புதன், 26 நவம்பர், 2014

உறங்காத குரங்குகளும், உறங்குகின்ற வீணையும்

      
எனது ராகங்கள் அபஸ்வரமாகிப் போன கதையைச் சொல்லிக் கொண்டு இருந்த போது இடையில் எனது மகனின் வீணை ஆசை பற்றிச் சொல்ல வேண்டி வந்தது.  ஆனால், அது அப்போது அந்த விவரணத்திற்கு அவசியமற்றதாகிப் போனதால், அதற்குக் கத்தரி போட, அதை நம் நண்பர் கஸ்தூரி/மது எழுத வேண்டிக் கோரிக்கை வைக்க, இப்போதுதான் வெட்டப்பட்டக் கதையை இங்கே ஒட்ட முடிந்தது.

      கதைக்கு வருவதற்கு முன் – கதையல்ல நிஜம் என்று சொல்லி உறுதி மொழி வழங்கியபின் – இந்த விவரணத்திற்கு இங்கு மிகவும் முக்கியமானவர் ஒருவரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். நாலு கால் இனத்தைச் சேர்ந்தவர் என்றாலும், நமக்கும் அவருக்கும் பந்தம் இருக்கின்றதா என்று அவ்வப்போது எல்லோரையும் விவாதிக்க வைப்பவர் என்றாலும், அவருக்கும் எனக்கும் என்னவோ பந்தம் இருக்கின்றது.

படம் இணையம். நான் எடுத்தப் புகைப்படங்கள் தற்போது தேடும்படி உள்ளதால்

      பல வருடங்களுக்கு முன் எனது மகனுக்கு 21/2 வயதாக இருந்த போது நாங்கள் சிம்லா சென்றிருந்தோம். எனது புகைப்படம் எடுக்கும் ஆர்வக் கோளாரினால் அப்போது இரவல் பெற்று எடுத்துச் சென்றிருந்த புகைப்படக் கருவியால் இயற்கையைச் சுட்டுக் கொண்டிருந்தேன். அதில் நம்மவரும் அடக்கம். அவரைப் பல விதக் கோணங்களில் படம் எடுத்துக் கொண்டிருந்தேன். எடுத்துவிட்டுத் திரும்பியதுதான் தாமதம், அவரது அனுமதி பெறாமல் எடுத்ததால் கோபமோ என்று தெரியவில்லை எனது புடவைத் தலைப்பைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு ஊஞ்சலாடினார். ஊஞ்சலாடியது மட்டுமல்ல அதைப் பிடித்துக் கொண்டு ஏறுவது போன்று ஆட்டம் வேறு.  நானே நாலடியார்.  இதில் அவரது எடையையும் தாங்க முடியாமல் விழுந்துவிட,  மகன் அழத் தொடங்க, பின்னர் அங்கிருந்த ஒருவர் கம்பு எடுத்து விரட்ட ஓடிவிட்டார்.

      திருவனந்தபுரத்தில் இருந்த சமயம் நானும் மகனும் அங்கிருந்த மிருகக்காட்சிச் சாலைக்குச் சென்றிருந்த போது நம்மவர்கள் கூண்டிற்குள் இருக்கும் இடத்திற்குக் சென்ற போது என் மகன் கூண்டிற்குள் இருந்த ஒருவரிடம், “ஹௌ ஆர் யூ?  நீங்க தானே என் அம்மாவோடத் தலைப்பை பிடிச்சு ஏறினீங்க? இப்ப எங்க அம்மா சாரில வரலையே! சுடிதார்லதானே வந்திருக்காங்க நீங்க என்ன பண்ணுவீங்களாம், ஹெ ஹெ ஹெ” என்று கையால் வினவ, தன்னால் இந்தப் பையனை ஒன்றும் செய்ய முடியவில்லையே, கூண்டிற்குள் வைத்திருக்கின்றார்களே என்ற கோபமோ என்னவோ, அங்கிருந்த தண்ணீரை எடுத்து வீசினாரே பார்க்கணும், மகனின் முகத்தில் வந்து தண்ணீர் அடித்தது! இம்முறை மகன் பயப்படவும் இல்லை, அழவும் இல்லை! அவனுக்கு ஒரே சந்தோஷம். அப்போது அவனுக்கு வயது 31/2.

      அடுத்த சம்பவம், சென்னையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் லயன் சஃபாரி சென்ற போது எப்படி அங்கு நம்மவர் வந்தார் என்று தெரியவில்லை, திடீரென்று நாங்கள் சென்றிருந்த அந்த ஜீப்பின் முன் பக்கக் கண்ணாடியில் வந்து தாவிக் கையால் ஒரு அடியடித்து ஜீப்பின் பேனட்டில் அமர்ந்து எங்களைப் பார்த்து முகத்தைச் சுளித்து  “கொர் கொர்” என்ற சப்தம் வேறு. ஓட்டுனர் காரை சற்று வேகம் எடுப்பது போல் செய்ய நம்மவர் தாவி அருகில் உள்ள மரங்களுக்கு இடையில் சென்று அங்கிருந்து அதே கொர் கொர். 

பின்னர் சோளிங்கர் மலையில் எங்கள் பை பறிமுதல், ஜவ்வாது மலையில் கேமரா பறிமுதல், சின்னாரில் ஆற்றினோரம் நடக்கையில் நம்மவர் கூட்டமே என்னையும், மகனையும், தமிழ் படத்தில் வில்லன் கூட்டம் ஹீரோவை வளைப்பது போல் வளைத்து நின்ற நிகழ்வு, பின்னர் ஏலகிரி மலையில் எங்களைப் பின் தொடர்ந்து வந்து எங்கள் கையை அவ்வப்போது பிடிக்க முயற்சி, ஏற்காட்டில் எங்கள் அருகில் வந்து அமர்ந்து எங்கள் உணவைப் பறித்து அருகில் அமர்ந்தே எங்களோடு உண்டது, கோவைக் குற்றாலம் சென்ற போது எங்கள் பையைத் தூக்கிக் கொண்டு எங்களோடு நடந்து வந்து எறிந்து விட்டுச் சென்றது, திருக்குறுங்குடி மலை நம்பிக் கோயில் அருவியில் எங்கள் துணிகளைக் களவாடியது, களக்காடு காட்டிற்குள், தலையணை ஆற்றில் எங்கள் மேல் கையில் கிடைத்ததை எல்லாம் எறிந்தது, நாகர்கோவில் காளிகேசம், வட்டப்பாறை அருவியில் பாறையில் அமர்ந்திருந்த போது மகனின் தலையில் நம்மவர் பேன் எடுத்தது (மகன் தலையில் பேன் இல்லை என்பது வேறு) திருநெல்வேலி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையின் கதவைத் தட்டித் திறக்கச் செய்தது என்று நம்மவருக்கும் எங்களுக்கும் இருந்த பந்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது வேடிக்கையாகத்தான் இருந்தது.

      சென்னைக்கு வந்த பிறகு ஒவ்வொரு இடமாக வீடு மாறி மாறி வந்து அடையாரில் இருந்த போது, அருகில் கிண்டி உயிரியல் பூங்கா காடுடன் ஐஐடி வளாகம் என்பதால், நம்மவர் கூட்டம் நாங்கள் இருந்த வீட்டிற்குத் தவறாது தினமும் வருகைப் பதிவேடு. அதுவும் குடும்பத்தோடு. செங்குரங்கு இனம். ரீசஸ்/Rhesus.  பெரும்பாலும் நாங்கள் குடியிருந்த வீட்டில்தான் பெரும்பான்மையான நேரத்தைக் கழிக்கும் இந்தக் கூட்டம்.  உணவு வேட்டையிலிருந்து, தூங்குதல் வரை. காலை 9, 10 மணிக்கு வந்தால் மாலை 4, 5 மணி அளவில்தான் தங்கள் இருப்பிடம் செல்வார்கள்.  பல சமயங்களில் விரட்ட வேண்டி வரும்.  இருந்தாலும் எங்களுக்கு அறியாமல் மொட்டை மாடியிலோ இல்லை வீட்டின் பக்கவாட்டிலொ, மரத்திலோ அமர்ந்திருப்பது வழக்கமாகிவிட நாங்கள் கதவை எல்லாம் மூடியே வைத்திருக்க வேண்டியதாகிற்று.

ஒரு நாள் நான் மளிகைச் சாமான்கள் வாங்கி வந்து, அதை அப்படியே ஹாலில் வைத்திருந்தேன். கதவு தாள் இடாமல் மூடி இருக்க, நம்மவர்களின் வருகை அன்று இன்னும் வருகைப் பதிவேட்டில் பதிவாகவில்லையே என்ற நினைப்புடன், மகனுடன் அவனது (9 ஆம் வகுப்பு) பாடங்களைக் குறித்து கருத்துரையாடிக் கொண்டிருந்த சமயம், மகன் என்னை மெதுவாகத் தட்டி சத்தம் போடாதே என்று சொல்லி சமையலறையைப் பார்க்கச் சொல்ல, அடக் கடவுளே! மூடியிருந்தக் கதவைத் திறந்து கொண்டு, நம்மவர் கூட்டத்தின் தலைவர், பெரியவர் சமையலறைக்குள் நுழைந்து, மேடை மேலிருந்த உணவுகளை எடுத்துச் சாப்பிடுகின்றேன் பேர்வழி என்று இரைத்து, தக்காளிப்பழங்களை எடுத்துப் பிய்த்து உண்டு ஆங்காங்கே போட,  நான் உள்ளே செல்ல முயல மகன் என்னைத் தடுத்தது மட்டுமல்லாமல், என்னையும் அறைக்குள் அழைத்துச் சென்று கதவை மூடிவிட்டான்.  பின்னர் சத்தம் எதுவும் இல்லாததால், நான் மெதுவாகச் சமையறைக்குள் சென்று அதகளத்தைக் கண்டு களித்து?! விட்டு ஹாலுக்குச் சென்றால், அங்கு துவரம்பருப்புக், கடலைப் பருப்பு, தனியா பாக்கெட்டுகளைக் காணவில்லை!

அட!  நாம் செய்த சாம்பார் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது போலும்!  அதான் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றுவிட்டார். சமைக்கவும் தெரியுமோ?!  சரி, அப்போ அரிசி?  வேறு வீட்டில் வேட்டையாடலாய் இருக்கும் என்று மகனிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டே  வாயில் அருகில் சென்றேன்.  மகன் தடுத்தான். அந்தப் பருப்பு பேக்கட்டுகள் பிய்க்கப்பட்டு சிதறி இருக்க பாதிப் பாக்கெட்டுகளுடன் அவர் நடந்து கொண்டிருந்தார். நான் சிறிது விரட்டிவிட்டு, வீட்டிற்குள் வந்து மகனிடம் சொல்லிவிட்டு கடைக்குச் செல்ல பையுடன் வெளியில் சென்று பெரியவர் இருக்கின்றாரா என்று பக்கவாட்டில் எட்டிப் பார்க்க, திடீரென்று என் வலது காலின் கெண்டைக்கால் தசை பெரியவரின் வாயில்! நான் வலியைப் பொறுத்து கீழே விழ மீண்டும் கடி, அந்தத் தசை போதவில்லை போலும்! அப்படியாக மிகவும் ஆழமாக இரண்டு இடங்களில் கடி வாங்க என் குரல் கேட்டு மகன் என்னையும், செங்குரங்குப் பெரியவரையும் பார்த்த்தும் அழத்தொடங்க, சாலையில் போவோர் பெரியவரை விரட்ட, மகன் என்னை ரேபிஸ் ஊசிப் போட துரிதப்படுத்த, நான் மருத்துவமனைக்கு ஓட்டம்.  மகன் அன்று இரவு தூங்கவில்லை.  நான் ரேபிட் ஆகிவிடுவேனோ என்ற பயம்.

எங்களுக்கு ஆச்சரியம் விடாது கருப்பு போன்று அந்தச் சிம்லா குரங்கு, இந்தத் தென் இந்தியக் குரங்குகள் எல்லாவற்றிற்கும் செய்தி அனுப்பி இருக்குமோ? செம நெட்வொர்க்பா! நாங்கள் செல்லும் இடமெல்லாம் எங்களைத் தொடர்ந்து..... ம்ம்ம் தமிழ் சினிமா தோத்துதுங்க. இயக்குனர்கள் கவனிக்க! நிற்க இப்போது மகனின் வீணை வகுப்பு பற்றி...

மகனுக்குக் கமலஹாசனின் குரல்வளம். அதாவது வசனக் குரல்.  கமல் பாடும் அளவு மகனால் பாட முடியவில்லை. பாடினால் கமல் வசனம் பேசுவது போல் இருக்கும். இசை அறிவு அபாரம். எப்படியாவது அவனது இசை அறிவை வளர்க்க நான் அவனுக்கு வாய்பாட்டு அல்லாமல், வீணை, மாண்டலின், வயலின், புல்லாங்குழல் இசைத்தட்டுக்களையும் நான் கேட்கும் போது அவனையும் கேட்க வைத்ததுண்டு. இசைக் கச்சேரிகளுக்கும் அழைத்துச் செல்வேன்.  அப்படி அவனுக்கு வீணை மிகவும் பிடிக்க ஆரம்பித்து எல்லா வீணை இசக்கலைஞர்களின் இசையை ரசித்தாலும், வீணை மேதை சிட்டிபாபு அவர்களின் இசை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.  அவரைப் போன்று விறு விறுப்புடனும், ஃப்யூஷனிலும் கலக்கிக் கொண்டிருக்கும் அவரது மாணவர்  திரு ராஜேஷ் வைத்தியா அவர்களின் இசையின் ரசிகனானான். என்னைப் போன்று.  அவனுக்கு அவரிடம் வீணை கற்க வேண்டும் என்று ஆசை வேறு வந்துவிட்டது.  அம்மாவிற்கும், மகனுக்கும் வரும் ஆசைகள் எல்லாமே ரொம்பப் பெரிதுதான்.  அப்போது சேஷகோபாலன். இப்போது ராஜேஷ் வைத்தியா.  நானும் அவர் எங்கிருக்கின்றார் என்று தேடிக் கொண்டிருந்தேன்.  இணையத்தில் தேடியும் கிடைக்க வில்லை.  சரி பார்ப்போம் ஏதாவது வழி பிறக்கும் என்று நினைத்திருந்தோம்.

இந்த நம்மவர் பெரியவர் என்னைக் கடித்ததால், நாங்கள் சென்னை வனவிலங்குகள் துறையைக் கூப்பிட்டு இந்தக் கூட்டத்தைப் பிடித்துக் கொண்டு போகச் சொன்னோம்.  பல முறை புகார் கொடுத்து, வற்புறுத்த, அவர்களும் வீட்டிற்கு வந்து ஒரு பெரிய கூண்டை வைத்து விட்டுச் சென்றனர்.  ஒரு வாரம் கூண்டிற்குள் காரெட், பழங்கள், கடலை என்று எல்லாம் போட்டு வைக்கச் சொல்லிச் சென்றனர். அவை உள்ளே நுழைந்ததும் கூண்டு அடைத்துக் கொண்டு விடும்.  நாங்களும் போட்டு வைத்தோம். ஒரு வாரம், 10 நாட்கள் சென்றன.  பெரியவர் கூட்டம் வந்தது. பழங்கள், கடலைகள் எல்லாம் காலியாகின. ஆனால் கூண்டுக்குள் அல்ல.  சாமர்த்தியமானக் கூட்டம்.  அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.  எனவே ஒரு குரங்கு அந்தக் கூண்டுக் கதவைப் பிடித்துக் கொண்டால் மற்றொன்று உள்ளே சென்று உணவை எடுத்து வந்து விடும். இது எப்படி?
 
இதற்குள் ஒரு நாள் வனவிலங்குத் துறை ஆள் ஒருவர் வீட்டிற்கு வந்து, “இங்கு பிடி படவில்லை.  வேறொரு விஐபி புகார் கொடுத்துள்ளார்.  எனவே இந்தக் கூண்டை அங்கு எடுத்துக் கொண்டு போய் வைக்க வேண்டும்” என்று சொல்லி, அந்தக் கூண்டை மிதிவண்டியில் வைத்து அதைப் பிடித்துக் கொள்ள மகனையும் அழைத்துச் சென்றார்.  அந்த விஐபி இருந்ததும் அடையார்தான். நாங்கள் இருந்த வீட்டிலிருந்து 15 நிமிட நடை தூரத்தில்.  அங்கு சென்று கூண்டை வைத்துவிட்டு, அந்த ஆளும், மகனும் அந்த வீட்டின் அழைப்பு மணி அடித்துக் கூண்டு வைக்கப்பட்டதைச் சொல்லிவிட்டு தண்ணீர் கேட்டுக் குடிக்கலாமே என்று மணி அடிக்க கதவு திறந்ததும், மகனுக்கு மயக்கமே வந்து விட்டது. திறந்தவர் வேறு யாருமல்ல ராஜேஷ் வைத்தியா. அவர் கையால் தண்ணீரும் வாங்கிக் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டான் ஒன்றும் பேசாமல். நம்ம பையனுக்குத்தான் அது கஷ்டமாச்சே.

இருக்கும் இடம் தெரிந்து விட்டதால், மிகவும் அருகிலேயே என்பதால், நானும் அவனது பரீட்சை முடிந்ததும் அவரைத் தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்து, ஒருவாரம் கழித்து அங்கு சென்று பார்த்தால் வீடு பூட்டியிருந்தது.  கூண்டும் காணவில்லை.  அவர் வீடு மாறிவிட்டார் என்று தகவல் கிடைத்தது.  கண்ணிற்கு எட்டியது கைக்கு எட்டவில்லை.  பின்னர் மகனைச் சமாதானப்படுத்தி, நாங்கள் இருந்த வீட்டின் அதே தெருவிலேயே இருந்த ஹம்சத்வனி எனும் இசைப்பள்ளியில் வீணை வகுப்பில் மகனைச் சேர்த்து வீணை கற்றுக் கொண்டான்.


குரங்கு செய்த குறும்புகளின் அழகிய வீடியோ இருக்கின்றது ஆனால் அது 100 எம்பி க்கு மேல் உள்ளதால் ப்ளாகர் அனுமதிக்கவில்லை 

இப்போது நாங்கள் இன்னும் ஐஐடி வளாகத்திற்கு மிக அருகில் அதன் சுவரை ஒட்டினாற் போல் உள்ள இடத்தில் இருக்கின்றோம். ஒரு நாள் பால்கனி வழியாக வீட்டிற்குள்ளேயே நம்மவர் வருகை. எங்கள் செல்லங்கள் இரண்டும் குரைத்து விரட்டின. ஆனால் நம்மவர் “கொர் கொர்” என்று சண்டைக்குத் தயாராக இருந்தார். வீட்டிற்குள் வந்து பழம் சாப்பிட்டு விட்டு, கழிதலும் நடத்திவிட்டுச் சென்றார். நான் கடி வாங்கியது போல செல்லங்கள் வாங்கிவிடக் கூடாது என்று பால்கனி கதவுகள் மூடியபடியே. செல்லங்கள் குரைப்பதால், ஜன்னல் வழியாகச் செல்லங்களின் செயினை இழுத்து இழுத்து வம்பும் செய்கிறார். வீட்டு பால்கனியில் தினமும் நம்மவர் வருகைப் பதிவேட்டில் பதிகின்றார். மீட்டுபவர் தற்போது இங்கில்லாததால் வீணை மட்டும் அப்படியே சுவரில் சாய்ந்து நின்று கொண்டே தூங்குகின்றது தன்னை மீட்டுபவரை எதிர்பார்த்து.

-கீதா

பின் குறிப்பு: இதயவீணை தூங்கும் போது பாட முடியுமா?!! பாட முடியும் என்றாகி உள்ளது! விரைவில்!!





50 கருத்துகள்:

  1. விடா.... த தொடர்பு.....அப்பப்பா....பருப்பு சாப்பிட்டது பத்தாம காலைவேற கடிக்குதே...நினைத்தாலே பயமாக இருக்கிறது. தினமும் பார்க்க வந்து விடுகிறார்...ஆஞ்சநேய தரிசனம் தான் தினமும்.

    மீட்டுபவரை எதிர் பார்த்து வீணை...மீட்டுபவர் அதை கற்றுக் கொண்டு எப்படியெல்லாம் மீட்டினார்னு சொல்லவேயில்லையே...

    நல்லா நினைவு கூர்ந்து பதிவு செய்து இருக்கிறீர்கள்.

    தம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி! மகன் வீணை கற்றுக் கொண்டது இன்னும் முழுமை அடையாததால் சொல்ல வில்லை. தற்போது அது அப்படியே நிற்கின்றது. அவன் வர்ணம் வரை கற்றுக் கொண்டான். அவனாகவே கர்நாடக ராகங்களில் அமைந்த சில திரைப்படப்பாடல்களைக் கேட்டதும் அதற்கான ஸ்வரக் கோர்வைகள் எடுத்து வாசித்து விடுவான். அவன் கற்றுக் கொண்ட ஹம்சத்வனி பள்ளியின் ஆண்டு விழாவில் அவனும் , மற்றொரு பெண்ணும் சேர்ந்து மல்லாரியில் வாசித்தார்கள். அவ்வளவே அதன் பிறகு அவன் 12 ஆம் வகுப்பு வந்ததும் அவனுக்கு இருந்த சில குறைபாடுகளால் நேரம் நிர்வகிக்க முடியாமல் அவன் கஷ்டப்பட்டதால், அப்போதையத் தேவையான அவன் +2 பாஸாக வேண்டுமே என்று வீணை, கராத்தே வகுப்புகள் எல்லாவற்றிற்கும் ப்ரேக் போடப்பட்டன. எதில் அவன் கால் பதித்தாலும் அதை நன்றாகச் செய்கின்றான். ஆனால் அவனால் ஏதேனும் ஒன்றை மட்டுமே கவனமாகச் செய்ய முடிகின்றது. நம்மைப் போன்றோரை விட கொஞ்சம் எல்லாமே மிகவும் தாமதமாஅத்தான் செய்வான். பின்னர் கால்நடை மருத்துவம் பயில பாண்டிச்சேரி சென்றுவிட்டதாலும், எல்லா வகுப்புகளும் அப்படியே பின் தங்கிவிட்டன. அதனால் தான் அதைப் பற்றிச் சொலல்வில்லை. சகோதரி.

      மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு.

      நீக்கு

  2. வணக்கம்!

    நம்மவர் வந்தால் நலங்கேட்டேன் என்றுரைப்பீர்!
    வம்பவர் செய்தால் மனம்பொறுப்பீர்! - செம்பவள
    வாழை வழங்கிடுவீர்! மூத்த உறவன்றோ!
    பேழைக் கனிகளுடன் பேணு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மவர் வந்தவுடன் தங்கள் நலம் உரைத்தேன்
      வம்பவர் செய்தாலும் மனம் பொறுத்து - செம்பவள
      வாழையும், கடலையும், இன்ன பிற காய் கனிகளும்
      வழங்கிட்டேன்! நம்மவர் ஆனதால்!

      மிக்க நன்றி கவிஞரே! தங்கள் வருகைக்கும் அழகிய கவிதை வடிவான பின்னூட்டத்திற்கும்! நாங்கள் விலங்குகளை நேசிப்பவர்கள் ஆதலால் அவர்களை விரட்டுவது கிடையாது. இது அவர்கள் நிலம் தானே. நாம் தானே அவர்களதுஇருப்பிடத்தில் புகுந்து வசிக்கின்றோம். அவர்கள் எங்கு செல்வார்கள்?!

      மிக்க நன்றி கவிஞரே!

      நீக்கு
  3. :) மூதாதையர்கள் உங்களை விடாபிடியா துரத்தி இருக்காங்க .அவங்களுக்குள்ள ஒரு நெட் வொர்க் எதோ ஒரு கம்யூனிகேஷன் பின்னால் வருவதை முன்கூட்டியறிதல் இருக்கு சரியா ஒரு வருங்கால வெட்னரி டாக்டர் வீட்டைத்தேடி வந்திருக்காங்க :)
    எங்களுக்கும் அவங்களோட நிறைய அனுபவம் இருக்கு ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னால் வருவதை முன்கூட்டியறிதல் இருக்கு சரியா ஒரு வருங்கால வெட்னரி டாக்டர் வீட்டைத்தேடி வந்திருக்காங்க :)// ஹஹஹ்ஹ....இருக்கலாம்....

      ஒருவேளை தற்போது மகன் கால்நடை மருத்துவன் என்பதால் வைத்தியம் தேவைப்பட்டு வருகின்றார்களோ...அஹஹ்ஹஹ உங்கல் அனுபவங்களையும் எழுதலாமே! சுவாரஸ்யமாக இருக்குமே!

      மிக்க நன்றி சகோதரி!!

      நீக்கு
  4. மகனுக்கு இன்னொரு அதிஸ்ரம் கிடைக்காமலாபோகும் ஆதித்யாவிடம் வீணை படிக்க!சுவாரசியம் பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ஹஹஹ் பார்போம் கிடைக்கின்றதா என்று! கிடைத்தால் நல்லது, தங்களை நினைவு கூர்ந்து கண்டிப்பாகத் தகவல் சொல்கின்றோம்...

      நீக்கு
    2. மிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  5. குதித்துக்கும்மாளமிடும் மலரும் நினைவுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! சகோதரி! மிகவும் நல்ல நினைவுகள் எப்போதுமே நம்மவர்கள நம்மை மகிழ்விக்கத்தானே செய்வார்கள்!

      மிக்க நன்றி!

      நீக்கு
  6. மதிப்பிற்குரிய கீதா (அம்மையார்) அவர்களுக்கு,

    இதுதான் நான் உங்களின் முழு பதிவை முதன் முதலாக வாசித்தது.

    என்னே ஒரு நடை ஓட்டம் உங்கள் எழுத்துக்களில்.

    வேதனையும் விளையாட்டாக சொல்லியிருக்கின்றீர்கள்.

    பூர்வ ஜென்ம பந்துக்களின் சாகசங்களை சளைக்காமல் புன்னகையுடன் சொல்லி இருக்கின்றீர்கள்.

    முன்னோர்களின் புகைப்படங்களும் நன்றாக இருக்கிறது.

    உங்களுக்கு கோபம் வராதா?

    வீட்டிற்குள் வந்து பழம் சாப்பிட்டு விட்டு, கழிதலும் நடத்திவிட்டுச் சென்றார் என்று சொல்லி இருந்தீர்கள். முன்னோர்களுக்கு புத்தி கூர்மை அதிகம் அதனால்தான் "பழ யன கழித்தல்" அறிந்திருக்கின்றன.

    மகனின் வீணை பயிற்ச்சியும் முயற்சியும் சிறந்து பலன் தர வாழ்த்துக்கள்.

    இதய வீணை தூங்கும்போது பாட முடியாதுதான், ஆனால் இதய வீணையை தூங்காமல் தட்டிகொடுத்து விழித்திருக்க செய்து இதுபோன்ற இன்னும் பல நாதங்கள் எழுப்பிக்கொண்டே இருங்கள், இப்போது நான் தூங்கபோகின்றேன் இங்கே மணி இரவு 12.30.

    இன்றைய நாளின் என் புதிய பதிப்பில் என்னை அறியாமலே கோ-இன்சிடண்டாக நான் இணைத்த படமும் உங்களின் இந்த பதிப்பின் நாயகர்கள்தான்--என்னே சிமிலர் தாட்.--WISE PEOPLE THINK ALIKE !!!!..

    வாழ்த்துக்கள்.

    நன்றி நண்பருக்கும்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! நண்பரே! தங்களின் பாராட்டிற்கு.

      இதய வீணை தூங்கும்போது பாட முடியாதுதான், ஆனால் இதய வீணையை தூங்காமல் தட்டிகொடுத்து விழித்திருக்க செய்து இதுபோன்ற இன்னும் பல நாதங்கள் எழுப்பிக்கொண்டே இருங்கள், இப்போது நான் தூங்கபோகின்றேன் இங்கே மணி இரவு 12.30.//

      நாதங்கள் எழுப்ப உங்கள் தூக்கம் கெட்டுவிடாதோ? சரி பகலில் எழுப்புகின்றோம்...

      WISE PEOPLE THINK ALIKE !!!!.. பார்த்துவிட்டோம்....மிகவும் மகிழ்ச்சி!

      நீக்கு
  7. நம்மவருக்கு உங்கள் மேல் இவ்வளவு பிரியமா...? ஒருவேளை வீணை மீட்டினால் ஓடிப் போய் விடுமோ...? ஹிஹி...

    பதிலளிநீக்கு
  8. நம்மவர் குறித்த படங்களும்
    அனுபவங்களும் அதை விவியரித்த விதமும்
    மிக மிக அருமை
    அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்த்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார் தங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும்.

      நீக்கு
  9. வாழ்க வளமுடன்!..

    தங்களைத் தொடர்வது - ஏதோ இனம் புரியாத அன்பு தான்..
    அதையும் நகைச்சுவையுடன் சொல்லியிருப்பது - அருமை!..

    வீணை பயிலும் தங்கள் அன்பு மகனுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ் இருக்கலாம் ஐயா! மிக்க நன்றி தங்கள் வாழ்த்துகளுக்கும்!

      நீக்கு
  10. தலைப்பு சூப்பர்.
    அப்பா, நம்மவரைப் பற்றி இவ்வளவு பெரிய பதிவா...
    நம்மவருக்கு மற்றவர்களை காட்டிலும், உங்களிடம் தான் அதிகம் பிரியம். இல்லையென்றால் இப்படி விடாமல் வருவார்களா?

    படிக்க ரொம்ப சுவராசியமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பு - க்ரெடிட் கோஸ் டு துளசி. துளசிக்கு ரொம்ப தாங்க்ஸ்!

      ஹஹஹ்ஹ் நம்மவருக்கு பாசம் அதிகம் தான் போல மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  11. நாங்களும் நம்மவரைப் பல சந்தர்ப்பங்களில் எதிர்கொண்டிருக்கிறோம்.ஆனால் உங்கள் அளவு அடிக்கடி அல்ல. நினைத்துப் பார்க்கும் போது சுவையாக இருக்கும் அனுபவங்கள் அது நேரும் போது பயமாக அல்லவா இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்! அவர்கள் எப்போதுமே சுவையானவர்கள் தான் சார்!

      நீக்கு
  12. மூதாதையர்களின் தொல்லை ஒருகாலத்தில் எங்கள் ஊரில் அதிகம் இருந்தது! இப்போது அதிகம் இல்லை! எப்போதாவது வெளியூரிலிருந்து வருபவரால் மட்டுமே தொல்லை! வீணையில் அசத்த உங்கள் மகனுக்கு எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொல்லை என்று சொல்வதற்கில்லை. நண்பரே! அவர்களும் எங்கு செல்வார்கள்? அவர்கலது இடம் குறைந்து வருவதால்....மிக்க நன்றி நண்பரே! மகன் இனி எப்போது வீணை வாசிப்பார் என்று தெரியவில்லை...பார்ப்போம்.

      நீக்கு
  13. #குரங்கு செய்த குறும்புகளின் அழகிய வீடியோ இருக்கின்றது ஆனால் அது 100 எம்பி க்கு மேல் உள்ளதால் ப்ளாகர் அனுமதிக்கவில்லை#
    அவைதான் எம்பி எம்பி சேஷ்டை செய்ததென்றால் நூறு எம்பி அளவிற்கு படம் பிடித்து உள்ளீர்களே ,உங்களுக்குத்தான் முன்னோர்கள் மீது எவ்வளவு பாசம் ?
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் முன்னோர்கள் மட்டுமல்ல எல்லா விலங்குகள் மீதும் மிகவும் பாசம் உண்டு ஜி! நல்ல கேமரா இருந்தால் இன்னும் அதிகம் எடுக்கலாம்...

      மிக்க நன்றி ஜி!

      நீக்கு
  14. இந்த பதிவை படித்து முடித்ததும் எனக்கு தோன்றியது தாங்கள் நம்மவரோடு பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்தது தெரிகிறது
    ஒரு குரங்கு அந்தக் கூண்டுக் கதவைப் பிடித்துக் கொண்டால் மற்றொன்று உள்ளே சென்று உணவை எடுத்து வந்து விடும்.
    ரசித்தேன் இருந்தாலும் நம்மவரை பிடித்துக் கொடுக்க எப்படித்தான் உங்களுக்கு மனசு வந்துச்சோ...
    நம்ம மூதாதையர் இல்லையா ? அவுங்களுக்கும் தினம் நேரப்படி லஞ்சுக்கு ஏதாவது அரேஞ்ச் செய்து கொடுத்திருக்கலாம்.
    காலைக்கடிச்சதுக்கு காரணம் புரிஞ்சுச்சா ? அவுங்கதான் தன்னோட நாத்தனார் மகனுட்ட சொல்லி கடிக்கச்சொன்னது.

    பாவம் கடிபட்டதற்காக... (அதுசரி இது எப்போ ?) த.ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்பு நிறையவே உண்டு ஜி! பிடித்துக் கொடுக்க எங்களுக்கு ஆசை இல்லை. வீட்டைக் சுற்றி இருந்தோ எல்லோரும் புகார் கொடுக்கச் சொன்னதாலும், குழந்தைகள் நிறைய பேர் இருந்ததாலும் கொடுக்கச் சொன்னதால் கொடுத்தோம்ன். அவங்களுக்கு லன்ச் என்ன ப்ரேக் ஃபாஸ்ட் முதல் நம்ம வீட்டுல உண்டு...அதான் நம்ம வீட்டுலயே குடியிருப்பு...இப்பவும் அதே....பழம், கடலை, எல்லாம்...

      கடிச்சதுக்கு காரணம் அப்படியோ....அட!? நன்றி ஜி!

      நீக்கு
  15. பயங்கர அனுபவமாக இருக்கிறதே.....

    தில்லியிலும் இருந்த காடுகள் பலவும் அழிக்கப்பட, அலுவலகங்களுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் நம்மவர்களின் தொந்தரவு அதிகரித்து விட்டது! இவற்றை விரட்ட சில வருடங்கள் லங்கூர் வகை குரங்குகளை 6000 சம்பளத்தில் வேலைக்கு வைத்திருந்தார்கள். அவற்றை துன்புறுத்துகிறார்கள் என வேலையிலிருந்து தூக்கி விட்டு, அதை வளர்த்த ஆட்களே இப்போது லங்கூர் மாதிரி சத்தம் எழுப்பி குரங்குகளை ஓட்டுகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! சுவாரஸ்யமாக உள்ளதே! லங்கூர் வேலைக்கா?! ஹஹஹ்..நல்ல தகவல் வெங்கட்ஜி! மிக்க நன்றி! உங்களுக்கும் நல்ல அனுபவம் தான்....பதிவு போடலாமே!

      நீக்கு
  16. எங்கள் தெருவில் மூன்று குரங்குகள் நிரந்தர வாசம் செய்கின்றன சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ்ஹஹ 3 அப்போ குறும்புகளுக்குப் பஞ்சமே இருக்காதே! வீடு ஏதேனும் கேட்கின்றனவா? உங்கள் தெருவில் குடியிருக்க?! ஹஹ மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  17. நட்பு வேண்டுகோளை ஏற்று எழுதிய பதிவு... நன்றி சகோதரி....
    த.ம பத்து
    நகை, சுவை, திகில் என பல்வேறு உணர்வுகள்.
    ராஜேஷ் பக்கத்து வீட்டில்.... ?
    நீங்கள் தப்பியது அதிர்ஷ்டம்தான்
    கர்மா?
    பொதுவாக கெண்டைக் காலை கடித்தால் வைரஸ் விரைவில் நரம்பு மண்டலத்தில் கலந்துவிடும்.
    பெரியவர் வைரஸ் இல்லாதவர். நல்ல வேளை.
    தொடரட்டும் பதிவு ..

    பதிலளிநீக்கு
  18. ராஜேஷ் பக்கத்து வீட்டில் இல்லை சகோதரரே! அருகில் இருந்தார் ஆனால் பின்னர் மாறிவிட்டாரே! கர்மாவா? தெரியவில்லை...

    ஆம் கெண்டைக்கால் கடிபட்டால் ...நீங்கள் சொல்வது சரியெ...அதனால்தான் மகன் மிகவும் பயந்து விட்டான். அவன் என்னைத் துரிதப்படுத்தியதும் அதற்கே....பயந்தது அதனால்தான்...அவன் அன்று இரவு மட்டுமல்ல பல இரவுகள் தூங்கியது இல்லை. நாங்கள் அவரை மிகவும் வாச் செய்து கொண்டிருந்தோம்...10 நாட்கள் ....அவர் பின்னர் காணவில்லை.... னான் சொல்லி விட்டேன் ஒருவேளை ரேபிஸ் வந்துவிட்டால் உடனே கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று......அதன் பிறகு நாய்களைக் கையாண்டதால பல ரேபிஸ் ஊசிகள் போட்டுக் கொண்டாயிற்று....

    மிக்க நன்றி சகோதரரே!

    பதிலளிநீக்கு
  19. அவர்களுக்கு கொண்டாட்டம் நமக்கு திண்டாட்டம் நல்ல அனுபவப் பதிவு அய்யா.......

    பதிலளிநீக்கு
  20. கில்லர்ஜி அண்ணா காந்தி பதிவை தொடர் ஆகிய நேரம் எந்த பக்கம் திரும்பினாலும் குரங்கா இருக்கே!! நோ!! நோ!! அவசரப்பட்டு கல்லை, கட்டையை தூக்காதீர்கள் தோழி!! நான் சொல்லவந்தது, நம்ம தென்றல் கீதாவும் இப்போ ரீசன்ட் டா இது பத்தி எழுதினாங்களா!! இப்போ அன்ஜெலின் இது பற்றி எழுதியிருகிரார்கள் என்று சொல்லவந்தேன். குரங்கு பற்றிய பதிவல்லவா அதான் வலைக்கு வலை தாவியிருக்கு:)) but செம காமெடி போங்க படிச்சு சிரிச்சுகிட்டே இருந்தேன்:)))))
    யாரு கண்டா வாழ்கை எந்த நாவலை விடவும், திரைப்படத்தை விடவும் சுவாரஸ்யமானது!! டாக்டர் அவர்கள் ரமேஷ் வைதியாவோடு ஒரு நிகழ்ச்சி செய்யும் நாள் கூட வரலாம். அப்படி வந்தால் எங்களை நிகழ்ச்சிக்கு அழைக்க மறக்காதீர்கள்:))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ஹஹ்ஹஹ்..ஆமாம் மைதிலி, தென்றல் கீதா எழுதியதும் தெரியும், நாங்கள் தொடர ஏஞ்சலின் அவங்க பதிவுல ,,,இங்க சொல்லியிருந்தாங்க அவங்க...அவங்க அப்பாவும் வெட் தான்...

      ராஜேஷ் வைத்தியாவுடன் நிகழ்ச்சியா...ஆஹா ! முதலில் மகன் விட்டதைத் தொடரவே இல்லையே. ம்ம்ம் தங்கள் வாக்கு நடந்தால் மிகவும் மகிழ்ச்சி. தங்களை மறப்பதாவது?!!!! நிச்சய்மாக அழைப்பு உண்டு. எந்த நல்ல நிகழ்வானாலும் அழைப்பு உண்டு!

      நீக்கு
  21. எதையும் இரசிக்கும்படி எழுதலாம் என்பதற்கு இப்பதிவே சான்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும்!

      நீக்கு
  22. வீணை கற்றது பற்றி சொல்ல வந்து நம்மவர்கள் பற்றி ரசனையாய் சொல்லியிருக்கிறீர்கள்... அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகனது வீணை கற்றல் முழுமை அடையவில்லை. அது தொடங்கியது நம்மவரால்தான் என்பதால் தான் அவர்களைப் பற்றிச் சொல்லி, உறங்குகின்ற வீணை என்ற தலைப்ப்பு....நண்பரே! மிக்க நன்றி தங்கள் அழகிய கருத்திற்கு!

      நீக்கு
  23. அன்புள்ள சகோதரி,

    ‘ உறங்காத குரங்குகளும், உறங்குகின்ற வீணையும்’ பரிணமான வளர்ச்சி பெற்று வந்தவர்கள் என்பதற்காகவா இவ்வளவு இரக்கப்பட்டு நம்மவர்களுக்காக எவ்வளவு உதவி செய்திருக்கிறீர்கள்...! உண்மையில் அந்த அய்ந்தறிவு ஜீவன்களுக்கும் அன்பு காட்டவேண்டும் என்று தங்கள் உள்ளத்தில் இடம் இருத்ததால்தான் இவ்வளவு இன்னல்களையும் ( கெண்டைக்கால் தசை பெரியவரின் வாயில்! நான் வலியைப் பொறுத்து கீழே விழ மீண்டும் கடி, அந்தத் தசை போதவில்லை போலும்!அப்படியாக மிகவும் ஆழமாக இரண்டு இடங்களில் கடி வாங்கி...) பொருத்துக்கொண்டு நம்மவர்களைப் துன்பப்படுத்த வேண்டும் என்று எண்ணாத தங்களின் உள்ளத்தை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.

    நாங்கள் வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்ற பொழுது பல விதவிதமான குரங்குளைப் பார்த்து இரசித்தது நினைவிற்கு வந்தது. சிம்லா என்றதும் எனக்கு நினைவிற்கு வந்தது... நாங்கள் சிம்லா சென்றிருந்த பொழுது மழை பெய்து கொண்டிருந்தது...இரவாகிவிட்டது...மலையிலிருந்து பேருந்தில் கீழே இறங்கிக் கொண்டு இருக்கிறோம்... ஒரு திருப்பத்தில் திரும்புகின்றபொழுது சாலையோற விளிம்பிற்கே... சென்று திருப்பத்தில் திரும்பமுடியாமல் பேருந்து நிற்கிறது... ஓட்டுநருக்கு ஒரு காலில் காயம்பட்டு கட்டுப்போட்டபடியே ஒரு காலின் பலத்தால்தான் பேருந்தை ஓட்டி வருகிறார். பேருந்து பின்னுக்கு வரவேண்டும்.... எதிரே அதலபாதாளமான பள்ளம்... உள்ளே இருந்த எங்களுக்கு ஒரேஅச்சம் ... பின் பக்கம் இறங்க கதவு கிடையாது...முன்பக்கம் ஒரு கதவுதான்...ஆனால் முன்னே யாரும் செல்லக்கூடாது... இறங்கவும் கூடாது என்று கூறிவிட்டார்கள்... முன்னால் சென்றால் வண்டியின் பாரம் முன்னால் அதிகமாகி பேருந்து பள்ளத்தில் விழுந்து விடும் என்று யாரையும் இறங்கவும் அனுமதிக்கவில்லை.... ரிவர்ஸ் எடுத்து விட்டால் பரவாயில்லை...பிறகு பேருந்தை திருப்பிவிடலாம்... ஆனால் கொஞ்சம் முன்னால் நகர்தாலும் பள்ளத்தில் விழுந்து விடும்... ஓட்டுநருக்கு ஒரு கால் பலத்துடனே செயல்படக்கூடியவராக இருக்கிறார்.... அனைவரும் பேருந்துக்குள் பயந்து கொண்டே அமர்ந்திருந்தோம்... ரிவர்ஸ் எடுத்தார்...இன்ஞ் பை இன்ஞ்சாக பின்னால் நகர்த்தி... அதன்பிறகு அந்த வளைவில் பேருந்தை திருப்பினார்.... உயிர் போய் உயிர் வந்ததது என்பார்களே.... அன்றைக்கு அவ்வாறு இருந்தது... சிம்லா என்றால் இதை எங்களால் மறக்க முடியாது...!

    சரி அதை விடுங்க.... உங்க கதைய கேட்கப் போய் .... எங்க கதைய சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.

    ஆமாம்...அதனால்தான் மகனை விலங்கின மருத்துவராக்கி விட்டீர்களோ! பரவாயில்லையே....!
    கலைமகள் கைப்பொருளே...
    உனை மீட்டவும் ஆள்இல்லையோ?
    விரைவில் வீணை மீட்ட...
    வாழ்த்துகள்....!

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடியோவ்! என்ன கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற ஒரு அனுபவம். கடவுளே! மறுபிறவி போல உள்ளது. நீங்கள் விவரித்திருப்பதைப் படித்த போது கண் முன்னே காட்தி விரிவடைந்து அச்சம் வந்தது. நல்ல காலம் பிழைத்தீர்களே எல்லோஉம். அந்த ஓட்டுனர் உண்மையாகவே திறன் வாய்ந்தவர்தான் போலும்....ஆனாலும் உள்ளுக்குள் உங்களுக்கு எவ்வளவு திக் திக் திகில் இருந்திருக்கும். திகில் அனுபவம் தான். பகிர்வுக்கு மிக்க நன்றி!

      விலங்குகள், இயற்கை ஆர்வம் அதிகம். அதனால்தான் மகன் மிகச் சிறு வயது முதலே கால்நடை மருத்துவர் ஆக விழைந்த் போது அதை ஊக்குவித்து ஆர்வத்தை வளர்த்தோம்.

      கலைமகள் கைப் பொருளை மகன் எப்போது மீட்டப் போகின்றான் என்று தெரியவில்லை. தற்போது தனது எதிர்கால இலட்சியத்தில் குறியாக இருப்பதால்....

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  24. வணக்கம்
    அண்ணா.

    நம்மவர் மீது உள்ள அன்பு கண்டு மகிழ்ச்சியடைகிறேன்....விரிவான விளக்கம் பகிர்வுக்கு நன்றி
    த.ம12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு