சனி, 1 பிப்ரவரி, 2014

குடந்தை ஆர்.வி. சரவணனின்-இளமை எழுதும் கவிதை நீ - ஒரு பார்வை





கிராமத்திலிருந்து சென்னைக்கு, திரைப்பட இயக்குனர் ஆகும் கனவுகளுடன் வரும் ஒரு இளைஞனின் கையில் ஒரு கதை எப்படி சீன் பை சீன் இருக்குமோ, அப்படி அந்தக் கனவுகள் எழுத்துருவாக வெளிவந்த ஒரு புத்தகம்தான் “இளமை எழுதும் கவிதை நீ”! அந்த இளைஞர் வேறு யாருமில்லை. நம் எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான பதிவர் குடந்தை ஆர்.வி. சரவணன் அவர்கள்தான்!  எங்களுக்குக் குடந்தையூரார்.!  புத்தகத்தின் தலைப்பே சொல்லி விடுகிறது இது ஒரு காதல் கதை என்பதை!


ஒரு தமிழ் சினிமாவிற்கு வேண்டிய எல்லா அம்சம்களும் நிறைந்த ஒரு கதை! அவரது  படைப்பாகிய கதையைப் பற்றி நாங்கள் சொல்லப் போவதில்லை! நீங்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம்! அவரது படைப்பைப்  பற்றித்தான்! கதையை வாசிப்வர்கள், காதலை ரசிப்பவர்கள், காதலுக்கு ஆதரவாகக் கொடி பிடிப்பவர்கள் என்றால் வாசிப்பவர்களுக்குக் கண்டிப்பாக இந்தக் காதல் கதை “இதயக்கனி ஆகிச் சுவையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை! காதல் கைகூடாதவர்களுக்கு, அவர்களின் கல்லூரிக் காதல் தருணங்களின் நினைவலைகளைக் கண்டிப்பாக எழுப்பி விம்மச் செய்யும்! கை கூடாத வருத்தம் வரலாம்! காதல் கை கூடியவர்களுக்கு அதை நினைத்து, செகண்ட் ரவுண்டு வரத் தூண்டும் அளவுக்குப் புரிதலுடன் உருவான கல்லூரிக் காதல் கதை!

காதல் என்றாலே பாரதியாரின் குயில் பாட்டு, “காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். ... என்று பாரதியின், குயிலின் கூ...கூ  நினைவுக்கு வரலாம்!  இங்கு குடந்தையூரார் அந்தக் காதலை, ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும், இப்படி.....

“நீ பேசாத பொழுதுகளில்
உன் கொலுசுடன்
உரையாடிக்
கொண்டிருக்கிறேன்!

“என் வாழ்க்கைப்
பாலைவனத்தில்....
வற்றாத ஜீவ நதியாய்
நுழைந்தவள் நீ!

“உன் கனவு தேசத்தில்
குடியேற எங்கு
குடியுரிமை பெறவேண்டும்?
கொஞ்சம் சொல்வாயா?

மிகவும் அருமையான, கவித்துவமானக் காதல் “ஹைக்.....கூக்களாக அள்ளித் தெளித்திருக்கின்றார்! அதுவும் படம் எடுக்கும் படச் சுருளில்!! இது ஒரு உதாரணம்தான்! உண்மையாக, நேர்மையாகக் காதலிக்கும் இளைஞர்கள் இதைத் தங்கள் காதலிகளுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பலாம்!!

கதையில் உள்ள கதாபாத்திரங்களின் உரையாடல்கள், இப்போதைய தலைமுறையின் உரையாடல்கள் போல இருப்பதால், பல இடங்களில் “அட போட வைத்து ஒரு புன் முறுவலையும் வரவழப்பதைத் தவிர்க்க முடியவில்லை என்பதை இங்குச் சொல்லியே ஆக வேண்டும்! ஒரு சில உரையாடல்கள் கவித்துவமாகவும், ரசிக்கும்படியும் இருக்கின்றன!

“காதல்ங்கிறது ரொம்ப அபூர்வமான ஒண்ணு.  எப்ப வரும்னே யாரும் சொல்ல முடியாது. ஒருத்தரைப் பார்க்கிறப்ப இவரைத்தான் நாம் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணும்.

 “அப்படி ஒருத்தரை நான் பார்த்து ஆசைப்பட்டேன்னா என் அப்பா, அம்மா தடுத்தா கூட எதிர்த்து நின்னு அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்-  – கதையின் நாயகி, உமாவின் வார்த்தைகள். இந்தத் தலைமுறையின் தைரியமான எண்ணப் பிரதிபலிப்பு, முடிவு எடுக்கும் திறன் பளிச்சிடுகின்றது!

நாயகன் சிவாவின் தம்பி, கார்த்திக்கிற்கும், அவர்களது மாமா பெண் கீதாவிற்கும், வீட்டார்கள் சீக்கிரமாகத் திருமணம் செய்துவிடுகின்றனர்.  இருவருமே காதலித்தவர்கள்தான் என்றாலும் அடிக்கடி வாக்கு வாதத்தில் ஈடுபடுபவர்கள்! அதைப் பார்த்து கீதாவின் தந்தையும், தாயும்.....

“என்னங்க இப்படி வார்த்தையால வாலிபால் விளையாடறாங்க?

“சும்மாவே அடிச்சிப்பாங்க.  இப்ப லைசென்ஸ் வேற குடுத்துட்டோம்.  கேட்கவா வேணும் – அட போட வைத்த வரிகள்!

“உங்கப்பாவை நல்ல புத்தகங்களா வாங்கி கொடுக்கச்சொல்லி அதைப் படி.  செல்ஃபோன் வச்சிருக்கறதுக்கு பிசினஸ் மேனா நீ – அருமையான வரிகள். புத்தகங்கள் வாசிக்கும் வழக்கம் குறைவதையும், அது வளர வேண்டும் என்று, ஆசிரியரின் ஆதங்கம் வெளிப்படுகிறதோ?!

“அவள் கால்களில் அணிந்திருந்த கொலுசு, கால்களின் அசைவுக்கு ஏற்ப சப்தமிட்டது.  அது, தானும் சந்தோஷமாய் இருப்பதாக சிவாவுக்குச் செய்தி சொன்னது – கவித்துவமான, காதல் கனிரசம் மிக்க வரிகள்!

 “என்னை கைட் பண்ண ஆளில்லை அதான்.....இப்ப கிடைச்சிருக்கு என்ற வார்த்தையை உமாவைப் பார்த்துக் கொண்டே சொன்னான் – கதையின் நாயகனின் வரிகள். சொக்கவைக்கும் நல்ல ஒரு ஆழமான காதலை வெளிப்படுத்தும் வரிகள்!!

 “நான் சொன்னதை காப்பி பேஸ்ட் பண்ணாம புதுசா எதுனா சொல்லுங்க – அட! கணினி யுகம் என்பதை அறிவிக்கும், முறுவலிக்க வைத்த வார்த்தைகள்!

“பெற்றோர் சொன்னால் பெட்ரோமாக்ஸ் வைத்துக் கூட படிக்கும் எங்கள் பேரவைத் தலைவியே.... – “காதலி சொன்னால் காற்றுக்கும் வேலி போடுவான் இவன் – சிரிப்பை வரவைத்த இன்றைய இளைஞன்! “பயோ டேட்டா பாலு! ஆசிரியரின் கற்பனைத் திறன் மிளிரும் இக்கால இளைஞர்களின் வசனம் பளிச்!!

“சிவா எழுதப் போற இந்த அரியர்ஸ், பிட் அடிச்சு பாஸ் பண்ணதா யாரும் சொல்லக் கூடாது. சிவாவுக்கு இந்த வெற்றி அவசியம். ஒரு தோழியா நான் விட்டுக் கொடுக்க வேண்டியது இன்னும் அவசியம் - உமா.  ஒரு நல்ல, உண்மையானத் தோழமையை, அந்தத் தோழமைக்காக விட்டுக் கொடுக்கும் உன்னதமான உணர்வை விவரிக்கும் வரிகள்.

இப்படிப், பல இடங்களில் நச், பளிச் உரையாடல்கள்!  இடியாப்பச் சிக்கல்கள் இல்லாத எளிமையான, நேர்த்தியான கதை நடை! கதையின் இடையில் கதாபாத்திரங்கள் பேசுவது போலவும், நினைத்துப் பார்ப்பது போலவும், பொருத்தமான வசனங்களையும், திரைப்படப் பாடல்களையும், செருகி இருப்பது,  ஆசிரியர் தமிழ் திரைப்படங்களின் பரம ரசிகர் என்பதைப் பறைசாற்றுகின்றது! நல்ல நினைவுத் திறன்!  மட்டுமல்ல இன்றையத் தலைமுறையினரின் உரையாடல்கள் இப்படித்தான் என்பதையும் சொல்லுவது போல உள்ளது!  மோதலில் ஆரம்பிக்கும் கதை, எப்படி முடிகின்றது என்பதை, “மீதி வெள்ளித் திரையில் என்பதைப் போல, மீதி புத்தகத்தில்! புத்தகம் வாங்கிப் படித்து, ரசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!  ஏற்கனவே வாசித்தவர்களுக்குக் காதல் டிகிரி எவ்வளவு தூரம் எகிறியதோ! நாளையே கூட இந்தக் கதை படமாகும் வாய்ப்பு உள்ளது! நம் நண்பர் “நாளைய இயக்குனர் பட்டியலில்!  எனவே நாம் அவரை மனதார வாழ்த்துவோம்!

பாராட்டுக்கள்! தங்கள் படைப்பை வெளியிட்டதற்கு! குடந்தையூராரே! தங்கள் எழுத்துக்கள் மேன்மேலும் வளரவும், “கருவில் சுமந்த குழந்தை பிறந்தவுடன் பூரிப்படையும் ஒரு தாயின் நெகிழ்வை இந்த நூல் எனக்குத் தந்திருக்கிறது என்ற உங்கள் வார்த்தைகளை இங்கு எடுத்துக் காட்டி, அதே குழந்தை, தங்களது கனவாகியத் திரைப்பட இயக்குனர் ஆகுதலை நிறைவேற்றி, வெள்ளித் திரையில் மின்னிடவும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

நூலை அழகு செய்திருப்பவர் : நம் பதிவர் பாலகணேஷ்
வெளியீடு : ஜனனி பதிப்பகம்
நூல் கிடைக்கும் இடம் : டிஸ்கவரி புக் பாலஸ் பிரைவேட் லிமிட்டெட்

மதிப்புரை வழங்கியிருப்பவர் பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.  அவரின் வார்த்தைகள்


“ஒரு சிறுகதையோ, கவிதையோ, கட்டுரையோ முதலில் வாசகரைப் படிக்க வைக்க வேண்டும்....அடுத்து...ஒரு ப்டைப்பு ஒரு எளிமையான வாசகனுக்கும் புரிய வேண்டும்......உங்கள் படைப்பில் இந்த இரண்டு அம்சங்களும் இருக்கின்றன. ஒன்று உங்கள் படைப்பை வாசித்து முடிக்கலாம். இரண்டு...உங்கள் படைப்பு புரிகிறது.  பாராட்டுக்கள்!!

பின் குறிப்பு: என் தோழி கீதாதான், 05.01.2014 அன்று, சென்னையில், டிஸ்கவரி புக் பாலஸ் பிரைவேட் லிமிட்டெட்டில் நடந்த குடந்தையூராரின் புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்று, புத்தகமும் பெற்று, வாசித்து இந்த அருமையான, ஆழமான விமர்சனத்துடன் எனக்கு வாசிக்க புத்தகத்தையும் அனுப்பித் தந்தார்.  புத்தகத்தை வாசித்த எனக்குப் புதிதாக எழுத ஒன்றும் இல்லாமல் செய்தும் விட்டார். நான் சொல்ல நினைத்ததை எல்லாம் அருமையாக அவரே சொல்லியும்விட்டார்.  சாதனையாளராகும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னும் ஒரு பெண் சக்தியாக இருக்கிறார் என்பதை, கதையில் சிவாவைச் சிறப்புக்குரியவாராக்கிய உமாவிடமிருந்து தெரிய வருவது போல், இவ்விமர்சனம் சிறப்பான ஒன்று என்று தோன்றினால் (புத்தகம் சிறப்பு என்பதைச் சொல்லத் தேவையில்லை.  ஏனென்றால் அது குடந்தையூராரின் படைப்பு) அதற்கான பாராட்டுக்கள், விமர்சனம் என் பெயர் தாங்கி வந்தாலும், விமர்சனத்திற்கு விமர்சனம் எழுதும் நான் அல்ல அதற்குரியவன், சென்றடைய வேண்டியது, என் அருமை (நம்) தோழி கீதாவை.




17 கருத்துகள்:

  1. வணக்கம்
    நண்பரே...

    தங்களின் பார்வையில் புத்தகம் பற்றிய விமர்சனப்பார்வை.. மிக நன்றாக உள்ளது புத்தகத்தை வேண்டி படிக்க சொல்லுகிறது.... குடந்தை.திரு சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...இன்னும் பல நூல்கள் அவரின் உழைப்பில் வெளி வரட்டும்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு! சிறிது நாட்களக்குப் பிறகு உங்கள் வருகை மகிழ்வாக உள்ளது! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  4. எனது இனிய நண்பரின் நூல் விமர்சனத்தை அருமையாக ரசிக்கும்படி சொல்லி உள்ளீர்கள்... நன்றிகள் பல...

    தோழி கீதா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! நண்பரே! தங்கள் கருத்திற்கு! ஆம்! குடைந்தையூரார் இனிய நண்பரே!

      வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

      எந்த வலைப்பூவிற்குச் சென்றாலும் அங்கு தங்களது கருத்து முதல்வருகையாக இருக்கின்றதே! தங்களது இந்தன் ஊக்கம் தரும் பண்பும், சக்தியும் மிக வியப்படையச் செகின்றது! நண்பரே! அதற்கு எங்களது வாழ்துக்கள்! பாராட்டுக்கள்!

      நன்றி!

      நீக்கு
  5. விமர்சன பார்வை தந்த தங்களுக்கும் கீதா மேடத்திற்கும் மனம் கனிந்த நன்றி தங்களின் ஊக்கம் என் எழுத்தார்வத்தை இன்னும் செழுமையாக்கும்

    பதிலளிநீக்கு
  6. ’இளமை எழுதும் கவிதை நீ.....’, என்னும் படைப்பைப் படிக்கத் தூண்டும் சுவையான விமர்சனம் இது.

    கீதா அவர்களுக்கும் உங்களுக்கும் என் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும்!!!

      நீக்கு
  7. நண்பர் ஆர்.வி.சரவணன் அவர்களின் 'இளமை எழுதும் கவிதை நீ' புதினத்தின் விமர்சனம் தங்கள் தோழி கீதாவின் பார்வையில் வெகு அருமை. பக்கத்திற்குப் பக்கம், பத்திக்குப் பத்தி, வாக்கியத்திற்கு வாக்கியம், வரிக்கு வரி மிகவும் இரசித்துப் படித்துள்ளதை, அவர் எடுத்துக்காட்டுக்காகக் குறிப்பிட்டுள்ள நிறைய வசனங்களினால் தெரியவருகின்றது.

    சரவணன் அவர்களின் எதிர்கால வெற்றிக்காக, அவரை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அன்பரே! மிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும்!

      வாழ்த்துவோம் திரு சரவணனை அவர்களை!

      மிக்க நன்றி!

      நீக்கு
  8. குடந்தையூர் அவர்கள் இணையத்தில் எழுதிய போதே படித்து ரசித்த கதை.. அருமையான விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி! தொடர்கின்றோம்!

      நீக்கு
  9. சிறப்பான விமர்சனம். விரைவில் படிக்க முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  10. சகோ R V saravanan தன் கதையை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் !
    +1

    பதிலளிநீக்கு