ஞாயிறு, 18 மே, 2025

பஸ்சிமவாஹினி - ரங்கனதிட்டு- ஸ்ரீரங்கப்பட்டினம் கோவில் - 9

 

ரங்கனத்திட்டுவிற்குச் செல்லும் போது ஆட்டோக்காரர் ஒரு இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதாகவும் அப்போது அங்கு நாங்கள் இறங்கவில்லை, பறவைகளைப் பார்த்த பிறகு வரும் போது பார்க்கலாம் என்றும் முடிவு செய்து சென்றதாகச் சொல்லியிருந்தேன். அந்த இடத்தைப் பற்றி இப்பதிவுத் தொடரோடு சொல்வதா இல்லை தனியாகப் போடலாமா என்று இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பார்த்ததில், மனதின் மெஜாரிட்டிக் குரல்கள், 'பயணத்தில் இதைக் கடந்துதானே கோவிலுக்குப் போனோம், தொடரிலேயே போட்டுவிடு'  என்பதற்குக் கை தூக்கியதால், இதைப் போட்டுவிட்டு அடுத்ததாக  கோவிலுக்குப் போய்விடுவோம் என்று முடிவாகி, இதோ அந்த இடத்தைப் பற்றி.

ரங்கனத்திட்டுவிலிருந்து எங்களை அழைத்துச் செல்ல வந்த அந்த ஆட்டோக்காரரிடம் முதலில் வந்த ஆட்டோக்காரர் குறிப்பிட்ட அந்த இடமான “பஸ்சிமவாஹினி”யைப் பார்க்க வேண்டும் என்று சொன்னோம். அந்த இடம் ஹைவேயிலிருந்து ரங்கனத்திட்டு சாலைக்குத் திரும்பும் சந்திப்பில் உள்ளது. போகும் போது, அதன் முகப்பில் கருடன் பக்ஷி சிலை இருந்ததைப் பார்த்த நினைவு. அந்த வழி ஒருவழிப்பாதை என்பதால் வரும் போது அதைச் சுற்றி இடப்பக்கம் சென்றதால் முகப்பைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை.

ஆட்டோக்காரரிடம் இந்த இடம் தான் நாங்கள் பார்க்க வேண்டும் என்று சொன்னாலும், அவர் கவனிக்கவே இல்லை. நான் சத்தமாகச் சொன்னதும் ஆற்றின் பாலத்தில் பாதி மனதோடு நிறுத்தினார். அங்கு பெரிய மண்டபமும், கோயிலும் இருப்பதாக ஆட்டோக்காரர் சொன்னார் ஆனால் ஆற்றின் பக்கம் இறங்கிச் சுற்றி நடக்க வேண்டும். ஒருவழிப்பாதை என்பதால் ஆட்டோவும் கோவிலுக்குச் சுற்றிச் செல்ல வேண்டும். பாலத்துப் பகுதியில் இருந்தே கொஞ்சம்  படங்களும் சிறிய காணொளியும் எடுத்துக் கொண்டேன்.

எதிர் புறத்தில் மக்கள் ஆற்றில் இறங்கி நிற்பது தெரிகிறதா?

மக்கள் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார்கள். ஏதோ பூஜை போலும். அங்கு இப்படி மக்கள் சில விசேஷ தினங்களில் வந்து நீராடி, பூஜைகள் செய்து கோவிலுக்கும் சென்று வணங்கிவிட்டுச் செல்வதுண்டாம். பஸ்சிமவாஹினி பற்றி புராணங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

கிழக்கு நோக்கிப் பாயும் காவிரி இந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட் அடித்து மேற்காகச் சிறிய தூரம் ஓடிவிட்டு - இப்படி மேற்கு நோக்கிப் பாய்வதால் - கன்னடத்தில் பஸ்சிம என்றால் மேற்கு -  எனவே பஸ்சிமவாஹினி. இந்த இடத்தில் இப்படிப் பாய்ந்து ஒரு சிறு தீவை உருவாக்கி உள்ளது - மீண்டும் கீழக்கில் பாய்ந்து  ‘காவிரி, ஹேமவதி, லோகபாவனி எனும் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில்  இணைகிறது. அந்த இடத்தை 'சங்கம்' என்று சொல்கிறார்கள்.

இந்த சங்கமத்தில் இருக்கும் கோசாய் காட் என்ற படித்துறையும் பஸ்சிமவாஹினியும் காசி, கயா, ப்ரயாக்ராஜ், போன்ற இடங்களுக்கு நிகராக மூதாதையருக்குத் திதி, பித்ரு பூஜை, பிண்டம் கொடுத்தல் போன்றவை செய்யும் இடமாகவும், அஸ்தி கரைக்கும் புண்ணிய இடமாகவும் கருதப்படுகிறது. தென்னிந்தியாவில் இப்படியான இடம் இது ஒன்றுதான் என்ற சிறப்பையும் பெறுகிறது பஸ்சிமவாஹினி.

 100 வருஷம் பழமை வாய்ந்தவை வயோதிகமாகி புறக்கணிக்கப்பட்டதாக...

துலாமாதத்தில் இந்த இடங்களில் நீராடிப் புண்ணியம் பெறலாம் என்பது நம்பிக்கை. 100 வருடங்களுக்கு முன் இந்த இடத்தில், மக்கள் தங்கி தங்கள் பித்ரு காரியங்கள் செய்வதற்கு வசதியாக மைசூர் ராஜாவினால் கட்டப்பட்ட கட்டிடங்களும் சிறிய கோவிலும் பராமரிக்கப்படாததால் மிகவும் பாழடைந்து உள்ளன. இதைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும், ஏன் இப்படிப் பாழடைந்துள்ளன, இந்த இடத்தில் வாழும் மக்கள் தொகை, ஜீவாதாரம்  என்பதைப் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரையும் இருக்கிறது. இங்கு மஹாத்மா காந்தியின் அஸ்தியை 1948, ஃபெப்ருவரி மாதம் 12 ஆம் தேதி கரைக்கப்பட்டதாக இந்த ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரக் குறிப்புகள் உள்ள கல்லும் இருக்கிறதாம் ஆனால் புதர் மண்டிக் கிடக்கிறதாம். 

மேலும் கங்கையில் தினமும் ஆரத்தி நிகழ்வு நடப்பது போல காவிரிக்கும் ஆரத்தி நிகழ்வு செய்வார்களாம் மக்கள். அப்படியான இந்தப் பாரம்பரிய கலாச்சார மதிப்பு பெற்ற இந்த இடத்தை சீரமைத்து மிகவும் அழகாக மாற்றுவதற்கான பரிந்துரைத் திட்டங்களும் அந்த ஆய்வுக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கின்றன.

இப்படி இணையத்தில் இந்த இடத்தைப் பற்றித் தேடிய போது, பஸ்சிமவாஹினி கரையில் உள்ள கிருஷ்ணர் கோவில் பற்றிய மிகவும் சுவாரசியமான கதை கிடைத்தது. (மேலே உள்ள கோவில் அல்ல இப்பகுதியில் சொல்லப்படுவது. இப்பகுதியில் சொல்லப்படும் கோவில் இருப்பது மற்றொரு புறத்தில் அதற்குச் சுற்றிச் செல்ல வேண்டும்)  கோவிலை எழுப்பியவரின் வம்சத்தில் வந்த, பெங்களூரைச் சேர்ந்த துரைசாமி ஸ்ரீநிதி என்பவர் தன் பாட்டியிடம் அறிந்த கதையையும் தனது அனுபவங்களில் அறிந்ததையும் தன் தளத்தில் அவரே சொல்லியிருக்கிறார்.

நன்றி - ஸ்ரீநிதி துரைசுவாமி. இப்படம் அவர் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த மரத்தின் அடியில்தான் கிருஷ்ணர் சிலை இருந்ததாம், அவருடைய பாட்டியின் தாத்தா குடகு ஸ்ரீநிவாஸ ஐயங்கார் படுத்திருந்த மரத்தடியாம். இப்புறத்தில்தான் கிருஷ்ணர் கோவில் இருக்கிறது.

ஸ்ரீநிதியின் அம்மா வழிப் பாட்டியின் தாத்தா குடகு ஸ்ரீனிவாச ஐயங்கார் குதிரையில் நீண்ட பயணம் செய்ததால் சோர்வடைந்திருந்த சமயத்தில், குளித்து ஓய்வெடுக்க ஒரு நல்ல இடத்தை பஸ்சிமவாஹினி பகுதியில் கண்டிருக்கிறார். அந்த இடத்தில் இருந்த அஸ்வத மரத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு கனவு வந்ததாம். அந்த இடத்தில் கீழே பூமியைத் தோண்டினால் கிருஷ்ணர் சிலை கிடைக்கும்.  ஒரு கோயில் கட்டி அச்சிலையை அங்கு நிறுவ வேண்டும். இந்தப் புனித இடத்திற்கு வருகை தரும் அனைத்து யாத்ரீகர்களையும், பித்ரு சடங்குகள் செய்ய வரும் மக்களையும் கவனித்துக் கொள்வதற்கான கைங்கர்யத்தையும் செய்ய வேண்டும் என்று அக்கனவில் சொல்லப்பட்டதாம்..

அப்படி அங்கு கோயில் எழுப்பப்பட்டு, அவரது கனவில் கூறப்பட்டபடி, அங்கு வந்த யாத்ரீகர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பாரம்பரியம் இன்று வரை தொடர்கிறதாம். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர், துலாமாசத்தின் போது வரும் யாத்ரீகர்கள் ஆற்றில் நீராடி பிரார்த்தனை செய்யும் போது அவர்களுக்கு 'அன்னதானம்' ஏற்பாடு செய்வதற்காகவும், கோவில் விஷயங்களை மேற்பார்வையிடுவதற்காகவும் மாதம் முழுவதும் அங்கேயே தங்குவார்களாம்.

தன் இளம் பருவத்தில் பாட்டியின் சகோதரர் ஈடுபாட்டுடன் செய்ததைப் பார்த்த நினைவுகள் இருப்பதாகச் சொல்கிறார். அதன் பின்னர் அவரது அம்மா, தாய் மாமா, மாமிகள் மற்றும் மூத்த உறவினர்கள் அனைவரும் தங்கி கவனித்துக் கொண்டார்களாம்.

