வியாழன், 20 ஜூலை, 2023

திருப்பத்தூர் (சிவகங்கை) மற்றும் அதன் அருகிலுள்ள சிவன் - வைரவர் தலங்கள் – ஒரே நாளில் 9 கோயில்கள் - 2


என் தங்கைக்குப் பரிகாரம் என்று சொல்லப்பட்ட, திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள சில சிவன் கோயில்கள் / பைரவ வழிபாடு என்று சென்றதைப் பற்றி சென்ற பதிவில் (====>பகுதி 1<====)  ஒரே நாளில் 9 கோயில்கள் அவர் சொன்ன வரிசையில் செல்லச் சொல்லியிருந்தார் என்றும் சொல்லியிருந்தேன். அந்த 9 கோயில்களில் முதல் இரு கோயில்கள் ( 1. திருமெய்ஞானபுரி/ தி-வைரவன்பட்டி - காலபாலபைரவர், 2. திருத்தளிநாதர் கோயில் - யோகபைரவர்) பற்றி முதல் பகுதியில் சொல்லியாச்சு. தொடர்ச்சி இதோ. நாங்கள் சென்ற கோயில்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் அம்சமான பராமரிப்பில் இருப்பவை. 

சிறு குறிப்பு வரைக என்று தேர்வில் வருமே அது போன்றுதான் ஓவ்வொரு கோயில் பற்றியும் சொல்லியிருக்கிறேன்!!!

எல்லாக் கோயில்களுக்கும் எங்களை நல்லபடியாக அழைத்துச் சென்ற நல்ல உள்ளம் கொண்ட ஆட்டோக்காரர் இவர்தான். 


***************
வரிசையில் மூன்றாவது கோயில்
3 - வைரவன்பட்டி - ஓம் ஸ்ரீ வயிரவர் கோயில். 
இரண்டாவதாகச் சென்ற திருத்தளிநாதர் கோயிலில் இருந்து அதே சாலையில் 7.1 கிமீ தூரம்.
இறைவன் - வளர் ஒளிநாதர்; இறைவி - வடிவுடை அம்பாள்.  இக்கோயில் பைரவர்/வைரவர் வழிபாட்டிற்கான முக்கியத்தலமாகக் கருதப்படுகிறது. இங்கு பைரவர் - வயிரவர் என்றும் வைரவர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு வழிபாடுகளை முடித்துக் கொண்டு 4 வது கோயில் பிள்ளையார்பட்டிக்குச் சென்றோம்.  


*******************
4 - பிள்ளையார்பட்டி 
மூன்றாவதாகச் சென்ற ஓம் ஸ்ரீ வைரவர் கோயிலில் இருந்து மிக அருகில் 2.1 கிமீ தூரம்தான்.
குடைவரைக் கோயில். வடதிசை நோக்கிய கற்பகவிநாயகர். மற்றொரு பெயர் தேசி விநாயகர்.  வைரவர் ஈடுபட்ட போரில் அவருக்கு விநாயகர் உதவியதால் வைரவன்பட்டி கோயிலுக்கு அருகிலேயே பிள்ளையார்பட்டி அமைந்ததாகவும் சொல்லப்படுகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது.

பிள்ளையார்பட்டி கோயில் திருக்குளம் படங்கள்
கோயில் உள்ளே செல்லும் பாதை - பக்கவாட்டில்தான் திருக்குளம்

