புதன், 30 டிசம்பர், 2015

மாறுமா தமிழகத்தின் தலைவிதி?! - 3


இதுதான் இப்போதைய அரசியல்கட்சிகளின் நிலைமை - என் மின் அஞ்சலுக்கு வந்த படம்
முந்தைய பதிவின்  http://thillaiakathuchronicles.blogspot.com/2015/12/Will-The-Fate-Of-TamilNadu-Change.html  தொடர்ச்சி...இந்தப் பொதுச் சுகாதாரச் சுத்தம் என்பது தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் பொருந்தும். இது ஒருபுறம்... மறுபுறம்.......


மற்றொருபுறம் தொலை நோக்குப் பார்வையில் திட்டங்கள். “உங்கள் அரசு தொலைநோக்குப் பார்வையில் என்ன செய்யப் போகின்றது?” இது என்னுடன் பயணித்த வெளிநாட்டுப் பயணி ஒருவர் கேட்ட கேள்வி. வெள்ளத்தின் போது பாண்டிச்சேரியில் இருந்தாராம். நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டுச் சமாளித்தேன் ஏதோ சொல்லி.  வேறு என்ன சொல்ல? நம்மை விட்டுக் கொடுத்துப் பேசவா முடியும்? என் மனதிற்குள் தோன்றியது இதுதான். 

சென்னையை என்பதைவிட சென்னையின் சுற்றுப்புறத்தையும், கடலூரையும், மற்றும் தமிழகத்தையே மீட்டெடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல. நல்ல வலுவான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய, ஆக்கப்பூர்வமான திட்டங்களும் அதைச் செயல்படுத்தும் முறைகளையும் நம் அரசு அதைச் செய்யுமா என்பது சந்தேகமே.  மக்களின் மனதை மாற்றும் பணிகளும், இன்னும் சில மாதங்களில் யார் ஆட்சியைப் பிடிக்கப் போகின்றார்கள் என்பதற்கான செஸ் விளையாட்டுகளும் ஆரம்பித்துவிட்டன.

வழக்கம் போல ஒவ்வொரு கட்சி சார்ந்த ஊடகமும், தொலைக்காட்சிகளும், கட்சிகளையும், அதன் தலைவர்களையும் முன்னிலைப்படுத்தி, விளம்பரங்கள் வெளியிட்டு வருகின்றன. நமது ஆட்சியாளர்கள் கட்சி சார்ந்து, சுயவிளம்பரத்தோடுதான் இருக்கின்றார்களே தவிர மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை. அவர்களுக்கென்ன? மழை அடித்துச் சென்றதிலும் அள்ள வேண்டியவை இருக்கின்றதே. விளம்பரத்திற்கு உதவுவது எது தெரியுமா? வெள்ளம்தான்.

இயற்கை அன்னை இப்போது வருந்துகின்றாள். ஏன் புயலாய் வெள்ளமாய் அவதாரம் எடுத்தோம், குறிப்பாகச் சென்னையிலும், கடலூரிலும் என்று. “என்னை இப்படித் தங்கள் விளம்பரத்திற்குச், சுயநலத்திற்கு, ஆட்சியைப் பிடிப்பதற்கு உபயோகப்படுத்துகின்றார்களே என்னைச் சுட்டிக் காட்டி! இதற்கா நான் வெள்ள அவதாரம் எடுத்தேன்? இவர்கள் எல்லோருக்கும் பாடம் புகட்ட அல்லவா எடுத்தேன்! இப்போது நான் பகடைக் காயாகிவிட்டேனே! என்ன மனிதர்கள் இவர்கள்! இனி நான் சென்னைப் பக்கம்....இல்லை தமிழகத்தின் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன்” என்று வருந்தி சாபமே கூட இட்டுவிடலாம்.

இப்போது கூட இருகோடுகள் தத்துவமும், இதுவும் கடந்து போகும் எனும் தத்துவமும்தான் வீறுநடை போட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. பல ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்காகக் குரல் கொடுத்து, வாதாடி, வலுவான தூணாக இருந்து அரசைச் செயல்படுத்த வைப்பதை விடுத்து, ஊடகங்கள் சில செய்திகளைப் பற்றி மட்டுமே பேசிப் பெரிதாக்கி முக்கியமானவற்றைப் புறம் தள்ளி இந்தச் செய்திகள் முன்னில் நிற்பது அரசியல் விளையாடுவதை ஊர்ஜிதப் படுத்துகின்றது.

திட்டங்கள் எதுவுமே தொடர்வதில்லை என்பதுதான் மிகவும் வேதனை. ஒரு ஆட்சி தொடங்கும் திட்டம், மற்றொரு ஆட்சியால் தொடரப்படாமல் கிடப்பில் இட்டு முந்தைய ஆட்சியைக் குறை சொல்லுவதில் காலத்தைக் கடத்தி, அவர்கள் வேறு திட்டம் என்று ஏதோ ஒன்றைத் தொடங்கி அதுவும் கிடப்பில் இட்டு ஒவ்வொரு கட்சியும், ஆட்சியும் மற்றவர்களைக் கைகாட்டி, இப்படிக் கோடிக் கோடியாகப் பணம் ஏப்பம் விடப்படுகின்றதே அல்லாமல் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. போதாக் குறைக்கு யார் ஆட்சியில் இருக்கின்றார்களோ அவர்களது படங்கள் வேறு.

நம் தமிழகம் எப்படி இருக்கின்றது தெரியுமா? சாலை விபத்துகளில் முதலிடம், நீர்நிலைகளைப் புறக்கணிப்பதில், சுற்றுலாத்துறை வருவாய் குறைவு, (நன்றி கூட்டாஞ்சோறு செந்தில்சகோ) டாஸ்மாக் டார்கெட் வைத்து டாப்பில், ஊழல்களில் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் முதல் 5 இடங்களுள் என்று விரிகின்றது புகழ்!!!!

எனக்கு அரசியல் சட்டம் பற்றியோ, அரசியல் சாசனம் பற்றியோ தெரியாது. ஆனால், எனது மனதில் நெடுங்காலமாக இருந்துவரும் எண்ணம் ஒன்று.

திரைத்துறை, கட்சி, கொடி, பஞ்ச் அறிக்கைகள், முதல்வர் என்ற அரியாசனத்தின் பாதிப்பு, மாலைகள், தோரணங்கள், பந்தல்கள், சால்வைகள், அல்லக்கைகள், விளம்பரங்கள், விளம்பரப் பதாகைகள், இலவசங்கள் எதுவும் இல்லாத, நேர்மையான, நம்பிக்கைக்குப் பாத்திரமான, நல்ல கல்வியறிவு பெற்ற அதிகாரிகளை வைத்துக் கொண்டு, எப்பேர்ப்பட்ட மக்களும் எளிதில் சந்தித்துத் தங்கள் குறைகளைக் கூறி நிவர்த்தி கேட்க முடிந்த, மக்களோடு மக்களாகக் கலந்து, மக்களின் பார்வையில் தொலை நோக்கில் நல்ல சீரிய வகையில் திட்டங்கள் தீட்டி தமிழகத்தை மேம்படுத்தும் ஒரு நல்ல ஆளுமை நிறைந்த, கேரிஸ்மாட்டிக் தலைமையைக் கொண்டு வருவது இயலாதா?! எந்தக் கரையும் வேண்டாம்! கறையும் வேண்டாம்! இதற்கு ஏற்ற, நேர்மையான அதிகாரிகள் பலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, தமிழகத்தை வழிநடத்த முடியாதா?

அரசியலைப் பகிரங்கமாகத் தைரியமாகப் போட்டுத் தாக்கும் மதுரைத் தமிழனும், அதைவிடச் சற்றுக் காரம் குறைவாகத் தாக்கும் இபுஞாவும், விசுவும், மனசு குமாரும், மற்றும் இதன் நுணுக்கங்கள் அறிந்தவர்களும்  இதை வாசிக்க நேர்ந்தால், இது என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கே என்று நினைத்துச் சிரிக்கலாம். அப்படியேனும் புதியதொரு தமிழகம் மலராதா என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான்.  உங்களில் யாரேனும் பதில் தெரிந்தால் பதில் சொல்லுங்களேன்..

ஒன்றுமட்டும் உறுதி. மக்கள் விழிப்புணர்வுடன், தங்கள் உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும். சாலைவிதிகள், பொதுச்சுகாதாரம், இவற்றில் மக்களும் பொறுப்புடன் ஒருங்கிணைதல், நல்ல சாலைகள், ஊழல் புரையோடிக் கிடக்கும் தொடக்கக் கல்வித்துறையிலிருந்து உயர்கல்வி வரை தரமான கல்வியுடன் அரசு மயமாக்குதல், ஊழலற்றக் காவல்துறை, அரசாங்க மருத்துவமனைகளில் நல்ல மருத்துவம், விலைவாசி, தரமான பொருட்கள் என்று அன்றாட வாழ்வாதாரத் தேவைகள் வரை உரிமைகள் நிலைநாட்டப்படும் விழிப்புணர்வு வேண்டும். மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான, மக்களை நல்ல முறையில் வழிநடத்தும் நல்ல ஆளுமை பொருந்திய ஒரு அரசு அமைந்து, மக்களும் பொறுப்புடன் ஒருங்கிணைந்தால் மட்டுமே தமிழகத்தின் தலைவிதி மாறும்! விதி மாற வழியில்லையெனின் அது தமிழகத்தின் சாபக்கேடு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை!

(பின்குறிப்பு: எங்கள் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வரவில்லை.  கொஞ்சம் கூட வெள்ளமே வராத பகுதி மக்களுக்கு வந்திருக்கிறது நிவாரணம்!!!)


---------கீதா


27 கருத்துகள்:

  1. அரசியல் வியாதிகளை எந்த வெள்ளத்தாலும் குளிப்பாட்டவும் முடியாது, எந்த இயற்கை நிகழ்வுகளால் குணப்படுத்தவும் முடியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்...

      நீக்கு
  2. சாலை விபத்துகளில் முதலிடம், நீர்நிலைகளைப் புறக்கணிப்பதில், சுற்றுலாத்துறை வருவாய் குறைவு, டாஸ்மாக் டார்கெட் வைத்து டாப்பில், ஊழல்களில் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் முதல் 5 இடங்களுள் என்று விரிகின்றது புகழ்!!!!

    வேதனை வேதனை

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தையார் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்..

      நீக்கு
  3. அன்புள்ள சகோதரி,

    தமிழகத்தின் தலைவிதி மாறுமா? புரியாத புதிராகத்தான் இருக்கிறது. மக்கள் விழிப்புணர்வு பெற்றவர்களாகத் தெரியவில்லை...! சில ஆயிரங்களை வீசி பல கோடிகளைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்கூட்டம். கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்ட கொள்ளையர் கூ(ட்)டம். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...! சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்...!
    ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரையில் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்...!

    நன்றி.
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மணவை சகோ தங்களின் விரிவான கருத்துரைக்கும் வருகைக்கும்

      நீக்கு
  4. இவ்வளவு மன வேதனையுடன் இந்த பதிவை எழுதிவிட்டு, கடைசியில பின் குறிப்புன்னு சொல்லி ஒண்ணு எழுதியிருக்கீங்க பாருங்க அங்கத்தான் நிக்குது நம்ம நாடு!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சொக்கன் சகோ. மிக்க நன்றி தங்களின் வருகைக்கும், கருத்திற்கும்.

      நீக்கு
  5. தமிழகத்தின் சாபக்கேடு என்பது அரசியல்வாதிகள் புள்ளி வைக்காமல் போடும் கோடு(கேடு) என்ன செய்வது இன்றைய சரித்திரத்தின் ஏடு அப்படி!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...

      நீக்கு
  6. நிவாரணமே இப்படி என்றால் திட்டங்கள் எப்படி இருக்கும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி! மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  7. வணக்கம் சகோ,

    முதலில் தாங்கள் இட்டுள்ள படம் சூப்பர். தமிழகம் தப்பிக்குமா??????????

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மகேஸ்வரி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  8. அரசியல் கட்சிகளிலிருந்து ஆட்சி பீடத்துக்கு வருபவர்களுக்கு தெரியாததை எல்லாம் தெரிவிப்பவர்கள் அதிகாரிகளே அதிகாரிகளின் வழிகாட்டல் இல்லாமல் எந்த அரசியல் வாதியும் ஆட்சி புரிய முடியாது அரசியல் கட்சிகள் ஒள்கை என்று ஏதாவது கூறினாலும் அவற்றை நடத்துபவர்கள் அதிகாரிகளே ஆட்சிக்கு வரும் கட்சிக்கு ஏற்றபடி வளைந்து கொடுத்துஎந்த செயலுக்கும் மக்களிடம் பதில் சொல்ல வேண்டாத பதவியில் இருக்கும் அதிகாரிகளே காரண கர்த்தாக்கள் . கேட்டால் அரசுக்குக் கட்டுப் பட்டவர்கள் என்று பதில் வரும் அவரவர் மன சாட்சிக்குக் கட்டுப்படாதவர்கள் வளருகிறார்கள் அரசியல் வாதிகளை வளர்த்துகிறார்கள் எங்கோ ஓரிரண்டு நேர்மையான அதிகாரிகள் இருந்தால் போதாது இதைச் சீர்திருத்தும் வழி பற்றித்தான் சிந்திக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  9. எனது ஒரே பதில் மக்கள் மனதில் மாற்றம் வராதவரை நல்லவர்களாயினும் எல்லோருக்குமே இந்த இழிநிலை வாழ்க்கைதான்.

    இளைஞர்களை வருங்காலத் தூண்கள் என்று சொல்கின்றார்கள் நேற்று சிம்புவின் வீட்டு முன் 4 இளைஞர்கள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு ‘’என் தலைவனை கைது செய்யாதே’’ என்று கூவுகின்றார்கள் இவர்களின் உயிரைக் காப்பாற்ற 4 போலீஸ்காரர்கள் பாடுபடுகின்றார்கள் இவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் யார் பணம் மக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் இது வெட்டியான சம்பளம்தானே மக்கள் பணம்தானே...

    இந்த இடத்தில் நான் ஆட்சியாளனாக இருந்தால் போலீஸ்காரர்களுக்கு உத்தரவிடுவேன் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டவர்கள் மீது தீயைக் கொளுத்திப்போடுங்கள் என்று இது படிக்கும் சிலருக்கு சிரிப்பாகவும், கோபமாகவும் கூட வரலாம் கொலைக்குற்றம் என்றும் சொல்லலாம் இந்த 4 பேரின் உயிர்கள் நாட்டுக்கு அவசியமில்லை என்பதற்காக இப்படி செய்யவில்லை இதைப்பார்க்கும் மற்றவர்கள் இனி இப்படி செய்ய மாட்டார்கள் என்பது எனது ஆணித்தரமான கருத்து நம்பிக்கை.
    எவ்வளவு நேரவிரயம், பணவிரயம் மக்கள் சிந்திக்க வேண்டும்.

    இனி இந்தியாவுக்கு ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியின் ஆட்சி வரவேண்டும் அதே நேரம் அவர் நல்ல நோக்கமுடன் காமராஜரைப்போல் செயல் படவேண்டும் அப்படியொன்று நிகழ்ந்தால் நமக்கு இனியெனினும் வாழ்க்கை உண்டு என்று நம்புவோம்
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  10. தானாக மாறாது;மாற்ற முடிபவர்கள் மனம் வைக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  11. களத்தில் நிற்கும் உங்களை போன்ற செயல்வீரர்களுக்கு இருக்கும் ஆதங்கம் பதிவெங்கும் தெரிகிறது கீத்து. புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி!

    பதிலளிநீக்கு
  12. ஆக்கபூர்வமான் திட்டங்கள் குறித்து பேசி மக்களை செயல் வீரர்கள் ஆக்க கூடாது என்று தான் அரசியல் கட்சிகளின் செயல்படா வீரர்கள் முடிவெடுத்து விட்டார்களே?!

    எந்த மாற்றமும் ஓரிரு நாளில் நடத்திட முடியாது தான். அதற்காக முயலாமை கூட செய்யாமல் ஆமைபோல் முடியாது என ஓட்டுக்குள் அடங்குவதும் ஒட்டுக்கு மட்டும் வெளிவருதலும் கண்டிக்கப்பட மட்டுமல்ல தண்டிக்கப்படவும் வேண்டுமே!

    சமுதாய நலன், எதிர்காலம் குறித்து அக்கறையுள்ள குடிமகனின் உள்ளக்குமுறலாய் வெளிவந்திருக்கும் உங்கள் பதிவுக்கு என் சல்யூட்!

    தொடர்ந்து தொட்டுங்கள். என்றோ எங்கோ ஒரு நாள் இந்த சத்தம் கேட்கப்படும் எனும் நம்பிக்கையோடு தட்டுங்கள்.

    நன்றி!

    பதிலளிநீக்கு
  13. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  14. அன்புள்ள அய்யா
    வணக்கம்.

    "இனிய ஆங்கில புத்தாண்டு - 2016"
    நல்வாழ்த்துகள்

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  15. எல்லோருடைய மனதிலும் ஓடிக்கொண்டிருப்பதை எழுதியிருக்கிறீர்கள். யார், எப்படித் திருந்தப் போகிறார்கள் என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.
    உங்களுக்கும், கீதாவிற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! என் தளத்திற்கு வந்து வாழ்த்துச் சொல்லிச் சென்றமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  16. சகோவுக்கும், கீதாவுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  17. அருமையான பகிர்வு...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  19. அப்படிச் சிரிக்கவெல்லாம் மாட்டோம் சகோ! உங்கள் ஆதங்கத்தை உணர்த்தும் வரிகளே அவை. மற்றபடி, எந்தவிதச் செலவும் இல்லாமல் தேர்தலை எதிர்கொள்ள சில சீரிய திட்டங்கள் தேவை. என் சிற்றறிவுக்கு எட்டிய வரை, இதற்கு நான் ஒரு திட்டத்தை அப்துல் கலாம் அவர்களுக்கு ஒருமுறை எழுதியனுப்பியிருந்தேன். விரைவில் அது பற்றி உங்களிடம் தெரிவிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. முந்தைய பதிவைப் படிச்சுட்டு வரேன். உங்களுக்கும், தோழி கீதாவுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு