திங்கள், 9 டிசம்பர், 2013

தகராறு திரைவிமர்சனம்




அறிவாள் எதற்கென்று இல்லாமல் எல்லாவற்றிற்கும், தூக்கிக்கொண்டு ஓடி தகராறு செய்யும் கும்பல், அது போல் அவர்களுக்கும் பின்னே அறிவாளைத் தூக்கிக் கொண்டு வரும் கும்பலுக்கு, பலியாவார்கள் என்ற கசப்பான உண்மையைத்தான் இப்படம் வெளிப்படுத்துகிறது.  வாழ்தப்படும் வன்முறையைப் பின்பற்றும் நாயகர்களோ, நாயகிகளோ இப்படத்தில் இல்லை.  எல்லோரும் வீழத்தான் செய்கிறார்கள். அந்தச் செய்தி இப்படத்தில் மிகவும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது.


சிறு வயதிலேயே அனாதைகளாக்கப்ட்ட நால்வர்களின் உண்மையான நட்பும், வழிகாட்ட யாருமின்றி தவறான வழிகளில் வாழும் அவர்கள் வாழ்வில் குறுக்கிடும் ஒரு பெண்ணால் வரும் பிரச்சினையும் தான் இப்படம். அந்தப் பெண்தான் பிரச்சினை என்பதனை இறுதி வரை சஸ்பென்ஸ் உடையாமல் கொண்டு சென்றது பாராட்டிற்கு உரியதுதான். அதுபோல், படம் தொடங்கி சில நிமிடங்களிளேயே நான்கு நண்பர்களில் ஒருவரைக் கொல்லச் செய்து (கொலை செய்யப்படுவதைக் காண்பிக்காமல்) அந்த ஒருவர் யார் என்று அறிய இன்டெர்வல் வரை உட்கார்ந்து flash back  பார்க்க வைத்ததும், திரைக்கதையில் செலுத்தப்பட்ட கவனத்தைக் காண்பிக்கிறது.  நாயகனிடம், காதல் பைத்தியம் பிடித்து, அவன் பின் மாலையும், தாலியும் கொண்டு ஓடும் நாயகிக்கு, அவனிடம் இந்த அளவுக்குக் காதல் தோன்ற strong  ஆன ஓரிரு சம்பவங்களைக் காண்பித்திருக்கலாம். (யோசிக்கும்போது இடுப்பைப் பிடித்து தூக்கியது மட்டும்தான் ஞாபகத்துக்கு வருது.  ஒருவேளை இடுப்பு ஒரு மர்ம ஸ்தானமோ?!!)


படத்தில வரும் 2 அழுத்தமான கதாபாத்திரங்களைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.  “சிங்கம் மீசையுடன் வரும் போலீஸ் அதிகாரி.  “இதுதாண்டா போலீஸ்னு சொல்லவைக்கும் தைரியமிக்க ஒரு கதா பாத்திரம். ஆத்திரத்தைக் காண்பிக்கிறேன் பேர்வழி என்று முகத்தை என்னென்னவோ பண்ணுவதை அவர் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.  பிறகு நெஞ்சில் மிதிபட்டும்,  காலில் வெட்டுப்பட்டும், செய்நன்றி மறவாத குணத்தால் நால்வரும்  (மூவரும்) செய்த குற்றத்தை மறந்து மன்னிக்கும் ரவுடிகளின் மாணிக்காமாகும், மறைந்த நம் வினு சக்கரவர்த்தியை உருவில் மட்டும் நினைவுக்கு கொண்டுவரும் ஒரு கதாபாத்திரம்.  அழுத்தமான அந்தக் கதாபாத்திரங்களுக்குத் துணை பொவது சராசரியான அவர்களது நடிப்புத்தான் என்றாலும் நினைவில் தங்கி நிற்கும் அளவிற்கு அந்த இரு கதா பாத்திரங்களும் சக்தி வாய்ந்தவையே.  நாயகன்-அருள்நிதி, நாயகி-பூர்ணா தங்கள் கதாபத்திரத்தை ஓரளவிற்கு செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் போன்றவர்களைப்போல் தனக்கென்று உள்ள ஒரு ஸ்டைலில் கவனம் செலுத்தி நடிப்பை ஸீரியஸாக எடுத்தால் ஒரு safe ஆன இடத்தை அருள்நிதி பிடிக்கலாம்.  இல்லையேல், மு.க. முத்து அங்கிளைப் போல் ஒரு சில படங்கள் மட்டுமே செய்து அருள்நிதியும் காணாமல் போகலாம். மதுரையில் நடக்கின்ற கதைகளில் எல்லாம் வரும் கதா பாத்திரங்கள் அறிவாள்களைத் தூக்கிக் கொண்டு ஓடவேண்டும் என்ற பிடிவாதம் திரையுலகில் இருந்து எப்போது இல்லாது ஆகுமோ? தெரியவில்லை.. படத்திற்குப் போகின்றவர்கள் கவனத்திற்கு. மறந்தும் கூட கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் படம் பார்க்கப் போக்க் கூடாது என்று மட்டுமல்ல, படம் பார்த்த பின்னும் குறைந்தது 3 மணி நேரத்திற்கு அவற்றைக் காணவோ கையில் பிடிக்கவோக் கூடாது. ஒருவேளை அதை விபரீதமாக உபயோகிக்கத் தூண்டுதல் ஏற்பட வாய்ப்புண்டு.  ஜாக்கிரதை!! ஆபத்தான ஒரு அறிவாள் நோய் ஒரு வேளை உங்களைத் தாக்கலாம். Be Careful!!  தகராறு தகராறுதான்!!


(தகராருக்கு திரை விமர்சனம் எழுத வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அதில் காண்பிக்கப்படும் ஒரு சில சம்பவங்கள்  என்னை எழுதத் தூண்டியது.)


4 கருத்துகள்:

  1. மர்ம ஸ்தானம் என்பது இப்போது தான் தெரியுமா ஐயா... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  2. ஹா! ஹா! உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் (!!?) அதான் மர்ம ஸ்தானம் னு சொன்னதுக்கும் நன்றி DD நண்பரே!!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    பட விமர்சனம் அருமையாக எழுதியுள்ளிர் மேலும் தொடர வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. நன்றி நண்பரே! வருகைக்கும், ஊக்கத்திற்கும்!! நன்றி!!

    பதிலளிநீக்கு