******************

5. நேமம் ஜயங்கொண்ட சோழீ/ளீஸ்வரர் கோயில். 
நான்காவதாகச் சென்ற  பிள்ளையர்பட்டி கோயிலில் இருந்து 6.7 கிமீ தூரம் 
இறைவன் - ஜயங்கொண்ட சோளீஸ்வரர்; இறைவி - சௌந்தரநாயகி: மேற்கு நோக்கிய பைரவர்; தீர்த்தம் சோழ தீர்த்தம் அது சைடில் இருக்கிறது. ஆட்டோகாரர் இந்த வாயிலில் நிறுத்தியதால் அதை படம் எடுக்க முடியவில்லை.  சிவன் மன்மதனை வெற்றி கொண்ட ஸ்தலம். அழகான சிற்பங்கள் உடைய பெரிய கோயில். ஆனால் சிற்பங்கள் படங்கள் எடுக்க முடியவில்லை என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். 
பைரவர் சன்னதி மட்டுமே தொழுததால் சுற்றி மற்ற சன்னதிகள் பார்க்க முடியலை
இச்சன்னதியின் பக்கவாட்டில் இப்படிச் சிலர் பெரிய குடுவை போன்று செய்து கொண்டிருந்ததைப் பார்த்ததும்  ஆவல்.  நான் வேறு சொல்லியிருந்தேன். இடிக்கப்படுவது அஷ்டபந்தனம் என்று ஜெ கே அண்ணா சொன்னார். தகவலுக்கு மிக்க நன்றி ஜெ கே அண்ணா.  மண், பல மூலிகைகள் எல்லாம் போட்டு இடித்து எண்ணை எல்லாம் கலந்து கலசம் வடிவில் பிடிக்கிறார்கள். படங்களைப் பார்த்தாலே தெரியும். எனக்கு இன்னும் விளக்கமாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் ஆவல். ஆனால், நேரமின்மை மட்டுமின்றி மூன்றாவது காது வேற உண்டே!  பழகிய குரல்களில் பிரச்சனை இல்லை ஆனால் பழகாத குரல்களில் வட்டார மொழிப் பேச்சு Clarity of the speech சிரமம் எனக்கு!  என்ன ஒரு சங்கடம் பாருங்க!
 இடப்பக்கம் உள்ளவர் தராசு வைச்சிருக்கார் தெரிகிறதா? அதில் இடித்ததில் இருந்து அளந்து கொடுக்க  வலப்பக்கம் உள்ளவர் அதை உருட்டி வடிவம் செய்கிறார். செய்யப்பட்ட அஷ்டபந்தனம் மூலையில். 
நடுவில்  உள்ள பெரியவர் உருண்டை மேலே நடுவில் ஒரு அச்சு இடுகிறார் தெரிகிறதா? அது எதற்கு என்று தெரியலை.
சரி, அடுத்த கோயிலுக்குப் போகலாம் வாங்க...

**********************
6. காரைக்குடி (மீனாட்சி) சுந்தரேஸ்ஸ்வரர் கோயில் - ஐந்தாவதாகச் சென்ற நேமம் கோயிலில் இருந்து 13.4 கிமீ தூரம்
இறைவன் - சுந்தரேஸ்வரர்; இறைவி - மீனாட்சி; ஊர்த்வ தாண்டவத்தில் பைரவரும் சிவனும்.  உள்ளூரில் நகரத்தார் சிவன் கோயில் என்றே சொல்லப்படுகிறது. கலைநயம் எல்லாம் செட்டிநாட்டுக் கலை வடிவங்கள். 

என்ன அழகான கோபுரம் வாயில் பாருங்க!! உள்ளே நேரே சென்றால் மகா மண்டபம். படத்தில் தெரிகிறது இல்லையா. மண்டபத்தில் மிக அழகான தூண்கள் உண்டு...
கீழே உள்ள படங்கள் - திருச்சுற்றில் க்ளிக்கியவை - சன்னதிகளின் கோபுரத்துடன் மூலவர் சன்னதி கோபுரம்

கோயிலை விட்டு வெளியே வரும் போது வலப்புறம் - கோயிலை நோக்கி என்றால் இடப்புறம் இருக்கிறது இதோ கீழே உள்ள 108 பிள்ளையார் சன்னதி. இதன் பின்னில், கோயிலின் பக்கவாட்டில் சுந்தரேஸ்வரர் கோயிலின் திருக்குளம்.   
அழிக்கம்பிகள் ஊடே கேமராவின் விழியை மட்டும் மெதுவாக வைத்து  இடப்புறம் நடுப்புறம் வலப்புறம் என்று எடுத்த படங்கள் கீழே



இக்கோயில்கள் வரிசையில் அடுத்ததாகச் சென்ற  7, 8, 9 வது கோயில்கள் பற்றிய சிறு குறிப்புகளுடன் அடுத்த பதிவில் நிறைவு பெறும்.


----கீதா

27 கருத்துகள்:

  1. இடிக்கப் படுவது அஷ்ட பந்தனம் என்று தோன்றுகிறது. இது சிலைகள் பிரதிஷ்டை செய்ய பயன்படுத்துவது. அந்தக்கால சிமெண்ட். முத்திரை "TESTED OK" என்று தோன்றுகிறது.

    கிடைத்தவரை எடுத்த படங்கள் நன்றாக உள்ளன. ஒரே நாளில் முடிக்க வேண்டும் தங்க கூடாது என்றதால் ஓடி ஓடி அவசரமாக வயிரவர்களை தரிசித்துவிட்டு அடுத்த கோயிலுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் காரணம் படம் எடுக்க நேரம் கிடைப்பது அரிதாகி விட்டது,.ஓ கே

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா நல்ல தகவலுக்கு மிக்க நன்றி. அஷ்டபந்தனம் ஆகத்தான் இருக்கணும். ஏனென்றால் கடுக்காய், மண், நெல்லிக்காய், குங்குலியம் என்று கலந்து ....மாற்றிவிடுகிறேன். அங்கு....மிக்க நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
    2. கலசத்துக்குள் வைப்பாங்களா? அண்ணா? பிரதிஷ்டை என்றும் சொன்னாங்க...கலசம்னும் சொன்னதாக நினைவு...ஒரு வேளை என் காதில் சரியாக விழவில்லை என்று நினைக்கிறேன்.

      மிக்க நன்றி அண்ணா

      கீதா

      நீக்கு
    3. அஷ்டபந்தனம் தயாரிப்பவர் ஃபோன் no வேண்டும் கிடைக்குமா ?

      நீக்கு
    4. என்னிடம் இல்லை, பெயரில்லா! அக்கோயிலைத் தொடர்பு கொண்டால் உங்களுக்குக் கிடைக்கக் கூடும்.

      கீதா

      நீக்கு
  2. எல்லா படங்களும் மிக அருமையாக இருக்கிறது.
    அழகான கோபுரம், கோபுர வாயில், மூலவர் சன்னதி விமானங்கள் அழகு.
    அழி கம்பி வழியாக எடுத்த பிள்ளையார் படங்கள் அழகு.
    மருந்து இடித்து லிங்க வடிவில் உருண்டைகள் பிடித்து இருப்பது பார்க்க அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருந்து இடிப்பது அஷ்டபந்தனம் தான்...கும்பாபிஷேகத்திற்குத்தானாம். என் தங்கையிடம் கேட்டுக் கொண்டேன். பதிவு எழுதும் போது தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தாள் என் தங்கை அதனால் அதில் சொல்ல விட்டுப் போக...ஜேகே அண்ணா அஷ்டபந்தனம் என்று சொன்னதில் புரிந்து அங்கு மாற்றியும் விட்டேன். ஆனால் கலசம் தானாம் கும்பாபிஷேகத்துக்கு என்று என் தங்கை சொன்னாள்.

      படங்கள் பற்றி சொன்ன கருத்து எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  3. நல்ல உள்ளம் கொண்ட ஆட்டோக்காரர் இவர்தான். //

    இங்கும் வந்து விட்டாரே நல்ல உள்ளம் கொண்ட ஆட்டோக்காரார்.
    எங்கும் இப்படி நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.பொறுமையாக காத்து இருந்து அழைத்து வருவார்கள். நியாமான காசு வாங்கி கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா...பொறுமையாக அழைத்துச் சென்றதோடு, அதுவும் தெரியாத இடம் கூகுள் மேப் மட்டுமே நான் குறித்து வைத்திருந்தேன். பணமும் காலை முதல் மாலை வரை மொத்தம் 600ரூ என்று பேசி கடைசியில் 700 என் தங்கையே கொடுத்தாள். சரியாக நேரத்திற்கு வந்து அழைத்துச் சென்று கிட்டத்தட்ட 70 கிமீ தூரம் மொத்தமும் சுற்றியிருப்போம்...

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  4. கோவில்களும், குளங்களும் பார்ப்பதற்கே ஆனந்தமாக உள்ளன.
    அஷ்ட பந்தனம் கேள்விப்பட்டுள்ளேன்... உங்கள் புண்ணியத்தில் இப்போதுதான் பார்க்கின்றேன்... நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அழகான கோயில்கள் இடங்கள். மிக்க நன்றி நாஞ்சில் சிவா

      கீதா

      நீக்கு
  5. அழகிய படங்களுடன் விளக்கம் அருமை.

    பிள்ளையார்பட்டி சென்று உள்ளீர்கள் அருகில் 3 கி.மீ. குன்றக்குடி ஏன் செல்லவில்லை ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி!!! பக்கத்தில்தான் குன்றக்குடி என்றும் தெரியும் ஆனால் அன்று பரிகாரத்தில் சொல்லப்பட்டது மட்டுமே செல்ல வேண்டும் என்பதால் போகலை. கூடவே இன்னொன்னும் சொல்லறேன் மாத்தூர் கூட வந்தோம் அதன் மிக அருகில் தானே உங்கள் அழகிய தேவகோட்டை!!!! உங்களிடம் பேசும் போது கூடச் சொன்ன நினைவு.

      மிக்க நன்றி கில்லர்ஜி!

      கீதா

      நீக்கு
  6. வயிரவன் என்று படித்தால் அதிரா ஞாபகம் வருகிறது!!  உங்களுக்கு வருகிறதா?!  தனியார் வசம் இருக்கும் கோவில்கள் பரிகாரஸ்தலம் ஆகுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெப்படி மறக்கும் ஸ்ரீராம்!! பூஸார் நினைவுக்கு வராமலா!!! வைரவருக்கு வைர நெக்லஸ் என்பதை வைத்தே அவரை ஓட்டுவோமே!!!

      ஸ்‌ரீராம் அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது இவை பெரும்பான்மை மக்கள் பராமரிப்பவை என்று. ஆனால் இவை அனைத்துமே மிகப் பழம் பெருமை வாய்ந்தவை. பாண்டியன், காலத்தில் (குலசேகரமாறவர்மன்) காலத்தில் அந்த நேமம் கோயில் சீரமைக்கப்பட்டு என்றும் (1200-1500 வருடங்களுக்கு முன் ) அதன் பின்னர் பராமரிப்புப் பணிகள் செய்வது நகரத்தார்!. அதாவது இவை கட்டப்பட்டது எல்லாமே முற்காலத்தில்.

      பரிகாரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது ஸ்ரீராம். ஆனால் ஒன்று....இப்படிப் பரிந்துரைக்கப்படும் பரிகாரத்தில் பல விஷயங்கள் உண்டு!! அந்த ஜோஸ்யர் தன் பெயரையும் சொல்லச் சொல்லியிருந்தார்!!!!!!!!!!!!!!!!! சில விஷயங்கள் இது போன்றவற்றில் என் தனிப்பட்டக் கருத்துகளை, நம்பிக்கை உள்ளவர்களின் மனம் புண்படுமே என்று தவிர்க்கிறேன்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  7. வடிவுடை அம்மன் என்றதும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் நினைவு வருகிறது.  பல வருடங்களுக்குப் பிறகு சென்ற வாரம் அங்கு செந்திருந்தும், அம்மனைப் பார்க்க நேரமில்லை.  ஊரே மெட்ரோ உபயத்தில் மாறி இருந்தது.  கோவில் தியாகேசர் கோவில் ஆயினும் அம்மனுக்குதான் மவுசு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ திருவொற்றியூர் போனீங்களா!!!? ஆமா வடிவுடை அம்மன். நீங்கள் சொல்வது அதேதான் தியாகேசர் கோயில் ஆனால், ஆமாம் அங்கு ஐயனை விட அம்மன் தான் மவுசு!!! அழகான கோயில், கடற்கரை!! ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன் பல வருடங்களுக்கு முன்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. பிள்ளையார்பட்டி என்கிற பெயரில் ஒரே கோவில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.  நான் கேள்விப்பட்டிருக்கும் பிள்ளையார்பட்டி இதுதானா என்று தெரியவில்லை.  'பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா..'  பாடல் நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான் ஸ்ரீராம். அதான் சொல்லியிருக்கிறேனே கற்பகவிநாயகர் குடைவரைக் கோயில் என்று. நாம் எல்லோரும் அறிந்த பிள்ளையார்பட்டி தான். அழகான பிள்ளையார், ஸ்ரீராம்!!!

      '//பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா..'/

      தேவாவா? கேட்டது போலும் இருக்கு ஆனால் நான் நினைப்பதும் நீங்கள் சொல்வதும் அதே பாடலான்னு தெரியாலை

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  9. மேலே வைக்கும் அச்சு குடுமி போல பிடித்துத் தூக்கவோ...!!  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தில் வரும் அஷ்ட பந்தனம் இதுதானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அஷ்டபந்தனம் தான், ஸ்ரீராம். அஷ்டபந்தனம் என்று படத்தின் கீழ் குறிப்பிடவில்லை பெயர் மறந்து போச்சு. ஜெ கே அண்ணா சொன்னதும் நினைவுக்கு வந்து தங்கையிடம் கேட்டுக் கொண்டேன். கும்பாபிஷேகம் என்று அவங்க சொன்னது கேட்டது மூலிகை போட்டு இடித்தல் என்று. கோமதிக்காவிடமும் கேட்டேன் அவங்களும் கும்பாபிஷேகத்துக்குச் செய்வது போலன்னு சொன்னாங்க...

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      மிக்க நன்றி

      நீக்கு
  10. காரைக்குடி கோவில் அழகாக இருக்கிறது.  108 பிள்ளையாரா..  அட..  பிள்ளையார் சதுர்த்தி பூஜை முடிந்ததும் இங்கு சென்று தரிசித்தால் புண்ணியம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அந்தக் கோயில் அழகு. சொல்லப் போனா எல்லாக் கோயிலுமே அழகு!

      ஆஅமாம் 108 பிள்ளையார்கள்!!!

      //பிள்ளையார் சதுர்த்தி பூஜை முடிந்ததும் இங்கு சென்று தரிசித்தால் புண்ணியம்!//

      இந்த சன்னதி, கூடவே பிள்ளையார்பட்டி ரெண்டும் கம்பைன் பண்ணிக்கலாம் ஸ்ரீராம்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இந்தப் பதிவை எப்படி தவற விட்டேன் எனத் தெரியவில்லை. இன்றைய மூன்றாம் பதிவை பார்த்ததும், 9 கோவில்களில் நடுவில் இந்த 4 கோவில்களைப் பற்றிய பதிவும் வந்துள்ளது என இப்போதுதான் தெரிந்து கொண்டேன். இதை தவற விட்டமைக்கு மன்னிக்கவும் சகோதரி.

    இக்கோவில்களைப் பற்றிய தகவல்களும், படங்களும் அருமையாக உள்ளது. உங்களை அழைத்துச் சென்ற ஆட்டோகாரர் நல்ல மனம் படைத்தவர். இப்படி நிறைய கி. மீட்டர் ஆட்டோவில் சுற்றுவதென்பது மிக அரிது. நீங்களும் ஆட்டோவில் அவ்வளவு தூரங்களையும் கடந்து வர உடல் சிரமம் பாராமல், அத்தனை கோவில்களுக்கும் சென்று வர அந்த பைரவர் அருள் பாலித்திருக்கிறார். மிக்க மகிழ்ச்சி..

    எல்லா கோவில்களின் கோபுர தரிசள கிடைக்கப் பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. காரைக்குடி மீனாட்சி, சந்தரேஷ்வரர் கோவில் கோபுரமும், முகப்பும் மிக அழகாக இருக்கிறது. உங்கள் மூலமாக பிள்ளையார்பட்டி கோவிலையும் தரிசித்துக் கொண்டேன். 108 பிள்ளையார் களையும் கண்டு தரிசித்துக் கொண்டேன்.

    கோவில் கும்பாபிஷேகத்திற்கு தெய்வங்களை பிரதிஷ்டை செய்ய சாந்து (அதை அப்படித்தான் சொல்வோம்.) செய்யும் முறைகளையும் விளக்கி படமெடுத்தற்கும் மிக்க மகிழ்ச்சி. அத்தனைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா ப்ளீஸ் மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை. ப்ளீஸ் கேக்காதீங்க. விட்டுப் போவது என்பது எல்லோருக்கும் நடப்பதுதானே அக்கா. நாம் பல வேலைகளில் இருப்போம், நம் மனம் பல சிந்தனைகளில் அன்றாட பிரச்சனைகளில் இருக்கும். இதில் நாம் எத்தனைதான் செய்ய முடியும்? நினைவு வைத்துக் கொள்ள முடியும்? இல்லையா அதனால் அப்படி எல்லாம் வருத்தப்படாதீங்க கமலாக்கா. நானும் தப்பா எடுத்துக்க மாட்டேன். உங்கள் பொறுப்புகள் தெரியும் கமலாக்கா.

      ஆமாம் கமலாக்கா மொத்தமாக நிறைய தூரம் எல்லாம் ஆட்டோவில் அவர் ஒவ்வொரு கோவிலிலும் பொறுமையாகக் காத்திருந்து அழைத்துச் சென்றார்.

      பதிவை ரசித்ததற்கும் மகிழ்ச்சி கமலாக்கா.

      ஆமாம் சாந்து என்றும் சொல்வதுண்டு. இப்போதுதான் ஒவ்வொன்றாய் எனக்கு நினைவுக்கு வருகிறது சிறு வயதில் கேட்டவை எல்லாம். அரக்கு, சாந்து போன்றவை.

      பொறுமையாகப் பார்த்து விரிவான கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு