புதன், 10 டிசம்பர், 2025

தலக்காடு - 2 - பாடலேஸ்வரா / பாதாளீஸ்வரர் / வாசுகீஸ்வரர் கோவில் நோக்கி

 தலக்காடு - 1 ன் தொடர்ச்சி.

மைசூர் உடையார் வம்சத்தின் ராணியான அலமேலு, சில வரலாற்றுச் சம்பவங்களால் - அப்படியான ஒரு சம்பவத்தில் தன் கணவரை இழந்ததால், சோழர்களுக்கும், உடையார்களின் வம்சத்திற்கும் சாபம் இட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சாபத்தின் விளைவாக, காவிரி நதியின் போக்கு மாறி, மணல் திட்டுகள் உருவாகி, 14 ஆம் நூற்றாண்டில் இந்தத் தலக்காடு நகரத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட கோயில்களையும் (இந்தப் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்கள், கீர்த்திநாராயணன் கோவில் போன்றவற்றோடு இன்னும் பல கோவில்களை) மணல் திட்டுகளுக்குள் புதைத்துவிட்டதாம்.

1911 ஆம் ஆண்டிலேயே  ஏறக்குறைய அனைத்துக் கோவில்களும் தோண்டி எடுக்கப்பட்டுவிட்டனவாம்.

தோண்டி எடுக்கப்பட்டது என்பது நன்றாகத் தெரியும். இதோ கீழே சொல்லப்படும் கோவில்கள் கிட்டத்தட்ட 30 ஆடி ஆழப் பள்ளத்தில்தான். அடுத்த பதிவுகளில் படங்களில் காட்டுகிறேன்.

தொல்லியல் துறையினர் மிகுந்த சிரமத்திற்கிடையில் இக்கோவில்களை மீட்டெடுத்து புனரமைத்துள்ளார்கள். எனினும் மழைக் காலங்களில் இக்கோவில்கள் மீண்டும் பாதி அளவு மணலில் மூழ்கி விடுவதுண்டாம். மீண்டும் இவற்றைத் அகழ்ந்தெடுக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்போதும் அப்படியா என்று தெரியவில்லை.

சுவாரசியமான தகவல்.

தலக்காடு பற்றி தி.ஜானகிராமன் “நடந்தாய் வாழி காவேரி”  (காலச் சுவடு பதிப்பகம், 2007. 287 பக்கம்) எனும் நூல் எழுதியிருக்கிறார். காவிரியின் பிறப்பிடம் முதல் கடலில் சேரும் வரை ‘சிட்டி’யுடன் (பெ கோ. சுந்தரராஜன்) சேர்ந்து ஜானகிராமன் நடத்திய பயணத்தின் பதிவு அது என்றும் தமிழில் பயண இலக்கிய நூல்களில் முக்கியமான ஒன்று என்றும் ஜெமோ குறிப்பிடுகிறார்..

தலக்காடு ஒரு பாலைவனத்தை நினைவுறுத்தும் நிலப்பகுதி என்று தி.ஜ வர்ணித்திருக்கிறார். மாபெரும் மணல் மேடுகள், அதில் ஒரே ஒரு கோவிலின் மேல்நுனி மட்டும் தெரிகிறது. மேலும் பல கோவில்கள் மணலில் மூழ்கிக் கிடக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அது ஒரு தொன்மமாக மட்டுமே கூட இருக்கலாம் என்று ஜானகிராமன் குறிப்பிட்டிருப்பதாக ஜெமோ சொல்கிறார். - நன்றி ஜெ மோ தளத்திற்கு.

அப்படி அகழ்ந்து எடுக்கப்பட்ட கோவில்களில் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்கள் - பஞ்சலிங்கங்கள் என்று அழைக்கப்படும் 5 கோவில்கள். பிரசித்தி பெற்றவை.

நாங்கள் பார்த்தவற்றை (பார்க்காதவற்றையும்) வரிசைப்படி கொடுத்திருக்கிறேன்.

1. பாடலேஸ்வரா / வாசுகீஸ்வரா (பாதாளீஸ்வரர்-வாசுகீஸ்வரர்) - பாட(த? தா?)லேஸ்வரா (கன்னடத்தில் 'ட' போட்டிருப்பதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதையும் வைத்துப் பார்க்கும் போது தெரிகிறது தமிழில் பாதாளீஸ்வரர் என்று இணையத்தில். 

2. மரலேஸ்வரா (மருளீஸ்வரர்/மாரளீஸ்வரர்/சைகதேஸ்வரர்)

3. வைத்யநாதேஸ்வரா (வைத்யநாதேஸ்வரர்),

4. அர்கேஸ்வரா (அர்கேஸ்வரர்)

5. மல்லிகார்ஜுனா (மல்லிகார்ஜுனர்) மற்றும்

பஞ்சலிங்கங்களோடு, ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தனால் நிர்மாணிக்கப்பட்ட, கீர்த்தி நாராயணர் கோவிலும் பாடலேஸ்வரா, மாரலேஸ்வரா, வைத்யநாதேஸ்வரா கோவில்களின் அருகில் இருக்கிறது. இந்தக் கீர்த்தி நாராயணர் கோவில் பஞ்ச நாராயண கோவில்களில் ஒன்றாம்.

அப்படி எங்களால் நான்கு கோவில்கள் - முதல் மூன்று சிவன் கோவில்களையும், விஷ்ணு கோவிலான கீர்த்திநாராயணர் கோவிலையும் மட்டும்தான் கவர் செய்ய முடிந்தது.

அர்கேஸ்வரர் கோவில் இந்தக் கோவில்களில் இருந்து, சற்று தூரத்தில் இருக்கிறது. மல்லிகார்ஜுனா கோவிலும் சற்று தூரத்தில் ஒரு குன்றின் மீது, தலக்காடு போகும் சாலையில் பார்த்தேன். படமும் ஓடும் காரிலிருந்து எடுத்த நினைவு ஆனால் படத்தைக் காணவில்லை! இவை இரண்டையும் கவர் செய்ய முடியவில்லை.

தலக்காடு பீச் பற்றி போன பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா. அங்கு அப்பாவை காரில் இருக்கச் சொல்லிவிட்டு, நெல்லை, நான், நம்மவர் மூவரும் இந்த பீச்சின் அருகிலேயே இருக்கும் கோவில்களுக்கு நடக்கத் தொடங்கினோம்.

நுழைவுப் பகுதியில் இருக்கும் அறிவிப்புப் பலகை - ஸ்ரீ க்ஷேத்ர கஜாரண்ய தலக்காடு, ஸ்ரீ பஞ்சலிங்க கோவில்கள், பாடலீஸ்வர / வாசுகிஸ்வரா கோவில், மாரளேஸ்வரர் கோவில், சாதே(டே)ஸ்வரி கோவில், கோகர்ணேஸ்வரா கோவில், கீர்த்திநாராயணா கோவில், வைத்தியநாதேஸ்வரர் கோவில், வீரபத்ரேஸ்வரர் கோவில்களுக்கு செல்லும் பாதை

பார்க்கிங் பகுதியிலிருந்து சில அடிகள் நடந்தால் இடப்பக்கம், கோவில்களுக்குச் செல்லும் நுழைவு வாயில் அதில் ஒரு அறிவிப்புப் பலகை இருக்கிறது. செல்லும் வழி புதை மணல் மற்றும் கொஞ்சம் காடு போன்ற பகுதி.

அவங்க ரெண்டு பேரும் - நெல்லையும், நம்மவீட்டவரும் வேகமா போறாங்க பாருங்க...

 அவர்கள் இருவரும் வேகமாக நடந்திட நான் கொஞ்சம் மெதுவாக அதுவும் புகைப்படங்கள், காணொளிகள் எடுத்துக் கொண்டே வேறு நடந்தேன். என்னைக் காணவில்லையேன்னு திரும்பிப் பார்க்க....நான் நின்னு நின்னு ஃபோட்டோ, வீடியோ ஷூட்டிங்க்!!!!

தலக்காடு பீச் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 1/2 கிமீ நடை, முதல் கோவிலான பாடலேஸ்வரா கோவிலுக்கு. 

நடக்கும் வழி கொஞ்சம் வெறிச் என்று தோன்றினாலும், சுற்றிலும் மரங்கள் அப்பகுதி அழகாக இருக்கிறது. நான் ரசித்து ரசித்துப் பார்த்துக் கொண்டே மரங்களை க்ளிக்கிக் கொண்டே....நடந்தேன். 

ஒரு காணொளியை நின்று எடுத்தேன். அவர்கள் வேகமாகப் போவதைப் பார்த்ததும் அடுத்த இரு காணொளிகளையும் நடந்துகொண்டே எடுத்தேன். காணொளியும் என் நடைக்கேற்ப ஆடியிருக்கும்!!!!! முதல் காணொளியில் பாதியும், இந்த இரண்டாவது காணொளியும் ஆடும் பாருங்க!!!!

இதில் நெல்லையை உன்னிப்பாகப் பாருங்க. ஒரு கையில் மொபைலை வைத்துக் கொண்டு நடந்து கொண்டே எடுத்துக் கொண்டு போறார் பாருங்க. இப்படித்தான் கோவில்களிலும். நான் எப்படி ஈடு கொடுக்க முடியும் சொல்லுங்க!!!!! அவர் உயரமாவும் இருப்பாரா!!!!!


ஒரு காணொளியை நின்று எடுத்தேன். அவர்கள் வேகமாகப் போவதைப் பார்த்ததும் அடுத்த இரு காணொளிகளையும் நடந்துகொண்டே எடுத்தேன். காணொளியும் என் நடைக்கேற்ப ஆடியிருக்கும்!!!!! காணொளி எடுக்கும் போது நடக்காமல் எடுக்கணும். நடந்தா ஷேக் ஆகாம என்ன ஆகும் சொல்லுங்க.

நெல்லை வேகமாக நடந்து கொண்டே ஒற்றைக் கையில் மொபைலை வைத்துக் கொண்டு படம் எடுத்திடுவார். எனக்கு அது சுத்தமாக முடியாத ஒன்று. அதுவும் குறிப்பாக, கோவில்களில் அவர் வேக வேகமாக எடுத்த போது, என்னால் அவர் வேகத்திற்கு நடந்து ஈடு கொடுக்க முடியவில்லை.

அப்படியாக முதல் கோவிலான பாடலீஸ்வரர் கோயிலை அடைந்தோம்.

பதிவு பெரிசாகிவிடுவதால், இப்பதிவில் போகும் வழியின் காட்சிகள் கொடுத்துவிட்டு முடிக்கிறேன். கோவில்கள் பற்றி அடுத்த பதிவிலிருந்து ஒவ்வொரு கோவிலாகப் போவோம்...

குறிப்பு - 1. பாதளீஸ்வரர் கோவில் மற்றும், மாரளீஸ்வரர் கோவில்கள் இரண்டையும் பார்த்துவிட்டு, நேரே பீச் பார்க்கிங் வந்து நம் வண்டியை எடுத்துக் கொண்டு (தலக்காடு பீச் பகுதிக்குள் நுழையும் முன்னர் வலப்புறம்) பீச் பகுதியிலிருந்து சாலைக்குப் போகும் போது இடப்புறம்  வைத்தியநாதேஸ்வரர்கீர்த்தி நாராயணர் கோவிலுக்குப் போகும் சாலையில்போகலாம். அங்கு கோவில் பெயர்களைச் சொல்லி அம்புக்குறியுடன் அறிவிப்பு பலகை இருக்கும்

2. இல்லை என்றால் முதல் இரு கோவில்களும் பார்த்துவிட்டு மீண்டும் அதே வழியில் வந்து முதல் கோவிலின் எதிரே இருக்கும் வழியில் (கொஞ்சம் ஷார்ட் கட்), அடுத்த இரு கோவில்களுக்கும் செல்லலாம்.

ஆனால் நடக்க முடியாதவர்கள் முதல் குறிப்பைப் பின்பற்றுவது நல்லது. எப்படி இருந்தாலும் முதல் இரு கோவில்களுக்கும் நடந்து தான் செல்ல வேண்டும்.

3. இன்னும் கொஞ்சம்  டிப்ஸ், தலக்காடு பீச் நுழையும் முன்னரே வலப்பக்கம் சாலை கீர்த்திநாராயணர், வைத்யநாதேஸ்வரர் கோவில் செல்லும் வழி என்று தகவல் பலகையுடன் இருக்கும். அப்பாதையில் சென்று அந்த இரு கோவில்களையும் பார்த்துவிட்டு - முதலில் கீர்த்தி நாராயணரையும், அடுத்து வைத்யநாதேஸ்வரரையும் பார்த்துவிட்டு அக்கோவிலின் அருகிலேயே இருக்கும் பாதை வழி சென்று பாதாளீஸ்வரர் மற்றும் மாரளீஸ்வரர் கோவில்களைப் பார்த்துவிட்டு அதே வழியில் திரும்பிவிடலாம்.

நாங்கள் முழுவதும் நடந்தே சென்றோம். அதைப் பற்றி அடுத்த கோவில்கள் பற்றி வரும் போது சொல்கிறேன். 

4. வது ஆகச் சிறந்த டிப். தலக்காடு செல்ல நினைப்பவர்கள் குளிர்காலத்தில் போய்வாருங்க. அதாவது நவம்பரிலிருந்து ஃபெப்ருவரி 15க்குள். வெயில் சமயம் போவது வேண்டாம்அதுவும் எப்ப போனாலும் காலையில் போய் மதியத்திற்குள் பார்த்துவிடுவது நல்லது.


-----கீதா

33 கருத்துகள்:

  1. கோயில்கள் வரலாறும், விவரங்களும் அருமை.
    போகும் பாதை படங்களும் , காணொளிகளும் நன்றாக இருக்கிறது.
    கடைசி பாரா ஒன்று மேல் ஒன்றாக வரிகள் இருக்கே!

    //தொல்லியல் துறையினர் மிகுந்த சிரமத்திற்கிடையில் இக்கோவில்களை மீட்டெடுத்து புனரமைத்துள்ளார்கள். எனினும் மழைக் காலங்களில் இக்கோவில்கள் மீண்டும் பாதி அளவு மணலில் மூழ்கி விடுவதுண்டாம். மீண்டும் இவற்றைத் அகழ்ந்தெடுக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்போதும் அப்படியா என்று தெரியவில்லை.//

    மணல் மூடி மீண்டும் அதை மீட்எடுப்பதுதான் நடக்கிறது என் பெண் போய் வந்தவள் சொன்னாள். கோயிலை பார்க்க மணலில் நடப்பது கஷ்டமாக இருந்தது என்றாள்.
    நீங்கள் மூன்று பேர் மட்டும்தான் அந்த பாதையில் போவது போல இருக்கே! வேறு யாரும் அந்த சமயம் வரவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில்கள் வரலாறும், விவரங்களும் அருமை.
      போகும் பாதை படங்களும் , காணொளிகளும் நன்றாக இருக்கிறது.//

      நன்றி கோமதிக்கா.

      //கடைசி பாரா ஒன்று மேல் ஒன்றாக வரிகள் இருக்கே!//

      இப்ப பாருங்க கோமதிக்கா சரியாக இருக்கான்னு.

      மீண்டும் அதை எடுத்துவிட்டு வேர்டில் சென்று போட்டு செக் பண்ணி ப்ளாகரில் போட்டு அப்டேட் செய்தேன்.

      இப்பவும் எனக்கு இங்கு பல இடங்களில் எழுத்துகளின் கீழ்ப்பகுதி மறைந்து வருவது போல்தான் இருக்கு. என்னவென்று தெரியலையே மீண்டும் பார்க்கிறேன்.

      இப்ப உங்களுக்கு எப்படித் தெரியுதுனு முடிஞ்சா பார்த்துச் சொல்லுங்கக்கா

      மணல் மூடி மீண்டும் அதை மீட்எடுப்பதுதான் நடக்கிறது என் பெண் போய் வந்தவள் சொன்னாள். //
      ஆமாம் அக்கா அப்படித்தான் சொல்றாங்க. கோயிலை பார்க்க மணலில் நடப்பது கஷ்டமாக இருந்தது என்றாள்.//

      ஆமாம் மணலில் அரை கிலோமீட்டர் தூரம் வரை நடக்க வேண்டும். அதன் பின்னும் மற்ற இரு கோவில்கலுக்கும் நடக்க மணலில்தான் நடக்க வேண்டும் அதனால்தான் குறிப்புகள் கொடுத்தேன்.

      //நீங்கள் மூன்று பேர் மட்டும்தான் அந்த பாதையில் போவது போல இருக்கே! வேறு யாரும் அந்த சமயம் வரவில்லையா?//

      ஆமாம் அந்தச் சமயம் யாரும் எங்களுடன் வரவில்லை. நாங்கள் சென்ற போது அங்கு கூட்டம் இல்லை. கூடவே சிலர் கீர்த்தி நாராயணர், வைத்திய நாதேஸ்வரர் கோவில் வரை செல்ல பீச் பகுதிக்கு வெளியில் சாலை இருக்கிறது அந்த வழி போய்விடுவார்கள். வண்டியில். அங்கிருந்து மேலே வந்து இஇந்த இரு கோவில்களையும் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். அது கொஞ்சம் எளிது அதைத்தான் மூன்றாவது டிப் ஆகக் கொடுத்திருக்கிறேன்

      நன்றி கோமதிக்கா

      கீதா


      நீக்கு
  2. மரங்களின் வேர்கள் தெரிகிறதே மணல் அரிப்பு இருக்கிறது .
    ஒவ்வொரு கோயிலாக பார்க்க தொடர்கிறேன். நடக்கமுடியாதவ்ரகளுக்கு உங்கள் குறிப்பு உதவும். காலை நேரம் நடக்க நன்றாக இருக்கும். மதியம் வெயிலில் மணலில் நடப்பது கஷ்டம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா, மழை பெய்தால் அரிப்பு ஏற்படுகிறது அங்கு.

      //ஒவ்வொரு கோயிலாக பார்க்க தொடர்கிறேன். நடக்கமுடியாதவ்ரகளுக்கு உங்கள் குறிப்பு உதவும். காலை நேரம் நடக்க நன்றாக இருக்கும். மதியம் வெயிலில் மணலில் நடப்பது கஷ்டம் தான்.//

      ஆமாம் அக்கா. வெயிலில் மணலில் நடப்பது கஷ்டம்தான்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தல்க்காடு வரலாறு அறிந்து கொண்டேன். ராணியின் சாபத்தினால் கோவில்கள் மணற்திட்டினால் மூடி காணாமல் போனது வருத்தம் தரும் நிகழ்வே...! (மஹா பாரதத்தில் ராணி காந்தாரியின் சாபத்தினால் யாதவ குலம் அழிந்து போன வரலாறு நினைவுக்கு வருகிறது.) இவை நடந்துள்ளதை அறிந்து தொல்லியல் துறை கோவில்களை மீட்டெடுத்து தந்திருப்பது சிறப்பு. ஆயினும் மழை காலங்களில் மீண்டும் மணல் திட்டுக்கள் மறுபடியும் மூடிக்கொள்வதும் வியப்பு.

    மரங்களின் படங்கள் நன்றாக உள்ளது. காணொளிகளை யும் கண்டு ரசித்தேன். அப்பகுதி அடர்ந்த காடு போல உள்ளது. உங்களுடன் துணையாக வந்தவர்களை முன்னை போக விட்டு விட்டு நீங்கள் தனியாக எப்படித்தான் நடந்து சென்றீர்களோ ? எனக்கு ஆள்அரவமற்ற (அங்கு அரவங்கள் வேறு தீடிரென வந்து விட்டால்..!) யாருமில்லாத அப்பகுதியை பார்க்கவே சற்று பயமாக உள்ளது.

    கோவில்களைப் பற்றிய விபரங்கள் அருமை. மணல் பகுதியில் நடக்கவும் சிரமமாக இருக்கும். கோவில்களைப் பற்றி கூறும் தொடர்களை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். தொடர்கிறேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா, இந்த ராணிகள் ஏனோ இப்படிச் சாபம் கொடுக்கறாங்க.

      ஆனால் மழைக்கால நிகழ்வுகள் இப்பவும் இருக்கா என்று யோசிக்க வைக்கிறது கொஞ்சம் மணம் நிறையுமாம் இருக்கலாம்.

      ஆமாம் அப்பகுதி காடு போலதான் இருக்கு

      அக்கா தனியாக நடப்பதில் அத்தனை ஒன்றும் பயமாக இல்லைக்கா.

      கோவில்கள் பற்றி எழுத வேண்டும் இடையில் வேறு முக்கியப் பதிவுகள் உள்ளன...எழுத வேண்டுமே..நேரம் நேரம் மேனேஜ் செய்ய வேண்டும்/

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  4. ஐந்து ஆலயங்கள், அவை குறித்த தகவல்கள் என அனைத்தும் சிறப்பு. கர்நாடகாவில் நான் அதிகம் சுற்றியதில்லை. தலக்காடு - கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய இடமாக இருக்கிறது. வாய்ப்பு வரும்போது பார்க்க வேண்டும்.

    படங்கள் மற்றும் காணொளிகள் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்ஜி. கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய இடம். இன்னும்உள்ளன. என் லிஸ்டில். செல்ல முடிந்தால் இங்கும் சொல்ல முடியும்.

      நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  5. // தன் கணவரை இழந்ததால், சோழர்களுக்கும், உடையார்களின் வம்சத்திற்கும் சாபம் இட்டதாக //

    அந்தக்காலத்தில் பெண்ணரசிகள் பொதுஜனம் பற்றி கவலைப்படாமல் சாபம் கொடுத்து விடுகிறார்கள்!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஅ அதேதான் ஸ்ரீராம்....சும்ம சும்மா பிடி சாபம் போலக் கொடுத்துவிடுகிறார்கள்.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. ஏதோ இந்தக் காலத்தில் அப்படி சாபம் கொடுப்பதில்லையா? மக்கள் உருப்படாத திருடர்களை தேர்ந்தெடுத்து மக்களுக்கு சாபம் கொடுத்துவிடுகிறார்களே

      நீக்கு
    3. மாஸ் சாபமா இதுக்குப் பேரு??!!!!

      கீதா

      நீக்கு
  6. 30 அடி பள்ளத்தில் கோவில்கள் - சுவாரஸ்யம்தான்.  நீங்கள் சொல்வது போல நானும் குறித்து வைத்துக் கொள்கிறேன்.  எப்போது அருள் கிடைக்குமோ, தெரியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிச்சு வைச்சுக்கோங்க ஸ்ரீராம். அதுக்கென்ன செலவா என்ன? இல்லையா என்னிடம் அப்படி நிறைய இருக்கு. வாய்ப்பு கிடைக்கும் போது இல்லைனா வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு போய்ட்டு வந்திடுங்க!!

      கீதா

      நீக்கு
  7. ஐந்து கோவில்கள் அகழ்ந்தெடுக்கபட்டிருக்கின்றன...  இன்னும் எடுக்கப்பட வேண்டியவை உள்ளனவா?  சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 30க்கும் மேல எடுத்திட்டாங்களாமே அதுவும் அப்போவே பதிவில் இருக்கு.

      ஆனால் அவை என்னவெல்லாம்னு தேடிப் பார்க்க வேண்டும். நாங்க இப்ப பார்த்தவை 4 தான். ஆமாம் சுவாரசியம் மற்றவற்றையும் பார்க்கணும்னு ஆர்வம் இருக்கு. பார்ப்போம்

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. நெல்லை ஏன் எப்பவும் அரைடிராயரோடேயே இருக்கிறார் என்று நான் கேட்க நினைத்து கேட்காமல் விட்டு விடுகிறேன்...  என்ன?    சொல்லாதீங்க அவர்கிட்ட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரித்துவிட்டேன், ஸ்ரீராம்

      அவருக்கு அது சௌகரியம் வேகமாக நடக்க!!!!!!!!!! அப்பதானே நடந்துக்கிட்டே ஃபோட்டோஎடுக்க முடியும்!

      அவர் வந்தா தெரிஞ்சிடப் போகுது. ஆளைக் காணலை, தெரியலை போல பதிவு வந்தது

      கீதா

      நீக்கு
    2. துபாய் பஹ்ரைன் பழக்கம். வேலைக்குச் செல்லும்போது மாத்திரமே பேண்ட். இந்தியா வந்ததும் பேண்ட் போடும் பழக்கத்தையே விட்டுவிட்டேன். இப்போ சில மாதங்களாகத்தான் செல்லும் இடத்தைப் பொறுத்து பேண்ட்.

      இதனால் இரண்டு இடங்களில் பிரச்சனை வந்தது. ஒன்று, பஹ்ரைனில் என் காரை விற்று ரெஜிஸ்டர் செய்ய அரசு அலுவலகத்துக்கு என் மனைவியும், நான் அரை டிரவுசரில் சென்றிருந்தேன். அங்கிருந்த அரபி அதிகாரி, அரசு அலுவலகத்துக்கு பேண்டுடன் வந்தால்தான் அனுமதி என்றார். உடனே சிறிது தூரம் சென்று ஒரு கடையில் பேண்ட் வாங்கி அதனை அணிந்துகொண்டு சென்றேன் (வீட்டிற்குச் சென்று திரும்ப வர முக்கால் மணி நேரம் ஆகிவிடும் என்பதால்)

      பெங்களூர் டிரைவிங் டெஸ்டுக்கும் அவசரத்தில் டிரவுசருடன் சென்றுவிட்டேன். 2 மணி ஸ்லாட்டுக்கு 1 மணிக்கு 250 ரூ ஆட்டோவுக்கான பணம். அங்க போனா, டிரவுசரோடு அனுமதிக்கவே மாட்டாங்க, வேற தேதி வாங்கிக்கோங்க இல்லைனா பேண்ட்டோட வாங்கன்னு சொல்லிட்டார் கோ-ஆர்டினேடர். அப்புறம் அவசர அவசரமா பக்கத்துல ஒரு கடைல சாதா பேண்ட் வாங்கி உடுத்திக்கொண்டு சென்றேன்.

      நீக்கு
  9. நீங்க நின்னு  போட்டோ, வீடியோ ​ஷூட செய்தீர்கள் என்றால் நெல்லையும் நிறைய எடுத்திருப்பாரே....  எடுக்கலையா?  அவர் கையில் கேமிரா காணோமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் எடுத்துக் கொண்டே போனார், ஸ்ரீராம்

      எடுத்திருக்கிறார்.

      கீதா

      நீக்கு
    2. நான் இப்போல்லாம் கேமரா கொண்டுசெல்வதில்லை. செல்போனே நல்லா எடுக்குது. அதுவும் தவிர நான் எதிலுமே கொஞ்சம் க்யுக், வேகம்.

      நீக்கு
    3. நெல்லை அன்னிக்கு மட்டும் நீங்க ஒரு சின்ன பௌச் கேமரா பௌச் கைல வைச்சிருந்தீங்க....பேட்டரி பத்தி ஏதோ சொன்னீங்க... அப்புறம் மொபைல்...

      கீதா

      நீக்கு
  10. மண்ணிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு வேர் ,மண்ணுக்குள் புதைந்த ஒருவர் உதவி கேட்கும் கரம் போலவும், மூச்சுக்காக வெளியில் விட்டிருக்கும் யானையின் துதிக்கை போலவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கற்பனை ஸ்ரீராம்.....

      எனக்கு அவற்றைப் பார்த்ததும் அன்றே என்ன தோணிச்சுனா...எல்லாம் தலைவிரி கோலமாய், கைகளை விரித்துக் கொண்டு, எங்களுக்கு இப்படி அழிவு வந்துவிட்டதேன்னு சொல்வது போல்.

      கீதா

      நீக்கு
  11. அட...  நெல்லை கேமிரா மொபைல்தானா?  அலட்டிக்காம போகிற போக்கில் அவர் எடுக்கும் படங்களா இவ்வளவு துல்லியமாக வருகின்றன?  கில்லாடி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேமராவும் வைத்திருந்தார் ஸ்ரீராம். இல்லை அவர் எழுதும் பதிவுகளில் நின்று நிதானமாக எடுத்தவை. பொதுவாக நின்று நிதானமாகத்தான் கோணம் பார்த்து எடுப்பார்.

      இந்தப் பயணத்தில் கொஞ்சம் நேரம் ஆகிவிட்டதால் அவர் கிடுகிடுவென எடுத்துக் கொண்டே நடந்தார்.

      ஆனால் கில்லாடிதான். நடந்து கொண்டே ஒற்றைக் கையில் வைத்துக் கொண்டே எடுப்பதும்

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. 2018க்கு முன்பு வித வித கேமராக்கள் உபயோகித்தேன். பிறகு எப்போவாச்சும்தான் கேமரா

      நீக்கு
  12. சிறப்பு கீதா அக்கா

    அருமையான இடமும், தகவல்களும்... எங்கள் பயணத்தில் பசங்களுடன் சென்றதால் மிக ஜாலியாக நடந்து சென்றோம் படங்களும், காணொளியும் எடுத்தோம். அதில் கீர்த்தி நாராயணர் கோவில் மட்டும் இங்கு பதிவிட்டாச்சு , மற்றவை இன்னும் காத்திருப்பில்.

    பார்ப்போம் உங்கள் தொடர் முடியவும் நானும் தொடர்கிறேன் .

    இதில் மல்லிகார்ஜுனா கோவிலில் மலை மேல் அங்கிருந்து பார்க்கும் பொழுது அகண்ட காவேரி திருச்சி மலை கோட்டையிலிருந்து காண்பது போல இருந்தது .
    மலையின் நடுவில் ஒரு ஓடையும் படிகளின் நடுவே செல்லுகிறது.

    தொடர்கிறேன் நினைவுகளை மீட்டு எடுக்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீர்த்தி நாராயணர் பற்றி நீங்க போட்டதைப் பார்த்தேன், அனு. நீங்களும் தொடருங்கள், அனு.

      //இதில் மல்லிகார்ஜுனா கோவிலில் மலை மேல் அங்கிருந்து பார்க்கும் பொழுது அகண்ட காவேரி திருச்சி மலை கோட்டையிலிருந்து காண்பது போல இருந்தது .
      மலையின் நடுவில் ஒரு ஓடையும் படிகளின் நடுவே செல்லுகிறது.//

      ஆஹா! இதை இந்த முறை மிஸ் பண்ணிட்டோம் அனு. மிஸ் பண்ணிய இரண்டையும் போய்ப்பார்த்துவிட வேண்டும் என்று இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கணும்.

      தொடருங்க அனு...

      மிக்க நன்றி அனு.

      கீதா

      நீக்கு
    2. எங்கள் பயணத்தில் பசங்களுடன் சென்றதால் மிக ஜாலியாக நடந்து சென்றோம்//

      சூப்பர். ஆமாம் பசங்களோடு போகும் போது அது தனிதன.

      நன்றி அனு

      கீதா

      நீக்கு
  13. இப்போது எழுத்துகள் சரியாக இருக்கிறது கீதா

    பதிலளிநீக்கு