திங்கள், 24 மே, 2021

சந்திரன் அளியன்

 


கடந்த 15 மாதங்களாக உலகெங்கும் காட்டுத் தீ போல பரவி லட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கித் தாண்டவமாடும் கோவிட், இடையே அணைவது போல் பாசாங்கு செய்து பதுங்கிப் புத்துயிர் பெற்று மீண்டும் ஆக்கிரமித்து வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகின் பல பாகங்களில் பல பிரச்சனைகள் தோன்றினாலும் அவை எல்லாம் இது போல் எல்லா நாடுகளையும், சீனாவைத் தவிர (இது ஒரு வியப்புதான் – ஏன்? எப்படி?) நிலை குலையச் செய்ததில்லை. வட இந்தியாவில் கோவிட் 19 நோயால் உயிரிழந்த ஒருவரின் உடலை அவரது மனைவியும் பெண் குழந்தைகளும் சுமந்து வரும் காட்சியைக் காணும் போது நம் நெஞ்சில் வேல் பாய்ந்த வலி மரணம் வரை நம் ஒவ்வொருவரையும் விட்டுப் போகாது.



அது போலவே பல அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், காவல் அதிகாரிகள், எஸ்பிபி போன்ற கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரது இழப்பும் நமக்கு வேதனைதான். இதனிடையே இக்கோவிட் 19 காரணமாக நம் ஒவ்வொருவருக்கும் நெருக்கமான பல உறவுகளுக்கும் நட்புகளுக்கும் நிகழும் மரணங்கள் நமக்குப் பேரிடி போல வந்த வண்ணமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பேரிழப்பு எனக்கும் இந்த கோவிட் 19 காலகட்டத்தில் கடந்த வாரம் நேர்ந்தது.

எங்களது சந்திரன் அளியன் (அளியன் என்றால் சகோதரியின் கணவர்) அவரது மறைவுதான் அது. என் ஒன்றுவிட்ட சகோதரி இந்திராபாயின் கணவர் கொச்சி களமசேரி ஹெ எம் டி யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 70 வயதைத் தாண்டிய போதும் இளமையில் இருந்தது போலவே எங்கள் உறவுகளை எல்லாம் எப்போதும் எல்லா இன்ப துன்பங்களிலும் நேரிலும் அலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு அன்பு பாராட்டுவதால் எல்லோரது அன்பிற்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர்.

என்னைப் பொருத்தவரை என் வாழ்விலும் 1980களில் எனக்கு லா பெல்லா ஃபைனான்சியர்ஸிலும், our college லும் ஹாரிஸன்ஸ் மலையாளம் லிமிட்டெட் லும் வேலை பெற உடனிருந்து உதவியவர். 1990 களில் எனக்கு ஒரு வாழ்க்கைத் துணை தேட பெற்றோருடனும் என்னுடனும் எப்போதும் உடனிருந்து எல்லாவற்றையும் நடத்தித்தந்தவர்.

இடையிடையே நான் மறந்தாலும் அலைபேசியில் அழைத்து நலன் விசாரித்தவர். கோவிட்டின் பிடியிலிருந்து தன்னால் இயன்றவரை தப்ப முயன்றவர்.  மார்ச் மாதம் மாரடைப்பு வந்தும் அதிலிருந்து மீண்டவர். மே மாதம் இரண்டாம் வாரம் எப்படியோ அவரை கோவிட் பிடித்துவிட வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்துவந்தார். கோவிட்டின் கை ஓங்கிய போது மே 14 ஆம் தேதி களமசேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மே 17 இரவு ஏற்பட்ட மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார்.

உடல், தன்னார்வலர்ககால் களமசேரி (எல்லா மரண நிகழ்வுகளிலும் முன்னின்று நடத்தியவர் அவரது சடங்குகள் நடத்த நான்கு தன்னார்வலர்கள் மட்டும்) முனிசிபாலிட்டியில் எரிக்கப்பட்டது. 19 ஆம் தேதி அவரது அஸ்தி அடங்கிய சாம்பல் வீட்டின் தென் மூலையில் பாதுகாக்கப்படுகிறது. கோவிட்டின் தாண்டவத்திற்குச் சிறிய இடைவெளி கிடைக்கும் போது ஆலுவா அத்வைத ஆசிரமத்தை ஒட்டிய பெரியாறு நதியில் அவரது அஸ்தி கலந்த சாம்பல் கலக்கப்பட காத்திருக்கிறது. அதுவரை எல்லோராலும் அவரது ஆத்மாவின் நித்திய சாந்திக்கும் மோக்ஷ பிராப்திக்கும் பிரார்த்திக்கத்தானே முடியும். 

இதை வாசிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் மனதில் இது போல் ஒன்றோ ஒன்றிற்கு மேற்பட்டோ உங்கள் பிரியமானவர்களின் கோவிட் மரணங்கள் வந்து உங்களை வேதனைக்குள்ளாக்குவது தெரிகிறது. அவர்களது எல்லோரது ஆத்மாக்களுக்காகவும் பிரார்த்தனை செய்வோம். காலம் செய்யும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு இப்படித்தான் வேதனைதான். இதுவும் கடந்து போகும் தான். காத்திருப்போம். "Time and Patience  will heal all wounds..."

கூடவே கோவிட் 19 எனும் இத்தொற்று நோய் பிடியிலிருந்து நம்மையும் நம்மவர்களையும் இவ்வுலக மக்கள் அனைவரையும் காக்க எல்லாம் வல்ல இறைவனை இத்தருணத்தில் வேண்டிக் கொள்வோம்.


 நட்புடன்

துளசிதரன்


 

36 கருத்துகள்:

  1. ஆழ்ந்த இரங்கல்கள்...

    உறவினர் தொடர்பு கொண்டால் மனதில் ஒரு பதட்டம் வருகிற நிலை உருவாகி விட்டது... சில உறவினர்களின் இழப்பு அச்சத்தையும் பலவித வேதனைகளும் தருகிறது... இதுவும் கடந்து விரைவில் போகட்டும்... இந்த நிலை விரைவில் மாறட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில உறவினர்களின் இழப்பு அச்சத்தையும் பலவித வேதனைகளும் தருகிறது...//

      ஆம் உண்மை டிடி.

      இதுவும் கடந்து விரைவில் போகட்டும்... இந்த நிலை விரைவில் மாறட்டும்...//

      ஆம் விரைவில் மாறிட வேண்டும் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்

      நன்றி டிடி

      துளசிதரன்

      நீக்கு
  2. எமது இரங்கல்கள்.
    பல நட்புகளை, உறவுகளை இழந்து வருகிறோம் இறையே துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல நட்புகளை, உறவுகளை இழந்து வருகிறோம் இறையே துணை.//

      மிகவும் வேதனையான தருணங்கள் எல்லொருக்குமே

      நன்றி கில்லர்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  3. ஆழ்ந்த இரங்கல்கள். இந்தத் தீநுண்மி எத்தனை எத்தனை உறவுகளை, நட்புகளை நம்மிடமிருந்து பிரித்து விட்டது. வேதனை மிகுந்த நாட்களாகவே கழிகிறது.

    இந்த நிலை விரைவில் மாறி, சூழல் சீராக பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நிலை விரைவில் மாறி, சூழல் சீராக பிரார்த்திப்போம்.//

      ஆம். மிக்க நன்றி வெங்கட்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  4. இரங்கல்கள். கோவிட் மரணத்தின் பெரிய சோகம், இறந்தவருக்கு சரியான வழியனுப்புதல் நடைபெறாமல் போவதுதான்.

    சைனாவின் இந்த பயோ வாருக்கு உலகமே ஸ்தம்பித்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைனாவின் இந்த பயோ வாருக்கு உலகமே ஸ்தம்பித்துவிட்டது.//

      இப்போது இதைப் பற்றி நிறைய செய்திகள் வந்திருக்கிறதே நெல்லைத்தமிழன்

      மிக்க நன்றி

      துளசிதரன்

      நீக்கு
  5. ஆழ்ந்த இரங்கல்கள்!
    இந்த கோவிட் நம் எல்லோரது அன்புக்குரியவர்கள் பலரை உயிரிழக்கச் செய்து விட்டது. தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது. ' இதுவும் கடந்து போகும் ' என்று நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வதைத்தவிர வேறு வழியில்லை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் கடந்து போகும் ' என்று நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வதைத்தவிர வேறு வழியில்லை!!//

      ஆம் சகோதரி மனோ சாமிநாதன்

      துளசிதரன்

      நீக்கு
  6. தெரிந்தவர் வட்டத்திலேயே ஏராளமான உயிர்களை இழந்து வருகிறோம்.  நட்பு வட்டம், உறவு வட்டம் எல்லாமே இழப்புகளை சந்தித்து வருகின்றன.  மனதில் பதட்டமும் குறையவில்லை.  பாரமும் குறையவில்லை.  

    இன்று திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் முப்பது வயது புதல்வர் கொரோனாவால் மறைந்து விட்டதாக தகவல்.  பேஸ்புக் நண்பர்கள், சுப்பிரமணியம் நாராயணன், அஷ்வின் ஜி, போன்றோரும், மோகன் ஜியின் இளைய சகோதரர் ஆகியோரும் மறைவு.  

    மறைந்து நின்று தாக்கும் ஒரு அரக்கனுடன் மனித குலம் போர் புரிந்து வருகிறது.  எப்போது வெற்றி கிடைக்குமோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் வருந்தக் கூடிய விஷயங்கள் ஸ்ரீராம்ஜி.

      //மறைந்து நின்று தாக்கும் ஒரு அரக்கனுடன் மனித குலம் போர் புரிந்து வருகிறது. எப்போது வெற்றி கிடைக்குமோ....//

      பிரார்த்திப்போம். வேறு என்ன சொல்லமுடியும்?

      துளசிதரன்

      நீக்கு
    2. மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி

      துளசிதரன்

      நீக்கு
  7. பதிவு வேதனை அளிக்கிறது. ஆழந்த இரங்கல்கள்.
    ஊரிலிருந்து படிக்கும், கேட்கும் செய்திகள் வேதனை தருவதாக இருக்கிறது.

    //கோவிட் 19 எனும் இத்தொற்று நோய் பிடியிலிருந்து நம்மையும் நம்மவர்களையும் இவ்வுலக மக்கள் அனைவரையும் காக்க எல்லாம் வல்ல இறைவனை இத்தருணத்தில் வேண்டிக் கொள்வோம்.//

    நாள்தோறும் அதைதான் வேண்டி வருகிறோம் இறைவனிடம். கருணை காட்ட வேண்டும் இறைவன். நம்பிக்கையுடன் காத்து இருப்போம்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரி கோமதி அரசு. வரும் செய்திகள் எல்லாமே வேதனை அளிக்கிறது.

      இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர என்ன செய்ய? நம்புவோம்.

      நன்றி சகோதரி

      துளசிதரன்

      நீக்கு
  8. ஆழ்ந்த இரங்கல்கள்....


    எங்களது குடும்பத்திலும் 3 இழப்புக்கள்...


    மக்கள் சமுக உணர்வுடன் செயல்பட்டால் இழப்புகளை நாம் தவிர்க்கலாம் இல்லையென்றால் இரங்கல் செய்திகள் தொடர்வதை தவிர வழியில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களது குடும்பத்திலும் 3 இழப்புக்கள்...//

      எங்கள் இரங்கல்கள்.

      ஆம் மக்கள் சமூகப் பொறுப்புடன் இருக்க வேண்டும்

      நன்றி மதுரை தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  9. பல நெருங்கிய நண்பர்கள், சுற்றத்தார்கள் என இளம்வயதிலும், முதுமையிலும், நடு வயதிலும் தொடர்ந்து இறந்து வருகின்றனர். உங்களைப் போல் எனக்கும் என்ன ஆச்சரியம்னா அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காள தேசம், மியான்மர், நேபாளம் ஆகியவை எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருக்கையில் இந்தியாவில் மட்டும் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் திடீரென அதிக பாதிப்பு! ஏன்? எப்படி? இதைக் குறித்து ஒரு ராணுவ அதிகாரி சொல்லி இருப்பவை உண்மையாக இருக்கலாமோ என்னும் எண்ணமும் தோன்றாமல் இல்லை. அதற்கேற்பவே எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளும் இருக்கின்றன. என்ன செய்ய முடியும்? உண்மையை அந்தக் கடவுளே அறிவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரி கீதா சாம்பசிவம்.

      //உங்களைப் போல் எனக்கும் என்ன ஆச்சரியம்னா அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காள தேசம், மியான்மர், நேபாளம் ஆகியவை எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருக்கையில் இந்தியாவில் மட்டும் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் திடீரென அதிக பாதிப்பு! ஏன்? எப்படி? இதைக் குறித்து ஒரு ராணுவ அதிகாரி சொல்லி இருப்பவை உண்மையாக இருக்கலாமோ என்னும் எண்ணமும் தோன்றாமல் இல்லை.//

      ஆமாம் இல்லையா? இராணுவ அதிகாரி சொல்லியிருப்பதை நீங்கள் எழுத முடிந்தால் எழுதுங்கள் நாங்களும் தெரிந்து கொள்வோம்.

      பிரார்த்திப்பதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும்

      நன்றி சகோதரி

      துளசிதரன்

      நீக்கு
    2. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இறப்புச் செய்திகளே வருகின்றன! பிரார்த்தனைகள் தான் மனதில் கொஞ்சமானும் பலத்தைக் கொடுக்கிறது.

      நீக்கு
  10. ஊரிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே மனதுக்கு திடுக்கென்று இருக்கின்றது.. எவருக்கும் பிரச்னை இல்லை என்றாலே கொஞ்சம் அமைதி..

    இக்கொடுமையான சூழ்நிலையில் நம்மை நாம் தற்காத்துக் கொள்ளவதையன்றி வேறொன்றும் செய்வதற்கு இல்லை..

    பெரியவரின் ஆன்மா இறைநிழலில் சாந்தி அடைவதற்கு வேண்டிக் கொள்வோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சார். தொலைபேசி அழைப்பு இப்போதெல்லாம் நல்ல செய்தியாக இருக்க வேண்டுமே என்று மனம் படபடக்கிறது.

      எதுவும் செய்ய முடியாது நம் கையில் எதுவுமில்லை நம்மைப் பாதுகாத்துக் கொள்வதைத் தவிர அது கூட நம் கையில் இல்லை

      நன்றி துரை செல்வராஜு சார்

      துளசிதரன்

      நீக்கு
  11. நெஞ்சை உலுக்கி உருக்கும் காட்சியும் செய்தியும் கண்டு மனம் வருந்து கின்றேன். எங்கோ நடப்பதாக , யார் வீட்டிலோ நடப்பதாக அறியும்போது, வருந்தினாலும், அவை பல வேளைகளில் வெறும் செய்திகளாகவே உணரப்படுகின்றன. அதுவே நம் சொந்தத்தில் எனும்போது மனசுமையும் மன வருத்தமும் , துக்கமும் பல மடங்கு மேலோங்குகிறது. அதிலும் இத்தனை சொந்தங்கள் இருந்தும் இறுதி மரியாதை செலுத்தி கவுரவமாக வழி அனுப்பகூட போக முடியாத சூழலில் சிக்கியிருக்கும் நமது வேதனை சொல்லில் அடங்காது.

    இன்னும் ஒரு வாரம்கூட ஆகவில்லை எனது நெருங்கிய உறவினர் இந்த கொடிய கிருமியின் தாக்குதலுக்கு உள்ளாகி வெறும் நான்குபேர்கள் மட்டுமே உடலை கொண்டுபோய் அடக்கம் செய்ய நேர்ந்த துயரம் வார்த்தையில் அடங்காது.

    இப்படி இறந்துபோன அனைத்து ஆத்துமாக்களும் சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம். உங்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கோ நடப்பதாக , யார் வீட்டிலோ நடப்பதாக அறியும்போது, வருந்தினாலும், அவை பல வேளைகளில் வெறும் செய்திகளாகவே உணரப்படுகின்றன. அதுவே நம் சொந்தத்தில் எனும்போது மனசுமையும் மன வருத்தமும் , துக்கமும் பல மடங்கு மேலோங்குகிறது. அதிலும் இத்தனை சொந்தங்கள் இருந்தும் இறுதி மரியாதை செலுத்தி கவுரவமாக வழி அனுப்பகூட போக முடியாத சூழலில் சிக்கியிருக்கும் நமது வேதனை சொல்லில் அடங்காது.//

      ஆம் அந்த வேதனையைச் சொல்லி மாளாது.

      //இன்னும் ஒரு வாரம்கூட ஆகவில்லை எனது நெருங்கிய உறவினர் இந்த கொடிய கிருமியின் தாக்குதலுக்கு உள்ளாகி வெறும் நான்குபேர்கள் மட்டுமே உடலை கொண்டுபோய் அடக்கம் செய்ய நேர்ந்த துயரம் வார்த்தையில் அடங்காது.//

      என்ன ஒரு வேதனையான நிகழ்வு! சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

      ஆம் பிரார்த்திப்போம்

      நன்றி கோ

      துளசிதரன்

      நீக்கு
  12. நிஜமாகவே கஷ்டமாக இருக்கிறது . தடுப்பூசி போட்டவங்க போடாதவங்க பக்கத்திலே இருந்தவங்கன்னு ஒரு ஒழுங்கே இல்லாமல் பரவுகிறது , வந்ததும் சும்மா இல்லாமல் வெள்ளைப் பூஞ்சை கறுப்புப் பூஞ்சைஅப்படீங்கிற ஒன்றையும் கூடவே கூட்டியாந்திருக்கு. மனசுக்கே ரொம்பக் கஷ்டமா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இப்போது கோவிட் வந்தவர்களுக்கு போஸ்ட் கோவிட் பிரச்சனைகளும் இருக்கிறது என்று தெரியவருகிறது. நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

      பல கெட்ட செய்திகள்தான்

      நன்றி சகோதரி அபயா அருணா

      துளசிதரன்

      நீக்கு
  13. சகோதரி கணவர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

    பதிலளிநீக்கு
  14. ஆழ்ந்த இரங்கல்கள்.. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்... இந்த இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து மனித இனத்தை மீட்டெடுக்க எல்லாம்வல்ல இயற்கையை இறைஞ்சுகின்றேன்..

    பதிலளிநீக்கு
  15. மிகவும் வருத்தமான செய்திகள் ஒன்றா இரண்டா... முன்னொரு காலம் இலங்கைப் போரால் பல கொடுமைகள்.. ஆனா அது அந் நாட்டை மட்டுமே தாக்கியது... இது உலகத்தையே ஆட்டுகிறதே...

    உங்கள் உறவினரின் ஆத்ம சாந்திக்காக நானும் பிரார்த்திக்கிறேன் துளசி அண்ணன்... என்ன செய்வது கடவுளைத்தான் பிரார்த்திக்கிறேன் அப்ப அப்ப.

    உங்கள் தலைப்பு பார்த்ததும் எனக்குப் புரியவில்லை, கீதாதான் வித்தியாசமான பெயர்களில் சமையல் குறிப்புப் போடுவா.. அப்படி நினைச்சு வந்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இக்கட்டான சூழலில் கடவுளைப் பிரார்த்திப்பதைத்தவிர வேறு ஒன்றும் செய்வதிற்கில்லை. நாமும் கவனமாக இருக்க வேண்டும் அதன் பின் இறைவன் கையில்தான் இருக்கிறது.

      நன்றி சகோதரி அதிரா

      துளசிதரன்

      நீக்கு
  16. என் சனலுக்கு துளசி அண்ணனும் சப்ஸ்கிரைப் பண்ணியிருக்கிறீங்கள், பெயர் காட்டியது.. மிக்க மிக்க நன்றி. சிலரின் பெயர் காட்டுகிறது, பலரின் பெயர் காட்டுவதில்லை அங்கு.. சப்ஸ்கிரைப் பண்ணியோர் ஆரென. கொமெண்ட் போட்டார்கள் எனில்தான் கண்டுபிடிக்க முடிகிறது.

    இது கீதாவுக்கு:
    கீதா அங்கு நான் அதீஸ் ஆக்கும்:)).. அதிராவாக இலை:))..

    மிக்க நன்றி உங்கள் சப்போர்ட்டுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு கீதாதான் சொன்னார். நீங்கள் ஒரு சானல் தொடங்கியுள்ளீர்கள் என்று. நான் தனியாகச் சமையல் செய்ததுண்டு என்றாலும் அது பசியை ஆற்றுவதற்கே, சர்வைவலுக்காக மற்றபடி பழ்க்கமில்லை என்பதால் நான் பொதுவாகச் சாப்பாடு சமையல் குறிப்புகள் பக்கம் செல்வதில்லை. என்றாலும் நம் நட்புகள் தொடங்கும் சானல்கள் தெரியவந்தால் சப்ஸ்க்ரைப் பண்ணுவதுண்டு.

      மிக்க நன்றி சகோதரி அதிரா

      துளசிதரன்

      நீக்கு
  17. இது கீதாவுக்கு:
    கீதா அங்கு நான் அதீஸ் ஆக்கும்:)).. அதிராவாக இலை:))..//

    ஹா ஹாஅஹாஹா பூஸார் நோட் செய்துகொள்கிறேன் அதிரா அல்லது பூசார், ஞானி என்று சொல்லியே பழகிவிட்டதா டக்கென்று அங்கு அதிரா என்று வந்துவிட்டது இனி அதீஸ் என்றே போடுகிறேன் கமென்டில்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. ஆழ்ந்த இரங்கல்கள்...
    இழப்புக்களின் தொடர்ச்சி மனசுக்குள் ஒரு பேரச்சத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது அண்ணா.

    பதிலளிநீக்கு
  19. உங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் கீதா/துளசிதரன். இந்த கொடிய கொரோனா நோயால் இந்த ஆண்டு நம்மை விட்டு பிரிந்தவர்கள் அநேகம். நோய் தொற்றிலிருந்து அனைவரும் கூடிய விரைவில் மீள வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

    பதிலளிநீக்கு