வியாழன், 7 நவம்பர், 2013

ஏமாறாதே....ஏமாற்றாதே....


இதுவரை நம்முடைய மின் அஞ்சல்(E.mail) வழியாகவும், மொபைல் வழியாகவும் வந்து கொண்டிருந்த இணையக் குற்றங்கள் (cyber crimes) இப்போது முகநூல் (Face Book) வழியாகவும் நிறையவே வர ஆரம்பித்து விட்டது.  நம் மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை என் நண்பர் ஒருவருக்கு முகநூல் வழியாக வந்த இந்த மின் அஞ்சலும் அதற்கு அவர் கொடுத்த பதிலும், தப்பித்ததையும் என்னால் முடிந்த வரை தமிழில் மொழி பெயர்த்து இங்கு கொடுத்துள்ளேன்.



மாக்ஸ் ப்ரிசியஸ்


ஹலோ, மை டியர், இந்த நாள் இனிய நாளாகட்டும். நீங்கள் அங்கு நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  உங்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். என் பெயர் ப்ரிசியஸ் மாக்ஸ்வெல்.  உங்கள் profile பார்த்துப் பிடித்து உங்களுடன் நட்பு கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் உங்களுக்கு எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கும் ஆர்வம் இருந்தால் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள உதவியாக எனது இந்த இமெயில் முகவரிக்குத்  ************* தொடர்பு கொள்ளலாம். நான் எனது ஃபோட்டோக்களை அனுப்பி என்னைப் பற்றி எல்லாம் தெரியப்படுத்துகிறேன்.  நன்றி, கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.

***************************************************************************

ப்ரிசியஸ் மாக்ஸ்வெல்,  உங்கள் மெயில் பார்த்தேன். இனி வரும் நாட்களில் நாம் நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வோம். உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்

********************************************************************************

அன்புள்ள,

என்னுடைய வேண்டுகோளை ஏற்று பதில் கொடுத்ததற்கு மிக்க நன்றி. இன்று நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அங்கு உங்கள் சூழலும், எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். என் பெயர் ப்ரிஷியஸ் மாக்ஸ்வெல். நான் சென்ட்ரல் ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டாவைச் சேர்ந்தவள்.  எனது வயது 24. 5 அடி 8 இன்ச் உயரம். மணமாகவில்லை. நல்ல நிறம்..  கறுப்புத் தலைமயிர்.  பழுப்பு நிறக் கண்கள்.

அரசியல் சூழல் காரணமாகவும், உள்நாட்டுப் போர் காரணமாகவும் கடந்த சில வருடங்களாக நான் செனகல் என்னும் ஊரில் இருக்கிறேன். எனது தந்தை ************* ருவாண்டாவின் தலை நகரமாகிய சிகாலியில் உள்ள ஒரு Steel Industrial Company யின் மானேஜிங்க் டைரெக்டராக வேலை பார்த்து வந்தார்.  என் அன்பான அப்பா, அம்மா, தங்கை எல்லோரும் ஒரு நாள் காலை புரட்சியாளர்களால் கொல்லப்பட்டனர். நான் மட்டும்தான் தப்பிப் பிழைத்து செனகலுக்கு வந்து, இங்கு (United Nation Refugee Camp) அகதிகள் முகாமில், Reverend Pastor ன் கவனிப்பில் இருந்து வருகிறேன்.  இப்போது அவருடைய கணிணியை உபயோகப்படுத்தித்தான் இந்த மெயிலை உங்களுக்கு அனுப்புகிறேன்.

நான் எனது எந்த உறவினரையும் அணுக முடியாத நிலையில் இருக்கிறேன்.  ஏனென்றால் அவர்களும் போரின் இடையில் ஊரை விட்டு ஓடி விட்டார்கள்.  இப்போது எனக்கு இருக்கும் ஒரே நபர், இந்த அகதிகள் முகாமில் இருக்கும் MISSION SAVIOR CHURCH ன்  pastor  Reverend ***************. அவர் மிகவும் நல்லவர். என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் நான் அவருடன் வசிக்கவில்லை.  காரணம் இங்கு ஆண்களுக்குத் தனி விடுதி, பெண்களுக்குத் தனி விடுதியாக உள்ளதால் நான் பெண்களின் விடுதியில் இருக்கிறேன்.

The Pastors Tel number is ******************* நீங்கள் இந்த நம்பருக்கு அழைக்கலாம். அவர்தான் எடுப்பார்.  அவரிடம், என்னுடன் பேச விரும்புவதாக்ச் சொன்னால் என் விடுத்திக்கு அந்த அழைப்பை அனுப்புவார். இங்கு நான் அகதியாக இருப்பதால் எனக்கு எந்த உரிமையும் கிடையாது. அகதிகளாகிய எங்களுக்கு இந்த முகாமை விட்டு மேலதிகாரிகளின் அனுமதி இல்லாமல் வெளியே செல்ல முடியாது. இது ஜெயில் போலத்தான்.  ஆனால் நான் இறைவனின் அருளால் இந்த முகமை விட்டு சீக்கிரமே விடுவித்திக்கொள்வேன் என்று நம்புகிறேன்.  இதை தயவு செய்து உங்களைப் புண்படுத்துவதாக நினைத்து கொள்ளாதீர்கள். எனக்கு இங்கு இந்த முகாமில் மிக வேதனையான சூழலாக இருப்பதால்தான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன். நாம் இதற்கு முன் சந்தித்ததில்லைதான்.  ஆனால் உதவி பெறவேண்டி தேடியபோது உங்கள் profile பார்த்து நீங்கள் மிகவும் பொறுப்பானவர் என்பதை அறிந்து, நான் உங்களை மிகவும் நம்புவதால், நீங்கள் என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள்தான் சரியான நபர் என்பதால்தான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.

நான் உங்களிடம் எனது பரம ரகசியத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.  தயவு செய்து நீங்கள் என்னிடம் பொறுப்புடனும், வெளிப்படையாகவும் உங்கள் profile ல் உள்ளது போல் இருக்க வேண்டுகிறேன். உங்களுக்கு இப்படி நான் எழுதுவது வியப்பாக இருக்கலாம்.  ஆனால், மிக மிக அவசரத் தேவையாக இருப்பதால் நீங்கள் இதில் உடனேயே தலையிட்டு எனக்கு உதவுமாறு வேண்டுகிறேன். கடவுளின் அருளால், நீங்கள் நேர்மையாகவும், பொறுப்பாகவும் இருப்பீர்கள், என்னை ஏமாற்ற மாட்டீர்கள் என்று உங்களை மிகவும் நம்புகிறேன்.

எனது தந்தை, லண்டனில் ஒரு பெரிய வங்கியில் (Royal Bank Of Scotland) ல் அவர் உயிரோடு இருந்த போது பணம் சேமித்திருந்தார். என்னுடைய பெயரைத்தான் அவர் அடுத்த nominee ஆகக் கொடுத்திருந்தார். இதைப் பற்றி நான் யாரிடமும் கூறவில்லை. Reverend ***************** இடம் மட்டும், அவரின் பாதுகாப்பில் உள்ளதால் கூறியுள்ளேன். நான் எனது பாதுகாப்பிற்கு வேண்டியும், பணத்தை மோசமானவர்களிடம் இழந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இதை ரகசியாமாக வைத்துள்ளேன். அதனால்தான் உங்களையும் யாரிடமும் இதைப் பற்றித் தெரிவிக்கக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.  அந்த வங்கியில் டெப்பாசிட் ஆன தொகை 6 மில்லியன் 700 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். ($6.7 million).

எனக்கு இந்தப் பணம் திரும்பக் கிடைக்க நீங்கள் உதவ வேண்டும்.  நான் இதை ஏற்கனவே முயன்று விட்டேன்.  ஆனால் நான் இங்கு அகதியாக இருப்பதால் அந்தப் பணத்தை வங்கி தருவதற்கு மறுத்துவிட்டது. அவர்கள், என்னை ஒரு உறவினரையோ, அயல்நாட்டு பார்ட்னரையோ, ட்ரஸ்டியையோ என் சார்பாக கொண்டுவர வேண்டும் என்று அறிவுரைத்தனர். தயவு செய்து உங்கள் நாட்டில், உங்கள் வங்கிக் கணக்கிற்கு இந்தப் பணத்தை மாற்றி எனக்கு உதவ வேண்டுகிறேன்.  இப்படிச் செய்து எனக்கு பணம் நீங்கள் அனுப்பினால், அதை வைத்து நான் இந்த முகாமை விட்டு வெளியேறவும், எனது பயணத்திற்கு வேண்டிய ஆவணங்களை எல்லாம் பெற்று உங்கள் நாட்டிற்கு வந்து நல்லதொரு வாழ்வை வாழ வழி செய்யுங்கள்.

அங்கு வந்து எனது படிப்பைத் தொடர வாய்ப்புக் கிடைக்கும், காரணம், எனது படிப்பு இப்போது முதல் வருடத்தோடு பாதியில் நிற்கிறது.  எனது பணத்தை நல்ல முறையில் ஏதாவது நல்ல தொழிலில் முதலீடு செய்து அதைக் காப்பாற்ற உதவலாம். நீங்கள் உதவ ரெடியாக இருந்தால், எனது தந்தையின் மரணச் சான்றிதழ். வங்கி கணக்கு விவரங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உங்கள் பெயர், தொடர்பு கொள்ள உதவும் நம்பர், உங்கள் நாடு பற்றிய விவரங்களை எனக்கு அனுப்பினால் போதும்.

இதை உங்களை நம்பித்தான் கொடுக்கிறேன்.  எனக்கு, நேர்மையான, உண்மையான, புரிந்துகொள்ளக் கூடிய, நல்ல உழைப்பாளியான, கடவுள் நம்பிக்கையும், கடவுளுக்குப் பயபடுபவராக உள்ள ஒருவரைத்தான் பிடிக்கும்.  அதற்கு முன் நீங்கள் நான் மேலே குறிப்பிட்டுள்ள்து போல் கூப்பிட வேண்டும் ஏனென்றால் எனக்கு உங்களிடம் இன்னும் நிறைய பேச வேண்டும்.  இதனுடன் எனது புகைப்படங்களை இணைத்துள்ளேன்.  இன்னும் நிறைய புகைப்படங்களை அடுத்த மெயிலில் அனுப்புகிறேன்.  உங்களைப் பற்றியும் சொல்லுங்கள்.  நானும் உங்களைப் பற்றி அறிந்து கொள்வேன். இந்த நாள் நல்ல நாளாகட்டும்..என்னைப் பற்றியும் சிறிது சிந்தியுங்கள்.  உங்களிடமிருந்து பதிலை சீக்கிரமாக எதிர்பார்க்கிறேன்.

உங்கள் உண்மையான தோழி

ப்ரிஷியஸ் மாக்ஸ்வெல்

***************************************************************************

நான் உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன் மாக்ஸ். பழைய மது, புது பாட்டிலில் விற்பது எங்கள் நாட்டில் இது போல் பல பாமர மக்கள் அதேசமயம் பணத்திற்கு ஆசைப்பட்டு ஏமாந்துள்ளார்கள்.  அதனால் ஐ ஆம் வெரி ஸாரி.  நான் உங்களுக்குச் செய்ய முடிந்தது ப்ரார்த்தனை ஒன்றுதான்.  காலமும், பொறுமையும் உங்களுக்கு நல்ல முடிவுகளைத் தரும். எனது நண்பர் ஒரு போலீஸ் ஆபீஸர்.  அவரிடம் உங்களது செய்தியையும், ஃபோன் நம்பரையும் கொடுத்துள்ளேன்.  அவர் உங்களைத் தொடர்பு கொள்வார். தொடர்பு கொண்டால் நாம் நல்ல நண்பர்கள் (!?) என்பதைச் சொல்ல மறந்து விடாதீர்கள்.  கடவுள் உங்கள் அருகில் இருக்கிறார்.  மனம் தளராதீர்கள்.  நான் உங்களுக்காக இறைவனை வேண்டுகிறேன்.



எனது நண்பர் “போலீஸ்: என்ற வார்த்தையை தட்டியாதால் அதற்குப் பின் அந்த மாக்ஸிடமிருந்து மெயில் எதுவும் இல்லை.  தப்பித்தார்.  நல்லவேளை.


ஆமா, அம்மணி எத்தனை வருஷமா இந்த ஒரே கதைய சொல்லி ஏமாத்தப் போறீங்க?  கொஞ்சம் கதைய மாத்துங்கப்பா.   போரடிச்சுப் போச்சு.  எங்க ஊர்ல இன்னும் உங்க கதைய கேட்டு எத்தனை பேரு ஏமாறப் போராங்களோ?  ஏற்கனவே நாங்க இளிச்சவாயங்க, எங்க நாட்டுல, நாங்க நேரடியா பார்த்துக்கிட்டே இருக்கற அரசியல்வாதிங்க கதைய கேட்டே ஏமாந்துகிட்டுத்தான் இருக்கோம்.  அப்ப கண்ணுக்கே தெரியாம எங்கேயோ உக்காந்துகிட்டு, கம்ப்யூட்டர் வழியா கதையத் தட்டிவிட்டா எங்க மக்கள் ஏமாறாமயா இருப்பாங்க?!! அதுவும் நீங்க டாலர்னு தட்டினீங்கனா எங்க மக்கள் வாயப் பொளந்துடுவாங்களே அதுவும் ஒரு பொண்ணு வழியா!!! அம்மணி, நாங்களும் இப்ப முழிச்சுக்கிட்டோம்.  இந்தா இப்ப இங்க தட்டிவிட்டாச்சு.  உங்க பருப்பு இனி இங்க வேகாது அம்மணியோவ்.!!


1 கருத்து:

  1. அடடா! இப்படியெல்லாம் கூட ஏமாற்றுவார்களா?
    நல்ல விழிப்புணர்வு வேண்டும் எங்கும் எதிலும் என்பதை விளக்கிய பகிர்வுங்க அனைவரையும் சென்றடைய வேண்டும்.

    பதிலளிநீக்கு