வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

திரு இராய செல்லப்பா அவர்களின் “தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்” சிறுகதைத் தொகுப்பு – ஒரு பார்வை.


  
   செல்லப்பா தமிழ் டைரி - http://chellappatamildiary.blogspot.com/   இமயத் தலைவன் - http://imayathalaivan.blogspot.in/, என்ற, தனது இரு வலைப்பூக்களில், அனாயாசமாக, தன் திறமை மிக்க எழுத்துக்களால் மாலை கோர்க்கும் திரு. இராய.செல்லப்பா அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பாகிய “தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காயை வாசிக்க நேர்ந்தது, அவரின் உபயத்தால். நாங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த வேளையில், புத்தகம் எங்கள் வீடு தேடி வந்ததை நினைத்து அளவற்ற மகிழ்சி அடைந்தோம்.  அவரது புத்தகத்தை அனுப்பித்தந்த திரு. இராய. செல்லப்பா அவர்களுக்கு எங்கள் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.



தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய், 12 சிறுகதைகளின் தொகுப்பு.  அகநாழிகை பதிப்பக வெளியீடு.  அவர் பணியின் நிமித்தம் 15 ஊர்களில் வாழ நேர்ந்த சந்தர்ப்பத்தினால் ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து பிறந்த கதைகள் என்பது ஊகிக்க முடிகின்றது! அதுவும் தற்போது அமெரிக்காவில் ஒரு காலும், இந்தியாவில் ஒரு காலுமாய் இருப்பவர்க்கு, அவரது அமெரிக்க அனுபவமும் பல கதைகள் பிறக்கக் காரணமாய் இருக்கக் கூடும் என்பதற்கு, இந்தத் தொகுப்பில், அமெரிக்காவை கதைத் தளமாகக் கொண்டுள்ள 3 கதைகள் அத்தாட்சியாய் உள்ளன!!

ஆரம்பமே, “கண்ணே கலைமானே என்ற கவித்துவமான தலைப்பில், அமெரிக்கப் பின்னணியில் நடக்கும் ஒரு கதை. மனிதரானாலும் சரி, விலங்குகளானாலும் சரி, தாய் சேய் பிணைப்பு என்பது உன்னதமான ஒன்று என்பதை ஒரு சிறுமிக்கும், மானிற்கும் இடையில் ஏற்படும் அன்பின் பிணைப்பினால் மிக அழகாகச் சொல்லிச் செல்கிறார். அவரது வார்தைகளிலேயே,
“மனுஷரோ, மிருகமோ, யாராயிருந்தாலும் தாய்க்கும், கொழந்தைக்கும் உள்ள உறவுதான் ரொம்ப ஒசந்த உறவுன்னு உனக்குப் புரிஞ்சுது இல்லையா? என்று, ராஜம்மா என்ற பாட்டி கதாபாத்திரம், தன் பேத்தி, சிறுமிக்குத் தாயின் மேன்மையைச் சொல்லியிருப்பது அருமை! இந்தக் கதையில் அமெரிக்கப் பள்ளிக்கும், இந்தியப் பள்ளிக்கும் உள்ள வித்தியாசத்தை இலை மறை காயாக, அதே ராஜம்மா கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

 “கடன் என்கின்ற இரண்டாவது கதையில்,  கதையைச் சொல்லும் கதாபாத்திரமாகிய சிறுவனுக்கும், சத்யா என்கின்ற சிறுமிக்கும், சிறு வயதில், படிக்கும்போது போட்டியில் ஆரம்பிக்கும் நட்பு, இடையில் பிரிந்தாலும், கல்லூரிக் காலம் வரும்போது. சத்யாவைப் பற்றி நண்பன் நினைவுபடுத்தும் போதுதான், அடிமனதில், மறைமுகமாக காதலுடன் அமிழ்ந்திருந்த அந்த ஆழமான நட்பு வெளிவந்து, காதல் என்பது புரிகின்றது. இதைக், கதையை வாசித்து வரும் போதே ஊகிக்க முடிகிறது என்றாலும், வித்தியாசமான. அந்த முடிவு, கதை சொல்லும் கதாபாத்திரத்திற்கு மட்டுமல்ல வாசிக்கும் நமக்கும் இதயத்தைக் கனக்க வைக்கிறது.

“பிருந்தாவனமும் மந்தாகினியும் என்ற கதை, கடிதம் மூலம் கதை சொல்லும் உத்தியில் சொல்லப்பட்ட அழகான கதை!  ஆங்கிலத்தில் இந்தக் கதை உத்திக்கு Epistolary என்று சொல்லுவர். இது மூன்று வகை Monologic – ஒரே ஒரு கதாபாத்திரம்.  Dialogic – இரண்டு கதாபாத்திரங்கள். Polylogic – பல கதாபாத்திரங்கள்.  கடிதம் மூலமாகவோ, டைரி மூலமாகவோ கதை நகரும் கதை உத்தி.  இந்தக் கதையில் மூன்று கதாபாத்திரங்கள் எழுதும் கடிதங்கள் மூலமாக கதை மிக நேர்த்தியாகச் சொல்லப்படுகிறது.  இந்தக் கதையின் முடிவும், கண்டிப்பாக, இதை வாசிக்கும் பலருக்கும் அவர்களது வாழ்வில் நிகழ்ந்த இது போன்ற சம்பவங்களை  நினைவுக்குக் கொண்டு வரும்!

இரண்டாவது கிருஷ்ணன் எனும் கதை மிகவும் அருமையான கதை! தனது இழப்புகளை மட்டுமே சிந்தித்து, மருகி வாழும் இந்தச் சமூகத்தில், தனது இழப்பின் வலியையும் பொருட்படுத்தாமல், தங்களுக்கு நேர்ந்த இழப்பு இனி ஒருவருக்கும் வரக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் ஒரு மருத்துவர், நேரில் கூடச் சந்திக்காத ஒருவருக்கு உதவுவது, மனித நேய மனோபாவமுள்ள மனிதர்களும் இந்தச் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பதைச் சித்தரிக்கின்றது!

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் கதை அச்சு அசலாகக் கிராமீய மணம் கமழும் கிராமத்தையும், அந்த மணத்தில் இழையோடி இருக்கும் ஒரு தாத்தாவின் அன்பையும் விவரிக்கும் கதை!  இந்தக் கதையை வாசிக்கும் பொழுது  பாரதி ராஜாவின் படத்தில் ஒரு கிராமம், எப்படி விரியுமோ, அதே போல அப்படியே மனக் கண் முன் விரிக்கின்றார் ஆசிரியர்.  நகரத்து வாழ்க்கைக்குப் பழக்கமாகியவர்களுக்கு, "நாமும் சிறுவனாகி, இது போல ஒரு அன்பான தாத்தாவும், கிராமமும் நமக்கும் கிடைக்காதா" என்று ஏங்க வைக்கும் என்பது சர்வ நிச்சயம்! ஆசிரியரின் சிறுவயது அனுபவங்களோ?!  அப்படி இருந்தால் கொடுத்து வைத்தவர்! தாத்தாவின் அன்பு அந்த வெள்ளரிக்காய்களில் தெரிகின்றது!

அன்னையைத் தேடி எனும் கதை, தாயின் சிறப்பைத் தாங்கி வரும் மற்றொரு கதை! ரயிலில் தன் தாய் செய்த பலகாரம் என்று விற்று தன் கல்வியைத் தொடரும் சிறுவன், இறுதியில் தன் தாயைத் தேடிப் போவது(தாயின் புகைப்படத்தை), இதயத்தை கனக்க வைக்கிறது!

ஊன்று கோல் நானுக்கு கதையின் தலைப்பே கதையைச் சொல்லி விடுகிறதோ?! கதைத் தளம் அமெரிக்கா. காலிழந்தாலும் நம்பிக்கையோடு வாழ்வை எதிர் நோக்கும் பெண்ணின் மனது, ஒரு சுயநலக் காதலனால் சிதைக்கப்பட்டாலும், அவளுக்கு ஊன்றுகோலாக இருக்க விழைந்து துளிர்க்கும் ஒரு காதலைப் பற்றி, அழகிய நடையில் சொல்லிச் செல்கிறார்!.  நமக்கு இப்படி ஒரு ஊன்றுகோல் கிடைக்காதா? என ஏங்க வைக்கும் கதை! 

  ஒரு தாயின் மேன்மையை மிகச் சிறப்பாகச் சொல்லிப் போகும் கதைதான்  பழமா பாசமா எனும் கதை! பழரசம் நம் கண்களில் கண்ணீராக எழும்பி, நம் தாயைக் கண்ணுக்கு முன் கொண்டு வந்து இதயத்தை உலுக்கி விடுகிறது!

நம் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களுக்கு நம்மால் காரணம் கற்பிக்க முடியாது. எல்லாமே கணக்குதான்! எங்கேயோ, அமெரிக்காவில் ஏதோ ஒரு மூலையில் ஒரு வண்ணத்துப் பூச்சி இறக்கையை அசைக்க, சில வருடங்கள் கழித்து கன்னியாகுமரியில் பெய்யும் மழைக்கு அதுதான் காரணம் என்று Chaotic Theory சொல்லுவது போல், நாம் நம் தத்துவங்களின் அடிப்படையில் பொதுவாகப் பாவ புண்ணியக் கணக்கைச் சொல்லி நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கு விடை தேட முயல்வதுண்டு!. கிட்டத்தட்ட அது போல,  வறுமையிலும் நேர்மையைக் கடைபிடிக்கும் ஏழை சாஸ்திரிகளுக்கு, பலன் எதிர்பாராமல் அவர் செய்யும் ஒரு நற் காரியத்தால், இறைவன், முன்பின் அறியாத ஒரு அரசியல்வாதியின் மூலம் சாஸ்திரியின் பெண் படிப்பதற்கு உதவித் தொகை கிடைக்க அருள்கிறார் என்று நேர்மறைக் கொள்கையைச் சொல்லும் கதை தான், “சாந்தி நிலவ வேண்டும். அதாவது "GOOD WILL BE REWARDED" எனப்தைச் சொல்லும் கதை. “கலைமகள்வழியாக நடத்தப்பட்ட அமரர் திருமதி பிரபா ராஜன் நினைவு சிறுகதைப் போட்டியில்(2013) இரண்டாம் பரிசு பெற்ற கதையாகும்!  
 
சாதிக் கலவரத்தில் தன் கணவனையும், குழந்தையையும் தொலைக்கும் ஓர் ஏழைப் பெண், அவர்கள் உயிரோடு இருக்கின்றனரா இல்லையா என்பதைக் கூட அறியாமல், நம்பிக்கையோடு தேடி, அதனால் மன நிலை பாதிக்கப்பட்ட போதும் கூட தன் “முடிவற்றத் தேடல்களைத் தொடரும் உயிரோட்டமுள்ள கதை. இதை வாசிப்பவர்கள், கடலூர் செல்ல நேர்ந்தால், கடலூர் பேருந்து நிலையத்தில் அந்தப் பெண் இருக்கின்றாளா என்று மனமும், கண்களும் தேட வாய்ப்புண்டு!

கந்துவட்டி வசூல் செய்ய வந்த வாலிபனுக்கும், ஒரு கன்னிப் பெண்ணிற்கும் இடையே மலரும் காதலை, கதாசிரியர்,  அவருக்கே உரிய நடையில் மிக அழகாகச் சொல்லிச் செல்கிறார், மனோரமா எனற, அந்தத் தைரியமான பெண்ணின் பெயரைத் தாங்கி வரும் கதையில்.!

பள்ளி ஆசிரியராகப் பொறுப்பேற்று, தான் செல்லும் கிராமத்தில், 7 இரவுகளில், தனக்கும், சக ஆசிரியர்களுக்கும், அந்த ஊரிலுள்ள் ஒரு சிலருக்கும் இடையே நடக்கும் வித்தியாசமான சம்பவங்களைக் கோர்வையாக ஒரு மாலையாகக் கோர்த்து தந்திருக்கிறார் 7 இரவுகள் என்ற கதையில்.  இந்தக் கதை கொஞ்சம் பெரிதாக இருந்தாலும், இன்னும் இரவுகள் இல்லையா எனக் கேட்கத் தோன்றுகிறது!

உயிர்ப்பான உயிரோட்டத்துடன், மனித வாழ்வைப் பற்றி, செழுமையான எழுத்துடன், தான் கண்ட மனிதர்களின் கதாபாத்திரங்கள் மூலம் சொல்லும் 12 கதைகளிலுமே ஆசிரியரின் அனுபவம் இழைந்து, வெகு இயல்பான, அவருக்கே உரித்தான அழகிய நடையில், ஒரு அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் போல், நம்மையும் அழத்துச் செல்லுகிறார்!  சில இடங்களில் சிறிய நகைச்சுவை இலைமறை காயாக வந்து பளிச்சுடுவது, எழுத்தாளர் சுஜாதா அவர்களை நினைவுக்குக் கொண்டுவருகின்றது! மொழி மற்றும் சொல் ஆளுமை, கதையைச் சொல்லிச் செல்லும் விதம், கற்பனை எல்லாமே ஆசிரியரின் கதை சொல்லும் ஆளுமையைப் பறைசாற்றுகின்றது எனலாம். சில இடங்கள் நம்மை அறியாமலேயே உதட்டோரம் புன்னகையை வரவழைக்கிறது! ஒரு சில கதைகள் நம் மனதை உலுக்கி, கண்களில் நீர் நிறைப்பதைத் தவிர்க்க முடியவில்லை! ஒரு எழுத்தாளர் தான் கண்டதையும், உணர்ந்ததையும், அது போலவே வாசிப்பவர்களுக்கும், தன் வசீகரிக்கும் வாக்குகளால் காண்பிப்பதிலும், உணர்த்துவதிலும், வெற்றி கண்டால் அந்தப் படைப்பு வெற்றிப் படைப்பாகிவிடும். அப்படி, வெற்றிப் படைப்பாகிவிட்ட இந்த “தாத்தா தோட்டத்து 12 வெள்ளரிக்காய்களைச் சுவைக்கும் பாக்கியம் பெற்றவர்கள், திரு. இராய. செல்லப்பா அவர்களுடன், அவரது மனம் என்னும் தோணி ஏறி அவர் கண்டதை எல்லாம் கண்டு, அவற்றை அவர் உணர்ந்தது போல் உணர்ந்து இன்புற வாய்ப்பு கிடைக்கப் பெற்ற அதிர்ஷ்டசாலிகள் என்பதுதான் உண்மை!
      
- துளசிதரன், கீதா
,  

22 கருத்துகள்:

  1. மிகவும் தெள்ளத் தெளிவாக கதைகளில் புதைந்து கிடக்கும் உணர்வுகளை
    ரசித்து ரசித்து கதைகளுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் ஓர் அணிந்துரையை
    எங்கள் மனமும் முழுமையாக உள் வாங்கி வாசிக்கும் படியாக எழுதியுள்ளீர்கள் !
    கதாசிரியருக்கும் தங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்
    தெரிவிப்பதில் பெருமை கொள்கின்றேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! சகோதரி! தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும்!

      நீக்கு
  2. வணக்கம்

    இமயத்தலைவர் கவிஞர் இராய .செல்லப்பா ஐயாவின் இந்த புத்தகம் பற்றி நான் படிக்கா விட்டாலும் பல வலைப்பூக்களில் புத்தகம் பற்றிய விமர்சனம் படிக்க கிடைத்தது.... ஆனால் தங்களின் பார்வையில் இந்த புத்தகம் பற்றி சொல்லிய விமர்சனக்கருத்து.. ஒரு வித்தியாசமாக உள்ளது என்னையும் புத்தகம் வேண்டி படிக்க சொல்லுகிறது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! சகோதரா! தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும்! ஓட்டிற்கும்!

      நீக்கு
  3. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. மிகவும் சிறப்பான விமர்சனம்... குறிப்பிட்ட ஒரு கதை நெஞ்சில் 'ங்' என்று உட்கார்ந்து விட்டது... (இன்னும் முழுதாக படித்து முடிக்கவில்லை...)

    எங்களின் நடுவர் + இமயத் தலைவன் திரு. இராய செல்லப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. விருப்பமுடன் புத்தகத்தை வாங்கி வைத்து விட்டு, இன்னும் படிக்கத் துவங்காமலிருக்கும் என்னை, ‘உடனே படிறா’ன்னு தலையில தட்டிச் சொல்ற மாதிரி அழகா ஒவ்வொரு சிறுகதையையும் விமர்சனம் பண்ணியிருக்கீங்க. சூப்பர்!

    பதிலளிநீக்கு
  7. //Epistolary Monologic – Dialogic – Polylogic //
    பள்ளிக்காலத்தில் சேலம் மாவட்ட மத்திய நூலகத்தில் இவ்வகை உத்தி நாவல்கள் ஒன்றிரண்டு படித்திருக்கிறேன். என்ன... மறந்து போய்விட்டது!! இப்போது இது போன்ற genre வருவதேயில்லை..!!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சார்
    ஏற்கனவே கரந்தை அண்ணா அறிமுகம் செய்தார்
    அவர் பாணி தனி தங்கள் பாணி தனி !
    இன்னும் சொல்லபோனால் எனக்கு கூட இப்படிதான் தொழில் புத்தி எட்டி பார்க்கும்!
    //Epistolary Monologic – Dialogic – Polylogic // இதை சொன்னேன்.
    சகோ ஒரே இனம் என்பதை நிறுவுரீர்கள்.(இங்கிலீஷ் டீச்சர்ஸ்)
    ஒவ்வொரு கதையையும் விவரித்திருக்கும் பாங்கே படிக்கதூண்டுகிறது !!
    அருமை சகோ !

    பதிலளிநீக்கு
  9. வாங்க பாலகணேஷ்! வாத்தியாரே! தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  10. மிக்க நன்றி DDஅவர்களே! தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும்!

    பதிலளிநீக்கு
  11. வாங்க மலர்....மலரின் நினைவுகளுக்குள் அது எங்காவது ஒளிந்து கொண்டிருக்கும்! தேடிப் பாருங்க! மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  12. மிக்க நன்றி! சகோதரி! நல்ல ரசனையான பின்னூட்டம்! lit எனபது தெள்ளத் தெளிவு! கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  13. இமயத் தலைவனின் நூலுக்கு இதுவரை வந்த விமர்சனங்களில் உங்களின் விமர்சனம்தான் இமயம் !
    த . ம 5

    பதிலளிநீக்கு
  14. ஜோக்காளிப் பேட்டை பக்கம் ஒரு நடை வந்துட்டு போங்களேன் >>http://www.jokkaali.in/2014/02/blog-post_14.html மனைவிக்கு இப்படியா பயப்படுறது ?

    பதிலளிநீக்கு
  15. நண்பர் செல்லப்பா அவர்களின் இந்த நூல் இப்போது படித்து வருகிறேன் ஐந்து சிறுகதைகள் வரை படித்து விட்டேன் தங்கள் விமர்சன பார்வை நூலுக்கு இன்னும் சிறப்பு சேர்க்கிறது வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  16. ஜி! மிக்க நன்றி தங்கள் பாரட்டிற்கு! தங்கள் ஊக்கத்திற்கும் சேர்த்துத்தான்!!

    பதிலளிநீக்கு
  17. ஜோக்காளிக்கு மொய் வைத்து கமென்டும் போட்டோம்! எப்படி மிஸ் ஆனது என்று தெரியவில்லை! ப்ளாகர் மிகவும் வஞ்சிக்கின்றது! இதோ பாருங்கள் நாங்கள் கொடுக்கும் கமென்ட்ஸ் கீழே ஓடி விடுகின்றது! ரிப்ளையாக வருவதில்லை! எத்தனையோ முயற்சி செய்தாகிவிட்டது! ஜி!

    திரும்பவும் பின்னூட்டம் இட்டுவிட்டோம்! ஜோக்காளியின் புதிய ஜோக்கிற்கும்!

    பதிலளிநீக்கு
  18. சிறப்பான விமர்சனம். சமீபத்திய சென்னைப் பயணத்தின் போது வாங்கி, தில்லி வரும்போதே படித்து முடித்தேன். விமர்சனம் எழுதலாம் என நினைத்திருந்தேன் - உங்கள் பகிர்வு படித்த பின் எழுத வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன்..... :)))

    நான் சொல்ல நினைத்திருந்ததில் பல விஷயங்கள் உங்கள் பதிவில் சொல்லிவிட்டதால்!

    அனைத்து கதைகளும் எனக்கும் பிடித்திருந்தன.

    பதிலளிநீக்கு
  19. மிக்க நன்றி! தங்களைப் போன்ற ஒரு நல்ல, சிறந்த, நேர்மையான எழுத்துப் படைப்பாளி எங்களைப் பாராட்டுவது என்பது மிக சந்தோஷமாக இருக்கின்றது!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு