புதன், 18 நவம்பர், 2015

மாண்புமிகுத் தலைவர்களுக்கு ஒரு கடிதம்

பாவம் குதிரையும் தண்ணீரில்

அன்பார்ந்த தலைவர்களுக்கு வணக்கம். என்ன மழை எல்லாம் ஓய்ந்துவிட்டது இனி அறிக்கை எதுவும் விட வேண்டிய அவசியம் இல்லை என்றுக் களிப்புடன் இருக்கின்றீர்களா? மன்னிக்கவும். இன்னும் ஓயவில்லை என்று ப்ராபபிலிட்டி தியரிப்படி, வானிலை ஆராய்ச்சி மையம் சொன்னது அதிசயமாகப் பலித்திருப்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். இதோ மூன்றாவது நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம். 

இதை நாங்கள் முதல் மழை அடித்துப் பெய்யும் போதே எழுதியிருந்தோம் உங்களுக்கு அனுப்பாமல் வைத்துவிட்டோம். அப்போது அனுப்பியிருந்தால் ஒரு வேளை நீங்கள் இதை வாசிக்க நேர்ந்திருந்தால், உடனே பொறுப்புள்ளத் தலைவர்களாக மாறியிருந்திருப்பீர்களோ! நாங்களும் பெருமைப்பட்டிருக்கலாம்!


பெய்த மழையில் சாலைகள் எல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்தோட, அடைமழையில் நீங்கள் உங்கள் மாட மாளிகையிலிருந்து எப்படி இறங்கி வருவீர்கள்! “பாவம் நீங்கள்” என்ற கரிசனத்தினால், மழை சற்று ஓயட்டுமே என்று தாமதித்துவிட்டோம். தவறாகிவிட்டதோ? 

ஏற்கனவே பல சாலைகள் பழுதடைந்துச் செப்பனிடபடாமல் இருப்பவைதான். இப்போது பழுதடைந்த சாலைகளும் எல்லாம் குண்டும் குழிகளுமாய் எப்போது செப்பனிடப்படுமோ என்று காத்திருக்கும். அடுத்த மழைவரும் முன்னர்தான் செப்பனிடப்படும். அப்போதுதான் மீண்டும் சாலைகள் அரிப்பெடுக்கும். அதிலும் அள்ளலாம் நீங்கள் என்பது எங்களுக்குத் தெரிந்தாலும் அதையெல்லாம் நாங்கள் பொறுத்துக் கொண்டு வெளியில் சொல்லமாட்டோம். எங்கள் அல்லல்களைப் புரட்சிகரமாகச் சொல்லத் தெரிந்திருந்தால் நாங்கள் இப்படி அவதிப்பட்டிருப்போமா?! நாங்களும் சரி நீங்களும் சரி எப்போதுமே இருகோடு தத்துவத்தில் வாழ்பவர்கள்தானே! நீங்கள் மகிழ்வாக இருங்கள். பாலச்சந்தருக்கு நன்றி! 

உங்கள் பங்களாக்களில் தண்ணீர் சூழவில்லைதானே? நல்லகாலம். எங்கள் தலைவர்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால், பின்னர் எங்களை யார் காப்பாற்றுவார்கள்? எங்கள் தலைவர்களைக் காப்பாற்றிய இயற்கைக்கு நன்றி!

ஆனால், பாருங்கள் உங்களின் உதாசீனத்தால் துன்புறும் பாமரமக்கள் நாங்கள் உங்களைக் குற்றம் சொல்லாமல் இயற்கையைக் குற்றம் சொல்லுகின்றோம். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். உங்களிடம் இத்தனை அன்பு வைத்திருக்கும் எங்களை, மன்னிக்கவும், ஓட்டுகளைப் பெற்றிருப்பதற்கு.

உங்களுக்குச் சுடச் சுடச் சாப்பாடு மூன்று நேரமும் இல்லையில்லை நான்கு நேரமும், 5 நேரமும் கிடைத்துக் கொண்டிருக்க, ஒரு நேரச் சாப்பாடு கூடக் கிடைக்காத நிலையில் இங்கு உங்கள் ஓட்டுக் கூட்டமே தத்தளிப்பதை நீங்கள் தொலைக்காட்சியிலாவதுப் பார்த்திருப்பீர்கள்தானே!

ஓ! அதற்குத்தான் நீங்கள் உணவுப் பொட்டலங்கள் கொடுப்பதாகத் தொலைக்காட்சியில் அறிக்கை விடுத்துக் கொடுத்தீர்களே! மறந்தே போனோம். மழையானதால் உங்களுக்கும் வெளியில் செல்ல முடியாதுதான்.  தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்து அறிக்கைவிடுவதில் வல்லவர்கள் நீங்கள் என்பது எங்களுக்குத் தெரியாதா என்ன? 

மின்சாரக் கம்பிகள் அறுந்து, மின்சாரம் தடைப்பட்டதில் அர்த்தம் இருக்கின்றது. ஆனால், அதைச் சரிசெய்யக் கூட முடியாத நிலையில் எங்களைச் சூழ்ந்து தண்ணீர். உங்களுக்குத்தான் மின்சாரம் தடையில்லையே! உங்கள் சோறு ஆறிக்கொண்டிருக்கின்றது பாருங்கள்! இரண்டு நாட்களாகத் தக்காளியின் விலை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?  கிலோ 140 ரூபாயாம். உங்கள் வீட்டில் தக்காளி சாம்பார்தானே?! இங்கு வரை மணக்கின்றது!

இங்கு பேருந்துகள் போவது போல வெனிஸ் நகரில் படகுகள்தான் தினமும் என்று கேட்டதுண்டு. இன்னும் சில நாடுகளில் படகுகளில்தான் ஷாப்பிங்குமாம்.  எங்களால் வெனிஸ் நகர் சென்று பார்க்க முடியுமா என்ன?  இல்லை படகு ஷாப்பிங்க்தான் செய்யமுடியுமா என்ன? ஒவ்வொரு பெரும் மழையிலும்  ஒரு சில தினங்களாவது சென்னையை வெனிஸ் நகராக்கி, அந்த அனுபவத்தையும் கொடுத்து ஆனந்தம் அடையும் உங்களுக்குக் கோடானு கோடி நன்றிகள்.

ஆனால், ஒன்று பாருங்கள், அங்கெல்லாம் நல்ல தண்ணீராம்.  இங்கு எங்கள் கழிவுகளுடன்,  உங்கள் கழிவுகளும் சேர்ந்து மிதக்கும் நீரில்தான் படகுகளும், எங்கள் வீடுகளும் என்பதை இங்கு பதிய விரும்புகின்றோம். நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.

துன்பம் வரும் வேளையிலும் சிரிக்கச் சொன்ன ஐயனின் தேசத்தில் பிறந்தவர்கள் அல்லவா! அதனால், இப்படித்தான் சொல்லி மகிழ்வடைய முடியும் நாங்கள். நீங்களும் ஆனந்தமாகவே இருங்கள்.

தண்ணீர் சூழ்ந்த இடங்களுக்குப் பார்வையிட வந்த நீங்கள் காரின் கண்ணாடிக் கதவுகளைக் கூடத் திறக்காமல்தான்  பார்த்தீர்கள். நாங்கள் காட்சிப் பொருள்கள் என்று நினைத்துவிட்டீர்களோ! என்னவோ! நன்றாகப் பாருங்கள். இதைத்தானே நீங்கள் வீட்டின் கதகதப்பான அறைகளில் இருந்து கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியில், முதல் மழையின் போதும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்?!

இறங்கியவர்கள் கூட உங்களுக்கு நோய் வந்துவிடக்கூடாது என்று காலில் பூட்ஸ் அணிந்து வந்தீர்கள். இத்தனைப் பாதுகாப்பு எடுத்துக்கொள்ளும் உங்கள் மனதில், நாங்கள் இப்படித்தான் ஒவ்வொரு மழையிலும் அல்லாடுகின்றோம் என்பதும், தினமுமே கழிவுநீருக்கிடையில்தான் வாழ்கின்றோம் என்பதும் ஏனோ பதிவதில்லை. இதுவும் கடந்து போகும் எனும் தத்துவத்தில் நீங்கள் எங்களையும் கடந்து சென்றுவிடுகின்றீர்கள் போலும்! நல்ல தத்துவம்தான்!  மகிழ்வாக இருங்கள்!

இதோ, தெருக்களில் குப்பைகள் அழுகியக் குப்பைகள் இரைந்து கிடக்கின்றன. வரவிருக்கும் விஷக்காய்ச்சல்கள் பலவற்றிற்கும் நீங்கள் தயாராக இருக்கின்றீர்களோ இல்லையோ,  ஆனால், நாங்கள் அதைப்பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நீங்கள் அப்படி விஷக்காய்ச்சல் பரவில்லை, நாங்கள் அதைத் தடுக்க ஆவன பாதுகாப்பு முறைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்று அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தாலும், அந்தக் காய்ச்சலால் இறந்த, இறக்கும் உயிர்கள் பேசப்போவதில்லைதான். என்றாலும், சடலங்கள், உண்மையை வெளி உலகிற்கு உரைக்காமலா போகும்?! அப்படியும் இல்லை என்று சொல்லிச் சடலங்களுக்கு மாறுவேடம் அணிவித்துவிடாதீர்கள். 

நீங்கள் எல்லோரும் உலக அரங்கில் பேசும்போது, நம் தேசத்திற்கு அழகாக மாறுவேடம் இட்டுக் காட்டிவிடுகின்றீர்கள்! கில்லாடிகள்தான் நீங்கள்! ஆனால், பாருங்கள்! அங்கிருந்து இங்கு வருபவர்கள் நம் தேசத்தின் அழகை அவர்கள் ரசிப்பதற்கிடையில் நீங்கள் காட்டிய மாறுவேஷம் கலைவது தெரிந்து, அங்கு சென்று பேசுவது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான். 

திரைப்படங்கள் சில நம் ஊரின் உண்மையானத் தோற்றத்தை உலக அரங்கில் வெட்டவெளிச்சமாக்கி விருதுகள் பல அள்ளுகின்றனதான்.  நீங்களும் கை தட்டிப் பெருமைப்படுகின்றீர்கள்! இப்போதைய நிகழ்வுகள் கூடப் படமாக்கப்படலாம். எங்களைக் காட்சிப் பொருளாக்கி, விருதுகள் பெற்று அதைப் பெருமையுடன் பேசி மகிழும் நீங்கள் நியாயமாக எங்களுக்கல்லவா விருதுகள் தரவேண்டும்! அப்போதும் நாங்கள் பாமரமக்கள்தான். நாங்கள் எங்கள் ஓட்டுகளுடன், இலவசமாக உங்களுக்கு இந்த மகிழ்வையும் தருகின்றோமே!  மகிழ்வாய் இருங்கள்!

எங்களால், நிவாரணம் என்று உங்களுக்குப் பணமும் கிடைக்கின்றது பாருங்கள்! எங்கள் ஓட்டுகளுக்காக நீங்கள் தரும் இலவசங்களுக்கு எங்கள் கைமாறு இது! அதற்காகவாவது இந்த மழைக்கு நன்றி சொல்லுங்கள்! தானைத் தலைவர்களே மகிழ்வாக இருங்கள்!

இந்த வெள்ளத்திற்கும், ஊழலுக்கும் நாங்களும் ஒரு காரணம் ஆகிப்போனோம்தான். பொறுப்பில்லாமல் இருக்கின்றோம்தான்.  அரசன் எவ்வழி அவ்வழி நாங்கள் என ஆகிபோய்விட்டோம். என்ன செய்ய? 

கடிதத்தை முடிக்கும் முன் எங்களிடமிருந்து ஒரு சிறிய வேண்டுகோள். நீங்கள் அறிக்கைவிடும் போது வெள்ளம் என்று இயற்கையை, இயற்கைச் சீற்றத்தைக் குறை சொல்லாதீர்கள். இந்தச் சீற்றத்தின் விளைவுகள் எதனால் என்று நீங்கள் அகழ்வாராய்ந்தால், அதன் "மூலம்" உங்களிடமிருந்துதான் என்பதை அறிவீர்கள்.

பல ஏரிகளும், குளங்களும், ஆற்றுப் படுகைகளும், விளை நிலங்களும் உங்கள் கைகளில் சிக்கி, மணல் வாரப்பட்டு, கண்ணாடிக் கட்டிடங்களாக, பலமாடிக் கட்டிடங்களாக உருமாறியதன் விளைவை நீங்களா அனுபவிக்கின்றீர்கள். சரியான கழிவுக் குழாய்கள் இல்லை, கழிவுக்குழாய்கள் குப்பைகளால் அடைந்திருக்க, மழைநீர் வடிகால்வாய்கள் இல்லை. விளைவை நாங்கள் பாமரமக்கள்தான் அனுபவிக்கின்றோம். இது போன்ற இயற்கைச் சீற்றங்கள் புதிதல்லவே. நீங்கள், “மூலம்” எது என்று ஆராயாமாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் சுயநலவாதிகள். நீங்கள் சுயநலவாதிகளாக இல்லாதிருந்தால் இன்று தமிழகம் இயற்கைச் சீற்றத்திலும், (இரு) தண்ணீரிலுமே தத்தளிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது. தயவாய்......இயற்கையைப் பழிக்காதீர்கள்! நாங்களும் பழிக்க மாட்டோம்.

இப்படிக்கு,

ஒவ்வொரு முறையும் “அம்மா, தலைவா” என்று உரக்க உரைத்து உங்களை நம்பி ஓட்டளிக்கும் அப்பாவிப் பாமரமக்கள்.

கீதா 

படம்: இணையத்திலிருந்து.  

54 கருத்துகள்:

  1. கண் தெரியாத சுயநலவாதிகளுக்கு காதும் கேட்காது...

    பதிலளிநீக்கு
  2. ஹூம்! என்ன செய்ய முடியும்! இப்படித் தான் புலம்பி ஆறுதல் அடைந்தாக வேண்டும். மறுபடி இன்னொரு மழை வர வரைக்கும் எல்லோருக்கும் எல்லாமும் மறந்து போய்த் தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கி விடுவார்கள்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் சரிதான் சகோ! மிக்க நன்றி வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  3. குளங்கள் தூர்க்கப்பட்டது போலவே வடிகால் நிலங்களும் அழிக்கப்பட்டன.. வேளாண்மையை மறந்த மக்கள் விபரீதத்தை வரவழைத்துக் கொண்டனர்..

    பழியும் பாவமும் இயற்கையின் மீது...

    சிந்திக்க சிந்திக்க - வேதனை தான் மிச்சம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஐயா! இயற்கையைப் பழித்தல் ஆகாது.

      மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...

      நீக்கு
  4. புலம்பல்கள் எப்போதும் தலைவர்கள் காதில் விழாத செய்தி.இயற்கையின் சதி என்றுநினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம்...வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  5. இந்த கடிதம் படிக்க கூட அவர்களுக்கு நேரம் இருக்காது! மோடிக்கு கடிதம் எழுதிக் கொண்டு இருப்பார்கள் வெள்ள நிவாரணம் கேட்டு..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சுரேஷ்! அதுதான் அந்தக் கடிதமும் வந்துவிட்டதே....

      மிக்க நன்றி சுரேஷ்

      நீக்கு
  6. அய்யா!
    அவரவர்க்கு!
    ஆயிரம் வேலைகள்...,?
    ஆயிரம் தேவைகள்...!
    ஆயிரம் சுகங்கள்...?
    ஆயிரம் துக்கங்கள்...!

    இதில் உங்கள் கவலைகளை மட்டுமே..?!
    பிரதானப்படுத்தி ஒரு பதிவிடுவதென்பது
    என்னால் ஏற்க முடியாதது!
    ஏன் வன்மையாக கண்டிக்கத்தக்கது.?!

    எங்கள் ஊரில் மழையில்லை என்று எல்லோரும் புலம்புகையில் !!!
    எங்கள் முயற்சி (மன்னிக்க) எங்கள் அன்பு தெய்வத் தலைமையின் முயற்சியால் ஓஹோவென வந்த மழையினைக்கூட பொறுத்துக்கொள்ளாத தங்களை என்னவென்று சொல்வது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எங்கள் அன்பு தெய்வத் தலைமையின் முயற்சியால் ஓஹோவென வந்த மழையினைக்கூட பொறுத்துக்கொள்ளாத தங்களை//

      ஐயா... இந்த வரி சிரிப்பை வரவழைக்கிறது...

      நீக்கு
  7. இயற்கையை அழித்து விட்டு இறைவனை குற்றம் சொல்லும் மக்கள்.
    இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்ட கதை போல் மக்களின் நிலை
    அரசியல்வாதிகள் என்றும் மாறப்போவதில்லை மக்கள் மாற்றுக்கருத்துக்கு போகாதவரை அடுத்து மழை வந்தாலும் இதே நிலைதான் அன்று யார் ஆட்சி செய்தாலும்
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு....மக்கள் திருந்த வேண்டும்தான்....

      நீக்கு
  8. வணக்கம் சகோ.

    இரண்டே அடியில் வள்ளுவன் சொன்னதுதான் நினைவு வருகிறது,

    செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
    செய்யாமை யானுங் கெடும்.

    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ விஜு தங்களின் அழகாக திருக்குறளுடன் கூடிய கருத்திற்கும் வருகைக்கும்...

      நீக்கு
  9. மழை என்ன செய்யும்
    நமக்காகத்தானே பெய்கிறது
    ஆனால் நமக்குத்தான் புரியவில்லை
    நாம்தான் காடுகளை அடைத்து வீடுகளைக் கட்டிக் கொண்டு,
    வன விலங்குகள்,ஊருக்குள் புகுந்து அட்டகாசம்
    என்று புலம்பித் திரிபவர்களாயிற்றே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தையாரே ஆம் உண்மைதான்...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  10. துன்பம் வரும் நேரத்தில் சிரிக்கச் சொல்லி எந்த நேரத்தில் சொன்னாரோ.. சிரித்துக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது!

    சரபோஜி மன்னன் காலத்தில் இருந்த நீர் மேலாண்மை பற்றி ஒரு கட்டுரை செய்தித் தாளில் படித்து எடுத்து வைத்திருந்தேன். காலம்தான் முன்னேறுகிறது. எண்ணங்களும், நற்செயல்களும் பின்னேதான் செல்கின்றன என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். அந்தக் கட்டுரையை நானும் வாசித்தேன். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்திலிருந்து வயல் பரப்பு வரை நீர் நிலைகள், கால்வாய்கள், மழை நீர் கால்வாய்கள் அத்தனை இருக்குமாம். மழை நீர் எல்லாம் அதில் வடிந்திடுமாம். ஹும் நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். நம் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூட பல நீர் நிலைகளைத் தூர்வாரச் செய்தார். சென்னையில் கூட ஒரு சில இளைஞர்கள் ஒரு சில ஏரிகளைத் தூர்வாரியதாக வாசித்த நினைவு. மக்களும் அரசும் இணைந்து செயல்பட்டால் நன்றாகவே செய்யலாம். ஆனால் சொல்லிப் பிரயோசனமில்லை...அரசு வின் வின் சிச்சுவேஷனைக் கையாண்டால் நல்லது நடக்கும்.

      மிக்க நன்றி கருத்திற்கு

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. சென்னை மழை காட்சிகளை பார்க்க முடியல்ல :(
    கடிதம் படிக்க எங்கே நேரமிருக்கும் அவர்களுக்கேல்லாம் :(
    நீங்க நலமாப்பா கீதா ..உங்க ஏரியாவில் எப்படி நிலைமை
    டேக் கேர்.

    அவரவர் முன் சேர்ந்த குப்பைகளை முடிந்தா நாமே எரிப்பது நல்லது இல்லைன்னா அது அழிகி இன்னும் புதிய நோயை கொண்டுவரக்கூடாது ..சென்னையில் சிஸ்டர் இருக்கா சொன்னா ஊரிலுள்ள குப்பைகளெல்லாம் எங்க வீட்டு வாசலில் குவிந்திருக்காம் :(

    பதிலளிநீக்கு
  12. ஏஞ்சலின் நாங்கள் நலமே! என்ன மெயின் ரோட்டிற்குப் போகும் சாலைகள் தண்ணீர் தேங்கியிருந்தது. காவல்நிலையம் தண்ணீரில் இருந்தது. இன்று எல்லாமே ட்ரெய்ன் ஆகிவிட்டது. சில இடங்களில் ட்ரெயினேஜ் குழிகளில் இருந்து கழிவுநீரை/அடைப்புகளை பம்ப் செய்து எடுத்து ரோட்டிலேயே விட்டதுதான் இன்னும் கொடுமை. அதற்கான ஓடைகள்தான் நம்மூரில் கிடையாதே!

    குப்பைகளை எரிக்க நினைத்தோம் ஆனால் ஈரமாக இருப்பதால் எரிக்க முடியவில்லை. மட்டுமல்ல. இப்போதெல்லாம் விசில் அடித்துக் குப்பைகளை எடுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். ஓரளவிற்குச் சுத்தமாக இருந்தது எங்கள் ஏரியாக்கள். ஒரு குப்பைத் தொட்டியும் இருக்கின்றது. அதில்தான் மக்கள் கொண்டு போடுவார்கள். ஆனால் சென்ற ஒரு மாதத்திற்கும் மேல் அந்தக் குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே கிடந்தன. அவற்றை எரிக்கவும் முடியாது. அதில் இருந்தவை பலவும் ப்ளாஸ்டிக் குப்பைகள். ஈரமான உணவுப் பொருட்கள். எங்கள் வீட்டின் முன் குப்பை இல்லை. எல்லோருமே வாசல் கூட்டிக் குப்பையைக் கொண்டு குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவதால் அது போன்ற பிரச்சனைகள் இல்லை. குப்பைத் தொட்டி காவல்நிலையத்தின் வாசலில் இருப்பதால்....இன்று மாநகராட்சிக்குப் ஃபோன் செய்து ஆட்களை வரவழைத்து எல்லாவற்றையும் எடுத்துச் செல்லச் செய்தோம். அனால் பாருங்கல் எங்கள் வீட்டருகில் உள்ள கடைகள், கல்லூரி வளாகங்கள் குறிப்பாக கேட்டரிங்க் கல்லூரி அதுவும் மத்திய அரசுக் கல்லூரி, அதன் முன் இருக்கும் டீக்கடைகள் சிற்றுண்டிக் கடைகள் குப்பைகளை அங்கேயே வீசிவிடுகின்றார்கள். அவை எல்லாம் அழுகி எவ்வளவு எடுத்துச் சொல்லியும் செய்வதில்லை. இந்தக் குப்பைகள் எல்லாமே பள்ளிக்கரணை ஸ்வாம்பி ஏரியாவின் அருகிலும், வேறு ஒரு ஐடி நிறுவனத்தின் அருகிலும் கொண்டு மாநகராட்சி வண்டிகள் டம்ப் செய்கின்றார்கள். அதுவும் திறந்த வெளிதான் அங்கு சென்றால் ஒரே நாற்றம்தான் வராத வியாதிகள் எல்லாமே வந்துவிடும். அதை யார் எரிப்பது? ...இப்படித்தான் இங்கு நிலைமை.

    மக்களும் அரசும் இணைந்து ஒத்துழைத்தால்தான் செயல்படமுடியும். மட்டுமல்ல ஒரு சில வெளிநாடுகள் போல் இங்கும் அபராதம் கொண்டுவந்தால்தான், ரூல்ஸ் எஃபோர்ஸ்மென்ட் இருந்தால்தான் நம் மக்கள் திருந்துவார்கள் என்ற நிலை ஆகிவிட்டது. இதே மக்கள் அங்கு செல்லும் போது குப்பையை வெளியில் போடுவதில்லையே...இங்கு அவர்களுக்குப் பயமும் இல்லை சுய சிந்தனையும் இல்லை பொறுப்பும் இல்லை...என்ன செய்ய...

    பதிலளிநீக்கு
  13. ஒவ்வொரு முறையும் “அம்மா, தலைவா” என்று உரக்க உரைத்து உங்களை நம்பி ஓட்டளிக்கும் ஏமாளி பாமரமக்களை. அப்படித்தான் இருக்க வைத்து இருக்கிறார்கள் எல்லா கழிசடைகளும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ஹஹ அதேதான்...மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  14. வணக்கம்
    அண்ணா

    நம்மிடம் தேர்தல் காலத்தில் மட்டுமே நமது வாசல் தேடி கை கூப்பி வருவார்கள்.. தேர்தலில் வென்ற பின் நாம சந்திக்க போனால் யாரு என்கேட்பார்கள்... காலம் மாறி விட்டது நன்றாக பலரை சிந்திக்கும் படி எழுதியுள்ளீர்கள் தலைவனுக்கு கேட்குமா? என்று தெரியாது... நாம் அனைவரும் செர்ந்து பொது பணி மூலம் சுத்த செய்ய வேண்டியது....த.ம 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...உண்மைதான்

      நீக்கு
  15. எத்தனை துன்பங்களையும் பட்டியலிட்டு,
    அதனுடன் தலைவர்களையும் இணைத்து,
    கேலி மேலிட அவர்களிடம் பதிவு செய்த விதம்...
    நல்லாத்தான் இருக்கு!

    செவிடன் காதில்........?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ முஹம்மது நிஜாமுத்தீன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...

      நீக்கு
  16. எல்லாம் பணம் என்று ஆனப்பின் மக்களை எங்கு பார்க்கப்போகிறார்கள். 500 கோடி ஒதுக்கீட்டிலும் லாபம் என்றுதான் பார்ப்பார்கள். வழக்கம்போல் மக்கள்தான் ஏமாளிகள். அதிலும் ஏழை மக்கள்தான் பாவம். எந்த வெள்ளமும் வசதி படைத்தவர்களின் வாசலோடு நின்றுவிடும். ஏழை வீடுகளில்தான் வெள்ளம் வீட்டுக்குள் வந்து ஆட்டம் போடும்.
    த ம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உண்மைதான் ...மிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...

      நீக்கு
  17. வெறும் பேச்சு ,வெள்ளை வேஷ்டி கூட்டம் என்று தெரிந்தும் நீங்கள் கோரிக்கை வைக்கலாமா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஹாஹ்ஹஹ் சரிதான் ..மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...

      நீக்கு
  18. தாங்கள் எழுதிய கடிதம் விலாசதாரார் அவ்விடமில்லாதமையால் திரும்பி அனுப்பப்பட்டது.ஹாஹா

    தந்தி அடிச்சுப்பாருங்களேன்பா! ஒரு வேளை போய் சேர்த்தாலும் சேரும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ..அஹ்ஹஹஹ அட! கருத்தை ரசித்தோம் ...
      மிக்க நன்றி நிஷா சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...

      நீக்கு
  19. வார்த்தைச் சவுக்கால் பிய்யப் பிய்ய அடித்து விட்டீர்கள்!! என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இபுஞா சகோ தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும்..

      நீக்கு
  20. ஓட்டுப் போட்ட மக்கள்
    ஓட்டைக் குடிலில் இருக்க
    பொறுக்காத கடவுள்
    மழையைக் கொட்டி விரட்ட
    நாடு தலைகிழாய் சுழல
    மக்கள் வெள்ளத்தில் மிதக்க
    ஓட்டு வாங்கியோர்
    வானூர்தியில் பறந்தால்
    ஓட்டுப் பெறுமதி தெரிகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பா நண்பரே தங்களின் புதுப்பாவுடனான கருத்திற்கு

      நீக்கு
  21. அன்புள்ள சகோதரி,

    மாண்புமிகு தலைவருக்கு தாங்கள் எழுதிய கடிதம் நல்ல சவுக்கடி. உரத்த சிந்தனை.

    இதைப் படிக்கும் பொழுது இந்தப் பாடல் ஞாபகம் வந்தது...

    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
    ஏதோ நானும் இருக்கிறேன் உருப்படியா படிக்கிறேன்
    யாருமில்ல நமக்கு நீ எப்படி இருப்பன்னு நினைக்கிறேன்
    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்!
    பள்ளிக்கூடம் சேர்க்கனுன்னு பாத்திரத்த வித்தீங்களே!
    எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
    அம்மா எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
    புஸ்தகநோட்டு வாங்க பணம் அனுப்புறேன்னு சொன்னீங்களே!
    பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா....
    அம்மா பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா...
    புஸ்தகநோட்டு வாங்கலைன்னு வாத்தியார் தினமும் அடிக்கிறார்!
    வாங்கிக் கொடுத்த பேனாவும் உடைஞ்சு இரவல் வாங்கி எழுதுறேன்
    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......
    கிழிஞ்ச சட்டைக்காரியின்ன... கிண்டலாத்தான் பேசுறாங்க
    ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்
    அம்மா ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்
    தோட்டக்காரய்யா வீட்டுல பழைய சட்டை தருவதா சொன்னீங்களே!
    வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
    நீங்க வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
    விடுதி சோறு புழுவுன்னு வீதியில கொட்டுறாங்க
    நான் மட்டும் தம்பிக்கு ஊட்டுற நெனைப்பில் அழுதுகிட்டே தின்னுக்கிறேன்
    அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......
    கீழாண்ட செவத்தோரம் மறந்தும் போகாதம்மா
    கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
    அம்மா கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
    மேலாண்ட கூரைமேல சாக்கு கிழிச்சுப் போடுங்கம்மா
    மேற்கத்தி மழை அடிச்சுதுன்னா இருக்கும் இடம் நனைஞ்சுடும்
    பாத்திரம் தேய்ச்ச கையெல்லாம் காயமுன்னு சொன்னாங்க!
    நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்தும் போட்டுக்கம்மா!
    நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்தும் போட்டுக்கம்மா!
    நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்துவும் போட்டுக்கம்மா!
    இப்படிக்கு
    உங்கள் அன்பு மகள்
    கோடிஸ்வரி.

    ஏழைபடும் பாடு மேட்டுக்குடிக்கு எப்பத் தெரியப் போவுது?

    த.ம.13





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை அருமை மணவையாரே தங்களின் விரிவான அழகான அர்த்தமுள்ள கவிதையுடன் கூடிய பின்னூட்டத்திற்கு மிக்க மிக்க நன்றி

      நீக்கு
  22. நண்பர்களே,

    இதைவிட ஒரு "இடக்கரடக்கலான" கடிதத்தை எந்த தலைவர்களும் பொறுப்புள்ள அதிகாரிகளும் தங்கள் வாழ் நாளில் பார்த்திருக்கவே முடியாது.

    அருமையான ஆதங்க - கடிதம்.

    சம்பந்தப்பட்டவர்கள் படிக்கணும் மனம் மாறனும் மக்களுக்கு நன்மைகள் வந்து சேறனும்.

    வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை படம் பிடித்து வெளி உலகுக்கு காட்டும் கேமரா முன் பல்லைக்காட்டி கையசைத்து தம் தலை அந்த வீடியோ பதிவில் வரவேண்டும் என்று , நடக்கும் சோகங்களை கனபொழுதில் மறந்து தன்னிலை இழக்கும் பாமரன் இருக்கும் வரை பரமன் வந்தாலும் இங்கு மாற்றம் நிகழ்த்தபடுவது உங்கள் பதிவின் துவக்கத்தில் போடபட்டிருக்கும் அந்த குதிரைக்கு இருக்கும் (??) கொம்புதான்.

    எனது ஒரு வினோத ஆசை: அடுத்து ஒரு தொடர் கனமழை பொழியவேண்டும் தேர்தல் நெருங்கும் ஒரு உச்சகட்ட நேரத்தில். அப்போது வெளுக்கும் சம்பந்தபட்டோரின் சாயங்கள்.

    நீங்கள் எல்லோரும் சுகமா?

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹும் எல்லோரும் எழுதுறோம்தானே கோ! ஊடகங்களும் நன்றாகவே தாக்கி எழுதுகின்றனதான் ஆனால் என்ன நடக்கின்றது சொல்லுங்கள்....

      அட உங்கள் வினோத ஆசை செமையா இருக்கே.....வெளுத்தால் சரி...

      மிக்க நன்றி கோ....

      நீக்கு
  23. இன்றைய நிலைமைக்கு ஆட்சியாளர்களைப் பொறுப்பாக்குவது சரியல்ல என்றே தோன்றுகிறது. மழை பெய்ததால் அல்லவா இத்தகைய வேதனைகள் நிகழ்ந்தன! எனவே மழையை அன்றோ குறை கூற வேண்டும்? குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவேண்டும்? உரிய தண்டனை வழங்கவேண்டும்? ஒவ்வோராண்டும் இதே போல் மிகுதியாக மழை பெய்திருந்தால் அவ்வப்பொழுதே தீர்வுகளும் வந்திருக்குமல்லவா? பத்து அல்லது பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இப்படிக் கொட்டித் தீர்த்தால் என்ன செய்யவேண்டும்- எப்படி மக்களைக் காப்பாற்றவேண்டும் -என்று யாருக்கு நண்பரே நினைவிருக்கும்? - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ உங்கள் நையாண்டி புரிகின்றது...சார் மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு

      நீக்கு

  24. தங்களுககு ஓட்டு பதிவாகிய தகவல் வருகிறது நண்பரே.... நன்றி!!!
    தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... .? நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் தகவலுக்கு. நாங்கள்: அன்றே மின் அஞ்சல் அனுப்பிவிட்டோம்..

      நீக்கு
  25. கீதா மேடம்...
    இது இயற்கையின் சதி என்பார்கள் அவர்கள்...
    இவர்களிடம் காசைப் பொறுக்கிக் கொண்டு நான் ஓட்டை விற்கிறோம்...
    பிறகெப்படி அவர்கள் நமக்கான அரசாக, மக்கள் மேல் பற்றுள்ளவர்களாக இருப்பார்கள்...
    நல்ல கடிதம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி குமார் தங்களின் கருத்திற்கு ஆமாம் நாம்தான் முட்டாள்கள்...ஆட்சி மாற்றம் வந்தால் ஒழிய அதுவும் நல்லாட்சி வந்தால் ஒழிய...

      நீக்கு
  26. வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் அச்சுறுத்தல்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

    உங்கள் கடிதம் நடந்தது கொண்டிருக்கும் பிரச்சினையின் பிம்பம் .

    இதற்கு சீக்கிரம் தீர்வு வர வீண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனிதா சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.....தீர்வு? ம்ம்

      நீக்கு
  27. We are insensible to natural calamities.

    We don't foresee, we gamble with our luck and build our houses wherever possible.

    Governments is corrupt. It always does. But what about us. We occupy all the lakes. drains and we raise such a noise.

    Be the change you want to bring

    before move into a new place check if its not built on a lake.
    if it does avoid it.
    this is what i feel ..
    vote plus

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yes Kasthuri We occupy lakes drains etc...but who gives/gave us the permission to build? there is no law enforcement not only that govt itself has built lot of buildings near lakes and even has built bus stands on the lands which were ponds and lakes once up on a time. we can bring a change ..right ....if the building is already built we can have a check but what will you do the building which is already built? it is already built right? who has built ? not ordinary people...all ...p......well i dont write the word here....

      I agree people are also a part of it. But it is not we people alone....it is the rulers...who ever it is..

      It is sad that we lost and dont have good leaders who are concerned about people....and the land..

      Thanks a lot Kasthuri for your good positive comment...

      நீக்கு
  28. பலரின் ஆதங்கம் சொல்லும் கடிதம் நன்று. ஒவ்வொருவரும் திருந்தினால் தான் நல்லது. அரசாங்கம், மக்கள் என அனைவருக்கும் இந்த அழிவில் பங்குண்டு......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! மிக்க நன்றி வெங்கட் ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...இருவரும் ஒத்துழைத்தால் நல்லது நடக்கும்

      நீக்கு