தற்போது இளைய அத்தைகள் மற்றும் உறவினர்கள் கவனித்து வருகிறார்களாம். ஒரு மாதம் முகாமிட்டு பல பிரச்சினைகளைச் சமாளிப்பது எளிதல்ல என்றும் சில நாட்களில் வருகை தரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை எதிர்பாராத விதமாக அதிகமாக இருக்கும் சமயங்களிலும் எப்படியாவது அவர்களுக்கு உணவு கொடுப்பதையும்  பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனுமன் தான் கீழே சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வில் குறிப்பிடப்படும் அனுமன். நன்றி - துரைசுவாமி ஸ்ரீநிதி

அவரது அம்மா தனக்கு நேர்ந்த அனுபவத்தை தன்னிடம் ஒவ்வொரு முறையும் மிகவும் உற்சாகமாகச் சொல்வாராம். (அம்மா தற்போது இல்லை அவரது அஸ்தியும் இங்குதான் கரைத்திருக்கிறார்கள்). அவருடைய அம்மா, கோவிலின் முற்றத்தில் அமர்ந்து விளக்குகளுக்குத் திரிகளை உருட்டிக் கொண்டிருந்தபோது, ​ ஒரு பலத்த சத்தம் கேட்டதாம். அவர் அருகில் ஒரு வெள்ளிப் பாத்திரம் கிடப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார். மேலே ஒரு குரங்கு, பாத்திரத்தை கீழே எறிந்துவிட்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்ததாம். பின்னர் குரங்கு அப்படியே மறைந்துவிட்டதாகவும், பாத்திரத்தைத் தேடி யாரும் வராததால், அங்கிருந்த அனுமன் சிலைக்குக் கவசம் தயாரிக்க அந்த வெள்ளியைப் பயன்படுத்த முடிவு செய்ததாகவும், இந்த அதிசயம் நடந்தது அனுமனின் அருளால்தான் என்றும் மேலும், தான் அப்படி அனுமனால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டவள் என்று உணர்ந்ததாகவும் அம்மா சொன்னதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

பஸ்சிமவாஹினி - சிறிய காணொளி

அடுத்த முறை அப்பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஆற்றில் குளித்து (எனக்கு ஆற்றில், நீர்வீழ்ச்சியில் குளிக்க ரொம்பப் பிடிக்கும். வேறு சென்டிமென்ட்ஸ் கிடையாது!) இந்த இடத்தையும் கோவிலையும் நிதானமாகப் பார்த்து வர .வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். படங்கள் காணொளிகள் எடுத்து உங்களிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பாளா இந்த கீதா? சொல்லுங்க!


-------கீதா


42 கருத்துகள்:

  1. நான் இந்த சங்கமம் இடத்திற்குச் சென்றிருக்கிறேன். இது பற்றி வைரமுடி யாத்திரைப் பதிவிலும் எழுதின நினைவு.

    அங்கு நீத்தார் கடன் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

    ஆனால் நீர் ஓட்டம் அதிகமாக இல்லை. அதனாலும், நீத்தாருக்காகச் செய்வதை எல்லாம் படித்துறையிலிருந்து விட்டுவிடுவதாலும் அந்த இடம் ரொம்பச் சுத்தமாக இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் உங்கள் மைசூர் பதிவில் சங்கம் பற்றி குறிப்பிட்டிருந்தீங்க நெல்லை. அங்குதான் கோஸாய் கட். இருக்கு

      இது அதன் அருகில் இருக்கும் பஸ்சிமவாஹினி, ரங்கனதிட்டு போகும் வழியில் இருப்பது. நீங்கள் சொல்லும் இடம் சங்கம் இதுவல்ல. அதன் அருகில் இருப்பது இது.

      இங்கும் சுத்தமாக இல்லை

      நன்றி நெல்லை.

      கீதா

      நீக்கு
  2. இந்த சங்கமத்துக்குப் போகும் வழியில்தான் திப்புசுல்தான் கல்லறை (மற்றும் அவன் உறவினர்கள் கல்லறைகள்) இருந்த நினைவு. அந்தப் படத்தையும் பகிர்ந்திருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கம் போகாததால் தெரியவில்லை.

      பதிவில் சொல்லியிருக்கிறேன் சங்கம் வேறு, பஸ்சிமவாஹினி வேறு என்று. சங்கம் இந்த இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கு.

      ஸ்ரீரங்கப்பட்டினம் கோவிலில் இருந்து வெளியில் வந்து ஆட்டோவில் வந்தப்ப திப்புசுல்தான் இறந்த இடம் என்று காட்டினார் ஆட்டோக்காரர். சும்மா ஒரு க்ளிக் அவ்வளவுதான். ஒரு புல்வெளியில் நடுவில்...நினைவுச்சின்னம் போல இருந்தது. இறங்கிப் பார்க்கவில்லை. ரயில்வே ஸ்டேஷன் சென்று டிக்கெட் எடுக்கணும் என்பதால்...

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. நெல்லை சங்கம் போகும் வழியில் இல்லை திப்பு சுல்தான் விஷயங்கள். அவை கோட்டைக்குள்ளேயே இருக்கு. நான் கோவிலில் இருந்து வந்தப்ப ஆட்டோக்காரர் இங்கெல்லாம் போகணுமா என்று கேட்டு சமாதி அருகில் நிறுத்தினார் ஆனால் நாங்கள் போகலை...

      கீதா

      நீக்கு
  3. முதல் படம் ரொம்ப அருமையாக வந்திருக்கிறது. (ஆனால் Geetha's தம்பட்டம்தான் ரொம்ப அதிகமாத் தெரியுது ஹாஹாஹா)

    கோயில் கோபுரம் (விமானம்) மற்றும் அந்தச் சூழலே அதன் பழைமையைச் சொல்லுது. இதையெல்லாம் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை அரசாங்கத்துக்கோ இல்லை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கோ இருப்பதில்லை. எத்தனை இடங்களைப் பட்டா போட்டுக்கொண்டார்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.

      ஹாஹாஹா தம்பட்டம் எதுவும் இல்லை நெல்லை. கீதாஸ் என்பது இந்த முறை கொஞ்சம் பெரிதாகிவிட்டது எப்பவும் சின்னதா தான் இருக்கும்...

      ஆமாம் அக்கறை இல்லை என்பதை ஆய்வுக் கட்டுரையும் சொல்கிறாது பரிந்துரைகளும் சொல்லப்பட்டிருக்காம். அரசியல், மக்களின் ஒத்துழையாமை, விவசாயிகள் மாடுகளைக் குளிப்பாட்டல், துவைத்தல் துணிகளை விட்டுச் செல்தல் என்று.

      என்னைக் கேட்டால் நீத்தார் கடன் எல்லாம் படித்துறையில் செய்யக் கூடாது என்று சட்டம் வர வேண்டும் ஆற்றில் வீசக் கூடாது என்றும்.

      பஸ்சிமவாஹினி இடம் சுற்றி வணிக வளாகங்கள் ஒரு புறம்....மறு புறம் ஆற்றின் படித்துறையின் பின் புறம் ரோட்டில் தங்கும் இடங்கள் சின்ன சின்ன ரூம்களாக...

      வீடியோ இணைக்க மறந்துவிட்டேன்...அதான் பதிவில் கடைசியில் ஒரு கேப் ....இப்பதான் நினைவு வந்தது இணைக்கிறேன்...

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. //நீத்தார் கடன் எல்லாம் படித்துறையில் செய்யக் கூடாது// இது பற்றி எழுத நினைக்கிறேன். தெய்வக்குற்றமாயிடுமோன்னு தோணுது. கயால ஆற்றில் (பல்குனி) நீரே வருடத்துக்கு இரண்டு மாதம், அதுவும் முட்டளவு கூட இருக்காது. இப்போ நீரைத் தேக்கிவைத்து விடறாங்க. அதில் ஒரு கட்டம் கட்டி அங்கு இந்த மாதிரி சாதம்..போன்றவற்றைக் கலக்கறாங்க. அந்த இடமே நாறும். இது போல பல இடங்களிலும் நடக்குது. இன்னொண்ணு ஆற்றுல பழைய துணியை வீசுவது. இவங்களுக்கெல்லாம் புண்ணியத்தைவிட பாவம்தான் அதிகமாகும்.

      நீக்கு
    3. ஹாஹாஹா நெல்லை, தெய்வக் குத்தம் எதுவும் ஆகாது. மக்கள் குத்தம் ஆகும்!! ஹிஹிஹிஹிஹி...அதாவது சிலர் அப்படிச் சொல்லக் கூடாதுன்னு சொல்லலாம்.

      //இப்போ நீரைத் தேக்கிவைத்து விடறாங்க. அதில் ஒரு கட்டம் கட்டி அங்கு இந்த மாதிரி சாதம்..போன்றவற்றைக் கலக்கறாங்க. அந்த இடமே நாறும். இது போல பல இடங்களிலும் நடக்குது//

      இதெல்லாம் பொதுவாகச் சொல்லப்படும் எந்தப் புண்ணியவகை??????

      புண்ணிய நதி என்று சொல்லிக் கொண்டு அதைப் பாழாக்குவது சரியில்லையே. பாவ புண்ணியத்திற்கு அப்பாற்பட்டு பொதுநலம் பாதிக்கப்படுகிறது இல்லையா? எவ்வளவு வியாதிகள் பரவுகின்றன பாருங்க... கொரோனா சமயத்தில் கங்கை அத்தனை சுத்தமா இருந்துச்சாமே!!!

      இப்ப கொரோனா பரவத் தொடங்கியிருக்கிறதே. சேலத்துல புகுந்திருக்கிறது என்று செய்தி.

      கீதா

      நீக்கு
    4. திருஎவ்வுள் குளத்தில், அமாவாசையின்போது குளத்தில் வெல்லம் கரைக்கறாங்க, பக்த ஜனங்கள். 500-ஆயிரம் கிலோ அந்த நாளில்? வெல்லத்தினால் குளத்தின் அந்தப் பகுதிக்கு கெடுதல் ஏற்படுவதில்லை என நினைக்கிறேன்.

      நீக்கு
    5. தெரியாது நெல்லை, ஒரு வேளை திருவள்ளூர் குளத்தில் தண்ணீர் மாற்றுவாங்களா இருக்கும், மடை இருக்குமே தண்ணீர் மாற்ற...

      கீதா

      நீக்கு
  4. காந்தியின் அஸ்தி... அவரது உருவமே சின்னது. எவ்வளவு அஸ்தி வந்திருக்கும்? அதை எங்கெங்கெல்லாம் கரைத்திருப்பார்கள். கொஞ்சம் டுபாக்கூர் மாதிரி இல்லை?

    மிஷின் பழுதுபட்டது என்ற மின் மயானத்தில், அஸ்தி மாத்திரம் கொடுத்துடறாங்களாம். ஆனால் உடல் எரிக்கப்படாமல் இருந்தது என்று சமீபத்தில் ஒரு மயானத்தைப் பற்றிப் புகாரைப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் தோன்றியது. ஆனால் அங்கு அதற்கான ஆதாரங்கள் இருக்கு என்றும் அவை புதர்களால் மூடப்பட்டிருக்குன்னும் ஆய்வுக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் எங்கு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம் என்பது வேறு விஷயம்.

      எரிக்கப்படாமல் அஸ்தியா....எப்படி எல்லாம் ஏமாத்தறாங்க....

      கீதா

      நீக்கு
  5. அனுமன் கவசம்... ரொம்பவே ஆச்சர்யமா இருக்கிறது. நம்பிக்கை உடையவர்களுக்கு தெய்வம் எந்த ரூபத்திலாவது காட்சி கொடுப்பது, பாதை காண்பிப்பது என்பதெல்லாம் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

    நம்பிக்கை இல்லாததுதான் நம் பெரும்பாலானவர்களுக்கு உள்ள பிரச்சனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கைகள் சார்ந்ததுதானே வாழ்க்கை, நெல்லை. நாம் எப்படிப் பார்க்கிறோமோ, எப்படி எடுத்துக் கொள்கிறோமோ அப்படி.

      //நம்பிக்கை இல்லாததுதான் நம் பெரும்பாலானவர்களுக்கு உள்ள பிரச்சனை.//

      இப்படியான நம்பிக்கைகள் இல்லைதவர்களுக்கு நம்மை மீறிய சக்தி நம்பிக்கை இல்லைன்னு எப்படிச் சொல்ல முடியும்? நெல்லை? அது வேறு இது வேறு.

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  6. பஸ்சிமவாஹினி படங்கள் எல்லாம் அருமை.ஸ்ரீநிதி துரைசாமி பகிர்ந்த படமும் அருமை. காணொளி பின்னனி இசையும் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிக்கா. காணொளியும் பார்த்து இசையும் ரசித்ததற்கு நன்றி. இசை, ஒரு செயலியில் அதிலிருக்கும் லூப்ஸ் வைச்சு என் முயற்சி!

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  7. //‘காவிரி, ஹேமவதி, லோகபாவனி எனும் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இணைகிறது. அந்த இடத்தை 'சங்கம்' என்று சொல்கிறார்கள்.//
    மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம் மிகவும் விசேஷமானது. விவரங்கள் அருமை.


    ஸ்ரீநிதி துரைசுவாமி அவர்கள் சொன்ன செய்திகளும் படித்து தெரிந்து கொண்டேன்.
    பழைய இடமாக இருந்தாலும் வனப்பு மிகுதியாக இருக்கிறது.
    அனுமன் சிலை செய்ய வெள்ளி கிடைத்தது இறைவன் அருள்தான் அந்த வரலாறும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடம் போய்ப்பார்க்க ஆசை. அப்பக்கம் போகும் வாய்ப்பு கிடைத்தால் சங்கம், பார்த்து பஸ்சிமவாஹினிக்கும் போய் பார்க்க வேண்டும் என்று ஆசை. இந்த முறை வெளியில் இருந்துதானே எடுத்திருக்கிறேன்.

      ஆமாம் நான் நெட்டில் தேடிய போது தான் ஸ்ரீநிதி துரைசுவாமி அவங்க எழுதின பதிவு. அவங்க எள்ளுத்தாத்தா கட்டின கோவில் அங்கு இருக்காம் கிருஷ்ணர் கோவில்...ஆமாம் ரொம்ப அழகா இருக்கு அக்கா. உள்ளே போய் பார்க்க வேண்டும். அனுமன் அழகா இருக்கார்ல?!!!!

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  8. அரசமரம் முளைத்த மண்டபம் பார்க்க அழகாய் இருக்கிறது. ஆனால் அந்த மரத்தை அப்புற படுத்தினால் அந்த மண்டபம் உடைந்து விடும்.
    ஆற்றில் தெரியும் மண்டபம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா, இன்னொன்று அந்த விஷ்ணு இருக்கும் கோயிலுக்குள்ள வலப்பக்கம் மரம் இருப்பது தெரியும். அதைச் சுத்தி கட்டியிருப்பது தெரியும் அதனாலதான் அந்த வேர் அடியில் பரவி இருப்பதால் படி ஏறியதும் பாருந்த தரை பிளந்து இருக்கும். பராமரிக்காம அப்படியே இருக்கு உள்ளே ஏறிப் பார்க்க ஆசை ஆனால் கொஞ்சம் தயக்கமாக இருந்தது நான் தனியாக அங்கு சென்றதால்....கணவர் இறங்கவில்லை.

      ஆறு மண்டபம் அந்த இடமே அழகாதான் இருந்தது.

      நன்றி கோமதிக்கா..

      கீதா

      நீக்கு
  9. பறவைகள் புகைப்படப்பதிவை விட இந்தப் பதிவை ரசித்தேன்.  அங்கிருக்கும் இடிபாட்டுக் கட்டிடங்களின் பழமை கண்களைத் தாக்குகிறது.  அங்கு பராமரிக்கும் பணி பொறுப்பிலிருக்கும் குடும்பம் அந்தக் கட்டிடங்களையும் பழுது பார்க்கலாம்.  உழவாரப்பணி என்று கூப்பிட்டால் ஓடிவர நிறைய குழுக்கள் இருக்கின்றனவே......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம்.

      ஆமாம், அந்தக் கட்டிடங்களைப் பார்த்தப்ப ரொம்ப கஷ்டமாக இருந்தது. அந்தக் கோவில் வாசல் தரை பிளந்திருக்கும், பராமரிப்பு இல்லை,

      அந்தக் குடும்பம் கட்டிய கோவில் ஆற்றின் அந்தப் பக்கம் இருக்கிறது போலும். இந்தக் கட்டிடங்கள் எல்லாம் அரசுப் பொறுப்பிலாம். அக்குடும்பம் அரசிடம் பேசி செய்யலாம்தான்.

      ஒரு ஆய்வுக் கட்டுரை, இந்து செய்தித்தாளில் வந்த கட்டுரைப் படி பார்த்தால் அங்கு இவற்றை எல்லாம் சீர்படுத்தி பெரிய அளவில் நிறுவ, டிக்கெட்ட் எல்லாம் வைத்து போட ஒரு திட்டம் இருப்பது போல் தெரிகிறது. அரசியலும் உள்ளே இருக்கு போல!!!

      நீங்க சொல்லியிருப்பது போல் உழவாரப்பணி என்றால் ஓடி வர குழுக்கள் நிறைய இருக்காங்க. பார்ப்போம்...

      இந்த வருடக் குளிர் நாளில் மீண்டும் அங்கு போய் வர ஆசை இருக்கு. சங்கம் மற்றும் பஸ்சிமவாஹினி...பார்ப்போம்...சூழலைப் பொருத்து

      கீதா

      நீக்கு
  10. புகைப்படங்கள் அழகாக எடுக்கபப்ட்டிருக்கின்றன.  அந்த மரத்தடி..  அங்கு தெரியும் நீர்நிலை, மேலே பாலம்..   

    இடைவெளி விழுந்த கற்கள் பதித்த வாசலை உடைய வீடு போன்ற அமைப்பு, இடிந்த கோபுரம்..  அங்கு கூட ஏறி பக்கம் சென்று படம் எடுத்திருக்கலாமோ...  அங்கிருந்து சுற்றுப்புறத்தை ஒருசில க்ளிக்ஸ்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம், மரங்களும் நதியும் அழகு ஆனால் இன்னும் மழைக்காலத்தில், வெள்ளம் வந்தால் பகுதியே வித்தியாசமாக இருக்கிறது. அக்குடும்பம் எழுப்பிய கோயில் தண்ணீரில் கால் வாசி நிறைந்துவிடுமாம்.

      நான் படங்களை எடுத்ததே கொஞ்சம் ரிஸ்கான பகுதியில்ம் மெயின் ரோடு, வண்டிகள் வந்துகொண்டே இருந்தன. அந்த கோபுரம் பக்கம் ஏற ஆசை ஆனால் புதர் மண்டிக் கிடந்தது ஏறுவதற்கு இடம் பார்த்து ஏற வேண்டும். நானும் ஆசைப்பட்டேன் முடிந்தால் ஏறிடலாம்னு படிகள் எதுவும் இல்லை. அப்படி எடுத்திருந்தால் ஆற்றினை வேறு கோணத்தில் எடுத்திருக்கலாம்.

      ஆனால், நம்மவீட்டவரும் ஆட்டோக்காரரும் ரெஸ்ட்லெஸ்...ஏனென்றால், அடுத்து கோவில் இருக்கு அங்கு கூட்டம் பற்றி தெரியாது, மதியம் ரயிலைப் பிடித்து வீட்டுக்கு வரணுமே. வீட்டில் நமக்கு கமிட்மென்ட்! இந்த இடம் பற்றி தெரியாததால் இது என் லிஸ்டில் இல்லாத இடம் அதான் நேரப் பற்றாக்குறையாகிவிட்டது.

      கீதா

      நீக்கு
  11. அட...   ஐயங்கார் ஸ்வாமிகள் குதிரையிலா?   

    நெற்றியில் வியர்வையில் கலைந்த மங்கலான திருமண்ணுடன் ஸ்ரீனிவாஸ ஐயங்கார் குடுமி பறக்க குதிரையில் வரும் காட்சியை மனக்கண்ணில் ஓட விடுகிறேன்..   

    டக்டக்டக்டக்டக்டக்...  

    இறங்கி குடுமியை அவிழ்த்து ஒரு உதறு உதறி மறுபடி முடிந்து ஆற்றில் இறங்கி நீரை ஒரு கையில் எடுத்துக் குடித்து,  ஒன்னொரு கவளம் நீரெடுத்து  முகம் துடைத்து, உத்தரீயத்தை தண்ணீரில் நனைத்து கழுத்தைச் சுற்றி பெற்றுக்கொண்டு  மரத்தடியில் அமர்கிறார்.  

    முன்னதாக குதிரைக்கும் தண்ணி காட்டுகிறார்!  என்ன வெயில்..  என்ன வெயில்...    

    சுற்றிலும் பார்க்கிறார்.  ஆ..    ரம்யமான சூழ்நிலை.. கண்களை சுற்றுகிறது.  அப்படியே சாய்ந்து ஓய்வெடுக்கத் தொடங்கி தூங்குகிறார்.  தூக்கத்தை வரவழைத்த கண்ணன் கனவில் வருகிறான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா ஸ்ரீராம், நான் அந்தத் தளத்தை வாசித்த போது எனக்கு ஆழ்வார்க்கடியான் நினைவில் வந்தார். அவர் குதிரையில் இப்படி வந்து அவர் குடும்பி ஆடுவதாகப் படம் கூடப் பார்த்த நினைவு எனவே அப்படி அவர் குதிரையில் இருந்து இறங்கி, அப்போது இது காடுதானே...கிட்டத்தட்ட இப்படியான கற்பனை விரிந்தது. காட்சிகளுடன்.

      நீங்களும் கிட்டத்தட்ட நான் கற்பனையில் விரித்தது போன்று விரிச்சிருக்கீங்க!!!

      என் கற்பனையை ஏனோ பதிவில் சொல்ல விட்டுப் போச்சு. இப்போதெல்லாம் இப்படித்தான். பல விஷயங்களை விட்டுவிடுகிறேன். வீடியோ கூட இணைக்க கேப் விட்டுட்டு அப்புறம் நெல்லையின் கமென்ட்ஸ் பார்க்கறப்ப தான் ஆ வீடியோ இணைக்க மறந்துட்டேனே என்று அப்புறம் இணைத்தேன். இசை சேர்த்து.

      நன்றி ஸ்ரீராம். உங்கள் கற்பனையை ரசித்தேன் மனதில் காட்சிகள் விரிந்தன,

      கீதா

      நீக்கு
    2. ஆ ஸ்ரீராம் உங்களுக்குச் சென்னை நினைவு ...அதான் என்ன வெயில் என்ன வெயில்னு சொல்லிருக்கீங்க!!!! அப்போது இப்பகுதி காடாக இருந்திருக்கும். குளு குளுன்னுதான் இருந்திருக்கும்!! என்று தோன்றியது. என் கற்பனையில் பெங்களூர் காலநிலைதான் ஓடியது!!!!! பனி சூழ் என்று...

      கீதா

      நீக்கு
  12. அவர் அம்மாவுக்கு நேர்ந்த அனுபவம்...    இப்படி எல்லாம் ஏன் நமக்கு நடக்க மாட்டேன் என்கிறது?  அல்லது எனக்கு பக்தி பத்தாது. 

    ஆனாலும் இப்படிப்பட்ட குறையுடை மாந்தர் கனவில்தானே கண்ணன் வந்து  எங்களை திருத்த வேண்டும்? என் மூலம் சாதித்துக்கொள்ள கடவுளுக்கு ஒரு வேலையும் இல்லை போல..  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், முதல் லைனில் என்னையும் சேர்த்துக்கோங்க!!! ஹாஹாஹா!

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  13. மனிதர்களுக்கு தெரிந்திருக்கிறது, தாங்கள் நிறைய பாவங்கள் செய்கிறோம் என்று..  அவற்றைத் தீர்க்க எங்கேயாவது ஒரு க்ஷேத்திரம், நீர்நிலை கிடைத்தால் விடமாட்டேன் என்கிறார்கள்.  ஜீன்சை களைந்து, வேஷ்டி அணிந்து துண்டும் சொம்புமாக வந்து அமர்ந்து விடுகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா.... இருபது, நாற்பது வருடங்களுக்கு முன்னால், நவக்ரஹக் கோயில் மற்றும் பல பரிகாரக் கோயில்களுக்கு இவ்வளவு கூட்டம், சுற்றுலாக்கள்லாம் இருந்ததா? எத்தைச் செய்தால் பித்தம் தீரும் என்ற எண்ணம் எல்லோருக்கும் மிக அதிகமாகிவிட்டது.

      நீக்கு
    2. ஹாஹாஹா சிரித்துவிட்டேன் ஸ்ரீராம், ஆமாம். அதே தான்...

      இதில் எனக்கு நிறைய கேள்விகள் உண்டு...எண்ணங்களும்...

      கீதா

      நீக்கு
    3. நெல்லை ஹைஃபைவ்....சொல்ல நினைத்தேன் அப்புறம் வம்பாகிடப் போகுதேன்னு சொல்லாம போனேன்...

      கீதா

      நீக்கு
  14. புதர்களுக்கு நடுவே ஜன்னல்கள் மட்டும் தெரியும் அந்த வீடு போன்ற அமைப்பைப் பற்றி குறிப்பில்லையே...   படிக்கட்டு கட்டிடத்தின் பின்பக்கமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வீடல்ல ஸ்ரீராம், ரோட்டோடு சமதரையில்....அது அடுத்தாப்ல ஒரு கோவில் படம் இருக்கும் பாருங்க அதற்கு சைடில் இருந்தது. ஒரு வேளை அப்ப பூஜை செய்தவங்க இல்லை, அங்கு தங்கி நீத்தார் கடமைகளை செய்ய தங்குவதற்கான இடமாக இருந்திருக்கலாம். பெரிய படித்துறை மண்டபம் ஒரு படத்தில் பின்னில் தெரியும்...நான் பாலத்தில் இருந்து எடுத்ததால் அதை எனக்கு சரியாக எடுக்க முடியாதபடி மரங்கள் ....இறங்கி அல்லது சுற்றி கிட்டத்தட்ட 10 நிமிடம் நடக்க வேண்டும் முன்பக்கம் செல்ல. பாலத்தின் இருபக்கமும் படித்துறை, மண்டபங்கள் இருக்கின்றன. அருகில் சென்று பார்த்தால்தான் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்.

      ஆமாம் படித்துறை கட்டிடத்தின் பின் பக்கம் தான். கட்டிடத்திற்குப் படிக்கட்டுகள் இல்லை. கோவிலின் பின் புறம் படித்துறை ஆனால் அவ்வழி செல்ல முடியாதடி புதர்களூம் அழுக்குக் குப்பைகளும் கிடந்தன.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  15. கட்டிடங்கள் நூறாண்டுகள்தான் பழமை என்று சொல்ல முடியவில்லை.  இன்னும் அதிகம் இருக்குமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூறாண்டுகளுக்கும் மேலாக இருக்கலாம் ஆனால் அவங்க மைசூர் மஹாராஜா காலம்னு சொல்லறாங்க அந்த ஆய்வுக்கட்டுரையில். ஆனால் சரியான வருடங்கள் இல்லை எந்த மஹாராஜா என்றும் தெரியவில்லை.

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை ரங்கனத்திட்டு விற்குப் பிறகு தாங்கள் சென்ற இடமாகிய பஸ்சிமவாஹினி ஆறும், அதன் பெயர் காரணங்களுடன் படிக்க ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. அதனைப் பற்றி பதிவர் ஸ்ரீ நிதி துரைசாமி அவர்கள் சொன்னதையும் படித்து தெரிந்து கொண்டேன். /

    /‘காவிரி, ஹேமவதி, லோகபாவனி எனும் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இணைகிறது. அந்த இடத்தை 'சங்கம்' என்று சொல்கிறார்கள்.//

    இங்கும் வட நாட்டில் யமுனா, கங்கை, கோதாவரி ஆறுகள் இணைவது போல இணைந்து நதி விஸ்தீரணமடைவதை தெரிந்து கொண்டேன். ஒவ்வொன்றிக்கும் ஒரு காரணங்களை அந்த இயற்கையே நமக்கு அளித்திருக்கிறது அல்லவா?

    அந்த நதியின் பயன்கள் அனுமன் கோவில் வெள்ளி கவசம் உண்டான விதம் யாவும் அருமை. தங்கள் படங்கள் மிக நன்றாக உள்ளது. முதல் படம் ஈர்க்கிறது. இதன் பின்தான் ஸ்ரீ ரங்க பட்டிணம் கோவிலா? காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா இது வழியில் பார்த்தது. என் லிஸ்டில் இல்லை எனவே இறங்கிப் பார்க்க நேரமில்லை.

      //பதிவு அருமை ரங்கனத்திட்டு விற்குப் பிறகு தாங்கள் சென்ற இடமாகிய பஸ்சிமவாஹினி ஆறும், அதன் பெயர் காரணங்களுடன் படிக்க ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. அதனைப் பற்றி பதிவர் ஸ்ரீ நிதி துரைசாமி அவர்கள் சொன்னதையும் படித்து தெரிந்து கொண்டேன். ///

      நன்றி அக்கா

      ஆமாம் அக்கா அதனால்தான் தென்னகத்திற்கு இது காசி கயா பிரயாக்ராஜ் போன்று என்று சொல்றாங்க.

      நன்றி கமலாக்கா, ஆமாம் அடுத்த பகுதி ஸ்ரீரங்கப்பட்டினம் கோவில்.

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  17. பெயரில்லா31 மே, 2025 அன்று 5:25 AM

    Anytime a river makes a u turn and flows towards its source, the place is considered holy; including Benares. This is because it reminds us to make a u turn and start looking inwards instead of busy running chasing worldly pleasures/activities.

    பதிலளிநீக்கு