திங்கள், 4 மே, 2026

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - பாம்புத்தாரா / Anhinga - Darter Bird

கருத்திடுபவர்களுக்கு - நீங்கள் கருத்திடும் போது உங்கள் Profile - பெயர்தாங்கி வராமல் 'பெயரில்லா' என்று வந்தால் கருத்தின் கீழ், நான் என் கருத்துகளின் கீழ் என் பெயரைக் குறிப்பிடுவது போல், உங்கள் பெயரைக் குறிப்பிட்டால், யாரென்று புரிந்து கொள்ள எனக்கு உதவியாக இருக்கும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

அலகில் மீன் இருப்பது தெரிகிறதா? தூக்கிப் போட்டுப் பிடிக்கத் தயாராகி இருக்க அப்போது வீடியோ  எடுக்காமல் விட்ட  காரணம் இப்பறவையை அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்ததால் அதன் இயல்புகள் தெரியவில்லை. 

பேரினம் - Anhinga. ஆங்கிலத்தில் Darter டார்ட்டெர். மிகவும் நீண்ட மெல்லிய கழுத்துடையதால் இதற்குச் சில இடங்களில் நெடுங்கழுத்தன், நெடுங்கிளாத்தி என்ற பெயர்களும் உண்டு. வழுவாங்கி, நெய்காக்கை என்ற பெயர்களும் இருப்பதாகத் தெரிகிறது. 

நீர் நிலைகளில் வாழக்கூடிய ஒரு பறவை இனமான இப்பறவை நீருக்குள் தன் உடலை வைத்துக்கொண்டு, நீருக்கு வெளியே மெல்லிய நீண்ட கழுத்தை மட்டும் நீட்டிக் கொண்டு நீந்துவது பாம்பு போன்று இருப்பதால் பாம்புத்தாரா என்று (Snake Bird) அழைக்கப்படுகிறது. 

பெங்களூருவின் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் இந்தப் பறவையை பரவலாகக் காணலாம். 1990-களுக்கு முன்பு பெங்களூரில் இவை அரிதாகவே காணப்பட்டன, ஆனால் ஏரிகளில் மீன் வளர்ப்பு அதிகரித்த பிறகு இவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

 Preening - இறகுகலைக் கோதுதல். எப்படிக் கழுத்தை வளைத்து வைச்சிருக்கு பாருங்க. 

பிரதான உணவு - மீன்கள். கூடவே சின்ன பூச்சிகள், தவளைகள் என்றிருந்தாலும் 90% மீன்கள்.

மீன் உண்ணும் பறவைகளில் மற்ற பறவைகள் மீன் பிடிப்பதற்கும் பாம்புத்தாரா மீன் பிடிப்பதற்கும் வித்தியாசமாக இருப்பதை நான் நேரில் கண்டு வியந்து ரசித்துப் பார்த்திருக்கிறேன்,  இப்போதும் பார்க்கிறேன். (காணொளிகள் கீழே) இதன் முக்கிய பண்புகள் அல்லது செயல்பாடுகளாக நான் கவனித்ததையும், அதை வைத்து தேடி அறிந்து கொண்டவற்றையும் இப்பதிவில் சொல்கிறேன். 

மீன் கொத்திப் பறவை, மரத்திலோ அல்லது கரையிலோ இருந்து இரையைக் கண்டதும் பறந்து சென்று மீனைக் கவ்வும். கொக்கு, நாரைகள் போன்ற நீர்ப்பறவைகள் தண்ணீர் குறைவாக இருக்கும் கரையில் அல்லது தாழைகள், புற்கள் அல்லது நீரில் மிதக்கும் தாவரங்கள் மீதிருந்து மீன்களைப் பிடிப்பதைப் பார்க்கலாம். .

மற்ற மீனுண்ணிப் பறவைகள் மரக் கிளைகளிலோ அல்லது ஆகாயத்தில் பறந்தபடியோ உதாரணத்திற்கு கருடன் கழுகு நீரின் மேல் பரப்பிற்கு வரும் மீன்கள் பூச்சிகள், தவளைகள் இவற்றைக் கொத்திப் பிடிப்பதையும் பார்க்கலாம். படம் எடுக்க முனைந்தேன் என் கேமராவில் சரியாக வரவில்லை.

கிட்டத்தட்ட நீர்க்காகம் - Cormorant (இதைப் பற்றியும் பின்னர் வரும்) போன்றே, பாம்புத்தாராவும் நீரில் மூழ்கி மீன்களை வேட்டையாடினாலும் இரண்டிற்கும் வித்தியாசம் இருப்பது தெரிந்தது. .

ஆனால் பாம்புத்தாராவின் இரை வேட்டை கொஞ்சம் வித்தியாசமானது. மர்மமான நீச்சல். பாம்புத்தாரா ஒரு "Subsurface Swimmer".  இது தண்ணீருக்கு அடியில் நீண்ட தூரம் நீந்திச் செல்லும் திறன் கொண்டது என்று தெரிந்தது. ஒரு இடத்தில் மூழ்கினால், அது 20-30 அடி தள்ளி வேறு திசையில் கூட வெளிப்படும்.  அது எங்கே வரும் என்று கணிப்பது கொஞ்சம் கடினம். 

அதனாலேயே இவற்றைப் படம் அல்லது வீடியோக்கள் எடுப்பது ரொம்ப சிரமம். மூழ்கினால் எங்கே வெளியே வரும் மீனோடு வருமா என்று காத்திருந்து எடுக்க வேண்டும். தொடர்ந்து கவனித்ததில் ஒன்று புரிந்தது. தண்ணீருக்கு அடியில் செல்லும்போது, சில நேரங்களில் (எல்லா நேரங்களிலும் அல்ல) சிறிய காற்றுக் குமிழிகள் அது செல்லும் திசையைக் காட்டுவதைக் கவனித்தேன்.  எனவே கொஞ்சம் உஷாராக இருந்து காத்திருந்து கவனித்து அப்படித்தான் இக்காணொளியை எடுத்தேன்.

ஒரு தேர்ந்த நிழற்படக் கலைஞருக்கே கடினமான காரியமாம். எனக்கு எங்கே!!!? அதுவும் சாதாரண கேமரா / மொபைலில் ஜூம் (Zoom) செய்யும்போது மங்கலாகத்தான் வரும்.

https://www.youtube.com/watch?v=NLVAqTyqMHc

மீனைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பதைக் காணலாம். அடுத்து சற்று பெரிய மீன் கிடைத்ததும் முழுங்க முடியாமல் விட்டுவிடுகிறது. ஆனால் மீண்டும் மூழ்கி.....அதுதான் அந்தப் பறவையின் பிடிவாதம்! மீனை விட்டாலும், குத்துப் பட்டிருப்பதால் அது ஆழத்திற்குச் செல்வதற்குள் மீண்டும் அதைப் பிடிக்க வேண்டும் என்ற வேட்டையாடும் குணம் (Hunting Instinct) 

மற்ற பறவைகள், நீர்க்காகம் உட்பட மீனை அலகால் கவ்விப் பிடிக்கும். ஆனால், பாம்புத்தாரா நீந்திக் கொண்டே மீன்கள் இருப்பது தெரிந்ததும் டபெக்கென்று தண்ணீருக்குள் மூழ்கிவிடும். மீன் கிடைத்ததும் மீன்களைத் துரத்திச் சென்று, தன் கூர்மையான அலகால் மீனின் உடலில் ஈட்டியால் குத்துவது போல ஓங்கி குத்திப் பிடிக்கும் (Spearing). அதற்காகவே அதன் கழுத்து எலும்புகள் ஒரு 'Spring' போல செயல்படும் வகையில் அமைந்துள்ளன.

https://www.youtube.com/shorts/AIfqPzz2_40

கழுத்தை மட்டும் நீருக்கு வெளியே நீட்டி, குத்திய மீனை வெளியே கொண்டு வந்தவுடன், குத்திய அலகிலிருந்து மீனை விடுவிக்க வேண்டுமே இல்லைனா எப்படி விழுங்குவது? அதற்காக தலையை வேகமாக உதறி, மீனை காற்றில் தூக்கிப் போட்டு, அதன் தலைப்பகுதி முதலில் வாய்க்குள் செல்லும்படி லாவகமாகப் பிடித்து முழுசாக விழுங்கும். மீனைப் பிடித்தவுடன் அது மேலே வரும்போது, சில நொடிகளில் அதைத் தூக்கிப் போட்டு விழுங்கிவிடும். அந்த சில நொடிகளுக்குள் நாம் கேமராவை 'ஃபோகஸ்' (Focus) செய்து படம் எடுப்பது மிகப்பெரிய சவால். அதனால் காணொளி எடுத்தேன் அதுவுமே சற்று தூரத்தில் என்பதால் ஓரளவுதான் எடுக்க முடிந்தது.

மீனின் செதில்கள் அல்லது முட்கள் தொண்டையில் சிக்காமல் இருக்கவே இந்த "தலைப்பகுதி முதலில்" என்ற உத்தியைப் பயன்படுத்துகின்றன என்பதை, நான் ஏரியில் பார்த்ததை, படங்களைப் போட்டு, நான் ய்ட்யூபில் போட்ட சுட்டியைக் கொடுத்து ஜெமினியிடம் உரையாடி அறிந்தேன்.

மற்ற நீர் வாழ் பறவைகள் தண்ணீரில் இருக்கும்போது அவற்றின் உடல் நீரில் மூழ்காது மிதந்து நீந்தும். அவற்றின் சிறகுகளில் ஒரு வகை எண்ணெய் சுரப்பிகள் உள்ளதால் எண்ணைப்பசை இருக்கும். எனவே இறக்கைகளில் தண்ணீர் ஒட்டாது. தவிர, சிறகுகளுக்கிடையே இருக்கும் காற்று அப்பறவைகளை மிதக்கச் செய்யும்.

ஆனால் பாம்புத் தாராவின் இறக்கைகளில் எண்ணெய் சுரப்பிகள் கிடையாது,  எண்ணெய் பசை இல்லாததால் தண்ணீர் சுலபமாக ஒட்டிக் கொண்டு, பளுவாக்கி, அதன் உடலை நீருக்கடியில் கொண்டு செல்லும். அவற்றின் அடர்த்தியான எலும்புகள், ஈரமான சிறகுகள் மற்றும் நீரின் அடியில் நீந்தும் தன்மை ஆகியவை அவற்றை முழுமையாக மூழ்கி நீருக்கடியில் உள்ள இரையை வேட்டையாட உதவுகின்றன.

நீரில் நீந்தி இறையை உண்ட பின், சூரிய ஒளி படும்படி இறக்கைகளை விரித்து உலர்த்திக் கொண்டு...

நனைந்த இறகுகளுடன் பாம்புத்தாராக்களால் நீண்ட தூரம் பறக்க முடியாது. நீரின் மேற்பரப்பில் சிறிது தூரம் "ஓடும்போது" வேகமாக இறக்கைகளை சிறகடிக்கும். அப்படி நீரில் நீந்தி இரை உண்டபின் நீர்க்காகங்களைப் போலவே, பாம்புத்தாராக்களும் சூரிய ஒளியில் குளித்து சூரியனின் வெப்பத்தைப் பெற, சூரியனுக்கு எதிர் திசையில் திரும்பி, இறக்கைகளை அரைவட்ட வடிவில் விரித்தபடி, பெரும்பாலும் ஒரு பாறை அல்லது கிளையில் அமர்ந்து ஈரமான இறக்கைகளை விரித்து உலர்த்திக் கொள்ளும். இதைப் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.

சூரியனை நோக்கி இறக்கைகளை விரித்து உலர்த்தும் நிலையில்

இப்படித் இறக்கைகளை விரித்து உலர்த்தும் நிலையில் உள்ள ஒரு பாம்புத்தாரா, ஒரு ஆண் வான்கோழியைப் போல இருப்பதால், பேச்சுவழக்கில் 'நீர் வான்கோழி' அல்லது 'சதுப்பு நில வான்கோழி' என்றும் குறிப்பிடப்படுகிறதாம்.

இனப்பெருக்க காலத்தில், ஆண் பறவைகள் துணைகளைக் கவர்வதற்காக இறக்கைகளை விரித்து விரித்து அடிப்பது wing flapping செய்யுமாம்.

இனப் பெருக்கக் காலத்தில் ஆண் பறவை குச்சிகள் சுள்ளிகளைக் கொண்டு வர, பெண்ணும் கூடச் சேர்ந்து கொண்டு நீர் நிலைகள் அருகேயுள்ள, மரக் கிளைகளில் குச்சி, சுள்ளிகளைக் கொண்டு கூடு கட்டுகின்றன. பெரும்பாலும் தங்கள் இனத்தோடும் மற்ற நீர்வாழ் பறவைகளான நாரை, நீர்க்காகங்கள், மற்றும் கொக்குகளுடன் இணைந்து கூட்டமாக (Colonies) கூடு கட்டுகின்றன. இதுவும் ஒரு பாதுகாப்புதான்.

இதன் பருவ காலம் அக்டோபரிலிருந்து - ஃபெப்ருவரி வரை. இதை இங்கு பெங்களூரில் காணலாம். அதாவது வடகிழக்குப் பருவமழைக்காலம் தொடங்கி முடிந்த பின் இவற்றிற்கு உகந்த காலம். என்றாலும் இங்கு பெங்களூரில் நான் கவனித்த வரையில், இங்குள்ள பருவ நிலையைப் பொருத்து, கோடைகாலத்தின் முடிவிலும் இங்கு பார்க்கலாம்.  

ஏகபத்னி பறவை! அதாவது, ஒரு குறிப்பிட்ட இனப்பெருக்க காலத்தில் (Breeding season), ஒரு ஆண் பறவை ஒரு பெண் பறவையுடன் மட்டுமே இணைந்து வாழும். அந்தப் பருவம் முழுவதும் கூடுகட்டுவது, முட்டைகளை அடைகாப்பது மற்றும் குஞ்சுகளை வளர்ப்பது என அனைத்தையும் இந்த ஜோடி இணைந்தே செய்யும். அடுத்த சீசனில், சில சமயம் அதே இணையுடன் சேருமாம் இல்லை வேறு இணையைத் தேடுமாம்.

பாம்புத்தாராக்கள் பொதுவாக "Philopatric" பண்பு கொண்டவை. அதாவது, அவை ஒரு முறை பாதுகாப்பான மற்றும் உணவு அதிகம் கிடைக்கக்கூடிய ஓர் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டால், ஒவ்வொரு ஆண்டும் அதே இடத்திற்கோ அல்லது அதே மரத்திற்கோ திரும்பி வர அதிக வாய்ப்புள்ளது. BTM (மடிவாலா) ஏரியின் நடுவில் உள்ள தீவுகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். அங்குள்ள மரங்களில் ஆண்டுதோறும் இந்தப் பறவைகள் கூடுகட்டுவதைக் காணலாமாம். இந்த முறையும் நிறைய நீந்திக் கொண்டிருந்ததைக் காண முடிகிறது. 

ஒரு முறைக்கு 3 முதல் 6 முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகள் நீல கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்.  ஆணும் பெண்ணும் மாறி மாறி சுமார் 25 முதல் 30 நாட்கள் வரை முட்டைகளை அடைகாக்கும்.  குஞ்சுகள் பிறந்த பிறகு, இரண்டும் இணைந்து அவற்றுக்கு உணவளிக்கும். சுமார் 6 முதல் 7 வாரங்களில் குஞ்சுகள் பறக்கத் தொடங்கும். 


-----கீதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக