வெள்ளி, 24 ஜூலை, 2020

அக்கம் பக்கம் – 1


யுட்யூப் சானல்கள்/வ்ளாகர்ஸ்…….

வ்ளாகர்ஸ் காணொலிகள் போடுவதில் எந்தக் குறையும் இல்லை. அதே சமயம் அதில் சொல்லப்படுவது.

சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், உடல் எடைக் குறைப்பு என்று அகில உலக உடல் உபாதைகள் பலவற்றிற்கும் இயற்கை மருந்துக் குறிப்புகள், வீட்டு வைத்தியம் என்று, அதுவும் மாயாவி வந்தாலும் வந்தது நோய் எதிர்ப்புச் சக்தி குறித்த குறிப்புகள் என்று, இதை ரெகுலரா சாப்பிட்டீங்கனா நோய் எதிர்ப்புச் சக்தி கூடும், குழந்தைகளுக்குச் சளி காய்ச்சல், இருமல் எதுவும் வரவே வராது, என்று சொல்லியபடி பல தீர்வுகள் சொல்லப்படும் காணொலிகள் பல சல்லிசாகக் காணக் கிடைக்கின்றன. 

வரவே வராது, கம்ப்ளீட்டா குணமாகிவிடும், போயே போய்விடும் இந்த வார்த்தைகளை அடித்துச் சொல்லி பல முறை அழுத்திச் சொல்லும் காணொலிகள். 

சொல்லப்படும் குறிப்புகள் நல்லவையாகவே இருக்கலாம். ஆனால் சில பொருட்கள் ஒரு சிலருக்கு ஒவ்வாமையைக் கொடுக்கலாம். சமீபத்தில் கூட மருத்துவர் ஒருவர் நேர் காணலில் சொல்லியது -- பூண்டு, நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் மாயாவி பக்கத்திலேயே வராது என்று பல காணொளிகளில் சொல்லப்படுவதைக் கேட்ட ஒருவர் அளவுக்கு அதிகமாகப் பூண்டை உண்டு அல்லல்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதாகிப் போனது என்று.

அதே போன்று பாதாம் பருப்பு என்னதான் உயர் இரத்த அழுத்தத்திற்கு நல்லது என்று சொல்லப்பட்டாலும் உயர் இரத்த அழுத்தத்திற்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் பாதாம் பருப்பு சாப்பிடக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது. இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் உண்டு. எல்லா மருத்துவத்திலுமே ஒவ்வாமை பற்றிப் பேசப்படுவதுண்டு. அலோபதி உட்பட. இதை எல்லாம் மனதில் கொண்டுதான் ஒரு மருத்துவர் மருந்து பரிந்துரைப்பது அப்படித்தான் செய்யவும் வேண்டும். 

நோய் எதிர்ப்புச் சக்தி என்பது நம் உடலில் இயற்கையாகவே இருக்கக் கூடியதுதான். அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்தான். அதற்காக அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் அமிர்தமும் நஞ்சு என்பதாகிவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதாவது உடலில் ஆண்டிபாடிஸ் கூடிப் போனாலும் பின் விளைவுகள் உண்டு.

சர்க்கரை வியாதிக்கு இதைச் சாப்பிடுங்க 10, 15 நாட்களில் சுகர் கன்ட்ரோலுக்கு வந்துவிடும், போயே போய்விடும், இதை உறவினர் சாப்பிட்டார், நட்பு சாப்பிட்டார். அவருக்கு சுகர் கன்ட்ரோல் ஆகியிருக்கு, குணமாகிவிட்டது, இதைச் சப்பிட்டு அடுத்து 10, 15 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் பண்ணிப் பாருங்க என்று சொல்லப்படும் காணொளிகள்.

பத்து நாட்களில் டெஸ்ட் என்பது எந்தவகை டெஸ்ட்? மருந்து சாப்பிடும் முன் சாப்பிட்ட பின் செய்யப்படும் டெஸ்ட்? அல்லது ராண்டம் டெஸ்ட்? இந்த டெஸ்டை வைத்து, அந்த டெஸ்ட் கன்ட்ரோல் அளவையே காட்டியிருந்தாலும், சுகர் கன்ட்ரோல் ஆகிவிட்டது என்று எப்படிச் சொல்ல முடியும்? Its not a magic!

அப்படி 10, 15 நாட்களில் குணமாகும், கட்டுப்பாட்டிற்குள் வரும் என்றால் அப்படியானக் குறைபாடுகள் உள்ளவர்களுக்குக் கட்டுப்பாட்டிற்குள் அல்லது முழுமையாகக் குணமடைந்திருக்க வேண்டுமே.  

இப்படியான குறிப்பைச் சொல்லும் போது சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாட்டைப் பற்றிச் சொல்வதில்லை. ஒருவருக்கு ஒரு இட்லி சாப்பிட்டாலே ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும். சிலருக்கு இரு இட்லி. இப்படி இருக்க இதைச் சாப்பிட்டால் குணமாகிவிடும், கன்ட்ரோல் ஆகிவிடும் என்று எப்படிப் பொதுவெளியில் சொல்ல முடிகிறது? இதைச் சாப்பிட்டால் நீங்கள் நார்மல் உணவைச் சாப்பிடலாம் என்றும் வேறொரு காணொலியில் சொல்லப்படுகிறது. சர்க்கரை அளவிற்கு ஏற்ப, வயதிற்கு ஏற்ப உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் மிக மிக அவசியம் அல்லவா? இதற்கான ஆய்வுகள், ஆதாரங்கள் இருக்கின்றனவா? எத்தனை பேருக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டது?

மூன்று மாத ஆவெரெஜ் ஹெச்1ஏபிசி என்று சொல்லப்படும் பரிசோதனை, சர்க்கரை அளவு நம் உடலில் எந்த அளவிற்குக் கட்டுப்பாட்டில் இருக்கிறது, எப்படி மாறுபடுகிறது என்பதைச் சொல்வதால் மருத்துவர்கள் பொதுவாக இதைத்தான் அடிப்படையாக வைத்துக் கொள்கிறார்கள், என் அனுபவத்தில் கண்டது.

காணொலிகளைக் காண்பவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருத்தை விட்டு, குறிப்பில் சொல்லப்படுவதை மட்டுமே சாப்பிட நேரலாம். அல்லது ஏற்கனவே சாப்பிடும் மருந்தோடு சேர்த்துச் சாப்பிடவும் செய்யலாம். இது நாம் அறியாத ஆபத்துகளை ஏற்படுத்தாதா? சர்க்கரை நோய்க்கான குறிப்புகள் என்றில்லை இன்னும் பல உடல் உபாதைகளுக்கான குறிப்புகள்.

ஒவ்வொருவரது உடல் மெட்டபாலிசமும் வேறு வேறு. அதற்குத் தகுந்தபடிதான் மருந்துகளின் அளவும். அது எவ்வகை மருந்தாக இருந்தாலும் சரி. இது எங்கள் குடும்பத்து ஆயுர்வேத, இயற்கை, அக்குபங்க்சர்,  அலோபதி மருத்துவர்கள் எல்லோரும் சொல்வது.

உணவே மருந்து என்பதில் எனக்கும் நிறையவே நம்பிக்கை உண்டு. உணவே மருந்து எனப்படும் போது அதற்கும் அளவு உண்டுதானே? அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகிப் போகும்தானே? எங்கள் வீட்டிலும் வீட்டு வைத்தியம், இயற்கை மருந்து, ஆயுர்வேத, சித்த மருந்து என்று பயன்படுத்துகிறோம்தான் ஆனால் மருத்துவர் சொல்லும் அளவோடு.

காணொலிகள் வெளியிடுபவர்கள் பெரும்பான்மையோர் மருத்துவர்கள் போலவும் தெரியவில்லை. அப்படி இருக்க எப்படி இப்படி அடித்துச் சொல்லிப் பொது வெளியில் போட முடிகிறது?

ஒரு மருந்து வெளியில் வர வேண்டுமென்றால், முதலில் குறிப்பிட்ட எண்ணிக்கை நோயாளிகளுக்குக் கொடுத்து இத்தனை நாட்கள், அப்போது என்ன உணவு கொடுக்கப்படுகிறது? நேரம், அளவு, அதன் விளைவுகள் என்ன என்று பல பெர்மியூட்டேஷன் காம்பினேஷன் சோதனைகள் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட பிறகே சந்தைக்குக் கொண்டுவரப்படும். அப்படிக் கொண்டு வரப்படும் மருந்துகளே கூட சில சமயம் சந்தைக்கு வந்த பிறகு தோல்வி அடைகின்றன.

காணொலிகள் போடும் மருத்துவர்களும் - அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் -  ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்கிறார்கள்.  

எந்த மருத்துவத்தைப் பின்பற்றினாலும் சரி, அவரவர் உடல் நலனை அவரவரே கவனித்துத் தக்க மருத்துவரின் அல்லது உடல் உபாதைகளை, மெடிக்கல் ஹிஸ்டரியை நன்றாக அறிந்த வழக்கமாக கன்சல்ட் செய்யும் மருத்துவரின் ஆலோசனையுடன் பின்பற்றுவதே நலம் என்பது என் தனிப்பட்டக் கருத்து.

நம் நண்பர் கூட்டாஞ்சோறு செந்தில் மற்றும் ஒரு சிலர் மட்டுமே காணொளிகளில் சொல்லப்படும் உள்ளடக்கத்தில் நிபுணர்களைப் பேச வைத்தாலும் கூடத்  தக்க மருத்துவ ஆலோசனைப்படி பின்பற்றச் சொல்லியே போடுகிறார்கள். 

எனவே, பொத்தாம் பொதுவாக 10, 15 நாட்களில் முழுவதும் குணமாகிவிடும், கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும், வரவே வராது, என்று நாட்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைப் பொதுவெளியில் அழுத்தம் திருத்தமாக, அடித்துச் சொல்வதைத் தவிர்த்து, நம்பகமான, தகுந்த இயற்கை/சித்த/ஆயுர்வேத மருத்துவரிடம் தக்க ஆலோசனை பெற்று பின்பற்றலாம் என்று சொல்ல வேண்டுமில்லையா. 

யுட்யூப் தற்போது கூகுளின் ஒரு கிளை.  சமீபத்தில் திரு சுந்தர் பிச்சை "We continue to remove videos that promote medically unproven methods to prevent coronavirus in place of seeking medical treatment. On Google Maps, our automated and manual review systems continue to take down false and harmful content such as fake reviews and misleading information about healthcare location” – Pichai elaborated

இப்படி தற்போதைய தொற்று மருத்துவத் தொடர்பாகச் செய்யும் திரு சுந்தர் பிச்சை அவர்கள், இப்படியான மற்ற காணொலிகளையும் ஒழுங்கு செய்வாரா?


--கீதா


29 கருத்துகள்:

  1. நல்லதொரு பகிர்வு. இப்போதெல்லாம் இப்படி நிறைய பேர் இணையத்தில் காணொளிகளை வெளியிடுகிறார்கள். அதைப் பற்றி அறிந்தோ அறியாமலோ பலரும் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பார்க்கும் காணொளிகளில் வருவதை எல்லாம் செய்து பார்க்க முயற்சித்து பலன் அடைகிறார்களோ இல்லையோ பக்க விளைவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்ஜி! முதல் கருத்து!!

      ஆமாம் வெங்கட்ஜி. பக்க விளைவுகள் ஏற்படுகிறது. பலரும் இஷ்டத்துக்குப் போடுகிறார்கள். இதன் தொடர்ச்சி வேறு வகைகள் அடுத்த பதிவில் வருகிறது.

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  2. என்னைப் பொருத்த வரையில், சூரியன் படத்தில் வரும் "நாராயணா... இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலைப்பா" என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

    ஒண்ணும் தெரியாமல், ஆனால் எல்லாம் தெரிந்த மாதிரி ஏகப்பட்டபேர் காணொளிகளையும் வாட்சப் செய்திகளையும் அனுப்பிடறாங்க. எல்லாம், எவன் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்ற எண்ணம்தான்.

    வரும் எரிச்சலில், தினமும் பசு மாட்டின் வயிற்றை பிரதட்சணமாவும் அப்பரதட்சணமாவும் 11 முறை தடவி வந்தால் எந்தப் பத்தியமும் சர்க்கரை நோய்க்குத் தேவையில்லை, ஒரு மண்டலம் இதனைச் செய்யும்போது வேறு மருந்துகள் கூடாது, இந்த அரு மருந்தை இவர் சொல்லியிருக்கிறார் அவர் சொல்லியிருக்கிறார் என்று நம்பும்படியாக காணொளிகள் போட்டு சுத்தல்ல விடலாமா என்றும் தோன்றுகிறது.

    தினமும் நடைப் பயிற்சி என்பது சுத்த ஹம்பக். நீங்கள்லாம் எண்ணம்போல் வாழ்வு என்று படித்திருப்பீங்க. தினமும் காலையில் கண் முழித்தவுடன், படுக்கையை விட்டு எழுந்துகொள்ளாமல் சுமார் 30 நிமிடங்கள், மனதாலேயே, நடைப்பயிற்சி செய்வதாகவும், யோகா பயிற்சி செய்வதாகவும் எண்ணிக்கொண்டே படுத்திருங்கள். ஒரே மாதிரியாக எண்ணாமல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெவ்வேறு யோகா செய்வது போலவும், எட்டு வடிவில் நடப்பது, ஓடுவது போலவும் நினைத்திருங்கள். தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் பிரமிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும். நினைவிருக்கட்டும்.. பிசிக்கல் நடைப்பயிற்சி, யோகா தேவையில்லை.

    இதுமாதிரி ஏகப்பட்ட புதுமையான மருந்துகள் ஐடியாக்கள் கைவசம் இருக்கு. உங்களுக்கு வேணுமா? ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ நெல்லை உங்க கருத்தை படிச்சு சிரித்து முடியலை! ஒரு காணொளி போட்டுடலாம்!!

      நானும் மகனும் பேசுவது போல இருக்கு!!!

      நன்றி நன்றி

      கீதா

      நீக்கு
    2. நெல்லை...   நீங்கள்  இபப்டி ஒரு காணொளி போடுங்க...   அட, இது சுலபமா இருக்கேன்னு எக்கபப்ட்ட பேர் பார்த்து சப்ஸ்க்ரைப் பண்ணுவாங்க!

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஸ்ரீராம் அதே அதே.

      கீதா

      நீக்கு
  3. உண்மைதான்
    காணொலியில் வருவதை எல்லாம் நம்புவது ஆபத்துதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கரந்தை சகோ. சில குறிப்புகள் நன்றாக சரியாக இருந்தாலும் 10 நாள் 15 நாள் என்று சொல்லுவதுதான் ரொம்பவே அபத்தமாக இருக்கிறது அந்தந்த மருத்துவரின் அறிவுரையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம் அதுதான் நல்லது இல்லையா..

      மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  4. இந்த வாட்ஸ்-ஆப் வந்த பிறகுதான் மக்களுக்கு வதந்திகள் எது ? உண்மைகள் எது ? என்ற குழப்பங்கள் வந்து இருக்கிறது.

    வதந்திகள் வெகுகாலமாகவே இருக்கிறது என்றாலும் இன்றைய காலத்தில் நொடிக்கொரு குழறுபடிகள் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி வாட்சப் ஒரு புறம். வதந்திகள் ஒரு புறம். இது வீடியோக்கள். யுட்யூப் வீடியோக்கள். வதந்திகள் பத்தி அல்ல மருத்துவக்குறிப்புகள். அதுவும் 10, 15 நாட்களில் தீர்வு என்று சொல்லிப் போடுவது. மருந்துகளில் குறை இல்லை. ஆனால் தீர்வு என்று சொல்லுவதுதான்

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
    2. அதேதான் மருத்துவர் சொல்வது உண்மையா... பொய்யா... என்று தீர்மானிப்பதற்குள் வாட்ஸ்-ஆப்பில் குழப்பத்தை பரப்பி விடுகிறார்களே...

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஆமா அதை ஏன் கேக்கறீங்க..சரியே.

      காணொளிகள் முடிஞ்சா பாருங்க. மருத்துவர்கள் அல்லாதவர்கள் கூட இதைச் சாப்பிடுங்க அதைச் சாப்பிடுங்கன்னு ....

      நன்றி கில்லர்ஜி..

      கீதா

      நீக்கு
  5. இணையப்பயன்பாடு அதிகரித்த பின்னர் இம்மாதிரியான காணொளிகள்/காணொலிகள் அதிகமாகி விட்டன. அதிலும் நம்மவர் சர்க்கரைக்குத் தேடித்தேடிப் பார்ப்பார். எல்லாவற்றையும் செய்தும் பார்க்கணும் என்பார். நான் அந்த அளவுக்கெல்லாம் பைத்தியம் இல்லை. சீரியல் பார்த்தாலும் அதில் ஆழ்ந்து போவார்! :))))) இப்போதைய காலத்தில் எதையும் நம்பாமல் நாமே சுயக் கட்டுப்பாட்டுடன் இருப்பதே நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா. சர்க்கரை நோய்க்குச் சொல்லப்படும் குறிப்புகள் பற்றிக் கூடக் குறையில்லை. நல்ல குறிப்புகளாகக் கூட இருக்கலாம். ஆனால் சொல்லப்படுவதுதான் 10, 15 நாளில் குணமாகிடும் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்று அடித்துச் சொல்லுவது. சர்க்கரைக்கு என்றில்லை. பலவற்றிற்கும்

      //இப்போதைய காலத்தில் எதையும் நம்பாமல் நாமே சுயக் கட்டுப்பாட்டுடன் இருப்பதே நல்லது.//

      அதே அதே கீதாக்கா. அந்தந்த மருத்துவரின் உதவியோடு பின்பற்றலாமே என்பதுதான்.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  6. சில சமயங்களில் போட்டிருக்கும் தலைப்புக்கும் உள்ளிருக்கும் காணொளிக்கும் சம்பந்தமே இருக்காது.  உப்பு சப்பில்லாமல் இருக்கும்!  பாதி நேரம் பட்டனை க்ளிக் பண்ணுங்க, சாப்ஸ்க்ரைப் பண்ணுங்க என்றே சொல்வார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஆமாம் ஸ்ரீராம் அப்படியும் உண்டு. தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இருக்காது...அதேதான் திரும்ப திரும்ப பெல்லு, சப்ஸ்க்ரைப் இதேதான்...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. /வ்ளாகர்ஸ்……. என்றால் என்ன அல்லது யார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜிஎம்பி ஸார் ப்ளாக் எழுதுகிறவர்கள் ப்ளாகர்ஸ் போல யுட்யூப் சானல், வீடியோக்கள் போடுபவர்கள் வ்ளாகர்ஸ்.

      நன்றி சார்

      கீதா

      நீக்கு
  8. நீங்கள் சொல்லும் காணொளிகள் எல்லாம் எதற்காக என்று சற்று யோசித்தால் புரிந்து விடும்...

    பணம்... பணம்... பணம் ஒன்றே...

    Youtube நடத்துபவர்கள் சமீப காலத்தில் மெகா சீரியல் நடத்துபவர்களை விட அதிகம் தேறி விட்டார்கள்... ஏன் சொல்கிறேன் என்றால், ஒவ்வொரு நாளும் அரை மணி நேரமோ / ஒரு மணி நேரமோ, அன்றைய நாள் சீரியல் முடிவில், அடுத்த நாள் பார்க்க வேண்டும் என்று முடிப்பார்கள்...இதைப் பார்த்து தெரிய Youtube நடத்துபவர்கள் Subscribe செய்து Bell button அழுத்தியே தீர வேண்டும் என்கிற நிலைக்கு பார்க்கிறவர்களை கொண்டு வந்து விட்டார்கள்... பிறகென்ன...? எத்தனை நொடிகள் பார்க்கிறார்களோ, அத்தனையும் பணமாக மாறி விடும்...

    இவை எல்லாம் தவிர்த்து நல்ல பல காணொளிகளும் உள்ளது என்பதும் உண்மை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் காணொளிகள் எல்லாம் எதற்காக என்று சற்று யோசித்தால் புரிந்து விடும்...//

      இதையும் எழுதியிருந்தேன் டிடி அதுவும் முதல் வரியுடன் சேர்த்து எழுதியிருந்தேன். பணம் ஈட்டுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை ஆனால் உள்ளடக்கம் மிக முக்கியம் என்றும் சொல்லியிருந்தேன்.

      ஆமாம் டிடி நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து மிகவும் சரிதான். அடுத்த பகுதியில் வேறு வகையும் சொல்லியிருக்கிறேன்.

      காணொளிகள் போடுவதில் பிரச்சனை இல்லை அதில் சொல்லபப்டும் விஷயம் மிக முக்கியம் இல்லையா ...நல்ல கன்டென்ட்...

      //இவை எல்லாம் தவிர்த்து நல்ல பல காணொளிகளும் உள்ளது என்பதும் உண்மை...//

      அதே அதே!! டிடி அதைத்தான் நான் சொல்ல வருவது. அடுத்த பகுதியில் சொல்லியிருக்கிறேன்..

      மிக்க நன்றி டிடி

      கீதா


      நீக்கு
  9. //வரவே வராது, கம்ப்ளீட்டா குணமாகிவிடும், போயே போய்விடும் இந்த வார்த்தைகளை அடித்துச் சொல்லி பல முறை அழுத்திச் சொல்லும் காணொலிகள். //


    நம் உடம்புக்கு ஒத்துக் கொள்ளும் உணவை நாம் எடுத்துக் கொள்வது போல் நமக்கு ஒத்துக் கொள்ளும் வைத்திய முறைகளை எடுத்துக் கொள்வதே நல்லது.
    எல்லாவற்றையும் பார்க்காமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.

    அனைவருக்கும் பகிரவும் என்று வேறு நமக்கு அனுப்புவார்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா. நமக்கும் நம் வீட்டில் வீட்டு வைத்தியம் நாட்டு வைத்தியம் எல்லாம் சொல்லி நாமும் செய்திருக்கிறோம் ஆனால் அது தனி முறை இல்லையா. தொடர்ந்து சாப்பிடுங்க என்று சொல்ல மாட்டார்கள். பத்தியம் உண்டு. இத்தனை நாட்கள், மண்டலம் என்ற கணக்கு எல்லாம் உண்டு.

      //நம் உடம்புக்கு ஒத்துக் கொள்ளும் உணவை நாம் எடுத்துக் கொள்வது போல் நமக்கு ஒத்துக் கொள்ளும் வைத்திய முறைகளை எடுத்துக் கொள்வதே நல்லது.//

      அதே கோமதிக்கா நம் உடலை நாம் நன்றாகக் கவனித்தோம் என்றால் எது சேர்கிறது எது சேரவில்லை என்று தெரிந்துவிடும்.

      //அனைவருக்கும் பகிரவும் என்று வேறு நமக்கு அனுப்புவார்கள்.//

      ஆமாம் அதுவும்...

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    அருமையான பகிர்வு. இப்போது வாட்சப்பிலும் சரி, இணையத்திலும் சரி இந்த அறிவுரைகள் அதிகமாகி விட்டது. முன்பெல்லாம் தினமும் உணவில் சேர்க்கும் பொருட்களை (அஞ்சறைப் பெட்டி பொருட்கள்) அந்தந்த விகிதத்தில் வேண்டிய நாட்களில் நாம் சேர்த்து பயனுள்ளதாகதான் வாழ்ந்து வந்தோம். இந்த தீநுண்மி வந்த பின் தினமும் அதைச் சேர்க்க வேண்டும், இதைச் சேர்க்க வேண்டுமென அறிவுறுத்தல்கள் அதிகமாகி வருவதால் அளவுக்கதிகமாக அனைத்தையும் பயன்படுத்தி, புதிதாக நீங்கள் சொல்லியபடி ஒவ்வாமை நோய்கள் வேறு உற்பத்தியாகின்றன. இதற்கு ஒரே வழி நம்மை நாம் உணர்வதே...! நம் உடல் நிலையை அனுசரித்து, மருந்தாகினும், விருந்தாகினும், அளவோடு உண்டு பயன்படுத்தினால் இப்பிரச்சனைகளிலிருந்து மீண்டு நலம் பெறலாம். அதன் பின் இறைவன் விட்ட வழி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. முன்பெல்லாம் தினமும் உணவில் சேர்க்கும் பொருட்களை (அஞ்சறைப் பெட்டி பொருட்கள்) அந்தந்த விகிதத்தில் வேண்டிய நாட்களில் நாம் சேர்த்து பயனுள்ளதாகதான் வாழ்ந்து வந்தோம்.//

    ஆமாம் கமலாக்கா! அதே தான்.

    //இந்த தீநுண்மி வந்த பின் தினமும் அதைச் சேர்க்க வேண்டும், இதைச் சேர்க்க வேண்டுமென அறிவுறுத்தல்கள் அதிகமாகி வருவதால் அளவுக்கதிகமாக அனைத்தையும் பயன்படுத்தி, புதிதாக நீங்கள் சொல்லியபடி ஒவ்வாமை நோய்கள் வேறு உற்பத்தியாகின்றன.//

    ஆமாம் ஸ்ரீராம் கூட சென்ற வியாழன் பதிவில் சொல்லியிருந்தார். நானும் என் உறவுகளில் கேள்விப்படுகிறேன். இஞ்சி அதீதமாக எடுத்துக் கொண்டதால் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டது என்று. பின்னே இஞ்சி சாப்பிடுவதற்கும் அளவு நேரம் எல்லாம் உண்டு. அந்த உறவிற்கு ஏற்கனவே அல்சர் பிரச்சனை உண்டு இப்போது இந்தத் தொற்றிற்குப் பயந்து இஞ்சி அதிகம் எடுத்துக் கொண்டு...இப்போதுதான் தேவலாம் என்று சொன்னார்.

    //இதற்கு ஒரே வழி நம்மை நாம் உணர்வதே...! நம் உடல் நிலையை அனுசரித்து, மருந்தாகினும், விருந்தாகினும், அளவோடு உண்டு பயன்படுத்தினால் இப்பிரச்சனைகளிலிருந்து மீண்டு நலம் பெறலாம். அதன் பின் இறைவன் விட்ட வழி.//

    அதே கமலாக்கா ! மிகவும் சரியே...

    மிக்க நன்றி கமலாக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ஆளாளுக்கு புத்திசாலி என நினைத்துக்கொண்டு அடுத்தவருக்கு ஓதமுற்படும் காலமிது. கொரோனாவைவிட ஆபத்தானது சகட்டுமேனிக்கு எல்லோருக்கும் புத்திசொல்ல முனைவது-குறிப்பாக மருத்துவம் போன்ற விஷயங்களில்.
    அரைவேக்காடுகள் அலைந்து திரியும் சமூகவலை தளங்கள். கைதட்டுக்கு ஏங்கும் கோமாளிகள்.. எதற்கெடுத்தாலும் ஆஹா..ஓஹோ என அலுக்காது உற்சாகப்படுத்தும் அசடுகள் ..
    தூர இருப்பதிலேதான் சுகம் - அதாவது கூடுமானவரையில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகட்டுமேனிக்கு எல்லோருக்கும் புத்திசொல்ல முனைவது-குறிப்பாக மருத்துவம் போன்ற விஷயங்களில்.//

      ஆமாம் ஏகாந்தன் அண்ணா அதே தான்.

      //தூர இருப்பதிலேதான் சுகம் - அதாவது கூடுமானவரையில்.//

      ஆமாம் .

      மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா

      கீதா

      நீக்கு
  13. அன்பு கீதாமா,
    நான் இது போல அறிவுரைகளைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.
    மஞ்சள் இங்கே நிறைய கிடைக்கிறது. அதை மட்டும் வென்னீரில் போட்டு சாப்பிடுகிறேன்.
    எதுவுமே அளவாய் எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.
    உடல் உஷ்ணத்தை அதிகரிப்பதை எடுத்துக் கொள்ளவே கூடாது.
    மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்மா.

    பதிலளிநீக்கு
  14. அதுல கூட இன்னொரு அலப்பறை என்னன்னாக்க சொற்வங்க சொல்ற எல்லா வியாதியும் நமக்கு இருக்கிற மாதிரி ஒரு பீலிங்கு வரும் . எல்லாரும் வெறும் வயத்தில் வெறும் வயத்தில் அப்படீன்னு சொல்லுவாங்க . இவங்க சொல்ற மெதடில் மருந்து தயாரிக்க குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஆகும் , அப்புறம் எங்கே வெறும் வயத்தில்

    பதிலளிநீக்கு
  15. கொடுமையான காணொளிகள் இவைகள் கீதா அக்கா ...

    இவற்றை எல்லாம் பார்க்கவே கூடாது ....அதுவே கேடு

    பதிலளிநீக்கு