திங்கள், 18 ஆகஸ்ட், 2014

காணாமற் போன குழந்தைகளைக் காணத் தவிக்கும் தூங்காத கண்கள்





ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போவதாகவும், இதில் 45 சதவீத குழந்தைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்படுவதாகவும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் காணாமல் போகும் குழந்தைகள் பற்றிய புள்ளிவிவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன்படி கடந்த 2011ம் ஆண்டு முதல் 2014 ஜூன் வரை மொத்தம் 3.25 லட்சம் குழந்தைகள் காணாமல் போய் உள்ளன.

அதாவது ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றன. இவற்றில் 45 சதவீத குழந்தைகள் மட்டுமே திரும்ப கிடத்துள்ளன. மற்றவர்களின் கதி என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. அண்டை மாநிலமான பாகிஸ்தானில் ஆண்டுக்கு 3 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே காணாமல் போகின்றன. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்றால் இதைக் காட்டிலும் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் ஆண்டுக்கு 10 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே காணாமல் போகின்றன.

தேசிய குற்ற ஆவண காப்பாக புள்ளிவிவரப்படி இந்தியாவில் எட்டு நிமிடத்துக்கு ஒரு குழந்தை காணாமல் போகிறது. காணாமல் போகும் குழந்தைகளில் 55  சதவீதம் பெண் குழந்தைகள். மகாராஷ்டிராவில் மட்டும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 50 குழந்தைகள் காணாமல் போய் உள்ளனர். இங்கு ஆண் குழந்தைகளை விட 10 ஆயிரம் பெண் குழந்தைகள் கூடுதலாக மாயமாகியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 15 ஆயிரம், ஆந்திராவில் 11 ஆயிரத்து 625, டெல்லியில் 10 ஆயிரத்து 581 பெண் குழந்தைகள் காணாமல் போய் உள்ளனர்
.     நன்றி தினகரன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்றுத் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது, ரிமோட் குரங்கு ஒவ்வொரு சானலாகத் தாவி கொண்டிருக்க, தூர்தர்ஷனில் காணாமற் போனவர்களின் அறிவிப்பு ஒளிபரப்பாகியதைக் காண நேர்ந்தது.  அதைக் கண்டதும், மனமும் குரங்காகி பின்னோக்கித் தாவி 2002 ஆம் வருடம் மே மாதத்திற்குச் சென்று இளைப்பாறியது.

என் இளைய மகன் சரவண விநாயகிற்கு மொட்டை போட பழநி சென்றிருந்தோம். மொட்டை போட்டு விட்டு பழநி ஆண்டவரை வணங்கியபின் மலை இறங்கிக் காலணிகள் வைத்திருந்த இடத்தில், எறும்பு கூட புக முடியாத அளவு கூடியிருந்தக் கூட்டத்தின் இடையே, ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றாக இதையும் சேர்க்கலாமோ என்று எண்ணும் அளவு,  அவரவர் காலணிகளைச், சோடி மாறாது எடுத்து அணிந்த மகிழ்விலும், நல்ல தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியிலும் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.  முன்னால் விநாயகைத் தோளில் சுமந்தபடி நின்ற ஜெயா எனும் எங்களுக்கு உதவியாக வந்த பெண்ணிடம், அருண் எங்கே என்று கேட்ட போது, முன்னால் நடந்து சென்ற என் மனைவியின் தங்கை பிந்து மற்றும் அவரது கணவர் சோமனும், 5 மாதக் குழந்தையான எனது மகள் அபிராமியைத் தூக்கிக் கொண்டு போவதாகவும், அவர்களுடன் போயிருக்கலாம் என்றாள்.  அவர்களது மகள் அகிலாவுடன், அருணும் நடந்து போயிருக்கலாம் என்ற நம்பிக்கையில் நாங்களும் நடந்தோம். எங்கள் முன்னால் 50 அடி தூரத்தில் நடந்து சென்ற அவர்களைக் காண முடியாத அளவு, மக்கள் அலை என்பார்களே அது இதுதான் போலும் என்று எண்ணும் அளவு மக்கள் திரள்.

நாங்கள் வேகமாக நடந்து சென்று, கைக்குழந்தையான அபிராமியை அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு, 4 வயது அருணை கையில் பிடித்துக் கொண்டு நடக்கலாம் என்று நாங்கள் இருவரும் வேகமாக நடந்தோம்.  எங்கள் முன்னால் நடந்து கொண்டிருந்த ஜெயா எங்களுடன் நடக்க சிரமப்பட்டு வேகமாக நடக்க முயன்றாள். சிறிது தூரத்தில் நடந்து கொண்டிருந்த பிந்துவும், சோமனும் என் கண்ணில் பட்டதும் எனக்குச் சிறிது ஆசுவாசம் வந்தது. வேகமாக நடந்து அவர்கள் அருகே சென்ற நான் பிந்துவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்த அகிலாவை மட்டும் கண்டதும் திகைத்து நின்றேன். 

“அருண் எங்கே?  அவன் உங்க கூட தானே......” பிறகு அவர்கள் சொன்னது எதையும் கேட்கும் நிலையில் நான் இல்லை.  திரும்பி, மலை அடிவாரத்தை நோக்கி ஓடினேன். கூடவே என் மனைவியும்.  “ஐயோ....அருண்...” என்று கூச்சலிட்டோமா என்பது கூட நினைவில்லை. கூட்டத்தினிடையே  ஓடுவது என்பது எவ்வளவு கடினம் என்பது தெரிந்தது. அவ்வாறு நாங்கள் ஓடிய போது பலரும் எங்களைப் பார்த்துத் திகைத்து நின்றதைப் பார்த்தது போல் ஞாபகம்.  மனதில் ஓடிய நினைவலைகளின் வேகத்தை உணர்ந்தேன்.  சில நொடிகளில் நம் மனதில் ஓடும் சிந்தனைகள், நம் கை நீட்டிப் பிடிக்கும் தூரத்திலுள்ள குழந்தைகள் நம் கைக்கெட்டாத தூரத்தில் காணாமற் போவது போன்று.  ஓடிய நாங்கள் செருப்பு வைக்கும் இடத்தை அடைந்த போது, யாரோ சொன்னார்கள் “ஆண் குழந்தைதானே? அழுதுகிட்டு இருந்த அவனை ஒரு அம்மா இந்தப் பக்கமாதான் கூட்டிக்கிட்டுப் போனாங்க”.  அந்த ஆள் கை காட்டிய வழியே ஓடினோம்.  ஓடும் எங்களைப் பார்த்து பலரும் “பயப்படாதீங்க.  அங்க பழம் விக்கற அம்மாதான்” என்றும், “என்ன பொம்பளை நீ...பிள்ளைய கூட்டத்துல பத்திரமா பாத்துக்கக் கூடத் தெரியாம....” என்றும் சொல்லியது எல்லாம் செவிக்குள் புகுந்து காற்றில் கரைந்தது.

காணவில்லை என்று அறிந்த இடத்திலிருந்து ஓடிய எனக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் போல் ஆனதாலும், கண்களில் அருணின் பிம்பம் மட்டுமே நிலைகுத்தி நின்றதாலும், மனம் அவன் கிடைக்க வேண்டுமே என்று குதிரை வேகத்தில் பயணித்தது. தூரத்தில் குதித்துக் கொண்டு அழும் அருணைக் கண்டதும், குதிரை வேகத்தில் ஓடிய மனம், அவன் அருகில் சென்றதும் மூச்சிரைக்க ஒரு கணம் அயர்ந்து, மெதுவாக நிதானித்தது. மண்டியிட்டு, அவனை அணைத்துக், கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் மனம் மௌன மொழி பேசியது அவனுடன். என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம்.  அருண் சமூகக் கிருமிகளின் கையில் சிக்காமல், ஒரு சில நிமிடங்களே என்றாலும், சுயநலம் துளியும் இல்லாமல் அவனைக் காப்பாற்றி எங்களிடம் ஒப்படைத்த அந்தப் பெண்மணிக்கு எத்தனைக் கோடி நன்றிகள் சொன்னாலும் மாளாது! மனமார்ந்த நன்றி சொல்லி திரும்பி நடந்த போது, முன்பு கண்ட அதே முகங்களிலும் மகிழ்வைக் கண்டோம். அந்த மகிழ்வின் இடையில் “இந்த மாதிரி கூட்டத்தில பிள்ளைகளை பாத்துக்கத் தெரியலனா அவங்கள ஏன் கூட்டிக்கிட்டு வரீங்க” என்று கோபப்பட்டவர்களின் வார்த்தைகள் இப்போது செவியில் இறங்கி மனதில் உறைத்தது.  உண்மைதானே என்று!


இரண்டு வாரங்களுக்கு முன் அது போல் ஒரு நிகழ்வு. திருவனந்தபுரம் ரயில் நிலையத்தின் அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிலர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். சந்தேகித்தப் போலீசார் அவர்களை விசாரிக்க, அதில் ஒரு பெண் குழந்தை ஆண் குழந்தை போல் மாற்றப்பட்டிருந்த்தை அறிந்து அக்குழந்தையை “சைல்ட் லைன்” இயக்கத்தினரின் உதவியுடன் அவர்களது மையத்திற்குக் கொண்டு சென்று விட்டார்கள்.  உடனே, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த செட்டியம்மாள் என்பவர், அது தன் குழந்தை என்று சொல்லிக் கொண்டு வந்ததும், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் எங்கே என்றதும், செட்டியம்மாள் எடுத்து வருகிறேன் என்று சொல்லி நழுவி விட்டார்.

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம், திருவல்லா பேருந்து நிலையத்தில் செறுப்பு மற்றும் குடை பழுது பார்க்கும் சிவனும் அவரது மனைவியும் தங்களுடன் பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தையைக் காணவில்லை என்று புகார் கொடுத்திருந்திருக்கிறார்கள். அன்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிலர் அங்கு தங்கியிருந்ததாகவும், மறுநாளே அனைவரும் அங்கிருந்து போனதை அறிந்த போலீசார், ஆந்திராவில் விசாரிக்க, அப்படியாகச் செட்டியம்மாளும், அவரது கணவரும் போலீஸ் வலையில் விழுந்தார்கள்.  விசாரணையில் குழந்தை திருவனந்தபுரம் “சைல்ட் லைன்” மையத்தில் இருப்பதாகச் சொல்ல, காவல்துறை, குழந்தையின் புகைப்படம் மற்றும் பிற விவரங்களை வைத்து அது ஆறுமாதத்திற்கு முன்பு திருவல்லா பேருந்து நிலையத்திலிருந்து திருடப்பட்ட, சிவனது குழந்தைதான் என்று முடிவு செய்து சிவனை வரவழைத்தது.  சைல்ட் லைன் மையத்தில் சிவனைக் கண்டதும், குழந்தை “அப்பா” என்று அழைத்து கட்டிக் கொண்டதாம்.  பெற்றமனங்களின் வேதனை போலவே, அக்குழந்தை மனமும் தன் “அப்பா, அம்மா”வைக் காணாமல் கடந்த ஆறு மாத காலமாக எப்படி துடித்திருக்கும்!  எப்படியோ, சிவனுக்கு அவர் குழந்தையைத் தாமதிக்காமல் நீதிமன்றம் திரும்பக் கொடுத்துவிடும்.

11 வருடங்களுக்கு முன்பு, எர்ணாகுளம் வைப்பினில் படகில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண், பக்கத்திலிருந்த ஒரு பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைத் திருட, அப்பெண் கூச்சலிட, திருடிய பெண் சங்கிலியைத் தண்ணீரில் எறிய, படகை ஓட்டியவர் உடனே தண்ணீரில் குதித்து சங்கிலியை எடுத்ததால், 5 வயதான மகனுடன் அப்பெண் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.  குழந்தையின் உருவமும், அப்பெண்ணின் உருவமும் ஒத்துப் போகாததாலும், அக்குழந்தை பேசும் போது சில ஆங்கில வார்த்தைகள் உபயோகித்ததாலும் சந்தேகித்த நீதிபதி, அக் குழந்தையை ஸ்ரீ சத்தியசாயி அனாதைகள் இல்லத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.  குழந்தையைத் திரும்பப் பெற அப்பெண் சிறந்த வழக்காளர்களை வைத்து வாதாடியும், இறையருளால் அக்குழந்தை அவர்கள் கையில் சிக்கவில்லை. 

வாசுதேவ் எனும் பெயருள்ள அச்சிறுவன் கடந்த +2 தேர்வில் 76% மதிப்பெண்கள் பெற்று தேறியச் செய்தி பலருக்கும் தேனாய் இனித்தது.  வாசுதேவ், ஒரு பொறியாளராய் ஆக விரும்பியதை அறிந்த திருவனந்தபுரம், வெஞ்ஞாரமூடு ராஜதானி பொறியியல் கல்லூரி உரிமையாளர் திரு பிஜு ரமேஷ், தன் கல்லூரியில் இலவசமாக வாசுதேவைப் படிக்க வைக்க முன்வந்தும் இருக்கின்றார்.  வாசுதேவின் பெற்றோர்கள் என்றேனும் ஒரு நாள் வரலாம்.  DNA சோதனை போன்றவை நடத்தி அவர்கள் வாசுதேவைத் திரும்பப் பெரும் நாள் வரவேண்டும் என நாமெல்லோரும் வேண்டுவோம்.  சிவனுக்குச் சிவானி கிடைத்தது போல், வாசுதேவும் அவனது பெற்றோர்களுக்குக் கிடைக்கட்டும்.

தமிழ் திரைப்படங்கள், மகாநதியும், சமீபத்தில் வந்த 6 மெழுகுவர்த்திகள் திரைப்படமும், இந்தப் பின்புலத்தில் எடுக்கப்பட்ட படங்களே!

நிற்க, நம்நாட்டில் செட்டியம்மாள், அவரது கணவர் போன்ற குழந்தைகளைக் கடத்தும் எத்தனையோ திருட்டுக் கூட்டங்களில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள் எத்தனையோ?  அவர்களை எல்லாம் எண்ணிக் கண்ணீர் வடிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேரோ?  பெற்றோர்களும், குழந்தைகளும், திரும்ப சேர்வது என்பது சிரமம்தான். என்றாலும் அரசும், நல்ல மனம் படைத்தவர்களும் இது போன்ற குழந்தைகளைத் திருடும் கூட்டங்களிடமிருந்து மீட்டு அவர்கள் நல்வாழ்வு வாழ வழி வகை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் வாசுதேவ் போன்று பல குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வழி பிறக்கும். நாமும் நம் பங்கிற்குச் சந்தேகத்திற்குரிய விதத்தில் ஏதேனும் குழந்தைகளைப் பிச்சையெடுக்கும் கூட்டங்களில் கண்டால் காவல் துறையையோ, குழந்தைகளைக் காக்கும் இயக்கங்களைச் சேர்ந்தவர்களையோ .அறிவிக்கலாமே!

ஏனென்றால், குழந்தைகளைத் தவறவிட்டுத் துடிக்கும் மனங்களின் துயரத்தையும், காணாமற் போன குழந்தைகளைத் திரும்பப் பெரும்போது துள்ளும் மனதுகளின் மகிழ்ச்சியையும் பற்றிக் கேட்கும் போது அவர்களது வேதனையை மட்டுமல்ல குழந்தைகள் திரும்பக் கிடைக்கையில் உண்டாகும் மகிழ்ச்சியையும் உணரமுடியும்.

படங்கள் : இணையம்

38 கருத்துகள்:

  1. ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகள் காணாமல் போவதில் 4 , 5, சதவீதம் மட்டுமே கண்டுபிடிக்கப்படுவது வேதனையிலும் வேதனை நண்பரே,,,

    இதற்க்கு அடிப்படை காரணம் என்ன ? மனிதாபிமானம் செத்துக்கொண்டு இருக்கிறது அரபு நாடுகள்போல் கடுமையான சட்டங்கள் இயற்றாதவரை இந்தப்பிரட்சினை தீர்வு காணவே முடியாது மக்களுக்கு இதனைக்குறித்து விளிப்புணர்வு வரவேண்டும். யாருக்கோ குழந்தை காணாமல் போகிறது எனநினைக்கிறார்கள் தனக்கு வரும்போதுதான் அதன் வேதனையை உணர்கிறார்கள் காரணம் எல்லோருமே சுயநலவாதிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியான வார்த்தைகளே! கில்லர்ஜி! மனிதன் தற்போது தீவுகளாகி, சுயநலவாதியாகி வருவதாலும், அரசின் கடுமையான சட்டங்கள் இல்லாததாலும் இந்தப் பிரச்சினை வளர்ந்து கொண்டுதான் போகின்றதே அல்லாமல் தீர்வு கிடைப்பதாகத் தெரியவில்லை....நமது கவனக் குறைவால் தவறவிடுவது ஒரு புறம் இருக்கட்டும்...அதை நம் தவறாக எடுத்துக் கொள்ளலாம்....ஆனால் குழந்தைகள் திருடப்படுகின்றனவே.....எத்தனை பெற்றோர்கள் தவிக்கின்றார்கள்!

      நீக்கு
    2. அரபுநாட்டு சட்டங்களைபோல் இந்தியாவிலும் கொண்டுவர பலரும் சொல்லி வருகிறார்கள், அதற்க்கு ஆயத்தமாகாதவர்களும், எதிர்ப்பவர்களும் ஒரு குற்றவாளியே.... இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொ(ல்ல)ள்ள வேண்டும்.

      நீக்கு
  2. ஆண்டுக்கு ஒரு இலட்சம் குழந்தைகள் காணாமல் பேகிறதா?
    எந்த நூற்றாண்டில் நண்பரே நாம் வாழ்கிறோம்
    வேதனையாக இருக்கிறது
    ஒரு இலட்சம் குடும்பங்களின் நிலை என்ன ஆகும்
    நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! இந்தச் செய்தியைப் படித்ததுதான் உண்மை நிலவரமே தெரிகின்றது! எந்த நூற்றாண்டில் வாழ்கின்றோம்?! விடை கிடைக்காத பெரிய கேள்வி......
      குடும்பங்களின் நிலை? அதுவும் கேள்விக் குறியே!

      நீக்கு
  3. வாசுதேவ் கதை நெகிழ்த்துகிறது. உங்கள் மகன் பற்றிய செய்தி பழைய செய்தி ஆனாலும் பதற வைத்தது.

    இந்தியாவில் குற்றங்கள் பெருகுவது கவலைக்குரிய விஷயம். அதுவும் இதுமாதிரிக் குற்றங்கள். இதை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகள் படும் பாட்டைப் பார்க்கும்போது அன்று என் மகன் திரும்பக் கிடைத்தது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவம் ஆகிப் போனது. இப்போது அதை நினைத்தாலும் மனம் ஒரு நிமிடம் விக்கித்துப் போகும். அவன் திரும்பக் கிடைத்தானே என்று மகிழ்வடையும்...ஆனல் இது போன்ற செய்திகள் பார்க்கும் போது என்னைப் போல் எத்தனை பெற்றோர்கள் தவித்திருப்பார்கள் என்ற எண்ணம் கூடவே எழும்.
      ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது மிகப் பெரிய கேள்வியே! கவலைக்குரியதும்தான்....

      நீக்கு
  4. என் இளைய மகனுக்கு மொட்டை அடிக்கக் குடும்பத்தோடு திருப்பதி போயிருந்தோம். கூடவே நான் என் மச்சினன் மூத்தமகன் அனைவரும் மொட்டை அடித்துக் கொண்டோம் முதலில் மொட்டை அடித்துக் கொண்ட மூத்தமகன் கோபித்துக் கொண்டு அழுது கொண்டே சற்று தூரம் சென்றான்.அனைவருக்கும் மொட்டைஅடித்து முடிந்தபின் மூத்த மகனை காணவில்லை. பதறிக் கொண்டு தேடினால் அங்கிருந்த ஒரு மறைவிடத்தில் அழுது கொண்டு இருந்தான். அந்த நிலையிலும் நண்பர் அவனைப் புகைப்படம் எடுக்கத் தவறவில்லை.
    இன்றைய பெங்களூர் ஹிந்துவில் வீட்டைவிட்டு ஓடிப் போகும் சிறுவர்கள் பற்றி ஒரு செய்தி. ரயில் நிலையத்தில் பாஸ்கொ எனும் அமைப்பினர் இம்மாதிரி ஓடி வரும் சிறார்களை இனம் கண்டு ஆவன செய்கிறார்கள். ஒரே மாதத்தில் 514 பேரை அவர்கள் மீட்டதாகச் செய்தி. மீட்கப்பட்டவர்கள் 16 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வீட்டைவிட்டு ஓடிப்போவதற்கு பல காரணங்கள் சொல்லப் படுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் உங்களுக்கும் இது போன்ற அனுபவமா......நல்ல வேளை தங்கள் மகனும் கிடைத்தாரே! அதுவும் மொட்டை போட்டுவிட்டால் எல்லா மொடைகளுக்கு இடையிலும் தேடுவது மிகவும் சிரமம் சார்.....

      ஓடிப் போனச் சிறுவர்கள் மீட்கப்பட்டார்களே இல்லையென்றால் அவர்களின் நிலை என்னவாகி இருக்கும்?!!

      நீக்கு
  5. மனம் பதை பதைக்கிறது....அந்த வினாடி..அந்த நொடி. எப்படிப்பட்ட தருணங்கள்...

    வேறு தொழிலா இல்லை சம்பாதிக்க... இந்த செட்டியம்மாள் போல் எத்தனை பேறோ...

    தாய் & தந்தையர் நிலையை நினைக்க முடியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோதரி! திருடப்படும் குழந்தைகளின் கதியை நினைத்தால் மனம் வெதும்பிவிடுகின்றது! இயக்குனர் பாலாவின் நான் கடவுளும் நினைவுக்கு வருகின்றது

      நீக்கு
  6. திடுக்கிட வைக்கும் இந்த உண்மைச் சம்பவங்களைக் கேள்வியுறும் போதே
    மனம் பேதலித்துப் போகிறதே பறி கொடுக்கும் பெற்றோர்களின் நிலை
    என்னவாக் இருக்கும் :(!!????..........மனிதன் மனிதநேயத்தைத் துலைத்து நிற்கும்
    பொல்லாத சமூகம் இது இதற்குத் தக்க நடவடிக்கை எடுத்தல் மிக மிக
    அவசியமாகிறது .பகிர்வுக்கு மிக்க நன்றி அன்புச் சகோதரனே .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனித நேயம் மிக்க மனிதனாக இருக்க வேண்டியவன் மிருகமானால் என்ன செய்ய? தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் நாற்காலிகளைத் தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் போது.....இதற்கெல்லாம் எங்கே முடிவு பிறக்கும்?

      மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
  7. ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றன என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தி! தங்களின் குழந்தை காணாமல் போய் உடனே கிடைத்தது நிறைவைத் தந்தது! பெற்றோர்களிடம் இன்னும் கூடுதல் விழிப்புணர்வும் கடுமையான தண்டனைகளும் குழந்தைகள் கடத்தலை கட்டுப்படுத்தும்! நல்ல பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மிகச் சரியே! மட்டுமல்ல நம் குழந்தைகள நாமும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்தான்....காலம் அப்படி இருப்பதால்

      நீக்கு
  8. வணக்கம்
    அண்ணா.

    புள்ளி விபரங்களுடன் தகவலை சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் பதிவை படித்தவுடன் வியப்பாக உள்ளது .. தகவல் தேடலுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி அண்ணா
    த.ம 5வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. சமீபத்தில் ,கடத்திய குழந்தைகளில்சரியாக பிச்சை எடுக்காததால் பலபேரை கொன்று விட்டதாக ஒரு கொடூரன் கூறியுள்ளான்,கேட்கும்போதே மனம் பதை பதைக்கிறது .கடுமையான சட்டங்கள் தேவை !
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயங்கரம் தான் பாலாவின் நான் கடவுள் இதைத்தானே காட்டியுள்ளது! மனதைப் பீதி கொள்ள வைக்கும்..

      நீக்கு
  10. உங்கள் பதட்டம் உணரமுடிந்தது சகோதரரே...
    இத்தனை குழந்தைகள் காணாமல் போகிறார்களா? அவர்களின் மனம் என்ன பாடுபடும்???! கண்ணீர்தான் முட்டுகிறது...இங்கு கூட போன வாரம் சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண் வைத்திருந்த பெண் குழந்தை அவரது போல இல்லியே என்று ஒரு பெண் புகார் செய்ததில், அது அக்குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் ஆயா என்று தெரிய வந்ததாம்..பெற்றோர் அலுவலகம் சென்றவுடன் பிச்சையெடுக்க வைப்பது..என்ன ஒரு கொடுமை!!
    இப்படி சந்தேகம் தோன்றினால் நாம் அனைவரும் சைல்ட் ஹெல்ப் லைனைத் தொடர்புகொள்ளவேண்டும்.
    த.ம.+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆயாக்கள் கூட இப்படி இருக்கின்றார்களா? ஆச்சரியமாக உள்ளது! சைல்ட் ஹெல்ப் லைனைத் தொடர்பு கொள்ளவேண்டும்...நல்ல யோசனை! மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
  11. குழந்தையை தொலைத்த நொடி எப்படி பதரியிருப்பீர்கள்? உண்மையில் பெரிய வேதனை தான். முல்க் ராஜ் ஆனந்தின் லாஸ்ட் சைல்ட் நினைவு வருகிறதா?

    ஆறு மெழுவர்த்திகள் அட்டகாசமான படம் ! பலர் கவனம் பெறாமலே போய்விட்டது:(
    சைல்ட் லைன் இப்போ பள்ளிகளுக்கே வந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டுவது பாராட்டிற்குரியது இல்லையா சகாஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தோழி! நினைவுக்கு வருகின்றது! ஆறுமெழுகு வர்த்திகள் அருமையான படம் அதனால்தான் கவனம் பெறவில்லை!

      ஆமாம் பாராட்டிற்குரியதுதான்....நல்லது நடந்தால் நல்லதே!



      நீக்கு
  12. ஆண்டுக்கு ஒரு இலட்சம் குழந்தைகள் காணாமல் பேகிறதா?
    சிறந்த விழிப்புணர்வுப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! புள்ளிவிவரம் அப்படித்தான் சொல்லுகின்றது! மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  13. என்ன கொடுமை இது கேட்கும் போதே உடல் நடுங்குகிறதே பதிக்கப் பட்டவர்கள் நிலை என்னவாய் இருக்கும். வேதனை தாளமுடியவில்லை சகோ! தங்களுடைய மகன் கிடைத்தது உண்மையில் அதிர்ஷ்டம் தான். விழிப்புணர்வுப் பதிவுக்கு நன்றி! தொடருங்கள் சகோ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இறைவனின் அருளால் இதிரும்பக் கிடைத்தான். ஆனால் மற்ற குழந்தைகள் படும் வேதனை, பெற்றோர்கள் படும் வேதனை சொல்லி முடியக் கூடிய காரியமா?

      மிக்க நன்றி சகொதரி!

      நீக்கு
  14. படிக்கும் நமக்கே நெஞ்சு பதறுகிறது! பெற்றவர்களுக்கு.......?

    பதிலளிநீக்கு
  15. //ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சம் குழந்தைகள் காணாமல் போகின்றன. இவற்றில் 45 சதவீத குழந்தைகள் மட்டுமே திரும்ப கிடத்துள்ளன. மற்றவர்களின் கதி என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.//

    இதையெல்லாம் பார்க்கும் போது பிறந்து வாழ்வதில் அர்த்தமே இல்லை என்று தோன்றுகிறது.

    மிக மிகச் சிறப்பான, அனைவரையும் சிந்தித்துச் செயல்படத் தூண்டும் பதிவு.

    தொடருங்கள் துளசிதரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்! ஆம் தொலைந்து போன குழந்தைகளின் நிலை அந்தப் பெற்றோரை எப்படிப் பாடாய் படுத்தும்? வேதனைக்குரிய ஒன்று..

      மிக்க நன்றி தங்கள் ஊக்கத்திற்கு!

      நீக்கு
  16. சிறந்த விழிப்புணர்வுப்பகிர்வு, பகிர்விற்கு மிக்க நன்றிகள் அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிங்க்ராஜ் அவர்களுக்குத் தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  17. நானும் ஒரு கோவில் கூட்டத்தில் காணாமல் போய் விட்டேனாம்.

    அப்படியே விட்டிருக்கலாம் என்று என் சின்ன சகோதரி இன்னும் கவலையாக சொல்லுவாள்....(((

    அருமையான விழிப்புணர்வு பகிர்வு ஐயா.
    த.ம. 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணாமல் போன நீங்கள் கிடைத்ததால் தான் இன்று நீங்கள் அருமையாக எழுத உங்கள் எழுத்துக்களையெல்லாம் வாசிக்க முடிகின்றது.!! எழுத்துலகத்திற்கு ஒரு நல்ல எழுத்தாளர் கிடைத்திருக்கின்றார். ஆண்டவனுக்கு நன்றி கூறத்தான் வேண்டும்!

      நீக்கு
  18. அய்யா,
    இழப்பின் கொடுமை சொற்களாய் நெஞ்சத்து இறங்குமாறு அமைந்துள்ளது தங்களின் பதிவு.
    அவலமும் துயரமும் அன்றாட வாழ்வில் நாம் கடந்து போகின்ற இது போன்ற குழந்தைகளின் முகங்களில் எழுதப்பட்டுள்ளதை இனி வாசிக்க முடியும் எனத் தோன்றுகிறது.
    பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜு ஐயா , மிக்க நன்றி! துயரம் கூட அழகிய தமிழில் தங்கள் கருத்தாய் தந்தமைக்கு மிக்க நன்றி1

      நீக்கு