செவ்வாய், 19 ஜனவரி, 2016

வட்லமுடி பயணம் 5 - அமராவதி-புத்த ஸ்தூபி-அருங்காட்சியகம்

அமராவதி பேருந்து நிலையத்தின் எதிரில் இருக்கும் ஆந்திரமாநில சுற்றுலாத் துறை வளாகத்திற்குள் இருக்கும் அருங்காட்சியகம்.  அருங்காட்சியகத்திற்குள் செல்வோம் என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா? இதோ நுழைகின்றோம். நுழைவுக் கட்டணம் ஒருவருக்கு ரூ 5. புகைப்படம் எடுக்க ரூ 20. அது காமேராவாக இருந்தாலும், மொபைலாக இருந்தாலும்.
நுழைவு வாயிலின் இடது புறம் வெளியில் இருக்கும் சிற்பம்
நடுவில் இருக்கும் புத்தர் - செதுக்கப்பட்ட சிற்பம்
புத்தரின் வாழ்க்கை வரலாறும் - 4 வகை ஸ்கூல் ஆஃப் ஆர்ட் பற்றியும்
இந்த ஸ்தூபி பற்றித்தான் சென்ற பதிவு

நுழைவு வாயிலின் அறையில் நடுவில் பெரியதாக புத்தரின் சிலை இருக்கிறது. புத்தரின் வரலாறும், பல சிற்பக்கலைகள் பற்றிய விவரங்களும் சுவரில் இருக்கின்றன. இடது பக்கமாக உள்ளே நுழைந்தால் சுவரில் ஆந்திர தேசத்து வரலாறும், பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டச் சிற்பங்களைப் பற்றிய தகவல்களுடன் மிக அழகா நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 
ஆந்திராவில் பௌத்தம் - புத்தரைப் பற்றி அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட இடங்கள் பற்றிய வரைபடம்.

புத்த சிற்பக்காட்சியகத்திற்குள் ஆந்திரமாநிலத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, சந்தாவரம், ஃபானிகிரி, துலிக்கட்டா, உப்புகுண்டூர், அமராவதியில் அகழ்வாராய்ச்சி செய்து கண்டெடுக்கப்பட்டதும் மற்றும் சென்னை மாகாணத்திலிருந்து 1919-20ல் அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்றச் சிற்பங்களும் இருக்கின்றன. இங்கிருக்கும் சிற்பங்களில் காந்தாரம், கிழக்கிந்திய பிஹார், பெங்கால் மாகாணத்திலிருந்து அன்பளிப்பாக கொல்கத்தா இந்திய அருங்காட்சியகத்திலிருந்து 1919-20 ல் கிடைக்கப்பெற்றவையும் அடங்கும்.

அமராவதி சிற்பக்கலை (Amaravati School of Art) : தன்யகடக-தனகட்டா என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட அமராவதி ஆந்திரவில் பௌத்தமையமாக இருந்தது. அயகா(ayaka) தூபியிலுள்ள கல்வெட்டுகளிலிருந்து, இங்கு புத்தரின் புனித எலும்புத் துண்டுகள், புனிதமாக்கப்பட்டு அதன் மீது மஹா சைத்யா ஸ்தூபி எழுப்பப்பட்டதாக அறியப்படுகிறது.

காந்தார சிற்பக்கலை : இது மேற்கத்திய ஹெல்லெனிஸ்டிக் மற்றும் ஈரான், இந்தியக் கலப்பில், குஷானர்களின் ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டது. இந்த வழிக் கலையில் புத்தர் மனித உருவில் அப்போலோவப் போன்ற அழகுருவில், இந்திய கிரேக்க கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டது. ஆண்கள் உருவத்தில் மீசை இருப்பது போல் உருவாக்கப்பட்டது. மெல்லிய துணிகளால் போர்த்தப்பட்டு, உடம்பின் வடிவமைப்புத் தெரிவது போன்றும், வட்ட வடிவாமான முகங்களுடனும், நல்ல செழுமையான உடல்வாகு இருப்பது போன்றும், இந்திய மண்ணின் உடை அமைப்பிற்க்கு அப்பாற்பட்ட உடைகளுடன் இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டது.  அமராவதி, நாகார்ஜுனகொண்டா சிற்பக்கலையில் காந்தார சிற்பக்கலையின் தாக்கம் விரவி இருக்கிறாது. இந்தக் காட்சியகத்தில் புத்தரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் இந்தக் காந்தார சிற்பக்கலை முறையில் செதுக்கப்பட்டச் சிற்பங்களைக் காணலாம்.

பால (Pala) சிற்பக்கலை : பால வம்சம் பிஹார், மேற்குவங்காளப் பகுதிகளை 400 வருடங்களாக ஆண்ட போது, வஜ்ராயன புத்த சிற்பக் கலை வேகமாக வளர்ந்து வந்தது.  இந்த வகைச் சிற்பங்கள் அப்பகுதியில் கிடைத்த சாம்பல், கறுப்பு நிற க்ளோரைட் கற்களில் செதுக்கப்பட்டன. இச்சிற்பக்கலையில் புத்தர். நான்கு வகை முக்கியமான தெய்வநிலையில் – அமிதபா, ரத்னசம்பவா, அக்ஷோபயா மற்றும் அமோகசித்தி  என்று பொதுவாக “பஞ்ச புத்தர்கள்” என்று வடிவமைக்கப்பட்டார். அதிபுத்த வைரோச்சனா – முதன்மையான நடுவிலிருக்கும் நிலை. இப்போது சிற்பங்களைப் பார்ப்போமா.


இந்தப் படத்தில் இடது புறம் இருப்பது பூர்ணகும்பம் உடைந்த நிலையில். நடுவில் இருப்பதும். இது பண்டு விஹாரத்திற்குள் செல்லும் முன் இருக்கும் கதவுகளின் இரு பக்கமும் இருக்கும். இவை புத்தமதத்தவர்களுக்கு மிகவும் புனிதமானதாக சதவாஹன காலத்தில் இருந்தன. இந்தத் தனித்தன்மையுள்ள பூவேலைப்பாடுகள், 16 ஆம் நூற்றாண்டில் உருவான விஜயநகரத்துக் கோயில்களில் வெளிப்புறத் சுவர்களில் காணப்படுகின்றன. இது ஆந்திர மாநிலத்து அரசின் சின்னமாக ஏற்கப்பட்டது. 
இது ஃபானிகிரியில் இருந்துப் பெறப்பட்டது.  புத்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பது. கபிலவஸ்துவை விட்டு வெளியேறி குதிரையில் செல்லுதல், நடுவில் இருப்பது அரச வாழ்வைத் துறந்து துறவறம் பூணுதல், மேல்பகுதி டுசிட்ட சொர்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுதல். படம் அவ்வளவுத் தெளிவாக இல்லை

புத்தரின் பாதம் - கி.மு. 1 வது நூற்றாண்டு - கி.பி. 1 வது நூற்றாண்டு - அமராவதி
புத்தரும் அவரது சீடர்களும்

அமராவதி சிற்பக்கலை
ஹைநயன பௌத்தம் குறித்த சிற்பங்கள். ஹைநயன என்பது மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த மஹாயன பௌத்தத்தைப் பின்பற்றியவர்கள் வழங்கிய பெயர்.
சிபிச் சக்கரவர்த்தி-புறா கதையை விளக்கும் சிற்பங்கள்
சந்தாவரம் சிற்பங்கள்.
நந்தயால்பாலெம் சிற்பங்கள்-நந்தயால்பாலெம் குண்டூர் மாவட்டத்தில் சந்தவோலு எனுமிடத்திலிருந்து 4 கிமீ தூரத்தில் உள்ளது.  குண்டூரிலிருந்து 45 கிமீ. இது தொடக்ககால விரிவான வரலாற்றில்  இடம்பெற்ற ஊர். இங்கு விவசாயத்திற்காக நிலம் தோண்டப்பட்ட போது அரியவகைச் சிற்பங்கள் நிறைய கிடைத்தனவாம்.கி.பி 1 வது நூற்றாண்டைச் சேர்ந்த ப்ரஹ்மி முத்திரயுடன் கூடிய கல்வெட்டு எழுத்துகளுடன் கிடைத்தன.

நடுவில் இருப்பது தாமரை பதக்கம்-அருகில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சிதிலமடைந்த சிற்பங்கள்

இன்னும் நிறைய படங்கள் மொபைலில் எடுத்தேன். ஆனால், தெளிவாக இல்லாததால் தர இயலவில்லை. நிறைய பயனுள்ள குறிப்புகள் பல உள்ளன. தொல்பொருள் அகழ்வராய்ச்சியில், குறிப்பாக பௌத்தம் குறித்து ஆய்வு செய்பவர்களும், அருங்காட்சியகம் கண்டு தகவல்கள் அறிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர்களும் நேரில் சென்று அறிந்து பயனடையலாம். அருமையான அருங்காட்சியகம். 

இதன் அருகிலேயே ஆந்திரா சுற்றுலாத்துறை உணவகம் இருக்கின்றது. (சைவம், அசைவம் இரண்டும் உண்டு. பிரியாணி வகைகள், கலந்த சாதம், சாப்பாடு, வட இந்திய உணவுகள், ஆந்திரா உணவு என்று கிடைக்கின்றன) சைவச் சாப்பாடு ஒன்று ரூ 100. அளவு என்றெல்லாம் கிடையாது. சேமியா கேசரி, சாம்பார், ரசம், கோங்குரா சட்னி/தொக்கு, ஒரு கூட்டு, பப்பு, தயிர் (அருமை) ஆவக்காய், ஒரு கறி-அன்று கோவைக்காய் வட்டவடிவில் வெட்டி வறுத்து, அதனுடன் வெங்காயம், அவல் எல்லாம் கலந்து செய்யப்பட்டிருந்தது (அருமை) மொத்தத்தில் உணவு நன்றாக இருந்தது. 

அடுத்து விஜயவாடாவிற்குச் செல்லும் பேருந்தில் ஏறி ஊண்டவல்லிக் குகைகளைக் காணச் செல்வோமா? ஒரு மணி நேரப் பயணம். தொடர்கின்றேன். (அடுத்தப் பதிவுடன் எனது பயணக்கட்டுரை முடிவடைகின்றது.)

(இந்த அருங்காட்சியகங்களைக் கண்ட போது நம் முனைவர் ஜம்புலிங்க ஐயாவைப் பெரிதும் நினைத்துக் கொண்டேன். அவருக்காகவே இன்னும் நிறைய படங்கள், குறிப்புகள் எடுத்தேன். ஆனால் தெளிவாக இல்லாததால் கொடுக்க இயலவில்லை.)

-----கீதா




36 கருத்துகள்:

  1. அருமையான அருங்காட்சியகம் பற்றி அறிந்து கொண்டேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  2. அழகிய படங்களுடன் வரலாற்றுப் பாடம் போலப் பதிவு. அருமை. எனக்கும் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  3. நான் ஆந்த்ராவில் இருந்தபோதே போகவேண்டும் என்று நினைத்திருந்தேன் , முடியவில்லை . உங்கள் பதிவைப் படித்ததும் போகவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. விவரமான பதிவு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போய்வாருங்கள் அருணா அழகான இடம். வெயில் வேண்டாம். நவம்பர் டிசம்பரில் சென்று வாருங்கள்....மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  4. பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ நாகேந்திர பாரதி..தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  5. அருமையான தகவல்களுடன் பயணக்கட்டுரை சிறப்பாக வந்துள்ளது! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  6. நிறைய விடயங்கள் விபரமாக சொல்லிச்சென்ற விதம் அழகு
    புகைப்படங்கள் அருமை நிறைய படங்கள் வெளியிடுவதில் என்னையும் மிஞ்சி விடுவீர்கள் போல தொடர்கிறேன்...
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். அஹஹஹஹ் அப்படி எல்லாம் இல்லை ஜி. இது பயணக்கட்டுரை என்பதால்..உங்களைப் போல வீடியோ எல்லாம் முடியவில்லை ஜி..தெரிந்தாலும் அதற்கான மென்பொருள் தரவிறக்கம் செய்யவில்லை..

      நீக்கு
  7. #(இந்த அருங்காட்சியகங்களைக் கண்ட போது நம் முனைவர் ஜம்புலிங்க ஐயாவைப் பெரிதும் நினைத்துக் கொண்டேன்#
    முனைவர் ஜம்புலிங்கம் அய்யா அவர்களின் பதிவுக்கு வந்து விட்டோமா என்ற ஐயம் எனக்கும் வந்தது உண்மை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  8. பல அரிய தகவல்களுடன் இனிமையான பயணக் கட்டுரை. சிற்பங்களின் நுணுக்கம் வியக்கவைக்கிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
    தமிழ்மணம் தகராறு செய்கிறது. அதனால் வாக்கு பதிவாகவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செந்தில் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தமிழ்மணம் இணைக்கக் கூட முடியவில்லை மெதுவாகத்தான் முடிந்தது. பரவாயில்லை சகோ. உங்கள் மனம் திறந்த கருத்தைச் சொன்னாலே போதுமே சகோ...

      நீக்கு
  9. பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  10. பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  11. பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  12. புகைப்படங்களும் தகவல்களும் அருமை ! இத்தகைய அருங்காட்சியங்கள் இவற்றின் அருமையெல்லாம் தொலைதூரம் வந்தபின் தான் உணர்கிறேன் ! :(
    அந்த சைவ சாப்பாடு படிக்கும்போதே நாவூருதே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சலின் தங்களின் கருத்திற்கும்வ் வருகைக்கும் இந்தியா வரும்போது திட்டமிட்டு முடிந்தால் சென்று பாருங்கள் ஏஞ்சல்!

      நீக்கு
  13. செதுக்கப்பட்ட புத்தர் எவ்வளவு அமையாகக் காட்சி தருகிறார்!
    அருமையான தகவல்கள், சென்று பார்க்க வேண்டும் என்று ஆசைவந்துவிட்டது.
    படங்களும் தகவல்களும் என அருமையாக ஒரு பயணக் கட்டுரை! நன்றி கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கிரேஸ் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். அடுத்த முறை வரும் போது திட்டமிட்டு வந்து சென்று பாருங்கள்..மிக்க நன்றி

      நீக்கு
  14. சகோ துளசி & கீதா,

    இவ்வளவையும் நினைவு வச்சி எழுதியிருக்கீங்களே, சூப்பர் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சித்ரா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். நினைவு ஆம் எனக்குச் சற்று குறைவுதான் ஆனால் கண் பார்த்துவிட்டால் அதன் வழி நன்றாகப் பதிந்துவிடும் மட்டுமல்ல போய் வந்ததும் சிலவற்றைக் குறித்துவைத்துவிடுவேன்...

      நீக்கு
  15. அன்பிற்கினிய நண்பர்களே,

    அருமையான தகவல்கள் காணர்க்கரிய புகைப்படங்கள்.

    இதன் அருகிலேயே ஆந்திரா சுற்றுலாத்துறை உணவகம் இருக்கின்றது. (சைவம், அசைவம் இரண்டும் உண்டு. பிரியாணி வகைகள், கலந்த சாதம், சாப்பாடு, வட இந்திய உணவுகள், ஆந்திரா உணவு என்று கிடைக்கின்றன) சைவச் சாப்பாடு ஒன்று ரூ 100. அளவு என்றெல்லாம் கிடையாது. சேமியா கேசரி, சாம்பார், ரசம், கோங்குரா சட்னி/தொக்கு, ஒரு கூட்டு, பப்பு, தயிர் (அருமை) ஆவக்காய், ஒரு கறி-அன்று கோவைக்காய் வட்டவடிவில் வெட்டி வறுத்து, அதனுடன் வெங்காயம், அவல் எல்லாம் கலந்து செய்யப்பட்டிருந்தது (அருமை) மொத்தத்தில் உணவு நன்றாக இருந்தது.

    சிந்தைக்குணவும், வயிற்றுக்கு உணவும் திருப்த்தியாக கொடுத்தது உங்கள் பதிவு.

    நன்றி

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். அஹஹ செவிக்கு உணவு இல்லாதபோது என்றெல்லாம் இல்லை ...உணவும் பார்த்தலும் ..என்ராலும் உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை சுற்றும் போது.

      நீக்கு
  16. அன்புள்ள சகோதரி,

    ‘வட்லமுடி பயணம்’ பற்றி தங்களின் நெடிய பயணக் கட்டுரை பெரிய முயற்சில் அழகிய படங்களுடன் புத்தரைப் பற்றிய வரலாற்று உண்மைத் தகவல்களைத் திரட்டிக் கொடுத்து இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்.

    நன்றி.

    த.ம.5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மணவை ஜேம்ஸ் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  17. பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும்

      நீக்கு
  18. அனைத்து வாசகர்களுக்கான கட்டுரையாகவும், ஆய்வுக்கட்டுரையாகவும் இப்பதிவினை என் பார்வையில் கண்டேன். இத்தொடர் பதிவினை நான் படித்து வந்தபோதிலும் புத்தர் என்றதும் சற்றே அதிகமாக கவனமாகப் படித்தேன். தமிழகத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக சோழ நாட்டில், புத்தர் சிலைகள்தான் கிடைக்கின்றனவேயன்றி புத்த ஜாதகக்கதைகள் குறித்த சிற்பங்களோ, புத்தர் தொடர்பான பிற சிலைகளோ கிடைக்கப்பெறவில்லை. தெலுங்கானாவில் அமைக்கப்படவுள்ள புத்தர் அருங்காட்சியகம் தொடர்பாக சில விவரங்களைக் கேட்டு அந்த அருங்காட்சியகப் பொறுப்பாளர் சில நாள்களுக்கு முன்பு என்னைத் தொடர்புகொண்டு பேசினார். சென்னை அரசு அருங்காட்சியகத்தில் (Government Museum, Egmore, Madras, Tamil Nadu) நாகப்பட்டினத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிற்பங்களுக்கான தனியாக ஒரு பிரிவு (gallery)உள்ளது. அதில் புத்தரைத் தவிர, புத்தரோடு தொடர்புடைய வேறு சில சிற்பங்களும், பூசைப்பொருள்களும் உண்டு. சிலை என்ற அளவில் தமிழகத்தில் நின்ற நிலை, அமர்ந்த நிலை, கிடந்த நிலைகளே உள்ளன. கிடந்த நிலையில் (காஞ்சீபுரத்தில்)இருந்த ஒரே சிலையையும் மண்ணைப்பேர்ட்டு மூடிவிட்டார்கள். படித்துள்ளேன். பார்த்ததில்லை. இந்நிலையில் தங்களது பதிவு தென்னிந்தியாவில் பௌத்தம் என்ற நிலையில் தனிக்கோணத்தில் முக்கியமான தகவல்களைக் கொண்டுள்ளது. வாய்ப்பிருப்பின் அமராவதி சிற்பங்கள் தொடர்பாக பிறிதொரு சமயத்தில் ஒரு கட்டுரை எழுத உள்ளேன். அப்போது இப்பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். தங்களின் ஆர்வத்திற்கும், ஈடுபாட்டிற்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதிகமான அலுவலகப்பணி காரணமாக மறுமொழி கூறுவதில் சற்றே தாமதம். பொறுத்துக்கொள்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஐயா. தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். ஆஹா அப்படி உள்ளதா ஐயா? ஆய்வுக்கட்டுரை போல? மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் நிறாய்ய தகவல்கள் இருக்கின்றன. ஐயா அதை எல்லாம் தரையலவில்லை. சென்னையில் இருந்து பெறப்பட்டவையும் அங்கு உள்ளன.

      உங்கள் பதிவிற்குக் காத்திருக்கின்றோம் ஐயா. பரவாயில்லை ஐயா. தங்களின் வருகையும் வாசிப்புமே எங்களுக்கு ஊக்கம் தருபவைதான். இன்னும் தகவல்கள் இருக்கின்றன. அமராவதி பற்றி.

      மிக்க நன்ரி ஐயா...மீண்டும். தங்களின் ஊக்கம் மிகு பின்னூட்டம் எங்களுக்கு மேலும் உற்சாகம் அளித்து இன்னும் எழுதத் தூண்டுகின்றது. மிக்க நன்றி...ஐயா

      நீக்கு