செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பாத்திரமறிந்து பிச்சையிடு!



பொங்கல் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த சீசனுக்கே உரிய கரும்பு, சிறுகிழங்கு-சீவக் கிழங்கு என்று சொல்லுவதும் உண்டு-அவரை, துவரை, மொச்சை, கடலை என்று எல்லாம் அங்கங்கு, கிராமத்து மக்களால் கடைகள் போடப்பட்டு இருந்தன. நானும் சில சாமான்கள் வாங்கிவிட்டு போடிநாயக்கனூரிலிருந்து, ராசிங்கபுரத்திற்குச் செல்ல ராணிமங்கம்மாள் பேருந்தில் ஏறினேன்.  பொங்கல் சமயம் ஆதலால், பேருந்தில் நிற்பதற்கு கூட இடமில்லாமல் கூட்டம்.  எப்படியோ ஏறி ஒண்டிக்கொண்டு நின்றேன். இந்தப் பேருந்தை விட்டால் அடுத்து 1/2 மணி நேரம் காத்திருக்க வேண்டும். 


நடத்துனர் ஏறியதும் வண்டி கிளம்பியது.  நடத்துனர், ‘யாரும் படிகளில் நிற்கக் கூடாது என்று சொல்லி எல்லோரையும் பேருந்திற்குள் வரச் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தார்.  நாங்களும் மெதுவாக முண்டி அடித்து முன்னேறினோம். அப்போதுதான் ஒரு குண்டு மனிதனும், நல்ல ஆரோகியமாக, மெலிந்த தேகத்துடன் இருந்த ஒருவரும் ஊனமுற்றோர் இருக்கையில் சௌகரியமாக அமர்ந்து இருந்ததைக் கவனித்தேன். குண்டு மனிதர் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தார். 
 

தர்மத்துப்பட்டியில் பேருந்து நின்றது. அங்கு ஒரு சிறிய கூட்டம் இறங்கியதால் கொஞ்சம் இடைவெளி கிடைத்தது நிற்பதற்கு. தர்மத்துப்பட்டியில், ஒரு லாட்டரி விற்பனை செய்பவர் ஏறினார்.  அவருக்கு ஒரு கால் இல்லை.  அவர் கஷ்டப்பட்டு ஏறியதும்,  ஊனமுற்றோர் இருக்கையில் அமர்ந்திருப்பவரில் யாராவது ஒருவர் எழுந்து இடம் கொடுப்பார் என்று எதிர்பார்த்தேன்.  நான் மட்டுமல்ல பேருந்தில் இருந்த எல்லோருமே அந்த இருவரையும் பார்த்தனர். ஒருவேளை அந்த இருகை உடல் ஊனமுற்றோருக்கு மட்டுமின்றி, மனம் ஊனமுற்றோருக்கும் போலும் என்று எண்ணத் தோன்றியது. அந்த இருவரில் மெலிந்த மனிதர் கண்களை மூடி உறங்குவது போல நடிப்பது நன்றாகவேத் தெரிந்தது.  ஜன்னலோரம் இருந்த குண்டு மனிதர் ஏதோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருப்பது போல ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தார்.  லாட்டரி பேர்வழி, இரண்டு சீட் கம்பிகளில் ஒன்றில் சாய்ந்து, மற்றொன்றைப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார். ஜன்னலோரம் இருந்தவர் உட்பக்கம் திரும்பிய சமயம், லாட்டரி விற்பனையாளர் அவரைப் பார்த்து புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்தார்.  அவர் கௌரவத்துடன் இவரைப் பார்ப்பதும், வெளியே பார்ப்பதுமாக, ஒன்றுமே கவனியாதவர் போல இருந்தார்.  பொறுமை இழந்த நான், லாட்டரி விற்பவைப் பார்த்து,

“அண்ணே!, நீங்க அவங்கள்ல யாராவது ஒருத்தரை எந்திரிக்கச் சொல்லிட்டு உட்கார வேண்டியதுதானே என்றேன்.

“ஏன் கொஞ்ச நேரம் நின்னா என்னவாம் குறைஞ்சா போயிடப் போறாரு. இந்தா அடுத்த பஸ் ஸ்டாப்புல சில்லமரத்துப்பட்டியில கொஞ்ச பேரு எறங்கத்தானே செய்வாங்க? என்று, அந்த குண்டு மனிதர் என்னைக் நோக்கி எகிறினார்.

என்னிடம், “பரவாயில்லை தம்பி, நான் ஒரு இடத்துல உட்கார்ந்து லாட்டரி விக்கறது இல்லையே...தம்பி.........தம்பி...சிக்கிம் பம்பர் 10 ரூபாய்தான் என்றார்” 

எனக்கு இப்போதுதான் புரிந்தது, லாட்டரியின் புன்சிரிப்பின் அர்த்தம் அந்த குண்டு மனிதரைப் பார்த்து.....லாட்டரி டிக்கெட் வாங்கி அவருக்கு உதவ முடியாத நான் நழுவி முன்னோக்கி நகர்ந்தேன. .ஆனால், அதிசயம், அந்த ஜன்னலோரக் குண்டுப் பேர்வழி 10 ரூபாய் கொடுத்து ஒரு டிக்கெட் வாங்கினார்.  லாட்டரிக்காரரும் மகிழ்சியுடன் டிக்கெட்டைக் கொடுத்தார். 

நான், கொஞ்சம் முன்பு, மனம் ஊனமுற்றவர் என்று மனதில் எண்ணியது தவறோ என்றுத் தோன்றத் தொடங்கியது!  நான், லாட்டரிக்காரருக்குப் பரிந்து சீட் கொடுக்க வேண்டி சொன்னதை ஏதோ மாபெரும் உதவி செய்வது போல் நினைத்தேன்.  ஆனால், அவர் முகத்தில் அப்போது தோன்றிய சந்தோஷத்தை விட, அவரிடம் குண்டு மனிதர் 10 ரூபாய் நீட்டி டிக்கெட் வாங்கியதும் ஏற்பட்ட சந்தோஷம் அவர் முகத்தில் கூடுதலாக இருந்தது. 

இரண்டு செய்கைகளையும் தராசில் தூக்கிப் பார்த்த போது, கண்டிப்பாக அவருக்கு அந்த குண்டு மனிதர் செய்ததே பெரிதாகத் தோன்றி அவர் மீதுதான் மதிப்புக் கூடியிருக்கும். அவருக்கு அந்த ஒரு 15 நிமிடம் உட்கார்ந்து போவதை விட, ஒரு டிக்கெட் விற்று அதில் அவருக்குக் கிடைக்கும் கமிஷன் மிகவும் அவருக்கு அவசியமானதாகத் தோன்றியிருக்கலாம். அது போல், அந்த குண்டுமனிதருக்கு, உட்காரும் இடத்திலிருந்து எழுந்து நிற்பதை விட, அந்த ஊனமுற்ற மனிதரிடம் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கி, அவருக்கு உதவிசெய்து, அந்த உதவியின் மறைவில் 10, 15 நிமிடம் உட்கார்ந்த இடத்திலேயே இருந்து, குற்ற உணர்வு இல்லாமலேயே பயணம் செய்யலாம் என்றும் தோன்றியிருக்கலாம். 

லாட்டரி டிக்கெட் விற்பது, அவரது வயிற்றுப் பிழைப்பு!. அவர் நின்றும், நடந்தும், அலைந்தும் டிக்கெட் விற்கத்தானே செய்வார்! எனவே, இங்கு இருக்கையை அவர் தானம் செய்து ஒரு டிக்கெட் விற்றது அவருக்கு வெற்றிதானே! இந்த உலகம் வியாபார நோக்குடன் சுற்றும் போது, என் போன்ற மனிதர்களின் உணர்வுகள் எல்லா இடத்திலும் மதிக்கப்பட வாய்ப்பில்லைதானே! என்பதற்காக, நான் என்னுள் வரும் இது போன்ற நல்லுணர்வுகளத் தடையிட வேண்டிய அவசியம் இல்லையே! இனி பாத்திரமறிந்து பிச்சை இட வேண்டியதுதான்!

27 கருத்துகள்:

  1. வணக்கம்
    துளசி(அண்ணா)

    சரியான கருத்தை சரியான முறையில் மிக அருமையாக சொல்லியுள்ளிர்கள் அதிலும்.
    (மனிதர்களின் உணர்வுகள் எல்லா இடத்திலும் மதிக்கப்பட வாய்ப்பில்லைதானே! ) உண்மைதான்.... பகிர்வுக்கு
    வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரூபன் தம்பி தங்கள் அழகான கருத்திற்கு மிக்க நன்றி! ஓட்டிற்கும் சேர்த்துதான்! மிக்க நன்றி!!

      நீக்கு
  3. மனம் நினைத்த உடனேயே உதவி செய்து விட வேண்டும்... இந்தப்பாடல் தான் ஞாபகம் வந்தது...

    மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான்...
    மற்றவர் எடுத்துக் கொள்வார்...
    வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல்
    வைப்பவன் கர்ண வீரன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! அருமையான கருத்துDD அவர்களே! கர்ணப்பரம்பரை என்று கூடச் சொல்லுவார்கள்! ஆம் மிகச் சரியே வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியகூடாது....கர்ணனைப் போல் நாம் இல்லையென்றாலும், அவரைப் போல் ஆவதற்கு முயற்சிக்கலாம்தன்.

      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  4. கண்ணால் காண்பதும் பொய் என்பது இதுதானோ ?
    த ம 3

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி! கண்ணால் காண்பதும் பொய்யாக இருந்தாலும், பல சமயம் மனம் உதவாமல் இருப்பதில்லைதான்! மக்க நன்றி

    பதிலளிநீக்கு
  6. இதுக்குத்தான் நாங்கெல்லாம் பிச்சையே போடுறதில்ல...!!
    இருந்தாத்தானே...!!

    பதிலளிநீக்கு
  7. தேவைகள் கருதி வாழும் உலகிலே பாத்திரம் அறிந்து பிச்சை இடுவதே
    நன்று .மிகவும் உணர்ந்து எழுதப்பட்ட ஆக்கம் வெகு சிறப்பு ! மேலும்
    சிறப்பான ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள் ஐயா .

    பதிலளிநீக்கு
  8. so வழக்கம் போல பணத்தை செலவுபண்ணி அவர் நல்ல பேர் எடுத்துட்டார்னு சொல்லுங்க.
    ஆனாலும் அவர்க்கு பரிந்து பேசியது லாட்டரிகாரருக்கு பெரிதாக தோன்றாவிட்டாலும் குண்டு மனிதரின் sympathy யை விட தங்கள் empathy குறைந்ததில்லை என்றே தோன்றுகிறது சகோ.

    பதிலளிநீக்கு
  9. மிக நுட்பமான அவதானிப்பு...! பொருத்தமான படங்கள்... நல்ல யுக்தி...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    பதிலளிநீக்கு
  10. மிகச்சிறப்பான கரு! இதைப்படித்ததும் எனக்கும் ஒரு கதை தோன்றுகிறது! உருவாகினால் தளத்தில் பதிகிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. ஆமா ஆமா, பின்ன வேற வழி?!!!
    நன்றி நம்பள்கி!

    பதிலளிநீக்கு
  12. ஹாஹஹாஹா! வாங்க மலர்....அதுவும் சரிதானுங்க!

    நன்றிபா!

    பதிலளிநீக்கு
  13. நன்றி சகோதரி அம்பாளடியாள்! தங்கள் பாராட்டிற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி! சிறப்பான ஆக்கங்கள் தரத்தான் விழைகின்றோம்!

    பதிலளிநீக்கு
  14. ஆஹா! சகோதரி புரிந்துகொண்டதற்கு மிக்க நன்றி! அதுதானே யதார்த்தமும் இல்லையா சகோதரி!

    பதிலளிநீக்கு
  15. வாங்க நைனா! தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி! தாங்கள் எல்லா வட்டாரத் தமிழிலும் பொளந்து கட்டுகின்றீர்கள்! அதைப் போல இல்லாவிட்டாலும் நாங்களும் முயற்சிக்கின்றோம்!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  16. வாங்க சுரேஷ்! தங்கள் கதையை இப்ப்பொழுதுதான் படித்துவிட்டு பின்னூட்டம் இட்டுவிட்டு வந்து பார்த்தால் உங்கள் பின்னூட்டம்!

    கண்டிப்பாக பதியுங்கள்! எங்கள் கதை தங்களுக்கு ஒரு கதை தோன்ற உதவிகிறதே மிக்க மகிழ்சி! ஆவலுடன் உள்ளோம் தங்கள் பதிவை வாசிக்க!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. பேரூந்து மற்றும் ரயில் பயணங்களில் பார்க்கும் இது போன்ற மக்களை அவர்களின் செயல்பாடுகளை கவனிக்கும் போது வாழ்க்கையின் முக்கியத்துவமும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஆடம்பரங்களையும் யோசித்துப் பார்க்க முடிகின்றது. ரொம்ப அழகாக பதிவு செய்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. உலகின் நடைமுறை பற்றிய தங்கள் பதிவு சிந்தனையைத் தூண்டுவதாகும்!

    பதிலளிநீக்கு
  19. திரு ஜோதிஜி அவர்களுக்கு மிக்க நன்றி! நம்மைச் சுற்றி நடக்கும் பல சம்பவங்களை கூர்ந்து கவனிக்கும் போது வாழ்க்கைப் பாடங்களும், அவதானிப்புகளும் நிறையவே கிடைக்கின்றன!

    கருத்திற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  20. புலவரே! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  21. மிக அருமையான பதிவு...

    நல்ல உளவியல் ஆய்வு..
    ரொம்ப அருமை அய்யா..

    பதிலளிநீக்கு
  22. நல்ல பதிவு.....

    பல சமயங்களில் நமக்குத் தப்பாக தெரிவது அடுத்தவர்களுக்கு சரியாக தெரியும்.

    பதிலளிநீக்கு
  23. ஆம். கீதா ​நீங்கள் சொல்லியிருப்பது போல இந்தப் பதிவை வருக்கு வரி காபி அடித்து அங்கு போட்டிருக்கிறார்கள். யாரிடமிருந்து திருடி இருக்கிறோம் என்று சொல்லாமலே!

    https://m.facebook.com/permalink.php?story_fbid=1658841697697103&id=1647136268867646

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்....காப்பி அடித்துக் கொள்ளட்டும்...ஆனால் அங்கு தளத்தின் லிங் அல்லது பெயர் கொடுத்திருக்கலாம்...ஏதோ ஒரிஜினல் போல...கொடுத்திருக்கிறார் அந்த நபர்...

      நீக்கு