வெள்ளி, 18 அக்டோபர், 2013

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்.....

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்.....

     
மனைவி இறந்து இரண்டு வாரம் ஓடிவிட்டது.  அவளுடன் கழிந்த நல்ல நாட்களை மனதில் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.
தாயில்லாக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன.  8 மாதப் பெண் குழந்தை வேலைக்காரி சுந்தரியின் மடியில் உறங்குகிறது.  குழந்தைகளைக் கவனிக்க சுந்தரி இருப்பதை நினைத்து ஒரு நிம்மதி.  இனி எப்படி வாழ்க்கை போகப் போகிறதோ, அதுவும் கவிதா இல்லாத வாழிக்கை, நினைக்கவே நெஞ்சில் முள்ளாய்த் தைக்கிறது. அதோ எல்.ஐ.சி. ஏஜண்ட் வருவது தெரிகிறது. அவரிடம் பாலிசியைக் கொடுத்து அவளே போன பிறகு பணம் எதற்கு என்கிறேன். நாளை முதல் ஆபீஸ் வழக்கம் போல் ஆனால் கவிதாவின் முத்தம் இல்லாமல்.  வலிக்கிறது.  மூத்தவன் அம்மா எங்கே என்று அழுகிறான்.  பாட்டியும் (கவிதாவின் அம்மா) அழுகிறாள். நல்ல வேளை சுந்தரி மூத்தவனைச் சமாதானப் படுத்தி உறங்க வைக்கிறாள். 
அவளுக்கும் உறக்கம் வரவில்லை போலும். கண் போனதும் கண் அருமை தெரிந்தவள் போல் வ்ந்தாள்.  மெதுவாக என் அறைக் கதவு திறக்கும் சப்தம். சுந்தரி!. எல்லாரும் தூங்கியாச்சு! அம்மாவும் தூங்கிட்டாங்க. ஏன் வருத்தப்படறீங்க? அதான் நான் இருக்கேனே என்கிறாள். நெஞ்சில் தலை வைத்து அருகே சப்தமின்றிப் படுக்கிறாள்.  கைகள் எங்கெல்லாமோ பரவ என் இரத்தம் சூடேருகிறது. பலமுறை இந்த சுந்தரியை என் பக்கம் ஈர்க்க என்னென்னவோ பொய்கள்...கவிதா மோசம்.  நீதான் எனக்கு வேண்டும்.  நீ எப்போதும் இந்த வீட்டிலேயேத் தங்கலாம் இப்படி...மனைவி இறந்த இரண்டு வாரங்களில் வேலைக்காரி சுந்தரி என் அருகில். கொஞ்சல். மனது ஒரு புறம் வலித்தாலும்......அவளை என்னோடு சேர்த்து அணைக்காமல் இருக்க முடியவில்லை.......
திடீரென தொட்டிலில் இருந்தக் குழந்தை அழ.....சீ என்று கோபத்துடன் எழுந்து போகும் சுந்தரியின் வார்த்தைகள் அம்மாவோட இதையும் சேர்த்து எரிச்சுருக்கணும்..சனியன்....
எனக்கு மூச்சுத் திணருகிறது.  கண் இறுகுகிறது. நாக்கு உள்ளே இறங்குவது போல்.....கனவு போல்...
அன்று நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. கவிதா சுந்தரியிடமிருந்து குழந்தையை வாங்கிச் செல்ல.. திரும்பவும் சுந்தரியின் குரல் வாடிக் கண்ணு  உன்னய பாட்டிக்கிட்ட விடறேன். அக்கா, அடுப்புல பால் காய்ச்சுங்க. மழை தூறுது போல இருக்குது. துணி எடுக்கணும்  என்று சொல்ல...கவிதா அடுப்பின் அருகே சென்று தீப்பெட்டியை உரச.....
காஸ் சிலிண்டர் வெடிக்கும் சத்தம் இடி இடித்தது போல்....சமையலறை முழுவதும் தீ.... புகை.....கதறும் சத்தம்.....திடீரென புகையின் நடுவே கதறி இறந்த கவிதா.......தெளிந்த முகத்துடன் என் முன்னால் சிரித்தபடி...என்ன இப்பதான் நடந்தது என்னனு புரியுதா. என்கிறாள்.   ‘ஐயோ கவிதா என்னைய மன்னிச்சிரு.  கவிதா மன்னிச்சிரு.  நான் எவ்வளவு பெரிய பாவி.  தேவதையப் போல இருந்த உன்னயத் தவர விட்டு தவிக்கிறேனே. இறைவா நடந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவா மாத்தி எனக்கு என் கவிதாவைத் திரும்பத் தா.  இனி ஒரு போதும் நான் கவிதாவை ஏமாத்த மாட்டேன். எனக்கு என் கவிதா வேணும்.  ஐயோ! கவிதா! கவிதா! கவிதா!

     “என்னங்க.....என்னங்க.....என்னாச்சுங்க உங்களுக்கு.? எதுக்கு என்னையப் போட்டு இப்படி உலுக்கிறீங்க?
     ஹா! இது என்னகவிதாவின் குரல் போல இருக்கு.! திடீரென கண் விழித்த எனக்கு ஒன்றும் புரியவில்லை.  அதிசயம்.  கண்டதெல்லாம்  கனவுதான்.  ஓ! இறைவா நன்றி! நன்றி!
     “ஒண்ணும் இல்ல....ஏதோ ஒரு பயங்கர கனவு
 நான் கனவில் கண்டது போல் சுந்தரியுடன் தகாத உறவொன்றும் இதுவரை இல்லை.  ஆனாலும், என் மனம் இடையில் அந்த 16 வயது சுந்தரியைக் காணும் போது தடுமாறி இருக்கிறது. சில தடுமாற்றங்களை நாம் தவிர்க்காவிட்டால் நம் வாழ்வே தடம் புரண்டு விடும்.  அதைத்தான் இந்தக் கனவு எனக்கு நினைவுபடுத்துகிறது.
  மறு நாள் சுந்தரிக்குப் பதிலாக வீட்டில் அவளது தாய் கந்தம்மா.  யாரோ கேட்டதற்கு, கவிதாவின் பதில் என்ன செய்ய.  அவருக்கு, சுந்தரியின் வேலை அவ்வளவாப் பிடிக்கலையாம்.  சுத்தம் போதாதாம்.  அதான் பழையபடி கந்தம்மாவையே வரச் சொல்லிட்டேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக