சனி, 17 ஆகஸ்ட், 2013

காக்கா கூட்டத்தப் பாருங்க.....

காக்கா கூட்டத்தப் பாருங்க.........



இன்று நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பும் சமயம் ஏதோ ஒன்று  தொப்பென்று  என் முன்பு விழுந்ததுஎன்னவென்று பார்த்தால் அது ஒரு இறந்த சுண்டெலி.  
ஒரு காகம் என் தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்ததுஅதன் வாயிலிருந்து விழுந்திருக்க வேண்டும். ஏனென்றால், அது என் தலையையே சுற்றிக் கொண்டு இருந்தது, தரையிறங்கும் விமானம் சில சமயம் இறங்க முடியாமல் சுற்றிக் கொண்டே இருக்குமே அது போல அதுகா காஎன்று எதற்குக் கத்தியதோ தெரியாது.
ஆனால் அங்கு பல காகங்கள் கூடி விட்டனஉடனே, “ஆஹா இதுதான் காகத்தோட குணமேதனக்குக் கிடைச்சத மத்த காக்காய்களுடன் பகிர்ந்துக்கத்தான் கத்தியிருக்கும்னு நினைச்சு புல்லரிச்சுடாதீங்கஅது ஒரு வேளை,இவன் இங்க நின்னுகிட்டே இருக்கானே நாம தவறவிட்ட சுண்டெலியை எப்படி எடுக்கறதுமத்த காக்கா சனியங்கள்ளாம் வேற வந்து தொலைச்சுடுமேஎன்று எனக்கு ஒரு அறிவிப்பாகக் கூட கத்தியிருக்கலாம். (ஆஹா! என்ன டைமிங்க்நம்ம மக்கள் எல்லாரும் காக்காயை சனி பகவானாகத்தானே நினைக்கிறாங்க!) அதுக்காக நான் நகர முடியுமா? அங்கு இருக்கும் பெட்டிக் கடையின் பக்கத்தில் சுவரில் தொங்கிக் கொண்டு இருந்த பேப்பர்களில்,


நடிகர் சிவக்குமாரின் ரீமேக்கில், அவரது மகன் நடிகர் சூர்யா”. (சூர்யாவைப் பற்றிய செய்திகள் என் கண்ணில் படாமல் போகாது)

பவர் ஸ்டார், ராஜகுமாரன்லாம் ஜெயிச்சுட்டுப் போகட்டுமே”- அதாங்க, நம்மசெண்பகமே செண்பகமேலிப்ஸ்டிக் நாயகன் ராமராஜனின் பேட்டி.

"ஹன்சிகாவைக் காதலிக்கிறேன்...எங்கள் திருமணம் நிச்சயம்"...இது சிம்பு சிக்ஸர்.

"சந்தானம் ஆவது எப்படி?  சந்தானத்தையே கேட்டுருவோம்"

ஹாலிவுட் நீலாம்பரிகள்.....வில்லன்களின் அழகிய அல்லக்கைகளாக வரும் வில்லிகள்....”

இப்படிப்பட்ட, ரொம்ப முக்கியமான, பரபரப்பான, காரசாரமான, சூடான செய்திகள்,  பளிச்சுடும் போது வாசிக்காமல் வர முடியுமா? சொல்லுங்கள்.  இது அந்தக் காகத்திற்கு எப்படித் தெரியப் போகிறது?

நான் சுவரொட்டிகளில் என்னை மறந்து இருந்தபோது திடீரென்று என்னைச் சுற்றி ஏகப்பட்டக் காக்கைகள். எல்லாம் நம் தமிழ் படங்களில் வரும் வில்லன் கோஷ்டிகள்ஏய், ஏய்என்று டாட்டா சுமொ காரில் கத்திக் கொண்டு வருவது போல, கா கா என்றுக் கத்திக் கொண்டு பறந்து பறந்து வட்டமடித்தன, அந்த சுண்டெலிக்காகஇனியும் அங்கு இருந்தால் என்னையும் கொத்தி கொத்துப் பரோட்டா ஆக்கி விடும் என்று நகரத் தொடங்கினேன்அங்கு நடந்த சண்டையைப் பார்க்க வேண்டுமேயாரைய்யா சொன்னது காகங்கள் ரொம்ப ஒற்றுமையானவை, தங்கள் உணவைப் பகிர்ந்துண்ணும் என்று
ஒரு காகம் மட்டும் மற்றக் காகங்களை அருகில் வர விடாமல் துரத்தியதை இந்த இரண்டு கண்களால் பார்த்தேன்வீட்டிற்கு வந்து சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தபொழுது,
ஜன்னலில் ஒரு காகம் வந்து உட்கார்ந்து கா கா என்று கரையத் தொடங்கியதுஇது என்ன அதே காகம், சுண்டெலியைத் தவறவிட்ட அதே காகம்! “அதெப்படி உனக்குத் தெரியும்? அதே காக்கைதான்னுஎல்லா காக்கைங்களும் ஒரே மாதிரி கறுப்பு நிறமாத்தானே இருக்குவித்தியாசம் தெரியுமா என்ன? நீ என்ன பெரிய நிபுணனா இல்ல நீ உட்டான்ஸ் விடரியாஎன்று நீங்கள் என்னை நக்கலடிப்பது கேட்கிறதுஆனால், என்னை நம்புங்கள் அதே காக்கை தான்அதன் காலில் ஒரு நூல் தொங்கியதை அது எலிக்காக சுற்றும்போதே நான் கவனித்திருந்தேனே! அதை வைத்துத்தான் அதே காகம் என்று சொல்கிறேன்.

உன்னால்தானே எனக்குக் கிடைக்க வேண்டிய இன்றைய சாப்பாடு கிடைக்காமப் போச்சுஅதனால எனக்கு ஏதாவது கொடுனுமுறையிட்டுக் கேட்கிறதோ? இருக்கலாம் என்று ஜன்னல் விளிம்பில் சாதம் வைத்தேன். ‘ஹும் உன் சாதம் யாருக்கு வேண்டும்என்பது போன்று அதைக் கண்டு கொள்ளாமல் கரைந்து கொண்டே இருந்ததுஉங்களுக்குத் தெரியுமாஒரு சிலர் வீடுகளில் காக்கையை சனிபகவானின் உருவில் நினைத்து சாதம் வைக்கும் வழக்கம் உண்டுஇப்போதெல்லாம் காகங்கள்  சாதத்தைக் கண்டு கொள்வதில்லைஇந்தியா நீரிழிவு நோயின் தலைநகரமாக இருப்பதால் காக்கைகளுக்கும் சர்க்கரை நோய் இருக்கிறதோ? ஏனென்றால் காகங்கள் இப்பொழுதெல்லாம், ரொட்டி, தோசை, இட்லி, சப்பாத்தி, பிஸ்கட் போன்றவற்றைத்தான் சாப்பிடுகின்றனபின்னர் தோசைத் துண்டு வைத்தேன். அதை உடன் கொத்திக் கொண்டு பறந்து விட்டதுஇதையும் எங்கும் தவற விடாமல் இருந்தால் சரிஏனேன்றால் அந்தக் காகம் திரும்பி வந்தால் என்னிடம் போடுவதற்குக் காய்ந்த ரொட்டித் துண்டுகள் தான் இருந்தன. அதை ஏன் கேட்கிறீர்கள், இப்போதெல்லாம் காக்கைகள் காய்ந்து போனவற்றைத் தொடுவதில்லைஒருவேளை நமக்குக் கடிக்க முடியாமல் பல் பிரச்சினை வருவது போல காகங்களுக்கும் அலகுப் பிரச்சினை இருக்குமோகாக்கைகளின் அலகுகளைப் பற்றி நிபுணத்துவம் பெற்ற, சர்க்கரை நோய் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க உதவும் கால்நடை மருத்துவர் யாராவது இருக்கிறாரா என்று என்  மகனைத்தான் கேட்க வேண்டும். நகர வாழ்க்கைக்குப் பழகி விட்டனவோ இந்தக் காகங்கள்


   
 என் நண்பர் கேரளாவில் சற்று அமைதியான, நகர வாழ்க்கைக்கு அடிமையாகாத இடத்தில் வசிக்கிறார்சமீபத்தில் தான், தன் பெற்றோர்களின் நினைவு நாளை அனுஷ்டித்தார்
அவர் கண்டிப்பாகக் காக்கைக்குச் சாதம் படைத்திருந்திருப்பார்காக்கை அதை உண்டதா, என்ன செய்தது என்று கேட்டுப் பார்த்தால். நகரத்துக் காக்கைகளுக்கும், நகர வாழ்க்கைக்கு அடிமையாகாத அவரது பகுதிகளில் வசிக்கும் காக்கைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்பது தெரிந்து விடும் என்று நினைத்து, நண்பரிடமே அதைக் கேட்டும் விட்டேன். அவர் கூறியது எனக்கு இன்னும் வியப்பைத் தந்தது என்றுதான் சொல்ல வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள காக்கைகளும் கூட இப்போது சாதம் படைத்தால் சாப்பிடுவது இல்லையாம். கை தட்டிக் கூப்பிடும் பழக்கம் உண்டல்லவா? அப்படிக்  கூப்பிட்டாலும் அவை வருவதில்லையாம். கிராமப்புறங்களிலும்  இறைச்சிக் கடைகள் மிகுந்து விட்டதால் காக்கைகள் அங்குதான் மதி மயங்கிக் கிடக்கின்றனவாம். அப்படியென்றால் பொதுவாகவே காக்கைகளுக்கு வந்த இந்த மாற்றம் காக்கையையே தன் வாகனமாகக் கொண்டு திருநள்ளாரில் இருக்கும் சனிபகவானுக்குத் தெரியாமல் போய்விட்டதோ?  மற்றப் பிரச்சினகளைச் சொல்வது போல் இந்தக் காக்கைகளைப் பற்றியும் சொல்லிக் காக்கைகளுக்கு ஒரு மாற்றம் வர அவரையே வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை.  அவர் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவருவார் என்று நம்புவோம்.  அவரால் மட்டுமே முடியும்.  

சிறிது நேரம் கழித்து நான் கடைக்குச் சென்ற போது அந்தச் சுண்டெலி அதே இடத்தில் இருந்ததைப் பார்த்து எனக்கு ஒரே வியப்பு. சண்டை போட்டதென்னவோ இதற்காகத்தான்ஆனால் எந்தக் காக்கையுமே அதைக் கொண்டு போகாமல் இங்கேயே கிடக்கிறதேசுண்டெலி ருசியாக இல்லையோ?!  அப்படியென்றால் எந்தக் காகம் தவறவிட்டதோ அதற்கும் கிடைக்கவில்லை போலும்அதனால்தான் ஜன்னலில் வருகைஎல்லா காகங்களும் சண்டை போட்டுச், சலிப்படைந்துசீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று இதை விட்டு விட்டன போலும்அப்படியென்றால் காகங்கள் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும் நல்லத் தோட்டிகள் என்று நாம் படித்ததை என்னவென்று சொல்வது
நல்லத் தோட்டிகள் என்றால் சென்னை மாநாகரத் தெருக்கள் எல்லாம் ஏன் குப்பையாக இருக்கின்றன? இப்பொழுதெல்லாம் மாடுகளும் இந்தக் குப்பையைத் தின்னும் நிலை வந்து விட்டது.  இப்படியும் இருக்கலாம். சென்னை மாநகராட்சி காகங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்நகரில் உள்ள மரங்களையெல்லாம், மாநகராட்சி, போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரோடு போடுகிறோம், மேம்பாலம் கட்டுகிறோம் என்றும், மெட்ரோ ரயில் பாலம் கட்டுவதாலும், வெட்டிச் சாய்த்து விட்டதால் காகங்களுக்குத் தங்குவதற்கும், ஓய்வு எடுக்கவும் கூட இடம் இல்லை
அதனால் அவை கோபம் அடைந்திருக்கலாம். மக்கள் குப்பைத் தொட்டிகளில் குப்பைகளைக் கொட்டாமல் தெருக்களில் கொட்டுவதாலும், காக்கைகள் கூட்டம் குறைந்து குப்பைகள் அதிகமாக இருப்பதாலோ இல்லையென்றால் காக்கைகளும் தின்னுத் தீர்க்கமுடியாத அளவு குப்பைகள் அதிகமாக இருப்பது கூடக் காரணங்களாக இருக்கலாம்.

இவ்வாறு சிந்தித்தபடி வீட்டிற்கு வந்து அன்றைய செய்தித் தாளை, வீட்டின் முகப்பில் உட்கார்ந்து கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். ஆந்திர மாநிலத்தில் இருந்த தெலுங்கானா பகுதி தனி மாநிலமாகப் பிரிக்கப் பட்டதாகவும், அதைச் சாதகமாக வைத்துக் கொண்டு மற்ற சில மாநிலங்களும் தங்கள் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராடுவதாகவும் செய்தி
திடீரென்று காக்கைக் கூட்டம். கா கா என்று ஒரே கத்தல். முகப்பின் கைபிடிச் சுவர்களிலும், மின்சாரக் கம்பிகளிலும், பக்கத்து வீடுகளில் உள்ள மதில்களிலும் குழுமி கத்திக் கொண்டிருந்தன.
  ஏதாவது இரையா? அல்லது காக்கை ஏதாவது இறந்து கிடக்கின்றதாஎன்று எட்டிப் பார்த்தேன்.
இரண்டு காகங்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்க மற்ற காகங்கள் இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்து, பறந்தும், இடையில் புகுந்தும் தங்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் காட்ட,
ஆதிக்கமுடைய காகம் மற்ற காகத்தை விரட்டி விரட்டி துரத்திவிட அந்தக் காகமும் அதன் ஆதரவாளர்களும் பறந்தே போய்விட்டனஉடன், நான் அப்போது வாசித்த மாநிலப் பிரிவுதான் எனக்கு ஞாபகத்துக்கு வந்ததுஇந்தக் காக்கை கூட்டமும் தங்கள் பகுதியைப் பிரித்துக் கொண்டிருக்குமோ என்று

நாம் காகங்களைப் பற்றிப்  படித்தவையும் இப்போது அவைகளின் செயல்பாடுகளும் வித்தியாசமாக இருப்பதற்குக் காரணம், காகங்களுக்கிடையில் மனிதன் வாழ்ந்த காலம் போய், மனிதர்களுக்கிடையில் காகங்கள் வாழ்வதால், மனிதர்களின் குணாதிசயங்கள் காகங்களுக்கும் வந்து விட்டதோ?! என்றுதான் நினைக்கத் தோன்றுகிறதுகா கா கா காக்கா கூட்டத்தப் பாருங்க  இந்த மோசமான விஷயங்களைக் கத்துக் கொடுத்தது யாருங்க?


6 கருத்துகள்:

  1. அப்துல் ரஹ்மான் அவர்களின் காக்கைச்சோறு எனும் புத்தகத்தை அவசியம் படித்துப்பாருங்கள் தோழி!! கிட்டத்தட்ட இந்த பதிவின் தொடக்கமும் அது போலவே இருந்தது!!! நல்ல ஆராய்ச்சி தான்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! காப்பி எல்லாம் அடிக்கலைங்க. ஹஹஹா நிச்சயமாகப் படிக்கின்றேன் தோழி. மிக்க நன்றி!

      நீக்கு
  2. காகத்தின் குணம் பற்றி நாம்தான் தவறான புரிதலை வைத்திருக்கிறோம் போல! சுவையில்லாத சுண்டெலி என்று அந்தக் கூட்டத்தில் ஒரு காகம் கவிதை கூடப் பாடியிருக்கலாம், அதன் பாஷையில்! காக்கைக் கலவரம் பற்றி ஒரு கவிதை (போல) ஒன்று எழுதி ஃபேஸ்புக்கில் என் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். தேடிப் பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ....நான் ஃபேஷ்புக்கில் இல்லை. துளசி இருக்கின்றார் பார்க்கச் சொல்கின்றேன். பார்த்து எனக்கும் பகிரச் சொல்கின்றேன் நண்பரெ மிக்க நன்றி!

      நீக்கு
  3. அன்புள்ள அய்யா,

    காக்கா கூட்டத்தப் பாருங்க! - நல்ல பகிர்வு.

    ‘காக்கை குருவி எங்கள் ஜாதி...! காக்கை சிறகினிலே நந்தலாலா...நிந்தன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா’ என்றானே பாரதி. அவனின் அடியொற்றி நன்றாக சிந்தித்து இருக்கிறீர்கள்.

    ‘ கிராமப்புறங்களில் உள்ள காக்கைகளும் கூட இப்போது சாதம் படைத்தால் சாப்பிடுவது இல்லையாம்’ .... ஒரு வேளை இலவலசமாக கொடுக்கும் எதையும் நாம் வாங்கக் கூடாது என்ற வைராக்கியமாக இருக்குமோ?

    தேடித் தினம் சோறு தின்னும் வாடிக்கை மனிதர்போல் இருந்துவிடக்கூடாது என்று எண்ணியிருக்குமோ?

    பகுத்தறிவுள்ள மனிதர்கள் என்று சொல்பவர்கள் உழைக்காமல் உண்ண முற்படும்போது... பகுத்தறிவற்ற ஜீவன்கள் என்று நம்மைச் சொல்கிறார்கள்...நாமும் அவர்களைப்போல் இருக்கக் கூடாது என்று எண்ணி இருக்குமோ?

    காக்கை கரைந்து உண்ணுவது இயல்பு...காக்கைக்கும்(இழிவு சிறப்பும்மை) தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொன்னது நம் இயல்பு...(கருப்பு நிறம் கேவலமானது என்று நாம் நினைத்துக் கொண்டு). காக்கை ஒரு போதும் அவ்வாறு நினைத்திருக்காது... தற்குறிப்பு ஏற்றிச் சொல்லப்பட்டதுதானே!

    பாட்டி வடை சுட்ட கதையில் வடையைக் காக்கை திருடிச் சென்றதாகத்தானே கதை விட்டுக் கொண்டு இருக்கிறோம்.

    ‘அண்டங்காக்கா கொண்டைக்காரி...’கொண்டையை விரும்பும் நாம் மண்டையில் கரிய நிறத்தை ஒதுக்கிவிட்டோம்...அது அழகில்லை என்றே எண்ணியும் விட்டோம். கருமை நிறத்தில் உள்ள கன்னிகள் பலர் நல்ல இடத்தில் கல்யாணம் ஆகாமலே காத்திருக்கிறார்கள் அல்லவா?

    பாரதியைப் போல் காக்கையை வைத்து சுற்றுச் சூழல் பற்றிய நல்ல சிந்தனையைச் சிந்தியது அருமை அய்யா! பொருத்துமான புகைப்படங்கள் இணைத்திருந்ததும் ஈடில்லா சிறப்பு.

    காக்கா கூட்டத்தப் பாருங்க இந்த மோசமான விஷயங்களை மனிதர்களுக்குக் கத்துக் கொடுத்தது யாருங்க?

    -நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தங்கல் அழகான கருத்துக்களுக்கு. எத்தனை எத்தனை நல்ல கருத்துக்கள்?! தமிழ் ஆசிரியர் அல்லவா! அதனால்தான். குறித்தும் கொண்டோம் ஐயா! மிக்க நன்றி ஐயா!

      நீக்கு