வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

பரோட்டா கார்த்திக் - லிங்க்

    
மேலே உள்ள படம் மலையாளத்தில்-அதில் முதல்வராக நடுவில் இருப்பவர் துளசி பணி புரியும் பள்ளி முதல்வர் திரு ஜோஸ் அவர்கள். கீழே உள்ள படம் தமிழில்-முதல்வராக நடுவில் திரு ராயச் செல்லப்பா அவர்கள், ஆசிரியர்களாக அவரது பக்கத்தில் திரு கோவை ஆவி, நடுவில் துளசியின் ஆசிரிய நண்பர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள், இந்த ஓரத்தில் நம் வலைச் சித்தர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள்

   இந்தக் குறும்படத்தின் இயக்குனரும், நண்பருமான திரு துளசிதரனைப் பற்றியும், இந்தக் குறும்படம் தமிழில் உருவானது எப்படி என்பதைப் பற்றியும் ஒரு சிறு முன்னோட்டம்.

  துளசிதரன். 29 வருடங்களுக்கு முன், கனாக்காணும் கல்லூரிக் காலத்தில் எனக்கு ‘நட் பூ’ வாகி, நண்பராகி, இன்று வலைப் பூ விலும், அந்தப் பூ, நட்பூ வளர்ந்து வாசம் வீசிக் கொண்டிருக்கின்றது!  பூக்கள் வாடி விடலாம். ஆனால் இந்த நட்பூ எத்தனை வருடங்கள் ஆனாலும் வாடாமல் நறுமணம் கமழும், இறைவனின் அருள் இருந்தால்! நம்புகின்றோம்! ஏனென்றால் ஆண், பெண் நட்பு என்பது அரைக் கிழங்களானாலும், முதிர்ந்த நட்பாக இருந்தாலும், அறிவும், கலைகளும், ஒத்த சிந்தனைகளும் சார்ந்த நட்பாக இருந்தாலும், அவ்வளவு எளிதல்ல இந்த சமூகத்தில்.  அது கத்தி மேல் நடக்கும் சர்க்கஸ் வித்தை போன்றது!

   இதோ, உங்கள் எல்லோருடனும் எங்கள் வலைப்பூ வழியாகப் பேசுகின்றேன் என்றால், இத்தனை வருடங்கள் என் எழுத்து, கலைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளி வைத்து, நல்ல வேலை கிடைத்தும் அதை ஏற்றுக் கொள்ளமுடியாத சூழலில் இருந்து, ஒரு சராசரி இந்தியப் பெண்ணாக வாழ்ந்து வந்த நான், இப்போது வலைப்பூவில் எழுதுகின்றேன் என்றால் அதற்கு முதற்காரணம் இறைவனின் அருள். இரண்டாவது காரணம் நண்பர் துளசி என்றால் அது மிகையல்ல! இரண்டாவது காரணகர்த்தாவாக இன்னும் ஒருவர், எனக்கு மிகவும் உறுதுணையாக உள்ளார் என்றால் அது 24 வயதாகும் எனது ஒரே மகன்! கால்நடை மருத்துவர். தற்போது Ontario, கனடாவில், க்ளினிக்கல் ட்ரெயினிங்க் எடுத்துக் கொண்டிருப்பவர். அடுத்தது கணவர்.

   எங்களது கல்லூரிக் காலத்தில், துளசி, எழுத்து, நாடகம், நடிப்பு, சொற்பொழிவு, மோனோ ஆக்டிங்க் (துளசி மிக நன்றாகச் செய்வார்), வானொலி நிகழ்சிகள், படிப்பு என்று எல்லாவற்றிலும் மிளிர்ந்தவர் மட்டுமல்ல கல்லூரியில் மிக நல்ல பெயருடன் வலம் வந்தவர்.  எனது ஆர்வங்களும் படிப்பு மட்டுமல்லாது, கலைகளிலும் இருந்ததால் ஏற்பட்ட நட்பு, பின்னர் கல்லூரிக் காலம் முடிந்ததும்,  வாழ்க்கைப் பயணத்தின் பாதை மாறி வேறு வேறு ஓடங்களில் பயணித்து, 28 வருடங்களுக்குப் பின், சென்ற வருடம், 2013, ஏப்ரல் மாதம் மாஇந்த உலகம் சிறியதுதான் என்பதை நிரூபிப்பது போல எங்கள் தொடர்பு மீண்டும் துளிர்த்த போதுதான் எங்களுக்குத் தெரிந்தது, இத்தனை வருடங்கள் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருந்தாலும், அதே நட்பு மிகவும் பசுமையாக, மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்தான் என்பதைப் பறை சாற்றுவது போல இருந்திருக்கின்றது என்று. அன்றைய கலை சார்ந்த கனவுகள், இதோ வலைப்பூ மூலம், எங்களுக்குக் கிடைத்த வலை நண்பர்கள் உங்கள் எல்லோரது நட்புடனும், அன்புடனும், ஆதரவுடனும் ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்கியுள்ளோம்.  உங்கள் அனைவருக்கும் எங்கள் முதற்கண் வணக்கம்! நன்றி!
குடந்தையூர் ஆர்.வி.சரவணன்

வலைப்பூ பிறந்த புதிதில், முதலில் அறிமுகமானவர் சரவணன் சார், வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடம் ஆனாலும் இன்னும் இருவரும் தவழும் பருவத்தில் தான் இருக்கின்றோம். எழுந்து நடக்க ஆரம்பிக்கவில்லை!  அப்படித் தவழ்ந்த பொழுது, நண்பர் குடந்தையூர் சரவணன் அவர்களின் வலைப்பூ பக்கம் வர நேர்ந்தது. பார்த்தால் நண்பரும், தான் குறும்படம் எடுக்க விரும்புவதாகவும், யாராவது எடுப்பதாக இருந்தால் அதில் பங்கு பெற்றுக் கற்க விரும்புவதாகவும் அறிவித்திருக்க, நாங்கள் அவரைத் தொடர்பு கொள்ள இதோ அவரை இந்தக் குறும்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கவும் வைத்துவிட்டார் நண்பர் துளசி. 

பின்னர் ஜோக்காளி தளத்தின் பதிவர் திரு பகவான் ஜி எங்களுக்கு அறிமுகமாகி, தமிழ்மணத்தில் எங்கள் வலைத்தளத்தை அறிமுகப்படுத்த அறிவுறுத்தி, அதில் ஏற்பட்ட பிரச்சினையை சரி செய்ய திரு திண்டுக்கல் தனபாலனை அறிமுகப்படுத்த, அவர் எங்களுக்கு அறிமுகமாகி, உதவி செய்ய, துளசி அவரை இந்தப் படத்திலும் நுழைத்து விட்டார். பின்னர் திரு ராயச் செல்லப்பா சார் அவர்கள் தாமாகவே எங்களுக்கு அறிமுகமாகி எங்களை ஊக்கப்படுத்த, அந்த நட்பு, அவரும் இதில் பங்கு பெற எங்களுக்கு உதவியது. குடந்தையூர் சரவணன் சார் மூலமாக, மின்னல் வரிகள் வலைத்தள, வாத்தியார் என்று அன்புடன் அழைக்கப்படும் திரு பால கணேஷ் சார், பயணம் வலைத்தள கோவை ஆவி, திடங்கொண்டு போராடு வலைத்தள சீனு, ஸ்கூல் பையன் வலைத்தள சரவணன், சேம்புலியான் வலைத்தள ரூபக் ராம், கவியாழி கண்ணதாசன் என்று எல்லோரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க, கோவை ஆவியும் இக் குறும்படத்தில் பங்கு பெறும் அளவு வளர்ந்தது. சரவணன் சாரின் புத்தக வெளியீட்டு விழா முலமும், ஆவியின் ஆவிப்பாவும், புலவர், சுப்பு தாத்தா, என்று அறிமுகம் விரிந்து, இதோ இப்போது திரு பால கணேஷ் அவர்கள் மூலம் சேட்டைக்காரன் தள பதிவர் திரு வேணு கோபாலன் அவர்கள் இந்தக் குறுந்தகடை வெளியிடும் வரை விரிவடைந்தது. நண்பர்கள் குடந்தையூர் சரவணன், ஆவி, சீனு அவர்களின் மூலம் திரு சுரேகா, பதிவர் திரு கேபிள் சங்கர், க்ரிட்டிக் திரு கே.ஆர்.பி செந்தில் அவர்களின் அறிமுகமும் கிடைக்கப் பெற்றோம். வளைத்தளத்தில் நேரில் காணாமல், பல நட்புகள் எங்களை ஊக்கப்படுத்தி, பின்னூட்டம் இட்டு, உற்சாகப்படுத்தும் அளவு விரிவடைந்துள்ளது. உங்கள் எல்லோருக்கும் எங்கள் வணக்கங்களும், நன்றிகளும்.

நண்பர் துளசி ஆங்கில ஆசிரியாராகப் பாலக்காட்டில் பணிபுரிகின்றார். கேரளாவில், திரைப்படம் எடுப்பது பற்றி பாடத் திட்டத்தில் இருப்பதால், மாணவர்கள் அதை அனுபவப் பூர்வமாக புரிந்து கொள்ள, மாணவர்களுக்காகக் கடந்த 5 வருடங்களாகத் தன் ஒரு மாத ஊதியத்தை அர்ப்பணித்துத் தன் சக ஆசிரியர்கள், மாணவர்கள், குடும்ப உறவினர்கள் உதவியுடன், எந்த வித வியாபார நோக்கமும் இல்லாமல் குறும்படம் எடுத்து வருகின்றார். (இது பற்றி நான் எழுதுவது அவருக்குத் தெரியாது. வலது கை செய்வது இடது கைக்குத் தெரியக் கூடாது என்பது அவரது கொள்கை.) இந்தக் குறும்படம் பரோட்டாக் கார்த்திக்கையும் சேர்த்து 4 படங்கள் எடுத்திருக்கின்றார். 

இதன் உட் கருத்து நமது நண்பர் ஆவி அவர்கள் முக நூலில் நச் என்று ஒரே வரியில் சொல்லியிருப்பது போல, அதாவது “சமூகத்தின் அவலங்களைத் தட்டிக் கேட்க காந்தியடிகளும், பெரியாரும் வர வேண்டிய அவசியமில்லை. நல்ல மனம் கொண்ட பள்ளிச் சிறுவர்களே போதும் என்ற உயரிய கருத்தை வலியுறுத்தும் படம்." என்பதுதான். இந்தக் குறும்படம் எடுக்கத் தூண்டிய அடிப்படை உண்மை சம்பவத்தைப் பற்றி ஏற்கனவே எங்கள் வலைத்தளத்தில் துளசி எழுதி உள்ளார்.  அதன் லிங்க் இதோ.
 அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவமாகச் சிறிது கற்பனையும், உண்மைச் சம்பவங்களும் (வள்ளி எனும் பெண்ணிற்கு வீடு கட்டி கொடுப்பது, மைமூனா எனும் 16 வயதே ஆனப் பெண்ணின் திருமணத்தை நிறுத்துவது போன்றவை வசனங்களில்) கலந்து எடுக்கப்பட்டதுதான் இந்தக் குறும்படம் "பரோட்டா கார்த்திக்". கல்வி என்பது ஒரு நல்ல மனித நேயம் மிக்க சமுதாயத்தை உருவாக்குவதே. "Education is for the development of overall personality".

 இதற்கு முன் எடுக்கப்பட்ட 3 படங்களும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டவை. அவர் ஆங்கிலத்தில் எடுக்கும் காரணம், படத்தைப் பார்ப்பதற்கு முன்னும், பார்த்த பிறகும், மாணவர்களை உட்படுத்தி சில பயிற்சிகள் – உதாரணமாக, படம் பார்க்கும் முன் அந்தப் படம் இது போன்று முன்னோட்டமாக நடத்தப்படுவது ஏதாவது ஒரு பள்ளியில்.  அந்த விழாவில் மாணவர்களையே, படத்தைப் பற்றி ஒரு உரையாடல், வரவேற்புரை, நன்றி உரைத்தல் போன்றவற்றை ஆங்கிலத்தில் பேச வைத்து, பின்னர் படம் பார்த்த பின் அதனைக் குறித்து விவாதம், கருத்துரை எழுதுதல், நடித்தவர்களிடமும், இயக்குநரிடமும் நேர்முகம் போன்ற பல பயிற்சிகளை, மாணவர்களை ஆங்கிலத்தில் பேச, எழுத ஊக்கப்படுத்தி, அடிப்படை ஆங்கில அறிவை வளர்க்க ஒரு interactive session போன்ற பயிற்சிகள் அளிப்பது. தற்போது அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கச் செல்ல முயற்சிக்கும் மாணவர்களை, ஆங்கிலப் படங்களைப் பார்த்து அவர்களது உச்சரிப்பைக் கேட்க, கற்க அறிவுறுத்துவது போன்று எனக் கொள்ளலாம்.  ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாத நாடுகளில், English as second language  இருக்கும் நாடுகளில் ESL வகுப்புகளில் அந்த மொழியை அதன் நுட்பங்களை அறிய மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுவது போன்று, இங்கு மாணவர்களை, இந்தியப் பின்புலத்தில், இது போன்று VISUAL AIDS மூலம் ஊக்கப்படுத்ததி முயற்சிக்கலாமே என்ற நல்லெண்ணத்துடனும் அவர் எடுக்கும் முயற்சிதான் இது!

   இப்போது எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், இந்த முறை ஆங்கிலத்தில் அல்லாமல் மலையாளத்திலும், தமிழிலும் எடுக்கப்பட்டதால், தமிழில் வசனங்கள் டப்பிங்க் செய்யப்பட்டிருக்கும்.  நம் பதிவர்களும் துளசியும் மட்டும் அவர்களது சொந்தக் குரலில் தமிழ் வசனங்கள் பேசியிருப்பார்கள். மாணவர்களுக்குத் தமிழில் டப்பிங்க் பேச, அங்கு பாலக்காட்டில் கிடைத்த ஒரு சில தமிழ் பேசும் மாணவர்களை வைத்து டப்பிங்க் செய்யப்பட்டுள்ளதால், உதட்டசைவிற்காகத் தமிழில் எழுதப்பட்ட வசனங்கள் டப்ப்பிங்க் செய்யப்பட்டிருப்பதால், பார்பவர்களுக்கு, பிற மொழிப் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டால் வரும் ஒரு உணர்வு வரலாம். மட்டுமல்ல, புகைப்படத்திலும், எடிட்டிங்கிலும் சிறு குறைபாடுகள் காணப்படலாம். எல்லோரும் அதைப் பொருட்படுத்தாது பார்க்க வேண்டிக் கொள்கின்றோம். 

  இதற்கு முன் எடுக்கப்பட்ட படங்களில் மூன்று - ஆங்கிலம் - மஹாமுடி த க்ரேட், பரோல் (மலபார் ஃபில்ம் சொசைட்டி நடத்திய குறும்பட விழாவில் பங்கு பெற்று இரண்டாவது பரிசை வென்றது), கார்பென்டர் த க்ரேட் - ஏற்கனவே யூட்யூபில் உள்ளன. அவற்றில், முதல் இரண்டில் மாணவர்களின் செயல்பாடுகளும் உள்ளன. கார்பென்டர் த க்ரேட், தமிழ் சப் டைட்டிலுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படத்தின், மாணவர்களின் செயல்பாடுகளும், கலந்துரையாடலும் (கீதா/கோமளா, துளசி இருவரும் அதில் வருவார்கள்.) உள்ள காணொளியும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. துளசிதரன் தில்லைஅகத்து, யூட்யூப் என்று ஆங்கிலத்தில், கூகுளில் தேடினால் எல்லாக் காணொளிகளும் கிடைக்கும்.

   இந்தக் குறும்படம்/படங்களைப் பார்த்துவிட்டு தங்களது கருத்துக்கள் எதுவாயினும் அவற்றை வரவேற்கின்றோம்.  எங்கள் வலைத்தளத்திலும் பின்னூட்டம் இடலாம். பதிவாகவும் தாங்கள் எழுதலாம். எங்களுக்குத்  தங்கள் கருத்துக்களும், ஆதரவும், எங்களை மேம்படுத்திக் கொள்ளவும், இன்னும் நல்லமுறையில் படங்கள் எடுக்கவும் எங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை இங்குத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
     உங்கள் எல்லோரது வாழ்த்துக்களுக்கும், ஆதரவிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!


பரோட்டா கார்த்திக்கின் லிங்க் 
https://www.youtube.com/watch?v=3PJRBL7jdDA

பின் குறிப்பு: கீதாவைக் காண வேண்டும் என்று கேட்டவர்களுக்கு:  கீதா இந்தக் குறும்படத்தில் இறுதிக் காட்சியில் துளசியை மேடைக்கு அனுப்பும் காட்சியில் இருக்கின்றார்....கார்பென்டர் த க்ரேட் - மாணவர்களின் செயல்பாடுகளுடன் உள்ள காணொளியிலும் கீதாவைக் காணலாம். 



46 கருத்துகள்:

  1. பாலக்காடு ராஜேஸ் அவர்களின் மல்ட்டி ஜிம்னேசியம் கண்டு வந்தேன். நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர் ஜி! தங்கள் கருத்து கண்டோம். யூட்யூபில். பதில் கொடுத்துள்ளோம். மிக்க மிக்க நன்றி ஜி!

      நீக்கு
  2. வீட்டிற்கு போய் நிதானமாக படம் பார்த்து விட்டு, கருத்து இடுகிறேன்.

    இத்தனை வருடங்களுக்கு பிறகு மீண்டும் துளிர்த்த உங்கள் இருவரின் நட்பைப் பார்த்து மிகவும் ஆச்சிரயமடைந்தேன். இந்த நட்பு என்றும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.

    "//துளசி, எழுத்து, நாடகம், நடிப்பு, சொற்பொழிவு, மோனோ ஆக்டிங்க் (துளசி மிக நன்றாகச் செய்வார்), வானொலி நிகழ்சிகள், படிப்பு என்று எல்லாவற்றிலும் மிளிர்ந்தவர் மட்டுமல்ல கல்லூரியில் மிக நல்ல பெயருடன் வலம் வந்தவர்//" - துளசி சாரிடம் இருக்கும் இத்தனை திறமைகளையும் இன்று தான் தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சொக்கன் சார்! தாங்கள் நிதானமாகப் பார்த்துவ் கருத்துச் சொல்லுங்கள். மற்ற படங்களும் நேரம் கிடைக்கும் போது பார்த்து கருத்துச் சொல்லலாம் சார்.

      மிக்க நன்றி சார்!

      நீக்கு
    2. அனுப்புனர்.
      Mr.KILLERGEE

      பெறுனர்.
      திரு.சொக்கன் சுப்பிரமணியன் அவர்கள்.

      பொருள்:
      நிதானமாக பார்ப்பதற்க்கு என்ன காரணம் ? போதையில இருக்கியலோ ?

      நீக்கு
    3. அன்பு நண்பர் கில்லர்ஜீ, தங்கள் மடல் கிடைத்தது. அதில் எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை - போதை என்று ஒன்றை நான் கேள்விப்பட்டதேயில்லை. அதனால் எனக்கு பதில் கூற தெரியவில்லை.

      நீக்கு
  3. பெருமையாக இருக்கின்றது சகோதரா திறமை மிக்க சகோதரனே
    தங்களின் நட்பும் இன்றுபோல் என்றுமே தொடரவும் நண்பர்களின்
    முயற்சியினால் வீறு நடை போடும் இக் குறும்படம் பார் போற்ற
    வெற்றி வாகை சூடி வரவும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்கள் வாழ்த்துக்களுக்கு!

      நீக்கு
  4. ஓ...நான் போய் பார்க்கிறேன். எப்போ என்று காத்திருந்தேன் படம் பார்க்க. ஐயாவை பற்றி இப்போது நிறைய தெரிந்து கொண்டோம். சகலகலா வல்லவர் என்பது மிகையல்ல.

    நட்பு கைகோர்த்து நடக்க நாளும்
    நலம் என்றும் தரும்.

    வாழ்க உங்கள் நட்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  5. பரோட்டா கார்த்திக் - குறும்படத்தை நிதானமாகப் பார்த்தபின் தோன்றும் கருத்து இதுவே: பிரின்சிபாலாக நடித்தவர், இன்னும் சற்று கோபக்குரலில் பேசியிருக்கவேண்டாமோ? அல்லது அத்தனை நீளமான வசனம் பேசாமல், வெறும் கண்ணை உருட்டியே சிவானந்தன் சாரை மிரட்டியிருக்கவேண்டாமோ? தொலையட்டும், அடுத்த படத்திலாவது ஒழுங்காக நடிக்கிறாரா என்று பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா...சார் பிரின்சிபாலின் வசனம் எதுவோ அதற்கு ஏற்றார் போலத்தானே நடித்துள்ளார் அவர்...... ம்ம்ம்ம் கொஞ்சம் வாய்ஸ் மாடுலேஷன் செய்திருக்கலாம் தான். ஆனால் அந்தக் காட்சியே ஒவ்வொருவருக்கும் 4 டேக் மேல் வாங்கியதே சார்....பரவாயில்லை..... நன்றாகத்தான் செய்துள்ளதாகத் தெரிகின்றது.....அடுத்த முறை இன்னும் நன்றாகச் செய்யலாம் சார்....

      நீக்கு
  6. எனக்கு ஒரு சிறு குழப்பம். இந்தப் பதிவினை எழுதியிருப்பது (ஒரு பெண் என்று தெரிகிறது) யார்? விழாவில் பேசியதா? ("இந்தக் குறும்படத்தின் இயக்குனரும், நண்பருமான திரு துளசிதரனைப் பற்றியும், இந்தக் குறும்படம் தமிழில் உருவானது எப்படி என்பதைப் பற்றியும் ஒரு சிறு முன்னோட்டம்." என்ற வரிகளை வைத்து)

    பரோட்டா கார்த்திக் டவுன்லோட் செய்கிறேன். பார்த்து விட்டு அப்புறம் கருத்தைப் பதிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார் பெண்தான். கீதா/கோமளா. விழாவில் பேசியதுதான் ஆனால் அதிலிருந்து சில பகுதிகள் நீக்கப்பட்டு இங்கு பதியப்பட்டுள்ளது. அங்கு வராதவர்களுக்காக....சார் நீங்கள் வந்திருந்தீர்களா?!

      மிக்க நன்றி சார்!

      நீக்கு
  7. உங்களின் நட்பு ஆலமரமாக செழிக்கட்டும்! உடல் நலன் சீராக இல்லை! வலைதளம் வருவது குறைத்துக் கொண்டுள்ளேன்! விரைவில் காணொளி பார்த்து கருத்திடுகிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ்!

      தங்கள் உடல் நலத்திற்கு என்னாயிற்று? உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். நண்பரே!

      நீக்கு
  8. படத்தைப் பார்த்து ரசித்தேன் ,கார்த்திக் டப்பிங் மட்டும் கொஞ்சம் உறுத்தலாக சில இடங்களில் தெரிந்தது .அனைவரின் நடிப்பும் யதார்த்தம் !
    அறிமுக விழாவில் என் பெயரும் உச்சரிக்கப் பட்டிருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி !
    தொடரட்டும் உங்கள் பணி!
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜி! ஆமாம், மாணவர்களுக்கான டப்பிங்க் கொஞ்சம் உறுத்தல்தான்....அடுத்த முறை நிகழாமல் கவனமாக இருக்கின்றோம்!

      மிக்க நன்றி ஜி!

      நீக்கு
  9. குறும்படத்தினைப் பற்றிய மிக விரிவான விளக்கம் கண்டேன். அதில் பங்கு பெற்ற குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    குறும்படம் பார்த்துவிட்டு பின் கருத்தளிக்கிறேன். (இறை நாட்டம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் பாராட்டுகளுக்கு! நிச்சயமாக கருத்தை வெளியிடுங்கள் எங்களுக்கு உதவியாக இருக்கும்.

      நீக்கு
  10. சூப்பர்..! இப்போதே ஷேர் செய்து விடுகிறேன்..! :) :)

    பதிலளிநீக்கு

  11. வணக்கம்!

    வலையொளி வண்ணம் வடித்தவுரை கண்டேன்
    கலையொளி வண்ணம் கமழ்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  12. அடடா நேரம் இன்மை காரணமாக தாமதமாக வந்து விட்டேன்.ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தேன். பார்த்து விட்டு கருத்து இடுகிறேன்.
    மீண்டும் நட்பு மலர்ந்தது மகிழ்ச்சியே. தொடர வேண்டும் இன்று போல் என்றும் என வாழ்த்துகின்றேன்....! பங்கு பற்றிய அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.
    சகோதரர் தகைமைகளையும் புனிதமான நட்பும் கண்டு பெருமிதமும் மகிழ்வும் கொள்கிறேன் தங்களின் நட்பு கிடைத்தமைக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி! பார்த்துவிட்டுக் கருத்து இடுங்கள் சகோதரி! மிக்க நன்றி!

      நீக்கு
  13. குறும்பட ம் மேலும் எடுக்க வாழ்துகள்!

    பதிலளிநீக்கு
  14. இப்பொழுது தான் பார்த்தேன்.
    அருமையான கருத்துள்ள ஒரு குறும் படம். இந்த 20 நிமிட படத்தை எடுப்பதற்கு எத்தனை நாட்கள் ஆனது என்று தெரியவில்லை , ஆனால் தங்களின் உழைப்பு நன்றாக தெரிகிறது.

    பின்னணி இசை - சூப்பர்.
    தங்களின் மேக்கப் - உங்களை கண்டுப்பிடிக்க முடியலை.

    அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    ஒரு சில இடங்களில் பள்ளி மாணவர்கள் வசனம் பேசும்போது, கொஞ்சம் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கிற மாதிரி தோன்றியது. அதே மாதிரி அரசியல்வாதியாக நடித்தவர் பேசும்போது ஒரு சில இடங்களில் தடுமாறியிருக்கிறார் . இம்மாதிரி ஒரு சில சிறு தவறுகளைத் தவிர, படத்தில் வேறு எதுவும் குறைகள் தெரியவில்லை.

    உங்களின் முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும். மேலும் நீங்கள் இது போன்ற குறும்படங்களை இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை இயக்கும்போது 10-15 நிமிடங்களுக்குள் இயக்கி, அதனை போட்டிகளுக்கு அனுப்புங்கள். கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.

    நான் இங்கு மேடையேற்றிய ஒரு நாடகத்தை 20-25 நிமிட குறும்படமாக எடுக்க முடியுமா என்று குறும்படங்களை இயக்கும் ஒரு ஆங்கிலேயரை கேட்டேன், அதற்கு அவர் குறும்படங்கள் எல்லாம் 10 நிமிடங்கள் அல்லது அதிகபட்சம் 15 நிமிடங்களுக்கு மேல் செல்லக்கூடாது என்று கூறினார். அப்பொழுது தான் அவைகள் குறும்பட வட்டத்துக்குள் வரும்,மேலும் குறும்பட போட்டிகளுக்கு அவைகளை அனுப்ப முடியும் என்று கூறினார்.

    விரைவில் மற்றுமொரு குறும்படத்தை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மிக்க நன்றி சொக்கன் சார்! எங்கள் எல்லா குறும்படங்களும் 2 நாட்களில் எடுத்துவிடுகின்றோம். சார் இந்தப் படம் மலையாளத்திலும் எடுக்கப்பட்டது. மாணவர்களுக்காக. அதனால் அந்த மாணவர்களுக்கு டப்பிங்க் பேச பாலக்காட்டில் தமிழ் தெரிந்த மாணவர்கள் மிகவும்குறைவு. கிடைத்த மாணவர்களை வைத்து டப்பிங்க் பேச வைத்தோம். அதனால் தான் அந்த ஒரு நெருடல்.

      கண்டிப்பாக எடுப்போம் சார். எங்கள் பரோல் படம், மலபார் ஃபில்ம் சொசைட்டி நடத்திய குறும்படம் போட்டியில் 2 வது பரிசு வென்றது கழிந்த வருடம். கேரளாவில் நடக்கும் குழந்தைகள் திரைப்பட விழாவில் படங்கள் கலந்து கொள்ளும். நீங்கள் பரோல் படமும் பார்க்கலாம் சார். நேரம் கிடைத்தால். மற்ற படங்களும். thulasidharan thillaiakathu,youtube என்ற்று கூகுளில் இட்டால் வரும் சார். இப்போது கார்பென்டர் த க்ரேட் ஏற்றம் ஆகிக் கொண்டிருக்கின்றாது. பரோட்டா கார்த்திக் தவிர மற்ற படங்கள் , மாணவர்களின் செயல்பாடுகளுடன் இருக்கின்றன. பார்த்துவிட்டு சொல்லுங்கள் நேரம் கிடைத்தால்....

      தாங்கள் சொல்லியிருப்பது சரியே. குறும்படங்கள் 10, 15 நிமிடங்கள்..இங்கு அவை 1/2 மணி நேரத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. இந்தியாவில் பல இடங்களில் குறும்பட போட்டிகள் நடக்கின்றன. இங்கு 10, 15, 20, 30, 40, 45 நிமிட குறும்படங்கள் என்று வரிசைப் பட்டியல் இருக்கின்றன. ரூல்ஸிலும் இது போன்று கொடுத்துவிடுகின்றார்கள்.

      கலைஞர் டிவியில் ஞாயிறு அன்று 11 மணிக்கு நாளைய இயக்குனர் என்ற ஒரு நிகழ்சி, குறும்படங்கள் 10 நிமிடம் வெளியிடப்படுகின்றன. இயக்குனர்கள் சுந்தர் சி, இயக்குனர் வசந்த் இப்பொது ஜட்ஜஸ். சில படங்கள் நல்ல ஹைடெக் காக நச் சென்று இருக்கின்றன.

      எங்கள் பட்ஜெட் லோ பட்ஜெட் என்பதால் வெளி ஆர்டிஸ்ட் கிடையாது. இரண்டாவது, மாணவர்களுக்கு என்பதால், மாணவர்கள், சக ஆசிரியர்கள் பங்குபெற்று இதை எடுக்கின்றோம்.

      மிக்க நன்றி சொக்கன் சார் தங்களது விரிவான கருத்துரைக்கும், விமர்சனத்திற்கும். அடுத்தப் படம் எடுக்கும் போது இந்தக் குறைகளை தவிர்க்கின்றோம்.

      தங்கள் ஆதரவும், ஊக்கமும் மிகுந்த மகிழ்சி அளிக்கின்றது. நாங்கள் எடுக்கும் சமயம் தாங்கள் இந்தியாவில் இருந்தால் தங்களையும் அதில் உட்படுத்திவிட்டால் போச்சு! தங்களுக்கு நல்ல அனுபவமும் உள்ளதால்...எங்களுக்கும் நல்லதுதானே சார்....என்ன சொல்றீங்க சார்?! பெரும்பாலும் ஏப்ரல் மாதம் இறுதியில் 2 நாட்கள் இருக்கும்.

      மிக்க நன்றி சார்!

      நீக்கு
  15. படத்தை பார்த்ததும் மிகவும் வருந்தினேன்.இப்படியொரு நல்ல குறும் படத்தில் நடிக்காமல் விட்டதால் மிகவும் வரூத்தமடைகிறேன்.வாழ்த்துக்கள் நண்பர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு நாட்களுக்குப் பிறகு தங்கள் கருத்து கண்டு மிக்க நன்றி!

      வாய்ப்புகள் இருக்கின்றதே! பார்ப்போம்!

      மிக்க நன்றி!

      நீக்கு
  16. குறும்படமாயிருந்தாலும் அது சொல்லும் செய்தி பெரியது. வசனங்கள் சொல்லப் படுவது சற்றே செயற்கையாகத் தெரிவது நீங்கள் ஏற்கெனவே பதிலளித்திருக்கும் மொழி/டப்பிங் பிரச்னையால் இருக்கலாம். ஆவி, டிடி, மிகக் குறைவான நேரமே கண்ணில் பட்டனர். செல்லப்பா ஸார் பார்வையாலேயே மிரட்டுகிறார். குறிப்பாக வகுப்பறையைக் கடந்து செல்லும் காட்சியில்.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி சார்! டப்பிங்க் ஆமாம் சார் அதே! இதற்கு முன் எடுத்த படங்களில் மொழிப் பிரச்சினை கிடையாது. அவை எல்லாமே ஆங்கில வசங்களுடன் எடுக்கப்பட்டதால்...மாணவர்களுக்கு விஷுவல், interactive session நடத்தி அடிப்படை ஆங்கில அறிவும், நடை முறையில், தேவையான இடங்களில் தயக்கம் இல்லாமல் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சி அளிப்பதற்காகவும், அதற்கான ஒரு முயற்சியாகவும், எடுக்கப்படுவதால்....

      ஆவி, டிடி எல்லோரையும் இன்னும் உட்படுத்த ஆசைதான்...ஆனால் குறும்படம் ஆயிற்றே அதுவும் மாணவர்களைப் பற்றியதால்....அவர்கள் பகுதி கொஞ்ச நேரம் ஆகிவிட்டது......அடுத்த முறை பார்க்க வேண்டும் .... எல்லோரும் எங்களுக்கு மிகவும் அன்பான ஆதரவு கொடுத்த நண்பர்கள். பதிவுலகில் உங்களைப் போன்று, நல்லதையும், குறைகளையும் சுட்டிக்காட்டி நல்ல ஊக்கம் அளிக்கும் எத்தனை நல்ல நட்புகள்! உங்கள் எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்!

      நீக்கு
    2. ஆமாம் சார் ராயச் செல்லப்பா சார் நன்றாகச் செய்துள்ளார்...

      நீக்கு
  17. தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா
    வலையுலக நட்பு எதனையும் வெற்றியாக்கும் என்பதற்கு தங்களின் முயற்சி ஓர் உதாரணம்.
    படத்தினை தரவிறக்கம் செய்து கொண்டேன்
    மீண்டும் வருவேன், படம் பார்த்துக் கருத்து சொல்ல
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தாங்கள் பார்த்து விட்டுக் கருத்துச் சொல்லவும்! உங்கள் எல்லோர் கருத்தும் எங்களை இன்னும் மேம்படுத்த உதவும்!

      மிக்க நன்றி!

      நீக்கு
  18. you tube இல் படத்தை கண்டு ரசித்தேன்.குறும்படம் எடுப்பது சாதாரண விஷயமல்ல தொழில் முறை நடிகர்கள் அல்லாதவர்களை பயன்படுத்தி இந்த அளவுக்கு எடுத்தது பாராட்டுக்குரியது. இன்னும் படைப்புகள் பல தர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நண்பரே! எங்கள் படத்தில் இதுவரை தொழில் முறை நடிகர்களை உட்படுத்தியது இல்லை. இது சிறிய பட்ஜெட் என்பது மட்டுமல்ல, மாணவர்களுக்காக எடுக்கப்படுவதால், எங்கள் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், உறவினர் என்ற வட்டத்திற்குள்தான்.

      தங்கள் வாழ்த்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  19. துளசிதரன்,

    இத்தனை திறமை உங்களுக்குள் ஒளிந்திருக்கிறதா?

    எத்தனை அடக்கமாக இருக்கிறீர்கள்.

    காணொளி, மனதுக்கும் கண்களுக்கும் அரிய விருந்து.

    நெஞ்சார்ந்த பாராட்டுகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் பாராட்டிற்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  20. சிறந்த முயற்சி
    நல்ல குறும்படம்
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் பாராட்டிற்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  21. சகோதரா தாமதமாக வருவதற்கு மன்னிக்கவும் முதல் தடவை பார்த்து விட்டு கருத்து போட விரும்பவில்லை மறு முறையும் பார்த்துவிட்டு போடலாம் என்பதாலேயே தாமதம். துவங்கும் போதே மியூசிக் எல்லாம் அசத்தலாகவே இருந்தது. நான் உண்மையில் அசந்துவிட்டேன். நன்றாகவே இருந்தது. முதலில் பார்த்த போது பேச்சு எதோ இயல்பாக இல்லாதது போல் தான் இருந்தது. மறு முறை பார்க்க நன்றாகவே இருந்தது. வசனம் எல்லாம் நீங்கள் தானா சகோ நல்ல விடயம் எடுத்து வந்து இளைய தலை முறையினருக்கு சொன்ன விதம் அருமை சிறந்த நற்பணியே. மேலும் இது போன்று எடுக்க வேண்டும் நல்ல திறமையான மாணவர்களாகவும் பொறுப்பும் கடமை உணர்வு உள்ளவர்களாகவும் உருவாக்க உதவும். இவ்வளவு திறமைகளை வைத்துக்கொண்டு எவ்வளவு தன்னடக்கமாக எங்களுடன் உலா வருகிறீர்கள் . நினைத்தாலே பெருமையாக இருக்கிறது சகோ நடித்த அனைவரும் தங்களுடைய பங்கிற்கு நன்றாகவே செய்துள்ளார்கள். சகோதரர் செல்லப்பா அவர்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாமோ என்று ஆதங்கப் பட்டிருந்தார் இல்லையா ஓரிடத்தில் உணமையில் அவர் நன்றாகவே செய்துள்ளார் பேசியதும் நன்றாகவே இருந்தது. boys தான் அதுவும் கொஞ்சம் தான் அடுத்தமுறை அதை மட்டும் கவனம் எடுத்தால் நன்றாக இருக்கும். அதற்கும் நீங்கள் சாரியான காரணம் சொல்லிவிட்டீர்களே சகோ.தங்கள் முயற்சிக்கு வெற்றியே ! மிக்க நன்றி! தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் மிக்க நன்றி சகோதரி! கருத்திட்டமைக்கு. தனுஷ் ஒரு படத்துல சொல்லுவார்...."என்ன மாதிரி பசங்கள பார்த்த உடனே பிடிக்காது. பாக்கப் பாக்கத் தான் பிடிக்கும்" அப்படி மாதிரி இருக்கு ஹாஹாஹாஅ......நம் பதிவர்கள் எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள். ராயச் செல்லப்பா சாரும் நன்றாகவே செய்துள்ளார். ஆனால் அவர் சொல்லிக் கொள்வது அப்படித்தான்....அது நம் எல்லோருக்குமே இருக்கும் இல்லையா...அது நாம் இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என்று நம்ம மேம்படுத்திக் கொள்ள நினைப்பதால்....

      டப்பிங்க் மிகவும் பிரச்சினையாக இருந்தது....மாணவர்களுக்க்ப் பள்ளி நாட்களில் வர இயலாது....அவர்கள் இருக்கும் நேரத்தில் எடிட்டிங்க், சௌண்ட் எஞ்சினீர் நேரம் ஒதுக்க முடியவில்லை...இப்படி இரு தரப்பினரும் கிடைக்கும் சமயத்தில் அவசர அவசரமாக முடிந்தால் போதும் என்றாகி விட்டாதால்.....அடுத்த முறை எல்லாம் கவனமாக இருக்கின்றோம். மிக்க நன்றி சகோதரி.....மீண்டும் பார்த்து கருத்திட்டமைக்கு. விரிவாக சொன்னதற்கும்...

      நீக்கு
  22. நல்ல குறும்படம். இன்று தான் பார்க்க முடிந்தது. நல்ல கருத்தினைச் சொல்லும் குறும்படம் எடுத்த உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு