வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

பார்வதி அக்கா - நிறைவுப்பகுதி


யாரோ என் தோளில் கை வைக்கத் திரும்பினேன். கோபி அண்ணன்!! அவரும் அக்காவின் நினைவில் மூழ்கியிருந்திருக்க வேண்டும். பார்வதி அக்காவின் இளைய தம்பியான அவர் 1980ல் தன் பழைய அம்பாசிடர் சீருந்தை மாற்றி, புதிய “மார்க் 4” சீருந்தை வாங்க முடிவு செய்த போது பலவந்தமாக அவரிடமிருந்து அப்பணத்தை எடுத்துச் சென்று, தனது மற்றும் தனது மற்றொரு தம்பியான விஜயனின் கையிலிருந்த பணத்தையும் சேர்த்து, அணைக்கரையில் 5 ஏக்கர் இடம் அவர் பெயரில் வாங்கிக் கொடுத்தார். இதை எல்லாம் சொல்லியதைக் கேட்டபோது, சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் கோபி அண்ணன், பார்வதி அக்கா அவருக்கு இது போன்ற தேவையான உதவிகளைத் தக்க தருணத்தில் அவரது சம்மதத்திற்குக் கூடக் காத்திருக்காமல் செய்ததை அசைபோட்டுக் கொண்டிருந்திருக்க வேண்டும் என நினைத்தேன்.

நோய்வாய்ப்பட்டு பிறர் உதவியின்றி எங்கும் செல்ல முடியாது எனும் நிலை வந்ததும் பார்வதி அக்கா தன் சொத்துக்களை எல்லாம் விற்று, தம்பி, தங்கைகளுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் கொடுத்து மீதம் வந்த 15 லட்சம் ரூபாயை தன் பெயரில் வங்கியில் போட்டு வைத்திருந்திருக்கின்றார். எனவே அவரைத் தங்களுடன் வைத்துக் கொள்ள யாருக்கும் தயக்கம் இருந்திருக்கவில்லை போலும். மட்டுமல்ல அவருக்குத் தேவையான மருத்துவ செலவுகளுக்கு வேறு யாரையும் நாட வேண்டிய அவசியமும் இல்லாமலேயே போனது. அப்படி 84 ஆண்டுகள் வாழ்ந்து, எல்லோருக்கும் தன்னால் ஆன உதவிகளைச் செய்து மறைந்த பார்வதி அக்காவின் உடலை எரிக்கத் தேவையான பொருட்களுடன் ஒரு சிறிய வண்டி வந்து நின்றது. ஒருவேளை பணம் இல்லாதிருந்திருந்தால்? என்ற எண்ணமும் கூடவே வரத்தான் செய்தது. உலகம் அப்படித்தானே இயங்குகின்றது! நல்ல காலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அக்காவை புறம்தள்ளிவிடாமல் பாதுகாத்தது மனதிற்குச் சற்று ஆறுதலாகவும் இருந்தது.

என் மனதிலும் பார்வதி அக்காவின் பேச்சுகளும், செயல்களும், சிரிப்பும் மாறி மாறி வந்தாலும், விடை கிடைக்காத ஒரு சம்பவம் என்னை வருத்தியது. பெரியப்பா (என் அப்பாவின் அண்ணன், பார்வதி அக்காவின் அப்பா) நான் 5 ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது ராசிங்கபுரத்தில் எங்களுடன் தங்கியிருந்த வேளையில்தான் இறந்தார். அவரது உடல்நிலை மோசமானதை உணர்ந்த அப்பா அவர் இறப்பதற்குச் சிலநாட்களுக்கு முன் அவரிடம், “அண்ணா வீட்டுக்குப் போய் கொஞ்ச நாள் தங்கினால் தெம்பாயிடுவீங்க” என்றதும், “உனக்கு நான் பாரமா? சொல்லு. நான் எங்கேயாவது போய்க்கிறேன். ஆனா, அங்கே மட்டும் போக மாட்டேன்”, என்று சொன்னது என் காதில் மீண்டும் ஒலித்தது. 

வேலையும், சம்பளமும் உள்ள அக்காவுக்கும் அவரைச் சார்ந்து வாழ்ந்த பெரியப்பாவுக்கும் இடையே அந்த நாட்களில் எப்போதோ ஏற்பட்ட வாக்குவாதத்தில் வேதனை தரக்கூடிய வார்த்தைகளை அக்கா பெரியப்பாவிடம் சொல்லியிருக்கலாம். அதற்கான காரணம் என்னவானாலும், அப்படிச் சொன்னதற்காக, பெரியப்பாவின் மரணத்திற்குப் பின் அக்கா எவ்வளவோ வருந்தியிருக்கலாம். எப்போதுமே உயிருடன் இருக்கும் வரை ஒருவரது மதிப்பு, சிறப்புகள், நல்லவை தெரிவதில்லை. அவர்களைப் பற்றிய மனவருத்தங்கள் மட்டுமே தலை தூக்கி நின்று, பேச்சு வார்த்தைகள் கூட இல்லாமல் இருக்கின்றோம்.  ஆனால், அவ்வுயிர் மறைந்ததும் பல சமயங்களில் அதன் மதிப்பு தெரிந்து, நாம் உதாசீனப் படுத்தியது நினைவில் வந்து மோதிட மனம் வேதனை அடையும்.

“தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.”

என்ற வாக்கின் பொருளறிந்த நாமெல்லாம் நாவை அடக்கத் தவறி இது போல் தவறு செய்தவர்களோ, செய்யப் போகிறவர்களோதானே. அது போல் அக்கா “எங்களுக்குத் தந்தது போதாது என்றோ ஒன்றும் தரவில்லை என்றோ சொல்லி அங்குக் கூடியிருக்கும் பலரும் நாவினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுட்டதாகப் பலரும் சொல்லக் கேட்டேன். அவர்களும் அப்போது அங்கு நின்று, “அன்றைக்குப் பார்வதி அம்மாகிட்ட-அக்காகிட்ட அப்படிப் பேசாம இருந்திருக்கலாம்!” என்று வருந்திக் கொண்டும், மன்னிக்க வேண்டிக் கொண்டும் நின்று கொண்டிருந்திருப்பார்களோ என்று தோன்றியது.
 
3 மணிக்கு இறுதிச் சடங்குகள் தொடங்கி 3.30 மணிக்கு உடல் எரிக்கப்பட்டது. இனி பார்வதி அக்கா நினைவுகளில் மட்டும் வாழ்வார் – அதுவும் அவரை நினைப்பவர்கள் வாழ்ந்திருக்கும் வரை மட்டும்! அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொண்டு அண்ணஞ்சி செல்லும் நந்தகுமார் அண்ணனின் வண்டியில் தேனி வரை சென்று அங்கிருந்துப் பேருந்தில்  பொள்ளாச்சி வழி பாலக்காடு செல்லப் பயணித்தேன். 5.30 மணிக்குத் தேனி பேருந்து நிலையத்தில் வண்டி நின்றதும் நன்றி கூறி இறங்கினேன்.


முல்லைப் பெரியார் அணை கட்டி 4 மாவட்டங்களுக்கு குடிக்க, மற்றும் விவசாயம் செய்யத் தேவையான தண்ணீர் தந்த மனிதருள் மாணிக்கமான பென்னிக்விக்கின் நினைவாக நிறுவப்படும் அப்பேருந்துநிலையத்தைப் பார்க்கவே பெருமையாக இருந்தது. உயிர் பிரிந்தால், உடலுக்குத்தான் அழிவு, உயிரோடு இருந்த போது நாம் செய்யும் நற்செயல் ஒவ்வொன்றும் அதன் தகுதிக்கேற்ப இது போல் வரலாற்றின் பாகமாய் மாறி சாகாவரம் பெற்று நிற்கும்தானே! நாம் சாதனைகள் எதுவும் புரியவில்லை என்றாலும், வரலாற்றில் இடம்பெறவில்லை என்றாலும், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மனதில், நம் இறப்பிற்குப் பிறகும் வாழ்ந்திடவேனும் எல்லோரிடமும் அன்பு செலுத்தி வாழ்ந்திடுவோம்!


40 கருத்துகள்:

  1. உங்கள் நெகிழ்வில் நானும் பங்கு கொள்கிறேன். நீங்கள் சொல்லியுள்ள கருத்து உண்மையானது, உணர்வு பூர்வமானது. இருக்கும்போது குறைகளை மறந்து, நிறைகளை நினைந்து வாழப் பழக வேண்டும். வல்லிமா கூட சமீப காலங்களில் அதிகம் வலியுறுத்தும் கருத்து இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். இந்தப் பதிவு எழிதியிட்ட அன்று எனது ராசிங்கபுரத்துச் சிறுவயது முதல் நண்பனின் மரணச் செய்தி. இருந்தது சென்னையில்தான். சென்ற வருடம் கூடச் சந்தித்தேன். கடந்த ஒரு மாதமாக வீட்டிலிருந்து வெளியே தங்கியிருந்திருக்கின்றான் நண்பர் ஒருவரின் வீட்டில். தையல் தொழிலைத் தொடர்ந்து கொண்டு. மனைவியும் மகனும் சென்று பார்க்கவில்லையாம். பெரிய பையன் மனஸ்தாபம் கொண்டு பிரிந்து விட, சின்னவன் அவனைக் கொள்ளி வைக்கக் கூடாது என்று சொல்லிவிட சின்னவனும், வீட்டில் சுப காரியம் நடக்கவிருப்பதால் வீட்டிற்கு உடலைக் கொண்டுவரக்கூடாது என்று சொல்லிவிட்டு நண்பனின் வீட்டில் உடலை வைத்தவிட்டு தானும் கொள்ளிவைக்க மாட்டேன் சுபகாரயம் வருவதால் என்று சொல்லி அவன் நண்பன் தான் கொள்ளிவைத்திருக்கின்றான். இதைக் கேட்டதும் மனது என்னவோ செய்துவிட்டது. இப்படியுமா பிள்ளைகள்...இக்காலத்து இளைஞர்கள்? என்று எண்ண வைத்தது. ஒரு குடும்பம் என்றால் மனக் கசப்புகள் வருவது வழக்கம்தான் ஆனால் இப்படியுமா என்று மனது மிகவும் வேதனை அடைந்துவிட்டது.

      உங்கள் கருத்திற்கு ஏற்ப ஒன்று நிகழ்ந்ததால் அதுவும் இந்தப் பதிவு வெளியிட்ட தருணத்தில் என்பதால் இங்கு..

      மிக்க நன்றி ஸ்ரீராம் தங்களின் கருத்திற்கும்வ் வருகைக்கும்

      நீக்கு
  2. //எப்போதுமே உயிருடன் இருக்கும் வரை ஒருவரது மதிப்பு, சிறப்புகள், நல்லவை தெரிவதில்லை. அவர்களைப் பற்றிய மனவருத்தங்கள் மட்டுமே தலை தூக்கி நின்று, பேச்சு வார்த்தைகள் கூட இல்லாமல் இருக்கின்றோம். ஆனால், அவ்வுயிர் மறைந்ததும் பல சமயங்களில் அதன் மதிப்பு தெரிந்து, நாம் உதாசீனப் படுத்தியது நினைவில் வந்து மோதிட மனம் வேதனை அடையும்.//

    //நாம் சாதனைகள் எதுவும் புரியவில்லை என்றாலும், வரலாற்றில் இடம்பெறவில்லை என்றாலும், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மனதில், நம் இறப்பிற்குப் பிறகும் வாழ்ந்திடவேனும் எல்லோரிடமும் அன்பு செலுத்தி வாழ்ந்திடுவோம்!//

    யதார்த்தமானதோர் உண்மையை மிகவும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வைகோ சார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  3. மரணமும் அதனைச் சார்ந்த விடயங்களையும் சொல்ல விதம் நன்று மறைந்த பிறகும் நாம் பேசப்பட வேண்டும் அதுவே நாம் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...உண்மைதான்

      நீக்கு
  4. பதில்கள்
    1. மிக்க நன்றி நாகேந்திர பாரதி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  5. மனம் வருந்துகிறது

    மனதால் சுடாமல் வாழலாம்.

    எல்லோரிடமும் அன்பு செலுத்தி வாழ்வோம். நன்றாக சொல்லி முடித்தீர்கள் சகோ.

    தம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி உமையாள் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
    2. மிக்க நன்றி உமையாள் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  6. உங்களின் நெகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன் துளசி சார்...

    பார்வதி அக்காவின் ஆன்மா சாந்தியடையட்டும்...

    எல்லோரிடமும் அன்பு செலுத்துவோம்... அன்பை விதைப்போம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி குமார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  7. பதில்கள்
    1. மிக்க நன்றி சித்ரா சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  8. உங்கள் கருத்தே எனதும் அண்ணா. ஒரு நாள் அழியப் போவது தெரிந்திருந்தும் ஏச்சுப்பேச்சுகளும் கோபதாபங்களும் என்று பலருக்கும் வாழ்க்கை ஓடுகிறது.
    இருக்கும்போது மகிழ்வாக அன்பாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
    தேவையான கருத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி க்ரேஸ் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
  9. பார்வதி அக்கா பற்றிய நினைவுகள் சொன்ன இரண்டு பதிவுகளையும் ஒன்றே படித்தேன்..... நெகிழ்ச்சி.

    அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  10. பதில்கள்
    1. மிக்க நன்றி செந்தில்குமார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  11. உங்களது உணர்வினை அறியமுடிகிறது. மனதை வருடிவிட்டீர்கள் தங்கள் பதிவு மூலமாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  12. அன்புள்ள அய்யா,

    ‘பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது

    காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்...?’

    நன்றி.

    த.ம.5



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மணவையாரே தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  13. மனதை மிகவும் நெகிழ வைத்த பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  14. ஒருவர் இறக்கும் போது விழிநீரைப் பெற வேண்டும் உமிழ்நீரை அல்ல என்றுஇருப்பவர்கள் தெரிந்து கொண்டால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் அருமையான கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  15. >>> எல்லோரிடமும் அன்பு செலுத்தி வாழ்ந்திடுவோம்!..<<<

    தங்கள் பதிவு மனதை நெகிழச் செய்து விட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  16. முல்லைப் பெரியார் அணை கட்டி 4 மாவட்டங்களுக்கு குடிக்க, மற்றும் விவசாயம் செய்யத் தேவையான தண்ணீர் தந்த மனிதருள் மாணிக்கமான பென்னிக்விக்கின் நினைவாக நிறுவப்படும் அப்பேருந்துநிலையத்தைப் பார்க்கவே பெருமையாக இருந்தது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  17. வணக்கம்

    மனதை நெகிழவைத்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் அனைவரிடமும் அன்பாக இருப்போம்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  18. நீங்கள் சொல்வதை மயான வைராக்கியம் போல் மறந்து விடாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே என் விருப்பமும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்கனன்றி பகவான் ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  19. இரண்டு பாகங்களும் படித்தேன். தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி இருந்தாலும், சராசரி மனிதர்களை விட நிறைவான வாழ்வையே வாழ்ந்திருக்கிறார் பார்வதி அக்கா. அவருக்காக நீங்கள் கண்ணீர் சிந்த வேண்டியதில்லை.

    ஒரு கருத்து! இறுதிக் காலத்தில் உங்கள் பெரியப்பா அப்படிச் சொன்னதற்குப் பார்வதி அக்கா அவரை ஏதேனும் சொல்லி அதனால் ஏற்பட்ட மனக்கசப்புதான் காரணமாயிருந்திருக்க வேண்டும் என்று கட்டாயமில்லையே? ஒருவேளை, தன் வயிற்றில் பிறந்த பெண் ஒருத்தி வேற்றுச் சமயத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்த அந்த வெறுப்பு உங்கள் பெரியப்பாவின் மனதில் இருந்து, அது கூட அந்த இறுதிக் கால வார்த்தைகளுக்குக் காரணமாயிருந்திருக்கலாம். எனவே, காரணம் தெரியாமல் நீங்கள் பார்வதி அக்காவை ஐயுற வேண்டியதில்லை. மேலும், அப்படியே பார்வதி அக்கா ஏதாவது சொல்லியிருந்தாலும் தான் விரும்பிய வாழ்வை அவர் பெற முடியாமல் தன் சமயவெறியால் தடுத்தவர் உங்கள் பெரியப்பா. உங்களுக்குப் பெரியப்பா என்பதை விட அவருக்கு அப்பா அவர். ஆகவே, எப்படிப் பார்த்தாலும் அவரை ஏதும் சொல்ல அவருக்கு உரிமை உண்டு.

    உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மாந்தர்கள் தொடர்பான இந்தப் பதிவு பற்றி நான் இப்படிப் பொதுவெளியில் கருத்துரைப்பது நாகரிகமாகுமா என்று தெரியவில்லை. இருந்தாலும், ஏதோ இதைச் சொல்ல வேண்டியது தேவை என்று தோன்றியது, சொல்லி விட்டேன். தவறெனில் மன்னித்து இந்தக் கருத்தை அழித்து விடுங்கள்!

    அதே நேரம், தான் விரும்பிய வாழ்வைப் பெற முடியாமல் போன அந்த ஏமாற்றம்தான் பெண்கள் சொந்தக் காலில் நிற்கச் சங்கம் தொடங்குவது உட்படத் தன்னைச் சுற்றி வாழ்ந்த பலருக்கும் இத்தனை இத்தனை நன்மைகளைச் செய்ய அவரைத் தூண்டியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இபுஞா நண்பரே தங்களின் வருகைக்கும், விரிவான கருத்திற்கும். தவறில்லை நீங்கள் சொல்லியதில். இது அங்கு எழுந்த சில பேச்சுகளின் அடிப்படையிலும் எங்களுடன் பெரியப்ப இருந்ததால் எழுந்த எனது யூகங்களின் அடிப்படையில் எழுந்த எனது சில எண்ணங்களை, நாம் சிலசமயம் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று சொல்லுவது போல் எழுந்த எண்ணங்களைத்தான் பகிர்ந்திருந்தேன் அல்லாமல் இதுதான் சரி என்றோ தவறு என்றோ அல்ல.
      //அதே நேரம், தான் விரும்பிய வாழ்வைப் பெற முடியாமல் போன அந்த ஏமாற்றம்தான் பெண்கள் சொந்தக் காலில் நிற்கச் சங்கம் தொடங்குவது உட்படத் தன்னைச் சுற்றி வாழ்ந்த பலருக்கும் இத்தனை இத்தனை நன்மைகளைச் செய்ய அவரைத் தூண்டியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.// ஆம் அது சரிதான். எனக்கும் தோன்றியதுதான். இத்தனை நன்மைகள் செய்தும் மனித மனம் எப்படி எல்லாம் சிந்திக்கின்றது என்பதை அங்கு கண்ட போதும் கேட்ட போதும் சில வருத்தங்கள் எழுந்தது. அதைத்தான் சொல்லியிருந்தேன். அக்கா இறந்தது பற்றி வருத்தம் இருந்தாலும் அது அழுகையாக எல்லாம் இல்லை. அவர் நன்றாகவே வாழ்ந்துதான் இறந்தார். ஒருவர் இறக்கும் போது ஏற்படும் மனித உணர்வுகளைத்தான் முக்கியப்படுத்திச் சொல்லியிருந்தேன். உங்கள் கருத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்...

      மீண்டும் மிக்க நன்றி இபுஞா தங்களின் ஆழமான கருத்திற்கு.

      நீக்கு
  20. மரணத்தின் கடைசிநாட்கள் பலரை பலவாறு சிந்திக்க வைக்கின்றது வாழும் போதும் வாழ்ந்துமுடித்த போதும் கடமையில்லாமல் வழிகாட்டிய பார்வதி அக்கா ஆத்மா சாந்தியடையட்டும்.நெகிழ்ச்சியான விடயம் நெஞ்சில் வாழும் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம் நேசன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு