வியாழன், 31 மார்ச், 2016

"வளரும் கவிதை" தளத்தில் தவழும் தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ஸ்

இணைய  எழுத்தாளர் என்ன சொல்கிறார்?–

http://valarumkavithai.blogspot.com/2016/03/2.html

(2) “தில்லைஅகத்து” - துளசி-கீதா 

 
திருமிகு துளசிதரன் அவர்கள்

எங்கள் அன்பிற்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய திரு முத்துநிலவன் ஐயா/அண்ணா
வணக்கம். உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் முதலில். வலையுலகில் பல வருடங்களாக, நல்ல தமிழில் எழுதி, தமிழுக்குச் சேவை செய்துவரும், மிகவும் புகழுடன் இருக்கும் எழுத்தாளர்கள் இருக்க, நீங்கள் ஏற்றியிருக்கும் தீபத்தில் எங்களையும் மதித்து, அன்புடன் இணைத்தமைக்கு. நாங்கள் அத்தனை பெரிய எழுத்தாளரா? என்ற கேள்வி எங்கள்  மனதில் எழாமல் இல்லை. இருந்தாலும், தங்களின் அன்பான அழைப்பினை மறுத்திட முடியுமா என்பதால் தங்கள் அன்பான அழைப்பை ஏற்றுக் கொண்டோம்.

எங்கள் தளத்தின் பார்வையாளர்கள், எங்கள் பதிவுகளின் எண்ணிக்கை, தமிழ்மணத் தரம் என்று எங்களுக்கே தெரியாத தகவல்களைக் கூட தாங்கள் நுணுக்கமாகப் பார்த்துப் பகிர்ந்திருப்பது, மிகவும் வியப்பாகவும், மகிழ்வாகவும் இருந்தது, இருக்கிறது. இதையே, எங்கள் தளம் போல் நீட்டி முழக்காமல் மீண்டும் நன்றியுடன் இங்கு நிறுத்திக் கொள்கின்றோம். (ஆனால், நீட்டி முழக்கிவிட்டோம் என்பது வேறு....)

எங்கள் சிற்ற்றிவிற்குத் தெரிந்த வரை பதில் அளிக்கின்றோம்/அளித்துள்ளோம்

 (1)   இணையத்தமிழில் நீங்கள் இணைந்த விதம் பற்றிச் சொல்லுங்களேன் ..
நாங்கள் இருவரும் கல்லூரிக்காலத்து நண்பர்கள். இருவருக்குமே எங்கள் கல்லூரிக்காலத்திலேயே, எழுத்து, நாடகத்தில் நடித்தல், நாடகங்கள் இயக்குவது, தனியோருவர் நடிப்பு, போட்டிகளில் கலந்து கொளல், வானொலி நிலையத்தில் நிகழ்ச்சிகள் வழங்குதல் என்று பலவற்றிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுண்டு.
அதன் பிறகு வாழ்க்கைப் பயணத்தின் திசை மாறி, எங்கள் எழுத்தினையோ, கலைகளையோ தொடரவும், வளர்த்துக் கொள்ளவும் முடியாமல் போனது. 28 வருடங்களுக்குப் பிறகு, இருவரும் சந்தித்த போது...
சரி துளசி முதல்ல நீ சொல்லு, அப்புறம் நான் தொடர்கின்றேன்.
துளசி : தமிழில் சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கதைகள் எழுத நினைத்துக் குறிப்புகள் எழுதி சேமித்து வைத்திருந்தேன். சில கதைகளும் எழுதி வைத்திருந்தேன். 80 களில் எழுதிய புதினம் ஒன்றும் முற்றுப் பெறாமல் அப்படியே இருப்பதையும் சொல்லிக் கீதாவிடம் கொடுத்தேன். அதை எல்லாம் புத்தகமாக வெளியிடலாமா என்று கீதாவிடம் பேசிய போது....

கீதா நீதானே வலைத்தளம் ஆரம்பிக்கலாம்னு சொன்னது...நீ தொடர்ந்து சொல்லு இப்ப..

கீதா: அண்ணா, நான் துளசி எழுதிய குறிப்புகளை வாசித்ததும் கதைகள் மனதில் தோன்றின. இத்தனை வருடங்களாக எனக்கும் எழுதுவதில் ஆர்வம் இருந்தும் எழுதுவதற்கானச் சூழல் அமையாதிருந்ததால், “நாம் ஏன் ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கக் கூடாது” என்று துளசியிடம் சொல்லவும், அவரிடம் இணைய வசதி இல்லாததால், எனது இடத்தைத் தலைமையகமாகக் கொண்டு, 2013 ஆம் வருடம், ஜீன் மாதம் 16 ஆம் தேதி துளசியின் ஜிமெயில் கணக்கில், வலைத்தளம் தொடங்கினோம்.  அந்த முற்றுப் பெறாத புதினத்தை துளசி முடித்ததும், அதையும், ஒரு சில கதைகளையும், கட்டுரைகளையும் புத்தகமாகக் கொண்டுவரும் எண்ணம் உள்ளது.

துளசி இப்போது நீ சொல்லு..

துளசி : நான் ஆங்கில ஆசிரியர்.  பாலக்காட்டில். எனவே எனது மாணவர்கள் அனைவரும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதால், எனது மாணவர்களும் வலைத்தளம் வாசித்தால் அவர்களும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாமே என்று, ஆங்கில இலக்கணமும், நடைமுறையில் பேசப்படும் ஆங்கிலமும் எளிதாகக் கற்றுக் கொடுப்போம் என்று ஆங்கிலத்தில்தான் எழுத ஆரம்பித்தோம். ஆனால், இருவருக்குமே தமிழில் எழுதத்தான் மிகவும் ஆர்வம் இருந்ததால், எங்கள் கல்லூரிக் காலத்தைத் தொடரலாமே என்று தமிழில் எழுத ஆரம்பித்தோம். அப்படித்தான் எங்கள் வலைப்பயணம் தொடங்கியது.

 (2)   தங்களின் வலைப் பக்கத்திற்கு தில்லைஅகத்து குரோனிக்ள்எனப் பெயரிடக் காரணம் என்ன? 

எல்லோருமே சிதம்பர ரகசியம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  பௌதீகத்தின் அடிப்படையிலான ப்ளாக் ஹோல் கோட்பாடும், தில்லை/சிதம்பர ரகசியத்தின் கோட்பாடும் ஒரே கோட்பாட்டைப்பற்றித்தான் பேசுகின்றன. அந்த அண்டவெளியின் இயக்கத்தில்தானே இவ்வுலகே அமைந்திருக்கிறது. அந்த அண்டவெளி சக்தியின் அகத்திலிருந்து வந்தவர்கள் என்ற அர்த்தத்தில் “தில்லைஅகத்து” என்று, எங்கள் குறும்படங்களைப் பற்றி வெளியிட தொடங்கியிருந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து எங்கள் எண்ணங்களைப் பதிவிட முடிவு செய்ததால் “தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ஸ்” என்று இப்போது எழுதிக் கொண்டிருக்கும் வலைத்தளத்தை ஆரம்பித்தோம்.

“தில்லைஅகத்து” வலைத்தளத்தில் முதல் குறும்படமாகிய “மஹாமுடி த க்ரேட்” படத்தின் நாடக வடிவத்தை, ஆங்கிலத்தில் “How to Analyze A Visualized Drama and Achieve English Proficiency” என்று புத்தகமாக, அதில் மாணவர்கள் செயல் முறை வடிவில் ஆங்கிலம் கற்கும் முறைகளையும் சொல்லி, மாணவர்களுக்கு வேண்டிப் புத்தகமாகவும் வெளியிட்டேன். அடுத்து எடுக்கப்பட்டப் படங்களும், “கார்ப்பெண்டர் த க்ரேட்”, “பொயட் த க்ரேட்”, இனி வரப் போகும் படங்களும், “செயின்ட் த க்ரேட்” (கேரளத்தைப் பர்றிய விவேகானந்தரின் கருத்து), “வாரியர் த க்ரேட்” (இராவணன் பற்றியது) இந்த 5 கதைகளும் புத்தகமாக வெளிவரும்.

