செவ்வாய், 24 ஜூன், 2025

சில்லு சில்லாய் - 23

 

சில்லு - 1 - சிறிய பின்னோட்டம் + முன்னோட்டம்

ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் பற்றி எழுதிய போது. திரிரங்க யாத்திரை என்று, ஸ்ரீரங்கப்பட்டினம், மத்யரங்கம், ஸ்ரீரங்கம் மூன்று கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்கும் பயணம் இருப்பதாகச் சொல்லியிருந்தேன், உங்களுக்கு நினைவிருக்கலாம்! 

நாங்கள் அப்படிக் குழுவில் எல்லாம் செல்வதில்லை. ஆனால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 4, 5 முறை சென்றதுண்டு. எந்தக் கோவிலுக்குச் சென்றாலும், கோபுரங்கள், சிற்பங்கள், அழகுக் கலைவடிவங்கள் எடுக்க ஆசைப்படுவேன். ஆனால் அப்போதெல்லாம் கையில் கேமரா கிடையாது. 2013 ல் பயன்படுத்தப்பட்ட கேமரா - நிக்கான் கூல்பிக்ஸ் ஒன்று எனக்கு வந்தது. அது அப்போதுதான் தளம் தொடங்கிய புதிதும் கூட எனவே எடுத்த படங்கள் எல்லாம் அவ்வப்போது பகிர்ந்திருப்பேன். அது கேடாகியதும், சோனி சைபர் ஷாட், இதுவும் Used one.

2019ல் நெருங்கிய உறவின் மகனின் திருமணத்திற்குக் குடும்பமாக ஸ்ரீரங்கம் சென்ற போது திருமணம் முடிந்து ஊருக்குக் கிளம்புவதற்கு முன் கிடைத்த 45 நிமிட அவகாசத்தில் என் மைத்துனர், கோவிலின் கோபுரங்கள் அனைத்தும் ஒருசேரப் பார்க்கலாம் என்று சொல்லி எங்களை அழைத்துச் சென்றார். எந்த சாமியையும் பார்க்கவில்லை. அவசர அவசரமாக ஓடி ஓடிச் சென்றோம், சுற்றினோம். நான் ஒரு சில க்ளிக்கினேன். 



அப்போது அந்த சோனி கேமாரா கையில் இருந்தது. அது போதுமே எனக்கு. விடுவேனா? முடிந்தால் படங்கள் எடுத்துவிடுவோம் என்று கோவிலின் கோபுரங்கள் மட்டுமின்றி, கீழே வெளியில், மண்டபத்தில் தூண்கள், ஒரு சில சிற்பங்கள், என்று எடுத்துப் பதிவாகவும் போட்டேன்இப்படிப் படங்கள் எடுப்பது தற்போது என்றில்லை. கேமரா கையில் கிடைத்த பின் எப்போதுமே, எல்லா வகையான படங்களுடன், இவ்வகையானக் கலைவடிவங்களையும் படங்கள் எடுக்க மிகவும் பிடிக்கும், வழக்கமும் கூட. அப்படி முன்பு எடுத்தவற்றைப் பகிர்ந்த சுட்டிகள் கீழே. பார்க்காதவர்களுக்கு...இங்கு இரண்டு படங்கள்தான் கொடுத்திருக்கிறேன் சாமபிளாக. மீதியை சுட்டிகளில் பார்க்கலாம். அழகான கோபுரங்கள், மண்டபங்கள்....

கோபுர வாசலிலே - 1 - ஸ்ரீரங்கம்

கோபுர வாசலிலே - 2 - ஸ்ரீரங்கம்

கோபுர வாசலிலே - 3 - ஸ்ரீரங்கம்

கோபுர வாசலிலே - 4 - ஸ்ரீரங்கம்

அப்படி மூன்று ரங்கங்கங்களிலும் ஸ்ரீரங்கம் ஓவர். சமீபத்தில் ஆதிரங்கம் ஸ்ரீரங்கப்பட்டினம் ஓவர். நம்ம வீட்டில் மத்தியரங்கமும் பார்த்திடலாம் என்றதும் (பல வருடங்களுக்கு முன் போனவைதான்), நான் அதோடு, சிவனசமுத்திரமும், தலக்காடும் (நெடுங்கால ஆசை அது ஏனென்றால் சிற்பங்களுக்காகவே) எல்லாமே அருகருகேதான் என்பதால் பார்க்க வேண்டும் என்று சென்ற போது எடுத்தவை பதிவாகப் போட படங்கள் தொகுக்க வேண்டும். ஒரு சாம்பிள் இதோ...

தலக்காடு - வைத்தியநாதேஸ்வரர் கோவில்

இப்படி, பதிவுலகம் வரும் முன்னும் கூட, மகாபலிபுரம், சில கோவில்கள் என்று எடுத்தவற்றைப் பதிவுகள் போடவில்லை. எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கில் இருக்கும் அப்படங்களை எடுக்க முடிந்ததென்றாலும் பதிவாகப் போடப் போவதில்லை. படங்களை மட்டும் அவ்வப்போது பகிர்கிறேன்.

**********************

சில்லு - 2 - இந்த நெகிழிப் பொருட்கள் பிரச்சனை தொடர்கதை...

நெகிழிப் பொருட்கள் கூடாது என்று தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறதுதான். ஆனால் தீர்வு தான் சரியாக இல்லை. ஒருபக்கம் நெகிழிப் பொருட்கள் கூடாது என்று சொல்கின்றனர். ஆனால், நெகிழிப் பொருட்கள் கடைகள் பெருகிக் கொண்டேதான் இருக்கின்றன. பால் பாக்கெட்டுகள்? கண்ட கண்ட இடங்களின் அதுலும் நாகருக்குப் பால் ஊத்துகிறேன் என்று பாக்கெட் கொண்டு வந்து ஊற்றி அருகிலேயே போடுவதை அருகில் உள்ள கோவில்களில் பார்க்கிறேன்.

இந்த அறிவிப்பை பல இடங்களிலும் வைத்திருந்தார்கள். நான் இந்த இடத்தில் படம் எடுத்ததன் காரணம் பின்புறத்தில் இருக்கும் அழகிய வடிவிற்காக.

இப்ப, இங்கு நெகிழிப் பொருட்களுக்குத் தடை, கோயில்கள் உட்பட வீட்டருகில் உள்ள கோவிலில் அறிவிப்பு வைத்திருந்தார்கள். (அதில் இருக்கும் ஆங்கிலத்தைக் கண்டுக்காதீங்க. பொருள் புரிந்துவிடும்).


வலப்பக்கம் உள்ள படத்தில் ஒரு பெண்மணி பூஜை செய்கிறார். கை மட்டும் தெரியும் மற்றவற்றை மறைத்துவிட்டேன்


அறிவிப்பைப் பார்த்ததும், கோவிலின் வெளி மதில் ஓரத்தில் இருக்கும் மரம், அருகில் ஒரு சாலையில் இருக்கும் மரம், முந்தைய பதிவு ஒன்றில் சொல்லியிருட்ந்த பூங்காவில் புற்றுகள் இவை எல்லாம் நினைவுக்கு வந்தன. மரத்திற்கும், கரையான் புற்றுகளுக்கும் அதைச் சுற்றியும் நடக்கும் atrocities களுக்கு பிபிஎம்பி முடிவு கட்டினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இப்படியான நம்பிக்கைகள் தனிநபர் சார்ந்தவை. அதை இப்படி வெளிப்படுத்தி, பொது இடங்களை அசுத்தப்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும். 

************************

சில்லு - 3 - இது என்ன என்று தெரிகிறதா?

இந்த மரங்கள்/அதில் தொங்குபவை என்னவென்று தெரிகிறதா? (நானே கீழ சொல்லிவிட்டேனே!!!!!) நடைப்பயிற்சி செல்லும் பல பூங்காக்கள் ஒன்றில் இவை. ஒரு நாள் அங்கு வந்த குடும்பத்தில் பெரியவர்களே அதைப் பறித்திட, உடனே குழந்தைகளும் அதைப் பறித்தன. அப்படிப் பறிக்கலாமா, கூடாதா, ஏதேனும் விதிமுறைகள் உண்டா என்று தெரியவில்லை. அவர்களைத் தவிர பூங்காவுக்கு வரும் யாரும் இதை எல்லாம் தொடுவதில்லை. பொதுவாக யாரும் பறிப்பதில்லை. அப்படினா இவற்றை யார் பயன்படுத்துவாங்க? பூங்காக்களைப் பராமறிப்பவர்களா இல்லை விலைக்குப் போகுமா? தெரியவில்லை.



அத்திப் பூத்தாற் போல - அதாவது அத்திப்பூ அந்தக் காயிற்குள்ளேயே மறைந்து இருப்பதால் பூவைப் பார்ப்பது அரிது பூவும் காயும் ஒன்று. அத்திப்பழம்/காய் என்பது ஒரு பூதான், அது சிறிய உருண்டையாகக் காய் போலவே பூத்து, அது பூவாக இருந்து, அவை பெரிதாகிக் காய் போல வந்து அப்புறம் பழமாகிவிடும். ஒரு காலத்தில் பணக்காரர்களின் பழம் என்று சொல்லப்பட்ட இது இப்போது பரவலாக மக்கள் வாங்கக் கூடிய விலையில் கிடைக்கின்றன என்று சொல்லப்பட்டாலும் மத்தியதரக் குடும்பங்கள் வரைதான் எட்டும். 

சரிங்க, அத்திப் பூ போல பதிவு போடும் நானும், அடுத்த பதிவுக்குப் படங்களைத் தொகுக்க வேண்டுமே! அடுத்த பதிவில் சந்திப்போம். அதற்குள் துளசி, அவர் பதிவை ரெடி செய்துவிட்டார் என்றால் அது வரலாம்...


------கீதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக