எங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா,
அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இடுகைக்குப் பல கோணங்களில்
பின்னூட்டங்கள் வந்திருந்தன. சாதி ஒழிய வேண்டும் என்று எண்ணினாலும், நினைத்தாலும்,
பலர் பல பக்கங்கள் எழுதினாலும், மேடை போட்டுக் குரல் கொடுத்துப் பேசினாலும், அது
ஒழிவதாகத் தெரியவில்லை. ஒழியப்போவதும்
இல்லை, அரசியல்வாதிகளும், அரசாங்கமும் தங்கள்
சுயலாபத்திற்கு வேண்டி, இந்தச் சாதிப் பிரிவுகளை ஆதரித்துப் பிரிவினையைத்
தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும்வரை. இந்தச்
சாதி எப்படி விளையாடியது என் மகனின் வாழ்வில் என்ற அனுபவம் தான் இந்த இடுகை. நண்பர்
மூங்கில் காற்று முரளிதரன் இட்டப் பின்னூட்டக் கருத்தைப் பார்த்தவுடன் நான் என்ன
எழுதி வைத்திருந்தேனோ அதே கருத்து, அதில் என் மகனின் அனுபவம் பிரதிபலித்ததால் அதை
இங்கு பகிர்கின்றேன்.
பொருளாதாரப் பின்னணியின் அடிப்படையில் தான்
கல்வியிலும் சரி, வேலை வாய்ப்பிலும் சரி இட ஒதுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டது.
முற்பட்டோர், பிற்பட்டோர் என்று. இந்த ஒதுக்கீடு நியாயமானதே. ஆனால், அது சாதி
சார்ந்ததாகிப் போனதுதான் மிகவும் வேதனை. பிற்பட்டோர்
என்பதிலேயே பல பிளவுகள் ஏற்பட்டு தாழ்த்தப்பட்டோர் என்றெல்லாம் சாதி அடிப்படையில்
பிரிவுகள் ஏற்பட்டன. மலைவாழ் மக்களுக்கு என்று ஒரு பிரிவும் உண்டு. மிகவும் நியாயமானது. சாதி அடிப்படையில் மாறிப்
போனபின், முற்பட்டோரிலும் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியோர் உண்டு. அதே
போன்று பிற்பட்டோரிலும் செல்வந்தர்கள்
உண்டு. ஆயினும், நடைமுறையில் நடப்பது என்னவென்றால், இந்த ஒதுக்கீட்டால் பல ஏழைகள்,
திறமை மிக்கவர்களாக இருந்தாலும், எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பயன்
பெற முடியாமல் போவதுதான்.
பல பணக்காரர்களும், அரசியல்வாதிகளும்,
தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மருத்துவப் படிப்பிலும், பொறியியல்
படிப்பிலும், தங்கள் பதவியையும், சாதியையும் காட்டி பல சலுகைகள்
பெற்றுவிடுகின்றனர். இறுதியில் எஞ்சுபவர்கள்
முற்பட்டோர் பிரிவினைச் சேர்ந்தவர்கள்.
இந்த முற்பட்டோரில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர
ஏனையோரில் பலர், தங்களுக்குள் இருக்கின்ற உப பிரிவுகளில் எது பிற்பட்டோர்
பட்டியலில் வருகின்றதோ அதைத் தேர்ந்தெடுத்து அந்தச் சாதிப் பிரிவு சான்றிதழ்
பெற்றுவிடுகின்றனர். சான்றிதழில் இருப்பது ஒரு சாதி-கல்வி, வேலை வாய்ப்பு
போன்றவற்றிற்கு உதவும் ஒன்று. வேறு
தருணங்களில், திருமணம் என்று வரும் போது சொல்லப்படுவது அவர்களது உண்மையான சாதி.
என் மகன் 12
ஆம் வகுப்பு முடித்து, கால் நடை மருத்துவத்திற்கு விண்ணப்பித்த போது, தேசிய அளவிலானச்
சேர்க்கைக்கு வாங்கிய விண்ணப்பத்திலும் சரி, தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தில்
வாங்கிய விண்ணப்பத்திலும் சரி, இணைக்கப்பட்டிருந்த சாதிப் பட்டியலைப் பார்த்து
மலைத்து தலை சுற்ற ஆரம்பித்தது. அன்றுதான் முதல் தடவை இத்தனை சாதிகள் இருந்தப்
பட்டியலைப் பார்க்க நேர்ந்தது. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் அவனுக்குக்
கிடைக்கவில்லை. அது மிகவும் கடினமான
ஒன்று. மகனுக்கோ அதற்குத் தயார் செய்ய
வேண்டும் என்றால் குறைந்தது ஒரு வருடமேனும் தேவை.
தமிழ்நாடு கால்நடை மருத்துவத்திற்கு, 12
ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கவுன்சலிங்க் அழைப்பு வந்தது. கற்றல் குறைபாடு
இருந்தும் அவன் 87% வாங்கியிருந்தான். அதுவும் இயற்பியல், வேதியியல், உயிரியல்
மூன்றும் சேர்ந்து. கவுன்சலிங்க் சென்றோம். 40 இடங்கள் ஓசி கேட்டகிரி. அது ஓபன்
காம்பெட்டிஷன். யார் வேண்டுமானலும் அதில் சேர்க்கப்படலாம். அப்படியான பட்டியலில்
என் மகனின் தரம் 41. எனவே காத்திருப்பு
பட்டியலில் 1 ஆம் தரத்தில் இருந்தான்.
நாங்கள் நினைத்தோம் வெயிட்டிங்க் லிஸ்ட் 1 என்பதால் யாரேனும் – நிச்சயமாக
40 பேரில் 30 பேருக்கும் மேல் விட்டுவிட்டு, பொறியியல் இல்லை மருத்துவம் சென்று
விடுவார்கள். எனவே கிடைத்து விடும் என்பது உறுதி என்று. அங்கு குழுமி இருந்த மாணவ, மாணவிகள் அதைத்தான்
பேசிக் கொண்டனர். பெரும்பாலோரது விருப்பம்
கால்நடை மருத்துவம் அல்ல. ஆனால், எனது
மகனின் விருப்பம் அது மட்டுமே. படித்தால்
கால் நடை மருத்துவம். நோ காம்ப்ரமைஸ். இல்லையேல் ஜூவாலஜி பிரிவு எடுத்துப்
படித்துவிட்டு 3 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கால்நடை மருத்துவம்
விண்ணப்பிப்பதில் உறுதியாக இருந்தான். ஆனால், அதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது,
இந்த சாதி முட்டுக்கட்டையாக இருப்பதால்.
நாங்கள் அங்கிருந்த கவுன்சலிங்க்
குழுவினரிடம் சென்று கேட்டோம். அவர்கள்
சொன்ன பதில் இதுதான். “வெயிட்டின்க் லிஸ்டில் 1 ஆம் தரத்தில் இருந்தாலும்
கிடைக்கும் என்று சொல்ல முடியாது. 40 க்குள்
யாரேனும் ஒருவர் விட்டாலும், பிஸி பட்டியலில் முதலில் யார் உள்ளாரோ அந்த மாணவர்/வி
உள்ளே செல்வார். பிஸி பட்டியல்
முன்னேறும். அப்போது அங்கு ஒன்று
காலியாகும் அதில் பிசி யிலிருந்து ஒன்று ஏறும்...இப்படி ஏணிகள் ஏறுவது போல மற்ற
பிரிவுகளும் ஏறும். இறுதியில் சீட்
வேகன்சி இருந்தால் உங்கள் மகனுக்குக் கிடைக்கலாம். இதில் “லாம்” என்பதுதான் சொல்லப்பட்டதே
அல்லாமல் “க்கும்” என்று சொல்லப்படவில்லை.
மகனுக்கு,
சென்னையில் நல்ல கலைக் கல்லூரிகள் என்று பட்டியலிடப்பட்ட எல்லா கல்லூரிகளிலிருந்தும்
(விண்ணப்பத்திருந்ததால்) சேர்வதற்கான கடிதம் வந்தது. சென்னை கிறித்தவக்
கல்லூரியில் ஜூவாலஜி பிரிவில் சேர்ந்தான். 2 ஆம் வகுப்பிலிருந்து கனவு கண்டு வந்த கால்நடை
மருத்துவம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், எந்த தகவலும் வரவில்லை. இதற்கிடையில், எங்கள் நலம் விரும்பி, அனிமல்
ஆக்டிவிஸ்ட் ஒருவர், மகனின் கனவு பற்றியும், திறமை பற்றியும் அறிபவர் என்பதால்,
அவர் என் ஆர் ஐ கோட்டாவில் முயற்சி செய்யச் சொன்னார். தமிழ் நாட்டில் இதே கோட்டாவில் முயற்சி
செய்யலாம், ஆனால், ஃபீஸும் அதிகம், அதற்கான வழி முறைகளும் மிகவும் கடினம். அவர், பாண்டிச்சேரி கால்நடை மருத்துவக் கல்லூரி
மத்திய அரசின் கீழ் வருவதால், ஆனால் வேறு மாநிலமானதால், அங்கு என் ஆர் ஐ
கோட்டாவில் முயற்சி செய்யலாமே, தமிழ்நாட்டை விட ஃபீஸ் கொஞ்சம் குறைவுதான், மகனது
விருப்பம் நிறைவேறுமே என்றார். ஆனால்,
மகன் அதற்கான ஃபீஸும் மிகவும் அதிகம் என்பதால் தன் அப்பா கஷ்டப்படுவார் என்று
அதற்கான நுழைவுத் தேர்வு எழுத மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான்.
இதற்கிடையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப்
பல்கலைக் கழகம் இருக்கும் மாதவரத்திற்கு, மகனின் நிலைமை என்ன என்று விசாரிக்கச்
சென்றோம். அங்கும், அதே பதில்தான், “There is a
chance for a chance” என்று.
உறுதியில்லை என்றனர். மகன் அழத் தொடங்கிவிட்டான். “நான் ஆர்வத்துடன்
படித்து நல்ல ஒரு மருத்துவனாக வர முடியும் ஆனால் இந்த சாதி என்பது என்னை ஏன்
இப்படிப் பாடாய் படுத்துகின்றது” என்று.
பாண்டிச்சேரியில் விண்ணப்பிக்க அவனைச் சமாதானப்படுத்தி, அதற்கு இறுதித்
தேதி அன்று, விண்ணப்பிக்கும் நேரம் முடியும் தருவாயில், விண்ணப்பித்தோம். நுழைவுத்தேர்வு எழுதினான். இரண்டாம் இடம். சீட் கிடைத்தது என் ஆர் ஐ ஸ்பான்சார்ட்
கோட்டாவில் (NRI) வெளிநாட்டில் இருப்பவர் மகனைப் படிக்கவைத்துப்
பணம் கட்டுவது போன்று, ஆனால் ஃபீஸ் கட்டுவது நாம்தான். வருடம் 2 லட்சம்
ஃபீஸ். டொனேஷன் அல்ல. அது தவிர
புத்தகங்கள், ஹாஸ்டல், மெஸ், இதரச் செலவுகள். மகனுக்கு ஹாஸ்டல் கிடைக்கவில்லை.
மேலும் மகனுக்குக் கற்றல் குறைபாடு இருந்தமையால், படிக்க நிறைய நேரம் எடுத்துக்
கொள்வான் என்பதாலும், சிறியதாக ஒரு அறை, சமையல் அறை இருக்கும் வீடு எடுத்துத்
தங்கினோம், நானும், மகனும். ஃபீஸ் முதல்
வருடம் மட்டுமே கட்ட முடிந்தது. பின்னர் லோன்தான். அங்கு ஃபீஸ் கட்டுவதற்கு
முன்னும் கூட, தமிழ் நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் உறுதியாகச்
சொல்லவில்லை. பாண்டிச்சேரி வாசம். 5
வருடப் படிப்பு. நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைத்தோம். மகனுக்குத் திறமை மிகவும் உண்டு. இதை நான்
இங்கு பெருமையாகச் சொல்லவில்லை. என் ஆதங்கம். கவுன்சலிங்கில் கிடைத்திருந்தால்,
வருடத்திற்கு ரூ 15,000 மட்டுமே ஃபீஸ் + இதரச் செலவுகள் + சென்னையிலேயே.
பாண்டிச்சேரியில், கல்லூரியில்
சேர்ந்த புதிதில், இவன் மிகவும் வெள்ளை
நிறத்தவனாக இருந்ததாலும், பெயர் வட இந்தியப் பெயர் (அவனது அப்பா உபயம்) போல
இருந்ததாலும், இவன் தமிழனல்ல என்று நினைத்துத் தமிழ் மாணவர்கள் பேசவில்லை. பின்னர் இவன் தமிழன் என்று தெரிந்த பிறகும்,
இவன் வொயிட் க்ராஸ் சமூகமோ என்று பேசாமல் இருந்தனர். மகன் என்னிடம் வந்து
கேட்டான், “ஏன் என்னுடன் யாரும் பேசுவதில்லை? நான் இன்ன சமூகம் என்று எப்படி, நான்
சொல்லாமல் இவர்களுக்குத் தெரிகின்றது?” என்று. நான் என் மகனை சிறு வயதிலிருந்தே, எங்குமே
சாதி பேசக்கூடாது, அரசியல் பேசக்கூடாது, யாராவது அசைவ உணவைக் கொண்டு வந்து உன்
முன் சாப்பிட நேர்ந்தாலும், முகம் சுளிக்காமல், அவர்கள் மனம் நோகும்படி நடந்து
கொள்ளாமல், அவன் கொண்டு செல்லும் உணவை உண்ண வேண்டும் என்றும் அவனுக்குச் சொல்லி
வளர்த்தேன்.
சென்னையில் இருந்தவரை
தெரியவில்லை. அதனால், அவனுக்கு வியப்பாக இருந்தது. பின்னர் இவன் நடந்து கொள்ளும்
முறை, இவனது குணம், திறமை, வகுப்பில் பதிலளிக்கும் புத்திசாலித்தனம், அறிவு,
செமினார் நடத்தும் திறமை எல்லாம் வகுப்பு முழுவதையும் இவனுடன் இணைத்தது. பின்னர், தினமும் நண்பர்கள் கூட்டம்தான்
வீட்டில். சாப்பாடு, டிஃபன் என்று களை கட்டும். ஆனால் பாண்டியிலும் சரி, சென்னையில்
வேலை பார்த்த கிளினிக்கிற்கு வரும் க்ளையன்ட்ஸும் சரி, மகனின் நிறத்தை வைத்து, தோளின்
மீது கை போடுவது போல போட்டுப் பார்த்து இவனது சமூகத்தை அறிய முற்படுவார்கள். ஏனென்றால்
இவனிடம் சாதி கேட்டால், இவன் சொல்லும் பதில், “நான் மனித சாதி” என்பது மட்டுமே
அல்லாமல், தன் சாதியை சொல்லவே மாட்டான். அதனால் அவன் தனது வொயிட் க்ராசை எடுத்தே
விட்டான். எனக்கு சாதி இல்லை என்று சொல்லி.
என் முழு ஆதரவுடன். வீட்டில்
மிகுந்த எதிர்ப்புகள். இன்னும் தொடரத்தான் செய்கின்றது. எங்களைப் புரிந்து கொண்டு
அன்பாக இருப்பவர்களைத் தவிர. எங்கள் இருவருக்கும் அதைப் பற்றிக் கவலையுமில்லை.
சரி, 5
வருடம் முடித்தாயிற்று. மிகவும் நல்ல
பெயர் எல்லா பேராசிரியர்களிடம் இருந்தும்.
“நல்ல திறமையான டாக்டர்” என்ற பெயர்.
எழுதுவது கடினம் அவனுக்கு.
படிப்பதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்வான். அவ்வளவே.
ஆனால் அறுவை சிகிச்சை என்றால் பெர்ஃபெக்ட். தொழில் சம்பந்தமான செமினாரில்
இவனது பேப்பர் மெச்சப்பட்டு முதல் பரிசு இப்படிப் பல + கள். அவன் விரும்பியதும்
அறுவை சிகிச்சையில் மேற்படிப்பு. மீண்டும்
தேசிய அளவிலான மேற்படிப்பிற்கு பரீட்சை எழுதி தேசிய அளவில் 80 வது தரம். எல்லோரும்,
அவனது பேராசிரியர்கள் உட்படச் சொன்னது அவனுக்குக் கிடைத்துவிடும் என்று. அவன் படிக்க விரும்பியது பஞ்சாப் கால்நடை
மருத்துவக் கல்லூரியில். டெல்லிக்குப்
பயணம் கவுன்சலிங்கிற்காக. அப்போது, 36
கல்லூரிகளில் ஒரு சில, அறுவை சிகிச்சை பாடம் அந்த வருடம் கொடுக்கவில்லை. ஒரு சில,
இவர்களது பட்டப்படிப்புச் சான்றிதழ் வரும் தேதிக்கு முன்னரேயே வகுப்புகள்
தொடங்கப்பட இருந்ததால் சேர முடியாத நிலை. எல்லா கல்லூரிகளிலும் சரி, எஞ்சியிருந்த
கல்லூரிகளிலும் சரி, தமிழ்நாடு உட்பட, ஒவ்வொரு கல்லூரியிலும் 2 இடங்களே. அதுவும்
ஒன்று ஒதுக்கப்பட்ட இடம். மற்றொன்று ஓசி பிரிவு.
பொதுவாக
அறுவை சிகிச்சைப் பிரிவு எடுப்பவர்கள் மிகவும் குறைவு. காலையில் கவுசலிங்க்
ஹாலுக்குச் சென்று பார்த்த போது அறிவிக்கப்பட்ட இடங்கள்தான் மேலே சொன்னது. முதலில்
ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு உரியவர்கள், தரத்தின் அடிப்படையில் அழைக்கப்பட்டார்கள். அண்டர்
டெவலப்ட் மாநிலத்தவர்க்கும் – வட கிழக்கு மாநிலத்தவர்க்கும், கோவா வைச்
சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை உண்டு. இது நியாயமானதே. இறுதியில்தான் ஓசி பிரிவு தரத்தின்
அடிப்படையில், அதிலும் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு உரியவர்கள், அண்டர் டெவ்லப்ட்
மாநிலத்தவர்கள், தங்களுக்கான பிரிவில் கிடைக்கவில்லை என்றால், ஓசி கேட்டகிரியுடன்
போட்டி போடலாம். கவுன்சலிங்க் ரிசல்ட் வெளியாகும் போர்டை பார்த்தால் அதிர்ச்சி. காலையில்,
எஞ்சியிருந்த கல்லூரிகள் காட்டிய தங்களது 2 சீட்களையும் கேன்சல் செய்திருந்தது/நிரப்பப்பட்டுவிட்டது
என்று காட்டியது. சென்னைக் கல்லூரியில் ஒரு இடமே காட்டப்பட்டது. மாணவர்களிடையே
சலசலப்பு. என் மகன் அடிக்கடிச் சொல்லி நகைப்பது “அம்மா நாம ஓசி கேட்டகிரிதான் ஆனா
நமக்கு எதுவுமே “ஓசி” கிடையாது” என்று. மகன் வெளியில் வந்த போதுதான், நாங்கள்
அறிந்தது அந்த 2 சீட்களும் வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டுவிட்டது என்று.
இத்தனைக்கும் அவர்களின் தரம், 400 க்கும் மேல். அறுவை சிகிச்சை இல்லை என்றாலும், காம்ப்ரமைஸ்
செய்து கொண்டு, மெடிசின் கிடைக்குமா என்று பார்த்திருந்திருக்கின்றான். அதுவும் இல்லை என்றாகியது.
என் மகன்
அன்று அழுத அழுகை அங்குக் கூடியிருந்த அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. நான் என்னை மிகவும் கட்டுப்படுத்திக்
கொண்டேன். “நான் என்னம்மா தப்பு பண்ணினேன்?
இந்தச் சாதியில பிறந்தது என் தப்பா?
நீயும், நானும் ஒரு நாள் கூட சாதி பார்த்ததே இல்லையேமா. எனக்குப் படிக்கத்
தகுதி இல்லையா? திறமை இல்லையா? இந்த வொயிட் க்ராஸ்தான் (பூணூல்) எனக்கு சீட்
கிடைக்கத் தடைனா இந்த வொயிட் க்ராஸை இங்கயே அறுத்து எறியறேன்மா. எனக்கு சீட் தரச்
சொல்லுமா” என்று. என்னிடம் பதில் இல்லை.
மகனின் நண்பர்களும் மிகவும் வருத்தப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே சொல்லிக் கொண்டுதான்
இருந்தனர், இவன் தாங்கிக் கொள்ள மாட்டான் என்று. 22 வயது பையன் அழுதது ஆச்சரியமாக
இருக்கின்றதல்லவா? அவனுக்கு அவனது
படிப்பும், கனவும் அத்தனை மனதில் வேரூன்றிய ஒன்று. பின்னர் அவனைச் சமாதானப்
படுத்தி அழைத்துவந்தோம். 10 நாட்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தான்.
கிடைக்கவில்லை என்பதைவிட, சாதியினால் தனக்குக் கிடைக்கவில்லையே என்ற வருத்தம். அரசு
வேலைக்கான விளம்பரம் வந்தது. ஆனால், அங்கும் இதே சாதிப் பிரச்சினை. அவன் படிக்கும்
போது கிராமங்களுக்குச் சென்றதால், அவன் விரும்பியது, கிராமங்களில் உழவர்கள்
மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் மாட்டிற்கு நல்ல மருத்துவர்கள் இல்லாமல் எனவே
அதில்தான் ஸ்பெஷலைஸ் செய்ய வேண்டும் என்றும், பல ஆர்வமுள்ள கால்நடை மருத்துவ மாணவர்களுக்குச்
சாதி பாராமல் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும். ஆனால், அதை மேற்கொள்ள வழியில்லாமல்
போயிற்றே என்று.
பின்னர்,
சென்னையில் மிகவும் அருமையான கிளினிக்கில், மிகவும் நல்ல மருத்துவரிடம் 1 1/2
வருடம் அசிஸ்டெண்டாகப் பணியாற்றிவிட்டு, அங்கும் டாக்டரிடமும், மக்களிடமும்
மிகவும் நல்ல பெயர் எடுத்துவிட்டு, என் முன்னேற்றத்திற்குத் தடையான இந்தச் சாதியுள்ள
நாடு எனக்கு வேண்டாம் என்று, நார்த் அமெரிக்கன் வெட்னரி லைசன்ஸ் பெற வேண்டி, அம்மாவாகிய
என்னை ஒரு தோழியாகக் கருதி, மிகுந்த பாசத்துடனும், நேசத்துடனும் இருந்த எனது ஒரே
மகன், என்னைப் பிரிய மனமின்றி, இருந்தாலும், அவனும் இந்த சமூதாயத்தில் ஒரு நல்ல மருத்துவனாகப்
பணியாற்ற வேண்டும் என்றும், மேற்படிப்பில் ஸ்பெஷலைசேஷன் செய்துவிட்டு, தனித்
தன்மையுடன் இங்கு மீண்டும் வந்து, கிராமங்களுக்கும், உழவர்களுக்கும் தன்னால்
இயன்றவரை மாடுகளுக்குக் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனும், பல
இன்னல்களுக்கிடையில் அனுப்பியுள்ளோம். இந்தப் பரீட்சை 4 நிலைகள் கொண்டது, முதலில் இந்தியாவிலிருந்தே ரெஜிஸ்ட்ரேஷன்
முடித்து, இரண்டாவது, மூன்றாவது பரீட்சைகளை - ப்ரோமெட்ரிக் - Basic clinical
exam, North American Veterinary License Exam –இங்கேயே எழுதி கிளியர் செய்துவிட்டு, இறுதிக் கட்டமான Clinical
Proficiency Exam ற்காக, கானடா சென்று அதற்கான படிப்பையும், அங்கு கால்நடை
மருத்துவத்தில் மேற்கொள்ளப்படும் முறைகளைக்
கற்று, அங்கும் மிகவும் நல்ல பெயர் எடுத்து, இந்த மிகவும் கடினமான
இறுதிக்கட்ட பரீட்சையை பாஸ் செய்துவிட்டான். - 3 நாட்கள் – காலை 6 மணிக்கே அந்த
செண்டருக்குள் சென்றால், மாலை 6 மணிக்குத்தான் வெளியில் வர முடியும். யாருடனும் பேசக் கூடாது. எல்லாமே கேமராவில் பதிவாகும் - (எல்லாமே
செய்முறை. டயக்னாசிஸ், சர்ஜரி, அனஸ்தீசியா, ஸ்கானிங்க் அண்ட் எக்ஸ்ரே, குதிரை,
மாடு, ஆடு, நாய்/பூனை, இப்படி எல்லாம் கடந்து,).
இப்போது
ஸ்பெஷலைசேஷன் செய்வதற்காக, இன்டெர்ன்ஷிப் கிடைப்பதற்காகக் காத்திருக்கின்றான். கிடைக்க
வேண்டும். அதுவும் அதிர்ஷடம் என்ற ஒன்று இருந்தால்தான்.
இப்போது அமெரிக்காவில் விசிட்டர் விசாவில் இருந்து கொண்டு “சாதி பார்க்கும்
நாட்டிற்கு நான் வரவேண்டுமா அம்மா” என்று கேட்டுக் கொண்டு, இன்டெர்ன்ஷிப்பிற்குக்
காத்திருந்தாலும், அவன் முன் இருக்கும் தற்போதைய பிரச்சினை வொர்க் பெர்மிட் – H1B visa கிடைப்பது! காத்திருக்கின்றான் இன்டெர்ன்ஷிப் ரிசல்ட் அறிய. நானும்
காத்திருக்கின்றேன்! அவன் பலவற்றைக்
கற்றுக் கொண்டு, அவனது கனவான, மிகவும் உயர்வாகக் கருதப்படும் டிப்ளமேட் ஆஃப்
அமெரிக்கன் காலேஜ் ஆஃப் வெட்னரி சர்ஜரி (DACVS) மற்றும்,
டிப்ளமேட் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் வெட்னரி அனஸ்தீசியா அண்ட் அனல்ஜீசியா (DACVAA)
பட்டங்களைப் பெற்று, இங்குள்ள மாடுகளுக்குச் சிசிச்சை செய்வான் என்றும், பல மாணவர்களுக்குப்
பயிற்சி அளிப்பான் என்ற நம்பிக்கையிலும்!
சாதி அன்றும், இன்றும்,
பொதுவாகத் துன்பத்தை மட்டுமே தருகின்றது. அன்று திறமையுள்ளவர்கள் பலரையும் பிற்பட்டவர்கள்
என்று முத்திரை குத்தி அவர்களைத் தள்ளி வைத்தது. இன்றும், தொழில் நுட்ப வளர்ச்சிகள்
விண்ணை எட்டினாலும், அதே சாதி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பல திறமை மிக்கவர்களைத்
தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சாதி நம்
இந்தியாவில் மட்டும்தான் உயிர் வாழ்ந்து பலரது உயிரையும் எடுத்துக் கொண்டிருக்கின்றது. இது எங்கள் அனுபவம் மட்டுமல்ல. பலருக்கும். திறமைக்கு மதிப்பில்லாத காரணத்தினாலும், சாதியினாலும் தான் பல மாணவர்கள் வெளிநாடு செல்ல முற்படுவது. என்று தணியும் இந்தச் சாதிக்
கொடுமை?
- கீதா (மன்னித்து விடுங்கள். இடுகை நீ......ளமாகிப் போனதற்கு.)
பின் குறிப்பு : நண்பர்களே! என்னை மன்னித்து விடுங்கள்! தங்கள் மனதை, நான் எந்த விதத்திலேனும்
புண்படுத்தியிருந்தால், வருத்தியிருந்தால். நான் எந்த சாதீயத்தின் அடிப்படையிலும் எழுதவில்லை. சில பின்னூட்டங்கள் என் மனதை மிக மிக மிக வேதனைக்குள்ளாக்கியது என்பது உண்மை.
ஏனென்றால், என் எண்ணம், செயல்கள் சாதீயம் சார்ந்ததல்ல என்பதாலும், இட ஒதுக்கீடினால்
எத்தனை நன்மைகள் விளைந்துள்ளன என்பதையும் நான் அறிந்திருந்ததாலும், சாதியே வேண்டாம் என்று சொல்லும் நாங்கள், விவாதத்திற்கு எங்கள் தளம் மாறிவிட என் இடுகை வழிவகுத்து விட்டதோ என்ற
காரணத்தினால் அதை நீக்கி விட்டேன் எங்கள் தளத்திலிருந்து. பின்னர், எங்கள் மதிப்பிற்குரிய கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்கள் அன்புடன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, எல்லோருடைய கருத்துக்களையும் மதிக்க வேண்டும் என்றும் இதை வெளியிடுகின்றேன். இடுகை யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் வருந்துகின்றோம். முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்