க்ரோனிக்கிள்ஸ் என்று பெயர் வைத்ததன் காரணம்,  ரிச்சர்ட் ஸ்டீல், ஜோசஃப் ஆடிசன் எனும் பல வருடத்து நண்பர்கள் இருவரும், “த ஸ்பெக்டேட்டர்” எனும் இதழ் தொடங்கி அதில் எழுதி வந்தனர்.  நாங்களும் இருவரும் சேர்ந்து எழுத நினைத்ததால் “தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ல்ஸ்” என்று பெயரும் வைத்து விட்டோம்.  இதைப் பற்றியும் ஒரு பதிவு எழுதிய நினைவு.

 (3) நட்புரீதியாக இருவர் சேர்ந்து செயல்படும் படைப்பாளிகள் தமிழில் இருக்கிறார்கள். வலையுலகில் நீங்கள் இருவரும் இருப்பது, மகிழ்வுக்கும், பாராட்டுக்கும் பின்பற்றுதலுக்கும் உரிய உயர் பண்பாடாக நினைக்கிறேன். இதில் உங்கள் சாதகமென்ன பாதகமென்ன?

முதலில் இருவர் சேர்ந்து எழுதுதல் என்பதற்கு வலையுலகில் முன்னோடி, எங்கள் அறிவுக்கு எட்டியவரை “எங்கள் ப்ளாக்” என்று நினைக்கின்றோம். நாங்கள் அதன் பின் வந்தவர்களே.

எங்கள் இருவரின் நன்றி, தாங்கள் இதனைப் பின்பற்றுதலுக்கும் உரிய உயர் பண்பாடாக நினைத்துப் பாராட்டியமைக்கும்.  நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். எங்களையும் புரிந்து கொண்டு, வலை உலகில் எல்லா சகோதர சகோதரிகளும் எங்களுக்கு ஆதரவு தந்து, எங்களை இவ்வளவு தூரம் வளர்த்தமைக்கு உங்கள் எல்லோருக்கும், தமிழ் வலையுலகிற்கும் எங்கள் நன்றிகள் பல சொல்லிக் கொள்கின்றோம்.

இரு ஆண்கள், இரு பெண்கள் சேர்ந்து பணியாற்றுவது உண்டு நீங்கள் உங்கள் கேள்வியில் குறிப்பிட்டிருப்பது போல். ஆனால், ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து எழுதுவது என்பதில் சில பிரச்சனைகள், சவால்கள் வரத்தான் செய்யும், அது எத்தனை வயதாக இருந்தாலும்.  அதையும் சமாளித்துக் கடந்து, நாங்கள் எங்கள் நட்பைத் தொடர்ந்து, எழுதிக் கொண்டும் வருகின்றோம், இனியும் எழுதுவோம் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது.

நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதுவதில் சாதகங்கள்தான் இருக்கின்றன.  ஒருவர் எழுத முடியாத நேரத்தில் மற்றவர் எழுதலாம். இருவரது கருத்துகளும், எண்ண அலைவரிசையும் ஒன்றிப் போவதால் பிரச்சனைகள் இல்லை. அப்படியே வேறுபட்டாலும், இருவரும் கலந்துரையாடி, மற்றவரது கருத்து சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்வோம். கருத்து இடுவதில் கூட பல சமயங்களில் ஒத்தக் கருத்தாக இருக்கும். நாங்களே வியந்து போன தருணங்கள் உண்டு.

கீதா: கருத்து இடுவது பெரும்பாலும் ஒருமித்து இருந்தால் அப்படியே போட்டுவிடுவோம்.  சில சமயங்களில் துளசியின் கருத்து தனியாகவும், எனது கருத்தைத் தனியாகவும் பதிவதுண்டு. நான் மட்டும் கருத்திடுவதும் உண்டு என் பெயரிட்டு. அது பெரும்பாலும் என்னைப் பற்றிய அல்லது என் மகனின் தொழில் சம்பந்தப்பட்ட, சென்னையைச் சார்ந்த நிகழ்வாகவோ, விசயமாகவோ, எனக்குத் தெரிந்த நிகழ்வு, விசயமாகவோ இருக்கலாம். பாதகங்களைப் புறக்கணித்து சாதகங்களையே எடுத்துக் கொள்கின்றோம்.

தொடரும்.....


33 கருத்துகள்:

  1. “எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை - அவன்
    எப்படி வாழ்ந்தான் என்பதை அறிந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை“ என்பது கவிஞர் வாக்கு. நீங்கள் எவ்வளவு காலம் எழுதிவருகிறீர்கள் என்பது முக்கியமல்ல, எப்படி, எல்லாரும் மதித்து,விரும்பி, படிக்கும்படி எழுதுகிறீர்கள் என்பதே முக்கியம். அதனால்தான் உங்களை நேர்காணலில் சேர்த்துவிட்டேன். இதோ இப்போது கண்ட விசுவும் கூட அவரது பதில்களில் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் பாருங்கள். தங்களிருவரின் நட்பு, வலையுலகில் ஒரு முன்னோடிப் பண்பாட்டின் அடையாளம். தங்களிருவருக்கும் என் தலைதாழ்ந்த வணக்கமும் நன்றியும் தெரிவித்துத் தங்களின் பணிகள் தொடர என் இனிய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா/அண்ணா தங்களின் ஊக்கம் மிகுந்த கருத்திற்கு.

      நீக்கு
  2. நேர்காணலை நானும் படித்தேன் வாழ்க வளமுடன் தொடரட்டும் தங்களது எழுத்துப்பணி
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  3. மதிப்புக்குரிய ரஞ்சனி அம்மாவின் வேர்ட்பிரஸ் வலைப்பூவில்
    நாம் கணவன் - மனைவி அல்ல
    நண்பர்கள் எனப் பதிலிட்டதைப் படித்தேன்.
    நல்ல நண்பர்கள் இருக்கலாம் - ஆனால்
    நல்ல இலக்கிய நண்பர்களாக
    இணைந்து செயற்படுவது அருமை - அதில்
    தங்கள் வலைப்பூவின் வெற்றி
    பலருக்கு
    இனிய வழிகாட்டலாகவும்
    நல்ல பட்டறிவாகவும்
    இருக்கும் என்பது என் கருத்து!
    தாங்கள் இணைந்து மென்மேலும் வெற்றிபெற
    எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் தங்களின் புரிதலுக்கும் அழகான கருத்திற்கும் மற்றும் அன்பான வாழ்த்திற்கும்

      நீக்கு
  4. ஐயா தளத்தில் வாசித்தேன்....
    அருமையான நட்பை பேட்டி கண்டிருக்கிறார்....
    தாங்களும் கீதா மேடமும் அருமையாக... சிந்தனைக்கு விருந்தாக பதிலளித்து இருக்கிறீர்கள்...
    வாழ்த்துக்கள் துளசி சார்...
    வாழ்த்துக்கள் கீதா மேடம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி குமார் தங்களின் புரிதலுக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்

      நீக்கு
  5. நட்புகள் வாழ்க. நானே உங்கள 'லாங் டைம் நோ ஸீ' என்று தொலைபேசிக் கேட்க இருந்தேன். அதற்குள் பதிவு வந்து விட்டது.

    நான் அறியாத சில விஷயங்கள் இன்று அறிந்து கொண்டேன். வாழ்க உங்கள் நட்பு. வளர்க உங்கள் தளம். வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். உங்களைத் தொடர்பு கொண்டேன் உங்கள் அலைபேசி எண்ணே இல்லை என்று சொல்லுகிறது. வேலைப்பளு கடந்த 10 நாட்களாக.

      மிக்க நன்றி கருத்திற்கும் வாழ்த்திற்கும்...

      நீக்கு
  6. நேர்காணல் அருமை.
    நல்ல கேள்விகள், அருமையான பதில்கள்.
    வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி சகோ தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்

      நீக்கு
  7. எனக்கொரு சந்தேகம் .கேட்டு வாங்கிப் போடும் பதிலை (பதிவை ) 'நேர்காணல் 'என்று சொல்லலாமா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான்ஜி கருத்திற்கு. உங்கள் கேள்விக்கான நாங்கள் சொல்ல நினைத்த பதிலை சகோ ரஞ்சனி அவர்கள் சொல்லிவிட்டார்கள். கீழே ...

      நீக்கு
  8. பேட்டியின் வாயிலா நிறைய அறிந்து கொள்ள முடிந்தது. அருமையான நண்பர்களின் எழுத்துப் பணி தொடரட்டும். இருவருக்கும் வாழ்த்துகள்.
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி உமையாள் சகோ தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
  9. நேர்காணல் அருமை நட்பே
    தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவா் நேர்காணல் முயற்சி பாராட்டுதலுக்குரியது.புதிதாக வலையுலகில் காலடிவைப்பவர்களுக்கு வழிகாட்டுவதாகவும் இம்முயற்சி உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் இரா குணசீலன். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். பாராட்டுகள் திருமிகு முத்துநிலவன் ஐயா அவர்களுக்குத்தான். அவர்களது பெரும் முயற்சியே இது. எங்கள் பங்கு எதுவும் இல்லை...

      அவரது இந்த முயற்சி உறுதியாக வலையுலகில் காலடிவைப்பவர்களுக்கு வழிகாட்டுவதாக அமையும். மிக்க நன்றி முனைவர் அவர்களே.

      நீக்கு
  11. வாழ்த்துக்கள் .....

    உங்களின் சிந்தனைகளை படித்து வியக்கும் பலரில் நானும் ஒருவர் என்பதில் மகிழ்கிறேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். தங்கள் எல்லோரது கருத்துகளும், ஆதர்வும் தானே எங்களை வளர்த்தெடுக்கின்றது. மிக்க நன்றி..

      நீக்கு
  12. இந்த வலைப்பூவைத் தொடரத் தொடங்கியது முதலே இந்தக் கேள்விகளும் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலும் இருந்தன. ஆனால், நான் பொதுவாக அடுத்தவர்களின் சொந்த வாழ்க்கை பற்றிக் கேட்பது இல்லை. இந்த நேர்காணல் மூலம் உங்கள் நட்பு வரலாற்றை அறிந்து மிக்க மகிழ்ச்சி! நான் யூகித்தது போலவே உங்கள் நட்பு வாழ்க்கை வரலாறு அமைந்திருந்தது. ஒன்று மட்டும் தவறாகி விட்டது. இருவருக்கும் சொந்த ஊர் சிதம்பரமாக இருக்கும் அதனால்தான் இப்படிப் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன். தவறாகி விட்டது. அது சரி, இந்த நேர்காணலிலாவது கீதா அவர்கள் தன் முகத்தைக் காட்டுவாரா?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இபுஞா தங்களின் விரிவான கருத்திற்கு. இது திருமிகு நா முத்துநிலவன் ஐயா/அண்ணா அவர்களின் தளத்தில் ஏற்கனவே வெளிவந்துவிட்டது. இங்கும் பகிர்ந்துள்ளோம். இதன் அடுத்த பகுதி இன்று வரும்.

      கீதா: நான் தான் உங்களை நேரில் சந்திக்கவிருக்கின்றேனே!!!!!

      நீக்கு
    2. //நான்தான் உங்களை நேரில் சந்திக்கவிருக்கின்றேனே!!!!!// - நான் மட்டும் உங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவா கேட்கிறேன்? எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தானே!

      நீக்கு
  13. தில்லையகத்து கிரானிக்கிள்ஸ் என்ற பெயரின் காரணம் அறிந்துகொண்டேன். உங்களது புத்தகங்கள் பற்றிய தகவலும் முதல்முறையாக அறிந்துகொண்டேன்.@பகவான்ஜி பல பத்திரிக்கைகளும் இந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. வேறு வேறு ஊர்களில் இருப்பவர்களை இந்தமுறையில் நேர்காணல் செய்வது நடைமுறையில் இருக்கிறது. என்ன ஒன்று நடுநடுவில் கேள்விகள் கேட்டு (ஆர்னாப் கோஸ்வாமி போல!) குழப்பி விஷயத்தை திசை திருப்ப முடியாது, அவ்வளவுதான்!
    துளசிதரன், கீதாவின் நட்பு வாழ நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரஞ்சனி சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். தங்கள் வாழ்த்திற்கும். மிகவும் மகிழ்கின்றோம் சகோ. ஏனென்றால் தாங்கள் முத்த, அனுபவமிக்க, மிகவும் நேர்த்தியான, சிறந்த பதிவர் எழுத்தாளர் என்ற முறையில் தங்கள்மீது மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்திருப்பதால் தங்களது இந்தக் கருத்து எங்களை மிகவும் மகிழ்விக்கின்றது..மிக்க நன்றி.

      நீக்கு
  14. நேருக்கு நேர் உட்கார்ந்து பேசினாலோ ,வீடியோ onlineல் பேசினாலோ அதை நேர்காணல் என்று சொல்வதில் எனக்கும் உடன்பாடே ! உங்களிடம் நான் கேள்விகள் அனுப்பி பதில்கள் பெறுவது நேர்க்காணல் ஆகுமா மேடம் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி நேரே இதை முத்துநிலவன் ஐயா/அண்ணாவிற்கே டைரக்ட் செய்துவிடுவோம் சரியா ஜி!!!!!?

      நீக்கு
    2. நான்கு கால்கள் இருந்த காலத்தில் நாற்காலி என்று பெயர் வைத்தோம். இப்போ ஒரே காலைத்தான் வளைத்து வளைத்து -ஸ்டீல்- பின்னல் நாற்காலி செய்கிறோம். பேரை மாற்றிவிட்டோமா என்ன? கேள்விகளை நேருக்கு நேராக வைத்து பதில் சொல்வதால் நேர்காணல் சரிதானே? (இது சமாளிப்புத் தான் பகவானே! பழைய சொற்கள் சிலவற்றை மாற்ற வேண்டும் புதிய சொற்கள் பொருத்தமாகக் கிடக்கும் வரை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. சரியான சொல்லை நீங்களும் சிந்திக்கலாம். இந்த வாட்ஸாப்புக்கு கட்செவி என்பது பொருத்தமாகவா இருக்கிறது (கட்செவின்னா பழைய தமிழில் பாம்பு என்று பொருள்!) நான் காண்செவி என்று சொல்வது வழக்கம்.. பேட்டி என்பது தமிழே அல்ல எனினும் முடிந்தவரை -வறட்டிழுப்பாக அன்றி - நல்ல தமிழைப் பயன்படுத்த நினைப்பது என் வழக்கம். சரிதானே நண்பரே?
      முன்னர்க் கேள்வி கேட்ட எனக்கே இப்போது பதில் தரும் வாய்ப்பைத் தந்த நம் தில்லையகத்து நட்புக்குத்தான் மீண்டும் நன்றி நன்றி நன்றி.

      நீக்கு
    3. ஒரு நாலுநாள் கொடைக்கானலில் ரூம் போடுங்கள் ,நேர்காணல் சரிதானான்னு விவாதிப்போம் (வெயில் இங்கே பாடா படுத்துது :)

      நீக்கு
  15. தங்களின் சுயநலமில்லா நட்பு தொடரட்டும்.. வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு