பாலக்காட்டில், நான் ஆசிரியராகப் பணியாற்றிய மாத்தூர் CFDVHS பள்ளியில் 2000-2002 ல் வணிகவியல் படித்த மாணவ மாணவியர் ஒரு சந்திப்பு நிகழ்வை, 2025, ஃபெப்ருவரி மாதம் 2 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தார்கள். தற்போது பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அந்த Batch ல் படித்த மாணவியான ராதிகா என்னைத் தொடர்பு கொண்டு பங்கெடுக்க வேண்டும் என்று சொன்னார்.
முந்தைய சில சந்திப்புகளுக்குச் செல்ல முடியவில்லை என்பதால் இந்தச் சந்திப்பை ஒட்டி, குடும்பத்துடன் இரு நாட்கள் பயணத்தைத் தீர்மானித்தேன். கோவையில் படிக்கின்ற என் மனைவியின் தங்கையின் மகன் விவேக் படிக்கும் கல்லூரிக்கு இதுவரை செல்ல முடியவில்லை. அங்கும் சென்று அப்படியே மருதமலை முருகனையும் தரிசித்து முருகனின் அருள் பெற்று வரலாம் என்று முடிவு செய்தேன்.
ஃபெப்ருவரி (2025) 1 ஆம் தேதி காலை கிளம்பி, மனைவியின் தங்கை மற்றும் கணவருடன் மதியம் 1 மணிக்கு, விவேக் படிக்கும் சின்னவேடம்பட்டி CMS கல்லூரியை அடைந்தோம். விவேகையும் அழைத்துக் கொண்டு மருதமலைக்குப் பயணமானோம்.
வழியில் மூங்கில் காடு எனும் ஒரு உணவகத்தில் மதியச் சாப்பாடு. ஒரு சிக்கன் ஃப்ரையும் ஆர்டர் செய்தோம். அது அபத்தம் என்பது சாப்பிட்டு பில் தந்த போதுதான் தெரிந்தது. 6 சாப்பாட்டிற்கு 600 ரூ. சிக்கன் ஃப்ரை ஒன்றிற்கு 600 ரூ! இது போன்ற பயணங்களில் இது போன்ற சிறிய ஷாக்குகள் இயல்புதானே!
அங்கிருந்து மருதமலை. மலை மேல் செல்ல பேருந்து வசதி உண்டு. அதற்கு க்யூவில் நின்று டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். காரிலும் நேராகச் செல்லலாம். எனவே காரில் பயணித்தோம்.
ஷண்முகக் கடவுள் போற்றி! சரவணத்(து) உதித்தோய் போற்றி!
கண்மணி முருகா போற்றி! கார்த்திகை பாலா போற்றி!
தண்மலர் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி!
விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி! போற்றி!
மதிய நேரம் என்பதால் அதிகம் கூட்டம் இல்லை. இறையருளால் நல்ல தரிசனம் கிடைத்தது.
புளியோதரை பிரசாதம் கிடைத்தது. அதோடு முருக பகவானின் பஞ்சாமிருதமும், லட்டு மற்றும் அதிரசமும் வாங்கினோம். ஒவ்வொன்றும் ரூ 50 மட்டும்.
அதன் பின் நேராகப் பாலக்காடு வந்தடைந்தோம். அங்கு PWD தங்கும் விடுதியில் ஏற்கனவே அறைக்குப் பதிவு செய்திருந்ததால் செக்கின் செய்தோம்.
அதன் பின் பாலக்காடு கோட்டை மைதானத்திலுள்ள ஹனுமான் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தோம். பிரசாதமும் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, அறைக்குச் சென்று நல்ல ஓய்வும் உறக்கமும்.
மறு நாள் காலை 7 மணிக்கு எல்லோரும் குளித்து ரெடியானோம். அறை 11 மணிக்கு செக்கவுட் செய்ய வேண்டும்.
கொல்லங்கோடு மற்றும் சீதார்குண்டு காட்சிகளைக் காணொளியில் காணலாம்
மகள், கொல்லங்கோடு செல்ல வேண்டும் என்று சொன்னதால் கொல்லங்கோடு நோக்கி பயணம். அங்கு கொல்லங்கோடு வியூபாயின்ட் மற்றும் சீதார்குண்டு கண்டு திரும்ப முடிவு செய்தோம். கொல்லங்கோட்டுக்குச் செல்லும் அழகான சாலை. இருபுறமும் பாலக்காட்டுக்கே உரித்தான வயலும் பனைமரங்களும். அருமையான காட்சிகள்.
8 மணிக்கு அங்கு சென்றடைந்தோம். அப்போதே அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள். அழகிய வயல் வெளிகள். தூரத்தில் தெரியும் மலைகள்.

அதனிடையே எல்லோரது கவனத்தையும் ஈர்த்த அந்த ஓடு வேயப்பட்ட ஒற்றை வீடு. அந்த வீட்டின் முன்பு அந்த வீட்டுடைமையாளர் வேசு அம்மா நின்று கொண்டிருந்தார். அவர் பஞ்சாயத்தில் தன் வீட்டை மேம்படுத்திக் கட்டிக் கொள்ள நிதி உதவிக்கு விண்ணப்பித்திருக்கிறாராம். அது கிடைத்து அங்கு ஒரு நல்ல வீடு உருப்பெறலாம். ஆனால், அதன் பின் கொல்லங்கோட்டின் வயல் வீடாய் மக்கள் மனதில் பதிந்த அந்த வீடு ஒரு பழைய நினைவாக மாறிவிடும்.
அங்கிருந்து சீதார்குண்டு (அருவி) நோக்கி ஒரு சாகசப் பயணம். பாறைகள் நிறைந்த பாதையில் பயணித்தோம். அதன் பின் மலைஅடிவாரத்தில் காரை பார்க் செய்து, 300 மீட்டர் தூரம் மலை ஏறி சீதார்குண்டை அடைந்தோம். அங்கு சென்றடைந்த போது வசீகரமான சீதார்குண்டு அருவி. பெரியதல்ல. சிறிய அருவிதான். அருமையான காட்சி.
அதன்பின் அங்கிருந்து பாலக்காடு நோக்கிப் பயணமானோம். அறைக்குச் சென்று செக்கவுட் செய்து டிஃபன் சாப்பிட்டோம். மற்றவர்கள் ஷாப்பிங் மற்றும் மலம்புழா கண்டு என்னை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வது என்று முடிவு செய்து, நான் மாத்தூர் பள்ளிக்குப் பேருந்தில் பயணமானேன்.
1995 முதல் 2018 மார்ச் வரை என்னுடைய ஒரு பாகமாக இருந்த பள்ளி. இப்போது இப்படி எப்போதாவது விருந்தாளியாய் சில மணி நேரங்கள் வந்து போகும் ஓரிடமாய் ஆகிவிட்டது.
என்னுடன் பணியாற்றிய சக ஆசிரியர் முன்னாள் முதல்வர் உன்னி கிருஷ்ணன், பள்ளி மேலாளர் வந்திருந்தார்கள். 2000-2002 ல் ஒளிவீசும் கண்களும், பாசத்துடனும், புன்னகையுடனும் எப்போதும் வலம் வந்த அந்த மாணவ மாணவியர் இப்போது நல்ல திறன்படைத்த, அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், சொந்த நிறுவன உரிமையாளர்கள், குடும்பத் தலைவிகள், என்று எல்லோரும் அங்குக் கூடியிருந்தார்கள்.
ராதிகா, எல்லோரையும் வரவேற்றுப் பேசி எனக்கு Memento வழங்கினார்.
அதன் பின் ஒவ்வொருவரும் தங்களது இனிய அனுபவங்களைப் பகிர்ந்தனர். மிகவும் மகிழ்ச்சியான தருணம். சிரித்த அவர்களது முகத்தில் முந்தைய பள்ளிப் பருவ முகங்கள் பிரதிபலித்தது. பின் எல்லோரும் உணவருந்தி ஒரு குரூப் ஃபோட்டோவும் எடுத்தோம்.
நான் நிகழ்விற்குச் செல்ல தாமதமானதால் வனத்துறையில் பணிபுரியும் மோகன் தாஸின் புல்லாங்குழல் இசையும் ராதிகா மற்றும் சக ஆசிரியர் சரோஜ் குமார் அவர்களின் பாடல்களையும் கேட்க முடியவில்லை. ஆனால் வாட்சப் குழுவில் பகிரப்பட்ட அவற்றைப் பின்னர் கண்டு களித்தேன். அப்படி பழைய நாட்களை நினைவுக்குக் கூட்டி வந்த அந்த நாளும் ஓர் நினைவாய் மாறிவிட்டது. இனி இந்நாளும் நினைவில்தான்.
இங்கு எனக்கு ராபர்ட் ஃப்ராஸ்டின் கவிதை நினைவுக்கு வருகிறது.
The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep
കൊള്ളാം
பதிலளிநீக்குJayakumar
அடிப்பொலி என்று எழுதி இருக்கிறீர்கள்! சரியா?!!
நீக்குநன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார், கருத்திற்கு.
நீக்குதுளசிதரன்
ஸ்ரீராம்,
நீக்குஜெயகுமார் சார் சொல்லியிருப்பது 'கொள்ளாம்' அதற்கு அர்த்தம் - பரவாயில்லையே நன்றாக இருக்கிறதே என்று.
அடிபொளி - என்றால் மலையாளத்தில் அருமை, அட்டகாசம். இளையவர்கள் பயன்படுத்தும் சொல்.
துளசிதரன்
ஆ... கொள்ளாம் வார்த்தையும் எனக்கு அறிமுகமுண்டு கேட்டோ.. மலையாளம் கொறச்சு வாசிக்கத் தெரியவில்லையாக்கும்!
நீக்குஓ...... கொள்ளாம் வார்த்தையும் எனக்கு அறிமுகமுண்டு கேட்டோ.. மலையாளம் கொறச்சு வாசிக்கத் தெரியவில்லையாக்கும்!
நீக்கு'ஆ' வை எடுத்து விட்டு பொருத்தமாக இருக்கும் என்று 'ஓ' போட்டிருக்கிறேன்!
பதிவு அருமை.
பதிலளிநீக்குமருதமலை முருகன் கோயில் படங்கள் இல்லையே என நினைத்தேன், காணொளியில் இருக்கிறது. தாங்கள் பணிபுரிந்த பள்ளியில் முன்னாள் மாணவர் கூட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்து இருக்கும். அந்த பள்ளியில் பயின்ற இனிய அனுபவங்கள் பகிர்வு கேட்க நன்றாக இருந்து இருக்கும், அது ஒரு இனிய அனுபவம் தான். ஓடு வேயப்பட்ட பழைய ஒற்றை வீடு அழகு தான். புதுப்பித்தால் அதன் பழமை இருக்காதுதான்.சீதார்குண்டு அருவியும் சிறு ஓடை போல ஓடி கொண்டு இருப்பதும் அழகு. போகும் பாதையின் பசுமை காட்சி அருமை.
மருதமலை முருகன் கோயிலுக்குள் கேமராவிற்கு அனுமதி இல்லை என்று தடை விதித்ததால்தான் அங்கு எடுக்கமுடியவில்லை. இல்லையேல் அழகு முருகனைக் காட்டியிருக்கலாம். ஆமாம் பெரும்பான்மையானவற்றை வீடியோக்களாகத்தான் எடுத்தேன். படங்களை விட அதனால் காணொளியில் தான் இருக்கும்.
நீக்கு//ஓடு வேயப்பட்ட பழைய ஒற்றை வீடு அழகு தான். புதுப்பித்தால் அதன் பழமை இருக்காதுதான்//
ஆமாம் ஆனால் அவர்களுக்கும் சில சௌகரியங்கள் தேவைப்படும்தானே. அங்கு இந்த ஒரு வீடுதான்
ஆமாம் பழைய நினைவுகள்.
கொல்லங்கோடு பகுதி முழுவதும் அழகான பகுதி. சீதார்குண்டு எல்லாமே நன்றாக இருக்கும்.
மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு
துளசிதரன்
பழைய நண்பர்களைக் காண்பதே மகிழ்ச்சி. அதிலும் படித்த மாணவ மாணவியரைக் காண்பது, அதிலும் அவர்கள் நல்ல நிலைமையில் இருப்பதைக் காண்பது பெருமிதம்தான்.
பதிலளிநீக்குஆம், நம் மாணவர்கள் நல்ல நிலையில் இருப்பதைக் கேட்பதே ஆனந்தம் அதுவும் அவர்களை நேரில் அவர்கள் முன்னெடுத்துக் காண்பதே பேரானந்தம்.
நீக்குமிக்க நன்றி நெல்லைத் தமிழன்
துளசிதரன்
அழகான இடங்களுக்குப் பயணித்திருக்கிறீர்கள். நீங்கள் பாலக்கோடு என்று குறிப்பிட்டிருப்பது பாலக்காடா?
பதிலளிநீக்குஆம் நெல்லைத்தமிழன், பாலக்காடு தான். தட்டச்சுப் பிழையாக இருக்கும். அதைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. கீதா இதைப் பார்த்தால் மாற்றிவிடுவார்.
நீக்குதுளசிதரன்
(நெல்லை, அது டைப்போ தான். திருத்திவிட்டேன். நன்றி நெல்லை - கீதா)
பயணத்தின் வழியில் பார்த்த அருவி வசீகரமாக இருந்தாலும் ஜில் நீரில் குளித்திருக்கமாட்டீர்கள் (அதற்கான முன்னேற்பாடுடன் போயிருக்க மாட்டீர்கள்)
பதிலளிநீக்குஇந்தப் பதிவைப் பார்த்தபோது என் மாமனார் (அவர் கல்லூரியில் துறைத்தலைவராக, பேராசிரியராகப் பணியாற்றியவர்), கல்லூரிப் பேராசிரியர்களுடன் காணொளியில் பேசிக்கொண்டிருந்தபோது (7 வருடங்களுக்கு முன்பு), நான் யதேச்சயாகப் பார்த்தேன். அவரும் யார் யார் என்று சொன்னார், அதில் எனக்கு கணிதம் எடுத்த பேராசிரியரையும் பார்த்தேன். பேசினேன். அவருக்கு காணொளியில் பார்ப்பதால் சட் என்று தெரிந்திருக்காது. இருந்தாலும் நமக்குப் பாடம் புகட்டிய ஆசிரியர்கள் எந்த வயதாக ஆனாலும், நமக்கு அவர் பாடம் எடுத்தபோது இருந்த முகம்தான் கண் முன் நிற்கும்.
நெல்லைத்தமிழன், உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. ஓ உங்கல் மாமனார் பேராசியர்/துறைத்தலைவராகப் பணியாற்றியவரா! மகிழ்ச்சி.
நீக்குகாணொளியில் முகம் அடையாளம் காண்பது சற்று சிரமமாக இருக்கும். நேரில் பாத்திருந்தால் நினைவு வந்திருக்கும்.
ஆம், ஆசிரியர்களுக்கு சில நேரம் நினைவு இருக்காது. அவர்களுக்கு நன்றாகப் படிக்கும் மாணவர்களையும், கொஞ்சம் அவ்வளவாகப் படிக்காத மாணவர்களையும் நன்றாக நினைவிருக்கும். இடைப்பட்ட மாணவர்களை நினைவில் வைத்திருப்பது கொஞ்சம் சிரமம் தான். அதுவும் எத்தனை பேச்சுகள்.
பயணத்தின் வழியில் பார்க்கவில்லை. கொல்லங்கோடு வியூ பாயின்ட் அருகே இருக்கும் அருவி அதற்கும் சேர்த்து சென்றதுதான். இருந்தாலும் அருவியில் குளிக்கவில்லை. பெரும்பாலும் குளிப்பதில்லை.
மிக்க நன்றி நெல்லைத் தமிழன்
துளசிதரன்
என்னுடைய பெரியப்பா, St.Xaviers College of Educationல் கணிதப் பேராசிரியர். என் மாமனார் St.Xaviers collegeல் ஆங்கிலத் துறைத் தலைவர். இருவருமே நெருங்கிய நண்பர்கள். என் அப்பாவுக்கும் மாமனார் நெருங்கிய நண்பர் (எங்கள் திருமணத்துக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே)
நீக்குஓ ஒருவர் பேராசிரியர், மற்றொருவர் ஆங்கிலத் துறைத்தலைவர் ஆசிரியர்.. இப்படி ஆசிரியர்கள் மூவரும் நட்பு. எல்லோரது அனுபவங்களையும் நீங்களும் கேட்டிருப்பீர்கள் இல்லையா?
நீக்குதிருமணமும் நெருங்கிய நட்பு வட்டத்தில். அருமை.
நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
ஓ ஒருவர் பேராசிரியர், மற்றொருவர் ஆங்கிலத் துறைத்தலைவர் ஆசிரியர்.. இப்படி ஆசிரியர்கள் மூவரும் நட்பு. எல்லோரது அனுபவங்களையும் நீங்களும் கேட்டிருப்பீர்கள் இல்லையா?
நீக்குதிருமணமும் நெருங்கிய நட்பு வட்டத்தில். அருமை.
நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
அருமையான சந்திப்பு...
பதிலளிநீக்குமிக்க நன்றி,
நீக்குஉங்கள் ஆரோக்கியத்திற்க் எங்கள் எல்லோரது பிரார்த்தனைகளும் உண்டு. நீங்கள் மீண்டு வந்து, வலைக்கு வருவதும் கருத்து சொல்வதும் மிக்க மகிழ்ச்சி,
துளசிதரன்
உங்கள் திருமணத்துடன் இந்த உறவும் பலப்பட்டுவிட்டது இல்லையா
நீக்குதுளசிதரன்
மருதமலை நானும் சென்றதில்லை. ("எங்கதான் போயிருக்கே நீ?" என்று கேட்காதீர்கள். சூலமங்கலம் குரலில் 'மருதமலை ஆண்டவனே' பாடல் முதலாவதாகவும், மதுரை சோமு குரலில் 'மருதமலை மாமணியே' பாடல் இரண்டாவதாகவும் நினைவுக்குவ றுகிறது!
பதிலளிநீக்குமருதமலைக்கு நீங்க வந்து பாருங்க பாடல் கேட்டிருக்கிறீர்களோ?
ஸ்ரீராம், நீங்கள் ரிட்டையர் ஆகிவிட்டீர்கள் இல்லையா? இனி இடங்கள் சுற்றிப் பார்க்கலாமே.
நீக்குஇப்போதும் மதுரை சோமுவின் குரல் செவியில் முழங்குகிறது. நீங்கள் சொல்லும் மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க பாடல் கேட்டதாக நினைவில்லை. வந்து பாருங்க என்பது கேட்டது போல் இருக்கிறது. இணையத்தில் தேடிப் பார்த்துக் கேட்கிறேன். அப்போது தெரியும்.
மிக்க நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
6 சாப்பாடு 600 ரூபாய், ஒரு சிக்கன் 600 ரூபாய் - கொடுமைதான். ஆனாலும் சமயங்களில் சாப்பிட வேணும் என்று மனதில் தோன்றினால் சாப்பிட்டு விடவேணும். அங்கு சுவை எப்படி இருக்கிறியாது என்று பார்க்கலாமே...
பதிலளிநீக்குஅசைவ உணவுகளில் எனக்கு அவ்வளவாக ஈர்ப்பில்லை. ஒருவேளை நான் தமிழகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்ததால் இருக்கலாம். ஆனால் என்னுடன் வந்தவர்கள் எல்லோருக்குமே அசைவம் இல்லாமல் முடியாது என்ற மனநிலை உடையவர்கள். குறிப்பாக என் மகளும், விவேகும். அதனால் ஒன்று வாங்கினோம் அவ்வளவுதான்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்.
துளசிதரன்
அசைவம் என்று சொல்லவில்லை. விரும்பினால் அடைந்து விட வேண்டும்! - அடையக் கூடியதாயின்.
நீக்குஆமாம் ஸ்ரீராம், நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். எதையேனும் ஆசைப்படும் போது அடையக் கூடியதாயின் அதை அடைந்து அனுபவித்திட வேண்டும். சரியே.
நீக்குஅது நான் சொன்னது அம்மா இருந்த போது அவ்வளவாகப் பழக்கம் இல்லாததால் எனக்கு ஈர்ப்பிலலை என்று. அதன் பின் சாப்பிட்டாலும் அது இல்லாமல் முடியாது என்பது போன்றதெல்லாம் இல்லை.
நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
ம்ம்ம்... அதிருஷ்டம் இருந்தால் முருகன் கோவிலில் கூட புளியோதரை பிரசாதம் கிடைக்கிறது. மச்சம் பாஸ்.... மச்சம்!
பதிலளிநீக்குகோவில்களில் விற்கும் பிரசாதம் என்பது கோவில் மடப்பள்ளியில் செய்திருந்தால்தான் விசேஷம்.. மற்றதெல்லாம் வியாபாரங்கள்.
நீங்கள் பிரசாதத்தைப் பற்றிச் சொன்னது சரியானது ஸ்ரீராம். திருவரங்கம் கோயிலிலும் பிரசாதம் ஸ்டாலுக்கு வெளியிலிருந்து சிறிய லாரிகளில் வருகிறது. என்ன அநியாயம் பாருங்கள். அதே 'பிரசாதம்' உறையூர் மற்றும் பல கோயில்களில். ஒரே ஃபேக்டரில செய்து வருதுன்னு நினைக்கிறேன்.
நீக்குஉங்கள் கருத்தின் முதல் வரி சிரிப்பை வரவழைத்துவிட்டது. உங்களுக்குக் கோவிலில் புளியோதரை கிடைப்பதில்லை என்று வருந்திய கருத்துகளைப் பார்த்ததுண்டு.
நீக்குகோயிலில் அந்த நேரத்தில் நாங்கள் பார்த்த போது அங்கே மதிய உணவு வழங்குகின்ற அந்தப் பகுதியில் சிலர் உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் அந்த கேட்டில் இருந்தவரிடம் எங்களையும் அனுமதியுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். கேட்டுக் கொண்டிருந்தவர்கள் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்த போது நீங்கள் சொன்ன மச்சம் பாஸ் மச்சம் சிரிப்பு வந்துவிட்டது. அவர்களுக்கும் தோன்றியிருக்குமோ என்று மனதில் வந்தது அதிர்ஷ்டசாலிகள் சாப்பிடுகிறார்கள் என்று! அங்கு அப்படிப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அங்கு புளியோதரை கவுன்டரைக் கண்டேன். ஒருவர் புளியோதரை வாங்கிச் சென்றதைப் பார்த்ததும் நாங்களும் பிரசாதம் பெற்றுச் சாப்பிட்டோம். புளியோதரை கோவிலில் செய்தது. அதுதான் பிரசாதம்.
அதன் பின் தான் அந்த பிரசாதம் ஸ்டால் லட்டு, பஞ்சாமிருதம் அதிரசம் எல்லாம் வாங்கினோம். இது வியாபாரம் தான்.
நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
ஆமாம் நீங்கள் சொல்லியிருப்பது போல் மடப்பள்ளியில் செய்வதுதான் பிரசாதம் ஆனால் அது எல்லோருக்கும் எல்லா நேரமும் கிடைக்காதே. எனவே கோவில்களில் இது போன்ற பிரசாத ஸ்டால்களில் கிடைப்பதை பிரசாதமாக எண்ணி இறைவா என்று சொல்லி சாப்பிட வேண்டியதுதான்.
நீக்குதுளசிதரன்
அந்த ஒற்றை வீட்டை சற்று தூரத்திலிருந்து அதன் அழகியலோடு படம் பிடித்திருக்கக் கூடாதோ.. சூப்பராக இருந்திருக்குமே...
பதிலளிநீக்குஒருவேளை படம் எடுத்து, இதில் இணைக்க விடுபட்டிருந்தால் அதையும் சேர்க்கவும்.
அந்த வீடு 2, 3 ஸ்டில்ஸ்தான் எடுக்க முடிந்தது. அதை இங்கு பகிர்ந்துள்ளேன் என்று நினைக்கிறேன்.
நீக்குஇப்படி ஆர்வமுடன் கேட்பது உற்சாகம் தருகிறது.
நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
மன்னிக்கவும் துளஸிஜி.. இது போன்ற விழாக்களுக்கெல்லாம் நேரத்தோடு செல்ல வேண்டாமா? அதுவும் வழிகாட்டும் ஆசிரியர்... வருத்தப்படாதீர்கள். தோன்றியது, சொல்லி விட்டேன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லியிருப்பதை முழுவதும் ஏற்கிறேன், ஸ்ரீராம். நேரத்திற்குச் செல்ல வேண்டும் என்பது நம் கடமை, அதுவும் ஆசிரியனான நான். அன்றைய சூழல் அப்படியாகிப் போனது கொல்லங்கோடு சென்று திரும்புவது 11 மணிக்குள் திரும்புவது என்பது சாத்தியமல்ல. அவர்கள் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்தான் இருந்தாலும் என் சூழல்.
நீக்குநன்றி ஸ்ரீராம், இதைக் குறிப்பிட்டுச் சொன்னதற்கும்.
துளசிதரன்
ராதிகா உட்பட மற்ற மாணவ மாணவியரை உங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததா?
பதிலளிநீக்குராதிகாவின் உருவத்தில் அத்தனை மாற்றமில்லை. கொஞ்சம் வெயிட் போட்டிருந்தார் அவ்வளவுதான். ஆனால் மற்றவர்களை அவர்களது உருவத்தையும் முகத்தையும் மிகவும் சிரமப்பட்டுத்தான் மனதில் கொண்டு வர முடிந்தது. சொல்லப் போனால் அவர்களில் ஒருவருக்கெல்லாம் மூன்று வயது பேத்தி உண்டு என்றால் பாருங்களேன். சீக்கிரமாகவே திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்தது.
நீக்குநன்றி ஸ்ரீராம்.
துளசிதரன்
ராபர்ட் பிராஸ்டின் கவிதை அழகு. மொத்தக்க கவிதையுமே அவ்வளவுதானா?
பதிலளிநீக்குராபர்ட் ஃப்ராஸ்டின் கவிதையின் கடைசி நான்குவரிகள் இவை. கவிதை முழுவதின் சாராம்சமும் இதில் அடங்கியிருப்பதால் முந்தைய வரிகளைச் சொல்லவில்லை. பெரும்பாலும் இந்த வரிகள்தான் கோட் செய்யப்படும்.
நீக்குகாட்டில் செல்லும் போது அவர் அருமையான சூழலைக் காண்கிறார். அங்கே அவரது குதிரை வண்டியை நிறுத்தி அந்த அழகினை ரசிக்கிறார். அதனை ஒவ்வொன்றையும் விவரிக்கிறார். அதன் பின் இருட்டத் தொடங்குகிறது. நேரமே வீட்டிற்குச் செல்ல வேன்டும். ஏராளமான தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதைச் சொல்லி கவிதையை முடிக்கும் இடம் தான் இது. அதிலும் அவர் மிக அருமையாக. The woods are lovely, dark and deep, என்று சொல்லியிருக்கிறார். இதற்கு மேலே சொல்லியிருப்பதை எல்லாம், இந்த , lovely, dark and deep என்ற சொற்களில் அடக்கிஇருப்பார். பெரும்பாலும் இவரைப் பற்றிச் சொல்லும் போது இந்த நான்கு வரிகள் தான்.
இவரைப் பற்றிச் சொல்வதென்றால் பழஞ்சொற்கள் wise saying ல் வித்தகர் நறுக்கென்று ஓரிரு வரிகளில் எல்லாம் இவரது கவிதைகளில் இருக்கும். Mending Wall என்றொரு கவிதை இருக்கிறது. அதில் ஒரு வரி...அந்த ஒரு வரியில் முழு கவிதையையும் அசத்தியிருப்பார். பாருங்களேன், ‘Good fences make good neighbors.’ நல்ல வேலிகள்/எல்லைகள் நல்ல அக்கம்பக்கத்தினரை உருவாக்குகின்றன. இதுதான் ராபார் ஃப்ராஸ்ட். அப்படி இங்கு சொல்லப்பட்ட வரிகள் தான் எங்கும் எப்போதும் உபயோகிப்பதுண்டு. மட்டுமல்ல இந்த நான்கு வரிகளுக்கு வேறொரு முக்கியத்துவமும் இருக்கிறது. மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் மறைந்த நாளின் முதல் நாள் இரவு தன் டயரியில் குறிப்பிட்ட வரிகள் இவை என்றும் சொல்லப்படுகிறது.
அப்படி எப்போதும் யாருக்கும் என்றும் உபயோகிக்கக் கூடிய வரிகள் இவை.
நன்றி ஸ்ரீராம்.
துளசிதரன்
‘Good fences make good neighbors.’
நீக்குஇந்த வரி உளவியலில் மிகவும் முக்கியமாகச் சொல்லப்படும் ஒன்று. நல்ல boundary போட்டு authentic ஆக இருப்பது எல்லா வகை உறவுகளுக்குமே நல்லது என்பது.
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தங்களின் பயண காலங்களில் எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.
தங்களிடம் பயின்ற மாணவ, மாணவிகளுடனான சந்திப்பு மிக்க மகிழ்வை தந்திருக்கும். அது தொடர்பாக வேறு சில பயணங்களும் கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. மருதமலை முருகன் கோவில், படங்களும், செய்திகளும் படிக்க நன்றாக இருக்கிறது. நானும் மருதமலை முருகன் கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை. அவன் அழைக்க வேண்டும்.
மூங்கில் காடு என்ற உணவகத்தின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது. ஆனால், அங்கு ஒவ்வொன்றின் விலைதான் அதிகமென்று அறிந்தேன்.
காணொளி கண்டேன். நீர் நிலை படங்கள், மலைகள், பச்சைபசேலென்ற வயல் பரப்புக்கள் என அனைத்தும் மனம் கவர்ந்தன.
அந்த ஒற்றை வீடு மலைகளின் பிண்ணனியில் மிகவும் அழகாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் வீட்டை மாற்றியமைத்து விட்டால், இந்த ஓட்டு வீடு இனி நினைவில் மட்டுந்தான்...!
சந்திப்பு விழாவின் படங்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது. இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கும் பழைய மாணவ, மாணவிகள், பள்ளியில் பணிபுரிந்து பழகிய ஆசிரியர்கள் என அனைவரும் சேர்ந்திருந்து , பேசி மகிழ்ந்தது ஒரு வரப்பிரசாதந்தான். அது எதிர்பாராத வகையில் அமைய பெற்ற தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும். பயணச் செய்திகள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தது. .பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஒவ்வொன்றையும் ரசித்துக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.
நீக்குஆம் இது போன்ற அனுபவங்களைப் பற்றிச் சொல்லும் போது வாசிக்கும் உங்களைப் போன்றவர்களும் உங்களது அனுபவங்களையும் நினைத்துக் கொள்வீர்கள். மகிழ்வைத் தரும் என்பதால்தான் பகிர்ந்து கொண்டேன்.
ரசித்து வாசித்துச் சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்
துளசிதரன்
இது போன்ற நிகழ்வுகளில் பங்கெடுப்பது என்பது மிகவும் சிறப்பான விஷயம். உங்கள் பயண அனுபவங்களையும் ரசித்தேன். படங்கள் சிறப்பு. காணொளி இனிமேல் தான் பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி, உங்களின் நேரப் பளுவிற்கு இடையிலும் வாசித்துக் கருத்து சொன்னமைக்கு.
நீக்குதுளசிதரன்
மிக மகிழ்வான பயணமும், சுவாரஸ்யமான நேரமும் .. மிக மகிழ்ச்சி அண்ணா
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி அனு பிரேம்.
நீக்குநம் நட்பு அன்பு உள்ளங்களுடன் நம் அனுபவங்களைப் பகிர்வது என்பது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தருவதுதானே!.
துளசிதரன்
மகிழ்ச்சியான சந்திப்பு மனதுக்கு நிறைவாக இருக்கும்.
பதிலளிநீக்குபடங்கள் சிறப்பாக உள்ளது
வாழ்த்துகள்.