செவ்வாய், 22 நவம்பர், 2022

இந்திய கடற்படையின் கிழக்குக் கரையோரத் தலைமையக நகரத்தில் பயணம் - 8 - ருஷிகொண்டா கடற்கரை

பதிவுகள் மிகவும் தாமதமாகவும், இடைவெளி விட்டும் வருவதற்கு பெரிய 'ஸாரி' சொல்லிக் கொள்கிறேன். தவிர்க்கமுடியாத சூழல்கள். தொடரை முடித்துவிட வேண்டும் என்று முடிக்கிறேன்.  அதற்கும் ஒரு  'ஸாரி'. 

இரண்டாம் நாள் அன்னவரத்திலிருந்து வந்ததும் அன்று மாலை சென்ற இடமும், அதற்கு மறுநாள் சென்ற இடமும் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள். அடுத்த பதிவில்…// என்று சொல்லியிருந்தேன். அடுத்த பதிவு கொஞ்சம் சீக்கிரம் கொடுக்கலாம் என்றிருந்த போது….ஏதோ இம்புட்டாவது நடக்குதே என்று ஓடிக் கொண்டிருந்த நாட்களில் திடீரென்று எதிர்பாரா சுழல். அது பற்றி இங்கு வேண்டாம்.

நேரப்பளு. இடையில் எழுதவும், பதிவுகள் வாசித்துக் கருத்திடவும் எப்படியாவது நேரம் திட்டமிட வேண்டும் என்று நினைத்து ஒரு வாரமாக முயற்சி செய்தும் முடியவில்லை. வலைக்கு வந்தால் பொறுப்பு மிக்க வீட்டு வேலைகளில் சீக்வென்ஸ் – அதாவது இதற்குப் பிறகு இது என்று நூல் பிடித்தாற் போன்று ஒரு திட்டம் – அது அறுந்து போகும். 

நேற்று எப்படியோ இடையில் புகுந்து வந்துவிட்டேன். தொடர்ந்து வர வேண்டும் என்று நினைத்தாலும் எப்படிப் போகப் போகிறதோ? போகட்டும். பதிவுகள் என்னவோ நிறைய இருக்கின்றன. கதைகள் உட்பட. 

ஆனால் எழுதுவதில் மனதின் கவனமும் தற்போது இல்லை. இப்பதிவை போட நினைத்து அதற்கான வேலைகள் செய்து கொண்டிருந்த போது முக்கியமான வேலை வீட்டில் செய்ய வேண்டியது நினைவுக்கு வர அதை முடித்து, அப்புறம் தொடர்ந்து பல வேலைகள். பார்ப்போம் போகிற வரை போகட்டும். சரி இனி பதிவினுள்…

இரண்டாம் நாள் அன்னவரம் சென்று வந்து சிறிது நேரம் மற்றவர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு செல்ல்லாம் என்றதால் ஓய்வு எடுத்துக் கொண்டுவிட்டு 3.30க்குப் புறப்பட்டு ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்தில் ருஷிகொண்டா கடற்கரைக்குச் செல்ல முடிவு செய்து சென்றோம். 15/16 கிமீ தூரம். 45 நிமிடப் பயணம். டிக்கெட் விலை ரூ20 அல்லது ரூ 22 என்று நினைவு

சாலையிலிருந்து (ஒரு புறம் மலைகள். மறுபுறம் கடற்கரை) கடற்கரைக்குச் செல்ல பாதை உண்டு. அங்குதான் பேருந்து நிறுத்தமும். அப்பாதையில் நடந்தால் 5 நிமிடங்களில் கடற்கரைஅப்பாதையில் வலப்பக்கம் ஓர் உணவகம் இருந்தது. அதன் அடுத்து இருந்த பகுதியில் வீடு மற்றும் தோட்டம். உணவகத்தின் உரிமையாளரின் தோட்டம் என்று நினைக்கிறேன். அங்கு வாத்துக் குடும்பம் ஒன்று அலைந்து கொண்டிருந்தது. உடனே ஒரு க்ளிக். 4, 5 க்ளிக்ஸ் எடுத்தேன் அவற்றுள் ஒன்று மட்டும் இங்கு. 

நிறைய கடைகள், பழரச வண்டிகள், ஐஸ்க்ரீம் வண்டிகள் கடைகள் என்று இருந்தன. வண்டிகள் நிறுத்தவும், அப்பகுதிக்கு மேலே காட்டேஜ் வசதிகள், ரெஸ்டாரெண்டுகள் பார் எல்லாம் உண்டு இந்த கடற்கரையில். இந்த வசதிகள் யாவும் விசாகப்பட்டணம் நகரத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆந்திரப்பிரதேச சுற்றுலாத்துறையால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ரிஷிகொண்டா கடற்கரை என்றும் சொல்லப்படும் ருஷிகொண்டா கடற்கரை மாநில சுற்றுலா வாரியமான ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சி கழகத்தினால் பராமரிக்கப்படுகிறது.

அமைதியான கடற்கரை எனலாம். ஒரு புறம் மலைகள். மலைகளுக்கும் கடற்கரைக்கும் இடையே நீண்ட சாலை. மலைகளை ஒட்டினாற்போன்று தோன்றும் கடற்கரைப் பகுதி அழகோ அழகு

இந்தியாவில் ப்ளூ சர்ட்டிஃபிக்கேஷன்” – நீலக்கொடி சான்றிதழ் பெற்ற சில இந்திய கடற்கரைகளில் இதுவும் ஒன்றாகும். கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்காகவும் ஒரு நாடு எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டும் நோக்கில்  வழங்கப்படும் சர்வதேச சுற்றுச்சூழல் அங்கீகாரம் ஆகும். இந்த சர்வதேச அங்கீகாரம்  பெறுவதற்கு, சுற்றுச்சூழல் மேலாண்மை, நீரின் தரம், நீல நிறம், பாதுகாப்பு, குளிக்கத் தகுந்த நீர் தரம், கடற்சார் கல்வி, பாதுகாப்பு, மற்றும் பல சேவைகள் உள்ளடங்கிய  33 முக்கியமான அளவுகோல்கள் கடற்கரைகளில் இடம்பெற்றிருக்க வேண்டும். நீலக்கொடி - ப்ளூ ஃப்ளாக் அங்கீகாரம் வழங்கும் அமைப்பு, டென்மார்க்கின் தலைநகரமான கோப்பன்ஹேகனை தலைமையிடமாகக் கொண்ட சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (FEE) ஆகும்.

இந்தச் சான்றிதழ் பெற்றால் அந்தக் கடற்கரை உலகில் அழகான கடற்கரை மற்றும் சுத்தமான கடற்கரை என்றும் அர்த்தம். அதிருக்கட்டும் இந்தக் கடற்கரை அழகான கடற்கரை. சந்தேகமே இல்லை. ஆனால் சுத்தமான கடற்கரையா என்று என்னைக் கேள்வி கேட்கப்படாது. நீங்களே நேரில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்!  

ஒரு பகுதியில் சுற்றி மலைகள்; கடற்கரைப் பகுதியில் இயற்கையான கரும் பாறைகள்; 

குழந்தைகள், திரைப்படங்கள், கதைகளில் வரும் தேவதைகள், உடுத்தும் கவுனில், பாவாடையில் இருக்கும் ஃப்ரில் அடுக்கடுக்காய் வைத்துத் தைத்திருப்பாங்களே அது போல இருக்கு இல்லையா? சின்ட்ரெல்லா ஃப்ராக்! கடலும் தேவதைதானே!!! வடிவம் மாறிக் கொண்டே இருக்கும். எனக்கு அப்படித் தோன்றும். 


சில பாறைகள் கரையின் மணல்பாங்கில் புதையுண்டு கடல் அலை பொங்கி சுழன்று ஓடிவந்து கரையைச் சேரும் இடத்தில் தெளிவான நீரில் நிறைந்து கிடப்பதும் இந்தக் கடற்கரையை அழகு செய்திருக்கின்றன என்று சொல்லலாம். 
என்னை மிகவும் கவர்ந்த பகுதி. நான் படங்கள் எடுத்துத் தள்ளினேன். இங்கு கொஞ்சம்தான் தருகிறேன். உங்களுக்குப் போரடித்துவிடக் கூடாதே!!! கீழே உள்ள படங்கள் தெளிவான நீரில் நிறைந்து கிடக்கும் பாறைகள் படங்கள்



இந்தப் படத்தில் பாறைகள் ஏதோதோ வடிவங்களில் தெரிகின்றன இல்லையா? தெரிந்தால் கருத்தில் சொல்லுங்கள். எனக்குத் தோன்றியதை இங்கு யாரேனும் சொல்கிறீர்களா என்று எதிர்பார்ப்பு, ஆசை!!!!


கடற்கரைப் பகுதியில் வாழும் செல்லங்களுக்கு தண்ணீர் ஃபோபியா இல்லை! வீட்டில் வளர்பவை கூட பழக்கப்படுத்தினால் இப்படி விளையாடும்.  எங்கள் வீட்டில் வளர்ந்தவற்றிற்குத் தண்ணீர் ஃபோபியா இருந்தது.

நீர் விளையாட்டுகள் மற்றும் சாகச விளையாட்டுப் பிரியர்களுக்குப் பிடித்தமான கடற்கரை. ஸ்கூபா டைவிங்க், Sea Kayaking, வேகமான படகுச் சவாரி, நீளமான கடற்கரை என்பதால் கடற்கரை ஓரமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சவாரி இப்படி நிறைய அம்சங்கள் இருக்கின்றன. நம்முடன் பயிற்சி பெற்ற ஒருவரும் வருவார். எல்லாவற்றிற்கும் கட்டணம் உண்டுஇனி கீழே வரும் படங்கள் பேருந்திலிருந்து எடுத்த படங்கள்


பாராக்ளைடிங்க் செய்யவும் ஏற்ற இடம் என்பதால் இங்கு பாராக்ளைடிங்க் செய்வதையும் காணலாம்.  பேருந்திலிருந்து எடுத்த படங்கள். பாராக்ளைடிங்க் படங்கள் மற்றும் கீழே உள்ள படங்கள் கடற்கரை பேருந்து நிறுத்தத்திலிருந்து தங்கியிருந்த இடத்திற்குப் பேருந்தில் சென்ற போது எடுத்தவை.

கால்வாயா? சாக்கடை நீரா? மழை நீர் கால்வாயா? தெரியவில்லை. ஆனால் தண்ணீர் சுத்தமாக இல்லை. அப்புறம் எப்படி நீலச்சான்றிதழ்




இப்பகுதி கைலாசிகிரி மலையிலிருந்து அருகில்


ருஷி கொண்டா கடற்கரை அலைகளின் ரிதம்.  வீடியோ சேர்க்க நினைத்து எடிட் செய்ய நேரம் இல்லாததால் போடவில்லை.  //அலைகள் பார்க்க அழகு.  புகைப்படங்களில் அவை உறைந்து விடுவதால் சுவாஸ்யம் கம்மியாகி விடுகிறது!// என்று ஸ்ரீராம் சொன்ன கருத்தைப் பார்த்ததும் எடிட்டிங்க் வேலை இல்லாத இந்த வீடியோவை இணைத்துள்ளேன். நேரமிருந்தால் பாருங்கள். 

கைலாசகிரி பற்றி எழுதியிருந்தேன் இல்லையா? அப்பகுதியிலிருந்து ருஷி கொண்டா கடற்கரை 20 நிமிடப் பயணத்தில் இருக்கிறது. 9 கிமீ தூரம். இவ்விரண்டின் இடையில் விசாகப்பட்டினத்தின் இந்திராகாந்தி விலங்கியல் பூங்கா மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது. கைலாசகிரி மலையிலிருந்து  15 நிமிடப் பயணம். 5.5 கிமீ தூரம் தான். ருஷிகொண்டா கடற்கரையிலிருந்து 6 கிமீ தூரத்தில், 15 நிமிடப் பயணத்தில் எதிர்ப்புறத்தில் உள்ள மலைப்பகுதியில்  இருக்கிறது. நாங்கள் செல்லமுடியவில்லை என்றாலும் இது இப்பதிவை வாசிப்பவர்களுக்கான தகவலாக. நிறைவுப் பகுதியில் திட்டமிட்டுச் செல்ல தோதாக அடுத்தடுத்து உள்ள பகுதிகளைச் சொல்கிறேன்.  பதிவும் அதிக இடைவெளி இல்லாமல் போடப் பார்க்கிறேன்.

பதிவை வாசித்துக் கருத்து சொன்ன, சொல்லும் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி! 



-----கீதா

37 கருத்துகள்:

  1. நெல்லை, ஸாரி சொல்லிக்கிறேன் உங்களுக்கு. நான் உங்களிடம் சொன்ன விஷயங்கள் எழுத எனக்குக் கொஞ்சம் நேரம் வேண்டும். கோர்வையாக, பாயின்ட் பாயின்டாகவோ எழுத வேண்டும். விசாகப்பட்டினம் படங்கள் இருப்பதால் அதைப் போட்டு ஜஸ்ட் தகவல்கள் கொடுத்துப் போட்டு முடித்துவிடலாம் என்பதால் அப்பதிவு. எனவே இதைத் தொடர்ந்து மற்ற பதிவு போடுகிறேன். சரியா.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அப்பாடா. வலைக்கு வந்து வந்தனம் சொல்லி விட்டீர்கள். விவரணம் ஓகே. படங்கள் அதிகம் ஆகும்போது கொஞ்சம் திகட்டுகிறது. பிரில் கௌன் கடல் அலை படம் ஜோர். 
    ப்ளூ செர்டிபிகேஷன் என்பது பற்றி விவரங்கள் தந்தமைக்கு நன்றி. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஆமாம் ஜெகே அண்ணா. பதிவு இன்னும் அதிகரிக்க வேண்டாம் முடிக்க வேண்டும் என்று படங்களைக் கொஞ்சம் கூடுதல் சேர்த்தேன். இல்லை என்றால் பேருந்திலிருந்து எடுத்த படங்களைத் தனியாகக் கொடுக்க நினைத்திருந்தேன். அப்புறம் நேரம் கிடைக்காமல் போனாலோ என்று இதனுடனேயே இணைத்துவிட்டேன்.

      ப்ளூ செர்ட்டிஃபிக்கேஷன் எப்படிக் கிடைத்தது என்று தெரியவில்லை அவர்கள் குறிப்பிட்டிருக்கும் 33 அம்சங்களில் ஒரு சில இல்லையோ என்றும் தோன்றியது. தெரியவில்லை.

      மிக்க நன்றி ஜெகே அண்ணா உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. படங்களின் துல்லியம் கண்களை கவர்கிறது. மிக அழகாக தெளிவான கோணத்தில் ஒவ்வொன்றையும் எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    கடல் அலைகள் படங்கள் மனதை அள்ளுகிறது.வாத்து கூட்டம் அழகாக உள்ளது.

    /சின்ட்ரெல்லா ஃப்ராக்! /
    கடல் அலைக்கு தாங்கள் தந்த உவமானம் ரசித்தேன். நீலகடலும், நீல வானமும் கலர்மாறி மாறி தோற்றமளிக்கும் மலைப்பகுதியும் எத்தனை முறை ரசித்தாலும், நமக்கு சலிப்பே ஏற்படாது அல்லவா? இறைவனின் அரிய படைப்புக்களில் சிறந்த இவைகளைப் பார்த்து அலுப்பு தோன்றாத மனநிலையை நமக்கு தந்த அந்த இறைவனுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

    பாறை நீரில் தெளிவாக தெரியும்படி உள்ள கடற்கரை இடங்கள் நன்றாக உள்ளது. அத்தனைப் படங்களையும் ரசித்துப்பார்த்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவையும் படங்களையும் ரசித்துக் கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி கமலாக்கா. ஒவ்வொரு முறை கடல் அலைகளைப் பார்க்கும் போதும் அடுக்கடுக்காக ஃப்ரில் வைத்த ஃப்ராக் நினைவுதான் வரும். ஆமாம் இயற்கையின் படைப்பின் விந்தை. ஆச்சரியம் தான்.

      மிக்க நன்றி கமலாக்கா உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
    2. அலைகளைப் பார்க்க அலுப்பே தோன்றாது என்பது உண்மை கமலாக்கா

      கீதா

      நீக்கு
  4. நேர மேலாண்மை முக்கியம்.  ஆனால் நம்மையும் மீறி அது முடியாமல் போகும் தருணங்கள்...   உங்கள் நிலை புரிகிறது..   சமயம் கிடைக்கும்போது வாருங்கள்.  ஆனால் வாருங்கள்..  மனதுக்கு ஒரு மாறுதல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், நேர மேலாண்மை அதைச் சொல்லுங்க. ஆனால் நீங்க சொல்லியிருப்பது போல் நம்மையும் மீறிப் போகும் தருணங்கள் எதிர்பாரா சூழல்கள்....கண்டிப்பாக மனதிற்கு இதமாகத்தான் இருக்கு ஸ்ரீராம்...மற்ற தளங்களில் க்ருத்து மட்டும் போடுவது என்றால் ஓகே.... ஆனால் பதிவும் எழுதணுமே!!! ஹிஹிஹி

      ஆனால் மனதிற்கு மாறுதல் என்பதில் சந்தேகமே இல்லை. எனக்குத் தேவையும் கூட

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. வாத்துகளும் தாக்கும் என்பது என் சமீபத்து அனுபவம்!  கடற்கரைக்கும் தேர்ச்சி சான்றிதழா...  நம்மூர் வாங்க முடியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாத்து தாக்கும் ஸ்ரீராம்....ஓ உங்களுக்கு இப்ப சமீபத்து அனுபவமா? வியாழன்ல வரும்னு சொல்லுங்க!!!

      ஆமாம் கடற்கரைக்கும் சான்றிதழ் இருக்கு. பாதுகாப்பு சுத்தம் இப்படி...

      நம்மூர் வாங்க முடியாது!//

      வாங்கிருக்காங்களே ஸ்ரீராம்!...இப்ப சமீபத்துல சென்னை கோவளத்திற்கும் கிடைக்குதாமே....ஆச்சரியம்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  6. அலைகள் பார்க்க அழகு.  புகைப்படங்களில் அவை உறைந்து விடுவதால் சுவாஸ்யம் கம்மியாகி விடுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்னவோ சரிதான். 4, 5 வீடியோ எடுத்தேன். அதில் 3 எடிட்டிங்க் தேவைப்படும். தேவைப்படாத வீடியொவை சேர்க்க நினைத்து சேர்க்காம இப்ப உங்க கருத்தைப் பார்த்ததும் சேர்த்திருக்கிறேன். முடிஞ்சா பாருங்க

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. ஆயினும் படங்கள் அழகுதான்.  அந்தப் பாறைகள் உலக வரைபடம் போல இருக்கிறது!  பாரா கிளைடிங் காரர் கடலில் லேண்ட் ஆகிவிடுவாரோ....!  நிறைய படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ உங்களுக்குப் பாறைகள் உலக வரைபடம் போலத் தோன்றியதா. எனக்கு யானை, பிள்ளையார் முகங்கள் தோன்றியது.

      //பாரா கிளைடிங் காரர் கடலில் லேண்ட் ஆகிவிடுவாரோ....!//

      ஹாஹாஹாஹா எனக்கும் இது தோன்றியது!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. படங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    3. // எனக்கு யானை, பிள்ளையார் முகங்கள் தோன்றியது. //

      நீங்கள் சொன்னபிறகு எனக்கும் அப்படித் தோன்றுகிறது!!

      நீக்கு
    4. ஹாஹாஹா பாருங்க உங்களுக்கும் தோன்றிவிட்டது!!! நீங்க முதல் கருத்துல சொல்லுவீங்கனு நினைச்சேன்!!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. படங்கள் மிகவும் தெளிவாக,
    அழகாக இருக்கிறது

    விபரங்கள் நன்று எழுத நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி படங்களை ரசித்தமைக்கு. ஆமாம் எழுதுவதற்குத்தான் நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு எழுதுவதற்கு ரொம்ப நேரம் எடுத்துக் கொள்ளும் கில்லர்ஜி. பார்த்து பார்த்து, பல முறை வாசித்து மாற்றி என்று எழுதுவதால்....

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  9. படங்களும், செய்திகளும் அருமை.
    நேரம் கிடைப்பது உங்களுக்கு இப்போது மிகவும் கஷ்டம் தான்.
    எப்படியோ நேரம் ஒதுக்கி பதிவு போட்டு விட்டீர்கள்.

    மனம் உற்சாகமாக இருக்கும் எல்லோருடன் பேசுவதால்.
    நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.


    //நீலக்கொடி சான்றிதழ் பெற்ற சில இந்திய கடற்கரைகளில் இதுவும் ஒன்றாகும். கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்காகவும் ஒரு நாடு எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டும் நோக்கில் வழங்கப்படும் சர்வதேச சுற்றுச்சூழல் அங்கீகாரம் ஆகும். //

    செய்தி சேகரித்து கொடுத்தது அருமை.

    அலைகள் அழகு.
    பாறைகளில் நிறைய வடிவம் தெரிந்தாலும் குட்டி யானை முதல் படத்தில், அடுத்த படத்தில் பெரிய யானை முகம் தெரிகிறது.

    பேருந்திலிருந்து எடுத்த படங்களும் நன்றாக இருக்கிறது.

    செல்லங்களுக்கும் கடற்கரை அலைகளுடன் விளையாட பிடிக்கும் போல!
    அனைத்தையும் ரசித்துப்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைப்பது உங்களுக்கு இப்போது மிகவும் கஷ்டம் தான்.
      எப்படியோ நேரம் ஒதுக்கி பதிவு போட்டு விட்டீர்கள்.//

      ஆமாம் கோமதிக்கா.....இங்கு வந்தால் மனம் இதில் ஆழ்ந்துவிடுகிறது....வீட்டு வேலைகள் பொறுப்புகள் விட்டுப் போகிறது...அதனாலேயே ரொம்ப யோசித்துதான் வர முடிகிறது,

      //மனம் உற்சாகமாக இருக்கும் எல்லோருடன் பேசுவதால்.
      நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.//

      ஆமாம் ரொம்பவே .....அதனால்தான் எப்படியாவது வரணும்னு வந்துவிட்டேன்

      //செய்தி சேகரித்து கொடுத்தது அருமை.//

      மிக்க நன்றி கோமதிக்கா

      பாறைகளில் நிறைய வடிவம் தெரிந்தாலும் குட்டி யானை முதல் படத்தில், அடுத்த படத்தில் பெரிய யானை முகம் தெரிகிறது.//

      எனக்கும் யானை, பிள்ளையார் முகங்கள்தான் தெரிந்தது. மற்றொன்று ஏதோ முன்பு ஏதேனும் சிற்பங்கள் இருந்த மண்டபம் இப்படி ஏதேனும் இருந்து புதைந்துவிட்டதோ என்றும் கூடத் தோன்றியது,.

      ஆமாம் கடல் அருகில் இருக்கும் செல்லங்கள் நன்றாகப் பயமில்லாமல் விளையாடுகின்றன கோமதிக்கா....சிலர் வளர்ப்பனவும் பயப்படாமல் அலைகளில் விளையாடுகின்றன...

      பேருந்திலிருந்து எடுத்த படங்களும் நன்றாக இருக்கிறது.//

      படங்களையும் பதிவையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  10. அலைகடலின் காணொளி கண்டேன், ரசித்தேன். ஒரு தொடர் போல ஓடி வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம். அலைகள் ஓய்வதில்லை!!! ஆனால் இந்தத் 'தொடர்' போரடிக்காதாக்கும்!! இல்லையா....

      நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  11. நாம் எழுதும் தொடர்களும் "தொடர்வண்டி" போலதான்... ஆங்காங்கே கொஞ்ச நேரம் நின்றுதான் பயணிக்கும். அதற்காக கவலைகொள்ள வேண்டாம்... எழுத்துலகில் நாமும் பயணிக்கிறோம் என்பதே நமக்கு பரவசத்தை தரவேண்டும்... எனவே... சோர்வடையாது... பிரதிபலன் பாராது... தரணி ஆளும் தமிழுக்கு... அதன் வளர்ச்சிக்கு... நம்மாலான பங்களிபையும் தொடர்ந்து கொடுத்துவருவோம்... வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா....லைன்ல ஏதோ பிரச்சனைன்னு ஒரே ஸ்டேஷன்ல நின்னுக்கிட்டே இருக்குமே...அப்படி கொஞ்சம் இப்ப.

      //எழுத்துலகில் நாமும் பயணிக்கிறோம் என்பதே நமக்கு பரவசத்தை தரவேண்டும்.//

      தருகிறது என்பதில் ஐயமில்லை. பயணிக்க எழுத்து வேண்டுமே அந்த எழுத்துதான் இப்ப பிரேக்!!! ஹிஹிஹி

      // எனவே... சோர்வடையாது... பிரதிபலன் பாராது... தரணி ஆளும் தமிழுக்கு... அதன் வளர்ச்சிக்கு... நம்மாலான பங்களிபையும் தொடர்ந்து கொடுத்துவருவோம்...//

      கண்டிப்பாக நாஞ்சில் சிவா சகோ.

      மிக்க நன்றி நாஞ்சில் சிவா

      கீதா

      நீக்கு
  12. படங்கள் மிக அருமையாக இருக்கின்றன. கடல் அலை சேரும் இடத்தில் நிறைய பாறைகள். ஆபத்துதான், தண்ணீருக்குள் செல்வது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை. பாறைகள் இருக்கற இடத்தில் குளிக்க முடியாது.....அதான் அலைகளில் விளையாட என்று தனி பகுதி வைச்சிருக்காங்க...மக்கள் நிற்கும் பகுதி. ஆனால் உள்ளே போனால் இருக்குமோ என்னவோ தெரியலை.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  13. //அப்புறம் எப்படி நீலச்சான்றிதழ்// அவங்க சர்டிபிகேட் கொடுக்கும்போது நல்லா இருந்திருக்கும். அப்புறம் ரின்யூவலின்போது போய்ப் பாருங்கள். அப்போ நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்க சர்டிபிகேட் கொடுக்கும்போது நல்லா இருந்திருக்கும். அப்புறம் ரின்யூவலின்போது போய்ப் பாருங்கள். அப்போ நல்லா இருக்கும்.//

      ஹாஹாஹாஹா ஆமாம் நெல்லை நானும் நினைச்சேன் இதை... என்னவோ எப்படியோ வாங்கிடறாங்க. இப்ப சென்னை கோவளமும் வாங்கிருக்காமே சமீபத்துல

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  14. காணொளியைப் பார்த்தேன். கடல் அலைகளை எவ்வளவு பார்த்தாலும் அலுக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா நெல்லை. அலுக்கவும் அலுக்காது தியானம் செய்ய அதைப் பார்த்துக் கொண்டே அமைதியாக மனசை ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்ள ரொம்ப உதவும். இது ஒரு நல்ல தெரப்பியும் கூட. இயற்கையே நல்ல தெரப்பிதான் மனதிற்கு

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  15. ப்ளூ செர்டிஃபிகேஷன் பற்றிய தகவல் புதியது. இன்றே அறிந்து கொண்டேன். மற்றத் தகவல்கள் எல்லாமுமே புதியவை. ஆந்திரா பக்கமே அதிகம் போனதில்லையே! படங்கள் நிறைய இருப்பதால் எல்லாவற்றையும் பார்த்தாலும் மனதில் பதியவில்லை. ஆனாலும் படங்கள் நன்றாக வந்திருப்பதைச் சொல்லியே ஆகணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா உங்களுக்குப் புது தகவலா!!!!! ப்ளூ செர்டிஃபிக்கேஷன்?

      ஆமாம் முன்னரே சொல்லிருக்கீங்க நீங்க ஆந்திரா பக்கம் போனதில்லைன்னு. அதான் இப்படியாவது படங்கள் பார்த்துக்கலாமேன்னுதான் சொன்னேன் கீதாக்கா.

      //படங்கள் நிறைய இருப்பதால் எல்லாவற்றையும் பார்த்தாலும் மனதில் பதியவில்லை.//

      ஹாஹாஹா அது பதிவு முடிக்கணும்னு ....இனி படங்கள் கொஞ்ச்ம கொடுத்துட்டு மீதியை தனியா படப் பதிவா கொடுக்கலாம்னு நினைத்திருக்கிறேன்.

      //ஆனாலும் படங்கள் நன்றாக வந்திருப்பதைச் சொல்லியே ஆகணும்//

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு