சனி, 7 ஜூன், 2014

அந்த 276 மாணவிகளைக் காப்பாற்றுங்கள்.....! அவர்களைப் பெற்றோர்கள் கையில் ஒப்படையுங்கள்.........!

     

    
    

     
      
    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், போர்னோ மாநிலத்திலுள்ள, சிபோக் நகர, அரசு ரெசிடென்ஷியல் பொதுப் பள்ளியிலிருந்து கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நள்ளிரவில் 200 க்கும் மேலான மாணவிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டனர். எல்லா மாணவியரும் 12-15 வயதிற்கு இடையே உள்ளவர்கள். இவர்களுடன் 5 ஆசிரியைகளும் கடத்தப்பட்டனர்.  இவர்களைக் கடத்திச் செல்ல இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆயுதமேந்திய 200 பேர் வந்திருந்தனர். 

முகமது யூசுஃப்

          

       அவர்கள், வட நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநிலத்தில், 2002ல், முகம்மது யூசுஃப் என்பவரால் உருவாக்கப்பட்ட “போக்கோ ஹராம் எனும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.  500 க்கும் மேலான மொழிகள் பேசும், 350க்கும் மேற்பட்ட இனத்தவர்கள் வாழும் நைஜீரியாவிலுள்ள, “ஃபௌசா எனும் மொழியில் “மேல் நாட்டு கல்வி கற்பது பாவம் என்பதுதான் “போக்கோ ஹராம் என்பதன் அர்த்தமாம்.  ஏறத்தாழ 17 கோடி பேர் வாழும் நைஜீரியாவின் வட பகுதியில் முஸ்லிம்களும், தென் பகுதியில் கிறித்தவர்களும் அதிகமாக வாழ்கின்றார்கள். 

அபுபகர் ஷெக்காவு

நைஜீரியாவில் “சரியத்தைப் பின்பற்றி ஒரு தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவதுதான், “போக்கோ ஹராம் எனும் இவ்வியக்கதிற்கு உயிர் கொடுத்த முகம்மது யூசுஃபின் நோக்கம்.  யூசுஃபிற்குப் பின் 2009-ல் இவ்வியக்கத்தின் தலைமை பொறுப்பேற்ற “அபுபகர் ஷெக்காவு இதுவரை ஏறத்தாழ 5000 பேரைக் கொன்று குவித்திருக்கிறார்.  மேல்நாட்டு கல்விக் கூடங்களில் பணிபுரிந்த 170க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் ஷெக்காவை எதிர்த்த இஸ்லாமியர்களும் அடக்கம்.  ஏப்ரல் 14 ம் தேதி கடத்திச் செல்லப்பட்ட மாணவியர்களில் ஏறத்தாழ 50 பேர் எப்படியோ உயிர் தப்பி தங்கள் வீட்டை அடைந்திருக்கின்றார்கள். மீதமுள்ள, கடத்திச் செல்லப்பட்ட 276 மாணவியர்களைப் பற்றி இது வரை ஒரு விவரமும் இல்லை. 


 “ஷெக்காவு இதற்கிடையே வெளியிட்ட ஒரு வீடியோவில் கடத்தப்பட்டவர்களில் 136 மாணவிகள் பர்தா அணிந்து குரான் வாசிப்பதைக் காண்பித்திருக்கிறார்.  கடத்தப்பட்ட மாணவிகளில் பெரும்பான்மையானோர் கிறித்தவ மதத்தவர்கள்.  அவர்களை மதம் மாற்றியதாகவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள “போக்கோ ஹராம் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விடுவிக்காவிட்டால், மாணவியர்கள் அனைவரையும் அடிமைகளாக்கி விற்று விடுவேன் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார், ஷெக்காவு.










நைஜீரீயா மக்கள் அனைவரும், இனம், மதம், மொழி பாராமல் கடத்தப்பட்ட பரிதாபத்திற்குரிய மாணவிகள் பாதுகாபாகத் திரும்பிவர வேண்டி பிரார்த்தனையிலும், போராட்டத்திலும் ஈடுபட்டு இருக்கிறார்கள்.  இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், மாணவியர்கள் “போக்கோஹராம் இயக்கத்தால் கடத்தப்படவிருக்கின்றார்கள் என்ற விவரம், கடத்தப்படுவதற்கு 5 மணி நேரத்திற்கு முன்பே, தலைநகரான, ‘மைத்துகுரியிலுள்ள ராணுவத் தலைமையகத்திற்குத் தெரிய வந்ததாம்.  அப்படி இருந்தும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை அரசும், ராணுவமும் எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.  மட்டுமல்ல, இதே பள்ளியில், கடந்த மார்ச் 29 ம் தேதி, 29 மாணவ, மாணவியர்களைப் “போக்கோ ஹராம்  இயக்கத்தினர் கொன்றிருக்கிறார்கள்.  இப்படிப்பட்டச் சூழலில், பள்ளிக்குத் தேவையான பாதுகாப்பு கொடுக்காமலும், “போக்கோஹராம் இயக்கத்துடன் இராணுவம் நேரடி மோதல் நடத்தாமலும் இருப்பது, நைஜீரிய மக்களிடையே பலவித சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜனாதிபதி குட்லக் ஜொனாதன்
        ஏர்மார்ஷல், அலெக்ஸ் பேடாஹ்







நைஜீரியாவின் ஜனாதிபதியான குட்லக் ஜொனாதனும், இராணுவத் தலைவர், ஏர்மார்ஷல், அலெக்ஸ் பேடாஹ்னும், மாணவியர்களைச் சிறை வைத்திருக்கும் இடத்தை அறிந்த பின்னும், “போக்கோ ஹராம் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் போராடி, அவர்களை மீட்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். இதற்கிடையே 50 மாணவியர்களுக்கு, 100 சிறைப்படுத்தப்பட்ட இயக்கத்தினரை விடுவித்தல் என்று முடிவு செய்து, அவர்களை விடுவிக்கத் தயாரான அரசு, ஏனோ திடீரென அதிலிருந்து பின் வாங்கிவிட்டது.  எனவே, கடத்தப்பட்ட 276 மாணவியர் கதி என்னாகும் என்ற ஆதங்கம் நைஜீரியாவிலுள்ள மக்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள நல்ல இதயம் படைத்தவர்களின் மனதை வேதனைப்படுத்துகிறது.  இதற்கு எதிராக, ஃபிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் நடவடிக்கைகளில் இறங்கிய செய்தி கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.  எப்படியோ, மாணவிகள் காப்பாற்றப்பட்டால் போதும்.


உலகிலுள்ள எல்லா மதங்களிலிருந்தும், மிகவும் எளிமையான, மனித நன்மைக்கும், இறையருளை எளிதாகப் பெறுவதற்கும் தேவையானவற்றை எல்லாம் உட்படுத்தி, நபிகள் நாயகத்தால் உருவாக்கப்பட்ட, மனிதநேயம், சமத்துவம், தியாக மனப்பான்மை போன்ற குணங்கள் எல்லாவற்றிற்கும் வழிவகை செய்யும், மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையே பிரார்த்தனை ஒன்றைத் தவிர புரோகிதர்களின் மந்திர தந்திரங்கள் அவசியமில்லை எனும் உண்மையை நிலை நாட்டிய இஸ்லாம் மதம், வேத நூலான குரானில் 176 வாகியங்களில் பெண்களின் நலன் மற்றும் பாதுகாப்பைப் பற்றி விவரிக்கும் இஸ்லாம் மதம், பெண்களுக்குக் கல்வி கற்கத் தடை விதிக்கிறது என்பதை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது. 
                                       மலேசியாவில் 
துருக்கியில் 



Pictures courtesy : google                                                                  
உலகெங்கிலுமுள்ள 60க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளில், துருக்கி, மலேஷியா போன்ற நாடுகள், முன்னேற்றத்திற்குத் தேவையான மாற்றங்களை, மதத்திற்குக் களங்கம் ஏற்படாத விதத்தில் புகுத்தி முன்னேறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் மேன்மையான மதத்திற்குக் களங்கம் ஏற்படாதா?  உலகெங்கிலுமுள்ள அம்மதத்தின் தலைவர்களுக்கு, இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும், அவசியமும் மிகவும் தேவை அல்லவா?.

எல்லா மதங்களும் – மதங்கள் என்றால் மதங்களைக் கையாளும் ஆண்கள் – பெண்களுக்குச் சம உரிமை வழங்குவதில் ஏனோ முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  “தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.....என்று சொல்லும் இந்து மதம் கூட, பெண் மணமாகும் வரை தாய் தந்தையர்களுக்கு பணிவிடை செய்தும், மணமான பின் கணவனுக்கு பணிவிடை செய்தும், அதன் பின் மரணம் வரை குழந்தைகளுக்கு பணிவிடை செய்தும் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றது.  ஏராளமான மனைவியருடன் வாழ்ந்த தசரதரையும், அர்சுனனையும், கிருஷ்ணரையும் போற்றிப் பாடும் நம் புராணங்களும், சில காலம் சிறைவைக்கப்பட்ட சீதையின் கற்பைச் சந்தேகித்து, நிறைமாத கர்பிணியான அவர் கானகத்திற்கு அனுப்பப்பட்டதை ஆமோதிக்கத்தானே செய்கின்றன! இப்படி, எக்காலத்திலும் ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதிதான் உலகெங்கிலும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.















இப்போது பெண்கள் சம உரிமை பெற்று சாதனை புரிந்து வாழும் மேலை நாடுகளில் கூட, கடந்த ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்படவில்லை. 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேய்ன் ஆஸ்டின் (Jane Austen) எனும் முதல் நாவலாசிரியை, நீண்டகாலம், தான் ஒரு பெண் என்பதை மறைத்து வைத்துத்தான் தன் புதினங்களை (Pride and Prejudice) எழுதிவந்தார்.  மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, பெண்களுக்குச்  சுதந்திரம் வழங்கும் அமெரிக்கா சென்றுதான் தன் லட்சியத்தை நிறைவேற்றினார்.  பஞ்சாப் பொறியியல் கல்லூரியில், ஆண்கள் மட்டும் பயின்றுவந்த ஏரோனாட்டிக்கல் பொறியியல் துறையில் சேர அவர் நீண்ட போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.


எனவே, பெண்களுக்குக் கல்வி அறிவு பெற தடைவிதிக்கும் இது போன்ற செயல்கள் எங்கு நடந்தாலும், எதன் பெயரால் யார் செய்தாலும் அது கண்டனத்திற்குரியதே.  அதை, சாதி, மதம், இனம், மொழி, நிறம் என்று வேற்றுமை பாராமல் எல்லோரும் ஒருங்கிணைந்து எதிர்த்துக் குரல் கொடுத்து ஆவன செய்தால் கண்டிப்பாக மாற்றம் வரும். பெண்கள் சம உரிமை பெற உதவ வேண்டும்! மட்டுமல்ல, கடத்தப்பட்ட மாணவியரைத் தீவிரவாதிகளிடமிருந்துக் காப்பாற்றினால் மட்டும் போதாது, அவர்களிடமிருந்து இஸ்லாம் மதத்தையும் மாசுபடாமல் காப்பாற்ற வேண்டும்! இந்து மதமும், கிறித்தவ மதமும் புரோகித வர்க்கத்தால் பலவீனப்படுத்தப்பட்டது போல், “போக்கோ ஹராம் போன்ற தீவிரவாத இயக்கத்தால், உலகிலுள்ள மற்ற மதங்களைப் போல் அதிக காலம் உயிர் வாழ வேண்டிய இஸ்லாம் மதம் பலவீனம் அடைந்துவிடக் கூடாது.  பெர்ட்ரன்ட் ரஸ்ஸலின் கருத்துப்படி மதங்களின் ஆயுள் கூடிப்போனால், 5000 வருடங்கள் என்பதை இங்கு நினைவு கூறுவோம்!


28 கருத்துகள்:

  1. வணக்கம்

    இந்த செய்தி பல இணையத்தளங்களில் செய்தியாக வந்து நான் பார்த்தேன்...வலைப்பூக்களில் எழுதும் நண்பர்கள் யாரும் இதை பதிவாக எழுதியதில்லை தங்களின் துணிச்சளையும் ஆதங்கத்தையும் விளங்கிக்கொள்ளமுடிகிறது இந் மாணவர்கள் மீண்டும் வீடுதிரும்ப நாம் எல்லோரும் இறைவனைப்பிறாத்திப்போம் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    த.ம +1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தம்பி ரூபன்! தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  3. என்ன கொடுமை இது ! மதங்களின் பெயரால் இப்படிக்கூட கொடுமைகள்
    இளைக்கப்படுகின்றனவா ?! அறிவு என்பது பொது உடமை இதை ஏன் ஆண்
    பெண் பாகுபாடு பார்த்துத் தடை செய்ய வேண்டும் ?...பெண்கள் படிப்பறிவு
    அற்று விளங்குவதால் எந்தத் தெய்வத்திற்கு என்ன லாபம் ?....உலகெங்கிலும்
    பெண்ணினத்திற்கு எதிராக நடை பெறும் வன் கொடுமைகளில் இதுவும்
    ஒரு மாபெரும் கொடுமையே ! விரைவில் அந்த மாணவிகள் விடுதலை
    அடைய வேண்டும் தங்களைப் போன்ற நல்ல இதயம் படைத்த உறவுகளின்
    வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்க்க வேண்டும் .வேதனையான இச்
    செய்தியை வெளியிட்ட தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரா :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவு புகட்ட பாகு பாடு என்பது மிகவும் கொடுமைதான் சகோதரி! மிக மிக அருமையான கருத்தைச் சொன்ன சகோதரிக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  4. உணமை தான் தான். அவர்கள் யாரும் எந்த மதமும் விரும்பி படிப்பவர்களை தடுத்தல் கூடாதுதான் இவை பாவமும் குற்றமுமே. இதை அனைவரும் கவனம் எடுக்கவே வேண்டும். விழிப்புனர்வை ஏற்படுத்தியமைக்கு நன்றி! வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் நல்ல கருத்திற்கு!

      நீக்கு
  5. நம்ம ஊர்லயும் அப்படியா நடக்குது? எல்லா இடங்களிலும் ஆண்கள் பயந்து கொண்டிருப்பதாகத் தானே தகவல் வருகிறது.. ;)

    Jokes apart, இந்த விஷயத்துல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை நான் முன்னோடியா பார்க்குறேன்.. அங்கே ஆண் பெண் ங்கிற பாகுபாடு டாய்லெட்டில் மட்டும் தான் இருப்பதை பார்க்கிறேன். ஆங்கிலேயர்கள் நம் நாட்டுக்கு வந்தபோது "சதி ஒழிப்பு", "விதவை மறுமணம்" போன்றவற்றிற்கு அப்போதே ஆதரவு தெரிவித்து இருந்ததை படித்திருக்கிறேன். நிச்சயம் இன்னும் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான/ பெண்களைத் தாழ்வாக நினைக்கும் ஒரு போக்கு இருந்து கொண்டு தான் இருக்கின்றது (மலாலாவின் புத்தகத்தை படிக்க வேண்டும் என்றிருக்கிறேன்..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஅ ஆவி! ஆண்கள் பயப்படுவதும் நடக்கத்தான் செய்கின்றது....என்ன ....% குறைவு அப்படித்தான் நினைக்கின்றோம்!

      கண்டிப்பாக மேலை நாடுகள் பற்றித் தாங்கள் கூறியிருப்பது சரியே! கண்டிப்பாக மலாலாவின் புத்தகத்கம் படிக்கப் படவேண்டிய ஒன்றுதான்! பெண்களைத் தாழ்வாக எண்ணுவதில் ஒருவேளை தமிழ்நாடும், கேரளாவும் அதிகம் இல்லை என்றுதான் தோன்றுகின்றது.....வட இந்தியாவில் பல மாநிலங்களில், நகரங்களைத் தவிர, தென்னகத்தைவிட அதிகம் கொடுமைகள் நடப்பதாகத்தான் தெரிகின்றது!

      மிக்க நன்றி ஆவி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  6. பதில்கள்
    1. பாவிகள்தான் DD! நம்ம ஊர் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகின்றாதோ!!!
      நன்றி DD!

      நீக்கு
  7. மதங்கள் இப்படி கண்மூடித்தனமாக பின்பற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை! வேதனையான செய்தி! விரைவில் கடத்தப்பட்டவர்கள் மீட்கப்பட வேண்டும்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ்! கண்மூடித்தனமான பழக்கவழக்கங்களும், மூட நம்பிக்கையும்தான் நமது அடுத்த தலைமுறையினர்க்கு கடவுள் நம்பிக்கை என்பதை இழக்கச் செய்கின்றது! அதுவும் இது போன்ற மனிதர்க்ள் செய்யும் கொடுமைகள்!

      நீக்கு
  8. போக்கோ ஹராம்” என்ற காட்டு மிராண்டிகளிடம் மதம் மட்டுமல்ல மலர்களை போல உள்ள இந்த குழந்தைகளும்தான் மாட்டிக் கொண்டு அவஸ்தை படுகிறார்கள் என்பது மிக வருத்தம் தருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மதுரைத் தமிழா! தங்கள் வருகை சந்தோஷமாக இருக்கின்றது

      குழந்தைகளை நினைத்தால்தான் மிகவும் வேதனையாக இருக்கின்றது! எப்படி மீட்கப்படுவார்கள் என்று தெரியவில்லை அந்த காடுமிராண்டிகளிடமிருந்து...

      நீக்கு
  9. என்ன சார் இந்த பதிவு சொல்ல வந்த விஷயத்தை ஆரம்பித்து அப்புறம் சிறிது தடம் மாறி மீண்டும் ஆரம்ப இடத்தில் வந்து முடிந்ததை போல எனக்கு தோன்றுகிறது... உங்களிடம் நான் இந்த பதிவின் மூலம் நான் பார்ப்பது நிறைய் விஷயங்களை சொல்லும் ஆர்வம் தெரிகிறது. ஆனால் அதை ஒரே பதிவில் சொல்ல முயற்சிக்கிறீர்கள். அதனால் பதிவில் சொல்ல வந்த விஷயத்தில் இருந்து சிறிது விலகிப் போவதாகவே எனக்கு தோன்றுகிறது கவனம் தேவை... நான் அதிகப்பிரசங்கி தனமாக சொல்வதாக நினைத்தால் மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சரிதான் மதுரைத் தமிழா! கொஞ்சம் ஆர்வம் தலை தூக்கி விட்டது! கண்டிப்பாக இனி கவனமாக இருக்கின்றோம்! எதற்கு மன்னிப்பு? தாங்கள் நல்ல விஷயத்தைத்தானே அக்கறையோடு சொல்லி இருக்கின்றீர்கள்! தற்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும் தங்களுக்கு! இது போன்ற விமர்சனம்தான் எங்களுக்கு மிகவும் தேவை! எங்கள் எழுத்தைச் செம்மைப் படுத்த!

      மிக்க நன்றி! தங்கள்

      நீக்கு
  10. வணக்கம் ஐயா
    கொடுமையிலும் கொடுமை. மதங்களின் பெயரைச் சொல்லி மனிதர்கள் மதம் பிடித்தவர்களாக திரிவது வேதனையிலும் வேதனை ஐயா. சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுத்தால் நலமாக இருக்கும். இப்பதிவு தங்களின் கருணை உள்ளத்தைப் படம் பிடித்து காட்டியுள்ளது ஐயா. பகிர்வுக்கு நன்றிகள்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் என்ற பாவ மன்னிப்பு திரைப்படத்தில் உள்ள பாடல் எப்பொதோ பல வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒன்று என்றாலும் இப்போதும் அது பொருந்தி வருகிறது என்றால் இன்னும் மனிதர்கள் முன்னேறவில்லை என்றுதானே தோன்றுகின்றது?!

      மிக்க நன்றி தமிபி!

      நீக்கு
  11. வெகு விரிவான கட்டுரை..

    பெர்டினென்ட் ரஸ்ஸல்
    முகநூலில் பகிர்ந்துள்ளேன்

    http://www.malartharu.org/2013/03/blog-post_4114.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மது! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்! பெர்டினென்ட் ரஸ்ஸல் பார்க்கிறேன் முக நூலில் தங்கள் முகவரி இதேதானா ?

      நீக்கு
  12. ''மதத்தில்'' தவறில்லை அவன் புரிந்துகொண்ட ''விதத்தில்'' தான் தவறு ஐயா. அந்தக்குழந்தைகள் வீடு திரும்பும் என நம்புவோமாக...
    Killergee

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர் ஜி சரிதான்......மதங்கள் எல்லாமே நல்லதைத்தான் கூறுகின்றன! மனிதன் தான் அதன் மேலேறி ஆடுகின்றான்! ஆடிவிட்டுப் போகட்டும்....குழந்தைகள் நல்லபடியாக வீடு திரும்பவேண்டும் அதுதான் முக்கியம்! நம்புவோம்!

      மிக்க நன்றி கில்லர் ஜி!

      நீக்கு
  13. மதம் குறித்த கட்டுரை இடையில் ட்ராக் மாறி பெண்கல்வி பேசி மறுபடி மதத்திற்கு வந்துவிட்டதோ?! ஆனால் ஒரு நல்ல ஆசிரியருக்கு இருக்கும் மனிதநேயம் புலப்படுகிறது!
    மதமென்னும் பேரால் மறுபடி காட்டு வாழ்க்கையை நோக்கி செல்லும் இவர்கள் போன்றவர்களை என்ன தான் செய்வது:((
    பெண்கல்வி இன்றும் பெரும் போராட்டமாய் தான் இருக்கிறது:(
    ஜேன் ஆஸ்டன் நாவல்கள் நம் ரமணி சந்திரன் நாவல்களை போல இருப்பாதாக எனக்கு தோன்றும் சகா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! சகோதரி! கொஞ்சம் மாறியதுதான்....அது பொதுவாக உலகில் மதமும், பெண் கல்வியும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதாக இருப்பதால் அப்படி மாறி விட்டது!

      ஜேன் ஆஸ்டன் - ரமணிசந்திரன்?ம்ம்ம்ம்ம்ம் ரமணி சந்திரன் நாவல் வாசித்ததில்லை சகோதரி! பார்ப்போம்!

      மிக்க நன்றி!

      நீக்கு
  14. நான் அமெரிக்காவைப் பற்றி எழுதும்போது நீங்கள் ஆப்ரிக்காவைப் பற்றி எழுதுகிறீர்கள் ! விரிவாக எழுதியுள்ளீர்கள். ஆப்ரிக்காவில் மனித உயிர்களுக்கு மதிப்பே கிடையாது என்பது தெரிந்த விஷயம் தானே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் தற்போது அமெரிக்காவில் இருந்து கொண்டு எழுதுகின்றீர்கள்!!!!! நாங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு ஆப்ரிக்காவைப் பற்றி எழுதுகின்றோம் சார்! நீங்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவதையும், கூரிந்து பார்த்ததையும் எழுதுகின்றீர்கள்! நாங்கள் வாசித்ததை வைத்துத்தான் எழுதுகின்றோம்! சார்! ஆகையால் வித்தியாசம் இருக்கும்!

      ஆனால் உலகறிந்த விஷயம் தான் ஆப்பிரிக்கவில் உள்ள பல நாடுகளில் உயிருக்கு மதிப்பு இல்லை என்பது! அதுவும் இந்த நூற்றாண்டில் உலகம் முன்னேற்றத்தில் எங்கேயோ நோக்கிச் செல்லும் கால கட்டத்தில் இப்படியும் நாடுகள் இருக்கின்றதை நினைத்தால் ஆச்சரியம் ஒரு புறமும், எதிர்கால சந்ததியினரை நினைத்தால் வருத்தம் இன்னொரு புறமும் வரத்தான் செய்கின்றது!

      மிக்க நன்றி சார்!

      நீக்கு
  15. மனம் பதைக்க வைத்த செய்தி இது. சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் பார்த்த போதே, மனித உருவில் இருக்கும் அவர்களின் மீது கோபம் வந்தது. தொடர்ந்து இது போன்ற செய்லகளைச் செய்யும் அவரளுக்கு எந்த வித தண்டனையும் இல்லையே.... :(

    பதிலளிநீக்கு