை இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்து பதில் அளிக்கச் சொல்கின்றோம் நண்பரே! நீங்கள் குறிப்பிட்டவர்தானா அவர் நண்பரா என்றும் தெரியவில்லை. உங்களது முந்தைய பின்னூட்டத்தையும் அவரைப் பார்க்கச் சொல்கின்றோம்.

      மிக்க நன்றி இத்தனை ஆர்வமுடன், மிகுந்த நல்ல மனதுடன் வாசித்துப் பின்னூட்டம் இடும் உங்களின் அக்கறையைஉம்,அன்பையும் கண்டு மிகவும் பெருமைப்படுகின்றோம். மகிழ்கின்றோம் தங்கள் நட்புகிடைத்ததற்கும்! மிக்க மிக்க நன்றி! ஐயா!

      உங்கள் அந்த கிராமத்து ஏழைப் பெண் பிரசவத்திற்குப் படும் கஷ்டமும்....பின்னர் அந்தக் குழந்தை சரியான சிச்சை சரியான நேரத்தில் கிடைக்காமல் உயிர் இழப்பதும் எங்கள் மனதைப் பாதித்தது என்பது உண்மை...அதை மறக்கவே முடியாது. அது அருமையான கதை.

      நீக்கு
    5. அன்புள்ள அய்யா,

      மிக்க நன்றி.

      நீக்கு
    6. ஆசானே,
      அய்யா மணவை ஜேம்ஸ் அவர்கள் சிறந்த கதாசிரியர். நாடக இயக்குநர். இத்துறையில் அறியப்படாத பேராளுமைகளுள் ஒருவர். அவரது நாடகங்கள் இங்கே சபாக்களில் பழம்தின்று கொட்டை போட்ட தொழில் நாடகக் கலைஞர்களோடு போட்டியிட்டு வென்றிருக்கின்றன.
      இத்துறையில் அவரை வழிநடத்துங்கள்.
      நன்றி.

      நீக்கு
    7. ஆசானே, மணவை ஜேம்ஸ் ஐயா அவர்கள் கதை எழுதுவதிலும் கவிதை புனைவதிலும் திறமை மிக்கவர் என்று நினைத்திருந்தால் இப்படி ஒருஇன்ப அதிர்ச்சியைக் கொடுக்கின்றீர்களே! நாடகங்கள் இயக்குவதில் வல்லவர் என்ற விவரம் அளித்து! கண்டிப்பாக உதவுகின்றோம், தகுந்த சமயம் வரும் போது!

      மணவை ஜேம்ஸ் ஐயா தங்களது விருப்பத்தை எங்கள் மின் அஞ்சலுக்குத் தெரியப்படுத்தினால் நாங்கள் அதற்கு ஏற்றார் போல் உதவ முடியும் ஐயா!

      மிக்க நன்றி ஆசானே!

      நீக்கு
  21. குறும்பட எடுப்பதற்கான ஆயத்தங்களை மிகவும் விரிவாகவே விளக்கினீர்கள்!
    பாடுபட்டதற்கு நல்ல பலன் கிடைத்தது ~ குறும்படம்!

    எனது அன்பு நண்பர் குடந்தையூராருக்கும் தங்களுக்கும்
    கீதா மேடம்,
    அரசன்,
    கோவை ஆவி
    ~அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ,மிக்க நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  22. படத்தின் யூடியூப் தளத்திலும் முதல் வாழ்த்து,
    கருத்து நான்தானே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! மிக்க நன்றி நண்பரே! இயக்குனர் சொல்லியிருக்கின்றார், தாங்கள் அவரதுமனதிற்கினிய, அவரை மிகவும் ஊக்குவிக்கும் நண்பர் என்று! மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  23. படத்தை பார்த்தேன் துளசி அவர்களே. நன்றாக இருந்தது. ஒரு சில வினாடிகளாக இருந்தாலும் மனதில் வருகிறதே.. அதுவல்லவா .. நட்பு. தொடர்ந்து நடிடுங்கள். அடுத்த படத்தில் எனக்கு (நல்ல?) ஒரு வில்லன் ரோல் வாங்கி தருமாறு கேட்டு கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க விசு நண்பரே! மிக்க நன்றி உங்கள் பாராட்டிற்கு!

      வில்லன் ரோல்தானே கொடுத்துட்டாப் போச்சு! நீங்கள் ஏப்ரல் மாதம் பின் பகுதியில் வருவதாக இருந்தால், பாலக்காடு பக்கம் எட்டிப் பாருங்க....நாங்கள் ஆர்வமுள்ள பதிவர்களை நாங்கள் எடுக்கும் படத்தில் பங்கெடுக்க வைக்கின்றோம்....நீங்கள் நன்றாகவே நடிப்பீர்கள் அதில் சந்தேகமே இல்லை. உங்கள் குரல் கணீர், நல்ல வாய்ஸ் மாடுலேஷன், உணர்ச்சிகளுக்கு ஏற்றார் போல்....எக்ஸ்ப்ர்ஷன்ஸ் எல்லாமே நாங்கள் வீடியோவில் பார்த்திருக்கின்றோமே...நண்பரே! எங்களுக்கும் வேலை மிச்சம்! கொடுத்துட்டாப் போச்சு! வாங்க...சாலமன் பாப்பையா அவர்கள் சொல்லுவது போல் "வாங்க...வாங்க....எங்க குறும்படத்துல நடிச்சுப் பாருங்க...." ஹஹஹ...இது சும்மா வார்த்தைகள் அல்ல நண்பரே! உண்மையான வார்த்தைகள்!

      நீக்கு
  24. மினி பிச்சரு கண்டுக்கினேம்பா... மெய்யாலுமே சோக்கா கீதுபா... சம்பந்தப்பட்ட அல்லாருக்கும் கங்குச்சிக்காபா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நைனா! ரொம்ப சந்தோஷமாக இருக்கு! உங்கள் வருகை! உங்கள் தமிழ் கேட்காமல்.........ம்ம்ம்ம்ம் நாங்கள் உங்களைப் பற்றி நிறையவே பேசியதுண்டு! என்னாச்சு? இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க? இனிமேலாவது எழுதுவீங்களா?!!!!

      சோக்காக்கீதா! மினி பிச்சரு?!!1 ரொம்ப டேன்ஸ்பா! நம்ம வீட்டாண்ட வந்துகினு எய்துனதுக்கு டேங்க்ஸ்பா!

      நீக்கு
  25. குறும்படம் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே
    அனுபவமிக்க இயக்குநரின் கை வண்ணத்தில் உருவான படமாகத்தான் அப்படம் காட்சியளித்தது.
    தாங்களும், அரசனும், ஆசியும் ஏதோ நீண்டகால அனுபவமிக்க நடிகர்கள் போல், வெகு இயல்பாக நடித்துப் படத்திற்கு மெருகூட்டியுள்ளீர்கள்
    படம் அருமை
    நடிப்பும் அருமை
    வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! படத்திற்கான பாராட்டுக்களுக்கும், நடித்தவர்களுக்கான பாரட்டுகளுக்கும்! வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி! நணப்ரே!

      நீக்கு
  26. வணக்கம்
    ஒரு ஏழு நிமிடப் படம் இந்தப்பாடு படுத்தியதா? யப்பா ... பெரிய விஷயம் ...
    பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! ஒரு நிமிடப் படமே கூட பல சமயம் பாடுபடுத்தி விடும்! மிக்க நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்திற்கு!

      நீக்கு
  27. ஒவ்வொரு குறும்படம் பார்க்கும்போதும் அதில் படைப்பாளிகளின் உழைப்பு தான் தெரியும். சிறு சிறு குறைகள் இருந்தாலும், அந்த படைப்பாளியின் உழைப்பினை பாராட்டும் வார்த்தைகள் தான் அவருக்கு பெரிய பலமே.....

    முகப்புத்தகத்தில் பார்த்தவுடன் பிடித்திருந்தது இந்த குறும்படம்.....

    குறும்படம் எடுத்த சரவணன், அதில் நடித்த ஆவி, அரசன், மற்றும் உங்களுக்கும் பின்புலத்தில் உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்......

    மேலும் பல வெற்றிகளை ஈட்டட்டும் இந்தக் குழு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க ந்னறி வெங்கட்ஜி! தங்கள் புரிதலுக்கும், வாழ்த்திற்கும் பாராட்டிற்கும்!

      நீக்கு
  28. துவக்கப் புள்ளியிலிருந்து படம் திரையிடல் வரைக்கும் சொன்ன மாண்பை கண்டு மகிழ்ந்தேன் .... உங்களுக்கும் கீதா மேடத்திற்கும் சிறப்பு நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! அரசன் மிக்க நன்றி! உங்களுக்கும் தெரிந்த கதை தானே எல்லாமே! சிறப்பு நன்றிகள் வேறு...ம்ம்ம் மிக்க நன்றி!

      நீக்கு
  29. பதில்கள்
    1. என்ன சார்! நன்றி எல்லாம்...உங்கள் படத்தில் எங்களுக்கும் வாய்ப்புக் கொடுத்ததற்கு நாங்கள்தான் சாரி நன்றி சொல்லணும்! மிக்க ந்னறி சார்!

      நீக்கு
  30. முதலில் தாமதவருகையை மன்னியுங்கள் ஆசானே!
    இப்படித்தான் பலபிரமாண்டங்களின் பின்னணியில் இருக்கும் உழைப்பை அறியாமல் கடந்து விடுகிறோம்.
    சில நிமிடப்படம் என்றாலும் தங்களின் கருத்தைப் படித்தபின் ஒவ்வொரு நொடிக்காட்சியிலும் காட்சிப் படுத்த முடியாத படக்குழுவினரின் பதட்டத்தை அனுமானிக்க முடிந்தது.
    இது போன்ற பயண நட்பினைக் காட்டுவது போன்ற பாடல் தமிழ் அற இலக்கியத்தில் உண்டு.
    பழமொழி நானூறாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    “தாம் நட்டொழுகுதற்கு தக்கார் எனல் வேண்டா
    யார்நட்பே யாயினும் நட்புக் கொளல் வேண்டும்“

    இவரது குலமென்ன , கோத்திரம் என்ன, பொருளாதார வசதி எப்படி என்றெல்லாம் பாராது நமது நட்பை நாடி வந்தவர்களிடம் நாமும் நட்பு கொள்ள வேண்டுமாம்.
    உங்கள் குறும்படத்திற்குப் பொருத்தமாய்த் தோன்றியது.
    படத்திற்குச் சாரதி நீங்கள் தான் போலிருக்கிறது ஆசானே!
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிலென்ன ஆசானே! தாமதமாய் வருவதில்....மன்னிப்பு எல்லாம் கிடையாது. தாங்கள் எங்களுக்கு நல்ல நல்ல பாடல்கள் வழியாக நல்ல பாடல்கள் வழங்கி பதிவுகளாக எழுதி, எங்கள் தமிழை வளர்த்தால் அதுதான் தங்களுக்கு நாங்கள் வைக்கும் அன்பான வேண்டுகோள்...(தண்டனை???!!!!!!)

      அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆசானே!

      நீக்கு
  31. சனி,ஞாயிறுகளில் நிதானமாக படிக்க வேண்டும் என்று நினைத்தேன் முடியாமல் போய்விட்டது. நான் தங்களின் இந்த அனுபவத்தை படிக்கும்போதே, நான் தலைவா படத்தில் நடித்த அனுபவத்தை மனக்கண்ணில் வைத்துக்கொண்டு தான் படித்தேன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. முதன்முறையாக காமிரா முன்பு நிற்கும்போது, டேக்குகள் சர்வ சாதாரணமாக போய்க்கொண்டே தான் இருக்கும்.
    பொது இடங்களில் கூறும் படம் எடுப்பதற்கான விதிமுறைகளை இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.
    அனைவருமே நன்றாக நடித்திருக்கிறீர்கள். நன்றாக இயக்கிய இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் வாழ்த்துக்கள்.

    என்னால் இதில் நடிக்க முடியவில்லையே, மேலும் குடந்தையாருக்கு உதவி இயக்குனராக இருக்க முடியவில்லையே என்று தான் எனக்கு மிக பெரிய குறை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! நண்பரே! பரவாயில்லை தங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கின்றதோ அப்போது வாசித்தால் போதுமே! ஆமாம் நண்பரே நாங்க்ள் உங்கள் தலைவா அனுபவம் பற்றியும் சொல்லி நியந்த்துக் கொண்டோம். நீங்கள் சொல்லியிருப்பது உண்மையே! வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

      நண்பரே வருத்தம் வேண்டாம்.நீங்கள் ஏப்ரலில் இந்தியா வரும் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள். துளசியின் அடுத்த படத்தில் பங்கு பெற வாய்ப்புண்டு.

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  32. பதிவர் சந்திப்பில் குறும்படம் பார்த்து ரசித்தோம்
    அதை படமாக்கப் பட்ட சிரமங்கள் குறித்து தங்கள் பதிவின்
    மூலம் அறிய இத்தனை சிரமத்திலும் படம் நேர்த்தியாக
    வந்திருப்பது மிக்க மகிழ்வைத் தருகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார். தாங்கள் படத்தை ரசித்ததற்கும், சிரமங்களைப் புரின்டு கொண்டு வாழ்த்தியதற்கும்!

      நீக்கு